‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 73

72. ஆடியிலெழுபவன்

flowerகீசகன் அணிபுனைந்துகொண்டிருந்தபோது பிரீதை வந்திருப்பதை காவலன் அறிவித்தான். அவன் கைகாட்ட அணியரும் ஏவலரும் தலைவணங்கி வெளியே சென்றனர். உள்ளே வந்து வணங்கிய பிரீதை “அவளும் அணிபுனைந்துகொண்டிருக்கிறாள்” என்றாள். கீசகன் புன்னகையுடன் “நன்று” என்றான். “அவள் கோரிய அனைத்தும் அளிக்கப்படும் என்று மீண்டும் நான் சொன்னதாக சொல்…” பிரீதை பேசாமல் நின்றாள். “என்ன?” என்றான் கீசகன். “அவள் கோருவன எளியவை அல்ல. தாங்கள் அவற்றை உய்த்துணர்ந்திருக்கிறீர்களா என ஐயுறுகிறேன்.”

கீசகன் உரக்க நகைத்து “அவள் அத்தனை எதிர்வு காட்டியபோதே நான் அவள் கோருவன பெரியவை என புரிந்துகொண்டேன். நான் எண்ணியதைவிடவும் நுண்மையும் ஆற்றலும் கொண்டவள். மிக எளிதாக என்னை அரசரவைக்கு கொண்டுசென்று குடிநெறிமுன் சிக்க வைத்துவிட்டாள். பொறியில் கால் சிக்கிய யானைபோல நான் நின்றிருக்கையில் என்னிடம் அவள் நிலைபேசத் தொடங்குகிறாள். இன்று எனக்கு வேறுவழியே இல்லை…” என்றான்.

“உண்மையில் நான் அவளையும் பிற பெண்டிரைப்போல நுகர்ந்து வீசவே எண்ணியிருந்தேன். இங்கு எவளையும் மணமுடிக்கும் எண்ணம் எனக்கில்லை. விராடத்தின் முடிசூடியபின் முதன்மை ஷத்ரியகுலம் ஒன்றில் இருந்து மகட்கோள் என்பதே என் திட்டம். அது கிழக்கே காமரூபமோ வடக்கே திரிகர்த்தர்களோ… ஷத்ரியக் குருதியாக இருக்கவேண்டும். இல்லையேல் என் கொடிவழியினர் இந்த அரியணையில் நீடிக்க முடியாது” என்றான் கீசகன். “ஆனால் இவள் இயற்றிய இந்தப் பெருஞ்சூழ்ச்சியை காண்கையில் இவளை நான் துறக்கமுடியாதென்று உணர்கிறேன்.”

“என்னிடமில்லாதது சூழ்ச்சித்திறனே. அதனால்தான் இத்தனை காலம் இங்கே அடங்கியிருக்கிறேன். இவள் என் அரசியானால் தோளாற்றலுடன் மதியாற்றலும் இணையும். ஆகவே அந்தக் கோரிக்கையை நான் உண்மையாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்று கீசகன் சொன்னான். பிரீதை “பட்டத்தரசியாகவா?” என்றாள். “அதை அவளிடமே பேசிக்கொள்கிறேன். அவளே இந்நகரை முழுதாளும் அரசியாக இருப்பாள். நான் ஷத்ரிய அரசகுலத்தில் பெண்கொண்டு அவளை பட்டத்தரசியாக்கினாலும் அவள் இவளுக்கு அடங்கியிருப்பாள். பட்டத்தரசி பெறும் மைந்தர் விராடபுரியை ஆள்வார்கள். ஆனால் இவள் பெறும் மைந்தருக்கும் நிலம் வென்று தனியரசு அமைத்துக்கொடுப்பேன். அவர்களும் கோல்கொண்டு அரியணை அமர்வார்கள்.”

பிரீதை “இது அவள் கோரியதை விட மிகுதி” என்றாள். “ஆம், இனி சைரந்திரியிடம் சொல்சூழ்வதில் பொருளில்லை. அவள் கழுகு என பறக்கையில் நான் நிலத்தில் ஊர்ந்துகொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் அவளிடம் திறந்து வைத்து நிற்பேன். அவளே என்னையும் கொண்டுசெல்லட்டும். இந்நாட்டை நான் வெல்வது இனி அவளுடைய வெற்றி. அவளுக்குப் பிறக்கவிருக்கும் மைந்தரின் நலன்.”

பிரீதை சில கணங்கள் பேசாமல் நின்றுவிட்டு “ஆனால் அவளை முறைப்படி மணம்கொள்வதை நாளை குடியவையில் நீங்களே அறிவிக்கவேண்டும் என்பது…” என தொடர அவன் கையமர்த்தி “அதை அவள் கோராமலிருக்கமாட்டாள். அவளுடைய சூழ்ச்சியின் உச்சம் அது. அவள் என் தனிச்சொல்லை நம்பவில்லை. அரசியலறிந்தோர் ஒருபோதும் தனிச்சொற்களை ஏற்கமாட்டார்கள். குடியவையில் அறிவித்த பின்பு நான் பின்னடி வைக்கமுடியாது. குடியவையில் நான் முதலிலேயே எழுந்து அவளை நான் முறைப்படி மணந்துவிட்டதாக அறிவித்தால் அவள் அதை ஏற்று தன் சொல்லை உரைப்பாள். சற்று தயங்கினால்கூட நான் அவளை பெண்சிறுமை செய்ததாகச் சொல்லி என்னை குடிவிலக்கு நோக்கி கொண்டுசெல்வாள்” என்றான்.

பிரீதை பெருமூச்சுடன் “அவள் யார்? இத்தனை நுண்சூழ்ச்சிகளைச் செய்ய எங்கே பயின்றாள்?” என்றாள். “அவள் எவரென ஒருபோதும் நான் கேட்கக்கூடாது, அறிந்தாலும் அதை உளம் கொள்ளக்கூடாது. அதன்பொருட்டு அவள் முடிநீக்கம் செய்யப்படக்கூடாது என்பது அடுத்த கோரிக்கை. அதுவே அவள் யார் என்று காட்டுகிறது. அவள் உடன்கட்டை ஏறுவதைத் தவிர்த்து தப்பி வந்த அரசகுலமகள். சிதையேற ஒப்புக்கொண்டு சந்தனமும் மாலையும் அணிந்து சுடலைவரை சென்றபின் அஞ்சித்திரும்பும் பெண்ணை அக்குடி தேடிச்சென்று கொன்றொழிப்பது வழக்கம். ஏனென்றால் தெய்வங்கள் அவளை பலியாக ஏற்றுக்கொண்டுவிட்டன. பலிவிலங்கு தப்பிச்சென்றால் தெய்வங்கள் சினம் கொள்கின்றன. அவற்றின் பழியை அக்குடி தவிர்க்கவே முடியாது” என்றான் கீசகன்.

புன்னகையுடன் “அவள் தன் குழலை முடிவதோ மலர்சூடுவதோ இல்லை, அதை நீ நோக்கியிருப்பாய்” என்றான். பிரீதை “ஆம்” என்றாள். “அது கைம்பெண்களுக்கான நெறி. அவள் என்னை மணந்த பின்னரே முடிசுற்றிக்கட்டி மலர்சூடுவாள்” என்றான் கீசகன். “அவள் இங்கே முடிசூட்டிக்கொண்டாளென்றால் உடனே அவள் எவரெனத் தெரிந்து அந்த அரசகுடி அவளை ஒப்படைக்க வேண்டுமென நம்மிடம் கோரும். போருக்கும் எழக்கூடும். நம் குடிகளில் சிலரும் அவளுக்கு எதிராகத் திரும்பலாம். ஆகவேதான் முன்னரே அதற்கும் என்னிடம் சொல்லுறுதி கோருகிறாள்.”

பிரீதை மீண்டும் நீள்மூச்சுவிட்டு “நான் சென்று அவளை அழைத்துக்கொண்டு கொடிமண்டபத்திற்கு வருகிறேன்” என்றாள். “கொடிமண்டபத்தைச் சுற்றி நான் என் காவல்படையினரை நச்சு அம்புகளுடன் நிறுத்தியிருக்கிறேன். கால்தவறிக்கூட எவரும் அங்கே வந்துவிடக்கூடாது” என்று கீசகன் சொன்னான். “ஆம், நான் சேடியரிடம் இன்று கொடிமண்டபத்தில் கன்னிப்பூசனை நிகழவிருப்பதாகவும் அதிலீடுபடும் அரசகுடி ஆண்கள் அன்றி எவரும் அங்கே செல்லக்கூடாதென்றும் சொல்லிவிட்டேன்.”

கீசகன் அவள் தோளைத்தட்டி “நன்று” என்றான். அவள் விசும்பி அழும் ஒலிகேட்டு குனிந்து நோக்கி “என்ன? ஏன் அழுகிறாய்? என்ன நிகழ்ந்தது?” என்றான். “ஒன்றுமில்லை” என்றாள் பிரீதை. “சொல், என்ன நிகழ்ந்தது? ஏன்?” என்றான் கீசகன். “நான் உங்களுக்கு அடிமையானது பதினாறாண்டுகளுக்கு முன்பு… அன்றுமுதல்…” என்று விம்மி அவள் முகத்தை மூடிக்கொண்டாள். “அதனாலென்ன? நீ என்றும் என் அணுக்கியே.” அவள் “இனி அப்படி அல்ல. என்னை அவள் அணுகவிடமாட்டாள். அவள் என்னை நடத்தும்முறை…” என்று மீண்டும் சொல்முறிய விசும்பினாள்.

கீசகன் புன்னகைத்து “இவ்வளவுதானா? இதற்காகவா?” என்றான். “நீ விழைவதென்ன? உன் இடம், அவ்வளவுதானே? நான் முடிசூடிக்கொண்டால் எல்லைப்புற கோட்டைச்சிறுநகர் ஒன்றை உனக்கென்றே அளிக்கிறேன். அங்கே நீ என் அரசியரில் ஒருத்தியாக தலைமை கொண்டு அமரலாம். மைந்தரையும் பெற்றுக்கொள்ளலாம். உன் மைந்தர் அங்கே காவல்படைத் தலைவர்களாக ஆவார்கள்.” அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தாள். அவள் தலை நடுங்கியது. உதடுகள் அழுகையென நெளிந்தன. “மெய்யாகவா?” என்றாள்.

“ஆம், மெய்யாக. என் குலதெய்வங்கள்மேல் ஆணையாக!” அவள் நீர் நிறைந்த கண்களால் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “நம்பு, நான் அளிக்கும் அன்புக்கொடை இது. நீ அவள் முன் வரவே வேண்டாம். எல்லையில் நான் வரும்போது மட்டும் சந்திப்போம். விலகிச் சென்றால் அவள் உன்னை மறந்தும் விடுவாள்.” பிரீதை மெல்ல இளகி இதழ்கள் வளைய கசப்புடன் சிரித்து “அவளைப்போல நான் உங்கள் சொல்லுக்கு பிறிதொரு பூட்டும் போட்டுக்கொள்ளமுடியாது” என்றாள். “இது என் சொல்… அவளுக்கு என்னைத் தெரியாது” என்றான் கீசகன்.

“எனக்குத் தெரியும்” என்று அவள் சொன்னாள். “என்ன சொல்கிறாய்?” என்றான் கீசகன் சினத்துடன். “என்ன வேண்டுமென்றாலும் ஆகுக! நீங்கள் இதை எனக்கு சொன்னீர்கள் என்பதே எனக்குப் போதும். அறியா அகவையில் உங்களுக்கு ஆட்பட்டது என் நெஞ்சம். பிறிதொன்றில்லாமல் இதுவரை வந்துவிட்டேன். என் படையலுக்கு மாற்றாக இதுவரை எதுவும் பெற்றதில்லை. இச்சொல்லையே நீங்கள் அளிக்கும் அருள் எனக் கொள்கிறேன்” என்றாள். “இதோ பார்…” என அவன் பேசத்தொடங்க அவள் தலைவணங்கி விலகிச்சென்றாள்.

மீண்டும் அணியரும் ஏவலரும் வந்து அவனை ஒருக்கத் தொடங்கினார்கள். அவன் ஆடியில் தன் உருவம் மறைந்து அங்கு ஒரு அணிச்சிலை எழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். தன் பெருந்தோள்களை நோக்குவது எப்போதுமே அவனுக்கு பிடிக்கும். தசைகளை உருட்டி உருட்டி நாளெல்லாம் நோக்கிக்கொண்டிருப்பான். ஆனால் ஆடி நோக்குவது குறைந்து நெடுநாட்களாகின்றன என அப்போது அறிந்தான். ஏன் என்றும் அவன் அறிந்திருந்தான். ஆடியில் நோக்கும்போதெல்லாம் தன் உடலின் குறைகள் அவனுக்கு தெரியத் தொடங்கின. அவன் தோள்கள் பெருத்திருந்தாலும் கழுத்துடன் இணைக்கும் தசை பொங்கி மேலெழுந்திருக்கவில்லை. நெஞ்சுக்குழிக்குக் கீழே வயிறு புடைத்து மேலே எழுந்திருந்தது. தொடைத்தசைகள் இறுக்கத்தைவிட எடையே கொண்டிருந்தன.

அக்குறைகளெல்லாம் வலவனுடன் தன் உடலை ஒப்பிட்டுக் கொள்வதனால் தெரிபவை என அவன் அறிந்த பின்பு ஆடியே கசப்பை அளித்தது. வெறியுடன் உடல்பயிலத் தொடங்கினாலும் உணவை ஒழிக்கவும் அந்தியில் மதுவிலாடாமலிருக்கவும் அவனால் இயலவில்லை. “மதுவுடன் நீங்கள் உண்ணும் இனிப்புகளும் கொழுப்புகளுமே உங்களை எடைகொள்ளச் செய்கின்றன, படைத்தலைவரே” என்றார் படைப்பயிற்சியாளரான சிம்மர். “ஊனுணவை மட்டும் உண்ணுங்கள். வேகவைத்த ஊன் எத்தனை உண்டாலும் உடல் பெருக்காது.” அவன் ஆம் என தலையசைத்தாலும் ஒவ்வொருநாளும் அவன் ஆணையில் நிற்காமல் நழுவிச் சென்றுகொண்டிருந்தது.

ஆடிப்பாவையை திரும்பித் திரும்பி பார்த்தான். அருகே நின்றிருந்த சமையன் “யட்சர் போலிருக்கிறீர்கள், படைத்தலைவரே” என்றான். “அணி முடிந்தபின் முகமனும் உரைக்கவேண்டும்போலும்” என்றான் கீசகன் நச்சு கலந்த சிரிப்புடன். “இல்லை, மெய்யாகவே சொல்கிறேன். இத்தனை பேருடல் மானுடருக்கு அரிதாகவே அமைந்துள்ளது.” கீசகன் “அரிதாக என்றால்?” என்றான். சமையன் “மிகச் சிலருக்கு” என்றான். “எவருக்கு?” என்றான் கீசகன். “நான் நேரிலறிந்தவர்கள் மகதமன்னர் ஜராசந்தரும் வங்கரான பகதத்தரும் மட்டுமே.” கீசகன் “பிற எவரெல்லாம்?” என்றான். சமையன் தயங்கினான். “சொல்” என்றான் கீசகன்.

“நீங்கள் அறிந்தவர்கள்தான் அனைவரும். அஸ்தினபுரியின் பீமசேனர்.” கீசகன் தன் உள்ளே ஒரு முரசதிர்வை கேட்டான். “ம்” என்றான். “அவர் குடியில் முன்னுருவென இருப்பவர் சிபிநாட்டு பால்ஹிகர்” என்றான் சமையன். “சொல்” என்றான் கீசகன். “சூதமன்னர் கர்ணனும் பெருந்தோளன் என்கிறார்கள்.” கீசகன் “ம்” என்றான். நீண்ட அமைதி ஒலிக்கவே திரும்பி நோக்கி “சொல்” என்றான். சமையன் “இது சமையனின் நாவால் சொல்லப்படுவது. அடுமனையாளன் வலவன்” என்றான். “ம்” என்றான் கீசகன். பின்னர் அவன் செல்லலாம் என கைகாட்டினான். தனிமையில் தன் உருவை ஆடியில் நோக்கியபடி நின்றான். ஆடிப்பாவை அவனை நோக்கிக்கொண்டிருந்தது, குழப்பத்துடன் எவரிடமென்றில்லாத சினத்துடன். ஒருகணம் அவன் ஓர் அச்சத்தை உணர்ந்தான். அவன் அங்கே இல்லை, ஆடிப்பாவை மட்டுமே இருந்தது.

பிரீதை வந்து வாயிலில் நின்றாள். அவ்வசைவு அவனை மீண்டும் திடுக்கிடச் செய்தது. “அவள் கொடிமண்டபத்திற்கு சென்றுவிட்டாள்” என்றாள். “நான் சொன்னதுபோலவே வெண்நீலப் பட்டாடைதானே?” என்றான் கீசகன். “ஆம், படைத்தலைவரே” என்றாள் பிரீதை. “நான் கொடுத்தனுப்பிய முத்தாரமும் மணிக்குழையும்?” என்று அவன் கேட்டான். அவள் எரிச்சலை மறைக்காமல் “நீங்கள் அனுப்பிய அணிச்சேடியரே அவளை ஒருக்கினர். நான் கைபற்றி கொண்டுசென்று கொடிமண்டபத்தில் அமரவைத்துவிட்டு வந்தேன். ஆணைப்படி அகல்விளக்கை எடுத்துச் சுழற்றி காவலருக்கு குறியளித்தேன். இனி எவரும் சோலைக்குள் நுழைய முடியாது” என்றாள்.

“நன்று” என்றான் கீசகன். அவள் தோளைத் தட்டி “இதன்பொருட்டு நான் உன்னிடம் மேலும் கனிவு கொள்கிறேன்” என்றான். அவள் மிக மெல்லிய ஓர் அசைவால் அவன் கையை விலக்கினாள். உண்மையில் அவ்வசைவு அவள் உடலில் வெளிப்படவே இல்லை. அவளுக்குள் எண்ணமென்றே நிகழ்ந்தது. ஆனால் அவன் கையில் அது தெரிந்தது. அவள் முகம் கூட மாறவில்லை என்பதை அவன் விந்தையுடன் எண்ணிக்கொண்டான். “நீ இங்கிரு… நான் காலைக்குள் வருவேன்” என்றபின் வெளியே சென்றான். அவள் செல்வாழ்த்தென ஏதும் சொல்லவில்லை என்பதை இடைநாழியில் நடக்கையில் உணர்ந்தான்.

flowerஇடைநாழி மிக நீண்டு செல்வதாக அவனுக்குத் தோன்றியது. அவன் கால்குறடுகளின் ஒலி சுவர்களிலும் தூண்களிலும் எதிரொலித்தது. நகரமெங்கும் பந்தங்களின் செவ்வொளி எழுந்து புழுதியிலும் புகையிலும் பட்டு ஒளிமீள்வு கொள்ள அந்தியென மாயம் காட்டியது வானம். அவ்வப்போது கொம்புகளும் முரசுகளும் முழங்க கூடவே மக்களின் பெருந்திரள் கூச்சல் எழுந்து திசைகளை அறைந்து ஒலியெதிர்வுகளை திரட்டிக்கொண்டது. கூத்தம்பலங்கள் அனைத்திலுமிருந்து இசைச்சிதறல்கள் சாளரங்களினூடாக செவ்வொளியுடன் வெளிவந்து இருளில் நீண்டுநின்று அதிர்ந்தன.

அவன் மலர்க்காட்டுக்குச் செல்லும் வழியில் நின்றிருந்த கவச உடையணிந்த காவலனை நோக்கி மெல்ல தலையசைத்துவிட்டு கடந்து சென்றான். வேறெங்கும் காவலர் கண்களுக்குப் படவில்லை. ஆனால் தூண்களுக்குப் பின்னாலும் கூரைமடிப்புகளிலும் மரத்தழைப்புக்கு உள்ளேயும் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என அவன் நுண்புலன் காட்டியது. மலர்க்காட்டுக்குள் ஒளியேதும் இருக்கவில்லை. அதுவரை விழிகளை நிறைத்திருந்த ஒளி மறைந்தபோது அனைத்தும் உருவிலியிருளாகத் தெரிந்தன. கண்களை விழித்து காலடிகளை மட்டும் நோக்கியபடி நடந்தான்.

மெல்ல விழிகள் புறஒளியை மறந்து உள்ளிருந்து எண்ணங்களின் ஒளியை கொண்டுவந்து நிறைத்துக்கொண்டன. வெளியே இருள்வடிவெனத் தெரிந்த ஒவ்வொன்றின் மேலும் நினைவுகளிலிருந்து உருவங்களைத் தேடி எடுத்து கொண்டுவந்து பொருத்தி காட்சியுலகொன்றை உருவாக்கிக் கொண்டன. அதில் அவன் கனவிலென நடந்தான். அது கனவென்று தோன்றுவதற்கு அந்த இருள்தான் ஏதுவா என எண்ணிக்கொண்டான். கூர்ந்து நோக்கும்தோறும் காட்சிகள் மங்கலாயின. ஆனால் கால்களும் கைகளும் அனைத்தையும் அறிந்திருந்தன.

மரமல்லிகளின் வெண்மலர்கள் இருட்டு பூத்தது என செண்டாகத் தெரிந்தன. வானொளியின் விளிம்பென இலைக்கூர்மைகள். அருகிருந்த இலைகள் மறைந்திருக்க அவற்றின் ஒளிமிளிர்வுகள் மட்டும் தெரிந்தன. இந்த இரவை நான் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என எண்ணிக்கொண்டான். இவ்விரவுக்கென சற்றுமுன் எழுந்தவன் நான். ஒருபோதும் அறியாத ஒருவன். ஆயிரம் செவிகளும் ஆயிரம் கண்களும் ஆயிரம் மூக்குகளும் கொண்டவன். உடலே புலனென்றானவன். சிதறாத சீருளம் கொண்டவன். இது நான் அல்ல. ஆடியிலிருந்து எழுந்த யட்சன். அங்கே பாவை மறைந்த ஆடியை நோக்கியபடி நான் திகைத்து அமர்ந்திருக்கிறேன்.

அவன் தொலைவிலேயே கொடிமண்டபத்தில் அமர்ந்திருந்த சைரந்திரியை பார்த்துவிட்டான். தன் நெஞ்சின் ஓசையைக் கேட்டபடி அவன் அசைவிலாது நின்றான். ஒருகணத்தில் ஆவியாகி மறைந்து மீண்டும் படிந்து குளிர்ந்து ஈரமும் உயிர்ப்புமாக உடல்சூடியதுபோல் உணர்ந்தான். பெருமூச்சுவிட்டு தன்னை ஆற்றிக்கொண்டான். “பொறு, பொறு… இக்கணத்தில் இரு” என தன் உள்ளத்தை திரட்டிக்கொண்டான். ஏன் இப்படி பதறுகிறேன்? இவள்மேல் இத்தனை காமம் கொண்டிருக்கிறேனா? இது காமம்தானா? எனில் இதுவரை கொண்டது காமமே அல்ல. இது பிறிதொன்று. விடாய்போல பசிபோல உடல் தன்னை நிறைத்துக்கொள்வது. உடலென தன்னை உணரும் உள்ளம் கொள்ளும் எழுச்சி இது. இது நான் முழுமைகொள்வது. என் இடைவெளிகள் அனைத்தும் நிறைவது.

அவன் கீழே உதிர்ந்துகிடந்த மலர்களைக் கண்டான். அவற்றை குறடுகளால் மிதிக்கக் கூசி அவற்றை கழற்றிவிட்டு நுனிக்கால் எடுத்துவைத்து கொடிமண்டபம் நோக்கி சென்றான். மலர்கள் பட்டபோது உள்ளங்கால்கள் சிலிர்ப்படைந்தன. உடலைத் தொட்ட இலைநுனிகள் பூனைமூக்குகள்போல நாய்நாக்குகள்போல விதிர்ப்படையச் செய்தன. இத்தனை நுண்ணுணர்வு கொண்டுவிட்டேனா? இப்போது ஒரு சிறுதென்றல் என்னைத் தூக்கி கொண்டுசெல்லக்கூடும். முகிலென நான் உருவழிந்து கீற்றுகளென்றாகி இந்த மரங்களிடையே பரவக்கூடும். இலைகளில் தண்பனிப்பாக பரவிவிடக்கூடும்.

கொடிமண்டபத்தின் படிகளில் ஏறி அவன் அவளை நோக்கியபடி நின்றான். வெண்நீல ஆடையை இருளில் தெரிவதற்காகவே அவன் தெரிவு செய்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். வெண்முத்தாரமும் வைரக் குழைகளும் ஆடையுடன் இணைந்து இருளில் எழுந்து தெரிந்தன. ஆடையால் முகம் மறைத்து ஒருக்களித்து மரப்பீடத்தில் அமர்ந்திருந்தாள். கொடிமுல்லை அவளருகே நீண்டிருக்க ஒரு கிளையை கையால் பற்றியிருந்தாள். அவன் அதுவரை தன்னுள் பெருகிய சொற்கள் எங்கு சென்றன என்று திகைத்தான். மூச்சு மட்டும் குளிராக உடலை மெய்ப்புகொள்ளச் செய்தபடி வந்துகொண்டிருந்தது.

பேசவேண்டும், பேசியாகவேண்டும். பேசு பேசு பேசு. அவன் “தேவி” என்றான். ஒலி எழவில்லை என உணர்ந்து மீண்டும் அழைத்தான். அது தொண்டையொலியாக வெளிப்பட்டது. “தேவி” என அழைத்தபோது அவ்வொலி அவனை திடுக்கிடச் செய்தது. அவள் உடலும் மெல்லசைவு கொண்டது. குரல் தாழ “நான்…” என்றபின் “என் வாழ்க்கையில் முழுமை என ஒன்று உண்டெனில் அது இன்று நிகழும்” என்றான். “ஆம்” என்றாள் அவள். “உன்னை பார்ப்பதற்குள்ளாகவே நீ என்னவள் என உணர்ந்துவிட்டேன். நீ அரண்மனைக்குள் நுழைந்தபோதே உன்னைப்பற்றி கோட்டைக்காவலர் என்னிடம் சொன்னார்கள். நீ என்னைத் தேடி வருவதாக உன் அணுக்கன் ஒருவன் கோட்டைமுகப்பில் சொன்னான் என அறிந்தேன். அப்போதே உன் உள்ளத்தையும் அறிந்துகொண்டேன்.”

அவள் “ம்” என்றாள். “ஆனால் நாம் இணைய இத்தனை காலமாகியிருக்கிறது. இந்த விளையாட்டு சற்று கடுமையானதே. ஆனாலும் இது நன்று. நம் இருவரின் மதிப்பையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டது இதனால்தான். நான் நீயில்லாமல் ஓயமாட்டேன் என்றும் நீ உன் இடத்திலன்றி அமையமாட்டாய் என்றும் தெளிந்தது இப்போது” என்றான் கீசகன். “ஏன் பேசாமலிருக்கிறாய்?” அவள் நீள்மூச்செறிந்தாள். “உன்னை பிரீதை இங்கு கொண்டுவந்துவிட்டாள் என அறிந்த பின்னரே இது மெய்யாகவே நிகழ்கிறது என என் உள்ளம் ஏற்றுக்கொண்டது.”

அவள் ஒன்றும் சொல்லவில்லை. “அவளைப் பற்றிய பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை அல்லவா?” என்றான் கீசகன். “நான் உன்னை வென்றாகவேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தவள் அவள்தான். எளிய வீட்டுவிலங்கு போன்றவள். காலடியை சுற்றி வருபவள். அவளை நீ ஒரு பொருட்டாகவே எண்ணவேண்டியதில்லை. அவள் எனக்கு தன்னை படைத்திருக்கிறாள். அதனூடாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறாள். ஆகவே சற்று பொறாமை கொள்கிறாள். அவளை நீக்கிவிடுகிறேன். நீ ஆணையிட்டால் இவ்வுலகிலிருந்தே.” அவன் நகைத்து “மலைத்தெய்வங்கள் முதற்பலியென பூசகனையே கொள்கின்றன என்பார்கள்” என்றான். அவளும் மெல்ல நகைத்தாள்.

“பிறகென்ன?” என்றபடி கீசகன் அருகே சென்றான். “உன் கோரிக்கைகளுடன் பிரீதை வந்தபோது நான் ஒருகணம் வியந்தேன். அதை நம்பாமல் குழம்பினேன். அவற்றிலிருந்த உள்மடிப்புகளை விரிக்க விரிக்க அனைத்தும் தெளிவாகியது. நான் விரித்த வலையில் நீ சிக்கவில்லை. நீ விரித்த வலையில்தான் நான் சிக்கியிருக்கிறேன். ஆனால் மிக மகிழ்ச்சியுடன் இதில் இருக்கிறேன். இந்த வலையிலேயே என்னை வைத்திரு. இதுவே என் அரியணை, அரண்மனை” என்றான் கீசகன். “எனக்கே விந்தையாக இருக்கிறது. நான் இத்தனை அழகாகப் பேசுவேன் என எண்ணியதே இல்லை. உன் அறிவில் சில திவலைகள் எனக்கும் வந்துவிட்டனபோலும்.”

அவள் கூந்தல் தரைவரை வழிந்து கிடந்தது. அவன் மெல்ல அதை தொட்டான். “உன்னிடம் நான் பித்து கொண்டதே இக்கூந்தலழகைக் கண்டுதான். இதை கவிதையாக்குக என என் அவைச்சூதரிடம் சொன்னேன். தேவகன்னி ஏறிய கருமுகில் என்றான் ஒருவன். பொருந்தவில்லை என்றேன். எரிதழல் கொற்றவை ஏறிய மதகரி என்றான் இன்னொருவன். ஆம் என்று கூறி அவனுக்கு ஏழு கழஞ்சு பொன் கொடுத்தேன். நான் பொன் கொடுப்பதே அரிது. உனக்காகக் கொடுத்தது அது.”

அவன் அக்குழல்கற்றைகளை தன் முகத்தில் வைத்துக்கொண்டான். “செண்பக மணம்!” என்றான். “உன் குழலுக்கு வேறெந்த மலரும் பொருந்தாது. மற்ற மலர்மணங்களில் எல்லாம் மண்ணும் நீரும் காற்றுமே உள்ளன. செண்பகத்தில் மட்டும் அனல்” என்றான். “அல்லது நாகலிங்கம். அதிலுள்ளது நஞ்சு.” மெல்ல சிரித்து “என்ன பேசிக்கொண்டிருக்கிறேன்? பித்தன்போல. நீ ஒரு சொல்லும் சொல்லவில்லை” என்றான். அவள் நீள்மூச்செறிந்தாள்.

“உன் முன் என்னை முழுமையாகத் திறந்துவைக்கிறேன். உன் உடல்கண்டு காமம் கொண்டேன். பின் உன்னை வெல்லவேண்டும் என விழைந்தேன். உன் சூழ்திறன் கண்டபின் நீ உடனிருக்க வேண்டுமென கருதினேன். ஆனால் இந்த மலர்ச்சோலைக்குள் நுழைந்தபோது அவையெல்லாம் பொய் என உணர்ந்தேன். நான் உன்னால் மட்டுமே நிறைவடைய முடியும். அவ்வளவுதான்” என்றான் கீசகன். “என் கனவுகளில் நீயே நிறைந்திருக்கிறாய்.” அவள் “ம்?” என்றாள். அவன் ஒரு கணம் தயங்கி “ஆம், உன்னளவே அந்த அடுமனையாளனும் என்னுள் இருக்கிறான்” என்றான்.

அவ்வெண்ணத்தால் அதுவரை இருந்த அத்தனை உணர்வெழுச்சிகளையும் இழந்து எரிச்சல் கொண்டான். “ஏன் நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம்?” என்றபடி அவள் தோளில் கைவைத்தான். மீண்டும் அவன் உள்ளம் கிளர்ந்தெழுந்தது. “உன்னிடம் நான் வெறிகொள்வதே இப்பெருந்தோள்களினால்தான்” என்றபடி அவளை வளைத்துக்கொண்டான். அக்கணமே அவன் அனைத்தையும் உணர்ந்தான்.

flowerமுதல்புள் ஒலி எழுவதுவரை பிரீதை கீசகனின் அறையில் காத்திருந்தாள். புள்ளொலி மீண்டும் ஒலித்ததும் எழுந்து சென்று வெளியே பார்த்தாள். விடிவெள்ளியைக் கண்டதும் அவள் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அறியா உள்ளுணர்வால் அவள் கீசகன் உயிருடனில்லை என்பதை உணர்ந்தாள். அவ்வெண்ணத்தை அது எழுந்ததுமே தள்ளி விலக்கினாள். மீண்டும் அறைக்குள் வந்து கைகளால் முகவாயைத் தாங்கியபடி அமர்ந்திருந்தாள்.

அவ்விரவில் பலமுறை விழித்து விழித்து அமர்ந்து அவள் கண்ட கனவுகளை எண்ணித் தொகுக்க முயன்றாள். எப்போதும் அவள் அடையும் கனவு மீண்டும் மீண்டும் வந்தது. கீசகனுடன் அவள் புணரும்போது அவன் கைகள் இரு பெரும்பாம்புகளென்றாகி அவளைச் சுற்றி இறுக்கி நெரிக்கத் தொடங்கும். நதிச்சுழியில் என அவள் மூழ்கி மூச்சுத்திணறி இறுதிக் கணத்தில் விழித்துக்கொள்வாள். அன்று அக்கனவில் அவள் கீசகனின் விழிகளை தெளிவாகக் கண்டாள். ஒருகணம், அல்லது அதற்கும் குறைவு. அவளை உடல்விதிர்க்கச் செய்தது அந்த நோக்கு.

அதை மீண்டும் நினைவிலோட்டியபோது அதுவரை இருந்த அத்தனை திரைகளையும் விலக்கி அவனை அவள் நன்கறிந்தாள். அவ்வறிதல் அவளை தளரச்செய்தது. நீள்மூச்சுடன் உடலை அசைத்து அசைத்து அமர்ந்தாள். பெரிய பொருளொன்றை மூட்டைக்குள் செலுத்துவதுபோல அவ்வசைவால் அந்த அறிதலை தன்னுள் அமைத்துக்கொள்ள முயன்றாள். பின்னர் மெல்லிய நிறைவும் அதன் விளைவான இன்மையுணர்வும் ஏற்பட்டது. அனைத்துப் பதற்றங்களும் மறைய உடல் எடையிழக்க அவள் ஆழ்ந்து துயிலத் தொடங்கினாள்.

பின்னர் விழித்துக்கொண்டபோது அறைக்குள் காலைவெயிலின் வெளிச்சம் நிறைந்திருப்பதை கண்டாள். திடுக்கிட்டு எழுந்து ஆடையை அள்ளிப்பற்றியபடி சாளரத்தை பார்த்தாள். வெளியே ஓடிச்சென்று காவலனிடம் “படைத்தலைவர் எங்கே?” என்றாள். அவன் “அறியேன்” என்றான். “இன்னும் அவர் வரவில்லையா?” என்றாள். அவனிடம் கேட்பதில் பொருளில்லை என உணர்ந்து இடைநாழி வழியாக ஓடினாள். கீசகனுக்கு அணுக்கமான எவரிடமாவது கேட்கவேண்டும். ஆனால் அவனுக்கு அணுக்கமாக எவரும் இல்லை என்று உடனே தெரிந்தது.

மலர்ச்சோலை முகப்பில் நின்றிருந்த காவலனிடம் “படைத்தலைவர் எப்போது வெளியே சென்றார்?” என்றாள். “வெளியே செல்லவில்லை” என்றான் அவன். “வேறு எவர் வெளியே சென்றார்கள்?” என்றாள். “எவரும் செல்லவில்லை” என்றான். அவள் உள்ளே சென்றபோது மரங்களுக்கிடையே இருந்து மெல்லிய சீழ்க்கை ஒலி கேட்டது. அவள் தன் கணையாழியை காட்டியதும் புதருக்குள் இருந்து வெளிவந்த கரவுக்காவலன் தலைவணங்கினான். “படைத்தலைவர் எங்கே?” என்றாள். “உள்ளே இருக்கிறார்” என அவன் கையை காட்டினான்.

அவள் கால்கள் தடுமாற உள்ளே ஓடினாள். தொலைவிலேயே கொடிமண்டபத்தில் கீசகன் விழுந்து கிடப்பதை அவள் கண்டுவிட்டாள். அருகே செல்லச் செல்ல அவன் சடலமென்றாகிக்கொண்டே வந்தான். அருகணைந்து நின்றபோது அவள் நெஞ்சை பற்றிக்கொண்டாள். கீசகனின் கழுத்து முறிந்து தலை பின்பக்கமாகத் திரும்பியிருந்தது. நெஞ்சில் அறைந்து கதறியழுதபடி அவள் அவன் மேல் விழுந்தாள்.

முந்தைய கட்டுரைஓர் அழைப்பு
அடுத்த கட்டுரைஒளியேற்றியவர்