இரவு நாவல் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

தங்கள் நலம் அறிய ஆவல் சார்

தங்களின் இரவு நாவலை சமீபத்தில் வாசித்தேன். கதை முழுக்க ஒரு புதுமையான புனைவில் நிகழ்கிறது. முழுக்க இரவில் வாழும் மனிதர்கள், சரவணின் அதே ஆச்சர்யத்துடன் அந்த வாழ்க்கை அறிமுக மாகிறது .மிகுதியான படிமங்கள் இந்த இரவுக்கு.

உள்ளே தீபத்தை வைத்து மூடப்பட்ட கருவறைக் கதவின் இடுக்கு போல ஆகியது வான்கோடு

சூரியன் மறையும் அந்தி வானத்த இனி எப்பொழுது பார்த்தாலும் உருகி ஒளிரும் படிமமாக (நீங்க சொன்னது தான் சார் ) இதுவே என்னில்; இதற்கு மேல் வேண்டாம் என்று சொல்லும்படியாக
விரிந்த இமைகளுடன் அதையே நினைத்து கொண்டு இருக்கும்போது இன்னும் ஓன்று சட்டென்று, “ஒரே ஒரு அரிக்கேன் சுடராக ஒரு படகு நீர்மேல் நகர்ந்து சென்றது.மீண்டுமொரு படகு, இரு சிவந்த புள்ளிகள் சட்டென்று காயல் கண் ஒன்று என்னை நோக்குவதாக உணர்தேன்”

இரவு வாழ்கையை மேற்கொள்ள ஆரம்பித்ததற்கான காரணத்தை மேனன், தற்செயலான ஒரு இரவின் மரநாய் ஒன்றின் கண்கள் தந்த ஒளியிலிருந்து சொல்லிக்கொண்டு போவார், “அது விட்டு விட்டு போன கிளையாகவும் அது போய் உக்கார்ந்த கிளையாகவும் மனசு ஆடி கொண்டு இருந்தது”பிரமாதம் சார் அந்த காட்சி உறைந்து இந்த படிமம் மேலேழுகிறது .. ,

சரவணின் முதல் ஆசிரம அனுபவத்தை பதைப்பின் ஊடாக சொல்லும்போது போது “ஒரு முழு கச்சேரி முடிந்த பின் உரையிடாமல் வைத்திருக்கும் தம்புரா போன்று என் அகத்தை உணர்ந்தேன். “மகத்தான அறியமுடியாமை யானை ”

இது எல்லாம் மின்னல் வரிகள் என்று எனக்கு படவில்லை, கதாபாத்திரத்தின் சில அனுபவங்களை அவர்களை விட இன்னும் அதிகமாக ஒரு வாசகனால் நுண்ணுணர்வோடு எடுத்துக் கொண்டு போக முடியும் என்பதற்கான படிமங்கள்.

நானும் இந்தக் கதையை முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக இரவில் தான் படித்தேன். வழக்கமாக சூழலை துளி துளியாக காட்சிபடுத்தி கொண்டே செல்லும் உங்கள் சரளமான நடை, மேலும் ஒரு காதல் முழுக்க இரவிலேயே நடப்பது . அழகா நிதானமான அனுபவங்கள் ஆக மேலும் மேலும் செல்வது,

“அவளது கழுத்து மென்மை மென்மை என்ற சொற்களாக இருந்தது”,

“என் இமைகளால் விசிறி விசிறி அவளை மேலும் சுடர செய்கிறேன் போல “,


“அவள் பார்வையை கண்டபின் நான் சென்று அவளருகே அமர்ந்தேன் (வயசுக்கோளாற இன்னும் கிளறி விடும் பார்வை அது),

 

“என் கைகளுகாகவே வடிவமைக்கப்பட்டது போல இருந்தது அவள் உடம்பு, அவள் உடலில் சுய நினைவு திரும்புவதை என் உடலாலயே உணர்ந்தேன்.

– இத எப்படி எழுத்தில கொண்டு வந்தீங்க சார் ….! ரொம்ப உச்சம் அந்த போட்டில் நடக்கிற சம்பவம், சில கணங்களில் ரொம்ப அப்பட்டமான பேச்சுகளை பின்னால் சரவணனே தாமசிடம் சொல்லும் வரிகள்” அவள் உடலுக்குள் குருதியும் சளியும் எல்லாம் இருக்கின்றன, ஆனால் நான் அவளை பார்க்கும் போதெல்லாம் அவையும் கூட தெரிந்தால் என்ன செய்வது..? ” ; இந்த வரிகள் வருவதற்கு முன்பே இந்த வரிகளை பற்றி மங்கலாக நினைத்தேன், அட சரியா சொல்லிடாப்லயே சரவணன் என்று .

இரவு வாழ்கைக்கு பயந்து சரவணன் உணரும் “பெருச்சாளியின் கண்கள்” மிக துல்லியமான குறியீடு . அந்த வாழ்கைக்கு மேலும் உள் செல்ல பெரச்சன் உடனான கடலில் செல்லும் படகு அனுபவமும் அதே . ஆனால் அதை விட பெருச்சாளியின் கண்கள் உச்சமான குறியீடு என்று நினைக்கிறேன். பிரசண்டனந்தா வின் உரையாடல் பகுதிகள் சரவணன் சொல்வது மாதிரி தெளிவான தர்க்கங்கள், சாக்த மதம் என்ற ஒரு மதம் இருந்ததா ..? ஒரு அசாதாரண மனிதராக தான் தோன்றியது ஆரம்பத்தில் . ஒரு சராசரி மாதிரி செக்ஸ் உள்ளுணர்வுக்குள் அவ்வளவு பிரச்சனையா இருந்திருக்கு அவருக்கும் ; இவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள், ஆனால் அசாதாரமானவர்களா காட்டி கொண்டது தான் பிரச்சனையே என்று மேனன் குறிப்பிடுவார் இறுதியில் கதையில் வரும் யார பத்தியும் தயக்கமான அபிப்ராயம் தான் எனக்கு

சரவணன் முடிவு எடுக்கும் தடுமாற்றத்தை விவரித்துப் போகையில் ” கோழியின் அடித்தாடை போல எனக்குள் ஒரு துடிப்பு ஓடிகொண்டிருந்தது” அந்த அனுபவம் தொடர்ச்சியான உணர்வு நிலையை கொடுக்கும் வரிகள் இவை.

திடு திப்பென்று ஒரு முப்பது பக்கம் காண்போன மாதிரி உன்னிக்கிருஷ்ணன் எழுப்பி சரவனிடம் கமலா கொலையானதைப்பற்றி பதறி சொல்வது, எல்லாவற்றிற்கும் பெரிய ப்ரேக் போட்டது மாதிரி
ஒரு சின்ன நெருடல்,போலீஸ் பற்றி முன் இமேஜ் இல்லை என்றாலும் இதில் வரும் சதானந்தனும் கிட்டத்தட்ட நைட் லைப் ஆட்களில் ஒருவர் மாதிரியே பேசுவதாகப் படுகிறது,கொச்சினை விட்டு சென்னை வரை காரிலேயே பயணம் செய்ய சரவணன் விரும்புவது சரியான உளவியல் நிகழ்வு

சரவணன் இரவு வாழ்க்கைக்கே முற்றிலும் திரும்புவது “ஒரு தடவ உச்ச கணங்களை கண்டு விட்டால் மனம் மேலும் மேலும் உச்ச கணத்த நோக்கியே சொல்லும், “இங்கு சாதாரண தருணம் என்பதே கிடையாது,,ஒவ்வொரு காலடியும் ஒரு சவால் ’’ –

நிறைய கணங்கள், மிகுந்த நன்றி திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

Regards
dineshnallasivam

அன்புள்ள தினேஷ்

நன்றி

இரவு வர்ணனைகளின் நாவல். அந்த நிலக்காட்சிக்குள் மானசீகமாகச் செல்லாமலிருந்தால் அதை உணர முடியாது. இரவில் இருக்கும் அனுபவத்தை சொல்லால் அள்ளும் முயற்சிதான் அது

சாக்தம் சக்தி வழிபாட்டை கொண்ட மதம். ஆறு இந்துமதப்பிரிவுகளில் மூன்றாவது
ஜெ

முந்தைய கட்டுரைசமணம்-கடிதம்
அடுத்த கட்டுரைபத்துநூல்கள்