சீனு – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

கடலூர் சீனு பற்றிய உங்கள் கட்டுரை (அன்புள்ள ஜெயமோகன்-ஒரு நூல்) வாசித்தேன். ஊட்டி 2010 சந்திப்பில் அவரை சந்தித்திருந்தேன். அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசிப் பழகவில்லை. ஆனால் அவரை கவனித்தபடியே இருந்தேன். அவர் உடல் மொழி, அவர் கேட்ட அபூர்வமான கேள்விகள்… பெரும்பாலும் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் அபூர்வமாக ஏதாவது சொல்வார். அது முக்கியமானதாக இருக்கும். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உங்களுடன் நெருங்கியும் நெருங்காமலும் இருந்தது இன்னொரு கவனமேற்படுத்திய விஷயம்.

ஓர் எழுத்தாளருக்கு வாசகர் கடிதங்களெழுதி அது எழுத்தாளராலே நூலாவதை நான் இதுவரை கண்டதில்லை. அபூர்வமான விஷயம்.

ஒரு நல்ல வாசகருக்கும், எழுத்தாளருக்கும் என் வந்தனங்கள்.

அன்புடன்,
சேதுபதி

அன்புள்ள சேது,

கடலூர் சீனு அபூர்வமாகப் பேசுபவர். ஆனால் தான் ஒரு சிறந்த வாசகர் என்ற தன்னம்பிக்கையும் முக்கியமான அவதானிப்புகளை மட்டுமே முன்வைக்கும் கூர்மையும் கொண்டவர். அவரது கடிதங்கள் எனக்கு என்னை அணுக்கமாகக் காட்டுபவையாக இருந்தன. ஆம் நூல் வடிவம் பெறுவது அபூர்வம்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைவாழ்த்துகள்
அடுத்த கட்டுரைபூவிடைப்படுதல் 2