விஷ்ணுபுரம் கடிதம்

Vishnupuram wrapper(1)

அன்புள்ள ஆசானுக்கு,

நலம் தானே, விஷ்ணுபுரம் நூலை கடந்த பத்து நாட்களாக படித்து கொண்டு இருந்தேன் இப்போது தான் முடித்தேன்.

மணிமுடி படித்து விட்டு ஒரு வெறுமை தான் மனதில், பின் விஷ்ணுபுரம் என்னும் கனவில் இருந்து புரண்டு எழும் போது வெறுமை உணர்வு ஏற்படாடதா என்ன? ஸ்ரீபாதத்திலும், கௌஸ்துபத்திலும் இருந்த ஒரு மாநகரம் இப்படி இடிபட்டு அழிந்தால் வெறுமை உணர்வு தான் எற்படும். மணிமுடியை முடிக்கும் போது காலச்சக்கரத்தை உணர்ந்து இது முடிவில்லாமல் செல்லும் ஒரு மகாகாவியம் என்று உணர்ந்து அமைதி கொண்டேன்.

முடிவின்மையை நீங்கள் கண்டடைந்த நாவல் விஷ்ணுபுரம் என்றீர்கள். உங்கள் மூலம் அந்த முடிவின்மையை நாங்களும் சிறிது தரிசித்தோம்.நீங்கள் விஷ்ணுபுரத்தை முடிவில்லாமல் சுற்றி வரும் காலசக்கரம் என்ற முடித்துள்ளீர்கள் இந்த பிரபஞ்சமும் முடிவில்லாமல் ஒரு சுழற்சியில் இருப்பது தானே. அழிந்தும் பிறந்தும் இந்த பிரபஞ்சம் முடிவில்லாமல் இயங்கி கொண்டு இருப்பதை கூறும் போது பெரு வெடிப்பு கொள்கையும், பெரு சுருக்கக் கொள்கையும் விளக்கும் ஒரு விஞ்ஞானியாகவும் .மெஞ்ஞானியாக இருத்தலியல் பற்றி, காரண காரிய விவாதம், சார்பு நிலை கொள்கை இதை எல்லாம் பற்றி அறிந்து கொள்ள துவங்கும் ஒரு தரிசனம் கிடைக்கும் பேரு பெற்றேன்.

ஆனால் அடுத்த அத்யாயங்களில் அதை மறுத்து எளிய விஷியங்கள் பற்றிய வாதங்கள். ஒரு இடத்தில் மாகவிஷ்ணுவின் பாதங்கள் பற்றி என்றால் அடுத்த அத்யாயத்தில் அதை ஒரு நோயாலியின் பாதம் போல காட்டுவது. ஒரு இடத்தில் ஒன்றை சொன்னால் அதை மறுத்து அடுத்த இடத்தில் வேறு வாதம் .பின் நீங்களே மணிமுடியில் “எல்லா தரிசனங்களும் இதில் நிலை நாட்ட பட்டும் பிறகு மறுக்கபடுகின்றன “என்று கூறுகிறீர்கள்.

ஸ்ரீபாதம் முடித்து கௌஸ்துபம் தொடங்கும் போது அட என்ன இது இங்கே ஒரு கதையை விட்டு பின் நோக்கி செல்கிறார் என்று பட்டது பின் மணிமுடி தொடங்கும் முன் அங்கு இருந்து முன் நோக்கி செல்கிறீர்கள் .முதலில் நான் இதை மீண்டும் படிக்கும் போது முதலில் கௌஸ்துபம் முதலிலும் பின் ஸ்ரீபாதமும் பின் மணிமுடியும் என்று படித்தால் தான் சரியாக எனக்கு விளங்கும் என்று தோன்றியது இதை நீங்களே மணிமுடியில் கூறியும் இருந்தீர்கள்.

அப்புறம் தான் அட முதலில் மனிதனின் தேடல் தொடங்குகிறது ஸ்ரீபாதத்தில் அதில் எல்லாரும் ஏதோ ஒரு தேடலை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறார்கள்.பின் ஞான உபதேசங்கள் அது கௌஸ்துபம் முழுதும் நிரம்பி வழிகிறது. பின் கடைசியில் எல்லாம் ஒன்றும் இல்லை என்று பிரளயம் வந்து அனைத்தையும் அழிக்கிறது .அட இது அப்படி தான் சரியாக பொருந்தியுள்ளது என்று உங்கள் விளக்கம்.

சாதாரண மனிதர்களை எப்படி தெய்வங்களாகவும், ஞானிகலாகவும் காலம் மாற்றுகிறது என்பது மெல்லிய அங்கத தன்மை உடன் இருத்ததாக எனக்கு பட்டது. இப்படி தான் காவியங்களும்,தெய்வங்களும் உருவாணர்களோ.

பின் சங்கர்க்ஷணன் தன் படைப்பை தானே விமர்சித்து சொல்வது எல்லாம் நீங்கள் விஷ்ணுபுரம் குறித்து நீங்களே விமர்சித்து சொல்வது போல் இருந்தது.

பல படிமங்களை விட்டு விட்டு சென்றீர்கள் அதை இன்னும் பல வாசிப்புக்கு பின் தான் அடைய முடியும் என்று தோன்றுகிறது. அஜிதரின் மரணம், கடைசியாக அவரும் தண்ணீருக்காக கேட்கும் தருணம், அந்த கிழவியை விஷ்ணுபுரத்திலே விட்டு விட்டு செல்வது. பின் அந்த மூன்று கணிகைகள் பத்மாச்சி, லலிதாங்கி, சாருகேசி மூன்று பேரும் பல விடைகளை தேடியவர்களுக்கு கண்டடைய உதவினார்கள் இவர்களும் அந்த தேடலில் பங்கு கொண்டு தாங்களும் தேடி கண்டுகொண்டனர்.

வடிவமற்ற வடிவமாக முடிவின்மையை தாண்டியும் விஷ்ணுபுரம் என்றும் நிலை நிற்கும்.

பின் சிற்பங்கள் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்கள் சிற்பங்கள் பற்றிய உங்கள் பார்வை எங்களுக்கும் சிறிது தந்து சென்றீர்கள் இதை வைத்துக்கொண்டு இனி சிற்பங்களை பார்க்கும் பார்வையும் வேறுபட்டு இருக்கும். இன்று தாரமங்கலம் சென்று இருத்தேன் அங்கு இருந்த அத்தனை சிற்பங்களையும் நான் என்றும் பார்த்து ரசிப்பதுண்டு இன்று வேறு மாறி இருந்து. ருத்ரதாண்டவம் ஆடும் சிவனின் சிலை பேரழிவை குறிக்கும் தத்துவார்த்த குறியீடு என்றீர்கள் அந்த சிலையின் தீவரத்தை அப்போது தான் முதல் முதலில் கண்டேன் சுழற்சியின் ஒரு கனம், இது வரை பல முறை பார்த்தாலும் இன்று தான் அதன் தீவரத்தை காண முடிந்தது.

அஸ்வசாஸ்திரம் பற்றி ககஜசாஸ்திரம் பற்றி இது எல்லாம் புதிதாக இருந்தது. பின் ஒரு சந்தேகம்

கௌஸ்துபம் 31 அத்யாயம், மணிமுடி3 அத்யாயம் இரண்டின் கூட்டு தொகை 62 வருகிறது ஸ்ரீபாதம் 62 அத்யாயங்கள் ஏதேனும் காரணகாரியம் உள்ளதா? விஷ்ணுபுரத்தை இன்னும் பல முறை படிக்க வேண்டும்.மீண்டும் ஒரு முறை படித்து விட்டு கடிதம் எழுதுகிறேன்.

ஏனோ தெரியவில்லை இந்த கடிதத்தை ஆரம்பிக்கும் போது தொடங்கிய நான் இதை எல்லாம் எழுத வேண்டும் என்று என்ன வில்லை என்ன என்னமோ எழுதி விட்டோம் என்று படுகிறது. ஏதேனும் தவறாக நான் கூறி இருந்தால் சுட்டி காட்டி மணிக்கவும்.

இப்படிக்கு,

உங்கள் மாணவன்,

பா.சுகதேவ்

மேட்டூர்.

முந்தைய கட்டுரைவெற்றி -கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைசபரிநாதன் கவிதைகள் 2