அன்புள்ள ஜெயமோகன்,
ஒரு எழுத்தாளனுக்கு privacy என்பதே இருக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா? சுஜாதா இறக்கும் தருணத்தில் ஆயிரம் எண்ணம் ஓடி இருக்கும் அதை எல்லாம் இழுப்பானேன்? அதை வைத்து இந்த பதிவை எழுதாமல் இருந்தால் சுஜாதா என்ற மனிதரின் ஆளுமை பற்றி நன்றாக எழுதி இருப்பீர்கள்!
ஆர்வி
அன்புள்ள ஆர்வி
உங்கள் கருத்து ஒரு கோணம். எழுத்தாளர்களுக்கு அந்தரங்கமே கூடாதா என்றால் இருக்கலாம். முடியுமா என்றால் அனேகமாக முடியாது. இதுதான் உண்மை. ஏனென்றால் ஓர் எழுத்தாளன் முன்வைப்பது அவனது அந்தரங்கத்தைத்தான். யோசித்துப்பாருங்கள், ஒரு விஞ்ஞானியின், ஓர் அரசியல்மேதையின், ஒரு தத்துவஞானியின் ஆளுமையைவிட ஏன் ஒர் எழுத்தாளனின் தனி ஆளுமை வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது?
சுந்தர ராமசாமி சொல்வார், ’எழுத்தாளனுக்கு நினைவுச்சின்னமே தேவையில்லை -அவன் வாழ்நாள் முழுக்கச் செய்வது தனக்கு நினைவுச்சின்னம் அமைப்பதை மட்டும்தான்’ என . அந்த சலுகை அவனுக்கு இருக்கிறது, அதற்கான விலையே அவனது அந்தரங்கம் அழிப்பு. [ ஒரே சொல்லாக சேர்த்து எழுதிவிட்டு துணுக்குற்று பிரித்தேன்] எழுத்தாளன் தன் சடலத்தை அறுவைச்சோதனை மேஜையில் விரித்து வைப்பவன் என டி எஸ் எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார்.
தன்னை முன்வைத்து பேசுகிறான் எழுத்தாளன். அவனுடைய அந்தரங்கம் அவன் வாழும் சமூகத்தின் அந்தரங்கத்தின் ஒரு துளி ஆதலால் அதற்கு ஒரு பிரதிநிதித்துவ முக்கியத்துவம் உருவாகிறது. அதுவே எழுத்தாளனின் தனிவாழ்க்கையின் முக்கியத்துவம். காந்தியின் ரத்தசாட்சித்துவம் அளவுக்கே ஹெமிங்வேயின் தற்கொலையும் பேசப்பட்டிருக்கிறது என்பதற்கான விளக்கம் இதுவே.
ஓர் எழுத்தாளனின் அந்தரங்கத்தைப்பற்றி நாம் பேசும்போது அவனது எழுத்துக்கள் வழியாகவே அதைப்பற்றிப் பேசுகிறோம். இங்கே நாம் ரங்கராஜனை மனவசிய மேஜையில் படுக்க வைக்கவில்லை. அவரது எழுத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். எழுத்தாளனைப்பற்றிய நேர்மையான எந்த விவாதமும் அவனைப்புரிந்துகொள்ள உதவக்கூடியதேயாகும். அவனுடைய அகத்தின் மொழி வெளிப்பாடே அவன் எழுத்து என்பதே அதற்கான காரணம்.
எழுத்தாளனைப்பற்றியும் எழுத்தைப்பற்றிய தர்க்கபூர்வமான எந்தக்கருத்துக்கும் அதற்குரிய முக்கியத்துவம் உண்டு. அவை எவையுமே எழுத்தைப்பற்றியோ எழுத்தாளனைப்பற்றியோ சொல்லப்படும் தீர்ப்புகள் அல்ல. அவற்றைச் சொல்பவனின் ஆளுமையையும் ரசனையையும் சேர்த்துத்தான் அவற்றுக்கு மதிப்பு. எழுத்தாளனையும் எழுத்தையும் ஒரு சமூகம் படிப்படியாக அறிந்து மதிப்பிட்டு உள்வாங்கிக் கொள்கிறது. அந்த ‘செரித்தல்’ நிகழ்வு என்பது ஒரு மாபெரும் விவாதமாகவே இருக்கும். அந்த விவாதத்தின் ஒரு இடத்தை ஒவ்வொரு கருத்தும் நிரப்புகின்றன.
பாரதி முதல் ஜி.நாகராஜன் வரை எல்லா இலக்கியவாதிகளும் இவ்வாறுதான் மதிப்பிடப்பட்டுள்ளனர். தனிவாழ்க்கை இலக்கியம் என்ற பாகுபாடு எங்கும் இருந்ததில்லை. அதுவே இயல்பானது. தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் உருவாகி வந்த மரபென்பது நேர்மையான அந்தரங்கமான வாசிப்பும் கறாரான மதிப்பீடும்தான்
ஜெ
கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
You must be logged in to post a comment.


14 Responses to “சுஜாதாவின் அந்தரங்கம்”
//எழுத்தாளனைப்பற்றியும் எழுத்தைப்பற்றிய தர்க்கபூர்வமான எந்தக்கருத்துக்கும் அதற்குரிய முக்கியத்துவம் உண்டு. அவை எவையுமே எழுத்தைப்பற்றியோ எழுத்தாளனைப்பற்றியோ சொல்லப்படும் தீர்ப்புகள் அல்ல. அவற்றைச் சொல்பவனின் ஆளுமையையும் ரசனையையும் சேர்த்துத்தான் அவற்றுக்கு மதிப்பு.//
நல்ல கருத்து. இதை எல்லோரும் உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?
By tamilsabari on Jul 30, 2010
….. அதற்கான விலையே அவனது அந்தரங்கம் அழிப்பு. [ ஒரே சொல்லாக சேர்த்து எழுதிவிட்டு துணுக்குற்று பிரித்தேன்]
– இருந்தாலும் உங்களுக்கு ரொம்பக் குசும்பு!!!!
.
By baski on Jul 30, 2010
அன்புள்ள ஜெயமோகன்,
ஆக்கங்களே வாசகனின் பேசுபொருள் என்றே நான் கருதுகிறேன். சுஜாதாவின் ஆளுமை சுஜாதாவின் ஆக்கங்களுடன் ஒப்பிட்டால் குறைவான முக்கியத்துவம் உள்ளதாகவே எனக்கு படுகிறது. நமக்கு பிடித்த எழுத்தாளர் என்பதால் சுவாரசியம் இருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை. அவரது அறிவுக்கும் வைஷ்ணவ பாரம்பரியத்துக்கும் இடையே உள்ள முரணியக்கம் பற்றி நன்றாகவே எழுதி இருந்தீர்கள். அந்த முரணியக்கம் அவரது ஆக்கங்கலின் அடிப்படை என்று சொல்லவும் செய்யலாம். ஆனால் அங்கே அவரது இறக்கும் தருணத்தை கொண்டு வருவதும், குறிப்பாக அவர் என்ன நினைத்திருப்பார் என்ற வெட்டி ஆராய்ச்சியும் எனக்கு distasteful ஆகவே இருக்கிறது. அவர் என்ன நினைத்தார் என்பதை அவரோ, அவர் குடும்பத்தவரோ ஆவணப்படுத்தி இருந்தால் அதைப் பற்றி பேசுவது வேறு விஷயம். இங்கே வெறும் யூகங்களும், அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என்பதும் நல்ல பதிவை கெடுக்கிறது என்றே எனக்கு தோன்றுகிறது.
அந்தரங்கம் அழிப்பு வரியை ரசித்தேன்.
என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.
By RV on Jul 31, 2010
பொதுவாகவே, சுஜாதாவின் எழுத்துக்கள் தீவிர இலக்கியத்தை சார்ந்தவை அல்ல என்றும், மேலோட்டமாகவே எழுதினார் என்றும், அறிவியல் தாக்கத்துடன் இருந்ததாகக் குற்றச்சாட்டு உண்டு. தங்களின் இரு கட்டுரைகளும் அதனையே மெய்ப்பிக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் கணையாழி போன்ற இலக்கிய இதழ்களில் கடைசிப் பக்கமே அறிமுகமாகி, குமுதம் போன்ற ஜனரஞ்சக இதழ்களில் நைலான் கயிறு போல் உறுதியாக நிலை பெற்று கனவுத் தொழிற்சாலையில் இறுதிகாலத்தை இழந்தவரின் எழுத்துக்கள் உண்மையில் மேலோட்டமாக தோன்றினாலும் பல்வேறு ஆய்வுக்கு ஏற்புடைய தீவிர எழுத்தாகவே எனக்குத் தோன்றுகிறது.
புதுமை பித்தனின் இலக்கியப் பணிக்கு சற்றும் குறைந்ததல்ல அவரது எழுத்து. ஒப்பிட நேர்ந்தது தற்செயல். மன்னிக்கவும். எழுத்து விந்தைகளை தவிர்த்து அவரது கதைகளில் உள்ள மெய்ப்பாடுகளை யாராவது ஆய்வு செய்தால் அவரின் இலக்கியப் பணியின் அருமை வெளியில் தெரியும்.
By veeraa1729 on Jul 31, 2010
ஆர்வி, அவரது மனைவி அவணப்படுத்தியதன்’
அடிப்படையில்தான் அந்த கேள்வியே கேட்கப்பட்டது. அது அவரைப்பற்றி பேச ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது, அவ்வளவே
By ஜெயமோகன் on Jul 31, 2010
சுஜாதாவின் கடவுள்
அன்பு ஜெ,
சுஜாதாவின் சிறுகதைகள், நாவல்கள், கணையாழியின் கடைசிப்பக்கக் கட்டுரைகளின் நையாண்டி, திருக்குறள் பொழிவுரை, நானூறு காதல் கவிதைகள், கூரிய சினிமா வசனங்கள், கற்றதும் பெற்றதும், மற்றும் அவரின் கவிதை மோப்ப சக்தி, ஹைக்கூ அறிவு, ஆகியவற்றை இனிமேலும் எவரும் விரித்து எழுதத் தேவையில்லை.
பல்லவன் பஸ் லேட்டா வந்ததைப் பற்றியோ, பாத்ரூம் குழாயில் தண்ணீர் வராததைப் பற்றியோ அடி, தொடை, தளை தட்டாமல் உடனே ஒரு எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமோ, ஹைக்கூவோ, விஞ்ஞானச் சிறுகதையோ, கட்டுரையோ எழுதிவிடும் வல்லமை படைத்தவர் அவர். அவரின் தமிழ் நடையால் பாதிக்கப்படாதவர் கோணங்கி மட்டுமே என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உண்மைதான்.
தமிழில் அறிவியல் எழுதும் முதல் முன்னோடியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் சுஜாதா. தற்போது தமிழில் கிடைக்கும் ஓரளவேனும் தரமான, எல்லாருக்குமான அறிவியல் (Popular Science) எழுத்து பெரும்பாலும் அவருடையதே. போட்டியே இன்றி தமிழ் அறிவியலின் சிம்மாசனத்தில் அவர் மட்டுமே வீற்றிருந்தார். தொடரோ, துணுக்கோ அவர் எதை எழுதினாலும் அதை உடனே பதிப்பிக்கவும் படிக்கவும் உலகத் தமிழ்ச் சமுதாயமே காத்துக் கிடந்தது.
ஆனால், அறிவியல் கட்டுரைகளில் போகிற போக்கில் தன் வழக்கமான துள்ளள் மொழியின் ரசிப்பில் மேம்போக்கான எண்ண ஓட்டங்களை எழுதிவைத்தாரே தவிர, அவர் எழுதுவது அறிவியல் என்றோ, அதிலும், தான் அறிவியல் படித்து அறிவியலைத் தொழிலாக மேற்க்கொண்டவன் என்பதால், தன் எழுத்துக்களை, சம கால நவீன அறிவியலின் நம்பிக்கைக் குரலாக படிப்பவர்கள் எடுத்துக்கொள்ள நேரும் என்ற உண்மையின் தீவிரத்தையோ அவர் உணர்ந்திருந்தாரா, தன் மேல் உள்ள அதீத பொறுப்பின் பாரம் அறிந்தாரா தெரியவில்லை.
ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து, கடவுள் இருக்கிறார போன்ற புத்தகங்களில் சுஜாதா முன் வைத்திருக்கும் அறிவியல் தீவிர விவாதத்துக்குரியது. காட்டாக, கடவுள் இருகிறாரா -விலிரிந்து ஸாம்பிளுக்கு மிகச் சுருக்கமாக சில:
1.’பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து, அன்று உடனே விழுங்கி கரந்து,உமிழ்ந்து, கடந்து, இடந்தது கண்டும் தெளிய கில்லீர்’ என்னும் நம்மாழ்வாரைப் போல் அத்தனை நிச்சயமாக சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள் விஞ்ஞானிகள் (பக்கம் 34).
2. கடவுளே பார்க்காத காட்சியாக, கேளாத கானமாக், புரியாத வார்த்தையாக இருக்கலாமல்லவா (பக்கம் 36).
3. கடவுளுக்கு ஒரு ‘மனம்’ இருக்கிறது என்பதை பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். கடவுளே ஒரு மனம் தானோ என்று வியக்கிறார்கள் (பக்கம் 53).
4. எனவே கடவுள் இருக்கிறார என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் – “இருக்கலாம்’. ஆன்மிகத்தின் பதில் “இருக்கிறார்”. என் பதில் it depends.
இவை சுஜாதா என்ற தனி மனிதரின் கருத்து என்றால் எந்தச் சிக்கலும் இல்லை.
அறிவியல் இப்படிக் கூறுகிறது, விஞ்ஞானிகள் இப்படிக் கூறுகிறார்கள் என்ற வரிகள் மறு விமர்சனதிற்க்கும் நேர்மையான கண்டனத்துக்கு உரியவை. இதை முழுமுதல் உண்மையென நம்பிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் சாதாரண வாசகர்களுள் விளையும் சிந்தனை நிகழ்வுகள் ஆபத்தானவை அல்லவா?.
தமிழில் எழுதிக் கொண்டிருக்கும், எழுதப்போகும் எவரையும் பாதிக்கும் அவரின் அபார நடையை நீக்கிவிட்டால், மேற்சொன்ன இரண்டு புத்தகங்கள் மற்றும் ஏன் எதற்க்கு எப்படி, தலைமைச் செயலகம், ஜீனோம், உயிரின் ரகசியம் போன்றவற்றில் உள்ள ஒட்டு மொத்த விஷயங்கள், ஆங்கிலம் படிக்கத்தெரிந்த ஒரளவு பொது அறிவுடைய எவரும் நெட்டில் தட்டிப் பார்த்துச் சொல்லி விடக்கூடியதே.
படிக்கும்போது ஒரு பட்டாம்பூச்சி பறக்குமே தவிர. ’மனுஷனுக்கு எவ்வளவு விஷயம் தெரிஞ்சுருக்கு பாரு’ என்று பிரம்மிக்கத் தோன்றுவதோடே அவை நின்றுவிடுகின்றனவே அன்றி படித்து முடித்ததும் வாசகனுக்குள் அடிப்படையான, ஆழமான அறிவியல் புரிதலை, தெளிவை அவை நிகழ்த்துவதில்லை. அவற்றில் ஆழமான அறிவியலின் தெளிவோ, தர்க்க ஒழுங்கின் கடுமையோ இல்லை. அடிப்படையான தகவல் தவறுகளும் (factual errors and mistakes) இவற்றில் உண்டு.
அறிவியலைப் பாடமாகப் படிக்காத சில எழுத்தாளைர்களிடம், சாதாரண விஷய விவாதங்களில் கூட, தேர்ந்த விஞ்ஞானியின் துல்லியத்துடன், பிறழாத நடுநிலையோடு கறாரான உண்மைகளின் வழி அலசி ஆராய்ந்து தெளியும் அணுகுமுறையைக் காணலாம். அவர்களை உலகத்தரம் வாய்ந்த தேர்ந்த சமூக விஞ்ஞானிகள் என்று துளி சந்தேகமும் இன்றி உடனடியாகக் கூறி விட முடியும். அறிவியலைப் பாடமாகக் கற்ற சுஜாதாவின் அறிவியல் எழுத்துகளில் ஏனோ அது காணக்கிடைப்பதில்லை.
அறிவியல் கட்டுரைகளுக்கு உரிய கறாரான நடுநிலையான விவாதத்தில், தன் தனிமனித நம்பிக்கையை வெல்ல அவராலேயே முடிந்ததில்லை. இதை அவரே, “ஓர் ஆறுதல் வார்த்தை என்ன என்றால் இதையெல்லாம் படித்ததில் உங்களுடன் நானும் குழம்பித்தான் போகிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்” (க. இ. பக்கம் 36) என்று எழுதுகிறார். அவரின் அறிவியல் விவாதங்கள் நமக்குக் காட்டுவது நாலாயிர திவ்ய பிரபந்தமும் சுலோகங்களும் கழுத்தை நெரிக்க விழிபிதுங்கி மூச்சு முட்டும் ஒரு நடுவயது வைணவரையே. அறிவியலைத் தொழிலாக மேற்கொள்ள நேர்ந்த ஒரு அறிவியல் தொழிலாளியே அவர்.
என் வலைப்பூவிலோ, வேறு எங்கோ அறிவியல் தொடரோ கட்டுரையோ எழுத நேர்ந்தால் சின்ன சுஜாதா அல்லது சுஜாதா தாசன் என்ற பெயரை ஒருவேளை நானே எனக்கு வைத்துக் கொள்ளக் கூடும். என்னை அறிந்தவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்.
எந்த ஒரு தமிழ் இளைஞனயும் போல சுஜாதாவின் எழுத்துகளை நானும் சின்ன வயசிலிருந்தே வாசித்து வருகிறேன். அந்த வயதில் ஜேம்ஸ் பாண்ட், இரும்புக்கை மாயாவி, கமல் ஆகியோருக்கு நிகரான ஒரு ஹீரோவே அவர். அச்சில் வந்த அவரின் எல்லா வரிகளையும் படித்திருக்கும் அவரின் தீவிர ரசிகன் நான்.
எளிமையாகவும் சுவையாகவும் சொல்ல நினைத்து மேம்போக்காக எழுதிவிடுவது -அறிவியலைப் பொறுத்தவரை தவறானது, ஆபத்தானதும் கூட என்பதே நான் சொல்ல நினைத்தது.
இதையெல்லாம் வேறு யாரேனும் எழுதியிருக்கலாம். நானே எழுத நேர்ந்ததில் எனக்கு வருத்தமே.
By வேணுகோபால் தயாநிதி on Jul 31, 2010
அறிவியல் மட்டுமல்ல, பொதுவாகவே அவர் எதைபற்றியும் தீவிர கருத்தினை கொண்டு இருந்தார் என்று தோன்றவில்லை.
By sundar kurukkal on Jul 31, 2010
“அவரின் தமிழ் நடையால் பாதிக்கப்படாதவர் கோணங்கி மட்டுமே என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்” – இது உண்மை தான் என்று தோன்றுகிறது. ஒரு முறை நீங்கள் நெல்லை அரவிந்த் கண்மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்லப்படுகையில் “இங்கு யார் ஜெயமோகன் என்று செயின்ட் பீட்டர் கேட்டிருந்தால் ஆச்சர்யப்பட்டிருkகமாட்டேன்”
என்று எழுதியிருந்தீர்கள். உங்களுக்கு செயின்ட் பீட்டர் தெரிந்தாரோ இல்லையோ எனக்கு அங்கு சுஜாதா தெரிந்தார்..
By bala on Jul 31, 2010
இந்த நூற்றாண்டின் அற்புத எழுத்தாளனாகவும் ,தமிழின் பன்முக வாசகனுக்கு ஆசானாகவும் இருந்த சுஜாதாவின் கடின உழைப்பை, விவாதம் என்ற பெயரில் நீர்த்து போகச் செய்யும் முயற்சி தேவையில்லாதது.
By Padmanaban on Jul 31, 2010
அன்புள்ள ஜெயமோகன்,
ஆவணப்படுத்தப் பட்டது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். நான்தான் கவனிக்கவில்லை, என் தவறே. இருந்தாலும் இது எனக்கு சரி என்று படவில்லை.
சரியாக கவனிக்காத இன்னொரு வரி – // யோசித்துப்பாருங்கள், ஒரு விஞ்ஞானியின், ஓர் அரசியல்மேதையின், ஒரு தத்துவஞானியின் ஆளுமையைவிட ஏன் ஒர் எழுத்தாளனின் தனி ஆளுமை வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது? // விஞ்ஞானிக்கும், தத்துவ ஞானிக்கும், எழுத்தாளனுக்கும் அதே நிலைதான் என்று எனக்கு தோன்றுகிறது. அவர்கள் படைப்புகளே – விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், தத்துவங்கள், எழுத்துகள் – இவையே வருங்காலத்துக்கு முக்கியமானவை. தனி மனித ஆளுமை இரண்டாம் பட்சமே. டால்ஸ்டாயின் எழுத்து படிக்கப்படுகிறது, டால்ஸ்டாயின் வாழ்க்கை பற்றி அந்த அளவு படிப்பதாகத் தெரியவில்லை. புதுமைப்பித்தனுக்கும் அப்படித்தான். சிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களே பரவலாகப் படிக்கப்படுகிறது. நியூட்டனின் மூன்று விதிகளை படிக்காத பள்ளி மாணவன்/மாணவி யார்? நியூட்டன் மணம் செய்துகொண்டாரா இல்லையா என்று எத்தனை பேருக்கு தெரியும்?
அரசியல் மேதை என்றால் யார் என்று தெரியவில்லை. மாக்கியவெல்லி மாதிரி என்றால் அங்கும் அவர்கள் ஆக்கங்களே முக்கியமகா இருக்கிறது. காந்தி, நேரு, சர்ச்சில், ரூஸ்வெல்ட் போன்றவர்கள் என்றால் அங்கே மட்டுமே தனி மனித ஆளுமை, அவர்கள் என்ன செய்தார்கள் என்பது முக்கியமாக இருக்கிறது. வரலாறுக்கும் அவர்களின் தனி மனித ஆளுமைக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது அல்லவா? அவர்களின் ஆளுமை வரலாற்றின் ஒரு பகுதி ஆகிவிடுகிறது.
என் கேள்வியை பொருட்படுத்தி பதிவே எழுதி இருக்கிறீர்கள். அதற்கு நன்றி சொல்லக் கூட தவறிவிட்டேன். நன்றி!
By RV on Aug 1, 2010
அன்புள்ள ஆர்வி
மீண்டும் நான் சொன்னவற்றையே சொல்லவேண்டியிருக்கிறது. அறிவியலாளர்களின் வாழ்க்கை பேசப்படுவதில்லை, அதுவே நல்லது என்றே சொல்கிறேன். ஆனால் எழுத்தாளர்களின் வாழ்க்கை பேசப்படுகிறது, அதுவே இயல்பு என்றும் சொல்கிறேன்.
தல்ஸ்தோயின் தனிவாழ்க்கை, அவருக்கும் சோஃபியாவுக்குமான உறவு அவருக்கும் சோபியாவின் தங்கைக்குமான உறவு மிகமிக விரிவாக பேசப்பட்டது. சொல்லப்போனால் அவரது படைப்புகள் அளவுக்கே. சில்வியா பிளாத்துக்கும் அவர் கணவருக்குமான உறவைப்பற்றி 30 வருடம் ஆங்கில ஊடகங்கள் பேசியிருக்கின்றன. சார்த்ருக்கும் சீமோன் த பூவாவுக்குமான உறவு இப்போதுகூட சூடான விவாதம்.
தல்ஸ்தோய் ரயில்நிலையத்தில் அனாதையாக இறந்தார் என்பதை தவிர்த்து அவரது படைப்புகளை வாசிக்கவே கூடாது, முடியாது என்று சொபவர்கள் உண்டு.
ஜெ
By ஜெயமோகன் on Aug 1, 2010
அன்புள்ள ஜெயமோகன்,
எழுத நினைத்தது சரியாக வரவில்லை. விஞ்ஞானி, எழுத்தாளன், தத்துவ ஞானி ஆகியோரின் தனிப்பட்ட ஆளுமை அவ்வளவு முக்கியமானது இல்லை என்றே கருதுகிறேன். நீங்கள் டால்ஸ்டாயின் இறப்பு பற்றி தெரியாதவன் டால்ஸ்டாயை படிக்க முடியாது என்று கருதினால் அது உங்கள் வரைக்கும் சரியாகவும் இருக்கலாம். ஆனால் பொதுவான வாசகனுக்கு அது முக்கியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு வேளை என் வரைக்கும் சரியாக இருக்கும் கருத்தை நான் generalize செய்கிறேனோ என்னவோ.
நீங்கள் ஒரு முறை ரெம்ப்ராண்டின் ஓவியத்தை பார்க்காதவன் சூரிய உதயத்தை ரசிக்க முடியாது என்ற மாதிரி ஏதோ எழுதியது நினைவு வருகிறது.
By RV on Aug 2, 2010
சுஜாதா என்ற பன்முக எழுத்தாளன் அளித்தது பன்முக அடிப்படைக் கல்வி..சங்க இலக்கியமோ , சமய இலக்கியமோ, அறிவியலோ, ஆழ்வார்களோ, ஆரம்ப கால வாசகனுக்கு ஒரு அடிப்படை தளத்தையும் பாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தார்…அவர் முதல் தலைமுறை தமிழ் அறிவியல் எழுத்தாளர் எனவே அவருடையப் படைப்புகள் அடுத்த தலைமுறையால் சீரமைக்கப்பட வேண்டுமே தவிர விமர்சிக்கப்பட பெரிய அவசியம் நேரவில்லை…இன்று வரை சுஜாதாவை தவிர அறிவியலையும் இலக்கியத்தையும் சுவாரசியமாக ஒரு பாமரனுக்கு அளிக்க யாரும் இல்லை..வருவதும் அபூர்வம்…
By vazhipokkan on Aug 23, 2010
/*அறிவியலாளர்களின் வாழ்க்கை பேசப்படுவதில்லை, அதுவே நல்லது என்றே சொல்கிறேன். */
Surely You Are Joking Mr.Feynman ல் Richard Feynman தன்வரலாற்றை அருமையான நகைச்சுவை உணர்வு இழையோட விவரித்துள்ளார். எந்த எந்த துறைகளில் எல்லாம் புகுந்து ‘கலாசி’ இருக்கிறார் என்பதை அறிய அறிய மிக பிரமிப்பாக உள்ளது. உயிரியல் விஞ்ஞானிகள் தவம் கிடந்து கண்டறிந்த Ribosome generation ஐ ஒரு சின்ன அறையில் ஏறக்குறைய சமையல் உபகரணங்கள் கொண்டு சாதித்துள்ளார், பின்னாட்களில் அது ஒரு பெரும் தொழில்நுட்பமாக பரிமாணம் அடைந்தது. விந்தை என்னவென்றால் அவர் ஒரு வானியல் விஞ்ஞானி! அந்நூலை வாசிக்க அம்மனிதரைப் பற்றிய ஓர் முழுமையான சித்திரம் கிடைக்கிறது. ஒரு கோமாளி,ஒரு குழந்தை, ஒரு சாகச வீரன், ஒரு பெர்வெர்ட் மற்றும் ஒரு மேதை மனம் கலந்து தகவமைந்த ஒரு விஞ்ஞானி. அவர் வாழ்கை பேசப்படாமல் இருந்திருந்தால் என்ன நல்லது?!?
By ayyayyo on Aug 23, 2010