நாஞ்சில் நாடனுக்கும் பாதசாரிக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு, இருவருமே சுயவிமரிசனம் கலந்த எள்ளல் கொண்டவர்கள். இருவருக்குமே சமூகம் மீது கசப்பு கலந்த விமரிசனம் உண்டு. வேறுபாடு என்பது நாஞ்சில் நாடன் மரபில் வேருள்ளவர். தனக்கென ஒரு மண் உள்ளவர், அதற்கான மொழி அமைந்தவர். பாதசாரி முழுமையாகவே வேரற்றவர்.

நாஞ்சில் நாடன் புனைகதைகளைப்போலவே அவரது கட்டுரைகளும் முக்கியமானவை. அவரது புகழ்பெற்ற ஆனந்த விகடன் கட்டுரைகள் அவரது முகத்தைச் சரியாக துலக்குபவை அல்ல. அவற்றில் அவருக்கே உரிய அபூர்வமான நுண்ணிய நகைச்சுவை இல்லை. கோபம் அதை மறைத்து விடுகிறது. மாறாக அவர் சிற்றிதழில் எழுதும் கட்டுரைகள் அங்கதத்தின் ஆகச்சிறந்த உதாரணங்கள் கொண்டவை
செவ்விலக்கியங்களின் வரியையும், நாட்டார் பண்பாட்டின் மொழி வழக்குகளையும் நுட்பமாக திரித்து பகடியாக்குவது நாஞ்சில் நாடனின் கலை. மூலவரிகள் தெரிந்தவர்கள் அவரது மனம் கொண்ட பாய்ச்சல்களை உணர்ந்து உற்சாகம் கொள்வார்கள். அவரது பழமொழிகளை அனேகமாக வேறெங்கும் நாம் கேட்டிருக்க முடியாது.
பாதசாரியின் அங்கதம் விட்டேத்தியான ஒரு தனிமனிதனின் அக ஓட்டம் சார்ந்தது. சமூகத்தை விலகி நின்று பார்ப்பவனின் குரல் அது. இரவு பகலாக பிள்ளைகளை டியூஷனுக்கு தயாரிப்பவர்கள், சீரியல் பித்தர்கள், சில்லறைக் குடிகாரர்கள் என நாம் சுற்றும் பார்க்கும் எளிய கீழ், நடுத்தர மக்களின் சித்திரங்கள் நிறைந்தவை இந்தக் கட்டுரைகள்.
தமிழினியில் நாஞ்சில்நாடனின் சூடியபூ சூடற்க என்ற கட்டுரைத் தொகுதி மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. பாதசாரியின் ‘அன்பின் வழியது உயிர்நிழல்’ என்ற கட்டுரைத் தொகுதியும் வெளி வந்துள்ளது.
நாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா
மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)





2 comments
Arangasamy.K.V
January 4, 2010 at 7:26 pm (UTC 5.5) Link to this comment
விகடனில் அண்ணாச்சியின் வழக்கமான எழுத்தை காணோம் , ஒருவேளை விகடனுக்காக எழுதுவதாலா என தெரியவில்லை
jeevartist
January 5, 2010 at 7:49 am (UTC 5.5) Link to this comment
நாஞ்சிலின் புகைப்படம் ,அவர் வீட்டுக்கு ஜெயமோகன் வந்தபோது தட்டு நிறைய நேந்திரம்பழ பஜ்ஜியை தின்று முடித்து இலக்கிய அளலாவல்களும் முடிந்து, மகிழ்ச்சியுடன் இருந்தபோது நான்கிளிக்கியது!