«

»

Print this Post

சுமித்ரா

கல்பற்றா நாராயணனிடமும் டி.பி.ராஜீவனிடமும் எட்டுவருடம் முன்பு ஊட்டி கவியரங்கில் சொன்னேன், நவீன காலகட்டத்தில் கவிஞன் எழுதவேண்டியது நாவல்தான் என. கவித்துவம் முழுமையாகவெளிப்படுவதற்குரிய கலைவடிவம் நாவலே. கட்டற்றது, மொழியின் எல்லா மடிப்புகளுக்கும் இடமளிப்பது.

டிபி.ராஜீவன் சிலவருடங்கள் கழித்து அவரது முதல்நாவலை எழுதினார். ‘பாலேரிமாணிக்யம் ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா’ என்ற அந்நாவல் பெரும்புகழ்பெற்றது. ரஞ்சித் இயக்கத்தில் அது திரைப்படமாகவும் வெளிவந்தது. ராஜீவனின் இரண்டாவது நாவலான கோட்டூர் எழுத்தும் ஜீவிதமும் சென்றமாதம் திருவனந்தபுரத்தில் முதல்வர் உம்மன் சாண்டி வெளியிட நான் பெற்றுக்கொண்டு உரையாற்றினேன்

கல்பற்றா நாராயணன் முதலில் ஒரு சிறிய சுயசரிதை எழுதினார். அது ஒருவகை நாவல்முயற்சிதான். கோந்தலா என்ற அந்த எண்பதுபக்க சுயசரிதை பெரும்புகழ்பெற்றது. அதன்பின் அவரது இத்ரமாத்ரம் என்ற நாவல் வெளியாகியது. மலையாளமொழியின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக கருதப்படும் இத்ரமாத்ரம் நூறுபக்கம் கொண்ட நாவல். அதேபேரில் கோபிநாதன் இயக்கத்தில் திரைப்படமாகவெளிவந்து சென்ற திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் பரிசுபெற்றது

இத்ரமாத்ரம் என்றால் மலையாளத்தில் இவ்வளவு என்று பொருள். பேச்சில் அதிகம் என்றும் குறைவு என்றும் ஒரேசமயம் தொனி வரும். மலையாளத்தில் கே.வி.ஷைலஜா மொழியாக்கத்தில் ‘சுமித்ரா’ என்ற பேரில் வெளியாகியிருக்கிறது. நூலை நானும் கல்பற்றாவும் பவா செல்லத்துரையின் வீட்டில் அமர்ந்து இரண்டுநாட்களில் வரிவரியாக செம்மைசெய்தோம். எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுரையுடன் நூல் வெளிவந்துள்ளது

வரும் 9 ஆம் தேதி மாலை ஐந்துமணிக்கு சென்னை புக்பாயிண்ட் அரங்கில் நூல் வெளியீட்டுவிழா நடக்கிறது

எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரை

சுமித்ரா வம்சி

திருவண்ணாமலையில்

தொடர்புடைய பதிவுகள்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34873

Switch to our mobile site