‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44

44. வில்லுறு விசை

நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்‌ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர் பட்ட முகிலென சிவந்து எரியலாயிற்று அது. எல்லைக்கு வெளியே நின்று பெருங்குரலெடுத்து அவளை அழைத்தான். இந்திரனின் நலம்திகழும்பொருட்டு ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை பிரம்மனுக்கு பூசெய்கை ஆற்றிவந்த இந்திராணி சோலைக்குள் மலர் கொய்துகொண்டிருந்தாள். பலமுறை எழுந்த அக்குரலைக் கேட்டு அவள் அங்கிருந்து எழுந்து வந்தாள். பிற ஆடவரை ஏறிட்டும் நோக்கக்கூடாதென்று நெறி இருந்தமையால் புறம் திரும்பி நின்று அவர்களிடம் “எதன்பொருட்டு வந்தீர்கள்? இங்கு பிற ஆடவர் குரலெழுவதும் பிழையே” என்றாள்.

வஜ்ராக்‌ஷன் “பெண்ணே, கேள். மண்ணில் விளைந்து விண்ணில் இந்திரனாக அமர்ந்திருக்கும் நகுஷேந்திரனின் ஆணை இது. இந்திரன் என முடிசூடியமர்ந்த அவருக்கு இந்திராணி உரிமைப்பட்டவள். உன்னை அழைத்து வரும்படி பணிக்கப்பட்டிருக்கிறோம்” என்றான். அவள் எழுந்த சினத்தை அடக்கி “அவ்வரியணையில் அவர் இன்னும் முழுமையாக அமரவில்லை. இங்கு நீங்களே சொன்னீர்கள் அவர் நகுஷேந்திரன் என்று. மண்ணில் அவர் கொண்ட அடையாளங்களையும் நினைவுகளையும் முற்றிலும் துறக்காதவரை அவர் எப்படி இந்திரனாக முடியும்?” என்றாள். “நான் இந்திராணியென்றாகவில்லை என்பதே அவர் இந்திரனாகவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.”

வஜ்ராக்‌ஷன் “நான் இதை அறியவேண்டியதில்லை. உன்னை இழுத்துச்செல்லும்படி ஆணை. நான் வெறுமனே மீண்டால் மேலும் பெரிய படை எழும். மேலும் பெரிய சிறுமை நிகழும்” என்றான். “அவனிடம் சென்று சொல்லுங்கள், இங்கு இந்திரன் என அமர்ந்திருப்பது அங்கு குருநகரியில் அரசனென வீற்றிருந்து நிலம்புரக்கும் அவன் அகத்தில் நிகழும் கனவுமட்டுமே என்று” என்றாள் இந்திராணி. “நான் இங்கு அவனை கணவனெனக் கொண்டால் அங்கே வாழும் மானுடனுக்கும் கனவுத்துணைவியென்றாவேன். கனவுகள் அனைத்தும் கலைபவையே என அவனுக்கு புரியவையுங்கள்” என்று சொல்லி உள்ளே சென்றாள்.

வஜ்ராக்‌ஷன் திரும்பி வந்து நகுஷேந்திரனிடம் இந்திராணியின் சொற்களை சொன்னான். சினம்கொண்டு தன் அரியணையிலிருந்து எழுந்த நகுஷன் “என்ன? என்னிடம் சொல்விளையாடுகிறாளா அவள்? ராஜசூயங்களும் அஸ்வமேதங்களும் இயற்றி கொடை முழுத்து ஒளிகொண்டு விண்ணேறி நான் வந்த இடம் இது. இங்கு காலமில்லை. எனவே முடிவிலிவரை நானே இந்திரன். இது கனவென்று சொல்ல என்ன அடிப்படை அவளுக்கு? இது கனவென்றால் இக்கனவைக் கலைத்து என்னை மீண்டும் குருநகரிக்கே செல்லவைக்கட்டும் அவள்” என்றான். திரும்பி அமைச்சர்களை நோக்கி “மேலும் படைகள் எழுக… அவள் இன்றே என் அவைக்கு வந்தாகவேண்டும்” என்று கூச்சலிட்டான்.

“அரசே, தன் சோலையை அனலால் வேலிகட்டியிருக்கிறாள். அதை கடந்து செல்ல தேவர்களால் ஆகாது” என்றான் வஜ்ராக்‌ஷன்.  “எனில் நானே வருகிறேன். நான் கடக்கமுடியாத இடமொன்று இந்திர உலகில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று மின்படையை எடுத்துக்கொண்டு நகுஷேந்திரன் கிளம்பினான். கைநீட்டி அவனைத் தடுத்த அஸ்வினிதேவர்கள்  “அரசே, இந்திர உலகில் இவ்வண்ணம் நெறிமுறை மீறும் வழக்கமில்லை” என்றனர்.  “அரச நெறிமுறைகளை அரசனே வகுக்கிறான். இவ்வுச்சிவரை நான் ஏறிவந்தது ஒருபோதும் கூர்மடங்கா என் விழைவினால் என்றுணர்க! அது மேலும் விசைகொள்ளுமே ஒழிய ஒருபோதும் தங்கி அமையப்போவதில்லை” என்று சொன்னபின் அவர்களை விலக்கி அவன் நடந்தான்.

இந்திராணியின் சோலையை அவன் அடைந்ததும் பின்னால் ஓடிவந்த வஜ்ராக்‌ஷன்  “அதோ, அதுவே அனல் வேலி” என்றான்.  “எங்கு வேலி? நான் எந்த வேலியையும் காணவில்லை” என்றபடி நகுஷன் மதம்கொண்ட யானையென நடந்தான். கந்தர்வர்கள் வேலிக்கு மறுபுறமே திகைத்து நின்றுவிட அவன் தடை எதையும் அறியாது நடந்துசென்று சோலைக்குள் புகுந்தான். அவன் வருவதைக் கண்டு மலர் தொடுத்துக்கொண்டிருந்த இந்திராணி  திகைத்தாள். அலறியபடி எழுந்தோடி தன் குடிலுக்குள் சென்று ஒளிந்துகொண்டாள்.

குடில் வாயிலில் வந்து நின்று நகுஷன் உரக்க குரலெழுப்பினான்.  “பெண்ணே, உன் தடைகளேதும் என்னை விலக்காதென்று இன்று அறிந்திருப்பாய்… நான் இந்திரன் என்று அமர்ந்திருப்பதனால் நீ எனக்கு சொந்தமானவள். நெறிகளின்படி இந்திரன் மாறினாலும் இந்திராணி மாறுவதில்லை. சென்ற இந்திரனை நினைத்துக்கொண்டிருப்பது நீ எனக்குச் செய்யும் வஞ்சம். அதனாலேயே நீ கற்பிழந்தவளானாய்” என்றான். நடுங்கியபடி குடிலுக்குள் பதுங்கியிருந்த இந்திராணி அங்கிருந்தே கைகூப்பி அழும் குரலில் “அரசே, விண்ணுலகில் தாங்கள் செல்லமுடியாத இடமொன்றில்லை. உங்களை மீறி ஒரு நெறியும் இங்கு புலர்வதில்லை. அது இங்கு அறம் வாழ வைப்பதன்பொருட்டு உங்களுக்கு தெய்வங்கள் அளித்துள்ள நற்கொடை. அதை அறம்மீறிச் செல்ல பயன்படுத்த வேண்டாம்” என்றாள்.

“இந்திரனுக்கு அறிவுரை சொல்ல வேண்டுமென்றால் நீ வந்து அரண்மனையில் இந்திராணியாக அமர வேண்டும்” என்று நகைத்தபடி சொன்னான் நகுஷன்.  “வெளியே வா, நான் உன்னை கூந்தல்பற்றி இழுத்துச்செல்வதை இந்நகர் காணவேண்டியதில்லை.” அவள் குளிர்ந்து சொல்லிழந்தவளானாள். “வா, இப்போதே!” என அவன் உரக்க கூவினான். அவள் குரல்பெற்றபோது எண்ணத்தால் நெடுந்தொலைவு சென்றிருந்தாள். “அரசே, இச்சோலையில் மலர்களை பார்த்தீர்களல்லவா?” என்றாள். “இது தேவருலகு. இங்கே மலர்கள் வாடுவதில்லை. ஆனால் இங்கு நாளும் மலர்கள் மலர்கின்றன, அந்தியில் வாடி உதிர்கின்றன. அவை என் எதிர்பார்ப்புகள்.”

“இது ஒன்றே சான்று, நான் நீங்கள் ஆளும் தேவருலகில் இல்லை என்பதற்கு” என அவள் தொடர்ந்தாள். “கூந்தல்பற்றி நீங்கள் இழுத்துச்செல்லலாம், அவள் இந்திராணியல்ல. வெறும்பெண். அரசே, எண்ணிநோக்குக! நான் என் கொழுநனின் நினைவுடன் உங்களருகே வந்து அமர்வேன் என்றால் அது உங்கள் மணிமுடிக்கு சிறப்பாகுமா?” நகுஷன் அச்சொற்களால் உளப்பெருக்கு அடங்கி திரும்பி அச்சோலையில் கிளைதாளாமல் எடைகொண்டு மலர்ந்திருந்த வெண்ணிற மகிழமலர்க் கொத்துகளை கண்டான். கீழே அவை உதிர்ந்து வெண்ணிறக் கம்பளம் போன்றிருந்தது நிலம்.

அவன் உளம்கொண்ட இடைவெளியில் புகுந்து  “நான் ஏன் இக்காதலுடன் இருக்கிறேன் என எண்ணுக! ஏன் என் உள்ளத்தில் அவர் நினைவு அழியவில்லை?” என அவள் கேட்டாள். “ஏனென்றால் இன்னமும் எங்கோ இந்திரன் என்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் முற்றழியவில்லை. அவர் எங்கோ அவ்விழைவுடன் எஞ்சுவதுவரை இங்கு நானும் இப்படியே இருப்பேன். அவரை கண்டுபிடியுங்கள். அவர் உள்ளத்தில் இருந்து என்னை அழித்து மீளுங்கள். நான் நேற்று அழிந்து இன்று என்று இங்கிருப்பேன். என்னை நீங்கள் மலர்கொய்வதுபோல கொய்யலாம். மார்பில் அணியலாம்” என்றாள். “ஆம், அவன் எங்கோ எஞ்சுகிறான் என்றால் என் முடியும் கோலும் நிலைகொள்ளவில்லை என்றே பொருள். அவனை மிச்சமின்றி வெல்கிறேன். அவன் நெஞ்சழித்து மீள்கிறேன்” என நகுஷன் வஞ்சினம் உரைத்து மீண்டான்.

அரண்மனைக்கு திரும்பும்போதே மேலும் கீழுமென அமைந்த பதினான்கு உலகங்களிலும் இந்திரனைத் தேடி கண்டடைந்து வரும்படி நகுஷன் கந்தர்வர்களையும் கின்னரர்களையும் கிம்புருடர்களையும் தேவர்களையும் யக்‌ஷர்களையும் பணித்தான். அவர்கள் சிறகு சூடிய சிறுபூச்சிகளாகவும் இளங்காற்றுகளாகவும் வண்ண ஒளிக்கீற்றுகளாகவும் நறுமண அலைகளாகவும் இசைத்துளிகளாகவும் உருக்கொண்டு நூறுமுறை அவ்வுலகங்களை சுற்றி வந்தனர். எங்கும் இந்திரனை கண்டடைய முடியவில்லை.  அவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் அமராவதியில் வந்து சோர்ந்து அமர்ந்தனர். செய்தியை கொணர்ந்த வஜ்ராக்‌ஷனை நோக்கி பெருஞ்சினத்துடன் கூவியபடி வாளுடன் பாய்ந்தான் நகுஷன். “இல்லை, தேவர்களாலும் கண்டறியமுடியாத இடமென ஒன்றில்லை” என்று கூவினான்.

“நீங்கள் என்னை ஏளனம் செய்கிறீர்கள். மானுடனென ஒருவன் முதிர்ந்து இந்திரனாவதை உங்களால் தாள இயலவில்லை” என்று கூச்சலிட்டான். அவையில் அமர்ந்திருந்த தன்வந்திரி முனிவர் புன்னகைத்து  “இதற்கு முன் இங்கு வந்த எந்த இந்திரனும் மானுடராக இருந்த நினைவை கொண்டுவரவில்லை. ஒவ்வொரு சொல்லிலும் அது எழுவதொன்றே நீங்கள் யாரென காட்டுகிறது” என்றார். கைகளை முறுக்கி பற்களைக் கடித்து  “முனிவரே ஆயினும் இருளுக்குள் உங்களைச் செலுத்தும் ஆற்றல் எனக்குண்டு. நினைவுகொள்க, அமராவதியின் அரசன் நான்” என்றான் நகுஷன்.  “அதையும் நாளுக்கு நான்காயிரம் முறை நீங்கள் உங்களுக்கே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார் தன்வந்திரி.

நகுஷன் தன் மின்படையை கையில் எடுக்க அவனை சனகரும் சனத்குமாரரும் சேர்ந்து பற்றி தடுத்தனர். “அரசே, சினம் அடக்குக! அவர் சொல்வதென்ன என்று செவிகொள்க!” என்றார் சனகர். வெறுப்பு நிறைந்த விழிகளுடன் தன்வந்திரி “எந்தக் கனவுக்குள்ளும் அது கனவே எனும் தன்னுணர்வு ஒரு துளி இருக்கும். கனவுகள் விந்தையெனத் தோன்றுவது அத்தன்னுணர்வால்தான்” என்றார்.  “யார் சொன்னது கனவென்று? சொல்லும், எப்படி சொல்கிறீர்கள் இது கனவென்று?” என்று சீறியபடி அவரை அணுகினான் நகுஷன்.  “சென்று பார்! அங்கே குருநகரியில் உன் முந்தைய வடிவம் அரசு வீற்றிருக்கிறது. அது அங்கில்லையென்றால் நீ இங்கு இருக்கிறாய் என்று கொள்!” என்றார் தன்வந்திரி.

சற்றுநேரம் அவரை நோக்கி நின்றபின் மெல்ல தளர்ந்து அவன் திரும்பினான். ஏளனத்துடன்  “சென்று பார்க்க வேண்டியதுதானே…?” என்றார் தன்வந்திரி. “இதுவல்ல, அதுவே என் கனவு” என்றான் நகுஷன். “அதை விட்டு இங்கு வந்தபோது என் மைந்தரை நான் முற்றுதறவில்லை. ஆகவே அது என்னுள் கனவென தங்கிவிட்டது.” மீண்டும் அரியணையில் அமர்ந்து “நான் சென்று அதை பார்க்கலாம். இங்கிருக்கும் நான் உருவாக்கும் மாயையாகவே அது இருக்கும். அது மெய்யல்ல” என்றபின் வெறியுடன் நகைத்து “இது நீங்கள் எனக்கு ஒருக்கும் பொறி. இதில் விழமாட்டேன்” என்றான். தன்வந்திரி உரக்க நகைத்தபின் எழுந்து அவை நீங்கினார்.

கொந்தளிப்புடன் தன் அரண்மனையின் உப்பரிகைகளில் உலாவிக்கொண்டும் சித்தமழிய மது அருந்திக்கொண்டும் சீற்றம் தணியும்படி மகளிருடன் காமமாடிக்கொண்டும் இருந்த நகுஷேந்திரனை அணுகிய வஜ்ராக்‌ஷன் உலகுலாவியாகிய நாரதர் வந்திருப்பதை அறிவித்தான். உடை திருத்தி முகம் செம்மையாக்கி அவன் அவைக்குச் சென்று அங்கே முனிவர்களுடன் தன் பயணக்கதைகளை சொல்லி நகையாடிக்கொண்டிருந்த இசைமுனிவரை கண்டு பணிந்து வணங்கினான். அவன் முகத்திலிருந்த துயரை நோக்கி மாறாப் புன்னகையுடன் அவர் “எதன்பொருட்டு இந்த நிலைகொள்ளாமை?” என்றார். “இந்திரன் என்றாலே நிலைகொண்டவன் என்றல்லவா பொருள்?”

தன் விழைவையும் இந்திராணியின் சொல்லையும் உரைத்து இந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நகுஷன் சொன்னான். நாரதர் நகைத்து “ஈரேழு உலகங்களிலும் இருக்கும் அத்தனை வடிவையும் தானெடுக்கும் வல்லமை கொண்டவன் இந்திரன். தன் உள்ளம் உருவாக்கும் அனைத்து வடிவையும் புறத்தே அமைத்துக்கொள்ளும் ஆற்றல் அவனுக்குண்டு. உன் ஒற்றர்கள் எவ்வடிவில் அவனை தேடினார்கள்?” என்றார். அப்போதுதான் தன் பிழையை உணர்ந்த நகுஷன் சோர்ந்து தன் பீடத்தில் அமர்ந்து  “ஆம். ஒரு மணற்பருவாக, ஒரு கடல்துமியாகக்கூட அவனால் ஒளிந்துகொள்ள முடியும்” என்றான். “மட்டுமல்ல, மேல்கீழ் உலகுகளில் இதுவரை எழுந்த எவ்விழியும் அறியாத புதுத்தோற்றம் கொள்ளவும் முடியும்” என்றார் நாரதர்.

“உங்களையே பணிகிறேன், உலகறிந்தவரே. நான் செய்யவேண்டியதென்ன?” என்றான் நகுஷன். “அரசே, தேடும் விழிகளிலிருந்து நாம் ஒளிந்து கொள்ளலாம். அஞ்சும் விழிகளிலிருந்து தப்புவது மிகக்கடினம். அன்பு கொண்ட விழிகளிலிருந்து தப்புவது எவராலும் இயலாது” என்றார் நாரதர்.  “என்ன சொல்கிறீர்கள்?” என்று குழப்பத்துடன் நகுஷன் கேட்டான். அவர் சொல்லவருவது என்னவென்பதை அவன் உள்ளம் மெல்ல புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது.  “தன் சோலையில் மலர்ந்துள்ள அத்தனை மலர்களையும் விழிகளென ஆக்கி கணவனுக்காக காத்திருக்கிறாள் இந்திராணி. அங்கு வாடி உதிரும் மலர்களை அள்ளிவரச் செய். உன் ஏவலர் கையில் ஒரு வாடிய மலருடன் தேடி அலையட்டும். எங்கு அம்மலர் மீண்டும் புதிதென மலர்ந்து ஒளிகொள்கிறதோ அங்கிருக்கிறான் இந்திரன் என்று பொருள்” என்றார் நாரதர்.

உளவிசை தாளாது தொடையில் தட்டி கூச்சலிட்டபடி எழுந்த நகுஷன்  “ஆம், இது ஒன்றே வழி! நன்று, முனிவரே! என் தலை தங்கள் முன் பணிகிறது. நன்று சொன்னீர்கள் எனக்கு!” என்றான்.  “அமைச்சர்களே, தேவர்களே” என்று கூவியபடி வெளியே ஓடி அனைவரையும் அழைத்தான். “இந்திராணியின் சோலையில் விழுந்து கிடக்கும் அத்தனை வாடிய மலர்களையும் கொண்டு வரும்படி மாருதர்களுக்கு நான் ஆணையிடுகிறேன். அம்மலர்களில் ஒன்றை எடுத்தபடி பதினான்குலகங்களிலும் செல்லுங்கள். இந்திரனை அந்த மலர்கள் அறியும்” என்று குரல் வீசினான். உளத்துள்ளல் தாளாமல் சுற்றிவந்தபடி “மலர்களிலிருந்து யார் தப்ப முடியும்? ஆம், மலர்களை எவர் ஒழிய முடியும்?” என்றான். நாரதர் “ஆம் அரசே, இருந்த இடத்திலிருந்தே பயணம் செய்பவை மலர்கள்” என்றார்.

tigerநூற்றியெட்டு மாருதர்கள் நகுஷனின் ஆணைப்படி இந்திராணியின் மகிழமரச் சோலைக்குள் புகுந்தனர். அங்கு உதிர்ந்து ஒளியழிந்து சருகென்றாகியும் பாதி மட்கியும் கிடந்த மலர்கள் அனைத்தையும் திரட்டி கொண்டுவந்து அளித்தனர். தேவரும் யக்‌ஷரும் கந்தர்வரும் கின்னரரும் கிம்புருடரும் கையில் ஒரு மலருடன் பத்து திசைகளையும் நோக்கி கிளம்பினர். அவர்களில் சூசிமுகன் என்னும் கந்தர்வன் மானசசரோவரை அடைந்ததுமே அவன் கையில் வண்ணமும் வடிவமும் இழந்து உலர்ந்து நத்தை எனச் சுருங்கியிருந்த மகிழமலர் பனிவிழும் புதுக்காலையிலென இதழ் விரித்து வண்ணமும் ஒளியும் கொண்டது. அதன் நறுமணத்தை உணர்ந்து நாற்புறமும் நோக்கிய பின்னரே தன் கையில் அது மலர்ந்திருப்பதை அவன் அறிந்தான். இளமைந்தனின் முதற்பல்லென அவன் கையில் அது வெண்ணிற ஒளிகொண்டிருந்தது. மானசசரோவரில் அவன் மேலும் தங்கவில்லை. எம்பி ஒளிவடிவு கொண்டு வானிலெழுந்து மின்னென வெட்டி அகன்றான். அவன் அமராவதிக்குத் திரும்புகையில் அணுகும்போதே அந்த மணத்தை உணர்ந்து  “என்ன மணம் அது? இதுவரை அறிந்திராத மணம்” என்றபடி நகுஷன் வெளியே வந்தான்.

சூசிமுகன் அவனை வணங்கி அந்த மலரைக் காட்டி  “அரசே, மானசசரோவரை அணுகும்போது இது மலர்ந்தது” என்றான்.  “ஒளிகொண்டு முகம் திருப்பி நீர்ப்பரப்பைக் காட்டியது.” நகுஷன் பாய்ந்து “கொடு அந்த மலரை!” என்று வாங்கி திரும்பி ஓடி தன் வியோமயானத்திலேறி மின்படைக்கலத்தை ஏந்தியபடி மானசசரோவரை நோக்கி சென்றான். அந்த மலரே அவனை வழிகாட்டி இட்டுச்சென்றது. மாருதர்கள் தேரென்றாகி அந்த மணத்தை தங்கள் மேல் ஏற்றிச்சென்றனர். “மகிழம் துயரிலாக் காத்திருப்பின் மலர், அரசே. இந்திராணி துயரிலியென அங்கிருந்தாள்” என்றான் ஒரு மாருதன். “மருதம் புணர்வின் மணம். குறிஞ்சி கண்டடைதலுக்கு. முல்லை கிளர்வுக்கு. நெய்தல் துயருக்கு. பாலை பெருவேட்கைக்கு. மணங்களால் ஆனது மானுட உள்ளம். மணங்கள் ஆள்கின்றன உறவுகளை.”

உளப்பெருங்குளத்தில் பிழைநிகர் தவம் புரிந்துகொண்டிருந்த இந்திரன் ஆயிரமாண்டு முற்றடக்கம் பயின்று உளம் கரைந்து இன்மையென்றானான். அலையடங்கி இழுத்துக்கட்டிய நீலப் பட்டுப்பரப்பென ஒளி கொண்டிருந்தது அந்நீர்நிலை. அதில் மாலை வானில் முதல் விண்மீன் எழுந்ததுபோல வெண்ணிறத் தாமரை மொட்டொன்று முகிழ்த்து வந்தது. அதன் முதல் இதழ் ஓம் எனும் ஒலியுடன் விரிந்தது. நான் எனும் ஒலியுடன் இரண்டாமிதழ் மலர்ந்தது. அது என மூன்றாமிதழ். இவை என நான்காவது இதழ். எல்லாம் என ஐந்தாவது இதழ். பொருள் என ஆறாவது இதழ். சொல் என ஏழாவது இதழ். நடனம் என எட்டாவது இதழ். நிலை என ஒன்பதாவது இதழ். ஒளியென்றும் இருளென்றும், இன்மையென்றும் இருப்பென்றும், எனதென்றும் பிறிதென்றும் கணந்தோறும் தன்னைப்பெருக்கி பல்லாயிரம் இதழ்கொண்ட வெண்தாமரையாக விரிந்தது இந்திரனின் அகம்.

அதன் நடுவே பொன்னிறப் புல்லிவட்டத்தில் ஒரு கருவண்டென எழுந்து அமர்ந்து அவன் தன்னை உணர்ந்தான். முடிவிலா மலர்தலின் மயக்கில் காலமிலியில் அமைந்திருந்தான். அப்போது விண்ணில் இருந்து ஓர் ஒளிக்கீற்றென சரிந்து வந்த வியோமயானம் அவனருகே அணுகி யாழொலியுடன் சுற்றிப்பறந்தது. அதில் மின்படைக்கலக் கருவியை கையிலேந்தி விரிந்த மகிழ மலரொன்றை மறுகையிலேந்தி அமர்ந்திருந்தான் நகுஷேந்திரன்.  “நான் உன்னை வெல்ல வந்தேன். இம்மின்படைக்கு எதிர் நில். அன்றேல் என் சொல்லுக்குப் பணி” என்று அவன் அறைகூவினான். புன்னகையுடன் கண்மலர்ந்து  “யார் நீ? நான் உனக்கு எவ்வண்ணம் எதிரியானேன்? எதன்பொருட்டு உனை நான் பணிய வேண்டும்?” என்று இந்திரன் கேட்டான்.

நகுஷன் “நீ அமராவதியின் அரசனாக முன்பிருந்த இந்திரன். அதை வென்று அரியணை அமர்ந்த நகுஷேந்திரன் நான். அங்கு என் வெற்றி முழுமையுறவில்லை. அதை நிறைவுறச் செய்யவே இங்கு வந்தேன்” என்றான். இந்திரன் முகம் மலர்ந்து  “ஆம், நீ சொன்னபின் உணர்கிறேன். விண்ணுலகை ஆண்ட இந்திரன் நான். பிழைநிகர் செய்யும்பொருட்டு என் உள்ளம் துறந்து பிறிதொன்றை சூடிக்கொண்டிருக்கிறேன். நீ என்னை எதன்பொருட்டு வெல்ல விரும்புகிறாய்?” என்றான்.  “உன் உள்ளத்தில் இந்திராணி வாழ்கிறாள். அமராவதியை அடைந்தவன் என்பதனால் அவள் எனக்குரியவள்” என்றான் நகுஷன்.

மேலும் அகம்விரிந்து புன்னகைத்த இந்திரன் “ஆம், இம்மாபெரும் மலருக்குள் நிறைந்திருக்கும் நறுமணம் எதைக் குறிக்கிறதென்று வியந்துகொண்டிருந்தேன். அது இந்திராணிமேல் நான் கொண்ட காதல். நறுமணத்தை மலர் இழக்க ஒப்புமா என்ன?” என்றான். அச்சொல்லால் சினம்கொண்டு “எழு என்னிடம் போருக்கு!” என்று நகுஷேந்திரன் அறைகூவினான். இந்திரன் சிரித்து  “போர் நிகழட்டும். ஆனால் வெற்றி என்று எதை கொள்வாய்? பொருளென்று என் கையிலிருக்கும் எதையோ ஒன்றை அடைவதே உன் வெற்றி என்றால் அது நன்று. மூடா, நீ வந்திருப்பது மலரிலிருந்து நறுமணத்தை மட்டும் அள்ளிச் செல்வதற்காக” என்றான்.

சொல்முட்டிய நகுஷன் மேலும் சினம்கொண்டு “நான் உன்னை போருக்கு அறைகூவுகிறேன். என் காலடியில் பணிக!” என்றான். “பணியலாம். துளியென்றும் தூசியென்றும் நான் ஆகலாம். அவள்மேல் நான் கொண்ட காதல் அழியுமா என்ன?” என்றான் இந்திரன். நகுஷன் தளர்ந்து  “எவ்வண்ணம் நான் அதை வெல்வேன்? நீயே கூறு!” என்றான்.  “சந்திரகுலத்து அரசனே, என்பொருட்டு அவள் தன் சோலையில் விரிய வைத்த அப்பல்லாயிரம் மலர்களின் நறுமணமே இங்கு இந்த மலரில் நிறைந்துள்ளது. நீ வெல்ல வேண்டியது என்னை அல்ல, அவளை. என்மேல் அவள் கொண்ட காதல் அழியுமென்றால், அச்சோலையின் மலர்களனைத்தும் மணமிழந்து உதிருமென்றால் பின் என்னிடமிருந்து நீ வென்றடைவதற்கு ஒன்றுமில்லை” என்றான்.  “ஆம், வென்று வருகிறேன். ஒருபோதும் அமையமாட்டேன்” என்றபின் நகுஷன் திரும்பி அமராவதிக்கு சென்றான்.

தவித்தும் குழம்பியும் தளர்ந்து அமராவதியை அடைந்த நகுஷேந்திரன் தன் அரண்மனைக்குள் நுழைந்ததும் பற்றி எரியலானான். சினமும் தவிப்பும் வெறுப்பும் விழைவும் ஒன்றையொன்று உந்த அலைகொந்தளிக்கும் உள்ளத்துடன் தன் அரண்மனையின் ஆயிரம் உப்பரிகைகளில் சுற்றி வந்தான். தன் அமைச்சர்களை அழைத்து  “சொல்லுங்கள், இந்திராணியின் உள்ளத்தை நான் வெல்லும் வழியென்ன?” என்றான்.  “அரசே, பெண்கள் பெரும்பரிசுகளை விரும்புவார்கள். அதைவிட பாராட்டை விரும்புவார்கள். அதற்கும் மேலாக பெருமதிப்பை விழைவார்கள். இவை அனைத்தையுமே இந்திரனென இங்கு அமர்ந்திருக்கும் உங்களால் அளிக்கமுடியும். இதற்கும் அப்பால் அவர் விழைவதென்ன என்று அறியேன்” என்றார் முதன்மை அமைச்சர்.

“அதை இந்திராணியிடமே கோரலாம்” என்றார் ஒருவர். “அவராலும் அதை சொல்லமுடியாது. தன் விழைவை தெளிந்துசொல்லும் பெண் என எவருமில்லை” என்றார் பிறிதொருவர். “அரசே, அதற்கும் நீங்கள் நாரதரையே நாடலாம்” என்றார் இன்னொரு அமைச்சர். “ஆம், அவரே எனக்கு வழிகாட்டுவார்” என்று கூறிய நகுஷன் ஐராவதம் மீதேறி ஏழாம் வானில் ஒரு முகில்மேல் அமர்ந்து விண்மீன்கள் உதிர்வதை நோக்கி மகிழ்ந்திருந்த நாரதரை சென்று கண்டான். “சொல்லுங்கள் இசைமுனிவரே, நான் இந்திராணியின் உள்ளத்தை எப்படி வெல்வேன்?” என்றான். “அவள் சோலையின் மலர்கள் என் காலடிகேட்டு மலரவேண்டும். அதற்கு வழி என்ன?”

“அவள் இந்திராணி. இந்திரனோ பெருவிழைவும் அதை ஊர்தியெனக்கொண்ட ஆணவமும் கொண்டவன். இந்திரன் இதுவரை இயற்றாத ஆணவச் செயலொன்றை செய்க! அவள் அதை காணட்டும். நீயே இந்திரன் என அவள் காதல்கொள்வாள்” என்றார் நாரதர். நகுஷன்  எண்ணி நின்றபின்  “அவள் அறியாத ஆணவம் எது?” என்றான்.  “அதை உன் அமைச்சரிடம் வினவியறிக!” என்றார் நாரதர். நகுஷன் அவைதிரும்பி அமைச்சர்களை அழைத்து “சொல்க, இந்திரன் செல்ல அஞ்சுமிடம் எது? செய்யத் தயங்கும் செயல் எது?” என்றான். “அரசே, முதல்தெய்வங்கள் மூவரை எதிர்ப்பதில்லை அவர். முனிவர் சொல்மீறுவதில்லை” என்றார் அமைச்சர்முதல்வர்.

தொடைதட்டி எழுந்த நகுஷன் “அழையுங்கள் எட்டு முனிவர்களை! என் பல்லக்கை அவர்கள் சுமக்கட்டும். நான் இந்திராணியை பார்க்கச் செல்கிறேன்” என்றான். திகைத்த அமைச்சர்கள் “என்ன சொல்கிறீர்கள்? அவர்களின் சொல் உங்களை பொசுக்கிவிடும்” என்றார்கள். “அதை பார்ப்போம். எங்கும் துணிந்தேறித்தான் இங்கு வந்துசேர்ந்தேன். இங்கிருந்தும் அவ்வாறே முன்செல்வேன்” என்றான் நகுஷன். “அழையுங்கள் முனிவர்களை… என் பல்லக்கை அவர்கள் சுமக்கவேண்டுமென நான் ஆணையிட்டேன் என அறிவியுங்கள்!”

சனகரும், சனாதனரும், சனத்குமாரரும், தன்வந்திரியும், சியவனரும், கௌதமரும், வசிட்டரும், உத்தாலகரும் மறுசொல்லின்றி வந்து அவன் பல்லக்கை சுமந்தனர். அதில் ஏறியமர்ந்து “செல்க மகிழமரச் சோலைக்கு!” என அவன் ஆணையிட்டான். தன் வலக்கையில் மின்படையை சவுக்காக ஆக்கி ஏந்தியிருந்தான். இடக்கையில் கல்பமரத்தின் மலரும் ஏந்தியிருந்தான். அவர்கள் நடக்கும் விரைவு போதாதென்று அவன் உள்ளம் தாவியது. “விரைக! விரைக!” என கூவினான். “நாகமென விரைக…!” என்று அவர்களை சவுக்கால் அடித்தான். எதிரே குறுமுனிவர் தன் ஏழு மாணவர்களுடன் வரக்கண்டதும் அவன் களிவெறி மிகுந்தது. “அவரிடம் சொல்லுங்கள், என் பாதைக்கு முன் வரவறிவித்து செல்லும்படி” என சூசிமுகனிடமும் வஜ்ராக்‌ஷனிடமும் ஆணையிட்டான்.

நிலமொழியில் “ஸர்ப்ப! ஸர்ப்ப!” என அவர்களை விரைவூட்டிக்கொண்டு அவன் செல்வதைக்கண்டு அகத்தியர் திகைத்து நின்றார். அவன் அருகே வந்து “என்ன நோக்கி நிற்கிறீர்? என் ஆணையை கேட்கவில்லையா நீர்?” என்றான். சீற்றத்துடன் கைதூக்கிய அகத்தியர் “உன் நாவிலிருந்து ஒலித்தவன் நாகன். அறிவிலியே, நீ மாநாகமென ஆகுக! மண்ணில் இழைக! ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் உன் குடிப்பிறந்தவனால் உன் ஆணவம் அழியும். அன்று மீண்டெழுந்து விண்ணவனாக வருக!” என தீச்சொல்லிட்டார். அக்கணமே பல்லக்கிலிருந்து புரண்டு  வானையும் காற்றையும் கிழித்தபடி  இறங்கி பேரோசையுடன் மண்ணில் வந்து விழுந்தான் நகுஷன். வரும்போதே அவன் உடல் நீண்டு வளைந்து ஏழு சுருள்கள் கொண்ட நாகமாக மாறியது. மண்ணில் விழுந்து தலை எழுந்து நா சீற அவன் நெளிந்தபோது தன் கீழுடல் கல்லென்றாகியிருப்பதை கண்டான். உடல் நெளித்து அந்த எடையை இழுத்தபடி சென்று அருகே இருந்த சிறிய குகைக்குள் புகுந்து இருளுக்குள் ஒளிந்து சுருண்டுகொண்டான்.

முந்தைய கட்டுரைகருணை நதிக்கரை -2
அடுத்த கட்டுரைகருணைநதி -கடிதங்கள்