ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்

அன்பின் ஜெ..

சில ஆண்டுகளுக்கு முன்னால், விஜி, ஓப்ரா வின்ஃப்ரேயின் தொலைக் காட்சி நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார். ஓப்ரா, சிறுவயதில் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டு, பின் சமூக தொடர் ஒன்றைத் துவங்கி மிகப் பிரபலமான ஒருவர். பல எபிஸோட்கள் மிகவும் நெகிழ வைத்தவை என்று சொல்வார்.. கேலியாக, நான் அவரை ‘ஒப்பாரி வின்ஃப்ரே என்று சொல்வேன்.

அதிகம் பார்த்ததில்லை.

ஆனால், சென்ற வாரம் “சத்யமேவ ஜெயதே” என்னும் அமீர் கானின் தொடர் பார்த்தேன். மிகவும் பாதித்து விட்டது.

பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பில் அந்த 1.30 மணி ஆவணம், பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பை நன்றாக ஆராய்ந்து, அதன் காரணங்களை, அது பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி, பாதிக்கப் பட்டவர்களுடன் உரையாடி, அது சம்பந்தமாக மேலே செய்ய வேண்டிய காரியங்களைக் குறிப்பிட்டு நேயர்களையும் அதில் ஈடுபட அழைத்து – இது போன்ற ஒரு முழுமையான தொடர் கண்டு மிக நாட்களாயிற்று.

மிக முக்கியமாக, ராஜஸ்தானில், sting operation மூலம் வெளிக் கொணரப்பட்ட, பெண் சிசுக் கொலைக்கு உடன் போகும் மருத்துவர்களை வெளிக் கொணர்ந்த பத்திரிகையாளர்களுடனான பேட்டி. ஒரு சமூக சாதனையாளர்களாகக் கொண்டாடப் பட வேண்டிய அவர்கள், பல்வேறு கோர்ட்களில் அலைக்கழிக்கப் படும் அவலத்தையும் சுட்டிக் காட்டி, ராஜஸ்தான் அரசுக்கு, அவ்வளவும் கேஸ்களையும் ஒரு கோர்ட்டுக்கு மாற்றக் கேட்கும் ஒரு மனுவுக்கு ஆதரவு திரட்டினார். இது ஒரு மிக முக்கியமான ஒரு செயல்பாடு. சும்மா போன போக்கில் நம் நாட்டின் பிரச்சினைகளைப் பற்றி வெறும் உணர்ச்சிகரமாகப் பேசி விட்டுப் போய்விடாமல், அதை மாற்ற ஒரு துரும்பை எடுத்துப் போடும் ஒரு மிக முக்கியமான முயற்சி.

இவ்வாரம் சிறு வயதில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப் படுபவர்களைப் பற்றி.

மிகவும் துணிச்சலாக ஒரு இள வயது பெண்ணும், ஆணும் முன் வந்து தாங்கள் பாதிக்கப் பட்ட கொடுமையைக் கூறினார்கள். இந்தியப் பொதுவெளிக்கு இது மிகவும் புதிது.

இதன் பல பரிமானங்களையும் வழக்கம் போல் ஆராய்ந்து, மன நல மருத்துவர்கள், குழந்தைகளுக்கு உதவும் 1098 child help line போன்றவர்களுடன் பேசி, – இது பற்றிய ஒரு சட்டம் கூட இல்லாத கொடுமையையும் சுட்டிக் காட்டினார்.

சிறு குழந்தைகளுடன் ஒரு சின்ன வொர்க்‌ஷாப் நடத்தினார். பாலியல் அத்துமீறல்கள் என்பதை எப்படிக் குழந்தைகள் உணர்ந்து கொள்வது என்பது பற்றி.

வழக்கம் போல, ஒரு மனு – பாராளுமன்ற மேலவையில் ஒரு இளம் பருவ பாலியல் தடுப்புச் சட்டம் இன்னும் நிறைவேறாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, அதை நிறைவேற்றக் கோரும் ஒரு மனு.

எஸ்.எம்.எஸ்கள் மூலம் ஆதரவு திரட்டி, அந்த எஸ்.எம்.எஸ்களின் கட்டனத்துக்கு ஈடான ஒரு தொகையைத் திரட்டி. child help line நிறுவனத்துக்கு வழங்கும் ஒரு திட்டத்தையும் வைத்திருக்கின்றார். அதற்கு, ரிலையன்ஸ் ஃபௌவுண்டேஷனின் துணையையும் வைத்திருக்கிறார்.

மிக மிகத் துணிச்சலான, நேர்மையான முயற்சி. தன் புகழை ஒரு சமூகக் காரியத்துக்குப் பயன்படுத்தும் அமீர் பாராட்டப் படவேண்டியவர். ஒரே சமயத்தில், தூர்தர்ஷன், ஸ்டார் மற்றும் பல்வேறு மொழித் தொலைக்காட்சிகளிலும் வெளியாக ஒப்பந்தங்கள் என்று மிக புத்திசாலித்தனமாகவும் செயல் பட்டிருக்கிறார்.

அண்ணா ஹசாரேயின் போராட்டத்துக்குப் பின் அடுத்த மிக முக்கியமான சமூகச் செயல்பாடு இது. ஈஸ்வர் அல்லா தேரே நாம் நாவலில், ஆதி சொல்வார், ‘காந்திய வழி அருகம்புல் போல.. கோடையில் காய்ந்தது போல் இருந்தாலும், ஒரு நாள் மழைக்கு மீண்டும் முளைத்தெழுந்துவிடும்’ என்று. எவ்வளவு உண்மை?

அன்புடன்

பாலா

சார்,

இன்று காலை நாங்களும் அமீர்கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியைப் பார்த்தோம். இன்னொரு விவாத நிகழ்ச்சி என்று நினைத்த எங்களுக்கு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் ஆச்சரியம் தந்தது. முதலில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான குழந்தைகளைப் பற்றிய புள்ளி விவரம், அதைப் பற்றி மேலும் அதிக விவரங்கள், பிறகு அதனால் பாதிக்கப்பட்ட இருவரின் பேட்டி, ஒரு பொது ஒரு மனநல மருத்துவரின் விளக்கங்கள், அதன்பின் Child Helpline-ஐச் சேர்ந்த ஒருவரோடு அவரது அனுபவம் குறித்து சிறிது நேரம் பேச்சு, குழந்தைகளுடன் அவர்களுக்கு பாலியல் அத்துமீறல்கள் குறித்த அறிமுகம் என்று 1:30 மணி நேரத்தில் மிக நன்றாகத் தொகுக்கப் பட்டிருந்தது.

இன்றைய நிகழ்ச்சியில் மிகவும் யோசிக்க வைத்த விஷயம் குழந்தைகளை நம்பாத பெற்றோர்கள்தான். ரத்தம் வழியும் குதத்தைக் காண்பித்தும் நிறைய மாம்பழம் சாப்பிட்டதால் வந்த பிரச்சினை என்று தன் மகனைச் சமாதானப்படுத்திய அன்னையை என்ன சொல்வது? பின்னர் அவரே இந்நிகழ்ச்சியில், ‘குழந்தைகள் சொல்வதைக் கவனியுங்கள், நம்புங்கள். இதுபோன்ற விஷயங்களில் பெரியவர்கள் சொல்வதை நம்பாதீர்கள்’ என்றார்.

மிகவும் தைரியமாக தங்களுக்கு நிகழ்ந்த மோசமான சம்பவங்களை இதுபோன்ற பொது நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தமிழ் மொழிபெயர்ப்பு கொடுமையாக இருந்தது. சற்று நேரத்தில் பொறுக்க முடியாமல் ஹிந்தியிலேயே (ஆங்கில சப்-டைட்டில்களுடன்) பார்க்கத் தொடங்கினோம்.

இதுபோன்ற விஷயங்கள் தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ நிகழாததாலேயே அவற்றைப் பற்றி எந்த அறிவும், கவலையுமற்ற மனிதர்களை இந்நிகழ்ச்சி கண்டிப்பாகக் கொஞ்சமாவது யோசிக்கவைக்கும் என்று நினைக்கிறேன்.

– ஆனந்த் உன்னத்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் – ஒருகடிதம்
அடுத்த கட்டுரைநாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்