தொழில்முனைவோர்- ஒர் எதிர்வினை

j-r-d-tata-3

முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2

முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்

அன்பின் ஜெ…

உங்கள் விஜய் மல்லையா பற்றிய கட்டுரை என்னை மிகவும் பாதித்து விட்டது.

நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவன். முனைப்பையும், க்ரியேட்டிவிட்டியையும் வழிபடுபவன்.

ஆனால், நீங்கள் செயல் திறன் என்னும் பெயரில், அரசைக் கொள்ளையடிக்கும் முதலாளிகளையும், உண்மையான வலதுசாரிகளையும், பொருளியல் மாற்றங்களை உருவாக்கும் பெரும் தலைவர்களையும் ஒரே அடைப்புக்குள் வைக்கிறீர்கள். இது மிகவும் தவறு என்பது என் எண்ணம்.

சில நாட்களாக உறங்கவே முடியவில்லை. அந்த அளவு உங்கள் கட்டுரை என்னை பாதித்து விட்டது. உங்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு நீள் கட்டுரை எழுதியிருக்கிறேன்.

உங்கள் பார்வைக்கு

அன்புடன்

பாலா

nm

அன்புள்ள பாலா

உங்கள் கட்டுரையை வாசித்தேன். நீங்கள் என் நண்பர். நம் கருத்துக்கள் வேறு. ஆனால் நாம் இதுவரை ஒருமுறைகூட உரையாடிக்கொண்டதில்லை. ஏன் என்று இக்கட்டுரை வழியாக மீண்டும் அறிந்தேன். நான் சொல்லும் மையக்கருத்துக்கு நீங்கள் வருவதில்லை. அதை உங்கள் கோணத்தில் சற்று உருமாற்றிப் புரிந்துகொண்டு அதை மறுக்கிறீர்கள். ஒவ்வொருமுறையும் நான் சொல்வது அதுவல்ல என்று பதில் சொல்லி விலகுகிறேன். இம்முறையும். இதற்குக் காரணம் உங்கள் உணர்ச்சிகரத்தன்மை.

நான் தொழில்முனைவோர் அனைவரும் பொதுநலம்நாடிகள் என்று சொல்லவில்லை. நல்லவர்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் அனைவரும் சமமானவர்கள் என்று சொல்லவில்லை. அவர்களில் பேதம் பார்க்கக்கூடாது என்று சொல்லவில்லை.அவர்களில் ஊழல் செய்பவர்களும் அரசை ஏமாற்றுபவர்களும் பொதுமுதலை மோசடி செய்பவர்களும் தண்டிக்கப்படக்கூடாது என்று சொல்லவில்லை.

மாறாக தொழில்முனைவோர் வலிமையான இடதுசாரி இயக்கங்களால் நிகர்செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்கிறேன். அரசும் அமைப்புகளும் அவர்களை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்கிறேன்.தொழில்முனைவோர் லாபநோக்கம் மட்டுமே கொண்டவர்கள். அவர்கள் பொதுநலம் விரும்பிகள் அல்ல. ஆனால் லாபநோக்கம் சமூகத்துக்கு எதிரானது அல்ல. லாபநோக்கம் கொண்ட தொழில்செயல்பாடுகள் பொருளியல்ரீதியாக ஆக்கபூர்வமானதாக அமையமுடியும். ஆகவே சுயலாபச் செயல்பாடுகள் மேல் ஒட்டுமொத்தமாக நாம் கொள்ளும் காழ்ப்பு முதலாளித்துவப் பொருளியலுக்கு ஏற்புடையதல்ல என்கிறேன்.

அதேசமயம் இடதுசாரிகளால் தொழில்முனைவோர் அனைவருமே சுரண்டல்காரர்கள் என்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பத்தை நம்பி வெறுப்பைக் கக்குவதும், தேவையானபோது மட்டும் இடதுசாரி கோஷங்களை கையிலெடுத்துச் சேறுவீசுவதும் பிழை என்கிறேன். நவீனப்பொருளியலில் தொழில்முனைவோர் முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள் என்பது என் கருத்து என்கிறேன், ஆனால் இடதுசாரிகள் அதை மறுப்பதை புரிந்துகொள்கிறேன், தொழில்முனைவோரில் வணிகர்களுக்கும் உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் செயல்படுபவர்களுக்கும் இடையே வேறுபாடு பார்க்கவேண்டும் என்கிறேன்.

நான் சுட்டிக்காட்டுவது தொழில்முனைவோர்களுடன் அரசுக்கு இருக்கும் உறவை ஒருவகை மோசடி அல்லது ஊழல் என்று மட்டுமே பார்க்கும் பார்வையின் அபத்தத்தை மட்டும்தான். தன் தொழில்துறையில் நிதிமுதலீடு செய்யாத முதலாளித்துவ அரசு என ஏதுமில்லை. அதில் இழப்புகளை அத்தனை அரசுகளும் சந்திப்பதுண்டு. அந்த இழப்புகள் தள்ளுபடி செய்யப்படுவதும் இழப்புக்குள்ளான தொழில்துறைகளை அரசு பெரும்பணம் பெய்து மீட்பதும் எல்லாம் உலகமெங்கும் நிகழ்வது. சென்ற இருபதாண்டுகளில் அமெரிக்காவும் சிங்கப்பூரும் ஜப்பானும் அவ்வாறு நிதிபெய்து வங்கி, தொழில்துறைகளை மீட்டெடுத்த வரலாறு நம் முன் உள்ளது. இதை ஓர் இடதுசாரி கண்டிப்பதை புரிந்துகொள்கிறேன். எதையும் அறியாத ஒருவர் இதை வரிப்பணத்தை அள்ளிக்கொடுப்பது என்று மட்டுமே பிரச்சாரம் செய்யும் அறியாமையை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்

நான் சொல்வது கருத்துச் சொல்பவரின் பொருளியல்நோக்கு என்ன என்பது தெளிவாக இருக்கவேண்டும் என்றுதான். இடதுசாரிப்பொருளியல்நோக்கா வலதுசாரிப்பொருளியல்நோக்கா என்பதுதான் ஒருவர் தொழில்முனைவோரை அணுகுவதன் அடிப்படையைத் தீர்மானிக்கிறது. அரசியல்தேவைகளின்போது இடதுசாரி நிலைபாடு கொள்வது ஒருவகை மோசடி என்று மட்டும்தான். இடதுசாரிகள் மட்டுமே முதலாளிகளை விமர்சிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. மாறாக முதலாளிகளை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் கொள்கை நிலைபாட்டை இடதுசாரிகள் மட்டுமே எடுக்கமுடியும் என்று சொல்கிறேன்

நீங்கள் நான் தொழில்முனைவோரில் பேதமில்லை, அந்த வர்க்கமே தண்டனைக்கு அப்பாற்பட்டது என்று சொல்வதாக எடுத்துக்கொண்டு உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு மல்லையா அல்ல டாட்டாவையே சிறையில் தள்ளுவதில்கூட எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. அவர்களின் குற்றங்களும் மீறல்களும் மக்களின்பொருட்டு அரசால் கண்காணிக்கப்படவேண்டும். அவர்களின் தொழில்முயற்சிகள் மறுபக்கம் மக்கள் நலன் என்னும் கருத்தால் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும். நான் சொல்வது வெறும்காழ்ப்பாக மட்டும் தொழில்முனைவோரைப்பற்றி ஒட்டுமொத்தமாக அணுகக்கூடாது என்றே

அன்புள்ள பாலா, பெருநோட்டு அகற்றம் குறித்து நீங்கள் எழுதிய பதற்றம்மிக்க கட்டுரைகளை, அதிபயங்கர ஆரூடங்களை இப்போது பார்க்கிறேன். அதிலிருந்த உணர்ச்சிகரமே இக்கட்டுரையிலும் உள்ளது. இது அரசியல்கட்டுரை மட்டுமே என்றால் கோபம் கொள்ளமாட்டீர்கள்தானே?

உதாரணமாக ஊரகவேலைவாய்ப்புத் திட்டம் பற்றிய உங்கள் ஆதங்கம், மற்றும் சலிப்பு. இப்படிச்சில உணர்ச்சிகர பாவனைகள் மூலமே இதை உங்களால் முன்வைக்கமுடிகிறது. நானே உங்களிடம் ஊரகவேலைவாய்ப்புத் திட்டம் [நூறுநாள்வேலை] எப்படி கிராமத்தில் குறைந்தபட்சக் கூலியை தீர்மானிக்கும் முன்னோடியான வரவேற்புக்குரிய திட்டம் என்று ஒருமுறை பேசியிருக்கிறேன். ஆனால் உங்கள் உணர்வுநிலைக்கு எதிராக என்னை நிறுத்தித்தான் உங்களால் இதைக் கட்டமைக்க முடிகிறது.

பொருளியல்சார்ந்த ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இங்கே நிகழமைக்கான காரணம் இதெல்லாம்தான். அதிதீவிர அரசியல்நிலைபாடு. அதை உணர்வுபூர்வமாக உருவாக்கிக்கொள்ளுதல். உச்சகட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சிந்தித்தல். அதிலிருந்து நிலைபாடுகளை எடுத்துக்கொண்டு மேலே வாதிட்டுச் செல்லுதல். நான் முகநூல்சண்டை என நிராகரிப்பது இதைத்தான்.

ஆனால் இக்கட்டுரையில் உங்கள் தரப்பை ஆணித்தரமாக, விரிவாக முன்வைத்திருக்கிறீர்கள். அவ்வகையில் முக்கியமான கட்டுரை. விரிந்த விவாதத்திற்குரியது. நன்றி

ஜெ

***

பாலசுப்ரமணியனின் கட்டுரை இணைப்பு

 

முந்தைய கட்டுரைநேரு முதல் மல்லையா வரை..
அடுத்த கட்டுரைகங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்