கனசியாம யோகம்

அன்புள்ள ஜெமோ,

நீலத்தின் வடிவம், அமைப்பு குறித்து எனக்குள்ள சந்தேகம் இது. இது வரையிலும் வந்திருக்கும் வெண்முரசின் நாவல்களிலிருந்து நீலம் முற்றிலும் மாறுபடுகின்றது. இது வரையிலும் நாவலானது ஒரு வரலாற்றுக் கணத்தில் நடந்த ஒன்றாகத் தான் மகாபாரதத்தை சொன்னது. அதன் புராணத் தன்மைகள் ஒன்று யாரோ ஒரு சூதனால் சொல்லப்படும் அல்லது கிட்டத்தட்ட நடக்க சாத்தியமான ஒன்றாக இருக்கும் (பீஷ்மரின் தமயைன்களின் கதை). ஆனால் எவ்விடத்திலும் கதைமாந்தரை கடவுளாக்கியதில்லை. மேலும் பாரதத்தின் பாத்திரங்களே கதையின் ஓட்டத்தில் பேசும்.

ஆனால் நீலத்தின் ஆரம்பமே ராதை தான். அவள் பாரதத்தில் இல்லை என்பதையே நீங்கள் சொல்லி தான் எனக்குத் தெரியும். அப்படியிருக்க ராதையை வைத்து கதையை நகர்த்துவது ஏன்?

ராதை வரும் பகுதிகளெல்லாம் விதவிதமாக தன்னையிழந்து சரணடைவதைப் பார்க்கிறோம். இங்கே கண்ணன் இன்னும் சிறு குழந்தை தான். ஆனால் அவனின் ஒவ்வொரு செயலுக்கும் அவனின் வருங்கால ஞானத்தையெல்லாம் இப்போதே அளிப்பது ஏன்?

கிட்டத்தட்ட கண்ணனை கடவுளாகவே உணரச் செய்துவிட்டீர்கள். இது இதுவரை இந்த நாவல் வரிசை கைக்கொண்டு வந்த அடிப்படை வடிவ ஒருமையை மீறுவதாகாதா? கண்ணனுக்கும் ராதைக்குமான உறவால் பாரதத்தின் மையக் கதைக்கு என்ன பயன்?

நீங்கள் ஏற்கனவே ஒரு கேள்வி பதிலில் சொன்னது போல வெண்முரசின் மூலமாகத்தான் விதவிதமான கதை கூறும் முறைகளை அறிந்து வருகிறேன். அவ்வகையில் என் ஐயத்தைப் போக்கி, நாவலை மேலும் உணர்ந்து அனுபவிக்கவே மேலே உள்ள கேள்விகள்.

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து

அன்புள்ள அருணாச்சலம்

நீலம் வெண்முரசில் திட்டமிடப்பட்ட பகுதி அல்ல. நீலத்தை நான் திட்டமிட்டு எழுதவில்லை. எழுத ஆரம்பித்தபோது இவ்வடிவில் இம்மொழியில் அமையுமென்ற எண்ணமும் இல்லை.

வெண்முரசு தெளிவான வரலாற்று அடித்தளம் கொண்டது. ஆகவே தர்க்கபூர்வமானது. மானுட இயல்பு, வரலாற்றின் சுழிப்பு ஆகிய இரண்டையும் கூர்ந்து அவதானிப்பது. அதன் நுட்பங்கள் வழியாகச் செல்வது

ஆகவே அதில் எளிய புராணக்கற்பனைகளுக்கு இடமில்லை. புராணமும் மிகுகற்பனையும் அதில் வருவது அக்கதையை பிரபஞ்சத்தன்மை நோக்கிக் கொண்டு செல்லவோ கவியுருவகம் மூலம் வலுப்படுத்தவோதான். மகாபலியின் கதை முதல்வகைக்கும் துரோணரின் கையில் இருக்கும் தர்ப்பை இரண்டாம் வகைக்கும் உதாரணம்.

ஆனால் நீலம் அந்த தர்க்கத்துக்குள் அமையாது. அந்த அழகியலுக்குள் அடங்காது. அதன் மொழியே வேறு

மகாபாரதத்தில் கண்ணனின் இளமைப்பருவமே இல்லை. அது பாகவதத்தால் உருவாக்கப்பட்டது, ஆயிரம் வருடம் கழித்து.

பாகவதத்தில்கூட ராதை இல்லை. அது மேலும் ஆயிரம் வருடம் கழித்து உருவாகி வந்த படிமம்

ஆகவே என் வெண்முரசின் இயல்பான ஒழுக்கிலும் இளம் கண்ணனும் ராதையும் இல்லை. பாரதத்தின் கண்ணன் ஞானியான யாதவ அரசன். அவ்வளவுதான். நெடுங்காலம் பிந்தியே அவனைப்பற்றிய கதைகள் மேலும் விரிந்தன.

ஆயினும் மகாபாரதத்தில் நீலம் நாவலை ஏன் எழுதிச்சேர்த்தேன் என்றால், எழுத நேர்ந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எழுதத் தொடங்கியபின் அதில் ஒரு முதன்மையான அம்சம் உள்ளது என படுகிறது

நான் 20 வருடங்களுக்கும் மேலாக யோகநிலைகளில் ஆர்வமும், பயிற்சியும் உள்ளவன். சில குருநாதர்களையும் கொண்டவன். ஆனால் அதைப்பற்றி எதையும் எழுதியதில்லை. அப்படி எழுதுவதும் சாத்தியம் அல்ல. அது வெறும் தர்க்கம் அல்லது உருவகமாகவே முடியும். அந்த உணர்வும் வீச்சும் வெளிப்படுத்தக்கூடியது அல்ல.

நீலம் உணர்வுரீதியானது. சமர்ப்பணம் பற்றியது. பித்துநிலை மொழி கூடி வருவது. ஆனால் கூடவே அது மறைஞானத் தன்மை கொண்டது [ esoteric ] மறைஞானத் தளத்தில் எழுந்த மிகமுக்கியமான நூல்களில் ஒன்று இது என நீங்கள் உறுதியாக நம்பலாம்

ஓர் இலக்கிய வாசகன் இலக்கிய நயம் கோரி மட்டும் அதை வாசிக்கலாம். ஆனால் அடிப்படை யோக அறிதல் கொண்ட ஒருவன் ஒவ்வொரு வரியிலும் தலைப்பிலும் அமைப்பிலும் அதன் யோகவியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் காணமுடியும். ஒன்றுடன் ஒன்று தொட்டுச் செல்லும் படிமங்களிலும், உணர்வுநிலைகளிலும் அது உள்ளது

கிருஷ்ணன் ராதை என்னும் இரு புள்ளிகளுமே இந்த யோக நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டவைதான். ராஜயோகம் என்றோ ராஸயோகம் என்றோ கனசியாம மார்க்கம் என்றோ சொல்லப்படும் ஒரு வகை யோகமுறைமையின் உருவகங்களே அவ்விரு கதாபாத்திரங்களும். பிரேமையை அடிப்படையாகக் கொண்டது அது.

பாகவதத்தின் உருவகங்களும் இந்நாவலில் அந்த பொருளிலேயே அமைந்துள்ளன. ஆகவே முழுமையாக ‘அர்த்த’ தளத்தில் அமைந்தது அல்ல இந்நாவல்.

இந்நாவலிலேயே கிருஷ்ணன் என்பது முழுக்கமுழுக்க ராதையினால் உருவாக்கப்படுவதென்பதை காணலாம். ராதையை உருவாக்கியது கிருஷ்ணபாவம். இந்நூல் யோகத்தின் இருண்ட பக்கங்களுக்கும் பிரேமையின் ஒளிமிக்க பக்கங்களுக்கும் மாறிமாறி ஊசலாடும் அமைப்பு கொண்டது.

பூதனை முதற்பூதமான மண். திருணவரதன் அடுத்த பூதமான காற்று. பூதனை அன்னம். திருணவரதன் பிராணன். இந்த குறிப்புகளை மட்டும் அளிக்கிறேன். இது ஒரு யோகநூல் என்பதற்காக.

யோகத் தளத்தில் இந்த நூல் மகாபாரதத்தை ஒட்டுமொத்தமாக விளக்குவதாக அமையும். மகாபாரதத்தின் முழுமையை மேலும் கூர்மைப்படுத்தும். ஆனால் பாரதக்கதைக்குள் இது அமராது. மகாபாரதம் என்னும் ஞானநூலில் இது ஓரு யோகநூலாக அமரும்

ஜெ

முதற்பிரசுரம் Sep 1, 2014 at 00:03 -மறுபிரசுரம்

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைகோணங்கியின் குரல்
அடுத்த கட்டுரைகல்மரப்பெருமாள்