ஜெ சார்
ஒரு உபன்யாஸத்திலே முக்கூர் சொன்னார். ந்ருஸிம்ஹ வழிபாடு எதற்கு என்று பலபேர் கேட்பார்கள். ஒரு கூட்டத்திலே சின்னப்பையன் ஒருவன் நிற்கிறான். அப்போது பயங்கரமாக ஏதாவது ஒன்று நடந்தால் அவன் என்ன செய்வான் என்று? அங்கே இருக்கிற மிக வலிமையான ஒரு பெரியவரை தேடித்தான் ஓடுவான். அதைப்போலத்தான் நாம் பயப்படும்போது ந்ருஸிம்ஹத்தை தேடி ஓடுகிறோம்
அன்றுமுதல் நான் ந்ருஸிம்ஹ உபாசகன்.மனுஷன் பயம் உடையவன். இந்த உலகத்திலே இருக்கிற மிகப்பெரிய பயங்கள் பலது உண்டு. மரணபயம் முதலில். நாம் இல்லாமலாகிவிடுவோம் என்கிற பயம். அடுத்தது அநீதியைக் கண்டுபயம். நமக்கு அநீதி நடக்கும் நம்மாலே ஒன்னும் செய்யமுடியாது என்ற பயம்
அதைப்போல பெரிய பயம் என்பது நாமே பயப்படுவது. அதாவது நம்முடைய காமத்தை நாம் பயப்படுவது. நம்முடைய ஆசையால் நாமே பாவம்செய்துவிடுவோமா என்ற பயம். அதுவும் பெரிய பயம்தான். அதுக்கும்கூட நமக்கு காவல் தேவைப்படுகிறது
அதாவது நமக்கு போலீஸ்காவல் தேவை. தகப்பனின் காவலும் தேவை. ரெண்டுகாவலாகவும் இருப்பது தெய்வம். அது ந்ருஸிம்ஹ முகம் எனக்கு. அதை நான் பிடித்துக்கொண்டதற்குப் பின்னாடி எனக்கு பயமே கிடையாது. பயத்திலே இருந்து விடுபட்டுவிட்டேன்
ஓம் நமோ நாரசிம்ஹாய வஜ்ரதம்ஷ்ட்ராய வஜ்ரினே
வஜ்ர தேகாய வஜ்ராய நமோ வஜ்ரா நகாய ச !!
என்கிற ந்ருஸிம்ஹ மந்திரம் வெளிப்பயங்களிலே இருந்து காக்கும்.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
என்கிற ந்ருஸிம்ஹ மந்திரம் நம்மைப்பற்றிய பயங்களை அழிக்கும். என் ஆப்தமந்திரமாக இவை உள்ளன.
நீலம் வாசித்துவந்தபோது பல இடங்களிலே ஜராதரனும் உக்ர்ரூபியுமான ந்ருஸிம்ஹமாக நான் கிருஷ்ணனைப் பார்த்தேன். அக்ரூரர் கண்ணனைப்பார்க்கும் இடமே ந்ருஸிம்ஹ தர்ஸனம்தான். யானையை பிளந்து ரத்தத்திலே ஆடி போவதும் சரி. கம்சனின் நெஞ்சு பிளப்பதும் சரி, அந்த ரத்தத்துடன் தேவஹிக்கும் வஸுதேவனுக்கும் க்ருபை புரிவதும்சரி ந்ருஸிம்ஹ லீலை என்றுதான் தோன்றியது.
கடைசியில் ரத்த்தத்தால் மதுராவை கழுவுவேன் என்று எழுந்து நிற்கும் இடம் விஸ்வரூபம் போல இருந்தது. கைகூப்பி வணங்கினேன். இதற்குமேல் என்ன சொல்வது
வி.லக்ஷ்மிநாராயணன்
அன்புள்ள ஜெ
கிருஷ்ணனின் அன்பு நிறைந்த விஸ்வரூபத்தை ராதை கண்டாள். அறச்சீற்றம் நிறைந்த விஸ்வரூபத்தை கம்ஸனும் வஸுதேவனும் அக்ரூரரும் கண்டார்கள். இரண்டும் ஒன்றே என்று சொல்லி அந்த விஸ்வரூபம் எடுத்த சாதாரணமனிதனையும் காட்டி நீலம் முடிந்தது. கைக்குழந்தையாக ஆரம்பித்து அந்த விஸ்வரூபம் வரை எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் இயல்பாக ஓடிச் சென்று முடிந்தது நீலம். உங்கள் எழுத்திலே ஒரு மகுடம்
சாரங்கன்
வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்