வெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97

96. கைச்சிறுகோல்

flowerஉபப்பிலாவ்யத்தின் கோட்டையை பாண்டவர்களின் தேர் சென்றடைந்தபோது கோட்டை முகப்பிலேயே அதன் தலைவன் சார்த்தூலன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அவனுடன் கங்கைநீருடன் அந்தணர் எழுவரும் அங்கிருந்த எண்வகைக் குடிகளின் தலைவர்களும் நின்றனர். உபப்பிலாவ்ய நகரியின் குருவிக்கொடியும் விராடநகரியின் காகக்கொடியும் இரு பக்கமும் பறக்க நடுவே இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்க்கொடி ஏற்றப்பட்டிருந்தது.

தொலைவில் பாண்டவர்களின் மின்கதிர்க்கொடி எழுந்ததுமே கோட்டைமேல் முரசுகள் முழங்கத் தொடங்கின. நகரம் வாழ்த்தொலிகளால் முழங்கியது. முதலில் விராடபுரியின் கவசக் காவலர் பன்னிருவர் புரவிகளில் வந்தனர். தொடர்ந்து நகுலனும் சகதேவனும் ஊர்ந்த சரபமும் அன்னமும் பொறித்த கொடி பறக்கும் தேர் அணுகியது. அர்ஜுனனும் பீமனும் வந்த தேரில் குரங்கும் சிம்மமும் தெரிந்தன. உத்தரையின் தேரில் காகம் பறந்தது.

ஒவ்வொரு கொடி தெரிகையிலும் முரசொலி அவர்களின் வருகையை அறிவிக்க அவர்களின் கொடி கோட்டைமேல் ஏறியது. தருமனின் நந்தமும் உபநந்தமும் பொறிக்கப்பட்ட கொடி தோன்றியதும் முரசுகள் உச்சமடைந்தன. அதில் திரௌபதியின் விற்கொடியும் பறந்தது. வாழ்த்தொலிகள் சூழ அவர்களின் தேர்கள் கோட்டை முகப்பில் வந்து நின்றன. அங்கே தாலப்பொலி ஏந்திய சேடியர் அவர்களை எதிர்கொண்டு அழைத்தனர். அவர்கள் மண்ணிலிறங்கி நின்றதும் வேதியர் நீர்தெளித்து அழியாமொழி சொல்லி வாழ்த்தினர்.

கோட்டைத்தலைவன் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசருக்கும் அரசிக்கும் இளையோருக்கும் முன் இந்த நகர் அடிபணிகிறது. இங்கு தங்கள் வருகை நிகழ்ந்தமையாலேயே இந்நகர் என்றும் பேசப்படும். இதன் மூத்தோரும் நீத்தோரும் மகிழும் நாள் இன்று. எங்கள் குலதெய்வங்களின் அருள் உங்கள்மேல் பொழிவதாக!” என முகமனுரைத்தான். தன் கோலை தருமனின் காலடியில் தாழ்த்தினான். அவன் படைத்தலைவர் மூவர் வாள்களை தருமன் காலடியில் தாழ்த்தி வணங்கினர்.

நகருக்குள் நுழைகையில் வாழ்த்தொலிகள் எழுந்து அரிமலர்மழையுடன் இணைந்து அவர்கள்மேல் பெய்தன. இரு நிரையாக நின்ற மக்களின் மலர்ந்த முகங்களை நோக்கிக்கொண்டுவந்த திரௌபதியின் விழிகளிலிருந்து நீர்வழிந்து கரிய கன்னவளைவுகளில் நின்று தயங்கி சொட்டியது. தருமன் அவள் தோளில் கைவைத்து “என்ன?” என்றார். “இல்லை” என அவள் தலையசைத்தாள். பெருமூச்சில் முலைகள் ஏறியிறங்க கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் முகம் மலர்ந்திருந்தது. தருமன் “வாழ்த்தொலி என ஒன்று செவியில் கேட்டு நெடுங்காலமாகிறது அல்லவா?” என்றார். அவள் “ஆம், முன்பு இவ்வொலி என் ஆணவத்தை நோக்கி ஒலித்தது. இன்று என் துயர்களையும் அதைக் கடக்கும் உறுதியையும் நான் என் நல்லியல்புமேல் கொண்டுள்ள நம்பிக்கையையும் நோக்கி ஒலிக்கிறது” என்றாள். தருமன் சிரித்து “மீண்டும் அரசிக்குரிய சொற்களை அடைந்துவிட்டாய்” என்றார்.

உபப்பிலாவ்ய நகரி பன்னிரு சுற்றுத்தெருக்களும் நடுவே வட்டமான முற்றமும் கொண்ட சிறிய நகரம். முற்றத்தை நோக்கியவாறு இரண்டு அடுக்குள்ள தாழ்வான அரண்மனை நின்றிருந்தது. அவர்களின் வருகைக்காக அது செப்பனிடப்பட்டு வண்ணம் பூசப்பட்டிருந்தது. கொடிகளும் தோரணங்களும் காற்றில் பறந்தன. அரண்மனைப்பெண்டிர் முற்றத்தில் அணிச்சேடியருடன் காத்து நின்றிருந்தனர். அவர்கள் இறங்கியதும் மங்கல இசையும் குரவையுமாக எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர்.

“அவை முறைமைகள் சில உள்ளன, அரசே…” என்று சார்த்தூலன் சொன்னான். “தாங்கள் இங்கிருப்பதுவரை இந்நகரியின் அரியணையும் கோலும் தங்களுக்குரியது… தங்கள் பெயரில் முதல் அரசாணையும் இன்று பிறப்பிக்கப்படவேண்டும்.” தருமன் புன்னகையுடன் “நன்று, கோலேந்தி அமர்வதென்பதையே மறந்து நெடுநாட்களாகின்றன” என்றார். சார்த்தூலனும் ஏவலரும் அவர்களை அவைக்கு அழைத்துக்கொண்டு சென்றனர்.

ஐம்பதுபேர் அமர்வதற்குரிய பீடங்கள் இடப்பட்ட குறுகிய அவைக்கூடத்தின் மேற்கே கிழக்கு நோக்கி மேடை அமைந்திருந்தது. அதில் ஒரு பீடத்திற்கே இடமிருந்தது. சார்த்தூலன் தருமனை அழைத்துச்சென்று அந்தப் பீடத்தில் அமரச்செய்தான். அவர் இடப்பக்கம் திரௌபதியும் வலப்பக்கம் பீமனும் நிற்க அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் பின்னால் நின்றனர். திரௌபதிக்குப் பின்னால் உத்தரை நின்றாள்.

குடிமூத்தவர் மூவர் தாலத்தில் வைக்கப்பட்ட பட்டுத் தலைப்பாகையை கொண்டுவந்து நீட்ட அதை வேதியர் மூவர் தொட்டு எடுத்து தருமனுக்கு சூட்டினர். பொன்னாலான சிறிய முத்திரை பொறிக்கப்பட்ட தலைப்பாகைக்குமேல் செம்பருந்தின் இறகு சூட்டப்பட்டிருந்தது. குடித்தலைவர் ஒருவர் வெள்ளிக்கோலை எடுத்து அவருக்களித்தார். பிறிதொருவர் உடைவாளை அளித்தார். அவர் அவற்றை அணிந்து அமர்ந்ததும், வேதியர் நீர் தெளித்து வேதமுரைத்து அவரை வாழ்த்தினர்.

அந்தணர் எழுவருக்கு பசுக்களையும் பொன்னையும் தருமன் அளித்தார். மணிவண்ணன் ஆலயத்திலிருந்து வழிப்போக்கருக்கு அன்னம் அளிப்பதற்கான ஆணையோலையை தன் முத்திரையிட்டு வெளியிட்டார். அவையின் பீடங்கள் அனைத்திலும் நகர்மூத்தோரும் வணிகரும் அமர்ந்திருந்தனர். சுவரோரமாக படைவீரர் நின்றிருந்தனர். அவை வாழ்த்து கூறி முழக்கமிட ஒவ்வொருவராக வந்து தருமனை வணங்கி வாழ்த்துரைத்தனர். அவர்கள் அளித்த பரிசில்களை அவர் பெற்றுக்கொண்டார்.

மிக விரைவிலேயே சடங்குகள் முடிந்தன. உபப்பிலாவ்யன் “தாங்கள் ஓய்வெடுக்கலாம், அரசே” என்றான். “இங்கே அரண்மனை ஏதுமில்லை. சிறிய இல்லங்கள்தான்… பெண்டிர் மாளிகை தனியாக உள்ளது.” தருமன் அவன் தோளில் கைவைத்து “நரிக் குகைக்குள் துயின்றிருக்கிறீரா?” என்றார். “இல்லை, அரசே” என்றான் உபப்பிலாவ்யன். “நாங்கள் துயின்றிருக்கிறோம்” என்றபின் புன்னகைத்து “செல்வோம்” என்றார். அவன் தோளை அணைத்தபடி நடக்கையில் “ஓரிரு நாட்களுக்குள் நான் தமனரின் தவக்குடிலுக்குச் செல்லவேண்டும். சௌபர்ணிகையில் மீண்டும் ஒருமுறை நீராடினால் இந்தக் காலகட்டம் நிறைவுறுகிறது” என்றார். “ஆணை, அரசே” என்றான் உபப்பிலாவ்யன்.

அவர்கள் அறைக்குள் செல்வதற்காக பிரியுமிடத்தில் பீமன் பின்னால் வந்து “ஆணைகளென ஏதேனும் உண்டா?” என்றான். “ஐந்து ஓலைகள் அனுப்பவேண்டும்” என்றார் தருமன். “முதல் ஓலை இளைய யாதவருக்கு, அவர் எங்கிருந்தாலும். இன்னொன்று விதுரருக்கு. பிறிதொன்று அன்னைக்கு. மற்றொன்று துருபதருக்கு. இறுதி ஓலை துரியோதனனுக்கு. எழுதவேண்டியது ஒன்றே, கான்வாழ்வும் மறைவாழ்வும் முடிந்துவிட்டன. எங்கள் நாடும் கொடியும் திரும்ப அளிக்கப்படவேண்டும். சிறியவனே…” சகதேவன் “அரசே” என்றான். “ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய மொழியில் எழுதவேண்டும். எழுதுக!” சகதேவன் “ஆணை” என்றான். நகுலனும் சகதேவனும் விடைபெற்றனர்.

“நாங்கள் ஓய்வெடுக்கிறோம், மூத்தவரே. ஓலைகளை எழுதவேண்டும்” என்றான் சகதேவன். அர்ஜுனன் விடைகொடுத்தான். பீமன் “நானும் அடுமனைவரை செல்கிறேன். இவர்களுக்கு சமைக்கத் தெரியும் எனத் தோன்றவில்லை” என்றான். அர்ஜுனன் “மூத்தவரே” என்று அழைத்தான். பீமன் நின்று “நம் பிற வாழ்வு முடிவுறுகிறது” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அது தங்களுக்கு எவ்வுணர்வை உருவாக்குகிறது?” பீமன் “ஏதுமில்லை. இந்தப் பதின்மூன்றாண்டுகளும் ஓர் இடத்திலிருந்து பிறிதொன்றுக்கு இடம்பெயர்ந்துகொண்டே இருந்தோம். இதுவும் அப்படித்தான் தோன்றுகிறது” என்றான்.

அர்ஜுனன் “நம் நிலத்துக்கான பூசல் தொடங்குகிறது” என்றான். பீமன் “ஆம், ஆனால் அதுவும் எல்லாப் பூசல்களையும்போல ஒன்றே. நான் எவ்வேறுபாட்டையும் உணரவில்லை” என்றான். “நன்கு பசிக்கிறது… நீ ஊனுணவில் எதை விரும்புகிறாய்?” அர்ஜுனன் “எனக்கும் எந்த உணர்வுமாற்றமும் நிகழவில்லை. மூத்தவரிடமும் ஏதும் தெரியவில்லை. இளையோரை நோக்கினேன். அவர்களுக்கு நம் கடும்வாழ்க்கை முடிந்துவிட்டதென்ற செய்தியே தெரியவில்லை என்று தோன்றுகிறது. ஆகவேதான் உங்களிடம் கேட்டேன்” என்றான்.

“அரசியிடம் கேட்டுப்பார்… அவள் உரு மாறிவிட்டாள்” என்றான் பீமன். “ஆம்” என அர்ஜுனன் புன்னகைத்தான். “அவள் இங்குள்ள பெண்டிரை அழைத்துக்கொண்டு அவைகூடச் சென்றுவிட்டாள். அந்திக்குள் எப்படியும் ஐம்பது அரசாணைகள் வெளிவந்துவிடும்” என்றபின் “என்ன உண்கிறாய், சொல்?” என்றான் பீமன். “பன்றி… நல்ல பன்றியை நா மறந்துவிட்டது” என்றான் அர்ஜுனன். “நன்று, இன்று உண்பதை மறக்கமாட்டாய்” என்றபின் பீமன் சென்றான்.

அர்ஜுனன் நடக்கையில் சிற்றறை ஒன்றின் வாயிலில் ஒரு சிறுமி காவல் என நிற்பதைக்கண்டு தயங்கி “யார் உள்ளே?” என்றான். “விராட இளவரசி” என்று அவள் சொன்னாள். அவன் “என் வரவை அறிவி” என்றான். அவள் நாணத்துடன் நெளிந்தபின் உள்ளே சென்றுவிட்டு வந்து “வரச்சொன்னார்கள்” என்றாள். அவன் உள்ளே நுழைந்தான்.

உத்தரை எளிய சிறுபீடத்தில் அமர்ந்து சாளரம் வழியாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தாள். “வணங்குகிறேன், தேவி” என்றான் அர்ஜுனன். அவள் திரும்பவில்லை. “இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்திரப்பிரஸ்தம் நம் கைக்கு வந்துவிடும். அங்கே அபிமன்யூவுக்கும் தங்களுக்குமான மணநிகழ்வை பெருவிழவாக கொண்டாடவேண்டும் என்று அரசர் எண்ணுகிறார்” என்றான். அவள் உடலில் அசைவே எழவில்லை. “அபிமன்யூவுக்கும் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அவன் பெருமகிழ்வை அறிவித்துள்ளான்.”

அவள் உடலின் அசைவின்மை அவனை நிலையழியச் செய்தது. பின்னர் “அவனை நீங்கள் பார்க்கையில் உணர்வீர்கள்” என்றான். மெல்ல நகைத்து “தெய்வங்கள் வனைந்து வனைந்து மேம்படுத்திக்கொள்கின்றன என்பார்கள். அவன் பணிக்குறை தீர்ந்த பழுதற்ற அர்ஜுனன். இளையவன், நானே அஞ்சும் வில்திறலோன்” என்றான். அவள் தலைதூக்கி நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவன் நோக்கை விலக்கிக்கொண்டபின் “அனைத்தும் நன்மைக்கே. நம் குடி பெருகும்… இப்பெருநிலம் நம் கொடிவழியினரால் ஆளப்படும்” என்றான்.

அவன் மீண்டும் அவளை நோக்கியபோது அவள் விழி தன்மேல் ஊன்றியிருந்ததை கண்டான். விழிவிலக்கிக்கொண்டு “நன்று… எத்தேவை இருப்பினும் அறிவியுங்கள்… சில நாட்களுக்கே இச்சிறுநகரின் இடர்கள்” என்றபின் வெளியே சென்றான். வெளிக்காற்றுக்கு வந்தபின் உடல் தளர்ந்து நீள்மூச்சுவிட்டான்.

[நீர்க்கோலம் நிறைவு]

முந்தைய கட்டுரைசி.வி -50
அடுத்த கட்டுரைகைவிடப்படும் மரபு