அழிமுகம்:மேலும் கடிதங்கள்

ஐயா,
திரும்பத் திரும்ப படிப்பவரின் மனதைப் பிசையும் எழுத்து !
பல புதிய விளக்கங்களை அழகாக தெரிவிக்கிறீர்கள். மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.
நடுவில் ஒரு சிந்தனை..இப்பை அன்பையும் நட்பையும் மற்றவர்களிடம் பெறுவது எதனால்?
உங்கள் இயல்பான , முகமூடி அற்ற பழகு முறை , நீங்கள் சந்திப்பவர்களை இயல்பாக
இருக்கத் தூண்டுகிறது போலும்!  
இந்தக்குறிப்பிட்ட போஸ்டும் நீங்கள் சந்தித்த மனிதர்களின் அன்பையும் நேசத்தையும், ஒரு மெல்லிசை போல தெரிவிக்கிறது. 
இதை மலயாளத்தில் எழுதினால் கதீஜாம்மா கட்டாயம் படிக்க சான்ஸ் உள்ளது என என் மனம் சொல்கிறது.

வணக்கம்

வெற்றிமகள்

அன்புள்ள வெற்றிமகள்

எளிய மக்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்காக வாழ்வுடன் நேர்மையுடன் போராடும் விதத்தில் ஆன்மீகமான ஏதோ ஒன்று உள்ளது என்று எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. கதீஜாம்மா இப்போது கிட்டத்தட்ட எழுபது வயதான பாட்டியாக இருபபாள். எல்லா பாட்டிகளையும்போஒல அன்பான பாட்டியாக ஜெ

 

**8

வணக்கம் ஜெயமோகன் சார்
 
எனது மெயிலில் வந்த உங்களது “அழிமுகம்” கட்டுரை வாசித்தேன்.
வாழ்வின் கடைநிலைக்கு அறியாமை பிளஸ் குடும்ப சூழல் எனும் வலுக்கட்டாயத்தினால் தள்ளப்படும் முக்கால்வாசி முஸ்லீம் பெண்களும் நீங்கள் சொன்னதைப் போல மட்டுமன்றி இன்னும் பல இன்னல்களை தாண்டி தான் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைக் கடந்தே தீர வேண்டும் என்பது அவர்களது தலைவிதியோ என்னவோ? கேரளத்தில் இத்தகைய கொடுமைகள் அதிகம் என்பதால் தான் “பாடம் ஒன்னு ஒரு விலாபம்,கிளிச்சுண்ட மாம்பலம்” என்றெல்லாம் முஸ்லீம் பெண்களின் திருமண அவலங்களை வெளிச்சம் போடும் திரைப் படங்கள் எடுக்கப் படுகின்றனவா?
 
நட்புடன்
பரணி

அன்புள்ள பரணி

அது இஸ்லாமியர் வாழ்க்கைச்சித்திரம் மட்டுமல்ல.இ¢ந்து கிறித்தவ சமூகங்கள் எதுவுமே இதற்கு விவிலக்கு அல்ல. பொருளியல் ரீதியாக ஆணைச்சார்ந்து வாழ்ந்தாக வேண்டிய அவலமும் குழந்தைகளை வளர்த்தாகவேண்டிய பொறுப்பும் ஒரேசமயம் பெண்ணுக்கு அளிக்கபப்டுவதன் விளைவு இது. ஆணாதிக்க சமூகங்களில் மட்டுமே விபச்சாரம் இருக்கிறது, பெண்வழிச்சமூகமான புராதன கேரளத்தில் விபச்சாரமே இருந்ததில்லை
ஜெ

**

அன்புள்ள ஜெயமோகன்,

அழிமுகம் கட்டுரையைப்படித்தபோது இவ்விஷயத்தை நீங்கள் குமுதம் இதழிலே எழுதியிருந்தீர்கள் என்பது ஞாபகத்து வந்தது. அதைப்பற்றி தினமலர் அந்துமணி என்பவர் ஜெயமோகன் குமுதத்தில் எழுதும்போது விபச்சாரிகளைப்பற்றியெல்லாம் எழுத ஆரம்பிக்கிறார் என்று சொல்லியிருந்தார். மிக உருக்கமான கட்டுரை. போலி மனிதாபிமானம் இலலமல் நேரடியாக எழுதப்பட்டது. இதை ஒரு மிகச்சிறந்த இலக்கியம் என்றுதான் நான் சொல்வேன்
குமாரகுரு

முந்தைய கட்டுரைதூரன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைமேயோ கிளினிக்:கடிதங்கள்