சோற்றுக்கணக்கு கடிதங்கள்

Aram-Jeyamohan-1024x499

இனிய சகோதரனுக்கு

சோற்றுக்கணக்கு கதையை முன்பே நிறையமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் இன்று படித்தபோது நான் உணர்ந்தவைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். என் கணவர் தன் ஒன்றரை வயதிலேயே அம்மாவை இழந்தவர். சித்தியின் கொடுமையில் வளர்ந்து ஆளானவர். வீட்டில் எல்லாம் இருந்தாலும் எந்த நேரமும் பசியோடு இருக்க வைக்கப்பட்டவர். சித்தியின் பிள்ளைகள் சாப்பிட்டு துப்பிய உணவுகளை ஒன்றாய் வழித்துப்போட்டு கடித்து துப்பிய எலும்புகளோடு கூடிய உணவே தினமும் அடியோடு கிடைக்கும். என்னோடு திருமணம் முடிந்த பின்னால்தான் அவருக்கு என்ன பிடிக்கும் என்றே வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும்.

சின்ன வயதில் உணவு மறுக்கப்பட்டதாலோ என்னவோ அதிகமாக சோறு சாப்பிடுவார். மற்றவர்கள் உணவிடும்போது சில இடங்களில் சுத்தமாகவே சாப்பிடமாட்டார். கேட்டால் சிலர் கையால் சோறு போட்டால் சாப்பிடவே முடியாது என்பார். என் அம்மா கையில் சாப்பிட முடியாது. ஆனால் என் சித்தி போட்டால் நிறைய சாப்பிடுவார்.

எங்களுக்கு திருமணம் முடிந்து 8 வருடங்கள் பிள்ளை இல்லாமல் இருந்தோம். எந்த பாஸ்டர் வந்தாலும் என் மாமியார் என் தலையில் கை வைத்து ஜெபிக்கும்படி என்னை கட்டாயப்படுத்தி அவமானப்படுத்துவார்கள். பைபிளில் ஒரு வசனம் “பெண்கள் பிள்ளைபேற்றாலே ரட்சிக்கப்படுவார்கள்” என்று இருக்கும். அதை நான் ஒரு பெரும் புகழ் பெற்ற பிரசங்கியிடம் கேட்டேன். மிகவும் தட்டையாக பெண்கள் குழந்தை பெற்றால்தான் பரலோகம் போக முடியும் என்று நான் குழந்தை பெற்று பரலோகம் போக வேண்டும் என்று ஊக்கமாக ஜெபித்தார். ஆனால் நான் உணர்ந்தது அன்பினால் கனியும் போதுதான் எல்லாருக்குமே பரலோகம் என்று. பிள்ளை பெற்ற எல்லோருமே தாய்மையில் நிறைந்தவர்கள் அல்ல. அப்படி கனிந்த கரங்கள் உணவிடும் போதுதான் வயிறார சாப்பிட முடியும்.

என் சித்தி திருமணமே முடிக்காதவர். கெத்தேல் சாஹிபின் கரங்கள் அப்படி பிள்ளைபேற்றாலே கனிந்த கரங்கள். அவருடைய அன்பு இனிய வார்த்தைகளிலோ, அன்பான தொடுகையிலோ அல்ல. வயிறு வெடிக்க உணவிடும்பொழுதே அவர் தன் மீட்பை கண்டடைகிறார்.

வாழ்த்துக்களுடன்

டெய்சி.

***

அன்புள்ள ஜெ

சோற்றுக்கணக்கு கதையை இப்போதுதான் வாசித்தேன். அந்த ஒரே ஒரு சிறுகதை பற்றி எந்தெந்தக் கோணங்களில் எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது என்று பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது. ஒரு சிறுகதை இந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? ஏனென்றால் அடிப்படை உணர்ச்சி அது. பசி. காமம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். பசி அதிகம் எழுதப்பட்டதில்லை. ஏனென்றால் அது நேரடியானது. அதில் சிக்கல் ஒன்றும் இல்லை. அதை அறத்துடன் இணைத்ததனால்தான் அந்த சிக்கலான டெக்ஸ்ச்சர் வந்தது என நினைக்கிறேன். மகத்தான கதை. வாசித்துத்தீராத சப்டெக்ஸ்ட் கொண்டது. கதையில் செண்டிமெண்டாக ஏதும் இல்லை. மிகமிக மேட்டர் ஆஃப் பெக்ட் நடையில் செல்கிறது.ஆனால் ஏனோ அழுகை வந்தது. அது இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது வரும் துக்கம். தாகத்தின் புனித துக்கம் என்று சுந்தர ராமசாமி எழுதியதை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.

செல்வக்குமார்

***

 

முந்தைய கட்டுரைஊட்டி சந்திப்பு நிகழ்வுப்பதிவு
அடுத்த கட்டுரைஜே.சி.குமரப்பா நூல்கள்