‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36

35. வேழமருப்பு

flowerசூதர்குழுவுடன் திரௌபதி விராடபுரியின் பெருங்கோட்டை வாயிலை அடைந்தபோது அந்தி கவியத் தொடங்கியிருந்தது. தொலைவிலேயே சூதர்குழுவின் தலைவர் விகிர்தர் “விரைந்து சென்றால் பெருவாயில் மூடுவதற்குள் நாம் நகருக்குள் நுழைந்துவிட முடியும். அந்திக்குப் பின் அயலவர்களை நகர்நுழைய ஒப்புவதில்லை. நாம் திறந்த வெளியில் தங்க வேண்டியிருக்கும்” என்றார். “நோக்குக, தென்மேற்கில் மின்னுகிறது. இப்பகுதிகளில் தென்மேற்கு முகிலூறினால் மழை உறுதி என்றே பொருள். திறந்த வெளியில் குழந்தைகளுடன் தங்குவதென்பது கடினம்.”

திரௌபதி “கோட்டைமுகப்பில் தங்கும் இடங்கள் இல்லையா?” என்றாள். “உண்டு. பெருவணிகர்களுக்கு நீள்விடுதிகள் அமைந்துள்ளன தொகைக்கொட்டகைளும் உண்டு. இப்பொழுதிற்குள் அங்கே பலர் சென்று இடம் பற்றியிருப்பார்கள். சூதர்களுக்கு தனியாக தங்குமிடங்கள் உண்டு. பலர் கூடாரங்கள் கட்டி தங்குவார்கள்” என்றார் விகிர்தர். “ஆனால் இது வைகாசி மாதம். தொகைச்சந்தை ஒன்று நாளை மறுநாள் கூடவிருக்கிறது. பன்னிரு நாட்கள் அச்சந்தை நீடிக்கும். நகருக்குள் பெருங்கூட்டம் நுழையும். அனைவருக்கும் கூரைகளில் இடமிருக்காது.” முதியவரான சுந்தரர் “அத்துடன் எங்கும் அடுமனைச்சூதர் ஒரு படி தாழ்ந்தவர்கள்தான். மாமன்னர் நளன் கோல்கொண்டு ஆண்ட தொல்நகரியான இந்திரபுரியிலும் அவ்வாறே இருந்திருக்கும்” என்றார். விகிர்தர் “விரைந்து செல்வோம்” என்றார்.

“இன்னும் சற்று விரைவு” என்று அஸ்வகன் கூவினான். வண்டியோட்டி சினத்துடன் திரும்பி நோக்கி “தரையை பார்த்தீர்களல்லவா? புழுதியில் ஆழ்கிறது சகடம். ஒற்றைக்காளை இதுவரை இழுத்து வந்ததே நமது நல்லூழ். இனிமேலும் அதை துரத்தினால் கால் மடித்து விழுந்துவிடக்கூடும் அதன் பின் இந்த சாலையோரத்து மரத்தடியில் இரவை கழிக்க வேண்டியிருக்கும், மழைக்கு வந்து ஒதுங்கும் காட்டு விலங்குகளுடன் சேர்ந்து” என்றான். விகிர்தர் “பூசல் வேண்டாம். முடிந்தவரை விரைந்து செல்வோம்” என்றார்.

ஆனால் அவர்கள் அனைவருமே களைத்திருந்தனர். விரைந்து நடக்க முனைந்தோர் எஞ்சியிருந்த தொலைவை கணக்கிட்டு உள்ளம் சோர்ந்தனர். முதிய பெண்டிர் இடையில் கைவைத்து அவ்வப்போது வானை நோக்கி “தெய்வங்களே” என்று ஏங்கினர். “எவராவது இருவர் விரைந்து முன்னால் சென்று கோட்டைக்கு வெளியே தங்குமிடம் ஒன்றை பிடித்து வைத்துக்கொண்டால் என்ன?” என்று திரௌபதி கேட்டாள். “பிடித்து வைத்துக்கொண்டால் கூட அதை அவர்கள் நமக்கு அளிக்க வேண்டுமென்பதில்லை. படைக்கலமேந்தியவர்களோ இசைக்கலம் ஏந்தியவர்களோ அல்ல நாம். எளியவர். அடுமனைக் கலங்கள் மட்டுமே அறிந்தவர்கள். மானுடரின் பசி தீர்க்கும்போது மட்டுமே நினைவுகூரப்படுபவர்கள்” என்றார் சுந்தரர்.

செல்லச் செல்ல அவர்களின் விரைவு குறைந்து வந்தது. எடை சுமந்த பெண்கள் நின்று “எங்களால் முடியவில்லை. இத்துயருக்கு நாங்கள் மழையிலேயே நின்றுகொள்வோம்” என்றனர். “மழைக்கு நம்மிடம் கூரையென ஏதுமில்லையா?” என்றாள் திரௌபதி. விகிர்தர் அவளை நோக்கி புன்னகைத்து “நாங்கள் நாடோடிகளாக வாழ்பவர்களல்ல. நல்ல அடுமனை ஒன்றை அடைந்தால் அங்கிருந்து தெய்வங்களால் மட்டுமே எங்களை கிளப்ப முடியும். அங்கு மச்சர் நாட்டில் அடுமனைப் பணியாளர்கள் தேவைக்குமேல் மிகுந்துவிட்டனர். வாய் வளரும் குழந்தைகளுடன் அங்கு வாழ முடியாததனால்தான் கிளம்பினோம். அது தோற்ற நாடு. இது வென்ற நாடு. இங்கு நாள்தோறும் மனிதர்கள் பெருகுகிறார்கள். கருவூலம் பெருகுகிறது. அடுமனை கொழிக்கிறது” என்றார்.

சூரியன் கோட்டைச்சுவருக்கு அப்பால் முழுதடங்குவதை தொலைவிலேயே அவர்கள் கண்டனர். “அவ்வட்டம் விளிம்புக்கு கீழே இறங்குவதுதான் கணக்கு. அந்தி முரசொலிக்கத் தொடங்கிவிட்டால் காவல் யானைகள் சகடங்களை இழுக்கத் தொடங்கிவிடும்” என்று விகிர்தர் சொன்னார். “இங்குள்ள அடுமனையை நோக்கி உறுதி செய்வதற்காக சென்றமுறை நான் வந்தேன். அது ஆடி மாதம். தொலைவிலேயே அந்திக்கதிர் இறங்குவதை கண்டேன். முழுஇரவும் மெல்லிய மழையில் நனைந்தபடி மரவுரியை தலையிலிட்டு உடல் குறுக்கி கோட்டை முகமுற்றத்தில் அமர்ந்திருந்தேன். மறுநாள் காலையில் காய்ச்சலில் என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கண்களிலும் வாயிலும் அனல் எழுந்தது. தள்ளாடி நடந்து கோட்டையை அடைந்தால் நோயுடன் உள்ளே செல்ல ஒப்புதல் இல்லை என்றார் காவலர்.”

“கண்ணீருடன் கால்களைத் தொட்டு சென்னிசூடி நான் எளிய அடுமனையாளன் என்று மன்றாடினேன். நோய்கொண்டு நகருக்குள் நுழைய முடியாது என்றனர். நேற்றிரவு இந்த மழையில் அமர்ந்திருந்த நோயென்று சொல்லியும் கேட்கவில்லை. மீண்டும் வந்து முற்றத்திலேயே அமர்ந்திருந்தேன். கோட்டைக்குமேல் கதிரெழுந்தபோது வெயில் என்னுடலை உயிர்கொள்ளச் செய்தது. அருகநெறியைச் சேர்ந்த பெருவணிகர் ஒருவர் கோட்டை முன் அமர்ந்திருப்பவர்களுக்காக ஏழு இடங்களில் அன்னநிலைகளை அமர்த்தியிருந்தார். அங்கு சென்று இன்கூழ் வாங்கி அருந்தினேன். அதன் பின்னரே உடல் எழமுடிந்தது.”

“மீண்டும் சென்று கோட்டை வாயிலை அடைந்தபோது பெருந்திரளாக மக்கள் உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள். எவரையும் கூர்ந்து நோக்க காவலர்களுக்கு பொழுதிடை அமையவில்லை. அவ்வெள்ளத்தால் அள்ளி உள்ளே கொண்டுசெல்லப்பட்டேன்” என்று விகிர்தர் சொன்னார். “இந்நகரம் பெரிது. சிறியவர் எவரையும் பிறர் கூர்ந்து நோக்குவதில்லை. எவரும் நமக்கு இரக்கம் காட்டுவதில்லை. ஆனால் எவரும் நம்மை தேடிவந்து அழிப்பதும் இல்லை. பிறர் அறியாமல் வாழ ஓர் இடம் கிடைத்தால் அதுவே நமது இன்னுலகம்.” சுந்தரர் உரக்க நகைத்தபடி “ஆம், நாமெல்லாம் அடுமனைப் பாத்திரங்களின் மடிப்புக்குள் பற்றியிருக்கும் ஈரப்பாசிபோல. எவரும் பார்க்காதவரை மட்டுமே தழைத்து வளரமுடியும்” என்றார்.

கோட்டைக்குப்பின் சூரியன் இறங்கி மறைந்ததும் அவர்கள் அனைவருமே விரைவழிந்து நின்றுவிட்டனர். “இனி விரைந்து பயனில்லை. காளை சற்று ஓய்வெடுக்கட்டும்” என்றார் மூத்த சூதரான தப்தர். வாயில் இருந்து நுரைக்குழாய் இறங்கி மண்ணில் துளியாகிச் சொட்ட, மூச்சு சீறியபடி தலையை நன்கு தாழ்த்தி, கால்களை அகற்றி வைத்து நின்றது ஒற்றைக்காளை. வண்டிக்குள் இருந்த சிம்ஹி தலையை நீட்டி “காளையை பார்க்கையில் உளம்தாங்க முடியவில்லை. நாங்கள் நடந்தே வருகிறோம். இன்னும் சற்று தொலைவுதானே” என்றாள். “வேண்டியதில்லை. சற்று ஓய்வெடுத்தபின் அது மீண்டும் கிளம்பும்” என்றார் விகிர்தர்.

“இனிமேலும் இவ்வெளிய உயிர்மேல் ஊர எங்களால் இயலாது” என்று சொல்லி அவள் கையூன்றி மெல்ல இறங்கினாள். “அது என்னை இழுத்துச் செல்லும்போது வயிற்றுக்குள் என் குழவியை நான் இழுத்துச் செல்வதுபோல தோன்றியது. சுமை இழுப்பதென்றால் என்னவென்று அதைப்போலவே நானும் அறிவேன்” என்றாள். “நாம் எளிய அடுமனையாளர்கள், அயல்நாட்டவரல்ல என்று சொல்லிப்பார்த்தால் என்ன?” என்று அஸ்வகன் கேட்டான். “நம்மை பார்த்தாலே தெரியும்” என்றார் குடித்தலைவர். “நம்மிடம் எந்த அயல்நாட்டு அடையாளங்களும் இல்லை” என்றான் அவன். “எந்த நாட்டு அடையாளமும் நம்மிடமில்லை. செல்லும் ஊரே நமது ஊர்” என்று சுந்தரர் சொன்னார். “ஆனால் நம்மைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஓவ்வாத ஊரைச் சேர்ந்தவர்களாகவே நம்மை அடையாளப்படுத்துவார்கள். ஏனெனில் நாம் அவர்களுக்கு எதுவும் அளிக்க முடியாத ஏழைகள்.”

“சென்று பார்ப்போம். அங்கிருக்கும் காவலர்களில் எளியோரைப்பார்த்து உளமழியும் ஒருவராவது இருக்கலாம். கருவுற்ற பெண்களையும் குழவிகளையும் முன்னிறுத்துவோம். வெளியே எங்களுக்கு தங்குமிடமில்லை. நகர்நுழைந்தால் அடுமனையை அடைந்து அதன் விளிம்புகளில் எங்காவது அமர்ந்து மழையை தவிர்ப்போம். நாளை எங்கள் கைகளால் அவர்களுக்கு உணவளித்து கடன் தீர்ப்போமென சொல்வோம்” என்றான் அஸ்வகன். “வீண் முயற்சி அது. நமக்காக எந்த நெறிகளும் தடம் பிறழ்வதில்லை” என்றார் விகிர்தர். சுந்தரர் நகைத்து “அது இளமையின் விழைவு. சில இடங்களில் இழிவுபடுத்தப்பட்டு ஓரிரு இடங்களில் தாக்கப்படும்போது எங்கிருக்கிறோம் எந்த அளவு இருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அப்படி புரிந்துகொள்ள வாய்ப்பு கொடுப்போமே” என்றார்.

அவர்கள் மீண்டும் கிளம்பி கோட்டைமுகப்பை அடைந்தபோது காவல்மாடங்கள் அனைத்திலும் மீன்நெய்ப்பந்தங்கள் தழலாடத் தொடங்கிவிட்டிருந்தன. அதன் அருகே நின்றவர்களின் கையிலிருந்த படைக்கலங்கள் தழல்துளிகளை சூடியிருந்தன. எண்ணியது போலவே கோட்டைமுகப்பில் அனைத்து விடுதிகளும் பெருவணிகர்களாலும் அவர்களின் சுமைதூக்கிகளாலும் காவலர்களாலும் நிறைந்திருந்தன. பொதி சுமந்த அத்திரிகளும் கழுதைகளும் வண்டிக்காளைகளும் கட்டுத்தறிகளில் கட்டப்பட்டு கழுத்து மணி ஓசையுடன் கால்மாற்றி நின்று மூச்சு சீறி உலர்புல் மென்றுகொண்டிருந்தன. புரவிகளுக்குமேல் தேன்மெழுகு பூசப்பட்ட ஈச்சம்பாய்களை வயிற்றில் சரடு இழுத்துக் கட்டியிருந்தனர்.

சூதர்குழுத் தலைவர் விகிர்தர் திரௌபதியிடம் “மழை வருமென்று நன்கு அறிந்திருக்கிறார்கள். புரவிகள் நனையாமலிருக்கும்” என்றார். திரௌபதி அதை பார்த்தபின் “இப்படி ஒன்றை இதற்குமுன் பார்த்ததில்லை. வேண்டுமென்றால் இரவில் சென்று ஒன்றிரண்டை எடுத்துவந்து குழந்தைகளையும் பெண்களையும் மட்டும் மழையிலிருந்து காத்துக்கொள்ளலாம்” என்றாள். விகிர்தர் “புரவிகளை நெருங்கவே நம்மால் முடியாது. படைக்கலத்துடன் ஒரு காவல்வீரனாவது விழித்திருப்பான். வேல் நுனியால் முதுகு கிழிபட்டு குருதி வழிந்து இங்கு கிடப்போம்” என்றார். திரௌபதி “எங்கும் எதிலும் அச்சத்தையே காண்கிறீர்கள்” என்றாள். அவர் கோணலான புன்னகையுடன் “என் தந்தை அஞ்சுவதெப்படி என்று எனக்கு கற்பித்தார். அஞ்சத்தெரிந்ததனால்தான் இதுநாள் வரை வாழ்ந்தேன். அச்சத்தை கற்பித்ததனால்தான் என் குடியை இன்று வரை காத்தேன்” என்றார்.

அவர்கள் முற்றத்தில் நின்றிருக்க இளைஞர்கள் இரு திசைக்கும் சென்றபின் திரும்பி வந்து “எங்கும் இடமில்லை, மூத்தவரே. குழந்தைகளும் கருவுற்ற பெண்டிரும் இருக்கிறார்கள் என்றேன். எவரும் எங்கள் சொற்களை செவிகொள்ளவில்லை. ஷத்ரியர் விடுதிகளில் காவலர் குதிரைச்சவுக்குடன் எழுந்து தாக்க வருகிறார்கள். சூதர்கொட்டகைகளில் ஒருவர் இங்கு திறந்தவெளியில் தங்கியிருப்பவர் அனைவருமே உங்களைப் போன்றவர்கள்தான். ஒருநாள் மழை தாங்கமுடியவில்லை என்றால் நீங்கள் எதைத்தான் தாங்குவீர்கள் என்றார்” என்றான் அஸ்வகன்.

சம்பவன் “ஒரு ஷத்ரியர் பதினைந்து நாட்கள் பெருமழையில் திறந்த வெளியில் தங்கி திருவிடத்தில் தாங்கள் போரிட்டதாக சொன்னார். நாம் அத்தகைய இடர்களையோ இறப்பையோ எதிர்கொள்ளவில்லை அல்லவா?” என்றான். சுந்தரர் “என்றோ ஒருநாள் எதிர்கொள்ளப்போகும் இறப்பின் பொருட்டு முந்தைய வாழ்நாள் முழுக்க பிறரது குருதியை உண்டு வாழ தங்களுக்கு உரிமையுண்டென்று நம்புகிறவர்கள் ஷத்ரியர்” என்றார்.

“நாம் சென்று காவலரிடம் கேட்டுப் பார்ப்போம்” என்றான் அஸ்வகன். “காவலனிடமா? நான் வரப்போவதில்லை. வேண்டிய இழிசொற்களையும் சவுக்கடிகளையும் வேல்முனைக்கீறல்களையும் இளமையிலேயே பெற்றுவிட்டேன்” என்றார் விகிர்தர். “நாங்கள் சென்று கேட்கிறோம். நீங்கள் நோயுற்றவர்போல் வண்டிக்குப்பின் நின்றால் போதும்” என்றான் சம்பவன். மிருகி “வேண்டாம். காவலர்கள் எந்த உளநிலையிலிருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது” என்றாள். “தாழ்வில்லை. ஒருமுறை கேட்டுப் பார்ப்போம்” என்று சொல்லி சம்பவனும் அஸ்வகனும் வண்டியோட்டியிடம் “வருக!” என்றனர்.

அவர்கள் கோட்டைமுகப்பை நோக்கி செல்வதை ஆங்காங்கே வெட்டவெளியில் வண்டிகளை அவிழ்த்துவிட்டு பொதிகளை இறக்கி அமர்ந்தும் படுத்தும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தவர்கள் விந்தையாக நோக்கினார்கள். கோட்டையின் முகப்பில் பெருவாயில் மூடியிருக்க திட்டிவாயிலினூடாக காவல்புரவிகள் மட்டும் உள்ளே சென்றன. புரவிவீரர்கள் நன்றாகக் குனிந்து எறும்பு புற்றுக்குள் நுழைவதுபோல் அதை கடந்தனர். அவர்களின் வண்டி காவல்முகப்பில் வந்து நிற்க கோட்டத்திலிருந்து கையில் வேலுடன் வெளியே வந்த காவலன் சினத்தால் சுளித்த முகத்துடன் “யாரது? ஏய் அறிவிலி, கோட்டை மூடியிருப்பது உன் விழிகளுக்கு தெரியவில்லையா? உன் வண்டியுடன் திட்டிவாயிலுக்குள் நுழையப்போகிறாயா, கீழ்பிறப்பே?” என்றான்.

“நாங்கள் அயலூர் சூதர். அடுமனையாளர்” என்றபடி சம்பவன் கைகூப்பி முன்னால் சென்றான். “இங்கு எங்கள் குழந்தைகளுடன் திறந்தவெளியில் தங்கமுடியாது. மழை பெய்யுமென்றால் அவர்கள் நனைந்துவிடுவார்கள். நீர்காக்கும் பாய்கூட எங்களிடமில்லை” என்றான் அஸ்வகன். “எவரையும் அந்திக்குப்பின் உள்ளே விடமுடியாது” என்றபின் காவலன் திரும்பியபோது இயல்பாக விழி சென்றுதொட முகம் உயிர்கொண்டு திரௌபதியை நோக்கி “அவர்கள் யார்?” என்றான். அஸ்வகன் திரும்பி அவளை பார்த்தபின் “அவர்தான் எங்கள் குழுத்தலைவி. அரசஅழைப்பின் பேரில் அரண்மனைக்குச் செல்கிறார். எங்களையும் அழைத்துச்செல்கிறார்” என்றான்.

“அவர்கள் பெயரென்ன?” என்று காவலன் கேட்டான். அஸ்வகன் தயங்காமல் “கிருஷ்ணை…” என்றான். திரௌபதி அவர்களின் உரையாடலை மிக மழுங்கிய சொற்களாகவே கேட்டாள். விழிகூர்ந்து அவர்களின் உதட்டசைவிலிருந்து அவர்கள் பேச்சை ஊகித்தறிய முயன்றாள். அதை உணர்ந்த அஸ்வகன் உதடுகளை சரியாக அசைக்காமலேயே பேசினான். “அவர்கள் வங்க அரசகுடியை சேர்ந்தவர்கள். விராட அரசகுடியின் தனியழைப்பை ஏற்று வந்திருக்கிறார்கள். நாங்கள் நேராக அரண்மனைக்குத்தான் செல்கிறோம். கீசகரை நேரில் சந்திக்கும்படி ஆணை” என்றான்.

காவலன் குழப்பத்துடன் அவளை நோக்கிவிட்டு காவலர்தலைவன் இருந்த சிற்றறையை நோக்கினான். பின்னர் “அவர்களிடம் அரச இலச்சினை ஏதாவது இருக்கிறதா?” என்று உள்ளிருந்து வந்த பிறிதொரு காவலன் கேட்டான். “இல்லை. அவர்களைப் பார்த்தாலே தெரிகிறதல்லவா? சூதர் வடிவிலேயே எங்களுடன் நடந்து வந்திருக்கிறார். பிறர் அறியாமல் நகருக்குள் நுழைந்து அரசரைக் காணும்படி அவருக்கு ஆணை. இதை நான் சொல்வதுகூட அவர்களுக்குத் தெரியாமல்தான்” என்றான் அஸ்வகன்.

முதுகாவலன் ஒருவன் வெளியே வந்து திரௌபதியைப் பார்த்தபின் “கணவனை இழந்தவரா?” என்றான். “கூந்தல் அவிழ்த்திட்டிருக்கிறார்களே?” “ஆம், உடன்கட்டை ஏற மறுத்து நிலம்நீங்கியவர்” என்றான் அஸ்வகன். உள்ளிருந்து ஓர் இளம்காவலன் “கீசகர் அவருக்கு உகந்த பெண்ணை கண்டுவிட்டார்போல. அவர் தோள்களை பாருங்கள். களம் நின்று மற்போரிடவும் அவரால் இயலும்” என்றான். முதுகாவலன் அவனை நோக்கி சீற்றத்துடன் “எவராயினும் அரசகுடியினரைப்பற்றி சொல்லெடுக்கையில் ஒவ்வொரு சொல்லையும் உன் சித்தம் மும்முறை தொட்டுப்பார்த்திருக்க வேண்டும். ஒரு சொல்லின் பொருட்டு கழுவேறியவர்கள் பல்லாயிரம் பேர் இந்நகரில் அலைகிறார்கள்” என்றான். அவன் திகைத்து “நான் நமக்குள் வேடிக்கையாக சொன்னேன்” என்றான்.

அஸ்வகன் சினத்துடன் “ஆம். இச்சொல் எங்கள் தலைவியை இழிவுபடுத்துவது. இதை அவர்களிடம் சொல்லாமலிருப்பது எனக்கு கடமைமீறல்” என்றான். முதுகாவலன் கைநீட்டி “பொறுங்கள், சூதரே! இதை அவர்களிடம் ஏன் சொல்லவேண்டும்? புரிந்துகொள்ளுங்கள், இந்தக் காவல்பணி என்பது திரும்பத் திரும்ப ஒன்றையே செய்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது. நாவால் துழைந்துதான் இச்சலிப்பை போக்க வேண்டியிருக்கிறது. பொறுத்தருள்க!” என்றான். “அரசகுடியினரைப்பற்றி இழிசொல்லை எப்படி அவர் சொல்லலாம்? மேலும் அச்சொல் கீசகர் மீதும் இழிவு சுமத்தியது” என்றான் அஸ்வகன்.

“பொறுத்தருள்க! இதை உங்கள் தலைவி அறியவேண்டியதில்லை. இங்கு எதுவும் நிகழவில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உள்ளே செல்லலாம். கோட்டைவாயிலை சற்று திறந்து வண்டியை உள்ளே விடச்சொல்கிறேன்” என்றபின் முதுகாவலன் எழுந்து உள்ளே சென்று சிறு கயிறொன்றை இழுத்தான். அப்பால் எங்கோ மணியோசை ஒலிக்க சகடங்கள் முனகி எழுந்து பின் அலற கோட்டைவாயில் மெல்ல விலகி திறந்துத் வழிவிட்டது.

அஸ்வகன் ஓடிச்சென்று விகிர்தரிடம் “உள்ளே செல்ல ஒப்புதல் அளித்துவிட்டார்கள். கதவு அகல்கிறது” என்றான். “மெய்யாகவா? இதில் சூழ்ச்சி ஏதும் இல்லையே? இதன் பொருட்டு உள்ளே சென்று நாம் தலைகொடுக்க வேண்டியதில்லை அல்லவா?” என்றார் விகிர்தர். “இல்லை, வாருங்கள் உள்ளே செல்வோம்” என்று அஸ்வகன் சொன்னான்.

திறந்த வாயிலினூடாக அவர்கள் உள்ளே செல்லும்போது திரௌபதி திரும்பி காவல்மாடத்தை பார்த்தாள். காவலர்கள் அனைவரும் தலைவணங்கினார்கள். அவள் திரும்பி அஸ்வகனை பார்த்தாள். தாழ்ந்த குரலில் “அவர்களிடம் என்ன சொன்னீர்?” என்றாள். “நான் எதுவும் சொல்லவில்லை” என்றான். “சொல்க! என்ன சொன்னீர்?” என்றாள். அவன் தயங்கி “அவர்கள்தான் கேட்டார்கள், தாங்கள் அரசகுடியா என்று. ஆம் என்றேன்” என்றான். திரௌபதி “அரசகுடியினள் என்றா?” என்றாள். “ஆம். அவர்கள் கேட்டபோது நானும் திரும்பிப்பார்த்தேன். அந்தத் தொலைவில் நிழலுருவில் பேரரசுகளை ஆளும் சக்ரவர்த்தினிகளுக்குரிய நிமிர்வுடன் தோற்றமளித்தீர்கள். நீங்கள் அரசகுடியேதான். அதை எங்கும் உங்களால் மறைக்க முடியாது” என்றான் அஸ்வகன். “வெறுமனே நடக்கையிலும் வேழமருப்பில் அமர்ந்த அசைவுகள் உங்களில் உள்ளன.”

சம்பவன் “நீங்கள் யாரென்று நான் கேட்கவில்லை. அந்த இடத்தில் நாங்கள் இல்லை” என்றான். திரௌபதி பெருமூச்சுவிட்டாள். “கீசகரைப் பார்க்க நீங்கள் செல்வதாக சொன்னேன்” என்றான் அஸ்வகன். அவர்களுக்குப் பின்னால் கோட்டைவாயில் திரும்ப மூடிக்கொண்டது. “அடுமனைக்கு செல்லும் வழி உசாவுக!” என்று சுந்தரர் சொன்னார். அவர்கள் உள்முற்றத்திலிருந்து பிரிந்த அரசத் தெருவை விலக்கி அங்காடித் தெருக்களில் ஒன்றில் நுழைந்தார்கள்.

flowerவிராடபுரியின் தெருக்களில் ஒளியொடு ஒளி சென்று தொடும் தொலைவில் நிரையாக கல் விளக்குத்தூண்கள் நடப்பட்டு அவற்றின்மேல் பன்னிரு சுடர்கள் எரியும் மீன்நெய் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. இருபுறமும் நிரைவகுத்த மாளிகைகளின் முகப்புகளிலெல்லாம் வேங்கைமலர்க்கொத்துபோல தொகைச்சுடர் நெய்விளக்குகள் எரிய அவற்றுக்குப் பின்னால் ஒளியை குவித்துப்பரப்பும் சிப்பி வளைவுகளும் பளிங்கு வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. பகல் முழுக்க கடும் வெயில் எரிந்தமையால் இல்லங்களுக்குள் முடங்கியிருந்த மக்கள் வெயில் தாழ்ந்த பின்னர் வெளியே இறங்கி அங்காடித் தெருக்களிலும் ஆலய வீதிகளிலும் நிறைந்து தோளொடு தோள் முட்டி உவகைக் குரல்களுடன் ததும்பிக்கொண்டிருந்தனர்.

வண்டியை செலுத்திய சூதர் இடக்கையில் மணி எடுத்து குலுக்கி ஓசையெழுப்பி சிறிது சிறிதாக வழி கண்டுபிடித்து கூலவாணிகத் தெருவிலிருந்து நறுஞ்சுண்ணத் தெருவில் நுழைந்து மையச்சாலையில் ஏறினார். வண்டி செல்லும் இடைவெளியில் அதைத் தொடர்ந்து சூதர் குழு சென்றது. அந்தி மயங்கியபின் நகருக்குள் வண்டிகள் நுழைவதில்லை என்பதால் அதை வியப்புடன் திரும்பிப்பார்த்த மக்கள் அனைவருமே திரௌபதியை திகைப்புடன் நோக்குவதையும் ஒருவரோடொருவர் அவள் எவளென்று பேசிக்கொள்வதையும் அஸ்வகன் கண்டான். பின்னர் அவர்கள் அனைவருமே அவளையன்றி வேறெதையும் நோக்காதவர்களானார்கள்.

அந்நோக்குகளால் எச்சரிக்கையுற்ற அவள் தன் நீண்ட குழலை உடலை சுற்றிக்கட்டிய ஒற்றையாடையால் மறைத்து முகத்தையும் பாதி மூடிக்கொண்டு தலை குனிந்து நடந்தாள். ஆயினும் அவள் உயரமும் தோள் விரிவும் அவளை தனித்துக் காட்டின. விளக்குத்தூண்களை கடந்து செல்கையில் சுடரொளியில் எழுந்து அருகிலிருந்த சுவர்களில் விழுந்த அவள் நிழலுருவம் பேருருக்கொண்ட கொற்றவைச் சிலையென தோற்றமளித்தது.

அவளை திரும்பித் திரும்பி நோக்கிய சம்பவனிடம் விகிர்தர் “நகர்மக்கள் அனைவரும் அவளையேதான் நோக்குகிறார்கள். நீயும் நோக்கி காலிடற வேண்டியதில்லை” என்றார். “பொறுத்தருள்க!” என்றபடி அவன் முன்னால் சென்றான். வழிகேட்டு சென்ற அஸ்வகன் திரும்பி வந்து “வலப்பக்கமாக செல்லும் சிறிய பாதை பொதுமக்களுக்கான அடுமனைகளை அடைகிறது. நாம் செல்ல வேண்டியது அங்குதான்” என்றான்.

திரௌபதி தாழ்ந்த குரலில் “நான் விடைகொள்கிறேன்” என்றாள். விகிர்தர் “எங்கு?” என்றார். “அரண்மனைக்கு. வேறெங்கும் நான் வாழவியலாது” என்றாள். விகிர்தர் ஒருகணம் நோக்கிவிட்டு “ஆம்” என்றார். அஸ்வகனிடம் “நீயும் உடன் செல்க!” என்றார். “வேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. “தங்களை தனியாக அனுப்ப முடியாது. நீங்கள் சென்று அரண்மனையை அடைந்தபின் அவன் திரும்பி வந்து என்னிடம் செய்தி சொல்லவேண்டும்” என்றார் விகிர்தர். அவள் அவரை பார்க்காமலே “அவ்வண்ணமே” என்றபின் அஸ்வகனிடம் “செல்வோம்” என்றாள்.

அஸ்வகன் அவள் அருகே வந்து “நான் தங்களுக்காக எந்தப் பணியும் ஆற்ற சித்தமாக இருக்கிறேன்” என்றான். “வேண்டியதில்லை. என் உடன் வந்தாலே போதும்” என்றாள் திரௌபதி. “உயிர் கொடுப்பதென்றாலும் கூட” என்றான் அஸ்வகன். திரௌபதி புன்னகைத்தாள். அரண்மனையை அணுக அணுக மக்கள் திரள் குறையத்தொடங்கியது. படைத்தலைவர்களின் இல்லங்களும் அமைச்சர்களின் இல்லங்களும் இரு மருங்கிலும் தழலாடும் பெரிய விளக்குத்தூண்கள் சூழப்பரப்பிய செவ்வொளியில் செம்பட்டுத் திரைச்சீலையில் வரைந்த ஓவியங்கள்போல மெல்ல நெளிந்துகொண்டிருந்தன. குருதி சிந்தியதுபோல் ஒளி விழுந்துகிடந்த பாதையில் தேர்ச்சகடங்களும் குளம்புகளும் சென்ற தடங்கள் தசை வடுக்கள்போல் பதிந்திருந்தன.

அவர்களை நோக்கி வந்த காவலன் ஒருவன் “யார் நீங்கள்? எங்கு செல்கிறீர்கள்?” என்றான். திரௌபதி அவனிடம் “அரண்மனைக்கு வழி இதுதானே?” என்றாள். அவன் அவள் கண்களை பார்த்தபின் தலைவணங்கி “அரச ஆணை உள்ளதா?” என்றான். “ஆம்” என்றாள் அவள். “அவ்வழி” என்று அவன் பணிந்து கைகாட்டினான். மாளிகை உப்பரிகையில் இருந்து எட்டிப்பார்த்த இருவர் அவளை கைசுட்டி ஏதோ கேட்க ஓர் ஏவல்பெண்டு அருகே வந்து “தாங்கள் யாரென்று அறியலாமா?” என்றாள். திரௌபதி “பேரரசியைப் பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள். பிறிதொருத்தி மேலும் அருகே வந்து “அரசி இப்போது கொற்றவை ஆலயத்தின் பூசனை முடித்து அரண்மனைக்கு திரும்பியிருக்கிறார்கள். அரண்மனைக்குச் சென்று அவர்களை பார்க்கவேண்டும் என்றால் இவளைத் தொடர்ந்து செல்க” என்றாள்.

திரௌபதி அச்சேடியைத் தொடர்ந்து நடந்தபோது இருபுறமும் இருந்த அனைத்து இல்லங்களிலும் உப்பரிகைகளிலும் திண்ணைகளிலும் ஆண்களும் பெண்களும் வந்து குழுமி அவளை பார்த்தனர். அஸ்வகன் அவள் அருகே வந்து தணிகுரலில் “தாங்கள் எங்கும் மறைந்துகொள்ள முடியாது. அனலை உமியால் மூடமுடியாது என்பது அடுமனைச்சூதர் சொல்” என்றான். அவள் புன்னகை புரிந்தாள். “உண்மையில் இந்த அழுக்கு ஒற்றையாடையே தங்களை அரசியென காட்டுகிறது” என்று அஸ்வகன் சொன்னான். திரௌபதி திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

ஏழு அடுக்குகளாக எழுந்து நூற்றுக்கணக்கான சாளரங்களும் வாயில்களும் நெய்விளக்கொளியில் செவ்வந்தித் துண்டுகள் என இருள்வானில் தெரிந்த அரண்மனைத்தொகையின் முதற்கோட்டை வாயிலில் அவள் சென்று நின்றபோது காவலர் எழுந்துவந்து தலைவணங்கி தாழ்குரலில் அஸ்வகனிடம் உசாவினர். “அரசபணியின் பொருட்டு பேரரசியைப் பார்க்க செல்கிறார்கள்” என்று அவன் சொன்னான். பிறிதொரு வினாவும் இன்றி காவலர்தலைவர் ஒரு காவலனை அழைத்து அவளை பேரரசியிடம் அழைத்துச் செல்லும்படி கேளாச் சொற்களால் ஆணையிட்டார்.

அரண்மனை முற்றத்தில் அந்தணர்களின் மஞ்சல்களும், அரசகுடியினரின் வளைமூங்கில் பல்லக்குகளும், வணிகர்களின் தொங்குபல்லக்குகளும் ஒருபுறம் நின்றன. நடுவே அரசரின் வெள்ளிப்பல்லக்கு சுடரொளிகள் அணிந்து எரிவதுபோல நின்றது. புரவிகள் அவிழ்க்கப்பட்ட தேர்கள் மறுபுறம் நிரைகொண்டிருந்தன. கட்டுத்தறிகளில் வரிசையாகக் கட்டப்பட்ட புரவிகள் வாயில் கட்டப்பட்ட பைகளிலிருந்து கொள்ளு மென்றபடி தலைசிலுப்பி வால் சுழற்றிக்கொண்டிருந்தன. வால் நிழல்கள் தரையில் அலையடித்தன. அரண்மனைக்குள் ஏதோ ஆடல் நிகழ்கிறது என்பது அங்கிருந்து சிந்திவந்த சிற்றிசையிலிருந்து தெரிந்தது.

அரண்மனை முற்றத்தின் வலப்பக்கமாகச் சென்று கூரையிடப்பட்ட இடைநாழி ஒன்றில் நுழைந்து அவர்கள் நடந்தனர். எதிர்கொண்ட சேடிப்பெண்களும் காவலரும் திரௌபதியை நோக்கி வழிவிட்டு விழிதாழ்த்தி நின்றனர். அவள் தலைநிமிர்ந்து விழிதொடாமல் கடந்து சென்றாள். மகளிர் மாளிகையின் முற்றத்தை அடைந்ததும் காவலன் “அரசி மேலே இசைக்கூடத்தில் இருக்கிறார். விறலியரின் இசை நிகழ்கிறது. தாங்கள் எவரென்று தெரிவித்தால் தங்கள் வருகையை நான் அறிவிப்பேன்” என்றான். “வடக்கிலிருந்து சைரந்திரி ஒருத்தி வந்துள்ளேன் என்று சொல்லும்” என்றாள். அவன் ஒருகணம் தயங்கியபின் “அவ்வாறே” என்று சொல்லி உள்ளே நுழைந்தான்.

மகளிர் மாளிகையின் முற்றத்தில் மூன்று களிறுகள் நின்றிருந்தன. நடுவே வெண்படகுகள் போன்ற பெரிய தந்தங்களும் பூத்த கொன்றை மரமென துதிக்கையில் எழுந்து செவிகளில் பரவிய செம்மலர்த் தேமலும் கொண்ட பட்டத்து யானை, மணிகள் அசைவில் ஒலிக்க, இருளுக்குள் இருளசைவென உடல் உலைய நின்றிருந்தது. அதன் துதிக்கை எழுந்து வளைந்து திரௌபதியை மோப்பம் பிடித்து மூச்சு சீறி இருமுறை நெளிந்து மீண்டது. மீண்டும் நீட்டி சுருட்டிய துதிக்கையை தந்தங்களில் இழிந்திறங்க விட்டு வயிறுக்குள் பெருங்கலத்தை இழுத்ததுபோல் ஓர் ஓசையை எழுப்பியது. அது செவி நிலைத்ததும் உப்பரிகையில் இரு சேடியருடன் தோன்றிய கேகயத்து அரசி சுதேஷ்ணை குனிந்து அவளைப் பார்த்து “யாரது?” என்றாள்.

“வடக்கிலிருந்து வருகிறேன். கேகயத்து அரசி சுதேஷ்ணையை பார்க்க” என்றாள் திரௌபதி. தன் பெயரை அவள் நாத்தயங்காமல் சொன்னதைக் கேட்டு அரசி முகம் சுளித்து “எதன் பொருட்டு?” என்றாள். “நான் காவல்பெண்டாகவும் அவைத்தோழியாகவும் அணிசெய்பவளாகவும் பணியாற்றும் சைரந்திரி. கேகயத்தில் தங்களைப்பற்றி கேட்டேன். தங்களைப் பார்க்கும் பொருட்டு இங்கு வந்தேன்” என்றாள்.

சலிப்புடன் கைவீசி “இங்கு உன்னைப்போல் பலர் இருக்கிறார்கள்” என்றாள் சுதேஷ்ணை. திரௌபதி “அரசி, என்னைப்போன்ற பிறிதொருத்தியை நீங்கள் பார்க்கப்போவதில்லை. நான் அரசகுடிப் பிறந்தவள். ஐந்து கந்தர்வர்களை கணவர்களாகப் பெற்றவள். இப்புவியில் நான் ஆற்ற முடியாததென்று எதுவுமில்லை. கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்களாக என்னைச் சூழ்ந்து அவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

“என்ன சொல்கிறாய்?” என்றாள் சுதேஷ்ணை. “நோக்குக!” என்றபின் அவள் திரும்பி பட்டத்துயானையை நோக்கி கை நீட்டினாள். அது துதிக்கையைச் சுழற்றி தலைமேல் வைத்து உரக்க சின்னம் விளித்தது. பின்பு கால்களை மடித்து தரையில் படுத்தது. பிற யானைகளையும் நோக்கி அவள் கைநீட்ட அவையும் அவ்வாறே தரையில் படுத்தன. சுதேஷ்ணை திகைப்புடன் “மதங்க நூல் அறிவாயா?” என்றாள். “நான் அறியாத நூலென ஏதுமில்லை” என்றாள் திரௌபதி. பட்டத்துயானையின் கால்மடிப்பில் கால்வைத்து ஏறி அதன் மத்தகத்தில் அமர்ந்தாள். அது அவளுடன் எழ அவள் அதன் மருப்புமுழையில் வலக்கால் எடுத்து வைத்து நின்றாள்.

திரௌபதி விழிகாட்ட அஸ்வகன் யானையின் கால்களை கட்டியிருந்த சங்கிலியை அவிழ்த்தான். அது உப்பரிகை நோக்கி சென்றது. சுதேஷ்ணைக்கு நிகராக தலை எழுந்து தோன்ற சரிந்த ஒற்றைஆடை முனையின் உள்ளிருந்து குழல்கற்றைகள் பொழிந்து புறம் நிறைக்க நின்றாள். சுதேஷ்ணை தன் இருபக்கமும் நின்ற காவல்பெண்டுகளை நோக்கி ஏதோ சொல்ல வாயசைத்தபின் அடைத்த தொண்டையை அசைத்து ஒலி கூட்டி “உள்ளே வருக, தேவி!” என்றாள்.

முந்தைய கட்டுரைகருவிமாமழை
அடுத்த கட்டுரைகடிதங்கள்