உலகமனிதன் -கடலூர் சீனு
அன்புள்ள ஜெ,
உலகமனிதனின் பதிவு படித்து,அந்த ஆவணப்படத்தை கூகிளில் தேடி யூடியுபில் நேற்று பார்த்தேன், அதன் தொடர்ச்சியாக உங்களின் ஆலமர்ந்த ஆசிரியன் அஞ்சலியும் கேட்டேன், ஏற்கனவே பதிவாக படித்தது, இப்பொழுது உங்களின் குரலில்.. மறுபடியும் சீனுவின் உலகமனிதன்.
ஆவணப்படத்தை (https://www.youtube.com/watch?v=iy0xpl5NztA) பார்த்துக்கொண்டிருந்தபொழுது, ஜெயகாந்தன் மறைந்து என் அப்பாவின் உருவம், குரல், சிரிப்பு, ப வடிவ மீசை, பெரிய கிருதா (பின் முடி வளர்க்கவில்லை), என் மகன் தூங்கி எழுந்துவந்து பார்த்து அதையே சொன்னான், ஒரு வித மன எழுச்சி. என் அப்பா நேர் எதிர், வாசிப்பு சுத்தமாக கிடையாது, என் காசை புக்காவே வாங்கி அழிச்சான் என்று என் அண்ணாவை திட்டுவார். ஆனால் அதே திமிர், ஆணவம். நீங்கள் ஜெ.கெ கனிந்தது பற்றி சொல்லிய பொழுது மறுபடியும் அப்பா நினைவு.
உங்கள் உரையில் பாரதியுன் தோல்வி பற்றியும் அதற்கு ஜெ.கெவின் பதிலும், பாரதி படத்தில் ஒரு காட்சியை நினைவு படுத்தியது. படத்தை முதலில் பார்த்த பொழுது அது அவ்ளவாக புரியவில்லை, அதற்கு பிறகு பாரதியை பற்றி படிக்கும் பொழுதெல்லாம், அந்த காட்சி மறுபடியும் தவறாமல் நினைவு வரும்.
அந்தக் காட்சி, பீஜித்தீவில் கஷ்டப்படுபவர்களைப்பற்றி எண்ணி துக்கம் தாளமுடியாமல் கவிதை ஏழுதுவதும், செல்லம்மா அவர்களுடைய கஷ்டத்தை சொல்லுவதும், அதற்கு பாரதியின் பதில்.
“செல்லம்மா உன் புருஷன் சுப்பைய்யா ஒரு ஏழை, அவன் குடும்பம் பட்டினியால கிடந்து சாகறது சகஜம், ஆனால் பாரதி ஏழை இல்லை… ”
காட்சி சுட்டி – https://youtu.be/YLXJUHOTh9U?t=3905
பாரதியின் “புதிய பழக்கம்” – https://youtu.be/YLXJUHOTh9U?t=5676
தொடர்ந்து நீங்கள் ஜெ.கெ பற்றி பதிவு செய்த பதிவுகள் (அவருடைய கம்பீரம், சிங்க தோரணை, ஏன் பிடித்தவர்களை வயதானவுடன் பார்க்க பிடிக்கவில்லை) நினைவுக்கு வந்தது.
ஜெ.கெ, பாரதி மற்றும் என் அப்பாவின் நினைவுகளை மீட்டியதற்கு சீனுவுக்கு, உங்களுக்கும் நன்றி.
திருமலை