வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–50

50. அனலறியும் அனல்

சச்சியை இந்திராணி என அமராவதியில் அமர்த்தும்பொருட்டு புலோமன்  அசுரர்களின் பெரும்படையை திரட்டினான். தைத்யர்களும் தானவர்களும் அடங்கிய படைவிரிவு கடலுடன் கடலிணைந்து கடலென்றாவதுபோல திரண்டபடியே இருந்தது. அதன் வலப்பகுதியை காலகேயர்களும் இடப்பகுதியை புலோமர்களும் வழிநடத்தினர். தலைமுறை தலைமுறையாக வெற்றியென்பதற்கு அப்பால் ஏதுமறியாத மாவீரர்கள் அவர்கள். வெற்றி மேலும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை ஐயமில்லாது செயல்படச் செய்கிறது. ஐயமின்மை முடிவெடுப்பதில் விரைவை அளிக்கிறது. விரைந்து முடிவெடுப்பவர்கள் வெல்கிறார்கள்.

புலோமர்களுக்கும் காலகேயர்களுக்கும் பிறர் அறியாத குறிச்செயல்களும் மறைச்சொற்களும் இருந்தன. அவற்றினூடாக அவர்கள் தங்களுக்குள் உளமாடிக்கொண்டனர். அவ்வுளவலையால் அசுரர்களின் பெரும்படையை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். அசுரப்படை திரண்டு மண்ணிலுள்ள அத்தனை அரசர்களையும் வென்றது. அவர்களின் கருவூலங்களால் வேள்விகளை இயற்றி விண்ணுக்குரிய பாதைகளை வகுத்தது.

அசுரர்கள் வலுப்பெறுந்தோறும் அமராவதியில் அவர்களின் ஒலிகள் கேட்கலாயின. போர்முரசுகளின் ஓசை தொலைவில் இடிமுழக்கமென எழுந்து தேவர்களின் நிறைநிலையை கலைத்தது. அமுதுண்டு காதலாடி களித்திருந்தவர்களின் உள்ளத்தின் அடியில் எப்போதும் அவ்வோசை இருந்துகொண்டே இருந்தது. பின்னர் பேச்சுக்குரல்கள் அமராவதியில் ஒலிக்கலாயின. தேவர்களின் குரல் இசையாலானது. அதில் வன்தாளமென ஊடுருவி அடுக்கழித்தது அசுரர்களின் குரல்.

தேவதேவன் காத்திருந்தான். புலோமனின் மகள் சச்சி பதினாறாண்டு அகவை முதிர்ந்து முலைமுகிழ்த்து இடைபருத்து விழிகளில் நாணமும் குரலில் இசையும் நடையில் நடனமும் சிரிப்பில் தன்னுணர்வும் கொண்டு கன்னியென்றானபோது அவன் ஹிரண்யபுரிக்கு சென்றான். வளையல் விற்கும் வணிகனாக அணிவணிகர் குழுவுடன் இணைந்துகொண்டான். அணிவணிகராக அகத்தளம் புக இளவயதினருக்கு ஒப்புதல் இல்லை என்பதனால் அவன் தன்னை முகச்சுருக்கங்களும் விழிமங்கலும் தளர்குரலும் கொண்ட முதியவனாக அமைத்துக்கொண்டான். பாண்டியநாட்டு முத்துக்கள் பதித்த சங்குவளையலும் சேரநாட்டு தந்தவளையலும், சோழநாட்டுப் பவளம் பதித்த சந்தனவளையலும் திருவிடநாட்டு செவ்வரக்கு வளையலும் தண்டகாரண்யத்தின் வெண்பளிங்குச் செதுக்குவளையலும் அடுக்கப்பட்ட பேழையுடன் ஹிரண்யபுரியின் அரண்மனைக்குள் நுழைந்து மகளிர்மன்றுக்கு சென்றான்.

அணிவணிகர் வந்துள்ளனர் என்றறிந்ததுமே அசுரகுடி மகளிர் சிரித்தபடி வந்து சூழ்ந்துகொண்டனர். கலிங்கப்பட்டும் பீதர்பட்டும் கொண்டுவந்தவர்கள் பனியென அலையென நுரையென தளிரென வண்ணம் காட்டினர். மென்பாசிக் குழைவுகள், வெண்காளான் மென்மைகள், இளந்தூறல் ஒளிகள். மலர்களையும் கொடிகளையும் தளிர்களையும் நடித்து பொன் அணியென்றாகியிருந்தது. விழிகளையும் அனல்களையும் நடித்தன அருமணிகள். அழகுடையோர் என்பதனாலேயே அழகுக்கு அடிமையாகின்றனர் மகளிர். தங்கள் உடல்சூடிய இளமையையும் கன்னிமையையும் கனிவையும் கரவையும் குழைவையும் நெகிழ்வையும் பொருளென பரப்பியவைபோலும் அணிகள் என மயங்குகிறது அவர்களின் உள்ளம்.

அணிவணிகர்களில் வளையல் விற்பவர்களை பெண்கள் மேலும் விரும்புகின்றனர். காதணிகளும் மூக்கணிகளும் பெண்களின் நிகர்விழிகள். மார்பில் அணிபவையும் இடையணிபவையும் உடல்கொண்ட எழில்கள். கைவளைகளே அணியென்றான சிரிப்புகள். ஒலிகொண்ட ஒளிகள். வளையணிவிப்பவன் அவர்களை கைபற்றி அணிகளின் உலகுக்குள் அழைத்துச் செல்கிறான். உடல்குவித்து சிறுஅணித்தோரண வாயிலினூடாக அப்பால் நுழைகிறது கை. அள்ளிக்கொள்கிறது.  நிறைவுடன் விரிகிறது. அசைத்து ஒலியெழுப்பி நகைக்கிறது. வளையலிடுபவன்போல பெண்ணின் நகைமுகம் நோக்கி விழிகளுக்குள் விழிசெலுத்தி சொல்லாட வாய்ப்புள்ளவன் எவன்? அவள் அழகையும் இளமையையும் புகழ தருணம் அமைந்தவன். அவள் வண்ணத்தையும் மென்மையையும் வாழ்த்தினாலும் பிழை செய்தவனாக உணரப்படாதவன்.

வளையலுக்கு நீளும் கையின் அச்சமும் ஆவலும். அதன் மென்வியர்வை. அலகுசேர்த்த ஐந்து கிளிகள். ஐந்து நீள்மலர்கள். கைமணிகளில் முட்டித் தயங்குகிறது வளை. முன்செல்லலே ஆகாதென்று நின்றிருக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் மத்தகம் தாழ்த்தும் யானைகள் என கைமணிகள் அமிழ்கின்றன. வளையலை தன்மேல் ஏறிக்கடந்துசெல்ல ஒப்புகின்றன. சென்ற வளையல் அங்கே என்றுமிருப்பதுபோல் உணர்கிறது. சச்சியின் கைவிரல் மணிமுட்டுகள் மிகப்பெரியவை. அவற்றைக் கடந்துசெல்லும் பெரிய வளையல்கள் அவள் மெலிந்த மணிக்கட்டில் வளையங்களென தொங்கின. எனவே எடுத்துப்பொருத்தும் பொன்வளைகளை மட்டுமே அவள் எப்போதும் அணிந்தாள். சங்குவளையல்களையும் தந்தவளையல்களையும் சந்தனவளையல்களையும் பளிங்குவளையல்களையும் அவள் விரும்பினாள். அணிந்தால் அவை  அழகிழப்பது கண்டு வெறுத்தாள். தன் தோழியர் எவரும் சங்கும் பளிங்கும் தந்தமும் சந்தனமும் அணியலாகாதென்று தடுத்தாள். தன் முன் பொருத்தமான சங்குவளை அணிந்துவரும் சேடிமேல் சினம்கொண்டு பிறிதொன்று சொல்லி ஒறுத்தாள். அனலும் பொறாமையும் அணையாப் பெருஞ்சினமும் கொண்ட அவளை அருளும் மருளும் ஒன்றென முயங்கிய காட்டுத்தெய்வம் ஒன்றை வழிபடுவதுபோல அணுகினர்.

மகளிர்மன்றுக்குள் வார்ப்பு வளையல்களன்றி செதுக்கு வளையல்கள் கொண்டுவரக் கூடாதென்று மொழியா ஆணை இருந்தது. ஆகவே இந்திரன் தன் பேழையை எடுத்துவைத்து மூடியைத் திறந்து முத்துச்சங்கு, அருமணிப்பளிங்கு, செதுக்குதந்த வளையல்கள் அடங்கிய தட்டுகளை எடுத்து பரப்பியபோது மகளிர் முகங்கள் அச்சத்தால் சிலைத்தன. எவரும் அணுகிவந்து அவற்றை நோக்கவில்லை. மென்முருக்குப் பலகையாலான தட்டுகளில் பட்டுக்குழாய்களில் அமைந்த வளையல்களை நிரத்திவிட்டு இந்திரன் புன்னகையுடன் “வருக, அழகியரே! உங்கள் புன்னகையை வளையலொளி வெல்லுமா என்று பார்ப்போம். உங்கள் சிரிப்புக்கு தோழியாகட்டும் வளையலோசை” என்று பகட்டுமொழி சொன்னபோதும் எவரும் அணுகவில்லை. ஆனால் விழிவிலக்கி அப்பால் செல்லவும் எவராலும் இயலவில்லை. அவர்கள் அத்தகைய அணிவளைகளை அதற்குமுன் கண்டதே இல்லை.

அணுகும்போதே இந்திரனின் வளையல்களை நோக்கிவிட்டிருந்த சச்சி “அணிச்செதுக்கு வளையல்களா?” என்றபடி அருகே வந்து இடையில் கைவைத்து நின்றாள். “ஆம் இளவரசி, அரியணையமர்ந்து முடிசூடும் அரசியர் அணியவேண்டியவை. நீரலைகள்போல் அருமணிகள் ஒளிவிடுபவை. பாருங்கள்” என்றான். சச்சி முகத்தில் வஞ்சக்கனல் வந்துசென்றதைக் கண்ட தோழியர் அஞ்சி அறியாது மேலும் பின்னடைந்தனர். ஒருத்தி இளவரசி அறியாமல் சென்றுவிடு என்று இந்திரனுக்கு விழிகாட்டி உச்சரிப்புகூட்டி சொன்னாள். அவன் அவர்களின் அச்சத்தை புரிந்துகொள்ளாமல் “அமர்க இளவரசி, தங்கள் கைகளுக்கென்றே அமைந்த அணிவளைகளின் தவத்தை முழுமைசெய்யுங்கள்” என்றான்.

“என் கைக்கு பொருந்துவன எவை?” என்றபடி அவள் அமர்ந்தாள். அவள் புன்னகைக்குள் இருந்த சீற்றத்தை அறிந்த தோழியர் ஒருவரை ஒருவர் விழிமுனையால் நோக்கியபடி மெல்ல அமர்ந்தனர். அவர்களின் முகங்கள் வெளுத்து மேலுதட்டில் வியர்வை பனித்திருந்தது. கைவிரல்களை பின்னிக்கொள்கையில் வளையல்கள் ஒலித்தன. “இவை தங்கள் கைகளுக்கு பொருந்துபவை, இளவரசி” என இந்திரன் வளையல்களை எடுத்து முன்வைத்தான். “இவை மதவேழத்தின் மருப்பில் எழுந்த பிறைநிலவுகளை கீறிச் செய்தவை. அணிச்செதுக்குகளை நோக்குக! எட்டு திருமகள்களும் குடிகொள்கிறார்கள். எழு வகை மலர்கள் கொடிபின்னி பூத்துள்ளன” என்று சொல்முறியாது பேசிக்கொண்டே அவன் வளையல்களை எடுத்தான்.

“இவை வெண்பளிங்குக் கல்வளைகள். அரக்கிட்ட குழிகளில் அமைந்துள்ளன அருமணிகள். இளங்காலை ஒளியில் விண்மீன்கள் என மின்னுகின்றன அவை.” அவள் “என் மணிக்கட்டுக்கு பொருந்தியமையவேண்டும்… நீரே அணிவித்துவிடுக!” என கையை நீட்டினாள். அவன் எடுத்த வளையல்கள் அவள் கைமணிகளை கடக்கா என்பதை உணர்ந்த தோழியர் மூச்சிழுத்தனர். “வளையலிட அறிந்துள்ளீர், அல்லவா? தன் தொழில் நன்கறியாத வணிகனை இங்கே தலைமழித்து சாட்டையால் அடித்து கோட்டைக்காட்டுக்கு அப்பால் வீசிவிடுவது வழக்கம்” என்றபோது சச்சி மெல்ல புன்னகைத்தாள். வஞ்சம்கரந்த அவள் புன்னகை கிள்ளி எடுத்த சிறுசெம்பட்டு என ஓரம் கோணலாகியிருக்கும் என தோழியர் அறிந்திருந்தனர். அவர்கள் இரக்கத்துடன் அவ்வணிவணிகனை நோக்கினர்.

“தங்கள் விரல்மணிகள் பெரியவை, இளவரசி. இவ்வளையல்கள் அவற்றை கடக்கா” என்றான் இந்திரன். “ஆனால் பெருவெள்ளமென பொழிந்து நதிகளை நிறைக்கும் மழையை இளங்காற்றுகள் சுமந்துவருகின்றன. மிகமிக மென்மையான ஒன்று அவ்வரிய பணியை செய்யும்…” என்றபின் தோழியரிடம் “நீங்கள் சற்று விலகுக! நான் இளவரசியிடம் மட்டுமே அதை காட்டமுடியும்” என்றான். அவர்கள் அப்பால் விலகினர். அவன் தன் பெட்டிக்குள் இருந்து வாழைத்தளிர் என மிகமிக மென்மையாக இருந்த பட்டுத்துணி ஒன்றை எடுத்தான். அதை அவள் கையில் ஒரு களிம்புப்பூச்சுபோல மெல்ல பரப்பி அதன்மேல் அவ்வளையல்களை வைத்தான். மெல்ல பட்டைப்பற்றி இழுத்தபோது அவள் கையை இனிதாக வருடியபடி வளையல் எழுந்து கடந்து மணிக்கட்டில் சென்றமைந்தது.

இரு கைகளிலும் சங்கும் பளிங்கும் தந்தமும் செதுக்கி அருமணி பதித்த வளையல்களை அணிவித்தபின் அத்துணியை அவள் முன் இட்டான். மென்புகை என அது தரையில் படிந்தது. அவள் விழிதூக்கி அவனை நோக்கிய கணத்தில் இளைஞனாக தன் அழகுத்தோற்றத்தை அவன் காட்டினான். அவள் விழிகளுக்குள் கூர்ந்து நோக்கி “இந்த மென்மை என் உள்ளத்திலமைந்தது, இளவரசி” என்றான். முதல்முறையாக அவள் நாணம்கொண்டு முகம் சிவந்தாள். விழிகள் நீர்மைகொள்ள இமைசரித்து நோக்கை விலக்கிக்கொண்டாள். அவள் கழுத்தில் ஒரு நீலநரம்பு துடித்தது. முலைக்குவைகள் எழுந்தமைந்தன. அவள் எழுந்து எவரையும் நோக்காமல் தன் அறைநோக்கி ஓடுவதை தோழியர் திகைப்புடன் நோக்கினர்.

அவளுடன் சிரித்தபடி உடன்வந்தன வளையல்கள். அவள் அசையும்போதெல்லாம் ஒலித்தன. தன்னுடன் பிறிதொருவர் பிரிக்கமுடியாதபடி இணைந்துகொண்டதை அவள் உணர்ந்தாள். கைகளை நெஞ்சோடணைத்தபடி மஞ்சத்தில் படுத்து கண்களை மூடி புன்னகை செய்தாள். அவள் மட்டுமே கண்ட அவன் முகம் அவள் விழிமூடினாலும் திறந்தாலும் அழியாத ஓவியமென அவளுக்குள் பதிந்திருந்தது. அந்த முகத்தை அவள் மிக நன்றாக அறிந்திருந்தாள்.

சச்சி இந்திரன்மேல் பெருங்காதல் கொண்டாள். காதல் பெண்களை பிச்சிகளாக்குகிறது. காதல் கொள்ளும்வரை அவர்கள் ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி இயற்றுகிறார்கள். உலகியலில் திளைக்கிறார்கள். அறியாதவற்றை அஞ்சுகிறார்கள். தன்னில் திகழ்கிறார்கள். தன்னை நிகழ்த்துகிறார்கள். காதலின் ஒளிகொண்டதும் ஆடைகளைந்து ஆற்றில்குதிப்பதுபோல் அதுவரை கொண்டிருந்த அனைத்தையும் உதறி பாய்ந்து பெருக்கில் திளைத்து ஒழுகிச் செல்கிறார்கள். திசை தேர்வதில்லை. ஒப்புக்கொடுத்தலின் முழு விடுதலையில் களிக்கிறார்கள். எண்ணுவதில்லை, எதையும் விழைவதில்லை, அஞ்சுவதில்லை, எவரையும் அறிவதுமில்லை.

அவள் காதல்கொண்டுவிட்டாள் என தோழியர் அறிந்தனர். அக்காதலன் எவரென்றும் உணர்ந்தனர். ஆனால் அவன் எங்கிருந்து வந்தான் என்று அறியாது குழம்பினர். அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அவளிடம் வந்துகொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. இளங்காலையில் சிட்டுக்குருவியென மகரந்த மணத்துடன் அவள் அறைக்குள் நுழைந்தான். அவள் தோட்டத்தில் தனித்திருக்கையில் ஆண்குயிலென வந்து  குழலிசைத்தான். தனித்திருக்கும் அறைக்குள் பொன்வண்டென யாழ்மீட்டி வந்தான். அவளுடன் சொல்லாடினான். அச்சொற்களனைத்தையும் அவள் கனவுக்குள் பலநூறுமுறை முன்னரே கேட்டிருந்தாள்.

தன்னை மாயக்கலை தெரிந்த வஜ்ராயுதன் என்னும் கந்தர்வன் என அவளிடம் அவன் அறிமுகம் செய்துகொண்டான். மலர்ச்சோலையில் கொடிக்குடிலில் அவளுடன் இருக்கையில் அவன் கேட்டான் “உன்னை நான் மணம் கொள்ளக் கோரினால் உன் தந்தை என்ன செய்வார்?” அவள் முகம் கூம்பி தலைகுனிந்து “நீங்கள் தைத்யரோ தானவரோ அல்ல என்றால் ஒருபோதும் ஒப்பார். என்னை இந்திரனின் அரியணையில் அமரச்செய்ய பெரும்போர் ஒன்றை தொடுக்கவிருக்கிறார்” என்றாள். “அவ்வண்ணமென்றால் என்னுடன் நீ வந்துவிடு… நாம் கந்தர்வ உலகுக்குள் சென்று மறைந்து வாழ்வோம்” என்றான்.

“நான் இந்த நகரின் ஏழு காவல்சூழ்கைகளை கடக்கமுடியாது” என்றாள் சச்சி. “இதை காலகேயரும் புலோமரும் ஆள்கிறார்கள். அவர்கள் மட்டுமே அறிந்த நுண்சொல் வலை இதை பதினான்குமுறை சூழ்ந்துள்ளது.” இந்திரன் “அச்சொற்களை நீ எனக்குரை. நான் அவர்களை ஏமாற்றி உன்னை இங்கிருந்து அழைத்துச்செல்கிறேன்” என்றான். அவள் விழிநீருடன் “எந்தை அவற்றை எனக்கு கற்றுத்தருகையில் ஒருபோதும் பிறரிடம் பகிரலாகாதென்று குலம்மீதும் எங்கள் கொடிமீதும் அவர் முடிமீதும் ஆணைபெற்றுக்கொண்டார்” என்றாள். “ஆம், ஆனால் தந்தையைக் கடக்காமல் மகள் தன் மைந்தனை பெறமுடியாது என்பதே உலகநெறி” என்றான் இந்திரன். “வீழ்ந்த மரத்தில் எழும் தளிர்களை பார். அவை அந்த மரத்தையே உணவென்று கொள்கின்றன. ஆனால் மரம் வாழ்வது தளிர்களின் வழியாகவே.”

அவளை மெல்ல சொல்லாடி கரைத்தான். அவள் காலகேயரும் புலோமரும் கொண்டிருந்த மந்தணச்சொல் நிரையை, குறிகளின் தொகையை அவனுக்கு உரைத்தாள். ஒருநாள் இரவில் தன் வெண்புரவியாகிய உச்சைசிரவஸின் மேல் ஏறிவந்த இந்திரன் அதை பிறைநிலவின் ஒளிக்கீற்றுகளுடன் உருமறைத்து நிற்கச்செய்துவிட்டு அரண்மனைக்குள் புகுந்து அவளை அழைத்துக்கொண்டான். அவன் புரவியில் ஏறிக்கொண்டதும் அசுரர்கள் அவனைக் கண்டு எச்சரிக்கை முரசை முழக்கினர். காலகேயரும் புலோமரும் படைக்கலங்களுடன் அவனை சூழ்ந்தனர்.

ஆனால் அப்போது அவனுடன் தேவர்படைகள் முகில்குவைகளுக்குள் ஒளிந்து வந்து ஹிரண்யபுரியை சூழ்ந்துவிட்டிருந்தன. அவர்கள் புலோமர்களுக்கும் காலகேயர்களுக்கும் மட்டும் உரிய மறைமொழியில் பொய்யாணைகளை எழுப்பி பரப்பினர். ஆணைகளால் குழம்பிய புலோமரும் காலகேயரும் ஒருவரோடொருவர் போரிட்டனர். தைத்யரும் தானவரும் சிதறினர். வெறுந்திரள் என்றான அப்படையைத் தாக்கி அழித்தனர் தேவர். புரவியிலேற்றி சச்சியை விண்ணுக்குக் கொண்டுசென்று அமராவதியில் அமர்த்திவிட்டுத் திரும்பிய இந்திரன் புலோமனை களத்தில் எதிர்கொண்டான்.

தன் அசுரப்பெரும்படை காற்றில் முகில்திரளென சிதறியழிவதை நோக்கி சீறி எழுந்து போரிட்ட புலோமனை தன் மின்படைக்கலத்தால் நெடுகப்போழ்ந்து கொன்று வீழ்த்தினான் இந்திரன். புலோமன் அலறியபடி மண்ணில் விழுந்து நிலத்தில் புதைந்தான். அவன் வேள்வியாற்றலால் விண்ணில் நின்றிருந்த ஹிரண்யபுரி சிதறி பாறைமழை என மண்ணில் விழுந்து புதைந்தது. வெற்றியுடன் இந்திரன் திரும்பிவந்தபோது மீண்டும் இந்திராணியாக ஆகிவிட்டிருந்த சச்சி அவனை புன்னகையுடன் வரவேற்று மங்கலக்குறியிட்டு வாழ்த்தி அரண்மனைக்குள் அழைத்துச்சென்றாள்.

tigerசச்சியில் இந்திரன் ஜெயந்தனையும் ஜெயந்தியையும் பெற்றான். அன்னையின் இயல்புகள் அனைத்தையும் கொண்டிருந்தாள் ஜெயந்தி. மீண்டுமொருமுறை சொல்லப்படும்போது சொற்கள் கூர்மை கொள்கின்றன. விண்ணுலகில் எப்போதும் சினம்கொண்டு எரிந்துகொண்டிருந்த அவளை மண்ணுலகில் மலைமேல் நிற்கையில் ஒரு செங்கனல்துளி என மானுடரும் நோக்க இயன்றது. அனைவரும் அவளிடமிருந்து அகன்றே இலங்கினர். அவளை எதிர்கொள்கையில் நாகத்தின் முன் எலி என ஒரு பதுங்கல் அனைவர் உடலிலும் எழுந்தது.

எதன்பொருட்டு அவள் சினம் கொள்வாள் என தேவரும் முனிவரும் அறிய முடியவில்லை. உடன்பிறந்தவனும் அன்னையும் தந்தையும்கூட அதை உணர இயலவில்லை. அவளும் தான் சினம் கொள்ளவேண்டியது எதன்பொருட்டு என எப்போதும் எண்ணியிருக்கவில்லை. சினம் அவள் உடலை பதறச்செய்து உள்ளத்தை மயக்கத்திலாழ்த்தியது. சினமடங்கியதும் அவள் இனிய களைப்பொன்றிலாழ்ந்து ஆழ்ந்த நிறைவை அடைந்தாள். அவ்வின்பத்தின் பொருட்டே அவள் சினம் கொண்டாள். சினம் கொள்ளக்கொள்ள சினத்திற்கான புலன்கள் மேலும் கூர்மைகொண்டன. அவை சினம்கொள்ளும் தருணங்களை கண்டடைந்தன. அவள் முகம் சினமென்பதன் வடிவமாக ஆகியது. அவள் சொற்களும் நோக்கும் சினமென்றே மாறின.

புரங்களை எரிக்கும் அனலை தன் சொல்லில் அடையும்பொருட்டு சுக்ரர் கயிலைமலை அடிவாரத்தில் சிவனை நோக்கி தவமிருக்கும் செய்தியை அவர் தவம் முதிரும் கணத்திலேயே தேவர் அறிந்தனர். இந்திரனின் அவையில் வெம்மை கூடிக்கொண்டே சென்றதை மெல்லியலாளரான அவைக்கணிகையரே முதலில் அறிந்தனர். அவர்கள் ஆடல்முடித்ததும் உடல் வியர்வைவழிய மூச்சில் அனல்பறக்க விழிகள்எரிய சோர்ந்து அமர்ந்தனர். “என்னடி சோர்வு?” எனக் கேட்ட மூத்தவர்களிடம் “அவையில் அனல் நிறைந்துள்ளது” என்றனர். “அது நோக்கும் முனிவரின் கண்கள் கொண்டுள்ள காமத்தின் அனல்” என முதுகணிகையர் நகையாடினர். ஆனால் பின்னர் அவ்வனலை அவர்களும் உணரலாயினர். அனல் மிகுந்து சற்றுநேரம் அங்கு அமர்ந்ததுமே உடல்கொதிக்கத் தொடங்கியது. பீடங்கள் சுடுகின்றன என்றனர் முனிவர். படைக்கலங்கள் உலையிலிட்டவைபோல் கொதிப்பதாக சொன்னார்கள் காவலர்.

பின்னர் இந்திரனே தன் அரியணையில் அமரமுடியாதவனானான். அவைக்கு எவரும் செல்லாமலானார்கள். உள்ளே அரசமேடையிலிருந்த இந்திரனின் அரியணை எரிவண்ணம் கொண்டு கொதித்தது. அதன் சாய்வும் கைப்பிடியும் உருகி வடிவிழந்தன. “ஏன் இது நிகழ்கிறது? வரும் இடர் என்ன?” என்று இந்திரன் தன் அவைநிமித்திகரை அழைத்து கேட்டான். அவர்கள் நிகழ்குறிகள் அனைத்தும் தேர்ந்து “எவரோ ஒரு முனிவர் தவம்செய்கிறார். அத்தவம் தேவர்களுக்கு எதிரானது. என்றோ ஒருநாள் இந்நகரை அழிக்கும் வாய்ப்புள்ளது” என்றனர். “எவர் என்று சொல்க!” என அச்சத்துடன் இந்திரன் கேட்டான். அவர்கள் “அதை எங்கள் முதலாசிரியரே சொல்லக்கூடும்” என்றனர்.

நிமித்தநூலின் முதலாசிரியரான சூரியரை அவருடைய குருநிலைக்குச் சென்று வணங்கி வருநெறி கேட்டான் இந்திரன். அவர் மேலும் நுண்குறிகள் சூழ்ந்து “கயிலை மலையடிவாரத்தில் சுக்ரர் தவம் செய்கிறார். தன் சொல்லை வடவையெரி ஆக்கும் வல்லமையை கோரவிருக்கிறார்” என்றார். “சுக்ரரா? அவர் நம் ஆசிரியரின் முதன்மை மாணவர் அல்லவா?” என்றான் இந்திரன். “ஆம், ஆனால் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான ஆணவப்பகைமை ஆலகாலத்திற்கு நிகரான நஞ்சு கொண்டது. பிரஹஸ்பதியை வெல்லும்பொருட்டு அவர் தேவர்குடியை எதிர்ப்பார். அமராவதியை அனலூட்டவும் தயங்கமாட்டார்” என்றார் சூரியர்.

இந்திரன் “அவர் ஆற்றும் தவத்தை வென்றாகவேண்டும். எதிரியை கருவிலேயே வெல்வதைப்போல் எளிது இல்லை” என்றான். எண்ணிச் சூழ்ந்து பின் தன் அவைக்கணிகையரை அழைத்து “அவர் தவம் கலைத்து வருக! அவருள் ஓடும் ஊழ்க நுண்சொல்லின் நிரையில் ஒன்று ஒரு மாத்திரையளவு பிழைபட்டாலே போதும்” என்றான். சுக்ரரை உளம்மயக்கி வெல்லும்பொருட்டு  நூற்றெட்டு தேவகன்னியர் அணிகொண்டு சென்றனர். சுக்ரர் தன் பெருஞ்சினத்தை எரிவடிவ பூதங்களாக்கி பத்து திசைகளிலும் காவல்நிறுத்திவிட்டு தவமியற்றத் தொடங்கியிருந்தார். தழலென நாபறக்க இடியோசைபோல உறுமியபடி எழுந்து வந்த எரிபூதங்கள் அவர்களை உருகி அழியச்செய்தன.

உளம்சோர்ந்த இந்திரன் செய்வதென்ன என்றறியாமல் தன் அரண்மனைக்குள் மஞ்சத்தில் உடல்சுருட்டி படுத்துவிட்டான். அவனை தேற்றிய அமைச்சர்கள் “தென்குமரி முனையில் தவமியற்றுகிறார் நாரதர். அவரிடம் சென்று வழி உசாவுவோம். மலர் சூல்கொள்கையிலேயே கனிகொய்ய அம்பெய்பவர் அவர்” என்றனர். இந்திரன் முக்கடல் முனைக்கு வந்து அங்கே பாறைமேல் அமைந்த தவக்குடில் ஒன்றில் அமர்ந்து அலையிசை கேட்டிருந்த நாரதரை அணுகி வணங்கினான். “இசைமுனிவரே, நான் சுக்ரரின் அனல்வளையத்தை கடக்கும் வழி என்ன? அவர் கொள்ளும் தவத்தை வெல்வது எப்படி?” என்று வினவினான்.

“அனலை புனல் வெல்லும்” என்றார் நாரதர். “ஆனால் பேரனல்முன் புனலும் அனலென்றேயாகும்.” நிகழ்வதை எண்ணி புன்னகைத்து “அரசே, பேரனலை வெல்வது நிகரான பேரனல் ஒன்றே. வேடர்கள் அறிந்த மெய்மை இது” என்றார். “நான் செய்யவேண்டியது என்ன?” என்றான் இந்திரன். “சுக்ரருக்கு நிகரான சினமும் சுக்ரரை வெல்லும் வஞ்சமும் கொண்ட ஒருவரை அனுப்புக!” என்றார் நாரதர். அக்கணமே இந்திரன் செல்லவேண்டியது யார் என முடிவெடுத்துவிட்டான். “அவள் அவ்வண்ணம் பிறந்ததே இதற்காகத்தான்போலும்” என உடன்வந்த அமைச்சர்களிடம் சொன்னான். “கடுங்கசப்புக் கனிகளும் உள்ளன காட்டில். அவற்றை உண்ணும் விலங்குகளுக்கு அவை அமுதம்” என்றார் அமைச்சர்.

இந்திராணி தன் மகளை சுக்ரருக்கு மணமுடித்து அனுப்ப முதலில் ஒப்பவில்லை. “அழகிலாதவர், கேடுள்ளம் கொண்டவர், கீழ்மையில் திளைப்பவர். என் மகளுக்கு அவரா துணைவர்?” என்று சினந்து எழுந்து கூவினாள். “என் மகளுக்கு அவள் தந்தையை வெல்லும் மாவீரன் ஒருவன் வருவான். வரவில்லை என்றால் அவள் அரண்மனையில் வாழட்டும். நான் ஒருபோதும் அவளை அவருக்கு அளிக்க ஒப்பமாட்டேன்” என்று சொல்லி சினத்துடன் அறைநீங்கினாள். “அரசியின் ஒப்புதலின்றி இளவரசியை அவருக்கு அளிக்கவியலாது, அரசே” என்றார் அமைச்சர். “உங்கள் மயக்குறு சொற்திரள் எழட்டும். அரசியை எவ்வண்ணமேனும் உளம்பெயரச் செய்யுங்கள்.”

ஆனால் இந்திராணியை தேடிச்சென்ற இந்திரன் முன் அவள் வாயிலை ஓங்கி அறைந்தாள். “அவர் முகத்தை நான் நோக்க விழையவில்லை. அவரில் எழும் ஒரு சொல்லும் எனக்குத் தேவையில்லை” என்று அவள் கூவினாள். சோர்ந்தும் கசந்தும் தன் மஞ்சத்தறைக்கு வந்து இரவெல்லாம் இயல்வதென்ன என்று எண்ணிச் சலித்து உலவிக்கொண்டிருந்தான் இந்திரன். ஒன்று தொட்டு எடுக்கையில் நூறு கைவிட்டு நழுவுவதே அரசாடல் என்றும் நூறுக்கும் அப்பால் ஒன்று எழுந்து கைப்படவும் கூடும் என்றும் அறிந்திருந்தான் என்பதனால் அதைத் தேடி தன் உள்ளத்தை மீண்டும் மீண்டும் துழாவிக்கொண்டிருந்தான்.

ஆனால் அன்றிரவு துயில்நீத்து தன் அறையில் மஞ்சத்தில் படுத்து உருண்டுகொண்டிருந்த இந்திராணி புலரிமயக்கில் உளம் கரைந்தபோது அவள் கனவில் புலோமன் எழுந்தான். அவன் வலப்பக்கம் காலகையும் இடப்பக்கம் புலோமையும் நின்றனர். அவர்களுக்குப் பின்னால் பேருருக்கொண்ட மகாநாகமாக திதி ஏழுதலைப் படம் விரித்து அனல்விழிகளுடன் நோக்கிநின்றாள். “மகளே, நம் குலத்துக்காக” என்றான் புலோமன். “தந்தையே…” என அவள் விம்மினாள். “அவள் நம் குலத்தாள்” என்று அவன் மீண்டும் சொன்னான். விழித்துக்கொண்ட இந்திராணி அக்கனவை சற்றும் நினைவுறவில்லை. ஆனால் அவள் உள்ளம் மாறிவிட்டிருந்தது. புன்னகைக்கும் முகத்துடன் காலையில் வந்து இந்திரனின் அறைக்கதவை தட்டினாள். எரிச்சலுடன் வந்து திறந்த அவனிடம் “நம் மகள் செல்லட்டும்” என்று சொன்னாள்.

அன்னையும் தந்தையும் ஆற்றுப்படுத்த ஜெயந்தி இரு கந்தர்வப் பெண்களால் வழிநடத்தப்பட்டு சுக்ரரை சந்திக்கும்பொருட்டு சென்றாள். சீறி எதிர்வந்த எரிபூதங்களை நோக்கி அவள் சினம்கொண்டு சீறியபோது அவை அனலவிந்து தணிந்து பின்வாங்கின. அவள் விழிமூடி அமர்ந்திருந்த சுக்ரரின் அருகே சென்று நின்றாள். அவருடைய இடத்தொடையில் தன் கைகளால் தொட அவர் தவத்துக்குள் பேரழகுடன் எழுந்தாள். அவளுடன் அங்கு ஆயிரம் முறை பிறந்து காமம்கொண்டாடி மைந்தரை ஈன்று முதிர்ந்து மறைந்து பிறந்து பின் விழித்த சுக்ரர் எதிரில் நின்ற பெண்ணை நோக்கி சினத்துடன் தீச்சொல்லிட நாவெடுத்தார். அவள் சினத்துடன் “ஏன் சினம்? நான் உங்கள் துணைவி” என்றாள். சினம் அடங்கி “ஆம்” என்றார் அவர்.

சுக்ரரின் துணைவியாக ஜெயந்தி அவருடன் காட்டில் வாழ்ந்தாள். சினம்கொண்டு வஞ்சம்பயின்று தேர்ந்த அவள் உள்ளம் அவர் சினத்தையும் வஞ்சத்தையும் சித்திரப்பட்டுச் சீலையை இழைபிரித்து நூலாக்கி அடுக்குவதுபோல முற்றறிந்தது. சினமும் வஞ்சமும் காதல்கொண்ட பெண்ணில் வெளிப்படுகையில் அவை அழகென்றும் மென்மையென்றும் பொருள்கொள்வதை சுக்ரர் உணர்ந்தார். தன்னை அன்றி பிறிதொன்றை விரும்பியிராத அவர் தன்னை அவளில் கண்டு பெருங்காதல் கொண்டார். பிறிதொன்றில்லாமல் அவளென எழுந்த தன் ஆணவத்தில் மூழ்கித் திளைத்தார். பெண்ணென்று உருக்கொண்டு தன்னுடன் தான் காமம் கொள்ளுதலே பெருங்காதலென்று அறிக!

“தேவமகள் ஜெயந்தி ஈன்ற பெண்குழந்தை இரும்பில் தீட்டிய இரும்பில் எழும் அனலென்றிருந்தது. அதற்கு தேவயானி என்று பெயரிட்டனர்” என்றான் பிரியம்வதன். இந்திராணி பெருமூச்சுடன் மெல்ல அசைந்து அமர்ந்தாள். “எரி பிறப்பதை மெல்லிய சருகுகள் முதலில் அறிகின்றன. பின்னரே அறிகிறது பெருங்காடு” என்று சுவாக் சொன்னான்.

முந்தைய கட்டுரை‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 1 – இளையராஜா
அடுத்த கட்டுரைமுழுதுறக்காணுதல் 2 – கடலூர் சீனு