அன்புள்ள ஜெ,
“அன்புள்ள எழுத்தாளருக்கு” என்று நீங்கள் வாசகர் கடிதங்களில் அழைக்கப்படும்போது அது சற்றே ஒவ்வாததாகத் தோன்றுகிறது. எழுத்தாளர்கள் எப்போதிலிருந்து அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? கவிதை படைப்பவர்கள் கவிஞர்கள் என்று அழைக்கப்படும்போது இலக்கியம் படைப்பவர்களை அழைக்க வேறு சொல் இல்லையா? உங்கள் சொற்களில் “”..ஒரு கதை எழுதியவரும் எழுத்தாளரே. கிசுகிசு எழுதுபவரும் சினிமா விமர்சனம் எழுதுபவரும் எழுத்தாளரே..” (இலக்கியத்தை எடுத்துச்செல்லுதல்). தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
அன்புடன்
பாலகிருஷ்ணன், சென்னை
அன்புள்ள பாலகிருஷ்ணன்
ஓர் எழுத்தாளனரை அழைக்க மிகச்சிறந்த சொல் எழுத்தாளன் என்பதே. அதில் படிநிலைகள் உண்டு. தல்ஸ்தோயும் எழுத்தாளர், நானும் எழுத்தாளர். அச்சொல்லை அதன்பொருட்டு நிராகரிக்கமுடியுமா என்ன?
எழுதும் எவரும் தன்னை எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளலாம். அதில் தயக்கம் தேவை இல்லை. அதை ஒரு அறைகூவலாக தனக்கே விடுத்துக்கொள்ளலாம்.
அனைவரையும் எழுத்தாளர் என வாசகர்கள் சொல்வதே பிழையானது. ஆனால் அப்படிச் சொல்பவர்கள் வாசகர்களே அல்ல. வாசகர்கள் அல்லாதவர்களிடம் நாம் நம்மை எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது. வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களிடம் எழுத்தாளன் என எவரையும் அறிமுகமும் செய்யக்கூடாது. தமிழின் மழுங்கிய சூழலில் நுட்பமான சிறுமைகள் நேரலாம்
ஜெ