‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57

56. முள்விளையாடல்

flowerஅன்று காலையிலேயே அது அந்த நாள் என புஷ்கரனின் உள்ளாழம் அறிந்திருந்தது. அறியா பதற்றமொன்று அவனுடன் புலரியிலேயே இருந்தது. வழக்கத்துக்கு மாறாக அவன் கருக்கிருட்டிலேயே விழித்துக்கொண்டான். மஞ்சத்தில் படுத்திருக்கையில் ஏன் விழித்தோமென எண்ணி அக்கனவை சென்றடைந்தான். அவன் கண்டது ஒரு காளையை. அதன்மேல் கரிய காகம் அமர்ந்திருந்தது. காளை வாய் திறந்து கா கா என ஓசையிட்டது. காகத்தின் கண்கள் சிவந்திருந்தன. அவன் கையில் ஒரு வாள் இருந்தது. கல்லால் ஆன வாள். அதில் குருதி வழிந்தது. “இதை தூக்கமுடியவில்லை” என்று அவன் சொன்னான். “மிகுந்த எடை… தூக்கமுடியவில்லை.”

அவன் அக்கனவைப்பற்றி எண்ணிக்கொண்டே நெடுநேரம் படுத்திருந்தான். பின்னர் எழுந்து ஏவலனை அழைத்து நீராட்டறைக்குச் செல்லவேண்டும் என்றான். அவன் விழிகளில் வியப்பு தெரிந்தது. நீராட்டறை ஏவலரும் குழப்பம் கொண்டிருந்தனர். ஆடையணிந்துகொண்டு அவைக்குச் செல்லவேண்டுமா என எண்ணி அவன் பீடத்தில் அமர்ந்திருக்கையில் சுநீதர் வந்து வணங்கினார். அவன் சித்தமாகியிருப்பதைக் கண்டு அவர் விழிகளிலும் வியப்பு தெரிந்தது. அவரைக் கண்டதுமே அவன் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. அவன் அப்போது அத்தருணத்தை அப்படியே தவிர்த்து பின்னகர்ந்து மீண்டும் பழைய செயலின்மைக்கு சென்றுவிட விரும்பினான்.

“சதகர்ணிகளின் அமைச்சர் சுமத்ரரின் தூதன் வந்துள்ளான், இளவரசே” என்றார் சுநீதர். “நம்முடன் முழுமையான படைக்கூட்டுக்கு அவர்கள் ஒப்புகிறார்கள். சுகர்ணரின் சொல்லை ஓலையில் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். நம் சொல்லை இன்றே அனுப்பிவிட்டால் ஐநூறாண்டுகளாக நிகழ்ந்துவரும் போர் முடிவுக்கு வருகிறது.” அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். “இதுவே தருணம். கலிங்கர் முன்னரே மகதரிடமும் வங்கரிடமும் மாளவரிடமும் பேசிவிட்டார். அவர்களும் நம் பக்கமே. வரலாற்றுமுனை நம்மை எதிர்கொள்கிறது.”

“என்ன செய்யவேண்டும் நான்?” என்று அவன் கேட்டான். “நிஷதகுடியின் மணிமுடிக்குரியவன் நீங்களே என்று அறிவியுங்கள். ஷத்ரியகுலத்தவளாகிய தமயந்தி சத்ராஜித்தாக நிஷதபுரியின் அரியணையில் அமர்வதை நிஷதகுடித்தலைவர்களின் துணையுடன் நீங்கள் எதிர்ப்பதாக ஓலை அனுப்புங்கள்.” அவன் நெஞ்சு விம்ம தொண்டைமுழை அசைய பேசாமல் அமர்ந்திருந்தான்.

“உங்கள் தமையனை போருக்கழைப்பது அது. குடிப்போர். ஆனால் வேறுவழியில்லை. நம் குலத்தைப் பிடித்த அப்பீடையை ஒழிப்போம். படைபெருகிச்சென்று நம் தலைநகரை கைப்பற்றுவோம். அதன் உச்சியில் அமைந்துள்ள இந்திரனின் ஆலயத்தை இடித்து நம் குடித்தெய்வமாகிய கலியை அங்கே நிறுவுவோம்” என்று சுநீதர் சொன்னார். “இவ்வறிவிப்புகளை நாம் அவர்களுக்கு அனுப்பும்போதே நம் குடித்தலைவர்கள் அனைவருக்கும் தெரிவிப்போம். நம் ஓலை அங்கு செல்வதற்குள் நம் குடிகள் அனைவரும் எரி பற்றிக்கொள்வார்கள்.”

அவன் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து “ஆம், செய்யவேண்டியது அதுவே” என்றான். “நளனின் படைகள் நம் மீது எழுமென்றால் சதகர்ணிகளும் வாகடர்களும் பல்லவர்களும் நம்மை துணைப்பார்கள். அவர்களுக்கு அமராவதியையும் ராஜமகேந்திரபுரியையும் அளிக்கவேண்டும். கலிங்கத்துக்கு தண்டபுரத்தையும் தாம்ரலிப்தியையும் அளிக்கவேண்டும். வடக்கே மகதமும் அவந்தியும் மாளவமும் வங்கமும் இணைந்து எல்லைகளை தாக்குவார்கள். அவர்களுக்கு நாம் தன்னுரிமையை அளிக்கவேண்டும்.”

புஷ்கரன் “இறுதியில் நமக்கு எஞ்சுவது மூத்தவர் படைத்தலைமை கொள்வதற்கு முன்பு இருந்த எளிய நிஷதநாடு மட்டும்தான், இல்லையா?” என்றான். சுநீதர் சற்று குன்றி பின் மீண்டு “மெய். ஆனால் நம் தலைநகர் நம் கைகளுக்கு வருகிறது. நம் குலங்களனைத்தும் ஒன்றென நம்முடன் அணிவகுக்கின்றன. நம் குடி நிஷதர்களின் தலைமைக் குடியென்றாகிறது. இது இனியொருபோதும் நிகழக்கூடும் என நான் எண்ணவில்லை” என்றார். “ஆம், இழப்புகள் உண்டு. ஆனால் அதை நாம் மீண்டும் வெல்லலாம். பாரதத்தை வென்ற நிஷதகுடிகளின் வீரம் நம்முடன்தான் இருக்கிறது. நாளை நம் கொடிவழிகள் வெல்லலாம்…”

புஷ்கரன் புன்னகைத்து “எப்படி வேண்டுமென்றாலும் விளக்கிக்கொள்ளலாம், மூத்தவரே. இதைவிடக் கடந்தும் நான் எண்ணி நோக்கிவிட்டேன்” என்றான். “அனைத்தும் முடிவுசெய்யப்பட்டுவிட்டன. தங்கள் ஒப்புதலுக்காக இளவரசி காத்திருக்கிறார். தாங்கள் தலையசைத்தால் சதகர்ணிகளுக்கும் காங்கேயத்து அரசர்களுக்கும் ஓலைகள் செல்லும். அவை சென்றுசேர்ந்து அவர்களின் ஒப்புதல் செய்தி வந்ததுமே நாம் போர்முரசு கொட்டுவோம்.” புஷ்கரன் “நடக்கட்டும்” என்றபடி எழுந்துகொண்டான்.

“நீங்கள் சோர்வுற்றிருக்கிறீர்கள். இளவரசே, எண்ணிப்பாருங்கள். மகாநதி முதல் கோதை வரையிலான நிலம் நம் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. கலிங்கம் நம் உறவுநாடு. பத்தாண்டுகாலம் சதகர்ணிகளுடன் நாம் போரை தவிர்த்தோமென்றால் நம் கருவூலம் நிறைந்து வழியும்.” புஷ்கரன் “ஆம், அதையும் நான் முன்னரே எண்ணிக்கொண்டேன்” என்றான்.

“நீங்கள் கொள்ளும் சோர்வு எனக்கு புரிகிறது. ஆம், இது மூத்தவருக்கு எதிரான போர். ஆகவே குருதிப்பழி. ஆனால் குருதிப்பழி இல்லாத அரசென ஏதும் உண்டா? பாரதவர்ஷத்தில் எத்தனைமுறை உடன்பிறந்தார் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்று நான் சொல்லவா?” புஷ்கரன் புன்னகையுடன் “வேண்டாம், அப்பட்டியலும் என்னிடம் உள்ளது” என்றான்.

“நான் எவரையும் வற்புறுத்தவில்லை. என் குடிக்கு நன்மை எதுவோ அதையே நான் செய்கிறேன்” என்று சுநீதர் சொன்னார். “இது உங்களுக்கான ஆறுதல்… நன்று” என்று சொன்ன புஷ்கரன் “ஆணைகள் செல்லட்டும்” என்று சொல்லி புன்னகை பூத்தான். அப்புன்னகையிலிருந்த கசப்பை அவர் செல்லும் வழியெல்லாம் எண்ணிக்கொண்டார். எவர் மீதான கசப்பு? ஒருகணம் அவர் எதையோ எண்ணி திடுக்கிட்டு நின்றார். அந்தக் கசப்பை அவர் முன்னர் எங்கோ கண்டிருந்தார். எங்கே எங்கே என தன் நினைவுக்குள் துழாவிக்கொண்டு நடந்தார்.

flowerஅன்று மாலை புஷ்கரனைத் தேடிவந்த மாலினி “உங்கள் மூத்தவர் நளன் நம்மிடம் போருக்கு வரமாட்டார் என்றே எண்ணுகிறேன்” என்றாள். “ஏனென்றால் நம் படைவல்லமை மிகப் பெரிதென அவர் அறிவார். சதகர்ணிகளுக்கும் வடக்கரசர்களுக்கும் நமக்குமிடையே நடந்த கைச்சாத்துக்களை நாமே அவருக்கு தெரிவிப்போம். இப்போரில் அவர் வெல்லாவிடில் அது பேரிழிவு. ஆகவே அவர் நம்மிடம் சொல்சூழ்வதற்கே வருவார்” என்றாள். “ஆனால் அதை அவர் அவளிடம் கலந்துகொள்ளமாட்டார். இது உங்கள் குருதிப்பூசல். குடிப்போர். அவள் மீது நீங்கள் கொண்ட கசப்பையும் அவர் அறிவார். ஆகவே அவளை வெளியே நிறுத்துவார். அது மிக நன்று.”

அவன் அவளிடம் “அனைத்தையும் எண்ணிச்சூழ்ந்திருப்பீர்கள் என அறிவேன்” என்றான். அவனிடம் கூடியிருந்த அந்தக் கசப்புச் சிரிப்பை அவள் விந்தையென நோக்கினாள். ஒருபோதும் அவனிடம் அதை அவள் கண்டதில்லை. அவனிடம் எப்போதுமிருந்த தயக்கத்தையும் அறியாமையையும் அகற்றி ஆழமும் கூர்மையும் கொண்டவனாக ஆக்கியது அக்கசப்பு. அவள் அதை முன்னரே கண்டிருந்தாள். நன்கறிந்திருந்தாள். எங்கே எங்கே என அவள் தன் உள்ளத்துள் துழாவினாள். ஆகவே விழிகள் மங்கலடைய “ஆம், நோக்கித்தானே துணியவேண்டும்?” என்று பொதுவாக சொன்னாள். “சொல், மேலும் என்ன திட்டங்கள்?” என்றான்.

அவள் “அவர் உங்களிடம் நேருக்குநேர் பேசினால் அனைத்தும் சீரடைந்துவிடும் என நம்புவார். இங்கு வந்து உங்களிடம் பேசவேண்டுமென தூதனுப்புவார்” என்றாள். “அவ்வலையில் வீழாமலிருப்பது உங்கள் கையில் இருக்கிறது. மூத்தவரென உங்களுக்கு அவர் ஆணையிடலாம். வளர்த்தவர் என நயந்து பேசலாம். உடனாடியவர் என கனிவு கோரலாம். குலநன்மையையும் குடியொருமையையும் சொல்லி சொல்லடுக்கலாம். எதற்கும் வளையாமலிருக்கையிலேயே நீங்கள் உங்கள் குருதியில் எழவிருக்கும் மைந்தருக்கு நலன் செய்கிறீர்கள். உங்கள் குடிமூதாதையரை மகிழ்விக்கிறீர்கள்.”

புஷ்கரன் “நான் வளையமாட்டேன் என இப்போது சொல்கிறேன். ஆனால் தருணங்களை தெய்வங்கள் வடிவமைக்கின்றன” என்றான். “ஆம், அதை ரிஷபர் சொன்னார்.” அவன் எரிச்சலுடன் “என்ன சொன்னான்?” என்றான். “உங்களால் உறுதிகொள்ள முடியாது என. ஆகவே முடிந்தவரை உங்களையும் அவரையும் சந்திக்கவிடலாகாது என. அதுவே நன்று என நானும் எண்ணுகிறேன்.” சில கணங்களுக்குப்பின் அவன் “என்னைப்பற்றி என்னைவிட நன்றாக அவன் அறிந்திருக்கிறான்” என்றான்.

அச்சொல்லில் இருந்த நஞ்சை உணர்ந்தாலும் அவள் அதை புறந்தள்ளி “நாம் அவரை பேச அழைப்போம். ஆனால் அதற்கு முன் நாம் விழைவதை சொல்லிவிடுவோம். நிஷதகுலத்திற்கு அந்த ஷத்ரியப்பெண் சத்ராஜித் என அமரக்கூடாது. காளகக்குடி முடிசூடவேண்டும். இந்திரபுரி தலைநகராக உங்களுக்கு அளிக்கப்படவேண்டும். மூத்தவர் நளனுக்கு வேண்டுமென்றால் வடக்கே உள்ள சோமகிரியையும் சூழ்ந்துள்ள ஊர்களையும் அளிப்போம். அவர் நிஷதர்களின் பேரரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசாக அங்கே ஆளட்டும்” என்றாள்.

புஷ்கரன் புன்னகையுடன் “அவர் அதற்கு ஒப்புக்கொள்வாரா?” என்றான். “மாட்டார். ஆனால் அவருக்கு வேறுவழியில்லை… போர் நிகழுமென்றால் நிஷதகுடிகள் ஒன்றுடனொன்று போரிட்டு அழியும். அவர்களை பிற அரசர் முற்றழிப்பார்கள்.” புஷ்கரன் “நான் அதை செய்யவேண்டுமா என்ன?” என்றான். “அது நிகழாது. நிஷதகுடிகளின் அழிவை ஒருபோதும் நளன் ஒப்புக்கொள்ளமாட்டார். அதன்பொருட்டு தான் சிறுமைகொள்ளவும் தயங்கமாட்டார்.” புஷ்கரன் “ஆம்” என்று பெருமூச்சுவிட்டான். “தான் முடிசூடி ஆள்வதற்காக குலத்தை அழிப்பதா என அவரை எண்ணச்செய்தால் மட்டும் போதும்” என்றாள் மாலினி. “அவர் அவ்வாறு மட்டுமே எண்ணுவார்” என்றான் புஷ்கரன்.

“அத்துடன் அவர் சின்னாட்களாகவே அரசு, நகர் எதிலும் ஆர்வமிழந்தவராக இருக்கிறார். வெறியுடன் படைகொண்டு தென்னகத்தையும் காங்கேயத்தையும் வென்ற பழைய நளன் இன்றில்லை” என்றாள் மாலினி. “நிகழ்க!” என்று சொல்லி அவன் தன் சால்வையை எடுத்தான். அவள் காமம் நிறைந்த சிரிப்புடன் அவன் கையைப்பற்றி “இது நன்னாள். இப்போதுகூட நாம் இனிதிருக்கலாகாதா?” என்றாள். நடிக்கப்படும் காமம்போல முகத்தை அழகிலாமலாக்குவது பிறிதில்லை. அவன் உள்ளம் குமட்டல்கொண்டது. “எனக்கு உடல்நிலை நன்றாக இல்லை” என்றான்.

“ஏன்?” என அவள் கொஞ்சினாள். “என்ன செய்கிறது என் அரசருக்கு?” அவன் அவளை நோக்கி “குமட்டல்” என்றான். அவள் முகம் மாறி மீண்டும் சீரமைந்தது. உரக்க நகைத்து “சேடியை அனுப்புகிறேன். இஞ்சிநீர் அருந்துக!” என்றாள். அவன் தலையசைத்தபின் வெளியே சென்றான். அவள் அவனிடமிருந்த அக்கசப்பை மீண்டும் எண்ணிக்கொண்டாள். அது ரிஷபனிடமிருக்கும் கசப்புச் சிரிப்பு என திடுக்கிடலுடன் எண்ணிக்கொண்டாள். அதற்கு முன்னரும் அவள் அதை கண்டிருந்தாள் என வெளியே செல்லும்போது எண்ணிக்கொண்டாள். கலிங்கத்தின் சிறைக்கொட்டடியின் கொலைத்தொழிலரிடம் எப்போதும் அச்சிரிப்பு இருந்தது.

flowerகருணாகரர் ஒற்றர்களின் ஓலைகளுடன் வந்து நளன் அறைக்குமுன் நின்றார். அறிவிப்பதற்கு முன் ஒருமுறை தயங்கினார். ஏவலன் அவரை நோக்கிக்கொண்டு நின்றான். அறிவிக்கும்படி அவர் தலையசைக்க அவன் உள்ளே சென்று ஒப்புதல் பெற்று வெளியே வந்தான். அவர் தன்னைத் திரட்டியபடி உள்ளே சென்று தலைவணங்கினார். நளன் “செய்தி வந்துவிட்டதா?” என்றான். “ஆம், ஒற்றர்கள் முன்னரே சொன்னார்கள். முறைப்படி இளவரசரின் ஓலையே வரட்டும் என்று காத்திருந்தேன். வந்துவிட்டது.” நளன் என்ன செய்தி என்று கேட்காமல் காத்திருந்தான்.

“அனைத்தும் அவருக்கு வேண்டும். நமக்கு ஓரிரு ஊர்களை ஒதுக்குவார்கள்” என்றபின் ஓலையை நீட்டினார் கருணாகரர். அவன் அதை வாங்கி ஒரே விழியோட்டலில் படித்துவிட்டு அருகே இருந்த பீடத்தில் வைத்தான். “நாம் எவ்வகையிலும் ஒத்துப்போகலாகாது என நினைக்கிறார்கள்” என்றார் கருணாகரர். “ஆம், அவர்களுக்குரிய தருணம் இது” என்று நளன் சொன்னான். “சதகர்ணிகளின் ஆட்டம் இதற்குப் பின்னால் உள்ளது. சுமத்ரர் நாம் எதிர்கொள்பவர்களிலேயே மிகப் பெரிய எதிரி.” நளன் “எதிரிகளல்ல, எதிர்ச்சூழல்களே அஞ்சத்தக்கவை” என்றான். கைகளை மார்பில் கட்டியபடி தலைகுனிந்து எண்ணத்திலாழ்ந்தான்.

“என் கருத்து இதுவே. இத்தருணத்தில் நாம் என்ன செய்தாலும் முதலில் பேரரசியின் வேள்விநிறைவும் முக்குடைசூடலும் நின்றுவிடும். அவர்கள் விழைவதும் அதுவே. நாம் இவர்களை ஒருபொருட்டென்றே எண்ணக்கூடாது” என்றார் கருணாகரர். “உண்மையில் அது நல்ல போர்ச்சூழ்ச்சியும்கூட. நாம் என்ன எண்ணுகிறோம் என எண்ணி அவர்கள் குழப்பம் கொள்ளவேண்டும். அவர்கள் அறியாத படையாற்றலோ சூழ்ச்சியோ நம்மிடமிருக்கிறதா என்று தயங்கவேண்டும். அதற்குள் பேரரசி சத்ராஜித் என்று அமர்ந்துவிடுவார். அந்நிகழ்வுக்குப்பின் நம் குடிகள் நமக்கெதிராக திரும்பமாட்டார்கள். அது நிகழக்கூடாதென்று அஞ்சியே இவர்கள் இத்தருணத்தில் இச்சூழ்ச்சியை செய்கிறார்கள்.”

“அது ஒரு நல்ல முறை என்பதில் ஐயமில்லை” என்று நளன் சொன்னான். “ஆனால் அவர்களின் ஆற்றலை நாமும் அறியோம். என் இளையவனின் முதிர்ச்சியின்மையை நான் நன்கறிவேன். தன் படைவல்லமையை நம்பி அவன் போர்தொடுப்பான் என்றால் உடன்பிறந்தோர் படைமுகம்கொண்டு குருதி சிந்துவோம். நம் குடி உட்போரிட்டு அழியும். அதை நான் ஒப்ப முடியாது.” கருணாகரர் அதற்கு மறுமொழி சொல்ல முடியாமல் நோக்கி நின்றார். “உங்களுக்கே தெரியும் புஷ்கரனை” என்றான் நளன். “மெய்தான்” என்றார் கருணாகரர்.

“ஒன்றே செய்வதற்குள்ளது. சென்று பேசுவோம்” என்றான் நளன். “நானே செல்கிறேன்” என்று கருணாகரர் சொன்னார். “நீங்கள் செல்வதனால் பயனில்லை. நான் செல்கிறேன். நான் செல்வதென்பது என் பிழைக்குப் பொறுப்பேற்று ஈடுசெய்ய தலைகுனிவதாகவும் பொருள்படும். என்னை வரவழைத்ததையே வெற்றி என அவர்கள் எண்ணக்கூடும்.” கருணாகரர் “அவர்கள் எளிதில் ஒப்பமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் இது இளவரசரின் எண்ணம் அல்ல. இதற்குப் பின் சதகர்ணிகள் இருக்கிறார்கள். வடவர் இருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக இம்முடிவுகளை எடுப்பவர்கள் கலிங்க அரசியும் அவள் அணுக்கனாகிய ரிஷபனும்தான். நாம் செய்யக்கூடுவது பொழுதை ஈட்டுவதே. அதற்கு நான் முதலில் செல்வதே நன்று” என்றார்.

“வேள்விநிறைவுநாள் வரை அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நான் சென்று பேசுகிறேன். அவன் விழைவதை அளிக்கிறேன். கூடவே அவனை எப்படி அவர்கள் கைப்பாவை என வைத்திருக்கிறார்கள் என விளக்குகிறேன். மெய்யான ஆற்றலின் மேல் ஏறியே அரசமரவேண்டும், மாற்றரசர் தோள்மேல் ஏறி அமர்ந்தால் அவர்களின் கைப்பாவை என்றே ஆக நேரிடும் என அவனுக்கு விளக்குகிறேன். என்ன இருந்தாலும் அவன் என் தோளில் வளர்ந்தவன். என்னை தந்தையென எண்ணுபவன்.” கருணாகரர் ஏதோ சொல்ல எண்ணியபின் தலையசைத்தார்.

“நேரில் நானே பேச வருகிறேன் என அவனிடம் சொல்லியனுப்புங்கள். நான் அவனிடம் தனியாகப் பேசினாலே அனைத்தும் சீரமைந்துவிடும்.” கருணாகரர் “அவர்களிடம் தெரிவிக்கிறேன்” என்றார். “இச்செய்தி இங்கே எவருக்கும் தெரியவேண்டியதில்லை. அரசியின் ஒற்றர்களும் அறியாமல் நான் கிளம்பவேண்டும். இங்கு வேள்வியும் விழாக்களியாட்டும் தொடர்ந்து நிகழட்டும்” என்றான்.

“ஆனால் தாங்கள் கிளம்புவது…” என கருணாகரர் சொல்ல அவன் கையமர்த்தி “சில பயிலாப் புரவிகளுடன் காட்டுக்குச் செல்கிறேன். அதை எவரும் ஐயப்பட மாட்டார்கள்” என்றான். கருணாகரர் “நன்று” என நீள்மூச்செறிந்தார். “நாகசேனர் என்னுடன் வரட்டும். நீங்கள் இங்கே இருந்து பணிகளை நோக்குங்கள்” என்றான் நளன். “ஒருவேளை…” என்ற கருணாகரர் நிறுத்திக்கொண்டார். “என்னை அவன் சிறைபிடிப்பானா என்று எண்ணினீர்கள் அல்லவா? அவன் நிஷதகுடியினரின் சில நெறிகளை எந்நிலையிலும் மீறமுடியாது” என்றான் நளன்.

flowerவிஜயபுரிக்கு நளன் வந்த செய்தியை நகர்மக்கள் எவரும் அறியவில்லை. கருக்கிருட்டுக்குள் நளனும் நாகசேனரும் எட்டு காவல்படையினரும் கோட்டைக்குள் நுழைந்தார்கள். நளனை வரவேற்க கோட்டையில் கொடியேறவில்லை, வாழ்த்துமுரசும் எழவில்லை. அவனை எதிர்கொண்டழைத்த ரிஷபன் தலைவணங்கி வாழ்த்தும் முகமனும் உரைத்து “தாங்கள் அரண்மனையில் ஓய்வெடுக்கலாம், அரசே. காலையில் தங்களை இளவரசர் வந்து சந்திப்பார்” என்றான். நளன் அவனை கூர்ந்து நோக்கியபடி தலையசைத்தான்.

அவன் சற்று ஓய்வெடுத்து விழித்தபோது உள்ளம் மிகவும் அமைதியிழந்திருந்தது. கிளம்பும்போது மெல்லிய ஐயம் இருந்தது, அது கருணாகரரின் விழிகளில் இருந்து தொற்றிக்கொண்டது. பயணம் நீளநீள ஐயம் விலகி நம்பிக்கை உருவானது. புஷ்கரனுடன் அண்மையில் ஒரு நேருக்குநேர் உரையாடலே நிகழ்ந்ததில்லை என்று அவன் நினைவுகூர்ந்தான். அவனிடம் சொல்லவேண்டியவற்றை கோத்துக்கொண்டான். சொல்லவேண்டியதே இல்லை, என்றுமே அவனுடைய தொடுகையே புஷ்கரனை நெகிழச் செய்திருக்கிறது. தோளில் மெல்ல தட்டினால், தலையை வருடினால் கண்கலங்கி தலைகுனிபவன் அவன். ஒருவேளை இந்தச் சிக்கல்கள் அனைத்துமே அவர்கள் ஒருவரை ஒருவர் அணுகியறியவேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

அவன் ஆணவம் சீண்டப்பட்டிருக்கலாம். அவன் குடி தன் விழைவை அவன்மேல் ஏற்றியிருக்கலாம். அவனுக்குத் தேவை ஓர் அரசு என்றால் விஜயபுரியை தலைமையாக்கி இரண்டாவது நிஷதப்பேரரசை அவனுக்காக அமைக்கலாம். தெற்கே காஞ்சி வரை அவன் நிலம் விரியமுடியும். அவன் கொடிவழியினர் முடிசூடி ஆளமுடியும். அதைச் சொன்னாலே போதும், அனைத்தும் முடிந்துவிடும். அந்நாட்டை காளகநாடு என்றே அழைக்கலாம். அதை அவையில் அறிவித்தால் காளகர் எழுந்து நின்று கோல்தூக்கி வாழ்த்தொலி எழுப்புவார்கள்.

உறுதியான நம்பிக்கையுடன், புன்னகை நிறைந்த முகத்துடன் அவன் நகர்புகுந்தான். படுக்கையில் உடல்நீட்டும்வரை அந்த நம்பிக்கை நீடித்தது. துயிலில் ஆழ்கையில் ஏதோ ஒன்று உள்ளே தைத்தது. எது என எண்ணியபடியே துயின்றான். விழித்தபோது ஆழம் அந்த முள்ளை நன்கறிந்திருந்தது. அதை சொல்லென்றாக்கத் தவிர்த்து வேறெங்கோ அலைந்தது உள்ளம். எழுந்து நீராடி அணிகொண்டான். தான் சித்தமாக இருப்பதை புஷ்கரனிடம் அறிவிக்கும்படி ஏவலனிடம் சொன்னான். அதன்பின் அவன் வருகையை அறிவிக்கும் ஓசைகளுக்காக காத்திருந்தான்.

பின்காலை வரை புஷ்கரன் வரவில்லை என்று கண்டதும் ஏவலனை அழைத்து “என்ன நிகழ்கிறது? ஏதேனும் சிற்றமைச்சரை அழைத்து வா” என்றான். சிற்றமைச்சர் சம்புகர் வந்து பணிந்து “இளவரசர் அவையிலிருக்கிறார். தவிர்க்கமுடியாத சில பணிகள்… சந்திப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார். அவன் சினம்கொண்டு சொல்லெடுக்க வாயசைத்தபின் அடக்கிக்கொண்டு “நான் காத்திருக்கிறேன் என்று சொல்க” என்றான்.

உச்சிப்பொழுதில்தான் ரிஷபன் அவனைப் பார்க்க வந்தான். பணிவுடன் முகமனுரைத்து “இளவரசர் தங்களை மாலையில் அவையில் சந்திப்பதாக சொன்னார், அரசே” என்றான். “அரசவையிலா? நான் அவனை நேரில் பார்க்க வந்தேன்” என்றான் நளன். “ஆம், ஆனால் தாங்கள் அரசமுறைப்படி வந்திருக்கிறீர்கள். அவையில் சந்திப்பதே முறை என்றார்கள் குடிமூத்தார்” என்றான் ரிஷபன். “இது எனக்கும் என் இளையோனுக்கும் இடையேயான சந்திப்பு. இதில் குடிமூத்தார் ஏன் உட்புகவேண்டும்?” என்றான் நளன்.

“நான் அறியேன். ஒருவேளை நேரில் தங்களை சந்திப்பது குடிமூத்தாரிடம் ஐயத்தை உருவாக்குமென அவர் எண்ணியிருக்கலாம்” என்றான் ரிஷபன். “ஐயமா? என்ன ஐயம்?” என்று நளன் கேட்டான். “நான் அணுக்கன். எதையும் நான் சொல்ல முடியாது. அரசவையில் சந்திப்பு நிகழுமென்று சொல்லப்பட்டது. அறிவிக்கவே வந்தேன்” என்று ரிஷபன் சொன்னான்.

நளன் அவனை கூர்ந்து பார்த்தான். அவனை முதலில் சந்தித்தபோதுதான் அந்த அமைதியின்மை உள்ளத்தில் குடியேறியது என நினைத்தான். அழகிய இளைஞன். ஆனால் ஏதோ ஒன்று அவனை அழகற்றவனாக ஆக்கியது. அவன் விழிகளின் கரவுநோக்கு. ஆம், அது காகக்கண். நளன் “நான் அரச உடையில் அவைபுகவேண்டுமா? நான் அணிகளை கொண்டுவரவில்லை. மேலும் முகப்புக் கொடியோ மங்கலச் சூதரோ அணிச் சேடியரோ இல்லாமல் நகர்புகுந்திருக்கிறேன்” என்றான்.

“தங்கள் விருப்பப்படி அவைநுழையலாம், அரசே” என ரிஷபன் வணங்கினான். இவன் காகம் என நளன் எண்ணிக்கொண்டான். ஒன்றை நோக்குவதாக விழிகாட்டுகையில் ஓராயிரத்தை நோக்கும் விழிகொண்டது காகம். பெருமூச்சுடன் “நன்று, நான் அவனை அவையில் சந்திக்கிறேன்” என்றான் நளன். “அவையில் அனைத்துக் குடித்தலைவர்களும் இருப்பார்கள் அல்லவா?” என்று அவன் கேட்க ரிஷபன் தலைவணங்கி “ஆம்” என்றான்.

தன் உடல்முழுக்க இருந்த சினத்தை நளன் உணர்ந்தான். நிலையழிந்து அறைக்குள் சுற்றிவந்தான். “அரசே, நாம் வந்ததே பிழை என எனக்குப் படுகிறது. நம்மை தனியாக சந்திக்க விழையவில்லை என்று இளவரசர் அறிவித்திருக்கிறார் என்பதே இதன்பொருள். இங்கு நிகழ்வன எவையும் இயல்பானவை அல்ல. நன்கு திட்டமிடப்பட்டவை” என்றார் நாகசேனர். “தாங்கள் இந்நிலத்தின் பேரரசர். முறைப்படி தாங்கள் விஜயபுரிக்கு வந்திருந்தால் புஷ்கரர் கோட்டைமுகப்புக்கு வந்திருக்கவேண்டும், குடித்தலைவர்கள் கோல்தாழ்த்தி வணங்கி வரவேற்றிருக்கவேண்டும். நகர் விழாக்கோலம் பூண்டிருக்கவேண்டும். மக்கள் இரு மருங்கும் நின்று மலர்சொரிந்து வாழ்த்தியிருக்கவேண்டும். இப்போது எவராலும் வரவேற்கப்படாதவராக நகர்நுழைந்திருக்கிறீர்கள். ஓர் அயல்நகரியில் நீங்கள் நுழைந்தால் அளிக்கப்படும் வரவேற்புகூட இங்கில்லை. இதோ, அரசத்தோற்றம்கூட இல்லாமல் உங்களை அவைக்கு அழைக்கிறார்கள்… நாளை இவர்களின் சூதர்கள் பாடப்போவது என்ன?”

“நன்று, நிகழ்வதென்ன என்று பார்ப்போம்” என்று நளன் சொன்னான். “என்ன நிகழும்? அவையில் இளவரசர் எங்கு அமர்வார்? அரியணையிலா? நீங்கள் அவைப்பீடங்களில் ஒன்றிலா? அவருக்கு இந்நிலம் மேல் என்ன உரிமை? இந்நகருக்கு அரசரென எவர் அவருக்கு முடிசூட்டியது? தாங்கள் அவைபுகுந்தால் இவர்கள் செய்தவை அனைத்தையும் ஏற்றது போலாகும்” என்ற நாகசேனர் அணுகிவந்து “அரசே, நாம் செய்யவேண்டியது ஒன்றே. வந்ததுபோலவே இப்போதே நகர்நீங்கிவிடுவோம். நாம் வரவே இல்லை என ஆகட்டும். நமக்காக எதிர்பார்த்து அவர்கள் காத்திருப்பதனால் நாம் செல்வதை எதிர்பார்க்கமாட்டார்கள். நாம் இங்கு வந்தது இவர்கள் உருவாக்கிய பொய்க்கதை என்று சூதர்களைக்கொண்டு சொல்ல வைப்போம்” என்றார்.

“நாம் செய்யவேண்டியது அதுதான், ஐயமில்லை” என்று நளன் சொன்னான். “அவர்களின் நோக்கமும் புரிகிறது. ஓர் அயல்நாட்டிற்கு அவர்களின் அருள்கோரி வந்தவனாக என்னை ஆக்கிவிட்டார்கள். ஆனால் இதெல்லாம் புஷ்கரனின் சூழ்ச்சிகளல்ல. இது மாலினிதேவியின் திட்டம். அவளை ஆட்டுவிப்பவன் ரிஷபன்.” நாகசேனர் “தாங்கள் அவைக்குச் செல்வதாகவே முடிவெடுத்துவிட்டீர்களா?” என்றான். “ஆம், நான் வந்தது என் இளையவனை விழியொடு விழி நோக்கிப் பேச. அவையில் பேசுவதென்றால் அவ்வாறே ஆகட்டும்.”

“அங்கே அமர்ந்திருப்பவர்களும் நேற்று என் குடியினராக அமைந்திருந்தவர்களே. அவர்களிடமும் நேருக்குநேர் பேசுகிறேன். அவர்களுக்கு உளப்புண் என்ன? சீர்ஷரின் இறப்புதானே? அதன்பொருட்டு பிழைநிகர் செய்வதாக அறிவிக்கிறேன். குருதிப்பிழை செய்வதாக இருந்தாலும் ஒப்புகிறேன்” என்று நளன் சொன்னான். நாகசேனர் “நாம் அஞ்சி வந்திருப்பதாக அவர்கள் எண்ணினால் இப்படி இறங்கிச்செல்வது அவர்களை மேலும் தருக்கி எழவே செய்யும்” என்றார்.

“இல்லை, என் ஆற்றலென்ன என்று அவர்கள் உள்ளூர அறிவார்கள். போரை அவர்களும் விரும்பமாட்டார்கள். எங்கோ ஓரிடத்தில் ஒப்புநிலை செய்துகொள்ளவேண்டுமென்றே எதிர்பார்ப்பார்கள்” என்றான் நளன். “இன்றே அவையில் அது முடிவாகட்டும். பேரரசி வேள்விநிறைவுசெய்து மும்முடி சூடுவதற்கு இவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டும் போதும். பிறவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என்றான். நாகசேனர் பெருமூச்சுடன் “நன்று நிகழ்க!” என்றார். “நாம் நம்மால் இயன்றதைச் செய்வோம், நாகசேனரே. நம் குடி வாழவேண்டும். நம் ஆணவம் அதற்கு தடையென்றாகக்கூடாது. அதுவே என் எண்ணம்” என்றான் நளன்.

முந்தைய கட்டுரைதிரும்புதல்
அடுத்த கட்டுரைபெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு