இளையராஜா,சாரு:கடிதங்கள்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

அன்புள்ள ஜெ,

சாருவின் பல கட்டுரைகளை நானும் படிப்பதுண்டு. குறிப்பாக இசைகுறித்த அவரது பிரதாபங்களையும், அவர் கடவுளைக் கண்ட கட்டுரைகளையும். அவர் கடவுளைக் கண்ட கட்டுரைகள் குறித்து எனக்கு பெரிதும் கருத்து ஏற்படவில்லை. காரணம் இது போன்ற பற்பல கட்டுரைகளை பல்லாயிரம் முறை படித்தாகி விட்டது. இதை விட அற்புதமான கட்டுரைகளையும் பேச்சுக்களையும் ஆந்திரத்தில் கிறுத்துவ மிஷனரிகளும், காஞ்சி, திருவண்ணாமலை  மக்களும் அளித்து படித்திருக்கிறேன். ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலும் ஒரு குழுவின் கருத்தையேனும் மாற்றியமைக்கும் வலிமை எழுத்தாளனுக்கு உள்ளது. எப்போதுமே வலிமையுடன்-அதிகாரத்துடன் பொறுப்பும் சேர்ந்தே வருகிறது என்று நினைப்பவன் நான். ஆனால் ஒரு எழுத்தாளனுக்குரிய ஆளுமையோ பொறுப்புணர்வோ தென்படுவதாகத் தெரியவில்லை.

 

அவரது புத்தகமாக நான் முதலில் படித்தது ஸீரோ டிகிரி. ஸீரோ டிகிரி எனக்குப் புரியாதபோதும் (கலகக்காரர்களுக்கு மட்டுமே புரியும் போல), மற்றவர்கள் அதற்களிக்கும் முக்கியத்துவம் பார்க்கையில் ஒருவேளை அது நன்றாகவே இருந்திருந்தாலும், அவரது மற்ற படைப்புகளைப்பார்க்கையில், ஸீரோ டிகிரி ஒரு விபத்தோ என்று தோன்றுகிறது. வடிவத்தைத் தவிர இதில் என்ன புதிய விஷயம் இருக்கிறது (அதுகூட பழையது என்று சொல்கிறார்கள்) என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை எனக்கு அது ஒருநாளும் புரியாது போலும். திலகாஷ்டமஹிஷபந்தனம் போல ஒரு சிறப்பான நூல் இது என்று நினைக்கிறேன்.

 

இசைகுறித்து சாருவுக்கு இவ்வளவு திட்டமான கருத்துக்களை எடுத்துவைக்கும் அளவுக்கு பயிற்சியோ, அனுபவமோ இல்லை என்று அவரது பல இசைகட்டுரைகளை படித்தபோது தெளிவாகவே புரிகிறது. இதுகுறித்து ஏதாவது கூறப்போய் “விளித்தல் விகாரத்தில்” முடிவதில் இஷ்டமில்லாததால், வேண்டாம்.

 

ஏன் இவருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறீர்கள் என்று எனக்குப் புரிவதே இல்லை. ஒருவேளை உங்களுக்கு நேர் எதிரான ஒரு பிம்பம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதனால் ஏற்படும் விளைவா? நா.காமராஜன் என்ற கவிஞர் ஒருமுறை சொன்னார், “போய்வா நதியலையே” என்ற பாடல் நான் எழுதியது, அதுதான் உலகிலேயே சிறந்த தமிழ்ப்பாடல் என்று. டி.ராஜேந்தரும், சிம்புவிடமும் தென்படுவது “மிகவும் மேலதிகமான தன்னம்பிக்கை”. இவர்களின் வரிசையில் சாருவை விரைவில் சேர்த்துவிடலாம் போல இருக்கிறது.

 

நித்யானந்தர் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லையென்றாலும், வியாபாரம் நல்லமுறையில் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இன்னும் இன்னும் உலகுக்கு கொடுப்பதற்கு ஏதேனும் புதிய செய்தி இருக்கிறதா? அதற்கான அவசியம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? நான் நினைக்கவில்லை. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் வாழ்கையுமே ஒரு மகத்தான செய்திதான் என்று நினைக்கிறேன்.

 

-ராம்

 

அன்புள்ள ராம்

ஓர் எழுத்தாளராக சாருவை நான் எப்படிப்பார்க்கிறேன் என்பதை தமிழிலக்கியம்
குறித்து எழுதும் விமரிசகன் என்ற முறையில் பதிவுசெய்யவேண்டிஅய்து என்
கடமை. அதைச் செய்திருக்கிறேன்

வாசகர்கள் அந்தக்கருத்துக்களுடன் விவாதிக்கலாம், ஏற்கலாம், மறுக்கலாம்

ஜெ

அன்புள்ள ஜெ,

சாரு இளையராஜாவை பற்றி எழுதுவதை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். எனக்கு இசை ஞானம் தங்களை விடவும் மிக மிக குறைவு:) ஆனால் சாரு இளையராஜா குறித்து சொல்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. 1984’ல் த்ரில்லர் இசைதட்டு வெளி வந்த சமயம் – பாப் என்றால் ஒன்றுமே தெரியாது, ஜாக்ஸன் பாடிய வரிகள் ஒன்றும் விளங்கவில்லை(இப்போதும் தான் :), டிவி பார்த்தது கிடையாது – பில்லி ஜீனையும், த்ரில்லரையும் கேட்ட போது உணர்ந்த பரவசம் இன்றும் நினைவிருக்கிறது. கண்டங்கள், கலாச்சாரங்கள் தாண்டி என்னுள் எதிரொலித்தது அந்த இசை. இன்று ரஹ்மானால் அதை செய்ய முடிகிறது. ஸ்லம் டாக்கின் ஜெய் ஹோ பாட்டை பல தடவை கேட்டு விட்டு அது காதுகளில் இடை விடாமல் ரீங்காரமிடுகிறது என்றார் அமெரிக்க நண்பர். அவருக்கு ஜோதா அக்பரில் வரும் “ஹ்வாஜா மேரி ஹ்வாஜா”வை அனுப்பி வைத்தேன். கேட்டு விட்டு அசந்து விட்டார். உள்ளத்தை நிரப்புகிறது என்றார் இந்திய இசைக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கும் அறிமுகமில்லாத நண்பர். இந்த கண்டம், கலாச்சாரம் தாண்டி இசையால் ஒரு உள்ளத்தை தொடுவது ஜாக்ஸன், ரஹ்மான் போன்றோரால் தான் முடியும்.

ராஜாவின் பல ஆரம்ப கால பாடல்கள் எனக்கு மிக விருப்பமானது. இப்போதும் விடாமல் கேட்கிறேன். ஆனால் அவர் ஒரு தமிழ் இசையமைப்பளார் மட்டுமே. என்ன தான் இசை ஞானி என்றும் மயிஸ்த்ரோ என்றும் அழைக்கப்பட்டு தூக்கிவிடப்பட்டாலும் அவரால் மற்ற மொழிகளில் நிலைக்க முடியவில்லை. அவரின் இசை எந்த ஒரு தாக்கத்தையும் வடக்கில் ஏற்படுத்தவில்லை.

தூர்தர்ஷனில் 90களில் சூப்பர் ஹிட் முக்காப்லா என்று டாப் டென் இந்தி பாடல் நிகழ்ச்சி அனைவரும் அறிந்தது. ரோஜா படம் வெளியிடப்பட்ட போது மஹாராஷ்டிராவில் படித்த நண்பன் சக வட நாட்டு நண்பர்கள் ரோஜாவின் தமிழ் பாடல்களுக்கு அடிமையாயிருந்ததை குறிப்பிட்டான். சில மாதங்களிலேயே அந்த மொழியாக்கம் செய்யாத தமிழ் பாடல்கள் முதன் முறையாக சூப்பர் ஹிட் முக்காப்லாவில் ஒலித்த போது கண்ணீர் நிரம்பியது. இது தான் ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் உள்ள வித்தியாசம். என்னைப்பொறுத்தவரை ராஜா 70’ல் 80’ல் இல்லாமல் 90’இன் இண்டெர்நெட் யுகத்தில் படைக்க ஆரம்பத்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பார். ராஜாவைப் பற்றி சிறு குறை சொன்னாலே அடிக்க வரும் அளவுக்கு அவருக்கு தமிழர்களிடையே எல்லா வித பொருளாதர தளங்களிலும் ரசிகர்கள் உண்டு என்பது உண்மை. ஒரு நண்பன் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டான். அதனால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

மற்றபடி பட ஒலிப்பதிவு, இந்திய படங்களில் இசையமைப்பாளரின் பணி பற்றி நீங்கள் எழுதியதுக்கு உடன்படுகிறேன்.

அன்புடன் சிவா

 

 

 

அன்புள்ள சிவா,

இந்த விவாதத்தை இசை சார்ந்து நான் மேலே கொண்டுசெல்ல மாட்டேன், எனக்கு அந்த தளம் பரிச்சயமில்லாதது.

 

ஆனால் இலக்கியம் சார்ந்தும் எப்போதும் இந்த வினா உண்டு. ஆர்.கே.நாராயணன் ல.ச.ராமாமிர்தம் யார் மேல்? நாராயணன் உலகமெங்கும் செல்கிறார். ல.ச.ராவை தமிழ்ப்பண்பாட்டுக்குள் வராமல் வாசிக்க முடியாது. அரவிந்த் அடிகாவை யாரும் வாசிக்கலாம். சிவராம காரந்தை கன்னடப்பண்பாட்டுக்கு மனதை கொடுக்காமல் வாசிக்க முடியாது.

 

சினுவா ஆச்சிபி ஆப்ரிக்க நாவலாசிரியர் அல்ல என்றே நான் சொல்வேன், அவர் ஆப்ரிக்கர்களைப் பற்றி பொதுவான உலக வாசகர்களுக்கு எழுதுபவர். அவர் காட்டும் ஆப்ரிக்கா அல்ல ஆப்ரிக்கா. அது நாம் காணவிரும்புவது மட்டுமே. நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எழுதப்பட்டது

 

நான் வோல் சொயிங்கா அல்லது பென் ஒக்ரியையே நாடிச்செல்வேன். எனக்கு தேவையானது அசலான பண்பாட்டு தன்மை கொண்ட எழுத்தே.

 

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். எதிர்காலத்தில் புதுமைப்பித்தன் முதல் ஜெயமோகன் வரை உள்ள தமிழ் எழுத்தாளர்கள் பழசாகி தேவையில்லாமல் ஆகிப்போகலாம். சென்னை மாமிகள் ஆங்கிலத்தில் எழுதும் நாவல்கள் வழியாக தமிழ் இலக்கியம் வாழலாம். உலகளாவ தமிழிலக்கியமே அதுவென பேசப்படலாம். உலகில் எல்லாருக்கும் எந்த சிரமமும் இல்லாமல் அது புரியலாம்.

 

இருந்தாலும் நான் இங்கேயே நிற்பேன்

 

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியின் கிராமசுயராஜ்யம் – 1
அடுத்த கட்டுரைமலேசியா ஒரு கடிதம்