டேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள்

david bellows

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு

ஜெ,

டேவிட் பெல்லோஸ் இன்று உலக அளவில் மிகவும் கவனிக்கப்படும் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். அவருடைய Is That A Fish In Your Ear?: Translation and the Meaning of Everything   .என்னும் நூல் மிகவும் கவனிக்கப்பட்ட ஒன்று.

இந்த இதழ் முக்கியமானது. அதைவிட முக்கியமானது இக்கதையை தேர்வுசெய்த எழுத்தாளர்.மிகப்பெரிய கௌரவம். தமிழுக்கும். அந்தப்பட்டியலில் அத்தனை நாடுகள் ,அத்தனை பண்பாடுகள் பேசப்பட்டிருக்கையில் முதல்பரிசு தமிழ் என்ற சொல்லை பார்த்தபோது தமிழனாக பரவசம் அடைந்தேன்.

அவருடைய குறிப்பில் இந்தப்போட்டிக்கு உலக அளவில் வந்த கதைகளின் சூழலை, கதைசொல்லும் முறைகளை விவரித்துவிட்டு பெரியம்மாவின் சொற்களைப்பற்றி இப்படிச் சொல்கிறார்

 “There were several contenders for second place, but I have absolutely no doubt that the prize itself must go to the charming, wonderful, unusual story of “Periyamma’s Words” by the Tamil writer B. Jeyamohan in Suchitra Ramachandran’s translation. It tells of how an illiterate old lady from South India was taught some basic English before being sent to live in the USA—with word definitions being given out of traditional Indian stories in contrast and conjunction with classical stories from the West. By the same token it is also a lesson in learning Tamil (or rather, learning India) for Western readers. It is a witty and heart-warming tale illustrating the paradoxical position of translation itself, as a way of crossing boundaries and as a way of understanding what boundaries cannot be crossed.”

இந்தக்கதை தமிழில் வெளிவந்த இத்தனை மாதங்களில் இதைப்பற்றி இங்குள்ள அறிவுஜீவிகளோ விமர்சகர்களோ ஒரு வார்த்தைகூட பேசி நான் கேட்டதில்லை.  நானே ஒரு கடிதம் எழுதி அதை அனுப்பாமல் விட்டுவிட்டேன். .

எஸ்.ஆர்.ராகவன்

***

ஜெ,

நான் டெல்லியில் இருக்கிறேன். இங்கே இலக்கியவாசகர்கள் தமிழிலக்கியம் பற்றிப்பேசும்போது போகிறபோக்கில் உதிர்க்கும் கருத்துக்கள் மிகவும் ஏமாற்றம் அடையச்செய்பவை. பெரும்பாலும்  எளிமையான சமூகசீர்திருத்தக் கதைகள்தான் தமிழில் இருந்து மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளன.

வங்க நண்பர் ஒருவர் சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட நாவலை பரிவுடன்  ஹியூமனிஸ்டிக் கதை என்றார். ‘ஹ்யூமனிஸம்தான் இலக்கியம் என நினைக்கிறீர்களா?” என்று நான் கேட்டேன். ‘சேச்சே வங்கத்தில் நாங்கள் அதை ஸோத்தேஷ் சாஹித்ய என்போம். அதற்கு இலக்கியத்தில் இடமில்லை’ என்றார். ‘அப்படியென்றால் ஏன் இதை நல்ல கதை என்கிறீர்கள்?” என்றேன். “தமிழிலிருந்து இப்படி ஒரு கதை வருகிறதே என்றுதான்’ என்றார்.

அதாவது அவர்களுக்கு நாம் இன்னும் எழுத ஆரம்பிக்காதவர்கள். Naïve ஆனவர்கள். இதற்குக்காரணம் இங்கிருந்து மொழியாக்கம் செய்யப்படும் பெரும்பாலான படைப்புக்கள் இலக்கியமதிப்பில்லாதவை என்பதுதான்.அந்த அரசியலை பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு அவை பிடிக்கும். அவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். ஆனால் இலக்கிய வாசகர்கள் கொஞ்சப்பேரானாலும் உலகம் முழுக்க உண்டு. அவர்கள் தனி

இன்றைக்கு மிக மகிழ்ச்சியான நாள். என் இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் கதையை டேவிட் பெல்லோஸின் குறிப்புடன் அனுப்பியிருக்கிறேன்

மனோகர்

***

அன்புள்ள ராகவன், மனோகர்,

என்னுடைய படைப்புக்களை ஆங்கிலத்திலோ மற்றமொழிகளிலோ மொழியாக்கம் செய்ய எந்த முயற்சிகளையும் நானே முன்னெடுப்பதில்லை என்பது நான் எடுத்த முடிவு. தமிழிலேயே என் படைப்புகள் மிகக்குறைவாக வாசிக்கப்படுகின்றன. அதைப்பற்றியும் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை என்பதே என் எண்ணம். ஏனென்றால் இந்த அளவுக்குக்கூட என் முன்னோடிகள் வாசிக்கப்பட்டதில்லை. என் இலக்கு எழுதி எழுதி என்னைக் காலிசெய்வதுதான். அது நிகழ்ந்தபின் விடுதலைகொள்வது மட்டும்தான்.

இந்தத்தேர்வில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் ஆச்சரியம் ஏதுமில்லை. எனக்கு ஐயமறத்தெரிந்த விஷயங்களில் ஒன்று இன்று உலகளவில் எழுதிக்கொண்டிருக்கும் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவன் நான். இந்த அளவு தரமும் இந்த அளவு விரிவும் உலக இலக்கியத்தின்  குறைவான படைப்பாளிகளிடம் மட்டுமே வெளிப்பட்டவை.. அதை என்றாவது உலகம் உணரலாம், உணராமல் போனாலும் ஒன்றுமில்லை. ஒருவர் கூட வாசிக்காவிட்டாலும் குறைவில்லை.

எங்கிருந்தும் நான் என் சாராம்சத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. வடிவங்களை வாங்கிக்கொள்ளவுமில்லை. என்னிடம் என் மண்ணின் பண்பாட்டையும் வாழ்க்கையையும் தத்துவத்தையும் உலகம் பெற்றுக்கொள்ள முடியும். உரியமுறையில் முன்வைக்கப்பட்டால்.

நீங்கள் சொன்னதுபோலஇங்குள்ள ஆங்கிலமொழியாக்கங்கள் மிகச்சாதாரணமானவை. ஒன்று பழைய கற்று பெற்ற பாடப்புத்தகநடை கொண்டவை. அதைவிட முக்கியமானது கதைத்தெரிவு. பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்களின் ரசனை மிகச் சாதாரணமானது. பல்வேறு அமைப்புகள் சார்ந்து உந்தி முன்வைக்கப்படும் படைப்புகள் மட்டுமே இங்கிருந்து மொழியாக்கம் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் என்.ஜி.ஓ படைப்புக்கள் அவை.

அவை எளிய அரசியல் உள்ளடக்கம் கொண்டவை. பெண்ணியம் தலித்தியம் விளிம்புநிலை எழுத்து போன்ற சில காரணங்களுக்காக அவை மொழியாக்கம் செய்யப்பட்டு, அந்தந்த தளங்களில் சிலரால் கவனிக்கப்படுகின்றன. இலக்கியக் காரணங்களுக்காக அவை வாசிக்கப்படுவதில்லை. சமகால இந்தியாவை, தமிழகத்தை அறிவதற்கான சமூகவியல்  ‘சாம்பிள்’களாகவே அவை கருதப்படுகின்றன

என்னிடம் இதை பல அயல்வாசகர்கள் சொன்னதுண்டு. இலக்கியம் என்பது அது அல்ல. அது ஒரு பண்பாட்டின் சாரம்சமான ஆன்மிகம் [ spirituality ]. அது வெளியாகும் தமிழ்க்கதைகளை தமிழுக்கு வெளியே வாசகர்களில் மிகச்சிலர் கூட அறிந்திருப்பதில்லை. நவீனத்தமிழிலக்கியம் என்றாலே எளிமையான சமூகவியல்சித்திரங்கள் மட்டுமே என்றும் அதற்கப்பால் இலக்கியம் நோக்கி இன்னமும் தமிழிலக்கியம் செல்லவில்லை என்றும பலர் எண்ணுகிறார்கள்.

நீங்கள் சொல்வதுபோல பெரியம்மாவின் சொற்கள் தமிழில் வெளிவந்தபோது அதற்கு வந்த இலக்கியவாசிப்பு என்பது மிகச்சொற்பமே. நான் கடிதங்களைச் சென்று பார்த்தேன் . கடலூர் சீனு, மோனிகா மாறன் போன்ற என் வழக்கமான வாசகர்கள் மட்டுமே எதிர்வினையாற்றியிருந்தனர்.இலக்கியத்தின் மையமான ஆன்மிகத்தை – டேவிட் பெல்லோஸ் சுட்டிக்காட்டும் அந்த பண்பாட்டுப் பரிமாற்றத்தில் மையமாக உள்ள அம்சத்தை – உணரும் வாசகர்கள் மிகமிகக்குறைவு. உண்மையில் யோசித்துப்பார்த்தால் தமிழ்ச்சூழலில் அதை உணர்ந்து எழுதக்கூடிய நுண்ணுணர்வுகொண்டவர்களே மிகமிகச்சிலர்தான்.

இப்பரிசு கிடைத்தபின்னர்கூட எனக்கு தமிழகத்தில் இருந்து அனேகமாக வாழ்த்து என்று ஏதும் வரவில்லை. சுசித்ரா கூப்பிட்டு  ‘ஏன் இந்த மௌனம்? இந்தப்பரிசு எவ்வளவு முக்கியமானது என்று தெரியவில்லையா” என்றார். ஆசிய மொழிகளிலிருந்து முதல்முறையாக ஒரு கதை பரிசுபெறுகிறது’ என்றார். நான்  ‘கவலைப்படாதே,மௌனமே பதிலாக இருக்கும், கொஞ்சநாள் கடந்து சில்லறை வம்புகளும் நையாண்டிகளும். மேலதிகமாக எதிர்பார்க்கவேண்டாம்’ என்றேன்

நீங்கள் சொல்லும் சிக்கல் ஆரம்பிப்பது இங்கிருந்துதான். நம் இலக்கியவெற்றிகளை உணரும் ரசனைகொண்டவர்கள் நம்மிடையே மிகக்குறைவு. ஒருபக்கம் ஒன்றும் அறியாத பெரும்கூட்டம். மறுபக்கம் நுண்ணுணர்வு அற்ற, வெற்று டம்பத்திற்காக மட்டும் வாசித்துவிட்டு அனைத்துமறிந்தவர்களைப்போல பேசிக்கொண்டிருக்கும் இன்னொரு சிறுவட்டம். நாம் வாசிக்காத ஒன்றை உலகு கவனிக்கவேண்டும் என நாம் எதிர்பாரக்கலாமா என்ன?

அத்துடன் மகிழ்ச்சி என்பது எப்போதும் நாணயத்தின் மறுபக்கம். டேவிட் பெல்லோஸின் வரிகளால் மகிழ்ச்சி அடைந்த ஒருமணிநேரத்தில் நண்பருக்கு நாளை சிக்கலான சிறுநீரக அறுவைசிகிழ்ச்சை எனச் செய்தி வந்தது. ஒட்டுமொத்தமாக அனைத்தும் அணைந்து ஒருவெறுமை மட்டும் மிஞ்சியது. அது துலாமுள்ளின் சமநிலை

ஜெ

***

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு

முந்தைய கட்டுரைரிஷான் ஷெரீஃப் நேர்காணல்
அடுத்த கட்டுரைஇன்று கோவையில்..