பிறழ்வெழுத்து

Marquis de Sade

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

பாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி இருக்கிறது.

சமீபத்தில் “டிரான்ஸ்க்ரேசிவ் பிக்சன்” என்ற சொற்றொடரைப் படிக்க நேர்ந்தது. தமிழில் இத்தகைய படைப்புகள் வந்துள்ளனவா? இத்தகைய படைப்புகள் ஏதேனும் சமூக நன்மையை    அளிக்கவல்லனவா? அல்லது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு உத்தியாகவே இத்தகைய நாவல்கள் எழுதப்படுகின்றனவா?

உங்களின் கருத்தைக் கூறுங்களேன்?

நன்றி
கணேஷ்
நியூ டெல்லி

மைக்கேல் சில்வர்பிளாட்

அன்புள்ள கணேஷ்,

எந்த வகையான எழுத்தும் இயல்பாக உருவாகி வருமென்றால் அதற்கான இன்றியமையாமை அச்சமூகத்தில் உள்ளது என்பதே அர்த்தம். ஆகவே அது தேவையில்லை என்று எவரும் சொல்லமுடியாது. இலக்கியம் என்பது ஒருவகையில் ஒரு சமூகம் கனவுகாண்பது போல, அச்சத்தில் உளறுவது போல, பைத்தியத்தில் பிதற்றுவதுபோல .அது தேவையா என்பதை ஒட்டி அது உருவாவதில்லை. அது ஒரு வெளிப்பாடு.

பிறழ்வெழுத்து [ Transgressive fiction ] என்ற சொல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவான ஒரு சில எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது. விமர்சகர் மைக்கேல் சில்வர்பிளாட் அச்சொல்லை உருவாக்கினார் என்கிறார்கள். பல்வேறு அக நெருக்கடிகளால் மனப்பிளவுண்டு சமூக நெறிகள் பொது நம்பிக்கைகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் பிறழ்ந்து போன நிலையில் எழுதப்படும் எழுத்து இது. கட்டற்ற பாலியல், குற்றகரமான அறமீறல்கள் என அனைத்து வகைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கியது. ஒரு வகையில் நோய்க்கூறானது.

இலக்கியத்தில் இவ்வகையான ஒரு கூறு எப்போதுமே இருந்துகொண்டிருப்பதைக் காணலாம். பழைய காலகட்டத்திலேயே அக்காலத்தைய பொது எல்லைகளை மீறிய நூல்கள் இருந்துவந்துள்ளன. ஓர் உதாரணம் என்றால் தமிழில் உள்ள கூளப்பநாயக்கன் காதல்,விறலி விடுதூது போன்ற நூல்களைச் சொல்லலாம்.  வசைக்கவிஞரான ஆண்டான் கவிராயர் போன்றவர்கள் இன்னும் ஒரு படி கீழே.

உரைநடை இலக்கியம் உருவானபோது யதார்த்தவாத எழுத்தின் ஒரு கூறாக இந்த அம்சம் இருந்துகொண்டிருந்தது. அதை அந்தந்தக் காலகட்டத்து மரபுவாதிகள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டிருக்கிறார்கள். தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாயின. ஒழுக்கவாதியான தல்ஸ்தோய் எழுதிய ‘இருட்டின் ஆற்றல்’ என்ற நாடகம் பிறழ்வுத்தன்மை கொண்டது என்று சொல்லப்பட்டது. எமிலி ஜோலா, மாப்பசான், டி.எச்.லாரன்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்களின் எழுத்துக்கள் பிறழ்வுகள் கொண்டவை என்று குற்றம்சாட்டப்பட்டன.

சில ஆசிரியர்கள் அவர்கள் எழுத்தில் உள்ள பிறழ்வுத்தன்மையாலேயே இலக்கிய அடையாளம் பெற்றனர். உதாரணம் மார்கி து சேத் [Marquis de Sade] இவரது ஒரு நூல் காதலின் வேதனை என்ற பேரில் தமிழினி வெளியிட்டாக வந்துள்ளது. வன்முறை,காமம் ஆகியவற்றின் சித்தரிப்பில் மானுட இருளை காட்டியவர் என்று அவர் கருதப்படுகிறார். கொடூரத்தில் மகிழும் உளநிலை இவர் பெயராலேயே சேடிசம் என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ச்சொல்லாகச் கூறப்படும் மசோக்கிஸம் என்பது ஆஸ்திரிய எழுத்தாளர் மசோக் [Leopold Ritter von Sacher-Masoch] பெயரால் அப்படி அழைக்கப்படுகிறது. ஆனால் மசோக் பிறழ்வெழுத்தாளராக எண்ணப்படுவதில்லை. ஏனென்றால் தன்னைத்தானே வதைத்து மகிழ்பவன் எந்த சமூக எல்லையையும் கடப்பதில்லை.

லாக்லாஸ்

சில நூல்கள் பிறழ்வுத்தன்மையால் மட்டுமே கவனிக்கப்பட்டவை. உதாரணம் பியரி லாக்லாஸ் [ Pierre Ambroise François Choderlos de Laclos] எழுதிய Dangerous Liaisons என்ற நாவல். தீமையில் திளைக்கும் தம்பதியினரைப் பற்றிய கதை இது. அவர்கள் காமத்தில் மட்டும் இன்பம் கண்டடையவில்லை, அதைவிட கூடுதலான இன்பத்தை துரோகத்திலும் ஏமாற்றுவதிலும் கண்டடைகிறார்கள். இதன் திரை வடிவத்தின் தமிழாக்கம் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.

அதன் பின் நவீனத்துவ காலகட்டத்தில் சர்ரியலிச எழுத்துக்களில் பெரிதும் மனப்பிறழ்வுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதை ஒட்டி உருவான குரூர அரங்கு போன்ற மேடைக்கலைகள் அந்தோனின் ஆர்ட்டாட் [Antonin artaud] போன்ற கலைஞர்களை உருவாக்கின. நவீனத்துவத்தின் ஒரு முகம் தனிமனிதனின் அகப்பிறழ்வை எழுத முயன்றது. அதற்காக நனவோடை உத்தி போன்றவை உருவாக்கிக்கொள்ளப்பட்டன.

அந்தோனின் ஆர்ட்டாட்

ஐரோப்பாவின் பின்நவீனத்துவ காலகட்டத்தில் பிறழ்வு என்பது ஒரு களியாட்டநிலையாக, அர்த்தங்களில் இருந்துகூட விடுபட்ட மொழியின் வெளிப்பாடாக, உன்மத்தமாகக் கருதப்பட்டது. அத்தகைய ஆக்கங்கள் பல உருவாயின.

விரிவான ஒரு பட்டியலைப் போடலாம். தமிழில் கிடைப்பனவற்றை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். நான் சொல்ல வருவது இது ஒரு புதிய விஷயமல்ல என்றும் எல்லாக் காலகட்டத்திலும் இலக்கியத்தின் ஒரு அம்சமாக இது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது என்றும்தான். இப்போது இந்தப் பெயர் அளிக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்

இதை வழக்கமான பாலியல் எழுத்தாக பார்ப்பது வாசகர்களின் வழக்கம். ஆனால் வழக்கமான பாலியல் எழுத்துக்கும் இதற்குமான வேறுபாடு என விமர்சகர்கள் குறிப்பிடுவது இது முழுமையாகவே சமூக நெறிகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மனப்பிறழ்வு நிலைக்கு சமீபத்தில் நின்றுகொண்டிருக்கிறது என்பதை மட்டுமே.

அழகியல் ரீதியாக இவ்வகை எழுத்து ஒருவகை தட்டையான சித்தரிப்பைக் கொண்டிருக்கும். வர்ணனைகளோ விவரிப்புகளோ நுட்பங்களோ இல்லாத தன்மை அதற்கு இருக்கும். காரணம் அது நேரடியாகப் பேச விரும்புகிறது. ஒரு புலம்பலாக, அலறலாக, வசைபாடலாக தன்னை நிறுத்திக்கொள்ள முயல்கிறது

இவ்வகை எழுத்தில் காமத்துக்கு நிகராகவே வன்முறையும் அருவருப்பும் முக்கியமாக இடம்பெறுகின்றன. காமம், வன்முறை, அருவருப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை என்பது ஒருபக்கம். இம்மூன்றிலும்தான் நாம் எல்லைகளை வகுத்துக்கொண்டு, ஒவ்வாமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். பிறழ்வு என்பது அவற்றை கடந்துசெல்வதுதான்.

இந்தவகை எழுத்துக்கள் உருவாக்கும் அதிர்ச்சி மதிப்பு மற்றும் சிலசமயம் சட்டநடவடிக்கைகள் காரணமாக உடனடியான கவனமும் புகழும் இவற்றுக்குக் கிடைக்கின்றன. இளைய வாசகர்கள் நடுவே ஒரு சிறப்புக்கவனம் இவற்றுக்குக் கிடைக்கிறது. ஆகவே சட்டென்று ஒரு மோஸ்தராக ஆகி அதேபோலப் பலர் எழுத ஆரம்பிக்கிறார்கள். அல்லது செயற்கையான பாலியல் சுரண்டல் எழுத்துக்கு இந்த லேபிலை ஒட்டிக்கொள்கிறார்கள். பிறழ்வெழுத்து மெய்யான பிறழ்வின் உண்மைத்தன்மையாலேயே தன் பெறுமதியை அடைகிறது.

எந்தவகையில் இது முக்கியமானது என்றால் இது சமூக ஆழ்மனத்தின் அதிகம் பார்க்கப்படாத சில பக்கங்களை வெளிக்கொணர்கிறது என்பதனால்தான். இலக்கியம் மனித ஆழ்மனதை வெளிப்படுத்துவதற்கான, அறிவதற்கான முயற்சி என்பதனால் இதற்கான இடம் உருவாகி வருகிறது. மனித ஆழத்தின் ஒரு தளம் இது என்பதனால் தவிர்க்கவே முடியாதது.

இலக்கியம் இருவகைகளில் மனிதனின் சாராம்சமென்ன என்று ஆராய்கிறது. ஒன்று, நிகர்நிலையில் இயல்பான தளத்தில். இன்னொன்று, மீறலில் அல்லது உச்சநிலையில். இயல்பான நிலையில் மனிதனின் பெறுமதியை ஆராய்வதே யதார்த்தவாதத்தின் வழிமுறை. உச்சங்களில் வைத்து ஆராய்வது இரண்டு அழகியல்களின் வழிமுறை. கற்பனாவாதம் [ரொமாண்டிசிஸம்] மனிதப்பெறுமதியை ஓர் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது. அதன் நேர் மறு எல்லைக்கு கொண்டுசென்று பிறழ்வெழுத்து மனிதப்பெறுமதியை ஆராய்கிறது

இந்தியக் கலை பிறழ்வு அம்சத்தை கலையின் ஒரு தவிர்க்கமுடியாத கூறாகவே கண்டது. நம் சிற்பக்கலையில் எல்லாவகையான பிறழ்வுகளுக்கும் ஓர் உதாரணமாவது உண்டு.சம்ஸ்க்ருத இலக்கியத்தில் அது மிகுதி என்கிறார்கள். பீபத்ஸம் என்னும் ரசம் பெரும்பாலும் பிறழ்வுத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது.

செவ்வியல் எழுத்து என்பது இந்த எல்லாவகைகளையும் உள்ளடக்கியது. அதில் யதார்த்தப்பரப்புக்குமேல் நேர்நிலை உச்சமும் எதிர்நிலை உச்சமும் இருக்கும். கம்பராமாயணத்தில் அறம்சார் மானுட எழுச்சியின் உச்சம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு அதன் போர்ச்சித்தரிப்புகளில் கொடூரமும் பிறழ்வும் உள்ளது. மேலும் சிறந்த உதாரணம் கலிங்கத்துப்பரணி. காமத்தின் உச்சநிலையும் கொடூரம் அருவருப்பு ஆகியவற்றின் உச்சநிலையும் அதில் பிணைந்தே வருகின்றன

கரிச்சான்குஞ்சு

நவீனத் தமிழிலக்கியத்தில் எல்லா வகைமைக்கும் புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கவேண்டும். பிறழ்வெழுத்துக்கும் உதாரணமான கதை புதுமைப்பித்தனில் உள்ளது. கணவனின் சடலம் அருகே அவன் நண்பனுடன் உறவுகொள்ளும் பெண்ணின் கதை.[விபரீத ஆசை]அது ஏன் அப்போது எழுதப்பட்டது, எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதெல்லாமே ஒரு பெரிய மர்மங்கள்தான். அதன்பின் ஓரளவுக்கு கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்தமானுடம்’.

நனவோடை எழுத்து, தன்னோட்ட எழுத்து, மனப்பிறழ்வைப் பதிவுசெய்யும் எழுத்து போன்றவற்றை நான் இந்த வகையில் சேர்க்கவில்லை. லா.ச.ரா, நகுலன், மு.தளையசிங்கம்,சம்பத் போன்றவர்கள் அவ்வகையில் எழுதியிருக்கிறார்கள்.

அடித்தள மக்களின் வாழ்க்கையின் பிறழ்வுகளை எழுதுவது என்பது பிறழ்வெழுத்து அல்ல. ஜி.நாகராஜன் எழுதியது யதார்த்தவாத நோக்கில் எழுதப்பட்ட பிறழ்ந்த வாழ்க்கை. ஜெயகாந்தன் அதை எழுதியிருக்கிறார். என்னுடைய ‘ஏழாம் உலகம்’ அதில் குறிப்பிடத்தக்க ஆக்கம். லக்ஷ்மி சரவணக்குமாரின் உப்புநாய்கள் கருத்தில்கொள்ளப்படவேண்டிய படைப்பு.

இவையெல்லாமே பிறழ்ந்த வாழ்வின் வெளியை ஒருங்கிணைவுள்ள புனைவினூடாக காட்டுபவை. அப்புனைவுவெளியினூடாக நாம் ஒருங்கிணைவுள்ள, விழுமியங்கள் கொண்ட ஒரு படைப்பாளியைச் சென்றடைய முடியும். ஒரு பார்வையை கண்டடையமுடியும்.அந்த வகை எழுத்தை யதார்த்தவாதத்தின் ஒரு பகுதி என்றே சொல்லமுடியும். எமிலி ஜோலாவோ, அலக்ஸாண்டர் குப்ரினோ எழுதியவை அவற்றுக்கு முன்னுதாரணங்கள்

பிறழ்வெழுத்து வழியாக நாம் அந்த ஆசிரியனை நோக்கிச் செல்லமுடியாது. அந்த ஆசிரியனின் பார்வையை அடையமுடியாது. அந்தப்புனைவைக்கொண்டு நாம் ஒரு புனைவாகவே அந்த ஆசிரியனை உருவாக்கிக்கொள்ள முடியும். அவனும் அதை உருவாக்கி உருவாக்கி அழிப்பான். சேத் அப்படிப்பட்ட ஒரு புனைவுதான்.

தமிழில் இன்று பிறழ்வெழுத்தின் முதன்மை உதாரணம் சாரு நிவேதிதாதான். இந்திய அளவில் நான் வாசித்தவரை இன்னொரு படைப்பாளியை தயக்கமில்லாமல் பிறழ்வெழுத்தை உருவாக்கியவர் என்று சொல்லமுடிவதில்லை. சாரு நிவேதிதாவின்  எழுத்தில் விழுமியங்கள் மட்டுமல்ல புனைவின் ஒழுங்குகள் கூட சிதறிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து எந்த உண்மையையும் நாம் கண்டடைய முடிவதில்லை. விழுந்துடைந்த கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல அதை நாம் பார்க்கிறோம். எந்த ஒரு நியதியைக்கொண்டு பார்த்தாலும் அவருடைய எழுத்து வெளியே கிடக்கிறது.

சாரு நிவேதிதா புனைவை மட்டுமல்ல அதை எழுதும் தன்னையும் புனைந்துகொண்டே இருக்கிறார். உண்மை பொய் என்ற இருமைக்கு முற்றிலும் அப்பாற்பட்டவர் அவர். அவரை தொடர்ந்து அத்தகைய எழுத்தை உருவாக்குபவர்கள் தமிழில் எவரும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இன்றைய காட்சி ஊடகம் குறிப்பாக இணையம் பிறழ்வின் எல்லா எல்லைகளுக்கும் சென்று விட்டபின் இவ்வகை எழுத்துக்களின் உண்மையான மதிப்பு என்ன என்பது ஐயமாகவே இருக்கிறது. நாளை இவை ஏதேனும் அதிர்ச்சிகளை உருவாக்குமா? மொழியில், கூறுமுறையில், படிமங்களில் இவை புதியநகர்வுகளை உருவாக்கினால் மட்டுமே இவை இலக்கியமதிப்புப் பெறுகின்றன.

மனித அகநிலை அது எவ்வகையில் வெளிப்பட்டாலும், என்ன விளைவை உருவாக்கினாலும், அது உண்மையானதும் தீவிரமானதுமாக இருக்கும்பட்சத்தில் இலக்கியத்துக்கு முக்கியமானதே. இலக்கியத்துக்கு எந்த நிபந்தனைகளும் இருக்கமுடியாது.

இலட்சியவாதம் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த எழுத்துக்கு என்ன முக்கியத்துவம் இருக்கமுடியும்? அது நேர்மையான தீவிரமான அக எழுச்சியின் விளைவா என்பது மட்டுமே ஒரே செல்லுபடியாகக்கூடிய கேள்வி. அதே கேள்விதான் இந்த வகை எழுத்துக்களுக்கும்.

ஆனால் முழுமையான பிறழ்வெழுத்து தமிழில் மட்டுமல்ல பிற இந்திய மொழிகளிலும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்திய மொழிகளில் முதன்மையான பிறழ்வெழுதாளரான சாரு நிவேதிதா கூட தன்னை தொடர்ச்சியாக மறுவரையறை செய்து முன்வைக்கவேண்டியிருக்கிறது.சாருவின் ஆன்மிக, அரசியல்,அறவியல் தோற்றமளித்தல்கள் மார்கி து சேதுக்கோ, புக்கோஸ்வ்ஸ்கிக்கோ தேவைப்பட்டதில்லை. இது நம்முடைய வாசிப்புச்சூழல், நமது கூட்டு உளவியலின் அழுத்தத்தின் விளைவு

ஐரோப்பாவும் அமெரிக்காவும் அவர்கள் இன்று தங்களுடையெதனக் கருதும் ஜனநாயக, மதசார்பற்ற, தாராளவாத நாகரீகத்தையும் சமூக அமைப்பையும் உருவாக்கிக்கொண்டு இருநூறாண்டுகளாகின்றன. அவற்றின் முதிர்ச்சிக்காலகட்டத்தில்தான் இந்த பிறழ்வெழுத்துக்கான இடம் உருவாகிறது. நவீன நாகரீகத்துக்கு எதிரான குரல் இந்த அளவு தீவிரமாக எழுகிறது.

நாம் கடந்த முக்கால்நூற்றாண்டாகத்தான் நம் நவீன நாகரீகத்தைக் கட்டி எழுப்ப முயன்றுகொண்டிருக்கிறோம்.நாம் காணும் பிறழ்வுகள் முழுக்க நம் இறந்த காலத்திலேயே உள்ளன. அவற்றை நோக்கிய கொந்தளிப்பும் எதிர்ப்புமே நம் இலக்கியத்தில் பெரும்பகுதி. ஆகவே இங்கே இலட்சியவாதமே இலக்கியத்தின் முகமாக உள்ளது.

இருப்பின் சுமையை விட, பாலியல் கட்டுப்பாட்டை விட பக்கத்து வீட்டான் பசியால் இறப்பதும் அண்டை வீட்டார் மாறி மாறிக் கழுத்தை அறுத்துக்கொள்வதும்தான் நமக்கு முக்கியமாகப் படுகிறது. நமது பிரச்சினை நமது மரபைச் சலித்துச்சலித்து எடுத்து அதைக்கொண்டு நம்முடைய நிகழ்காலத்தை உருவாக்கிக்கொள்வதில் உள்ளது.  நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய பிரச்சினையைத்தான் நம் எழுத்தாளர்கள் எழுதமுடியும், எழுதுகிறார்கள். அதுவே மிக இயல்பானது, வரலாற்று நியாயம் உள்ளது. பிறழ்வெழுத்து அதன் பெரும்பரப்பில் ஒரு சிறு பகுதியாக உள்ளது, அது என்றுமிருக்கும்.

ஜெ

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Nov 18, 2011

முந்தைய கட்டுரைஆகுதி-[சிறுகதை] மயிலன் சின்னப்பன்
அடுத்த கட்டுரைவெண்முரசு – குமரிக்கண்டம்