புல்வெளி தேசம் 16 நீலமலை

      நாஞ்சில்நாட்டில் தாடகைமலை என்ற ஒரு மலை உண்டு. நாஞ்சில்நாடனின் ஊரான வீரநாராயண மங்கலத்தில் நின்று பார்த்தால் அந்த மலை ஒரு மாபெரும் பெண்ணுருவம் தலைமுடி பரப்பி கால்களை நீட்டி முலைக்குன்றுகளுடன் மல்லாந்து படுத்திருப்பதாகவே தோன்றும். இன்னும் கச்சிதமாகப் பார்க்கவேண்டுமென்றால் பூதப்பாண்டி கோயிலில் நின்று பார்க்கவேண்டும். பார்க்கப்பார்க்க அந்த உருவம் அப்படியே பூதாகரமாக தெளிந்து வருவது ஒரு பெரிய அனுபவம்.

இமையமலையில் பெரும்பாலான சிகரங்களுக்கு இவ்வாறு உள்ளூர் பெயர்கள் உண்டு.இயற்கைமீது படியும் பழங்குடியின் பார்வை என்பது கிட்டத்தட்ட சிறு குழந்தையின் பார்வைதான். குழந்தைகள் எப்படி வெளியுலகை தன்னுள் உள்ள பிம்பங்களுடன் இணைத்துக்கொள்கிறார்களோ அப்படித்தான் அப்படித்தான் ஆதி மானுட மனமும் செயல்பட்டிருக்கிறது. அதற்கான தடையங்கள் நம்முடைய மொழியில் குவிந்துகிடக்கின்றன.

உதாரணமாக நுனிவாழையிலையை எங்களூரில் நாக்கிலை என்பார்கள். வாழையின் தண்டை வாழைக்கை என்பார்கள். வாழையின் அடிக்கிழங்கை வாழைமாணம்– வாழையின் பிருஷ்டம் – என்பார்கள். வாழை குலைப்பதற்காக முதல்பூநுனியை நீட்டுவதை தும்பிக்கை நீட்டுதல் என்பார்கள். வாழைக்காய் கொத்துகளை சீப்பு என்பார்கள். வாழை என்ற ஒரே மரத்தை எத்தனை படிமங்கள் வழியாக உள்வாங்கிகொண்டிருக்கிறது தொல்மனம்!

ஏப்ரல் இருபத்தொன்றாம் தேதி ஆசி.கந்தராஜாவின் மகன் ஐங்கரனும் ஆசி.கந்தராஜாவும் நானும் அருண்மொழியும் மூன்று சகோதரிகள் என்னும் குன்றுக்குச் சென்றோம். சிட்னி அருகே உள்ள இந்த மலைக்கு நீலமலை என்று பெயர். ஊட்டிமலைகளுக்கும் நீலகிரி என்றுதான் பெயர். கோவைதாண்டிச்செல்லும்போது உண்மையிலேயே நீலநிறமாக அலையலையாக நீலகிரித்தொடர் விரிந்து கிடப்பதைக் காணமுடியும். சிட்னியின் நீலமலைகளை அப்படிப் பார்க்கமுடியவில்லை. உயரமாக ஏறி ஏறிச்சென்ற ஆறுவழி நெஉஞ்சாலையில் ஐங்கரன் திறமையான நிதானத்துடன் வண்டியை ஓட்டிச்சென்றார்.

ஆசிகந்தராஜாவின்  மகன் ஐங்கரன் அங்கே பல்மருத்துவம் படித்து முடிக்கும் நிலையில் இருக்கிறார். அவரது மகள் மருத்துவம் பயில்கிறாள். கெ.எ·ப்.சிவில் பொதுமருத்துவத்தை விடவும் வாய்ப்புகள் அதிகமுள்ள துறை பல்மருத்துவம் என்றார் ஆசிகந்தராஜா. அங்கே உள்ள மக்களில் அழகான பல்வரிசை மிகக்குறைவாகவே காணக்கிடைத்தது என்று எனக்குப் பட்டது. பொதுவாக ஆப்ரிக்க- கறுப்பு வம்சாவளியினருடைய பற்கள்தான் பளின்குவெண்மையுடன் உள்ளன. வெள்ளை இனத்தின் பற்கள் எலும்பு நிறம் கொண்டவை.  நமக்கும் பற்கள் வெண்ணிறம்தான்.ஆனால் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் பற்கள் எலும்புநிறத்துடன் இருப்பதுண்டு.

இளம்பெண்களின் பற்கள் கெ.எ·ப்.சிவில் அதிகமும் கறை படிந்து இருப்பதாக நான் ஐங்கரனிடம் சொன்னேன். சிகரெட்தான் காரணம் என்றார் ஆசிகந்தராஜா. அதைவிட காப்பி ஒரு காரணம் என்றார் ஐங்கரன். மிகவும் கெட்டியான கறுப்புக்காப்பி அதிகமாக அங்கே குடிக்கப்படுகிறது. அது பற்களை மிகவும் கறையாக்குகிறது. இப்போது பற்களை சீரமைக்க வந்துள்ள பல்வேறு வழிமுறைகளைப் பற்றி சொன்னா. என் பையன் பற்களில் கிளிப் மாட்டியிருக்கிறான் .மகளுக்கும் கிளிப் போட்டிருக்கிறேன். ‘கிளிப்பேச்சு’ என்று கிண்டல் செய்வதுண்டு.

 

 

ஐங்கரனுடன்

இப்போது இந்தியாவில் பொதுவாகவே குழந்தைகளுக்கு பல் எத்திக்கொண்டுவருகிறது. சென்னையில் இன்னும் அதிகம். நான் ஊகிப்பதைச் சொன்னேன் காரணம் சூழல் மோசமாக ஆகிக்கொண்டே இருக்கிறது. ஆகவே சிறுவயதில் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. வாயைத்திறந்து வைத்துக்கொண்டு அவர்கள் தூங்குகிறார்கள். ஆகவே பல்முளைக்கும் வயதில் அவை வெளியே நீட்ட ஆரம்பிக்கின்றன. என் பிள்ளைகள் பிறக்கும்போது நாங்கள் இருந்தது மோசமாக சூழல் சீர்கெட்ட தர்மபுரியில். அது உண்மையாக இருக்கலாம் என்றார் ஐங்கரன்

ஐங்கரன் இசை படிக்கிறார். குறிப்பாக அவர் ஒரு நல்ல தபலா வித்வான். மும்பையில் சென்று மாதக்கணக்காக தங்கி குருகுல முறைப்படி கற்கிறார். உஸ்தாத் ஸாகிர் ஹ¤சையினுடன் தபலா வாசித்திருக்கிறார். ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவருக்கு தமிழே தெரியாது, ஆங்கிலமும் சுத்தமான ஆங்கில உச்சரிப்பு

நீலமலைக்குச் செல்லும் வழியோரமாக அற்த்தமான பண்ணைவீடுகளைக் கண்டோம். மரத்தால் ஆன பழையபாணி பண்ணைவீடுகள். புத்யவகை பண்ணைவீடுகள். பல பண்ணைவீடுகளைச் சுற்றி அழகான தோட்டங்கள் அமைத்திருந்தார்கள். நிலம் மாருபடும்தோறும் மரங்கள் மாறுபட ஆரம்பித்தன. பைன் மரங்கள் தென்பட்டன. குளிரும் காருக்கு வெளியே அதிகரித்தபடியே வந்தது

நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது நீலமலை. கடல்மட்டத்தில் இருந்து ஆயிரத்தி இருநூறு மீடர் உயரம்தான்.பெரிய மலை என்று சொல்லமுடியாது. அங்கே அதிக மழைபெய்வதனால் இருசிறு ஆறுகள் உற்பத்தியாகின்றன.நீர்வளம் இருப்பதனால் இப்பகுதியில் நெடுங்காலமாகவே பழங்குடிகள் வசித்துவந்திருக்கிறார்கள். இங்கே இருந்த கிலென்புரூக் அருகே ஒரு குகையில் தொல்பழங்கால கீறல் ஓவியங்கள் உள்ளன. கல் ஆயுதங்களை தயாரிக்கும் கற்களும் கிடைத்துள்ளன.

                                                                           ஆசி கந்தராஜாவுடன்

நீலமலை உச்சிக்கு வந்து வெளியே இறங்கியதும் கடுமையான குளிரை உணர்ந்தேன். ஜாக்கெட் போட்டுக்கோண்டிருந்தாலும் குளிர்ந்தது. சிறிய தூறல் இருந்தது. குடைகள் பிடித்துக்கொண்டோம்.  அதிக பயணிகள் இல்லை. பெரும்பாலானவர்கள் வழக்கம்போல சீன வம்சாவளியினர். சாலையோரமாக நின்றபோது மலைகளுக்கு அப்பால் ஏரி ஒன்று பளபளவென்று தெரிந்தது. அதைச்சுற்றி பச்சை ஆர்ந்து செழித்திருந்தது.  மலைக்கு அப்பால் உள்ள அந்த நிலம்தான் நியூசவுத் வேல்ஸிலேயே வளமான பகுதி. அந்தப்  பச்சைநிலம் சமவெளி கன்னிம்ப்லா சமவெளி என்ற் சொல்லப்படுகிறது.

ஆனால் நெடுங்காலமாகவே அந்த நிலம் வெள்ளையர்களால் கண்டடையபப்டவில்லை. நீலமலையைக் அக்டந்துசெல்ல பாதை இல்லை என்றே வெள்ளையர் நம்பினார்கள். ஆனால் பழங்குடிகளுக்கு அம்மலைகளைத்தாண்டி மறுபக்கம்செல்ல வழிகள் தெரிந்திருந்தன. அவர்கள் இப்போது பில்பின் பிளவு என்னும் மலை இடைவெளிவழியாகவும் கோக்ஸ் ஆறுவழியாகவும் அப்பால்சென்றார்கள். ஏரியாக தேங்கியிருக்கும் ஆற்றின்பெயர் நேப்பியன் ஆறு, கோக்ஸ் ஆறு அதில் சென்று கலக்கிறது. அந்த ஏரி திர்ல்மீர் [Thirlmere] எனபப்டுகிறது

அந்தமலையைக் கடந்து சென்ற முதல் ஐரோப்பியர் என்று ஜான் வில்ஸன் என்ற முன்னாள் குற்றவாளியைச் சொல்கிறார்கள். 1788ல் முதல் கப்பலிலேயே கெ.எ·ப்.சிவுக்கு வந்த வில்சன் 1792ல் விடுதலையானார். அவர் சிட்னிக்கு வெளியே பழங்குடிகளுடன் இணைந்து வாழ்ந்தார். அவர்களுக்கும் வெள்ளையருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். 1797ல் அவர் மலைக்கு அப்பால் அந்த பசுமையான நிலத்தை தான் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்தார். அவர் பழங்குடிகளுடன் சேர்ந்து அம்மலையை தாண்டியிருக்கக்கூடும் என்று சொல்கிறார்கள்.

சாலையோரமாக அப்பகுதியைப் பற்றிய தகவல்களும் வரைபடங்களும் வைக்கப்பட்டிருந்தன. வில்சன் அப்பகுதியைக் கடந்த தகவலும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. மலையுச்சியில் இருந்து அப்பகுதியைப் பார்க்க பரவசமாக இருந்தது. பொதுவாக கெ.எ·ப்.சிவில் புல்வெளியியின் பசுமையைத்தான் பார்க்கமுடிந்தது. காட்டின் பசுமையே வேறு. சற்றே நீலம் கலந்த இருண்ட பசுமை அது. அது வளத்தின் அடையாளமாதலால் அதைக் கண்டதுமே நம் மனம் மலர்ந்துவிடும். குமரிமாவட்டத்தில் பல இடங்களில் மலையுச்சிமேல் நின்று பார்த்தால் பச்சைமரகதப்பரப்பைக் கண்டு கண்நிறைய முடியும்.

வில்சனின் கதையை பின்னர் இணையத்தில் வாசித்தேன். நியூசவுத் வேல்ஸின் அப்போதைய கவர்னர் ஹண்டர் வில்சனை அதிகாரபூர்வ வழிகாட்டியாக நியமித்தார். ஜான் பிரைஸ் என்பவருடன் ஒரு நிலக்கண்டுபிடிப்புக் குழுவை அவருடன் அனுப்பினார். அந்தக்குழு நேப்பியன் ஆற்றைக் அக்டந்து இன்றைய மிட்டகாங் வரை சென்றது. மலையைக் கடப்பதற்கான வழி இவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் அக்குழு சென்று திர்ல்மீர் ஏரியை அடைந்தது. கெ.எ·ப்.சிவின் வளமான வேளாண்நிலம் இவ்வாறாகக் கண்டுபிடிக்கப்பட்டது. வில்சன் ஒரு பழங்குடிப்பெண்ணை கடத்தமுயன்றபோது பழங்குடிகளால் கொல்லப்பட்டார்.

வில்சனின் கதை மிகவும் ஆர்வமூட்டுவது, கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படத்துக்கான கதை. அதைப்போல பல கதைகள் நம் இந்தியாவிலும் உள்ளன. வார்ட் ஆண்ட் கானர் கேரள- குமரிமாவட்ட காட்டுப்பகுதிகளை சர்வே எடுத்த போது பல திகில் நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. கோதையாறுக்கு மேல் முத்துக்குளிவயல் என்னும் உச்சிமலையில் இருந்து தமிழகத்துக்குச் செல்லும் ஒரு மலைவெடிப்பை பழங்குடிகளில் இருந்து அவர்கள் கண்டு பிடித்தார்கள். அதேபோல மருத்துவாழ்மலை வழியாக பணகுடிக்குச் செல்லும் ஒரு சிறிய சந்துபாதையை கண்டுபிடித்தார்கள். இவற்றுக்கு காவல்போட்டு பேணமுடியாது, குற்றவாளிகளுக்கே பயன்படும் என்பதனால் அவற்றை நிரந்தரமாக மூடிவிட்டார்கள்.  வேலுப்பிள்ளையின் திருவிதாங்கூர் ஸ்டேட் மேனுவலில் இந்தத் தகவல்கள் உள்ளன. இவையெல்லாம் சுவையான புனைகதைக்குரிய தகவல்கள்.

மலைவிளிம்பில் நின்றுகொண்டு பனிமூடிய சமவெளியைப் பார்த்தோம்.பக்கவாட்டில் மலைநீட்சி ஒன்று உள்ளது. அதில் மூன்று சிகரங்கள். அவை மூன்று சகோதரிகள் என்று சொல்லப்படுகின்றன. ஓரளவு ஆந்திரபகுதி மலைகளை நினைவுபடுத்தின அவை. காற்று வீசி மலைகளில் உள்ள கனிமங்களை அரிப்பதனால் விதவிதமான வடிவங்களில்  அந்த மலைகள் எழுந்து நின்றன. மெக்கென்னாஸ் கோல்ட் படத்தில் காட்டப்படும் பொன்னிறமான கிராண்ட் கேன்யன் மலைச்சிகரங்கள் போல. அந்தப்படம் வந்தபோது ஒளிப்பதிவாளர் கர்ணன் அதேபோல கங்கா என்ற படத்தை எடுத்தார். அதில் ஆந்திராவில் ராயலசீமாவில் உள்ள அதேபோன்ற அரிக்கப்பட்ட மலைகளை படம்பிடித்திருந்தார். அபத்தமான அந்த கறுப்புவெள்ளைப் படத்தில் மலைக்காட்சிகள் மட்டும் அற்புதமாக இருக்கும்! 

மூன்றுசகோதரிகளும் வெள்ளைப்பனிமூட்டத்தால் முக்காடு போட்டிருந்தார்கள். அங்கேயே நின்றுகொண்டிருந்தபோது மெல்ல மெல்ல பனி விலகியது. சகோதரிகள் தெரிய ஆரம்பித்தார்கள். பின்னர் மேகம் நீங்கி துல்லியமாகவே தெரிந்தார்கள். அவற்றுக்கு உருவச்சிறப்பு ஏதும் இல்லை. மூன்று குவைகள். ஆனால் அவற்றின் தொன்மை நம்மை ஒருவகையான பரவசத்துக்கு ஆளாக்குகிறது.

மலைவிளிம்புவழியாகவே நடப்பதற்கு வழியமைத்திருக்கிறார்கள். மலைச்சரிவு முழுக்க அடர்த்தியான யூகலிப்டஸ் மரங்கள்தான். மரங்களால் அந்த மலைவிளிம்புகள் சரியாமல் அள்ளிப்பிடித்து நிறுத்தப்பட்டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படும். மலைகளுக்கு நடுவே உள்ள ஆழமான பகுதி மலைக்காடுகள்.  மழைக்காடுகள் குட்டையான மரங்களுடன் அவற்றுக்கு நடுவே செறிந்த புதர்களுடன் இருந்தன.

கயிற்றுவண்டியில் இறங்கிச்சென்று மழைக்காடுகளைப் பார்ப்பதற்கு வழிசெய்திருந்தார்கள். நாங்கள் சென்றபோது கூட்டமே இல்லை. அங்கே ஒரு சிறிய வேடிக்கைப்பொருள் கடையும் இருந்தது. நான் பொதுவாக கெ.எ·ப்.சிவில் எதுவுமே வாங்கிக்கொள்ளவில்லை. இந்திய ரூபாயில் கொள்ளை விலை. எல்லாமே இந்தியாவில் மலிவாகக் கிடைப்பவையும் கூட.

கயிற்றுவண்டியில் நாங்கள் மூவர் மட்டுமே. ஐங்கரன் வரவில்லை. கயிற்றுவனி இறங்கும்போது பக்கவாட்டில்  செங்குத்தான மலைவிளிம்பு இறங்கியது. விதவிதமாக அரிக்கபப்ட்ட சாக்லேட் நிறமான பாறைகள். பாறை இடுக்குகளில் பெரெணி போன்ற கூம்பிலைச்செடிகள் நிறைய நின்றன.

ஆசிகந்தராஜா   மழைக்காடுகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார்.   மையநிலத்தில் அனேகமாக மழைக்காடுகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். இம்மாதிரி மலையிடுக்குகளில் உருவாகும் சிறிய பகுதிகளை மழைக்காடுகள் என்று ஒரு மங்கலவழக்குக்காகவே சொல்கிறோம். கெ.எ·ப்.சிவின் பெரும்பாலான பழைக்காடுகள் நியூகினியா தீவுகளிலும் நியூசிலாந்திலும்தான் உள்ளன

ஆனால் ஒருகாலத்தில்  மழைக்காடுகள் இருந்திருக்கின்றன. வெள்ளையர் குடியேறும்போது மழைக்காடுகளும் மழையும் அதிகம். வெள்ளையர் விவசாயத்தை விட லாபகரமான தொழிலாக மேய்ச்சலை நினைத்தார்கள். காரணம் அதற்கு ஆள் அதிகம் தேவை இல்லை. ஆஸ்திரேலியாவின் மழைக்காடுகள் எல்லாமே அவர்களால் தீவைத்து அழிக்கபப்ட்டு புல்வெளிகளாக ஆக்கபப்ட்டன. பின்னர் மழை குறைந்து புதிய மழைக்காடுகள் உருவாக முடியாத நிலை வந்தது.

இன்று பிரேஸில்போன்ற நாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் மழைக்காடுகளை அழித்து இறைச்சிக்கன்றுகளை வளர்க்கும் உயர்திறன் உற்பத்தி மேய்ச்சல்நிலங்களை உருவாக்குகின்றன. இந்தியாவிலும் தொண்ணூறுகளில் ஒரிஸா, மத்தியபிரதேசம், கர்நாடகம் போன்ற இடங்களில் அவ்வ்வாறு மேய்ச்சல்நிலங்களை உருவாக்க அவை முன்வந்தன. அரசு சார்ந்த ஆதரவு வழக்கம் போல தீவிரம். ‘வேளாண்மை நிபுணர்கள்’ அது மிக நல்ல வழிமுறை என்றும் ஒரு தீங்கும் ஏற்படாது என்றும் ஆலோசனைகள் சொன்னார்கள். அந்நியச்செலாவணி வந்து குவியும் என்றார்கள். எப்போதும் எதற்கும் விலைபோகும் நிபுணர்களே இந்தியாவின் சாபம்.

ஆனால் சூழலியலாளர் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். மேய்ச்சல்நிலங்களை ஒன்றுக்கும் உதவாத பாலையாக ஆக்கிவிட்டு அந்நிறுவனங்கள் சென்றுவிடும். மேய்ச்சல்வெளியானது ஒரு பெரும் காடு அளவுக்கே நீரை கோருவதாகும். ஆனால் காட்டைப்போல பல்லுயிர்பெருக்கத்தை தக்கவைப்பதோ அல்லது மழைபெய்வதை உருவாக்குவதோ அல்ல. மேலும் இந்தியாவில் புல்வெளி நிலங்களில்தான் இந்தியாவில் அதிகம் உண்ணப்படும் சோளம் கம்பு போன்ற தானியங்கள் விளைகின்றன. வட இந்தியாவில் மகேந்திரசிங் டிகாயத் கர்நாடகத்தில் நஞ்சுண்டசாமி போன்ற விவசாயிகளின் தலைவர்களின் எதிர்ப்பால் அத்திட்டம் நிறைவேறவில்லை.  

கீழே மழைக்காடுகள் வழியாக நடந்து செல்வதற்கு ஒரு பாதை உருவாக்கியிருந்தார்கள். நாங்கள் செல்லும்போது உண்மையிலேயே மழை சொட்டிக்கொண்டிருந்தது. மழைக்காடுகளுக்குரிய சில தனித்தன்மைகள் அங்குமிருந்தன. தரைமுழுக்க அடர்ந்த புதர்களும்  சருகுகளும் உடைந்து விழுந்த கிளைகளும் மூடியிருந்தன. மட்கும்  ஈர இலைகளின் வாசமே மழைக்காட்டின் வாசம். ஆனால் எங்களூரில் தரையை காலால் விலக்கிப்பார்த்தால் நூற்றுக்கணக்கான பூச்சிபுழுக்களைக் காணமுடியும். மழைக்காட்டின் தரை என்பது ஒரு மாபெரும் குடல் என்பார்கள்.  ஆகவே புதர்களுக்குள் பறவைகளும் செறிந்திருக்கும். அங்கே அதிக பறவைகளைக் காணமுடியவில்லை. தரையில் அதிகமாகத் தென்படும் மக்பீ அனேகமாக கண்ணிலேயே படவில்லை. ஆனால் ரேவன் தென்பட்டது.

காடு வழியாக நடந்து செல்லும் வழியில் அக்காலத்தில் நிலக்கரி எடுக்கப்பட்ட குகை ஒன்றை அபப்டியே வைத்திருக்கிறார்கள். நிலக்கரியுடன் தங்கமும் கிடைத்திருக்கிறது. மண்ணுக்குள் முயல்வளை போல செல்லும் சுரங்கவழியை அமைத்து அதனூடாகச் சென்று நிலக்கரியை வெட்டியிருக்கிறார்கள்– முழுக்க முழுக்க கையாலேயே அந்த உழைப்பு நிகழ்ந்தது. பல இடங்களில் இடுப்பளவு நீரில் நின்று வேலைசெய்ய வேண்டும். எங்கும் நீர் ஊறிச் சொட்டிக்கொண்டே இருந்தது. காற்று புகுவதற்கு சில இடங்களில் வெளியே திறக்கும் சாளரக்குகைகளை வெட்டியிருந்தார்கள். உள்ளே விளக்குகளை அமைத்து அந்த வேலையைச்செய்யும் தொழிலாளர்களை சிலைகளாகச்செய்து வைத்து சாளரம் வழியாகப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.

சென்ற நூற்ராண்டின் உழைப்புக்கு ஈடிணையே இல்லை. அந்தக்காலத்தில் சுரங்கங்களில் பார·பின் விளக்குகளை உபயோகிப்பார்கள். அவை மற்ற பந்தவிளக்குகளைப்போல புகை கக்காது, ஆனால் ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளும். சர் ஹம்ப்ரி டேவி என்பவர்தான் முதன்முதலில் சுரங்கத்துக்கான விளக்கை கண்டுபிடித்தார் என்பார்கள். ஆனால் அந்தக் கண்டுபிடிப்பெல்லாம் அந்த மலைக்குகை வரை வந்து சேர்ந்திருக்கும் என்று தோன்றவில்லை.

சிறுவயதில் எருமை ஒன்றுக்கு புட்டத்துக்காயத்தில் புழு வந்து கம்பவுண்டர் சிகிழ்ச்சை செய்தபோது நான் உடனிருந்தேன். தேனடைபோல காயத்தில் புழுக்கள். அதை வெட்டி எடுத்தபின் உள்ளே புழுக்கள் துளைத்து சென்றிருந்ததை தோண்டினார். நம்பமுடியாத ஆழம் வரைச் சென்ற புழு தங்குவதற்கான இடங்களை செதுக்கிக் கொண்டிருந்தது.  சலம் வெளியேற வழி அமைத்திருந்தது. அந்த அளவு தொழில்நுட்பம். அதன் உடலே தோண்டுவதற்கான கடப்பாரை போல இருந்தது. ஒவ்வொரு கணமும் தோண்டுவதுபோல அதன் உடலும் உயிரும் நெளிந்தன. இயற்கைப்பெரும்சக்தி அதற்கு போட்ட கட்டளை அது! அதைபோல மனிதன் அந்த மலையை தோண்டிச்சென்றிருப்பதாகப் பட்டது.

மழைக்காடு வழியாகநடந்துசென்று ஒரு ரயில்பாதையை அடைந்தோம். செங்குத்தாக ஏறக்கூடிய தூக்கு ரயில் அது. அதிலும் கூட்டமே இல்லை. எங்கள் பக்கவாட்டில் அரித்து சிதிலரூபம் கொண்ட செங்குத்தான மலை எழுந்துவந்தது. மலைவிளிம்பை ஒட்டியே அமைந்திருந்த ராட்சத படிக்கட்டு என்னும் காட்டுநடைபாதை அழகாக தெரிந்தது. திரும்பிவந்தபோது அங்கே ஐங்கரன் இருந்தார்.

காரில் திரும்பும்பொது சரியான போக்குவரத்துச்சிக்கலில் மாட்டினோம். ஆகவே பக்கவாட்டில் திரும்பி மலைப்பாதைவழியாக இறங்கி இன்னொரு சாலையில் சென்றோம். நெடுன்ந்தூரம் வரை தெரியும் பாதை இறங்கிச்செல்வதைப் பார்க்க அழகாக இருந்தது. தார்ச்சாலை ஆறுபோல ஓடும், அங்கே அருவியாகக் கொட்டுவது போல பட்டது.

 

 

திரும்பிவரும் வழியில் கெ.எ·ப்.சி [கெண்டக்கி ·ப்ரைடு சிக்கன்] மெக்டொனால்ட் இரு கடைகளையும் தேடிக்கொண்டே வந்தோம்அவருக்கு கெ.எ·ப்.சி கடையின் கோழிரொட்டி ரொம்பவே பிடிக்கும் என்றார். நான் பெங்களூரில் கெ.எ·ப்.சி கடை தொடங்கப்பட்ட போது உருவான கிளர்ச்சி குறித்து சொன்னேன். முதலில் அதை விவசாயிகள் எதிர்த்தார்கள். சிறுவணிகர்களும் எதிர்த்தார்கள். அரசு அதில் அஜினோமோட்டோ [எம்.எஸ்.ஜி]   இருப்பதாக அறிக்கை வெளியிடதும் பொதுமக்கலும் எதிர்த்தார்கள். நஞ்சுண்டசாமி தலைமையில் விவசாயிகள் கடைகளை தாக்கினார்கள்

ஆனால் பின்னர் கெ.எ·ப்.சி கடைகள் பெங்களூரில் வந்தன. ஆனால் அவை எதுவுமே பெரிய அளவில் பரவவில்லை. ^ ”இந்தியாவிலே கெ.எ·ப்.சி பரவறது கஷ்டம்….அது நூறு கிலோமீட்டருக்கு ஒரு தடவை சுவை மாறுபடும் நாடு.  கெ.எ·ப்.சி உலகமெங்கும் ஒரே சுவையை உருவாக்க நினைக்கிறது என்றார். எதிர்ப்பாளர்களின் வாதங்களை நான் சொன்னேன். பெருமுதலீடுள்ள கெ.எ·ப்.சி போன்ற அமைப்புகள் சிறிய வணிகங்களை நசுக்கி அழிக்கும் உச்சகட்ட விளம்பரம் மூலம் நம் உணவுப்பழக்கத்தை மாற்றிவிடும். நம்மை அவர்களின் சுவைக்கு ஆளாக்கிவிடுவார்கள்.

ஆனால் என் நோக்கில் இந்திய உணவுகளை அளிக்கும் பெருநிறுவனங்கள் வருவது நல்லது. இந்று எந்தவகையான ஒழுங்கும் நேர்மையும் இல்லாத தொழிலாக  இருப்பது ஓட்டல்தான். இந்திய உணவகங்கள் போல சுத்தமில்லாத தரமில்லாத உணவை வழங்கும் உணவகங்களை எங்குமே காண முடியாது. உதாரணம், நாகர்கோயில் சென்னை சாலையோர உணவகங்கள்.  அசுத்தத்தின் உச்சம் அந்த விடுதிகள். சிறுந்நீரும் மலமும் குவிந்த சூழல். நாய்கள் படுத்திருக்கும் சமையல் கொட்டகை. அங்கே பணியாற்றிய சுகாதார அலுவலர் என் வாசகர். நாய்கள் காகங்கள் கழுதைகளை எல்லாம் சமைப்பார்கள் என்றார். வருடக்கணக்காக சமையல் பாத்திரங்களைக் கழுவ மாட்டார்கள். எந்த சடமும் அவர்களை தொடாது. பெரும்பாலும் சாதிச்சங்க பாதுகாப்புள்ளவர்கள்.

கெ.எ·ப்.சி போன்ற இந்திய உணவுநிறுவனங்கள் வந்து நுகர்வோருக்கு பல வாய்ப்புகள் வழங்கப்படுமென்றால் மட்டுமே இந்த மொத்தக்குத்தகையை தகர்த்து தரத்தை நிலைநாட்ட முடியும் என நினைக்கிறேன். கெ.எ·ப்.சியை ஏன் அஞ்சவேண்டும்? இந்திய உணவின்மூலம் கெ.எ·ப்.சியை அஞ்சவைக்கலாம் என்றுதான் படுகிறது. அமெரிக்காவில் கெண்டக்கி பகுதியில் லூயிஸ்வில்லில் தொடங்கப்பட்ட கடை தான் கெ.எ·ப்.சி. கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ் 1952ல் அதை தொடங்கினார். அது இன்று ஓர் உலக நிறுவனம்

அதைப்போன்ற பெரிய உணவுநிறுவனங்கள் இந்தியாவில் உருவாக வேண்டிய காலம் நெருங்கிவிட்டிருக்கிறது. ஏனென்றால் இன்று இந்தியா மிகவேகமாக வணிகமயமாகிக்கொண்டிருக்கிறது. பயணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்தியத்தொழில்துறை சார்ந்தவர்களுக்கு பயணங்களில் உணவு என்பது மிகமிகச் சிக்கலானதாக இருப்பதை காணலாம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவை உண்பதென்பது அபாயகரமானது. செல்லுமிடங்களில் நம்பகமான உணவகங்களை விசாரிப்பது, என்ன சாப்பிடலாமென தெரிந்துகொண்டுசெல்வது போன்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. சீரான நம்பகமான உணவு சாதாரணமாகக் கிடைத்தாகவேண்டும். இந்திய நிறுவனங்கள் உருவாகாவிட்டால் கெ.எ·ப்.சி மெக்டொனால்ட் போன்றவர்களின் பர்கருக்கு நாம் பழகித்தான் ஆகவேண்டும்.

அன்றுமாலை நாங்கள் ரேய்ச்சல் வீட்டுக்குச் சாப்பிடச்சென்றோம். ரேய்மண்ட் செல்வராஜ் எங்களூர்க்காரர். குளச்சல் அருகே பொழிக்கரை. அப்பா பெயர் ரேஎமண்ட். அவர் கிறித்தவ நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியா சென்று அங்கே இதழாளராக ஆனவர்.அவரது மனைவி ஜப்பான்காரர். அவர் முந்தியநாள் என்ன உணவு சாப்பிடுகிறேன் என்று கேட்டிருந்தார். ஜப்பானிய உணவு என்று நான் சொன்னேன்.

செல்வராஜின் மனைவி எங்களை சிரித்துக்கொண்டே வரவேற்றார். சிரித்துக்கொண்டே இருக்கும் முகம் அவருக்கு. அவரது மகன் பெயர் தமிழ். அதை ஜப்பானிய மொழியில் தமிறோ என்று சொல்கிறார்கள். அதற்கு ஜப்பானிய மொழியில் என்ன பொருள் என்று கேட்டேன். ஜப்பனிய சித்திர எழுத்து முறையில் சொல்லுக்கு நிலையான பொருள் இல்லை என்றார் அவர். அதை எப்படி எழுதுகிறோம் என்பதை வைத்துத்தான் பொருள் வருகிறது. ஒரே சொல்லை ஜப்பானில் பலவகையில் எழுதலாமாம்.

அங்கே ஜப்பானிய உணவு பரிமாறப்பட்டது. முதலில் குச்சியில் கோர்த்து சுடப்பட்ட இறால். அதன் பின்னர் சுஷி. சுஷி ஒரு ஜப்பானிய சிறப்புணவு. சில நறுமணப்பொருட்களை சேர்த்து செய்யப்பட்ட அரிசி உருளையுடன் பச்சை மீனை தகடுகளாக வெட்டி சுருட்டிச் செய்யப்பட்டது.  அருண்மொழி ”பச்சைமீனா அய்யோ வேண்டாம்” என்று சொல்லிவிட்டாள். எனக்கும் தயக்கம்தான். ஆனால் பார்ப்போமே என்றும் பட்டது.

 

செல்வராஜ் சாப்ஸ்டிக்கால் சாப்பிடும்படிச் சொன்னார். நான் ”அய்யய்யோ!” என்றேன். ” ரொம்ப எளிது” என்று அவர் மனைவி அதை பிடிக்கச் சொல்லிக்கொடுத்தார். உண்மையிலேயே எளிது. ஸ்பூனைவிட  வசதியானது. நான் அந்த உணவை முழுக்க சாப்ஸ்டிக்கால் சாப்பிட்டேன். சாப்ஸ்டிக் வாங்க்கிகொண்டுவந்து அஜிதனுக்கும் சைதன்யாவுக்கும்கூட கற்றுக்கொடுத்து அவர்களும் எளிதாக சாப்பிடார்கள்.

என் நண்பரும் தேர்ந்த இலக்கிய வாசகருமான பெரா. பெர்னாட் சந்திரா அவர்கள் [ தொழில்முறையில் அவருக்கும் இலக்கியத்துக்கும் தொடர்பில்லை . அவர் வணிகவியல்] சிலமுறை எனக்கு மீன் கொண்டுவந்து தந்திருக்கிறார். ஒருமுறை கணவாய் மீனை கொண்டுவந்தார். அருண்மொழி அது விலுக் விலுக் என்று இருக்குமே என்றபோது அதை சமைப்பதைப்பற்றியும் சொன்னார். அதை வேகச்செய்யக்கூடாது. கொதித்ததுமே எடுத்துவிடவேண்டும் என்றார். அப்படியே செய்தபோது மிகச்சிறப்பாக இருந்தது. அப்போது பெர்னாட் சந்திரா ஜப்பானில் கணவாயை பச்சையாக சாப்பிடுகிறார்கள் என்றார். ஆச்சரியமாக இருந்தது

ஆனால் சுஷியில் இரு பச்சை மீன்கள்  இருந்தன. சிவப்பாக இருந்தது சூரை. அல்லது டியூனா. சூரைமீன் நல்ல சிவப்பு. ரோஜாநிறம். அதனாலேயே இங்கே சிலபேர் சாப்பிட மாட்டார்கள். ரத்தமாக இருக்கிறது என. இன்னொரு மீன் கணவாய். அது வெண்ணையின் நிறம். இரண்டையும் அழகாக அடுக்கி பெரிய பூ போல செய்து தட்டில் பரிமாறினார்.  இந்த சுஷி ஒவ்வொன்றும் நீள்வட்ட வடிவில் இருந்தது. அதுவே சுஷியின் பிரபலமான வடிவம். சீன ஜப்பானிய உணவின் சிறப்பே பலவகையான சாஸ்கள் [தொடுரசம்?]. அவற்றில் சில கடுமையான காரம் கொண்டவை. ஆந்திரகளே அலறும் அளவுக்கு.

மீன்சுருளை அப்படியே சாப்ஸ்டிக்கால் தூக்கி வாயில்போட்டு சாப்பிட்டேன். முதலில் சூரை. நெள்நெளுவென இருந்தது. ஆச்சரியமான விஷயம் வேகவைத்த மீனைவிட அது மென்மை என்பதுதான். வித்தியாசமான சுவையும் இருந்தது. ‘அந்தகரண விருத்தி’ முடிந்து ததாகரண விருத்தி ஆரம்பித்ததும் சுவையாகவே உணர்ந்தேன். அடுத்து கணவாய். கணவாய்மீன் மிகமிக சுவையாகவே இருந்தது. மென்மையான வெண்ணைபோன்ற புரோட்டீன் சுவை. கணவாய்மீனை வேறு எவ்வகையில் சாப்ப்பிட்டாலும் அந்தச் சுவை வராது.

சுஷிக்கு அதற்கான அரிசி உண்டு. அதை சாப்ஸ்டிக்கல் எடுத்து சாப்பிடலாம். ஒட்டிக்கொண்டிருக்கும். நான் அதை எடுத்துச் சாப்பிட்டபோது அடுத்து என்னால் ஜப்பானிய வாள் கடானாவை எடுத்துச் சுழற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை அடைந்தேன். சுஷி முன்பெல்லாம் ஊறுகாய்போட்டு வைக்கப்பட மீனுடன் சமைக்கப்பட்டிருந்தது. காரணம் பச்சை மீன் என்றால் கொஞ்சம்கூட கெடக்கூடாது. செல்வராஜின் மனைவி அதை தெளிவாகவே சொன்னார், மீன் மிகமிக புதிதாக இருக்கவேண்டும் என. சுஷிக்கு என மீனும் அரிசியும் விற்கும் கடைகள் உள்ளன. அங்கே வாங்க வேண்டும் என.

சாப்பிடுவிட்டு விடைபெற்றுக் கிளம்பினோம். ஓர் ஆச்சரியம் என்னவென்றால் பெரும்பாலான தமிழர் வீட்டுக் குழந்தைகளைப்போல அல்லாமல் தமிறோ நன்றாகவே தமிழைப் புரிந்துகொள்கிறார் என்பது. பார்ப்பதற்கு குட்டி சமுராய் மாதிரி தோற்றம். ஜப்பானியர்களுக்கு சீனர்களைவிட பெரிய கண்கள். பெரிய முகம். சமுராய் உண்மையிலேயே  ஜப்பானியச் சண்டைக்கலை கற்றுக்கொள்கிறார். கூடவே மிருதங்கமும்! கையில் ஒரு வளர்ப்புப்பிராணி வைத்திருந்தார். வெள்ளெலி போன்ற வெண்ணிறமான கீரி. அது அவர் மேல் சுற்றிச் சுற்றி பரபரப்பாக இருந்தது.

நள்ளிரவில் விடைபெற்று ஆசி கந்தராஜா வீட்டுக்குக் கிளம்பினோம். செல்வராஜ் அவரே வண்டியை ஓட்டி கொண்டுவந்து எங்களை விட்டார்.

முந்தைய கட்டுரைமீண்டும் கமலா, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறிவியல் மனம்,அமெரிக்கா:கடிதங்கள்