‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92

91.எஞ்சும் நஞ்சு

flowerதமயந்தி விழித்துக்கொண்டபோது தன்னருகே வலுவான இருப்புணர்வை அடைந்தாள். அறைக்குள் நோக்கியபோது சாளரம் வழியாக வந்த மெல்லிய வான்வெளிச்சமும் அது உருவாக்கிய நிழல்களும் மட்டுமே தெரிந்தன. மீண்டும் விழிமூடிக்கொண்டு படுத்தாள். மெல்லிய அசைவொலி கேட்டது. வழிதலின் ஒலி. நெளிதலின் ஒலி. தன்னருகே அவள் அவனை கண்டாள். அவன் இடைக்குக் கீழே நாகமென நெளிந்து அறைச்சுவர்களை ஒட்டி வளைந்து நுனி அசைந்துகொண்டிருந்தது. ஊன்றிய கரியபெருந்தோள்கள் அவள் கண்முன் தெரிந்தன. அவன் விழிகளின் இமையா ஒளியை அவள் மிக அருகே கண்டாள். அவன் மூச்சுச்சீறல் அவள் முகத்தில் மயிற்பீலியென வருடிச்சென்றது.

அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவளும் ஏதும் கேட்கவில்லை. அவளையே அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடலின் நெளிவே ஒரு மொழியென ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது. அவள் பெருமூச்சுடன் உடல் எளிதானாள். “அவன் நகருக்குள் நுழைந்துவிட்டான், இன்றுகாலை” என்றான். “ஆம்” என்றாள் அவள். “நேற்றே ஒற்றர் சொன்னார்கள்.” அவன் புன்னகைத்தபோது பிளவுண்ட நா எழுந்து பறந்து அமைந்தது. “அவன் எவ்வுருவில் இருக்கிறான் என்று அறிவாயா?” அவள் விழிதாழ்த்தினாள். “உன்னுள் அவன் இருந்த உருவில்.” அவள் சீற்றத்துடன் இமைதூக்க “பின் எப்படி நீ உடனே அவனே என்றாய்?” என்றான்.

அவள் புன்னகைத்து “நான் உன் வழிப்படுவதாக இல்லை. உன் சொற்கள் எனக்கு ஒரு பொருட்டல்ல” என்றாள். “நான் பொய் சொல்வதில்லை.” அவள் ஏளனத்தால் வளைந்த இதழ்களுடன் “ஆம், ஆனால் அவை உண்மைகளும் அல்ல” என்றாள். “அவன் நடித்து முடித்துவிட்டான்.” அவள் அவனை நோக்கி “ஆம், நானும்” என்றாள். “இன்று உன்னை அவன் கண்டால் அவனுள் இருந்த தோற்றத்தில் இருப்பாய்.” அவள் “நீ சொல்லவேண்டியதை சொல்லிவிட்டுச் செல்லலாம்” என்றாள். “அவனிடம் எதை கண்டாய்?” என்று அவன் கேட்டான். “அறியேன். ஆனால் அவரில்லையென்றால் வாழ்வில்லை என உணர்கிறேன்.” அவன் நகைத்து “அத்தனை பத்தினியரும் சொல்வது. வெறும் பழக்கமா? முன்னோர் மரபா? சூழ்விழிகளின் அழுத்தமா?” என்றான்.

அவள் “அதை ஆராயவேண்டுமென்றால் இந்தப் பிடியை விட்டுவிடவேண்டும்” என்றாள். “என்றாவது விடுவேன் என்றால் அப்போது அவ்வினாவை எழுப்பிக்கொள்கிறேன்.” அவன் வஞ்சம் தெரியும் விழிகளுடன் புன்னகைத்து “பத்தினியர் ஒருபோதும் விடுவதில்லை” என்றான். அவள் உடல்மேல் அவன் எடை அழுந்தத் தொடங்கியது. “அது வினாவற்ற பற்று. பிறிதொன்றிலாதது” என்று அவள் காதில் மூச்சொலியுடன் சொன்னான். “நான் விலக விழையவில்லை. நீ என்னை உன் கருகமணியாக சூடிக்கொள்ளலாம். உன்னை சிவை என்பார்கள்.” அவள் “விலகிச்செல்…” என்றாள். “கொற்றவை என்றாகலாம். நாகக்குழையென்றாவேன்.” அவள் தலையை அசைத்தாள். “நாகபடம் அணிந்த சாமுண்டி? நாகம் கச்சையாக்கிய பைரவி? நாகக் கணையாழிகொண்ட பிராமி?” அவள் “செல்க!” என்றாள். “உன் காலில் சிலம்பாவேன். உன் கால்விரலில் மெட்டியென்றாவேன்.” அவள் “செல்…” என்றாள். “எங்கும் நான் இல்லாத பத்தினி என எவருமில்லை.” அவள் “நான் உன்மேல் தீச்சொல்லிடுவதற்குள் விலகு!” என்றாள்.

அவன் தோள்கள் ஒடுங்கின. முகம் கூம்பி நாகபடமென்றாயிற்று. அவள் உதடுகளில் நாகம் முத்தமிட்டது. முலைக்கண்களை உந்திக்குழியை அல்குலை முத்தமிட்டுச்சென்றது. அதன் உடல் பொன்னிறம்கொண்டபடியே சென்றது. அவள் கால் கட்டைவிரலைக் கவ்வியபடி அது காற்றில் பறக்கும் கொடியென உடல் நெளிந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்து நோக்கியபோது காலைக் கவ்வியிருந்த நாகத்தை பார்த்தாள். அறியாமல் காலை உதற அது அப்பால் ஈரத்துணிமுறுக்கு என விழுந்து நெளிந்தோடி சுவர்மடிப்பினூடாக வழிந்து சாளரத்தில் தொற்றி ஏறி அப்பால் சென்றது. அவள் குனிந்து தன் காலை பார்த்தாள். கட்டைவிரல் நகம் கருமையாக இருந்தது. அதை கையால் தொட்டு வருடினாள். உலோகத்துண்டுபோல கருமையொளி கொண்டிருந்ததது.

flower“நாகநஞ்சு அரசியை முதுமகளென்றாக்கியது. இங்கிருந்து அமைச்சர்களும் மருத்துவர்களும் சூக்திமதிக்குச் சென்றபோது அங்கே அவர்கள் கண்டது உளம்கனிந்து தன் உடலன்றி பிறிதொன்றுமறியாது தூய குழந்தைமையில் திளைத்துக்கொண்டிருந்தவரை” என்றார் சுநாகர். “சூக்திமதியில் எவருக்கும் அவர் எவரென்று தெரியவில்லை. பதினேழுமுறை குண்டினபுரியின் ஒற்றரும் தூதரும் அவரை கண்டிருந்தனர். எவரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அந்தணராகிய சுதேவர் பெண்முகம்நோக்கா நோன்புகொண்டவர். அவர் அரசியின் கால்களை மட்டுமே கண்டிருந்தார். கால்களினூடகவே அவரை தேடிச்சென்றுகொண்டிருந்தார்.”

சூக்திமதியின் இளவரசி சுனந்தையுடன் வந்த சேடியரின் கால்களை நோக்கிய சுதேவர் ஒரு கட்டைவிரலை நோக்கியதுமே அவள் தமயந்தி என அறிந்துகொண்டார். மற்ற விரல்கள் அனைத்தும் கருமைகொண்டு நகம் சுருண்டு உருவழிந்திருந்தன. அக்கட்டைவிரல் நகம் மட்டும் புலியின் விழிமணிபோல பளிங்கொளி கொண்டிருந்தது. அம்முதுமகளை ஏறிட்டு நோக்கியபோது அவள் தமயந்தி அல்ல என்று அவர் விழி சொன்னது. குனிந்து கால்நகத்தை நோக்கியபோது பிறிதொருவர் அல்ல என்றது சித்தம். குழம்பியபடி தன் படுக்கையில் படுத்துக்கொண்டு அரைதுயிலில் ஆழ்ந்து ஒரு கனவிலெழுந்தார். அங்கே அவர் சிலம்புகள் ஒலிக்க படியிறங்கிவரும் அரசியின் காலடிகளைக் கண்டார். அந்நகத்தை மட்டும் நோக்கி “அரசி, தாங்களா?” என்று கூறியபடி விழித்துக்கொண்டார்.

சுதேவர் வந்து சொன்னதைக் கேட்டு அரசர் நடுங்கிவிட்டார். இளவரசர்கள் “அம்முதுமகளை எம் தமக்கையென எவ்வண்ணம் நம்புவது? அவளே தானென்று உணராத நிலையில் அந்தணரின் சொல்லை மட்டும் நம்பி அவளை எப்படி ஏற்பது?” என்றார்கள். முதிய அமைச்சர் விஸ்ருதர் “அரசே, இங்கிருந்து அமைச்சர் குழு ஒன்று நிமித்திகர்களையும் மருத்துவர்களையும் அழைத்துக்கொண்டு சூக்திமதிக்கு செல்லட்டும். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் முறைமைப்படி அவள் யார் என்று சொல்லட்டும்” என்றார். “அமைச்சர் குழுவை நானே வழிநடத்தி அழைத்துச்செல்கிறேன்.”

அமைச்சர் தலைமையில் சென்ற குழுவினர் முதலில் அவளைக் கண்டதும் அஞ்சிக் குழம்பினர். கரிய நீரோடையில் விழுந்துகிடக்கும் பொன்நாணயம்போல அவள் உடலில் ஒரு நகம் மட்டும் ஒளிகொண்டிருந்தது. நிமித்திகர்கள் அவள் தலைமுடியொன்றை எடுத்துவந்து நிமித்தநூல்படி ஆராய்ந்து அவள் தமயந்திதான் என உறுதிசெய்தனர். அந்த முடியை வைத்து களன் கணித்து அவள் அரவுச்சூழ்கை கொண்டிருப்பதை அறிந்தனர். அவள் உடலை முக்குறை தேர்ந்து முறைமைப்படி நோக்கிய மருத்துவர் அவள் உடலில் நாகநஞ்சு ஊறியிருப்பதை கண்டனர். ஏழுநிலை மருத்துவம் வழியாக அவளை மீட்டெடுக்க முடியும் என்றனர். ஆனால் மூதமைச்சர் விஸ்ருதர் “இந்நிலையில் இருந்து மீட்டு அவரை எங்கே கொண்டுசெல்கிறோம்? மீண்டும் துயரங்களுக்குத்தானே?” என்று ஐயுற்றார்.

அவருடன் சென்ற முதுநிமித்திகரான சௌகந்திகர் “அரசி அறியவேண்டியவையும் கடக்கவேண்டியவையும் இன்னும் உள்ளன. அவற்றைத் தொடாது தாண்டிச்செல்வது பிறவியெச்சமென்று நீடிக்கும். வாழ்வென்பது ஒன்றே. அதை தனி நிகழ்வுகளாக்குவதும் இன்பதுன்பமெனப் பிரிப்பதும் தன்னில் நின்று நோக்கும் அறியாமையும் தானே என்னும் ஆணவமும்தான். இன்பமென்று இன்றிருப்பது நாளை துன்பமென்றாகலாம். துன்பமென்று இன்று சூழ்வது எண்ணுகையில் இனிப்பதாகலாம். நாம் அதை முடிவுசெய்யலாகாது” என்றார்.

மருத்துவர் அளித்த நச்சுமுறிகள் அவள் உடலில் இருந்த நஞ்சை மெல்ல வெளியேற்றின. பின் அந்நச்சுமுறிகளை வேறு மருந்துகள் கொண்டு வெளியேற்றினர். இறுதித்துளி நஞ்சு மட்டும் அவள் கால் நகத்தில் எஞ்சியது. கருங்குருவியின் அலகுபோல அவள் நகம் மின்னியது. “அதையும் தெளிவாக்க இயலாதா?” என்று அமைச்சர் விஸ்ருதர் கேட்டார். “கருவறையிலிருந்து வந்த பின்னரும் தொப்புள் எஞ்சுவதை கண்டிருப்பீர்கள், அமைச்சரே. எதுவும் எச்சமின்றி விலகுவதில்லை” என்றார் மருத்துவர்.

ஒவ்வொரு நாளாக அவள் இளமை மீண்டாள். இளமை மீளும்தோறும் நினைவுகள் கொண்டாள். தன் இழந்த அரசை, பிறந்த நகரை, பிரிந்த மைந்தரை எண்ணி விழிநீர் உகுத்தாள். தன் கணவனை அன்றி பிற எண்ணம் அற்றவளாக ஆனாள். விழிநீர் உகுத்துக்கொண்டிருந்த அவளைத்தான் குண்டினபுரியிலிருந்து சென்ற ஏழு இளவரசர்கள் கண்டனர். அவர்களைக் கண்டதும் அழுதபடி எழுந்தோடி வந்து அவள் “நிஷதரைப்பற்றிய செய்தியுடன் வந்தீர்களா?’’ என்றுதான் கேட்டாள். அவர்கள் “உங்களைப்பற்றிய செய்தி அறிந்துவந்தோம், மூத்தவளே” என்றனர். “நான் இருப்பது அவர் வாழ்வதைச் சார்ந்தே” என்று அவள் மறுமொழி சொன்னாள்.

சுநாகர் சொல்லி நிறுத்தி ஒரு பாக்கை போட்டுக்கொண்டதும் கதை கேட்டு அமர்ந்திருந்த அயலவர்களில் ஒருவர் “நிஷதர் எங்கே என்று இன்னும் தெரியவில்லையா என்ன?” என்றார். “அவரை ஏழு நிலங்களிலும் ஏழு கடல்களிலும் தேடிவிட்டனர். அதன் பின்னரே நிமித்திக அவை கூடியது. பன்னிரு களம் பரப்பி அவர் இன்றில்லை என்று அவர்கள் உறுதி செய்தனர். நாற்பத்தொருநாள் அரசி துயர் காத்தார். அதன் பின்னர் அவரிடம் மறுமணத்தைக் குறித்து அவர் அன்னை பேசினார். துயர்மீண்ட அரசி அதற்கு முதலில் ஒப்பவில்லை. அரசரும் உடன்பிறந்தாரும் அமைச்சரும் அவரிடம் பேசினர். அவர் அச்சொற்களைக் கேட்டு செவிபொத்திக்கொண்டு கண்ணீர்விட்டார்” என்றார் சுநாகர்.

“இறுதியாக அவரை அரசருக்கு ஆசிரியராகிய தமனரின் தவக்குடிலுக்கு அழைத்துச்சென்றனர். சொற்களிலிருந்து உள்ளத்தின் விடையை தேரமுடியாது அரசி. உன் கனவுகளிலிருந்து அதை தேடி எடு. சொல்லின்றி சிலநாள் இங்கே இரு என்றார் தமனர். அவர் சொன்னதன்படி அங்கே தன்னந்தனிமையில் ஏழு நாட்கள் அரசி தங்கியிருந்தார். ஏழாம்நாள் அவர் ஒரு கனவு கண்டார். அக்கனவில் அவர் கால்கட்டைவிரலை ஒரு நாகம் கவ்வி நெளிந்தது. அவர் விழித்துக்கொண்டு மறுமணம் புரிந்துகொள்ள ஒப்புவதாக சொன்னார்.”

அடுமனையாளர்கள் பின்நிரையில் ஈச்சையோலைப் பாயில் படுத்தும் அமர்ந்தும் சுநாகரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களின் நடுவே சுவர்சாய்ந்து வேறெங்கோ நோக்கியதுபோலிருந்த பாகுகன் “அயோத்தியின் அரசரை வரச்சொன்னது அரசியேதானா?” என்றான். அனைவரும் அவனை நோக்கி திரும்பினர். “அடுமனையாளர்களுக்குத் தெரியாத அரசுமந்தணம் இல்லை என்பார்கள். நீ இப்படி கேட்கிறாய்?” என்றார் சுநாகர். “அவன் அயலூர் அடுமனையாளன். சற்றுமுன்னர்தான் நகர் நுழைந்தான். உண்டு இளைப்பாற இங்கு வந்தான்” என்றான் இளைய அடுதொழிலன் ஒருவன்.

“குள்ளரே, அரசி அனுப்பிய வினாக்களுக்கு அயோத்தியின் அரசர் மட்டுமே சரியான மறுமொழியை சொன்னதாகச் சொல்கிறார்கள். அச்செய்தியை அறிந்ததும் பிற அரசர்கள் சினம்கொண்டுள்ளனர். அவர்கள் பெண்கோள்பூசலுக்கு படைகொண்டு வரக்கூடும் என அஞ்சுகிறார் அரசர். எனவே மகதமோ கலிங்கமோ கூர்ஜரமோ படைஎழுவதற்குள் மணம் முடிந்துவிடவேண்டும் என திட்டமிட்டுத்தான் அயோத்தியின் அரசரை உடனே வரும்படி சொல்லியிருக்கிறார்கள். செய்தி கிடைத்த அக்கணமே கிளம்பி ஒருநாளுக்குள் இங்கே வந்துசேர்ந்துவிட்டார் அயோத்தியின் அரசர்” என்றார் சுநாகர். அடுமனையாளன் ஒருவன் படுத்தபடி “அவருடைய தேர்வலனைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள். பேருடலன். ஒற்றைக்கையால் நான்கு புரவிகளைப் பிடித்து நிறுத்தும் ஆற்றல்கொண்டவன்” என்றான்.

“நாகமறியாத ஏதும் நிகழ்வதில்லை மண்ணில்…” என சுநாகர் மீண்டும் தொடங்கினார். “விண்ணாளும் சூரியனையும் சந்திரனையும் கவ்வி இருளச்செய்யும் ஆற்றல்கொண்டது நாகம். ஒவ்வொருவர் காலடியிலும் அவர்களுக்கான நாகம் வாழ்கிறது என்கின்றன நூல்கள்” என்றபின் பாகுகனிடம் “உமது பெயர் என்ன, குள்ளரே?” என்றார். “பாகுகன்” என்று அவன் சொன்னான். “அரிய பெயர். உமது பெயரின் கதையை சொல்கிறேன்” என சுநாகர் தொடங்கினார்.

“முற்காலத்தில் இப்புவி நாகங்களால் மட்டுமே நிறைந்திருந்தது. அன்றொருநாள் ஸ்தூனன் உபஸ்தூனன் என்னும் இரு நாகங்கள் பிரம்மனை அணுகி நாங்கள் இணைந்து செயல்பட எண்ணியிருக்கிறோம். தனித்துச் செயல்படுவதைவிட எங்களால் இணைந்து விரைவும் ஆற்றலும் கொள்ளமுடிகிறது என்றனர். அவ்வாறே ஆகுக என்றார் பிரம்மன். பின்னர் ஸ்தூனர்கள் பாகுகன் உபபாகுகன் என்னும் வேறு இரு நாகங்களுடன் வந்தனர். நாங்கள் நால்வரும் இணைந்தால் மேலும் ஆற்றல்கொள்கின்றோம். எங்களுக்கு அதற்குரிய உருவை அளிக்கவேண்டும் என்றனர். அவ்வாறே ஆகுக என்றார் பிரம்மன். கால்களும் கைகளுமென எழுந்த நான்கு நாகங்களின் தொகையே மானுடனாக மண்ணில் பிறந்தது.”

“இது என்ன புதிய கதை?” என அயல்வணிகர் ஒருவர் நகைத்தார். “இது குடிநாகர்களின் தொல்கதை. அறிந்திருப்பீர், நான் உரககுடியினன். நாகசூதர்களென நாடுகள்தோறும் அலைபவர்கள் நாங்கள். இமையா விழிகளால் இவ்வுலகை நோக்குபவர்கள். பிளவுண்ட நாவால் இருபால்முரண் கொண்ட கதைகளை சொல்பவர்கள்” என்றார் சுநாகர். “முன்பொரு காலத்தில் இந்தப் பெருநிலம் நாகர்களால் நிறைந்திருந்தது. அவர்களை வென்றும் கொன்றும் நிலம் கொண்டார்கள் மன்னர்கள். அவர்களின் கதைகளை வெல்ல அவர்களால் இயலவில்லை. இந்நிலத்தை சிலந்திவலையென மூடியிருக்கின்றன எங்கள் கதைகள். மண்ணுக்கடியில் வேர்கள் வந்து தொட்டு உறிஞ்சுவதெல்லாம் எங்கள் சொற்களே என்றுணர்க!”

flowerமுதற்புலரியில் அடுமனைக்குள் நுழைந்த பாகுகன் தயங்கி நின்றபின் “அனைவரையும் வணங்குகிறேன்” என்றான். அடுமனையாளர்கள் அப்போதுதான் கலங்களை உருட்டி உள்ளே கொண்டுவந்துகொண்டிருந்தனர். அனல் மூட்டப்பட்ட அடுப்பில் தழல் தயங்கிக்கொண்டிருந்தது. முதிய அடுதொழிலர் உத்ஃபுதர் திரும்பிப்பார்த்து “யார் நீ?” என்றார். “நான் அயோத்தியிலிருந்து நேற்று இரவு வந்தவன். என் பெயர் பாகுகன். சூதன். பரிவலன், அடுதொழிலன்” என்றான். உத்ஃபுதர் அவனை கூர்ந்து நோக்கியபின் “உன் அகவை என்ன?” என்றார். “நாற்பது” என்றான் பாகுகன். “ஆம், எண்ணினேன். ஆனால் அசைவுகளில் சிறுவன்போலிருக்கிறாய். இது அரசர்களுக்குரிய அடுமனை. உனக்கு அடுதொழில் தெரியுமென்பதற்கு என்ன சான்று?” என்றார்.

பாகுகன் அருகிருந்த சட்டுவத்தின் முனையால் அங்கிருந்த அரிமாவில் சற்று எடுத்து அடுப்புத்தழலுக்குள் காட்டி வெளியே எடுத்து அவரிடம் நீட்டினான். உத்ஃபுதர் முகர்ந்து புன்னகைத்து “ஆம்” என்றார். “நீர் நிஷாத அடுதொழில் மரபைச் சேர்ந்தவர். நளமாமன்னரை கண்டிருக்கிறீரா?” பாகுகன் புன்னகைத்து “அறிவேன்” என்றான். உத்ஃபுதர் அந்த அரிசிமாவை அருகிருந்தவரிடம் காட்டி “ஒருகணம் பிந்தியிருந்தால் கரிந்திருக்கும். முந்தியிருந்தால் மாவு. இப்போது வறுமணம் எழும் பொன்பொரிவு” என்றார். “அறிக, அடுதொழில் என்பது அனலை வழிபடுவதே. இது எரி எழுந்த ஆலயம் என்கின்றன நூல்கள்.” திரும்பி பாகுகனிடம் “வருக, தங்கள் கைபடுமென்றால் இங்கு தண்ணீரும் சுவை கொள்ளும்” என்றார்.

இளைய அடுதொழிலர் பாகுகனை சூழ்ந்துகொண்டார்கள். அவன் “நாம் என்ன சமைக்கவிருக்கிறோம்?” என்றான். “இன்று ஒரு உண்டாட்டு உண்டு என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. நம் அரசி தன் கொழுநனை அடையும் நாள் இது என்றார்கள். பெருமணநிகழ்வு பின்னர் வரலாம்” என்றார் அடுதொழிலர் ஒருவர். “ஆம், அதற்கென சமைப்போம்” என்று பாகுகன் சொன்னான். சில கணங்களுக்குள் அங்குள்ளவர்கள் அவன் கைகளும் உள்ளமும் ஆனார்கள். “ஒற்றைத்துளி உப்பை ஊசிமுனையால் தொட்டு நாவிலிட்டால் சுவைதிகழ்கிறது. அது துளிச்சுவை. மொழிகளெல்லாம் ஒலித்துளிகளின் தொகுப்பே. இளையோரே, சுவைத்துளிகளை கோக்கத்தெரிந்தவனே அடுமனையாளன். ஒன்றில் கணக்கு நிற்கட்டும். ஒன்றுநூறென்று ஆயிரமென்று பெருகட்டும்…”

மணமும் சுவையுமாக உணவு எழுந்து அடுகலங்களை நிறைத்தது. “புதுச்சமையலின் மணம். உண்பவர் அரசரேனும் ஆகுக! இந்த மணம் அடுமனையாளனுக்கு மட்டுமே உரியது” என்றார் உத்ஃபுதர். பாகுகன் மணையில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு வெளியே இருந்து வந்த காற்றை உடலில் வாங்கி கண்களை மூடிக்கொண்டான். உத்ஃபுதர் பாக்குத்துண்டு ஒன்றை வாயிலிட்டு கண்களை மூடினார். வாயிலில் நிழலாடியது. பாகுகன் நிமிர்ந்து நோக்க “நான் அயோத்தியின் தேர்வலரை பார்க்க வந்துள்ளேன். அரசியின் அணுக்கி. என் பெயர் கேசினி” என்றாள். பாகுகன் “வணங்குகிறேன், தேவி. நான் பாகுகன்” என்றான்.

அவன் எழுந்து அருகிருந்த அறைக்குச் செல்ல கேசினி உடன்வந்தாள். “உங்கள் அரசரை ஒருநாளில் இத்தொலைவு கூட்டிவந்தீர்கள் என்று அரசி அறிந்தார். என்னை அனுப்பி அதன்பொருட்டு உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்படி சொன்னார்” என்றாள். பாகுகன் “அது என் கடமை” என்றான். “அரசி அயோத்தியின் அரசரை மணக்க விழைவுகொண்டிருக்கிறார். அது உங்களாலேயே நிறைவேறியது என்று உவகை சொன்னார்” என்ற கேசினி “உங்கள் அரசரிடம் அவர் கேட்ட மூன்று வினாக்களை அறிந்திருப்பீர். நீங்கள் அவருக்குத் தகுதியான தேர்வலரா என்றறிய உங்களிடம் மூன்று வினாக்களை கேட்டுவரச் சொன்னார்” என்றாள். பாகுகன் “கேளுங்கள், தேவி” என்றான். “முதுமையே அணுகாமல் வாழ்பவர் யார்? இறப்பேயற்ற அன்னையை கொண்டவர் யார்? ஆடைகளில் மிகப் பெரியது எது?” என்றாள் கேசினி. “இப்புதிர்களுக்கு நீங்கள் மறுமொழி சொன்னால் உங்களுக்கு அரசி ஓர் அருமணியை பரிசளிப்பார்.”

பாகுகன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். “சொல்க!” என்று அவள் சிரித்தாள். பாகுகன் “உள்ளத்தால் முதுமைகொண்டவர் முதுமைகொள்வதே இல்லை” என்றான். “உள்ளத்தால் இளமையிலிருப்பவரின் அன்னை மறைவதே இல்லை.” அவள் “இது சரியான மறுமொழியா என்று அறியேன். சரி, மூன்றாவது மறுமொழி என்ன?” என்றாள். “மிகப் பெரிய ஆடை இருளே” என்றான் பாகுகன். அவள் நகைத்து “நன்று அரசியிடம் சொல்கிறேன்” என்றபின் “இன்றிரவே அயோத்தியின் அரசருக்கு அவைவரவேற்பு அளிக்கப்படும். அதில் மணக்கொடையை அரசரே அறிவிப்பார். நீங்களும் அவைநிற்கவேண்டும் என்று அரசி விழைகிறார்” என்றாள்.

பாகுகன் “எங்கள் அகம்படியினர் இன்று மாலைக்குள் வந்தணைந்துவிடுவார்கள். அமைச்சரும் படைத்தலைவரும். அவர்கள் அரசருக்கு அவைத்துணையாவர். நான் எளிய சூதன்” என்றான். “அரசியின் ஆணை இது” என்றபின் கேசினி தலைவணங்கி கிளம்பிச்சென்றாள். அவள் செல்வதை அவன் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவள் விழிமறைந்ததும் சென்றுகொண்டே இருந்த தேரிலிருந்து விழுந்து மண்ணிலறைபட்டவனாக அதிர்ந்து விழித்துக்கொண்டான். எழுந்து வெளியே அடுமனையாளர்களுடன் சென்று சேர்ந்துகொள்ளவேண்டும் என எண்ணினான். ஆனால் தன் உடலை அவனால் தூக்கமுடியவில்லை.

அருகே கிடந்த நீண்டபிடிகொண்ட அகப்பையை எடுத்து அதைக் கொண்டு அறைக்கதவை மூடினான். ஒரு கலத்தை உருட்டி கதவை அணைகொடுத்து நிறுத்தினான். இருட்டு அறைக்குள் நிறைந்து மூடிக்கொண்டது. கண்களை மூடிக்கொண்டு அசைவில்லாமல் அமர்ந்திருந்தான். பின்னர் தன் முன்னால் அவனை உளவுருவாக சமைத்துக்கொண்டான். மீண்டும் மீண்டும் வெட்டவெளியில் அவ்வுருவை அவன் உள்ளம் வனைந்தது. “நீயா?” என்றான். மறுமொழி இல்லை என விழிதிறந்தபோது வெற்றிடத்தைக் கண்டு சலிப்புடன் மீண்டும் விழிமூடிக்கொண்டான். மூன்றுமுறை விழிதிறந்தபின் அந்த உளவிளையாட்டு சலித்துப்போய் கண்களை மூடிக்கொண்டு துயில முயன்றான். ஆனால் எச்சரிக்கையுணர்வு அவனை தூங்கவும் விடவில்லை. பெருமூச்சுடன் புரண்டு படுத்தான். வெளியே “பாகுகர் எங்கே?” என்ற குரல் கேட்டது.

பாகுகன் எழப்போனபோது மிக அருகே அவனை உணர்ந்தான். “அவள் உணர்ந்துவிட்டாள்” என்று அவன் சொன்னான். “ஆம்” என்றான் பாகுகன். “நீ என அவளுக்குத் தெரியும். நீ எதை உணர்கிறாய் என அறிய விழைகிறாள்.” பாகுகன் பெருமூச்சுவிட்டான். “நீ ஏன் எழுந்து ஓடி அவள் அரண்மனை வாயிலில் சென்று நிற்கவில்லை? ஏன் அவளை ஒருகணமும் மறந்ததில்லை என்று சொல்லவில்லை?” பாகுகன் சில கணங்கள் தலைகுனிந்து அமர்ந்தபின் “அவள் ஏன் இங்கே வரவில்லை? என் முன் வந்து நின்று கண்ணீர்விடவில்லை?” என்றான். “அவள் உன்னைப்போலவே எண்ணுவதனால்” என்றான்.

கசப்புடன் புன்னகைத்தபின் பாகுகன் எழப்போனான். அவன் “ஒருகணம் பொறு. நீ எளிதில் விடுபடமுடியும்” என்றான். “உன்னிடமே முறிமருந்து உள்ளது.” பாகுகன் பேசாமலிருந்தான். “நீ விழையவில்லையா?” பாகுகன் மறுமொழி சொல்லாதது கண்டு “சொல், நீ மீளவும் சேரவும் எண்ணவில்லையா?” என்றான். பாகுகன் “அவள் அரசி” என்றான். “நீயும் அரசனாக முடியும்.” பாகுகன் பெருமூச்சுவிட்டு “செல்க… என்னை அழைக்கிறார்கள்” என்றான். “நீ ஏன் தயங்குகிறாய்? அவள் முன் தணியக்கூடாது என்றா? அவள் உன்னைத் தேடிவந்து காலடியில் விழவேண்டுமென்றா?” பாகுகன் “நான் செல்லவேண்டும்” என்று எழுந்துகொண்டான்.

அவன் எழுந்து பாகுகனுக்குப் பின்னால் வந்தபடி “உதறிச்சென்றவன் நீ. திரும்பிச்செல்லவேண்டிய பொறுப்பு உனக்கே” என்றான். “நான் இதைப்பற்றி பேசவிரும்பவில்லை” என்றான் பாகுகன். “இத்தனை தொலைவு அலைந்து மீண்டுவிட்டு இந்த ஒருகணத்திற்கு இருபுறமும் நின்றிருப்பீர்களா என்ன?” பாகுகன் கதவைத் திறந்தான். வெளியே இருந்து ஒளி முகத்தில் பொழிய கண்கூசி விழிநிறைந்தான். “இங்கிருக்கிறீர்களா, பாகுகரே? உங்களை தேடிக்கொண்டிருந்தோம்” என்றான் அடுமனையாளன். பாகுகன் ஒன்றும் சொல்லாமல் முன்னால் நடந்தான்.

அடுமனையாளன் அறைக்குள் சென்று கமுகுப்பாளைத் தொன்னைகளின் கட்டை எடுத்துக்கொண்டு “நான் தொன்னையை எடுக்கத்தான் வந்தேன். எவர் பூட்டியது இவ்வறையை என வியந்தேன்” என்றான். பாகுகன் பெருமூச்சுவிட்டு “நான் உடனே கிளம்பவேண்டும்” என்றான். “கிளம்புகிறீர்களா? என்ன சொல்கிறீர்கள்?” என்றான் அடுமனையாளன். “அரசரின் ஆணை. நான் உடனே அயோத்திக்குச் செல்லவேண்டும்… பெரியவரிடம் நான் சென்றுவிட்டதாகச் சொல்லிவிடு” என்று பாகுகன் சொன்னான். “ஒருநாள்கூட நீங்கள் இங்கே தங்கவில்லை. நீங்கள் சமைத்ததை எம்மனோர் உண்பதை பார்க்கவுமில்லை.” பாகுகன் புன்னகையுடன் “பிறிதொருமுறை வருகிறேன்” என்றான்.

முந்தைய கட்டுரைஹிந்து குறித்து…
அடுத்த கட்டுரைவெண்முரசு -விமர்சனநூல்