நான்காவது கொலை!!! -2

வசந்த் மிரண்டு விட்டான் என்று தெரிந்தது. “யாருங்க அது, மரியோ மிராண்டோவோட தம்பிங்களா?” என்றான்.

துப்பறியும் சாம்பு தன் கார்ட்டூன் மூக்குடன் மந்தமாக புன்னகை செய்து “பாத்ரூம் எங்கே?” என்று நேராகப் போய் பீரோ கதவைத் திறந்து, மீண்டும் மந்தஹாசம் புரிந்து தடுமாற, இன்ஸ்பெக்டர் ஃபல்குனன் பிள்ளா “யார் சார் இது? உங்க குமாஸ்தாவா?”

“இல்லீங்க. இவரு பெரிய. ….பாஸ் எப்பிடி சொல்றது?”

கூட்டத்திலிருந்து எண்ணை படிந்த பேசரியும், இறுக இழுத்துக் கட்டிய கூந்தலில் மல்லிகையும், மடிசாருமாக ஒரு அம்மாள் இடையில் குழந்தையுடன் வழி பிளந்துவந்து “அய்யோ, ஏன்னா இங்கேல்லாம் வரேள்? உங்களுக்குத்தான் ரத்தத்த பாத்தாலே அல்பசங்கை வந்துடுமே. ஏன் தடுமாறரேள், பாத்ரூமுக்கு அந்தப்பக்கமா போங்கோ. வாசனை வரது பாத்தேளா, அத வச்சு கண்டுபிடிச்சா என்ன?” என்றாள்.

“பாஸ் இவங்கதான் வேம்பு மாமியா? அங்கமுத்து மாதிரி இருக்காங்க”

“பின்ன, மும்தாஜ் ரேஞ்சுக்கு நினைச்சிருந்தியா?”

சாம்பு “இவ்ளோ கம்மியா வாசனயெ வச்சிருந்தா எப்பிடி கண்டுபிடிக்கிறதாம்?” என்று முணுமுணுத்தபடி உரிய கதவை கண்டுபிடித்துவிட்டார்.

“அப்பா நேக்கும் மூச்சா வரது” என்றது சுந்து.

புறந்தலையை கிட்டத்தட்ட ஷேவ் செய்திருந்த ஒரு மோட்டா ஆசாமி பழங்கால லாங்கிளாத் சட்டையும் கரிய ஷூக்களும் விடைப்புமாக ஆறரையடி உயரத்தில் வந்து இன்ஸ்பெக்டருக்கு ஒரு சல்யூட அடித்து “நான் இன்ஸ்பெக்டர் கோபாலன். மதறாஸ் மாகாண போலீஸ்” என்றார்.

ஃபல்குனன் பிள்ள அரண்டுபோய் அண்ணாந்து பார்த்து, “பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். நீங்க எந்த தொடர்கதையிலே…” என்று தடுமாற கோபாலன் “உள்ளே போயிருக்கிறது தான் சாட்சாத் துப்பறியும் சாம்பு. ரொம்ப பெரிய மூளை. பாக்கத்தான் வாழைப்பழம் மாதிரி இருப்பார்”

“மாமா நேக்கு வாழைப்பழம்?”

கோபாலன் கணேஷிடம் “அவர் எப்ப என்ன செய்றார் என்ன நினைக்கிறார்னு நாம நம்ம புத்திய வச்சுண்டு கண்டுபிடிக்க முடியாது சார். பெரிய மேதை. படிச்சிருப்பேளே, ஆனந்தவிகடன்லே தொடரா வந்துட்டிருந்தார். லண்டன்லே இ.வி.நாக்ஸ் கதையிலே இருக்கப்பட்டவர் இவ்ரோட ஷட்டகர்… நீங்க என்ன பண்றேள்?”

“லாயர். எம் பேரு கணேஷ். இது என் அசிஸ்டெண்ட் வசந்த்”

“ஹைக்கோர்ட்டில இருக்கேளா?”

“இல்லீங்க நாங்களும் தொடர்கதை, சீரியல்னு வரோம்…”

“வாழப்பழம் தரமாட்டியா, அப்பன்னா நீ கோங்கு”

“நீங்கதான் கொலயை முதல் முதலா பாத்ததா?” என்றார் கோபாலன்.

“இல்லீங்க நாங்க பாத்தது பொணத்த” வசந்த் அவர் சட்டையை பார்த்து “அப்பல்லாம் எவ்வளவு பொத்தான் பாருங்க. எஸ்.வி.சகஸ்ரநாமம் மாதிரி இருக்கீங்கசார்” என்று வியந்தான்.

“அப்ப கொலையை யாரு பாத்தது?” என்றார் கோபாலன் பெருமாள்செட்டி பென்சிலை எடுத்து.

“தெரியலீங்க”

“கோங்கு! கோங்கு! வவ்வவ்வே!”

“என்னப்பா ஒரே குழப்பமா இருக்கு? சரி நீங்க என்ன பாத்தீங்க?”

“இந்தாள் பெயர் ராமசாமி. செல்ஃபோனிலே சொன்னார்” என்றான் கணேஷ்.

“பாஸ் இந்தாளுக்கு செல்ஃபோன்னா புரியுமா? ஆப்செட்டுக்கு முந்தின காலத்து ஆள்….”

“அத கதை எழுதறவன் யோசிச்சுக்குவான், பாருங்க மிஸ்டர் கோபாலன், கொலைன்னு உடனடியா முடிவுக்கு வந்திட வேணாம். எதுக்கும் முழுக்க விசாரியுங்க”

“கொலைதாங்க. தற்கொலைக் கதையிலேயெல்லாம் துப்பறியும் சாம்பு வரதில்லை. அப்படி வந்தாக்கூட கடைசியிலதான் அது தற்கொலையா மாறும்” கோபாலன் பென்சிலை எச்சில் தொட்டு குறிப்புகள் எடுத்தபடி “நீங்க வரச்சே அவருக்கு உசிர் இருந்ததா?”

“பொணம்ங்க” என்றான் வசந்த். “முழுப்பொணம்”

“அத அப்பவே சொல்லிட்டாங்க. உங்க கிட்டே என்ன சொன்னார்?”

“எங்களைப்பத்தி என்னமோ அவசரமா பேசணும்னு சொன்னார்” என்றான் வசந்த்.

“இன்ஸ்பெக்டர் சார், சித்த உள்ள போயி பாக்கிறேளா, இவர் போயி ரொம்ப நாழியாயிடுத்தே, உள்ள எங்கியோ மாட்டிண்டு தவிக்கிறார்னு நெனைக்கிறேன்” என்றாள் வேம்பு.

கோபாலன் போய் பாத்ரூம் வாசலை திறக்க உள்ளே சாம்பு வாஷ் பேசின் அருகே பக்கெட்டை கவிழ்த்துப் போட்டு ஏறி நிற்பது தெரிந்தது. “சாம்பு சார் என்ன பண்றேள்? கண்ணாடியிலே அப்படி சிரமப்பட்டு என்னதான் தேடறேள்?” என்றபடி கோபாலன் ஓடிப்போய் சாம்புவை இறக்கிவிட்டு கண்னாடியைக் கூர்ந்து பார்த்தார்.

“ஹை அப்பா! அப்பா, நானும் மூச்சா வரேன்”

கோபாலன் உள்ளே நுழைந்து கண்ணாடியை கூர்ந்து பார்த்து “அடாடா! அற்புதம்!” என்று சாம்புவை கட்டிக் கொண்டார். “சாம்புசார், எப்படி உங்களுக்கு இந்தக் கோணத்திலே யோசிக்க தோணித்து?”

கணேஷும் இன்ஸ்பெக்டரும் உள்ளே எட்டிப் பார்த்தபோது கோபாலன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஒரு ஸ்டிக்கர் பொட்டை மெல்ல கத்தியால் கிண்டி பெயர்த்து எடுத்துக் கொண்டிருந்தார். “பாத்தேளா சார். இது எவ்வளவு பெரிய ஆதாரம்? நம்ம கண்ணிலே இது படுமா?” என்றபடி அதை ஒரு பிளாஸ்டிக் பையில் பதனமாக வைத்தார்.

“இது சாதாரண ஸ்டிக்கர்பொட்டு தானே” என்றார் ஃபல்குனன் பிள்ளா.

“இல்லை. இங்க கொஞ்சம் லேட்டரல் திங்கிங் பண்ணிப் பாக்கணும். ஸ்டிக்கர் பொட்ட பாத்தா நாம வழக்கமா பொண்ணுன்னு நினைப்போம். ஏன் ஆம்பிளைங்க ஸ்டிக்கர் பொட்டு வைச்சுக்கக் கூடாது?” என்றபடி கணேஷ் அதை கூர்ந்து பார்த்தான்.

“பிரில்லியண்ட் பாஸ். இந்த ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கிற உயரத்த பாத்தா அந்தாளு ஆறரையடிக்குமேலே உயரம். பொட்டு ஒட்டியிருக்கிற விதத்த வச்சு வலது கைக்காரன்னு தெரியுது. கொலைக்குப் பிறகு அவன் கை கழுவியிருக்கான். அதுக்கு இந்த லைபாய் சோப்பை பயன்படுத்தியிருக்கான். இங்க துண்டு இல்லை. அதனாலே அவன் கண்டிப்பா பாண்ட் பாக்கெட்டுக்குள்ள கையை விட்டுத்தான் துடைச்சிருக்கணும்.”

“பரவாயில்லை உனக்கு கூட மூளை வேலை செய்றதுடா….”

“என்ன பாஸ், என்னையே வார்றீங்க. இதெல்லாம் சும்மா. ஒரு ஸ்மிர்னாஃப் ஃபுல் அடிச்சேன்னா அப்டியே லெனின் டிராட்ஸ்கி லைனுக்கு போயிடுவேன். அப்ப இப்ப நாம ஸ்டிக்கர் பொட்டைப்பத்தி விலாவாரியா தேடப் போறோமா? கோவளத்திலே எப்டியும் ஒரு அம்பதாயிரம் தேறும்னு நினைக்கிறேன்…”

கணேஷ் அந்த பாத்ரூமை கூர்ந்து பார்த்து, “கொலைகாரன் இந்த பாத்ரூமிலேதான் இருந்திருக்கான். பின்னாலே ரொம்ப கிட்டத்தில இருந்து சுட்டிருக்கான். தலையணை மாதிரி எதுவோ வச்சு முகத்தை அழுத்திக்கிட்டு சுட்டிருக்கலாம்.”

“அந்த தலையணை எங்கே?” என்றார் கோபாலன். “சாம்பு சார் நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“சாம்பார் தானே?” என்றார் சாம்பு.

“பாஸ் இந்தாளுக்கு காது மந்தம்னு நெனைக்கிறேன்.”

கோபாலன் தீவிரமாக “சாம்பார்? சாம்பார்?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்தார்.

“பாத்ரூமிலே கொலைகாரன் எப்படி வந்தான்? ஒண்ணு இவருக்கு முன்னாடி தெரிஞ்சவனா இருக்கணும். இல்லாட்டி பாத்ரூமுக்குள்ளே முன்னாடியே ஒளிஞ்சிருக்கணும்.”

“பாஸ், நாம சக்கைப்பிரதமன் சேத்து ஒரு கேரளாச் சாப்பாடு அடிச்சாத்தான் மேற்கொண்டு புத்தி வேலை செய்யும்னு நினைக்கிறேன்.”

இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பும்போது வசந்த்

“பாஸ், பேசாம காரே பூரேன்னு கலர்ல பூ போட்ட சட்டை எதுனா போட்டுட்டு தென்னைமர நிழல்ல பங்கியடிக்கிறது உத்தமம்னு படுது. நீங்க என்ன கஜகர்ணம் போட்டாலும் கடசீல சாம்புதான் ஜெயிக்கணும், அதான் கதையோட லாஜிக். அந்தாள் எவனாவது மொட்டையன் மேல முட்டிக்குவான், கடைசி பத்தியில அவன்தான் கொலைகாரன்னு கோபாலன் கண்டுபிடிப்பார். எவ்வளவு பழைய கதை.”

“இல்லடா, இங்க வேற விஷயம் இருக்கு. இந்தக் கதையை எழுதறவன் அதிகமா படிச்ச துப்பறியும் எழுத்தாளர்னா நம்மாளுதான். மத்ததெல்லாம் சும்மா ஞாபகத்திலேருந்து எடுத்து உடறது. அப்ப நமக்கு ஒரு சான்ஸ் இருக்குண்ணு படுது பார்ப்போம்”

“பாஸ் அது என்ன எஸ்பராண்டோ? மூளையப் போட்டு பிராண்டோ பண்ணுது….”

“அது இண்டர்நாஷனல் செயற்கை மொழிடா. டாக்டர் லுட்விக் எல் சேமநேஃப் னு ஒரு போலிஷ் ஃபிசிஷியன் 1887 லே லத்தீன் ஜெர்மன் போலீஷ் எல்லாம் போட்டு செஞ்ச அவியல். இப்ப சில பிரத்யேக சைண்டிஸ்டுகள் மட்டும்தான் அதை பேசறாங்கன்னு நினைக்கிறேன். இந்த அம்மாஞ்சி அதை எங்க கேள்விப்பட்டுதுன்னு தெரியலை”

“ஏன் பாஸ் இதெல்லாம் இங்க எங்க வருது இதிலே?”

“இது துப்பறியறதிலே முதல் பொன்விதிடா. சம்பந்தமிலாம கண்டபடி என்சைக்ளோபீடியால புடிச்ச விஷயங்களை எடுத்து விட்டுட்டிருக்கிறது…”

அவர்கள் படியிறங்கியதும் கோபாலன் சாம்புவிடம் “எனக்கு என்னமோ இவங்க மேலேயும் ஒரு சந்தேகம் இருக்கு. அந்த சின்னவக்கீல் முகரையே சரியில்லை. தஞ்சாவூர் மைனர் மாதிரி ஒரு சிருங்கார சிரிப்பு அவன்கிட்டே இருக்கு பாத்தேளா?”

சாம்பு தலையைச் சொறிந்து “அதானே” என்றார். “என் கையிலே ஒரு புஸ்தகம் வச்சிருந்தேனே, எங்க அது?”

“என்ன புஸ்தகம்?”

“இங்கதான் ரோட்டிலே வாங்கினது. முப்பது நாளிலே எஸ்பராண்டோ கற்பது எப்படின்னு…” வேம்பு தன் அருகே வந்ததும் சாம்பு “என்னடி கிள்றாய்?” என்றார்.

“எதுக்கு பக்கெட்டை கவுத்துபோட்டேள்?”

“அவன்தான் அவ்வளவு உயரமா வச்சிருக்கான், எட்டவேயில்லை. பின்ன எப்படி போறதாம்?”

“அய்யோ ராமாராமா, அது கை முகம் கழுவற பீங்கான்னா.”

“கை கழுவுறதா? அதிலே நான்….”

“அப்பா மூச்சா வரது…”

“கத்தாம வாங்கோ. யாராச்சும் கேட்டா பிடிச்சு ஃபைன் போட்டுடப் போறா. என் தலையெழுத்து. பொண்ணுப்பாக்க குடும்பத்தோட வந்து பக்கத்தாத்து வாசலைத் தட்டினேளே அப்பவே மாங்காமாமி சொன்னா, வேம்பூ இது எங்கியோ ஒதைக்குதேடின்னு”

சாம்பு காற்று வெளியிடை காதலை எண்ணி களித்து, “ஒதைக்குதா? கள்ளி, சொல்லவே இல்லியே” என்று கன்னத்தைக் கிள்ளப்போனார்.

“பேசாம வரீங்களா, அப்படியே கீழே குதிச்சுடுவேன். எனக்கு பைத்தியம்தான் புடிக்கபோறது உங்களோட”

“அப்பா மூச்சா வரது”

சாம்பு கவனமில்லாமல் “வந்தா போயிட்டு அப்புறமா வரச் சொல்லுடா” என்றார்.

“இப்ப என்ன, கோவளம் பாக்கிற உத்தேசம் உண்டா இல்லியா? பத்மனாபசாமி கோயில், மிருகக்காட்சி சாலை ஒண்ணும் இதுவரைக்கும் பார்க்கலை. கொட்டாங்கச்சீல நல்ல அகப்பை செஞ்சு விக்கிறாங்களாம். ரெண்டு டஜன் வாங்கிண்டு வான்னு பக்கத்தாத்திலே சொல்லியனுப்பிச்சாங்க. இங்க அப்டி என்னதான் பாக்கிறாப்ல இருக்கோ. வெள்ளைக்கொரங்கு மாதிரி பொண்ணுகள் வேகா வெயிலிலே ஒலரப் போட்ட கூழ் வடாம் மாதிரி மல்லாந்து படுத்துக்கிட்டு, கண்ராவி….”

“சுந்து எங்கே?”

“எங்க போச்சோ. அது உங்க ரத்தம்தானே? எங்கியாச்சும் வேடிக்கைபாத்து வழிஞ்சுண்டு நிக்கப்போறது. அய்யோ அங்க பாருங்கோ, அசடு வராண்டாவிலேயே போயிட்டுது. ஏண்டா…”

“அப்பாதானெ போன்னு சொன்னா”

“அப்பனுக்குத் தப்பாம இரு. என் பிராணனை வாங்குங்கோ. ஏன்னா அங்க என்ன முழிச்சுண்டு இருக்கேள். வாங்கோ எஸ்கேப் ஆயிடலாம். முன்னாடி இவனாலே குருவாயூர்லே ஐநூறு செலவு, ஞாபகமிருக்கோன்னோ…”

“சாம்பாருக்கும் தலைகாணிக்கும் என்ன சம்பந்தம் மிஸ்டர் சாம்பு?” என்றார் கோபாலன்.

“புஸ்தகம்தான், வண்டியில வச்சு தள்ளிண்டுபோனான். பத்துரூபா சொன்னான்…..”

“அப்பா அங்க பார், சுந்து மூச்சாவெ ரெண்டு வெள்ளைக்கோங்கு மோந்து பாக்குது….”

கோபாலன் முகவாயை தட்டியபடி யோசிக்க, சாம்பு “எஸ்பரான்டோ” என்று சொல்லி பெருமூச்சுவிட்டார்.

“அப்பா வெள்ளைக்கோங்குக்கு வால் உண்டா?”

***

“வெல் வெல் மை டியர் வாட்சன்…” என்றார் ஹோம்ஸ். “லண்டனில் 221,பி. பேக்கர் ஸ்ட்ரீட்டிலிருந்து இந்த இந்திய கோடை வாசஸ்தலத்துக்கு நாம் வந்தது இப்படி ஒரு சிக்கலான கேசில் மாட்டிக் கொள்வதற்காக அல்ல என்று எண்ணுகிறேன்.”

“ஷ்யூர் மிஸ்டர் ஹோம்ஸ்” என்றார் வாட்சன். “ஆனால் நாம் எப்போதுமே துப்பறிந்தபடித்தான் இருந்தாகவேண்டும். ஏனெனில் நீங்கள் ஹோம்ஸ். நான் வாட்சன், இந்த வெயில் தேசத்தில்கூட டார் ஸ்டாக்கர் தொப்பி, கிரேட் கோட், கனத்த பூட்ஸ், புகையும் பைப் எதையுமே நீங்கள் விட்டுவிடவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.”

“கிரேட் ஸ்காட்!” என்று ஹோம்ஸ் அவரது வழக்கப்படி சாதாரணமாக வியந்தார். “உண்மை. நீங்கள் கூட உங்களுக்கு அளிக்கப்பட்ட வேடத்திலேயே இருக்கிறீர்கள். இப்போது இந்த திரவம் எந்தவகையானது என்று எண்ணுகிறீர்கள்?”

வாட்சன் தரையில் சிந்திக்கிடந்த அந்த நீரடையாளத்தை மீண்டும் கூர்ந்து பார்த்து, “சோடியம் குளோரைட் கலந்திருப்பது சுவையில் இருந்து தெரிகிறது. அமிலத்தன்மை சிறிது இருக்கலாம். விஷத் திராவகமாக இருக்க நியாயமில்லை மிஸ்டர் ஹோம்ஸ். காரணம் எறும்புகள் மொய்க்கின்றன.”

“மேலும் நீங்கள் இப்போது உயிருடன் இருக்கிறீர்கள்” என்று ஹோம்ஸ் புகை விட்டார். “மிஸ்டர் வாட்சன் இதை கவனியுங்கள், அது ஒரு மிருகத்தின் சிறுநீர்.”

“அடக்கடவுளே, சரிதான்” என்றார் வாட்சன். “எப்படி கண்டுபிடித்தீர்கள் ஹோம்ஸ்?”

“ஆரம்பப்பாடம் மிஸ்டர் வாட்சன், இந்த வராண்டா இக்கட்டிடத்தின் வடக்கு எல்லை. சில குறிப்பிட்ட வனமிருகங்கள் தங்கள் எல்லையை இவ்வாறு சிறுநீர் மூலம் அடையாளப்படுத்துவதுண்டு.”

“அப்படியானால் இந்த விடுதியில் ஒரு பயங்கர வனமிருகம் உலவுகிறது!” வாட்சன் தொப்பியை சரிசெய்தபடி “இதை என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை!”

“ஆம், அது நம்மிடையே வாழ்கிறது” தீர்க்கதரிசிகளுக்கே உரிய ஆழமான குரலில் ஹோம்ஸ் சொன்னார்.

[தொடரும்]

முந்தைய கட்டுரைசுகாதார அறம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்