‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54

54 குழவியாடல்

மறுநாள் காலை நீராடச் செல்கையில் கசனைக் கண்டதுமே முனிவர்களின் மைந்தர்களும் மாணவர்களும் முகம் திருப்பி விலகிச்சென்றனர். அவர்களை நோக்கி சிரித்தபடி தனக்குள் ஏதோ பாடலை முனகியபடி சென்று ஓடையிலிறங்கி அவன் நீராடினான். அப்படித்துறையிலேயே எவரும் இறங்கவில்லை. நீந்திச் சென்று ஓர் அல்லி மலரை பறித்துக்கொண்டு கரையேறினான். ஈரம் வழிந்த உடலுடன் சென்று சுக்ரரின் அறை வாயிலை அடைந்து படிமேல் அதை வைத்து நெற்றியால் அதைத் வணங்கிவிட்டு தன் குடிலுக்கு மீண்டான்.

அவன் நீராடிச் சென்று மறைவதுவரை ஒரு சொல்லும் உரைக்காமல் அவர்கள் அனைவரும் அவனையே நோக்கியிருந்தனர். அப்போது அவன் அழகையன்றி எவரும் எதையும் எண்ணவில்லை. நின்றிருக்கையில் அழகர்கள் அசைகையில் அழகர்களல்ல, அசைவில் அழகர்கள் பேசுகையில் அழகிழப்பர். எப்போதும் எந்நிலையிலும் அழகனென்று ஒருவன் அமையக்கூடுமென அப்போதே அறிந்தனர். ஆனால் அதைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொள்ள எவரும் விரும்பவில்லை. சொல்லின்றி நீரிலிறங்கி மூழ்கி எழுந்தார்கள். வழக்கமாக சிரிப்பும் பேச்சும் சிறுபூசல்களும் ஒலிக்கும் படித்துறைகளில் அலைகளின் ஓசை மட்டுமே எழுந்தது.

அச்சொல்லின்மை உறுத்தவே அவர்களிலொருவன் மிக எளிய அன்றாடச்செயல் குறித்து எதோ சொன்னான். அதை பிறிதொருவன் மறுக்க இருவர் அதில் கருத்து சொல்ல தங்களை தங்களிடமிருந்தே மறைத்துக்கொள்ளும்பொருட்டு அச்சொல்லாடலை நாவால் தட்டித் தட்டி முன்னெடுத்துச் சென்று காற்றில் நிலைநிறுத்தினர். “அழகியவன் நம்மை கவர்கிறான். அதனாலேயே அவன் அஞ்சத்தக்கவன்” என அந்தத் திரையைக் கிழித்து ஒருவன் சொன்னான். “நம் சித்தத்தை நம்மையறியாமல் எடுத்துக்கொள்ளும் எதுவும் நம்மிடமிருந்து எதையோ கைப்பற்றுகிறது.” மீண்டும் சொல்லவிந்து அவர்கள் விழிமின்கள் மட்டுமென்றாயினர்.

சுக்ரரின் வகுப்புகளில் அவன் அமர்ந்தபோது அவனருகே எவரும் அமரவில்லை. அவனைக் கண்டதுமே முகம் மலர்ந்த சுக்ரர் எப்போதும் முதற்சொல்லை அவனை நோக்கியே தொடங்கினார். பின்னர் அச்சொற்களின் அனல் தன் விழிகளில் பற்றிக்கொள்ள அங்கிருக்கும் அனைவரையும் மறந்து அதில் நின்றாடி விண் தாவி எழுந்து வெளியென்றானார். அவர்கள் அவனை மறந்து அவருடன் சென்றனர். மீண்டு இடமுணர்ந்து  எழுந்து விலகுகையில் அவனை தவிர்த்தனர். அவரளித்த சொற்களின் வெம்மை விழிகளில் நிறைந்திருக்க பல மடங்கு எடை கொண்டவனாக அவன் தனித்து நடந்து சென்றான். அவனை விழிநோக்காது உடல் நோக்கியவர்களாக சிறு குழுக்களாக அவனைத் தொடர்ந்து சென்றனர்.

ஆனால் அவனழகு அனைவரையும் வென்றுகொண்டிருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அவனை கண்காணிக்க வேண்டுமென்றும் அவன் செய்யும் முதற்பிறழ்வை கண்டடைய வேண்டுமென்றும் அதைக் கொண்டே அவனை அங்கிருந்து விலக்க வேண்டுமென்றும் ஒவ்வொருவரும் உறுதிகொண்டிருந்தனர். அது அவனழகை கூர்ந்து நோக்குவதற்காக அவர்கள் அணிந்துகொண்ட நடிப்பென்பதை அவர்களே அறிந்தும் இருந்தனர். எப்போதோ ஒருவர் பொருந்தாமையால் உந்திநிற்கும் ஒரு கூற்றை உரைக்கையில் அதன் உள்ளடக்கம் அவனே என அறிந்து தாங்கள் சொல்லும் ஒவ்வொன்றிலும் அவனைப் பற்றிய உட்குறிப்பு இருப்பதை உணர்ந்தனர்.

அழகுக்கும் விழிகளுக்கும் விலக்கவொண்ணா ஒப்பந்தம் ஒன்று உள்ளது என்றார் சுஷமர். “அவனை நோக்காமலிருக்க இங்கு எவராலும் இயலாது. அதை எண்ணி நாணியே நாம் நம்மை திருப்பிக்கொள்கிறோம்.” பெண்கள் ஓரவிழியால் அவனை நோக்கி தனிமையில் உளவிழியால் மீட்டெடுத்து நோக்கி மகிழ்ந்தனர். கற்பனையால் வண்ணம் தொட்டுத்தொட்டு முழுமை செய்தனர். ஆண்கள் அவனை எண்ணாமலிருக்க முயன்று எண்ணத்தில் அவனே எழுவதைக் கண்டு எரிச்சலுடன் நோக்கி எண்ணியிராமல் தன்னை மறந்தனர்.

மலர்களுக்கு மட்டுமே உரிய முழுமை கொண்டிருந்தது அவன் உடல். “அழகு அனைத்துப் பொருட்களிலும் எழுந்துள்ளது. அழகிற்கென்று மட்டுமே அமைந்தது மலர் மட்டுமே” என்றார் சத்வர். “படைத்துப் படைத்து சலித்த பல்லாயிரம் கோடி மானுட உடல்களில் ஒன்றில் மட்டும் பிரம்மன் தன் மகிழ்ச்சியை பொறித்தனுப்புகிறான். செல்லுமிடங்களெங்கும் அவர்கள் உவகையை நிறைக்கிறார்கள்.” கிருதர் “நமது மாணவர்கள் அவன்மேல் பொறாமை கொள்ளக்கூடும்” என்றார். சத்வர் நகைத்து “இல்லை. தங்களைப்போல் இருந்தும்  தங்களைவிட ஒரு படி மேலாகச் சென்றவர்கள் மீதுதான் மானுடர் பொறாமை கொள்கிறார்கள். அவன் அழகு தெய்வங்களுக்குரிய முழுமை கொண்டது. எப்போதும் அதை தாங்கள் அடையப்போவதில்லையென்று அனைவரும் அறிவர். இளையவரே, மானுடர் எதைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள்? சற்று விழைந்திருந்தால் சற்று முயன்றிருந்தால் சற்று நல்லூழ் இருந்தால் தாங்களும் அடைந்திருக்கக்கூடும் என எண்ணுவனவற்றின் மீதே” என்றார்.

கிருதர் “ஆனால் ஒவ்வொருவரும் உள்ளூற அவனை விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது” என்றார். சத்வர் “ஆம், அழகை விரும்பாத எவர் இருக்கிறார்கள்? மலர்களை நின்று நோக்குபவர்கள் குறைவு, ஆனால் அழகெனும்போது மலரே நினைவு வருகிறது. மலரொன்று எதிரில் வந்தால் அறியாது முகம் மலர்கிறது. மண்ணிலுள்ள விழிகள் அனைத்தும் அழகை அறியும். விழிகள் மலர்களை நோக்கி நோக்கி மலர்களைப்போல் ஆனவை  என தொல்கவிதை சொல்வதுண்டு” என்றார். அவர்கள் ஏடு நறுக்கிக்கொண்டிருந்தனர். சூழ எவருமில்லாமையால் நிலைவிட்டு உரைகொண்டனர். “அத்தனை பேர் அவன்மேல் காதல் கொள்கிறார்களா என்ன?” என்று கிருதர் கேட்டார்.

“பெண்கள் தங்கள் ஆழ்கனவுகளில் நிகரற்ற பேரழகிகளாகி அவனை அடைகிறார்கள். ஆண்கள் பேரழகர்களாக மாறி அவன் என நடிக்கிறார்கள். ஆணுக்குள் அமைந்த பெண் அவனிடம் காதல் கொள்கிறாள். பெண்ணுக்குள் அமைந்த ஆண் அவனுக்கு தோழனாகிறான். இளையவரே, மானுடன் ஊனுடல் கொண்டு இங்கு வாழ்வது ஒரு சிறு வாழ்வே. உள்ளம் பெருகி அவர்கள் வாழும் முடிவிலாக் கோடி உலகங்கள் இங்குள்ளன. நாம் கொண்ட நல்லூழால் அவை எடையிலாதுள்ளன. எடை கொண்டிருந்தன என்றால் இப்புவி தாங்கும் ஆமைகள் என்றோ நசுங்கி கூழாகிவிட்டிருக்கும்” என்று சத்வர் நகைத்தார்.

எந்தக் கணத்தில் அவர்கள் அவனை ஏற்றுக்கொண்டார்கள் என்பது எவருமே அறிந்திராத ஒன்றாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவரும் மேலும் மேலும் கூர்கொண்டு அந்த முனை நோக்கியே வந்து கொண்டிருந்தனர். தேவயானியும் அவனும் கொண்ட காதலை அறியாத எவரும் அங்கிருக்கவில்லை. அக்காதலை அவர்கள் ஒவ்வொருவரும் கொண்ட ஆழ்கனவுகளில் தங்களுள் நடித்தனர். அதனூடாக அவர்கள் அறிந்த அளவுக்கே அனைவரும் அக்காதலை அறிந்திருந்தனர். கசன் முன் அத்தனை பெண்களும் தேவயானியென்றாயினர். அத்தனை ஆண்களும் அவனென்றாயினர்.

மெல்ல மெல்லிய புன்னகைகள் அவனுக்கு அளிக்கப்பட்டன. கல்வியவையில் அவன் எழுத்தாணிக்காக துழாவினான் என்றால் எவரோ ஒருவர் அதை எடுத்து அவனுக்களித்தார். பசியுடன் அடுமனைக்கு அவன் சென்றால் எவரோ எழுந்து கலத்தை நன்கு கழுவி அவன் கையிலளித்தனர். ஒற்றைச் சொற்கள் எழுந்தன. பின் அவை தங்கள் உடன்பிறந்தாரை பெருக்கிக்கொண்டன. எளிய குறிப்புகள் வழியாக உரையாடல் தொடங்கியது. முதல் நகையாட்டு எழுந்ததுமே அனைத்து அணைகளும் உடைந்தன. சிரிப்பும் பகடியும் இன்றி அவனிடம் எவரும் பேசாமலாயினர்.

பெண்கள் மறைமுகமாக தேவயானியைச் சொல்லி அவனை களியாடினர். ஒவ்வொன்றையும் அவன் முழுமையுடன் செய்தான். வேள்விபோல், நடனம்போல் அவன் அசைவுகள் இருந்தன. அதனாலேயே அவை பெண்மைச்சாயல் கொண்டிருந்தன. அதைச் சொல்லியே அவனை சீண்டினர் பெண்கள். இளைஞர் அவனிடம் சொல்லாடுவதற்கென்று பேசுபொருட்களை கண்டடைந்தனர். அன்று கற்றவற்றை, அவற்றை கடந்துசெல்லும் உய்த்துணரல்களை, சூழ்ந்துள்ள காட்டை, வெயிலை, பனியை. ஆனால் அசுரரும் தேவரும் கொண்ட நில்லாப் போரைப்பற்றி ஒரு சொல்லும் அவர்கள் நாவில் எழவில்லை.

ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னும் மேலும் அவனை நெருங்க முனைந்தனர். ஒவ்வொருவரும் அவனை தொட விழைந்தனர். செல்வோம் என அவன் கையை தொட்டனர் தோழர். இங்கு நோக்குக என அவன் தோளை தட்டினர். என்ன செய்கிறாய் என்று அவன் தோள்களில் கையூன்றினர். முதியவர் நீடூழி வாழ்க என அவன் தலையை தொட்டனர். மூதன்னையர் மட்டும் எந்தத் தயக்கமுமின்றி அவனை அணுகி இரு கன்னங்களைத் தொட்டு வருடி “காமதேவன் போலிருக்கிறாய், மைந்தா” என்றனர். அவன் கைகளை எடுத்து தங்கள் கன்னங்களிலும் கைகளிலும் வைத்து “நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தினர்.

அப்போது விழிதிகழ அகன்று நின்ற இளைய பெண்டிர் அம்மூதன்னையருக்குள் புகுந்துகொண்டு தாங்களும் அவனை வாழ்த்தினர். அவர்களின் கனவுகளில் அவன் மேலும் பெருகி நிறைந்தான். தனிமையிலிருக்கையில் அவன்மேல் உதிர்ந்த மலர்கள் அப்பெண்டிரே என அவன் அறிந்திருக்கவில்லை. ஓடையில் நீராடுகையில் அவன் உடலை உரசிச் சென்ற ஒளிமிக்க மீன்கள் எவரென்று அவன் உள்ளம் உணர்ந்திருக்கவில்லை. காற்றென வந்து அவன் குழல் கலைத்தனர். ஈரமண்ணென அவன் கால் கீழ் குழைந்தனர். சிட்டுக்குருவியென நாணம் தடுக்க தத்தித் தத்தி அவனை அணுகி மிரண்டெழுந்து மீண்டும் விலகினர். வண்ணச் சிறகுள்ள பறவையென அவன் முன் தங்களை விரித்து வைத்தனர். அவன் முன் இலைதெரியாது பூத்த கொன்றையென்றாயினர்.

அப்பெண்களனைவரிலும் தேவயானி நூறு விழிகளாக எழுந்து அவனை சூழ்ந்திருந்தாள். அவள் கொண்ட ஆணவம் அக்காதலை முற்றிலும் மறைத்து இறுகிய முகம் சூட வைத்தது. குறுகிய ஒற்றைச் சொற்களை மட்டுமே அவனுக்கு அளிக்க அவளால் இயன்றது. அவன் முன் வருகையில் தலை நிமிர்த்து நீள்குழல்புரிகள் அலைக்க அவள் நடந்தாள். சொல் சொல் என சிலம்பின கால்நகைகள். இனி இனி என ஒலித்தன வளையல்கள். அவன் முன் அமர்ந்திருக்கையில் உடல் அவனை நோக்கித் திரும்பி முகம் பிறிதொரு திசை நோக்க அமைந்தாள். அவன் கேட்க பிறருடன் உரையாடுகையில் அவள் குரல் இனிமையுடன் வலுத்தெழுந்தது. அவனுடன் உரையாடுகையில் தாழ்ந்து தனக்குள்ளென முழங்கியது.

அவனோ ஆசிரியரின் மகளென்னும் நிலையிலேயே அவளை அணுகினான். எப்பெண்டிரையும் நோக்கும் அதே விழிகளையே அவளுக்கும் அளித்தான். நலம் உசாவினான். நன்று சொல்லி வாழ்த்தினான். அன்றாட நிகழ்வுகளை உரைத்தான். எல்லை கடக்காது நகையாடினான்.  ஒருபோதும்  கடக்கவில்லை. அதுவே அவள் தன் சொல்லாலும் விழியாலும் வேண்டியதென்றாலும் அம்முறைமைச் சொல்லாடலுக்குப்பின் ஒவ்வொருமுறையும் சீண்டப்பட்டாள். சினம்கொண்டு பற்களைக் கடித்தபடி மட்டுமே அவன் முன்னிருந்து அகன்றாள்.

தனிமையில் இருக்கையில் அவள் உள்ளெழுந்த இளங்கன்னி ஐயமும் ஏக்கமும் கொண்டு தவித்தாள். தன் அழகும் நெகிழ்வும் அவனுள் சென்று பதியவில்லைபோலும் என ஐயுற்றாள். இல்லையேல் அவன் விழிகளிலும் சொற்களிலும் அத்தனை விலக்கம் எப்படி வந்தது? பெண்ணுக்கு முன் அப்படி முற்றிலும் நடிக்க இயலுமா? இல்லையில்லை என்று அவள் உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. அவனுள் வாழ்கிறேன் நான், ஐயமே இல்லை. ஆனால் மறுகணமே அது தன் விழைவு காட்டும் மாயம்தானா என்று எழுந்த ஐயத்திலிருந்து அவளால் விடுபடவும் முடியவில்லை. இக்கணம் இது மறுகணம் அது எனும் ஓயா ஊசலாட்டத்தில் திருகுகுடுமி உரசி அனல்கொண்டு உருகி தவித்தது.

இரவில் விழித்துக்கொள்கையில் அவ்வெண்ணம் எழுந்து அனல்கொண்டு நின்று தவித்தது. முறுகி முறுகி உட்டணம் கொண்டு மறுபுரி சுழன்று தளர்ந்து சோர்ந்து கண்ணீர் நிறைந்து  இரு கன்னங்களிலும் வழிந்து காதுகளை அடைய விசும்பலை அடக்கி இருட்டுக்குள் படுத்திருந்தாள். வெறி கொண்டெழுந்தோடி வாயிலைத் திறந்து முற்றத்தைக் கடந்து அவன் குடில் வாயிலைத் திறந்து உள்ளே சென்று அவனருகே அமர்ந்து தலைமயிரை பற்றித் தூக்கி உலுக்கியபடி “சொல், நான் உனக்கு எவள்?” என்று கூவவேண்டுமென்று  விழைந்தாள். ஒருபோதும் நிகழாத அதை ஓராயிரம் முறை நடித்து சலித்தாள். ஒவ்வொரு முறையும் அவ்வெண்ணம் எழுகையில் உடல் பதறும் மறைமுக உவகைக்கு ஆளானாள்.

தன் விழிகளால் அவன் இறைஞ்சவேண்டும், தன் இரங்கும் சொற்களை அவள் காலடியில் வைத்து கோரவேண்டும்,  முற்றிலும் காதலென்றாகி உருகி தன் முன் நின்றிருக்கவேண்டும். தன்னிடம் அவன் காதல் சொல்லும் காட்சிகளை மீண்டும் மீண்டும் கற்பனையில் நிகழ்த்திக் கொண்டிருப்பதே அவள் நாட்களை அமைத்தது. தனித்திருக்கும் அவளை அணுகி தயங்கி நின்று, விழிதூக்கி என்ன என்று அவள் கேட்க “என்னை கொல்லாதே! உன் சொல்லின்றி ஒரு கணமும் உயிர் வாழேன்” என்றான். நீராடி சுனைவிட்டெழுந்து வருகையில் அவளை சோலையில் மறித்து “உன் அழகு என்னை பித்தனாக்குகிறது. இப்புவியில் பிறிதொன்றும் வேண்டேன்” என்றான். இரவில் துயிலின்போது அவள் குடிலின் சிறு சாளரத்தருகே வந்து இரவெல்லாம் நின்று அவள் மென்துயில்விழிப்பில் கேட்கும்படி  நீள்மூச்செறிந்தான். எழுந்து நோக்கிய அவளிடம் “குலம் வேண்டேன், குடி நாடேன், உற்றார் சேரேன், உன் அருகொன்றே போதும். எங்கும் செல்வேன், எவ்விழிவிற்கும் சித்தமாவேன், உன் சொல்லொன்றே வேண்டும்” என்றான். “மன்று நிற்பேன். மடலூர்வேன். பிறிதொன்றும் தேரேன். உயிர் விடுவேன். கடுநரகில் உழலவும் ஒருங்குவேன்” என்றான். ஒவ்வொரு கற்பனைக்குப் பின்னரும் ‘என்ன இது? எத்தனையோ முறை கூத்திலும் காவியத்திலும் கண்டது’ என்று அவளே ஏளனத்துடன் எண்ணிக்கொண்டாள்.  மீண்டும் மீண்டும் அதற்குள் வந்துகொண்டுமிருந்தாள்.

எப்போதோ ஒருமுறை “என்ன அலைக்கழிவு இது! இரும்புச்சிலையென்று இங்கிருந்தவள்தானா நான்? நீர்ப்பாவை நெளிவென எப்போது மாறினேன்? இத்தனை எளிதாக ஓர் ஆண் முன் தோற்கக்கூடியவளா? இதுதான் என்றும் நிகழ்கிறதா?” என்று தன்னை கேட்டுக்கொண்டாள். “தோற்பது இவனிடமல்ல, காமத்திடம். அது பிறிதெங்கும் இல்லை.  என்னுள் எழுந்துள்ளது. சிலையில் எழுந்த தெய்வத்திடம் சிலை தோற்கலாகாதா என்ன?” அவன் முன் செல்லும்போது தருக்கி நிமிரவேண்டும் என ஒவ்வொரு முறையும் அவள் எண்ணுவாள். ஆனால் செயற்கையான மிடுக்காக அது மாறும். அந்த நடையும் தோற்றமும் பழக்கமற்றவை என்பதனால் ஏதோ ஒன்று பிழையென்று ஆகும். கால் தடுக்கும், கைகளில் இருந்து ஏதோ ஒன்று நழுவும், எங்காவது தோள் இடித்துக்கொள்ளும். அது அவனை திரும்பிப் பார்க்கச்செய்யும். பின்னர் எண்ணிக்கொண்டாள், அது அவனை திரும்பச் செய்யவேண்டும் என்றே தன்னுள் வாழும் பிறிதொன்று ஆற்றும் சூழ்ச்சியா என. தெய்வங்களே, மூதன்னையரே, எத்தனை பேரின் கலவை நான்? என்னென்ன சேர்ந்து சமைத்தது என் உள்ளம்? ஒரே தருணத்தில் எத்தனை களங்களில் ஆடிக்கொண்டிருக்கின்றேன்!

tigerவேங்கைகள் அவனிடம் பூனைக்குட்டிகளென்றாவதை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். காட்டுக்குள் சென்ற அவனுக்காகக் காத்து அவை குருநிலையின் எல்லையில் அமர்ந்திருந்தன. அவன் வந்ததுமே செல்ல முனகலுடன் தாவி அவனை நோக்கி ஓடி எழுந்து கைவிரித்து அவனை அணைத்துக்கொண்டன. சுழன்று சுழன்று அவன் உடலை உரசி முத்தமிட்டன. என்ன செய்வதென்றறியாமல் பாய்ந்து ஓடி விலகி செவி பின்னுக்குச் சரித்து உடல்முடி காற்றில் அலைபாய கால்கள் ஒலிக்க அவனை நோக்கி பாய்ந்துவந்தன. அவனுக்கும் அவற்றுக்குமான உறவு குருநிலையிலேயே பேச்சென்றாகியது. அவனைக் கண்டதுமே வால் தூக்கி கால் பரப்பி உடல் குழைத்து கொஞ்சி அணுகும் வேங்கைகளைக் கண்டு பெண்கள் வாய்பொத்தி விழியொளிர நகைத்தனர். அவற்றின் கழுத்தையும் தலையையும் அவன் வருடிக் கொடுக்கையில் அவன் உடலில் தங்கள் உடல் சேர்த்து அவை நழுவிச்சுழல்கையில் ஆண்கள் முகங்களை இறுக்கி புன்னகையை கண்களில் மட்டுமே மின்னவிட்டனர்.

அவனுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் எங்கோ அவள் குரல் கேட்டு செவி திருப்பி மணம் கூர்ந்து தாவி அவளிடம் ஓடி பாய்ந்து அவள் உடலில் பற்றி ஏறி அவள் முகத்தில் முத்தமிட்டு தோளில் தலை வைத்து இடை பற்றி அணைத்து அவளை நிலை தடுமாற வைத்து அவை குலவின.  மெல்ல அவற்றின் நடத்தையில் ஒரு மாறுதல் நிகழ்வதை அவள் கண்டாள். அவளிடம்  சிறு குருளைகள்போலவே நடந்துகொண்டிருந்த அவை ஆண்மைமிடுக்கு கொள்ளலாயின. விழிகள் நிலைத்து கூர்ந்து நோக்க எண்ணி எடுத்து மெல்ல வைக்கும் கால்களுடன் நீட்டப்பட்ட வால்களுடன் அவளை நோக்கி வந்தன. அவளருகே அவளை நோக்காமல் தலைநிமிர்ந்து படுத்துக்கொண்டன. அவளருகே அயலவர் எவர் வந்தாலும் தோல்வாரைச் சுண்டுவதுபோன்ற மெல்லிய ஒலியெழுப்பி உறுமின. அவ்வொலியிலிருந்த எச்சரிக்கையை அத்தனை பேரும் அக்கணமே உணர்ந்து அஞ்சி விலகினர்.

இரவில் அவள் குடிலுக்கு வெளியே அவை ஒளிரும் விழிகளுடன் படுத்திருந்தன. விழிப்பு கொண்டு அவள் மஞ்சத்திலிருந்து மிகமெல்ல காலடி எடுத்துவைத்தாலும்கூட அந்த ஒலிகேட்டு மெல்லிய உறுமலுடன் அவற்றில் ஒன்று எழுந்து சாளரத்தினூடாக அவளை நோக்கியது. அவள் சோலையில் தனித்திருக்கையில் அவளை அணுகாமல் நோக்காமல் ஆனால் அவளுடன் என அவை சூழ்ந்து படுத்து பிறிதெதையோ செய்துகொண்டிருந்தன. பூச்சிகளை விரட்டியும் கைநகங்களையும் விலாவையும் நக்கி தூய்மைசெய்தும் சிறுகற்களை கைகளால் உருட்டிவிளையாடியும் அவளை அறியாதவையாக இருந்தன. அவள் அழைத்தால் ஒருகணம் கழித்தே அவை எழுந்து அருகே வந்தன. வாலை நீட்டியபடி ‘சொல்’ என நோக்கி நின்றன. அவற்றின் தலையிலும் கழுத்திலும் அவள் வருடியபோது அவற்றிலிருந்து அதுவரை அறிந்திராத மணம் ஒன்று எழுந்தது. அது பிற வேங்கைகளையும் அருகே வரச் செய்தது. அவை தன்னிடமிருந்து முற்றிலும் விலகிவிட்டன என்று அவளுக்குத் தோன்றியது. எப்போதும் உடனிருக்கையிலும் அவை அப்பாலிருந்தன.

அவற்றை அருகணையச் செய்ய அவள் செய்த முயற்சிகள் வீணாயின. அவற்றின் விழிகளை நேர்நோக்குகையில் அவள் நோக்கு சரிந்தது. அவற்றின் நோக்கு அவள்மேல் படிகையில் உள்ளுணர்வே அதை அறிந்தது. அவையறியாது அவற்றை நோக்கிக்கொண்டிருக்கையில்தான் வேங்கை எத்தனை நிமிர்வுகொண்ட விலங்கு என அவள் அறிந்தாள். யானையில் எடையாக புரவியில் விரைவாக காளையில் அமைதியாக வெளிப்படும் ஆற்றலே வேங்கையில் மென்மையென ஆகியது. ஓசையற்ற காலடிகள், வட்டக் குழவிமுகம், செவ்வுதடுகள், பால்படிந்த பைதல்விழிகள், மென்மயிர் தோல்நெளிவுகள். ஆனால் எழுந்து நடந்து அணுகுகையில் ஒவ்வொரு அணுவிலும் ஆண். சினந்து மூக்குநீட்டி செல்கையில் நூறுமுறை தீட்டிய வாள். கால்கள் படிய படுத்து கண்மூடித் துயில்கையிலும் நாணேற்றி அம்புபூட்டிய வில்.

சாளரம் வழியாக அவள் நோக்கி நின்றிருக்கையில் முற்றத்து சாலமரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பெரிய செம்பு அண்டா ஒன்றை ஐயத்துடன் அணுகி முகர்ந்து நோக்கியது ஒரு வேங்கை. அதன்பின் கையால் அதை அடித்துப் பார்த்தது. உளநிறைவுடன் சுற்றிவந்து கால்தூக்கி ஒரு சொட்டு சிறுநீர் கழித்தது. மீண்டும் சுற்றிவந்து அதன் விளிம்பில் காலை வைத்தது. அண்டா உருண்டு சரிந்து அதன் கால்மேல் விழ வீரிட்டு அலறியபடி அண்டாவின் விளிம்புக்கு அடியில் சிக்கிக்கொண்ட காலை இழுத்து எடுத்துக்கொண்டு மூன்று காலில் நொண்டியபடி ஓடி அவள் குடிலை நோக்கி வந்தது. அரற்றி அழுதபடி அவள் காலடியில் வந்து படுத்துக்கொண்டு அடிபட்ட காலை தூக்கிக் காட்டியது. அவள் சிரித்துக்கொண்டு அதன் காலைப்பற்றி நோக்கினாள். மெல்லிய வீக்கம் உருவாகத் தொடங்கியிருந்தது. அவள் அதை மெல்ல அழுத்தியபோது அது ஊளையிட்டபடி அந்தக் காலை நக்க வந்தது.

அவள் அடிபட்ட இடத்தை மெல்ல தடவிக்கொடுத்ததும் நா நீட்டி மூக்கை நக்கி காதுகளை சிலிர்த்தபடி அது ஒருக்களித்து படுத்தது. அவள் அதன் விலாவை தடவியபோது நான்கு கால்களையும் தூக்கி அடிவயிற்றைக் காட்டியது. அவள் வயிற்றைத் தடவியதும் பனையோலை கிழிபடும் ஓசையுடன் விழிசொக்கி சப்புகொட்டியது. அதன் இரு உடன்பிறந்தவையும் கால்தூக்கி வைத்து உள்ளே வந்தன. ஒரு வேங்கை அவள் அருகே வந்து படுத்து தானும் நான்கு கால்களையும் தூக்கி அடிவயிற்றைக் காட்டியது. அவள் அதையும் தடவிக்கொடுத்தபோது விழிசொக்கியது. அடிபட்ட வேங்கை ஒரு கண்ணை மட்டும் திறந்து உடன்பிறந்தவனை நோக்கியபின் மறுபக்கம் திரும்பிப் படுத்தது. மூன்றாம் வேங்கை ‘சரியான முட்டாள்கள்’ என முகம் காட்டி கண்களைச் சுருக்கியபடி வெளியே நோக்கி குடிலுக்குள் அமர்ந்தது. அவள் புன்னகையுடன் மல்லாந்த வேங்கையின் வயிற்றை வருடியபடி “என் செல்லம் அல்லவா? என் கண் அல்லவா? அமைதியாக உறங்கு…” என்று கனிந்த குரலில் சொன்னாள். அது கண்களை மூடிக்கொண்டு வாலைமட்டும் மெல்ல ஆட்டிக்கொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன் அஞ்சலிக்கூட்டம்
அடுத்த கட்டுரைநீலஜாடி