‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15

15. இருகருவிருத்தல்

தாரை  கருவுற்றிருக்கும் செய்தி அவர்கள் இருவரையுமே விடுவித்தது. அவர் அனைத்தையும் உதறி இளஞ்சிறுவன் என்றானார். குழவியின் நினைவன்றி பிறிதில்லாதவராக முகம் மலர காடுகளிலும் நகர்தெருக்களிலும் அலைந்தார். பிறக்கவிருக்கும் குழவிக்கு விளையாட்டுப்பொருட்களும் ஆடைகளும் கொண்டுவந்து சேர்த்தார். மனைவிக்கு வேதுவைக்கவும் மூலிகைச்சாறு கொடுக்கவும் தானே முன்னின்றார். பிறர் நகையாடுவதுகூட பெருமையென்றே தோன்றியது. “முதுமையில் பிறக்கும் மைந்தன் முற்றறிஞன் ஆவான் என சொல்லுள்ளது” என்று சொன்ன காமிக முனிவரிடம் அவர் அருகே நின்ற முனிவர்களின் ஏளனப்புன்னகையை உணராமல் “ஆம், அவன் அழியாத தண்ணொளி கொண்டவன். அவன் கருநிமித்தங்களை கருதிநோக்கினேன்” என்றார்.

அவளும் முழுமுகமலர்வை அடைந்தாள். அப்போதுதான் அவள் அவ்வாறு மகிழ்வதையே தன்னுள்ளம் விழைந்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். ஐயம்கொள்ளற்கு அரிய ஒன்றின்பொருட்டு அது நிகழவேண்டுமென்றே அவர் எண்ணியிருந்திருக்கிறார். துயர்கொள்வதை ஆழுள்ளம் விரும்புவதனால்தான் அதை வளர்த்துக்கொள்கிறது. ஆனால் துயர் இயல்புநிலை அல்ல, அந்த வாள்முனையில் நெடுந்தொலைவு நடக்கமுடியாது என அறிந்தார். அனைத்தையும் வீசிவிட்டுக் களித்தாட விழைந்திருந்தனர் இருவரும். அது கருக்கோளால் அமைந்தது.

பிறக்கவிருக்கும் குழவியைப்பற்றி பேசிப்பேசி பன்னிருகால் புரவியில் நாள் கடந்தனர். அக்குழவியின் அழகும் பெருமையும் அதற்கென வெளியே அவர்கள் செய்யவேண்டியவையும் என தொட்டுப்பேசி அது சலிக்கையில் அதைக் குறித்த அச்சங்களுக்கு சென்றனர். கருவிலேயே நோயுறுமோ என அவள் கேட்டாள். கருநாகங்களை கனவுகாண்பதாக சொன்னாள். அசைவிழந்துள்ளதோ என ஐயுற்றாள். அஞ்சி பாய்ந்துவந்து அவரை கட்டி இறுக்கிக்கொண்டு உடல்நடுங்கினாள். “என்ன இது? உனக்கென்ன பித்தா?” என்றார் அவர். அவளை பேசிப்பேசித் தேற்றி இயல்படையச் செய்தார்.

அவள் அவ்வாறு நடுங்குவதும் தான் தேற்றுவதும் மிகத்தொன்மையான ஒரு நாடகத்தில் ஒவ்வொரு முறையும் புதியதாக இருக்கும் நடிப்பு என அவர் உள்ளம் அறிந்தது. ஆனால் அத்தருணம் தித்தித்தது. மகவைப்பற்றிய இன்மொழிகளைச் சொல்லி மெல்ல அவளை மலரச்செய்தார். அவள் விழிகசிய உடல் மெய்ப்புகொள்ள முலைக்காம்புகள் கூர்கொண்டு அதிர அதைக் கேட்டு நீள்மூச்செறிந்தாள். பின்னர் பாய்ந்து அவரை கைகவ்வித் தழுவி “செத்துவிடுவேன்… அப்படியே செத்துவிடுவேன்” என புலம்பினாள். “என்ன இது வீண்பேச்சு? நான் இல்லையா என்ன?” என்றார். அச்சொற்களை தன் தந்தையரும் அவ்வாறே சொல்லியிருக்கக் கூடுமென உணர்ந்தபோது அவை மேலும் இனிதாயின.

இனித்து இனித்து கடந்த ஒன்பது மாதங்களில் அவர்கள் நெடுந்தொலைவு வந்துவிட்டிருந்தனர். அவள் பேற்றுநோவு கொண்டபோது அவர் அவள் நீராடுவதற்காக மூலிகைவேர் சேர்க்கும்பொருட்டு காட்டிலிருந்தார். மாணவன் ஒருவன் வந்து மூச்சிரைக்க “தேவிக்கு வலி” என்றான். அவருக்கு ஈற்றுநோவென உளம் கூடவில்லை. “விழுந்துவிட்டாளா? எங்கே?” என பதறி ஓடினார். எதிரே ஓடிவந்த இன்னொருவன் சிரித்தபடி “ஆண்மகவு…” என்றான். “எங்கே?” என்றார். “ஆசிரியரே, தங்களுக்கு மைந்தன் பிறந்துள்ளான்.” அவர் கைதளர அப்படியே அருகிருந்த பாறையில் அமர்ந்து “தெய்வங்களே!” என்றார்.

மாணவர் தோள்பற்றி அவர் இல்லம் மீண்டார். எதிரே வந்த முதுசெவிலியின் முகத்திலிருந்த புன்னகையில் பிறிதொன்றும் இருப்பதை அவர் அகம் உணர்ந்தது. “நற்செய்தி ஆசிரியரே, தண்ணொளி கொண்ட மைந்தன்!” என்றாள். அவர் “ஆம், அறிந்தேன்” என்றார். குடிலில் ஏறி அங்கு நின்றிருந்த பெண்களை நோக்கியபோது அனைவர் முகத்திலும் அந்த முள்பொதிந்த புன்னகை இருப்பதை கண்டார். “எங்கே?” என்றார். “வருக!” என அவரை அழைத்துச்சென்றாள் ஒருத்தி.

ஈற்றறைக்குள் மரவுரிமேல் கிடந்தாள் தாரை. அருகே மென்பஞ்சு துகிலுக்குள் குழவியின் தலைமட்டும் தெரிந்தது. “வெள்ளிக்குழல்…” என்றாள். அவர் கைகள் நடுங்கத் தொடங்கின. அவள் துணியை விலக்கி மைந்தனை காட்டினாள். “பால்வெண்நிறம்…” என்றாள். அவர் குழவியை குனிந்து நோக்கியபோது கால்கள் தளர்ந்தன. அதன்மேலேயே விழுந்துவிடுவோம் என அஞ்சினார். ஒரு நோக்குணர்வை அடைந்து திரும்பி அவள் விழிகளை சந்தித்தார். முற்றிலும் ஆர்வமற்ற விழிகளுடன் அவரை நோக்கியபின் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

திரும்பிவந்து இல்லமுகப்பில் அமர்ந்தபோது தன் உள்ளம் ஏன் அமைதிகொண்டிருக்கிறது என்று அவருக்கே புரியவில்லை. குழவிநலம்சூழ முனிவர்துணைவியரும்  பிறபெண்டிரும் வந்துகொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் சந்திரன் தன் அணுக்கர்களுடன் வரும் ஒலி கேட்டது. தேர் வந்து நின்றதையும் அணுக்கர் புரவிகளிலிருந்து இறங்கியதையும் கண்டபின்னரும் அவர் எழவில்லை. புன்னகையுடன் அணுகி வந்த சந்திரன் “இங்கு பிறந்துள்ளது என் மகன் என்று நான் அறிந்தேன். அவனையும் அவன் அன்னையையும் அழைத்துச்செல்லவே வந்தேன்” என்றான்.

“அதை முடிவுசெய்யவேண்டியவள் அவளே” என்று அவர் அவன் கண்களை நோக்கி சொன்னார். கௌதமரின் துணைவியாகிய முதுமகள் உள்ளிருந்து இறங்கிவந்து “என்ன சொல்கிறாய்? பிறன்மனை தேடும் இழிவு இன்னுமா உன்னிடம் வாழ்கிறது?” என்றாள். “அவள் வந்துசொல்லட்டும்” என்றான் சந்திரன். உள்ளிருந்து தாரை குழவியை துணிச்சுருளில் சுற்றி எடுத்துக்கொண்டு வந்து நின்றாள். “செல்வோம்” என்றாள். அனைவரும் திகைத்து அவரை நோக்க அவர் விழிகளை அசையாமல் நிலைக்கச்செய்து அங்கு நின்ற ஒரு மரத்தை வெறித்துக்கொண்டிருந்தார்.

“வருக!” என அவள் கைகளைப்பற்றி தேர்நோக்கி அழைத்துச்சென்றான் சந்திரன். நிமிர்ந்த தலையுடன் உறுதியான அடிவைத்து அவள் நடந்துசென்று தேரிலேறிக்கொண்டாள். அவர்கள் அமராவதிநகரின் தெருக்கள் வழியாக சென்றபோது இருமருங்கும் தேவரும் துணைவியரும் வந்து நின்று நோக்கினர். அவள் யானைமேல் மணிமுடிசூடி அமர்ந்து நகர்வலம் செல்லும் பேரரசி போலிருந்தாள்.

images “சந்திரன் தாரையை மணந்து பெற்ற மைந்தன் புதன். வெள்ளியுடல் கொண்டிருந்த மைந்தனை சந்திரன் உருகிச்சொட்டிய துளி என்று மண்ணிலுள்ளோர் கண்டு வாழ்த்தினர். விண்ணில் ஒரு வெண்தழலெனச் சுழன்று சென்ற புதன் தன்னருகே மங்கா ஒளிர்சிரிப்புடன் சென்ற அழகி ஒருத்தியை கண்டான். “யார் இவள்?” என்று அவன் வினவியபோது வைவஸ்வத மனுவின் மகளான அவள் பெயர் இளை என்றறிந்தான். பின்னர் அவன் அங்கே வந்தபோது அவள் தோற்றம்கொண்ட அழகிய இளைஞன் ஒருவனை கண்டான். “அவன் இளையின் உடன்பிறந்தவனாகிய இளன். அவர்கள் இரட்டையர் போலும்” என்றனர்.

வைவஸ்வத மனுவுக்கு சிரத்தை என்னும் துணைவியில் பிறந்த இளையை மணம்கொள்ள புதன் விழைந்தான். ஒருநாள் அவள் தந்தையிடம் சென்று அவர் கன்னியை கைக்கொள்ள கோரினான். “அவள் இங்கில்லை. அடுத்த மாதம் இளவேனில் எழுகையில் இங்கு வருக!” என்றான் அவள் உடன்பிறந்தானாகிய இளன்.  அவன் புன்னகையில் அறியாத பொருள் ஒன்று இருப்பதாக உணர்ந்தவனாக புதன் திரும்பி வந்தான். மீண்டும் அடுத்த மாதமே சென்று வைவஸ்வத மனுவின் இல்லக் கதவை தட்டினான். இம்முறை அழகிய புன்னகையுடன் கதவைத் திறந்த இளை சிரித்தபடி “அன்னையே, நீங்கள் சொன்ன வெள்ளியுடலர்” என்றாள்.

வைவஸ்வத மனுவும் சிரத்தையும் அவனை முகமன் சொல்லி அமர்த்தினர். “உங்கள் மைந்தன் இல்லையா இங்கு?” என்றான் புதன். “அவன் வெளியே சென்றுள்ளான். உங்கள் விழைவை சொல்க!” என்றார் வைவஸ்வத மனு. “உங்கள் மகளை மணம்கொள்ள விழைகிறேன்” என்றான் புதன். வைவஸ்வத மனு “எவரும் விழையும் அழகி இவள் என்று நான் அறிவேன். இவள் கைகோரி நாளும் ஒரு தேவன் வந்து என் வாயிலை முட்டுகிறான். ஆனால் இவளை மணப்பவனுக்கு ஒரு தெரிவுமுறைமையை நான் வகுத்துள்ளேன்” என்றார். “சொல்க!” என்றான் புதன்.

“எவர் பிறிதொருவர் கூறாத பெரும்செல்வம் ஒன்றை அவளுக்கு கன்னிப்பரிசென்று அளிக்கிறார்களோ அவனுக்குரியவள் அவள்” என்றார் வைவஸ்வத மனு. இளையை நோக்கித்திரும்பி “அது எத்தகைய பரிசு?” என்றான் புதன். “இங்கு அமர்ந்திருக்கிறாள் என் தாய், அவள் உரைக்கவேண்டும் அப்பரிசு நிகரற்றதென்று” என்றாள் இளை. புதன் “அத்தகைய பரிசுடன் வருகிறேன்” என எழுந்தான்.

புதன் தன் அன்னையிடம் சென்று “நிகரற்ற பெண் பரிசு எது? அன்னையே, சொல்க!” என்றான். முதுமகளாகிவிட்டிருந்த தாரை சொன்னாள் “எந்தப் பெண்ணும் விழைவது ஒருபோதும் அறம்பிறழா மைந்தனை மட்டுமே.” புதன் அன்னையை கூர்ந்துநோக்கி நின்றான். “ஆம் மைந்தா, அன்னையர் காமுறுவது அதன்பொருட்டு மட்டுமே. நான் விழைந்தவண்ணம் பிறந்தவன் நீ. நான் எண்ணியதும் இயற்றியதும் உன்பொருட்டே.”

புதன் திரும்பிச்சென்று வைவஸ்வத மனுவின் வாயிலை முட்டினான். அதைத் திறந்து “வருக!” என்ற வைவஸ்வத மனு அவன் வெறும் கைகளை நோக்கி  குழப்பத்துடன் “அந்நிகரற்ற பரிசை கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்றார். “ஆம். அதை அக்கன்னியிடம் மட்டுமே சொல்வேன்” என்றான். தன் முன் வந்து நின்ற இளையிடம் “தேவி, ஒருபோதும் அறம் வழுவா மைந்தனொருவனை என் குருதியில் நீ பெறுவாய். அறம் காக்கும் குலப்பெருக்கு அவனிலிருந்து இம்மண்ணில் எழும். இதுவே என் பரிசு!” என்றான்.

நெஞ்சு விம்ம கைகோத்து அதில் முகம் சேர்த்து விழிநீர் உகுத்தாள் இளை. அவள் பின் வந்துநின்று அவள் அன்னை “நன்று கூறினாய்! பெண் விரும்பும் பெரும்பரிசை அளித்தாய். இவள் கைகொள்க!” என்றாள். அவன் அவள் கைகளைப்பற்றி “இச்சொற்கள் மெய்யாகுக! சந்திரகுலம் மண்ணில் எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

ஏழு முனிவர் கை பற்றிஅளிக்க எரி சான்றாக்கி சந்திரனின் மைந்தனாகிய புதன் இளையை மணந்தான். மணநாள் இரவில் அவன் அவளிடம் “உன் உடன்பிறந்தான் எங்குள்ளான்?” என்றான். “வேற்றூர் சென்றுள்ளார். எங்குள்ளார் என்று அறியேன்” என்றாள் அவள். அவன் கைகளை பற்றிக்கொண்டு அவள் கேட்டாள் “எனக்கு இரு சொற்கொடைகளை அருளவேண்டும் நீங்கள். என் உடன்பிறந்தான் குறித்து ஒருபோதும் கேட்கலாகாது. ஒரு மாதம் உங்களுடன் இருந்தால் மறுமாதம் நான் என் தந்தை இல்லத்தில் இருப்பேன். அங்கு வந்து என்னை பார்க்கலாகாது.” அவன் “அவ்வண்ணமே” என்று அவளுக்கு கைதொட்டு ஆணை அளித்தான்.

ஒரு மாதம் அவர்கள் ஊடியும் கூடியும் காதலில் ஆடினர். இளை அவன் உள்ளத்தின் ஒவ்வொரு எண்ணத்தையும் உணர்ந்துகொள்பவளாக இருந்தாள். “ஆணுள்ளம் பெண்ணுக்கு இத்தனை அணுக்கமானது என்று நான் இதுவரை அறிந்திருக்கவில்லை” என்று அவன் அவளிடம் சொன்னாள். அவள் புன்னகை புரிந்தாள். “ஆண் அறிந்தவை அனைத்தையும் அறிந்திருக்கிறாய்” என ஒருமுறை அவன் அவளை வியந்தான். அவள் சிரித்தபடி கடந்துசென்றாள்.

மாதம் ஒன்று நிறைந்ததும் அவள் அவனிடமிருந்து விடைபெற்று வைவஸ்வத மனுவின் இல்லத்திற்கு சென்றாள். அவள் சென்றபின்னரே அவள் இருந்ததன் நிறைவை புதன் உணர்ந்தான். காணுமிடமெல்லாம் அவளென்று இருக்க எண்ணுவதெல்லாம் பிறிதொன்றில்லை என்றாக அவன் கணமும் வாழமுடியாதவன் ஆனான். சிலநாட்களை தன் அரண்மனையில் முடங்கிக் கழித்தபின் இளமுனிவராக மாற்றுருக்கொண்டு அவளைக் காணும்பொருட்டு வைவஸ்வத மனுவின் இல்லத்திற்கு சென்றான்.

வைவஸ்வத மனுவின் இல்லத்தை அடைந்து கதவைத் தட்டியதும்  இளன் வந்து கதவைத் திறந்தான். அவனுக்கு கால்கழுவ நீர் ஊற்றி இன்மொழி சொல்லி வரவேற்று அழைத்து அமரச்செய்தான். “உத்தமரே, யார் நீங்கள்?” என்றான். “நான் கௌதமகுலத்து முனிவனாகிய சம்விரதன். இங்கு திருவுருக்கொண்டு பிறக்கவிருக்கும் மைந்தன் ஒருவனை கருக்கொள்ளும் கன்னி ஒருத்தி இருப்பதாக அறிந்தேன். அவளுக்கு என் நற்சொல் அளித்துச்செல்ல விழைந்தேன்” என்றான். இளன் “அவள் இங்கில்லை. எங்கள் தந்தையுடன் பிறந்த சுயம்பு மனுவின் இல்லத்தில் விருந்தாடும்பொருட்டு சென்றுள்ளாள்” என்றான்.

ஏமாற்றம் அடைந்த புதன் “நன்று, அவளுக்கு என் நற்சொற்கள் உரித்தாகட்டும்” என எழுந்தபோது இளன் ஈரத்தரையில் மிதித்து அப்பால் சென்றான். அவன் காலடிச்சுவடுகளை கண்டதும் என்ன என்றறியாமலேயே புதன் உடல் பதைக்கத்தொடங்கியது. பின்னர் “இளை! நீ இளை!” என கூவியபடி எழுந்தான். “இல்லை, நான் அவள் உடன்பிறந்தான். என்னைப்போலவே அவள் தோற்றம் இருக்கும்” என்று இளன் பதறியபடி சொன்னான். “நீ அவள்தான்… என் உள்ளம் சொல்கிறது” என்று புதன் கூச்சலிட்டான். “இல்லை இல்லை” என சொன்னபடி அவன் வெளியேற முயல புதன் பாய்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டான்.

அவனைத் தொட்டதுமே அவனுக்கு உறுதியாயிற்று. “நீ இளைதான்… நான் எந்த தெய்வத்தின் முன்பும் ஆணையிடுவேன். நீ என் துணைவி இளை!” என்று அவன் கண்ணீருடன் சொன்னான். அழுதபடி இளன் அவன் கைகளை பற்றிக்கொண்டான். “ஆம், நான் இளைதான்.  ஒருமாத காலம் ஆணாக இருப்பேன். அதன்பொருட்டே இங்கு வந்தேன்.”

என்ன நிகழ்ந்தது என அவள் அன்னை சொன்னாள். வைவஸ்வத மனுவும் சிரத்தையும் ஓர் மைந்தனுக்காக தவமிருந்தனர். மித்ரனையும் வருணனையும் வேள்வியில் எழுப்பி மன்றாடினர். ஒரே நேரத்தில் இரு எரிகுளங்களில் மித்ரனும் வருணனும் எழுந்தனர். மித்ரன் வைவஸ்வத மனுவிடம் “அழகிய மைந்தனைப் பெறுக!” என சொல்லளித்த அதே வேளையில் வருணன் “அறம் வளர்க்கும் மகள் பிறக்கட்டும்” என்றான்.

இரு சொற்களுமே நிகழ்ந்தன. பிறந்த மகவு ஆணும் பெண்ணுமாக இருந்தது.  இருபால் குழவியை முழுதுடலும் எவருக்கும் தெரியாமல் வளர்த்தனர் வைவஸ்வத மனுவும் சிரத்தையும். வைவஸ்வத மனு அதை  மைந்தன் என்றே அனைவரிடமும் சொல்லி அவ்வாறே காட்டிவந்தார். அன்னையோ அதை மகள் என்று அணிசெய்து அகத்தளத்தில் வைத்து கொஞ்சி வளர்த்தாள். ஆணென்றும் பெண்ணென்றும் மாறிமாறி உருக்கொண்டு வளர்ந்தது குழவி. அன்னை அதை இளை என்றாள். தந்தை இளன் என்றார்.

ஒருநாள் அவர்களின் இல்லத்திற்கு முதுமுனிவர் அகத்தியர் வந்தார். “மைந்தனை கொண்டுவருக… அவன் பெருந்தோளன் ஆவதற்குரிய நற்சொல்லை நான் உரைக்கிறேன்” என்றார். “மைந்தனைக் கொண்டு வா” என வைவஸ்வத மனு ஆணையிட சேடி ஒருத்தி பெண்ணென ஆடையணிந்த மைந்தனை கொண்டுவந்தாள். திகைத்த வைவஸ்வத மனு அகத்தியரைப் பணிந்து நடந்ததை சொன்னார்.  சிரத்தை அவர் கால்களைப் பணிந்து “எங்கள் மைந்தனை மீட்டருள்க, முனிவரே!” என வேண்டினாள்.

“இக்கணமே இவன் ஆண் என்றாகுக!” என்று உரைத்து தன் கமண்டலத்து நீரை தெளித்தார் அகத்தியர். குழவி ஆணென்றாகியது. “இவனுக்கு சுத்யும்னன் என்று பெயரிடுக!” என அவர் ஆணையிட்டார். மைந்தனை வாழ்த்திவிட்டுச் சென்றார். வைவஸ்வத மனு பேருவகைகொண்டு களியாடினார். அனைவருக்கும் விருந்தளித்தார். குலதெய்வங்களை வணங்கி விழவுகொண்டாடினார். சுத்யும்னனின் அன்னையும் அதில் கலந்துகொண்டு களியாடினாளென்றாலும் அவளுக்குள் மகளை இழந்த துயர் எஞ்சியிருந்தது.

சுத்யும்னன் போர்க்கலைகளும் ஆட்சிக்கலைகளும் கற்றுத்தேர்ந்தான். குடித்தலைமைகொள்ளும் தகைமையை அடையும்பொருட்டு அவன் ஐவகை நிலமும் கண்டுவர தன் தோழருடன் பயணமானான். வழியில் அவர்கள் குமாரவனம் என்னும் சோலைக்குள் நுழைந்தனர். அது உமை தன் தோழியருடன் வந்து நீராடும் இடம். அதற்குள் ஆண்கள் நுழையலாகாது என நெறியிருந்தது. மீறுபவர்கள் பெண்ணென்றாகுவர் என உமை அளித்த சொல் நின்றிருந்தது.

காட்டின் எல்லையைக் கடந்த சுத்யும்னன்மேல் பறந்த ஏழு கிளிகள் “இது உமையின் காடு. இங்கு ஆண்களுக்கு இடமில்லை” என்று கூவின. அதைக் கேட்டு அஞ்சி அவன் துணைவர்கள் நின்றுவிட்டனர். சுத்யும்னன் “நான் நுழையலாமா, கிளியே?” என வேடிக்கையாகக் கேட்க ஏழு கிளிகளில் ஒன்று “நீங்கள் நுழையலாம், அழகரே” என்றது. சுத்யும்னன் உள்ளே நுழைந்தான். அக்கணமே அவன் பெண்ணென்று ஆனான்.

அழகிய மங்கையாக வைவஸ்வத மனுவின் இல்லம் திரும்பிய சுத்யும்னனைக் கண்டு அன்னை ஓடிவந்து அணைத்துக்கொண்டாள். “என் மகள் மீண்டுவந்துவிட்டாள்” என்று கூவி சிரித்தாடினாள். கண்ணீருடன் முத்தமிட்டு தழுவி மகிழ்ந்தாள். தந்தையோ ஆழ்ந்த துயர்கொண்டு தன் அறைக்குள் முடங்கிக்கொண்டார். தன் காலடிகளை வந்து பணிந்த இளையை நோக்கி திரும்பக்கூட அவரால் இயலவில்லை.

துயர்மிகுந்து தனித்தலைந்த வைவஸ்வத மனு வசிட்டரைச் சென்றுகண்டு தன் குறைசொல்லி விழிநீர் விட்டார். வசிட்டர் வந்து இளையை கண்டார். தந்தைக்கும் தாய்க்கும் இருக்கும் விழைவுகளைச் சொல்லி ஒரு மாதம் பெண்ணாகவும் மறுமாதம் ஆணாகவும் இருக்கும் சொல்பேறை அவளுக்கு அருளினார். இளை மறுமாதம் இளன் என்றானாள்.

“நீங்கள் என்னை பிரிய நினைத்தால் அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி இளன் கைகூப்பினான். திகைத்துநின்ற புதன் ஒரு சொல்லும் கூறாமல் திரும்பி ஓடினான். தன் அரண்மனைக்குள் சென்று தனியறையில் அமர்ந்து நெஞ்சுருகினான். இளையை அவ்வண்ணமே மறந்துவிட முடிவெடுத்தான். அம்முடிவை உறுதிசெய்ய எண்ணங்களைத் திரட்டும்தோறும் அவளுடன் கொண்ட உறவின் தருணங்கள் எழுந்து தெளிவுகொண்டு வந்தன.

அவ்வுறவின் அழகே அவள் ஆணும்கூட என்பதுதான் என அப்போது அறிந்தான். பிறிதொரு பெண்ணிலும் அந்தக் காம முழுமையையும் காதல் நிறைவையும் அடையமுடியாதென்று தெளிந்தான். அதைச் சொன்னபோது அவைக்கவிஞர் காகஜர் ஆணென்று  உள்ளமும் பெண்ணென்று உடலும் கொண்ட ஒரு துணைவியையே ஆண்கள் விழைகிறார்கள் என்றார். ஆனால் காமத்தின் ஒரு நுண்கணத்தில் ஆணுடலும் பெண்ணுள்ளமும் கொண்டவளாகவும் அவள் ஆவதை அவன் மகிழ்ந்து அறிந்திருந்தான். எண்ண எண்ண அவன் அவள்மேல் பெரும்பித்து கொள்ளலானான். வைவஸ்வத மனுவின் இல்லத்திற்குச் சென்று இளையை மனைவியெனக் கொள்ளவே விழைவதாகச் சொன்னான்.

இளை கருவுற்றாள். அக்கருவுடன் தன் தாய்வீடு சென்று அங்கே இளன் என்று கருவை சுமந்து வளர்த்தாள். ஆண்வயிற்றில் ஐந்துமாதமும் பெண்வயிற்றில் ஆறுமாதமும் வளர்ந்து அக்குழவி முழுமைகொண்டது. பொன்னொளி கொண்ட உடலுடன் பேரழகனாகப் பிறந்தது. “கோல்சூடி அறம்பேணும் ஆயிரம் மாமன்னர்கள் பிறக்கும் குடிக்கு முதல் மூத்தான் இவன்” என்றனர் நிமித்திகர். “ஆணென்றும் பெண்ணென்றும் அன்னைகொண்டவன். அனைத்துயிர்க்கும் அளி சுரக்கும் உள்ளத்தோன்” என்றனர் முனிவர்.

images சந்திரகுலத்து முதல் மன்னன் புரூரவஸ் இவ்வாறு புதனுக்கும் இளைக்கும் மைந்தனாகப் பிறந்தான். அவனை ஏழு பெரும்தீவுகளென அமைந்த புவியனைத்திற்கும் அரசன் என்று ஆக்கினான் புதன். அவன் குருதியில் பிறந்த மன்னர்களால் சூரியனால் அளக்கப்பட்ட புவி நூற்றெட்டு நிலங்களாக பகுத்து ஆளப்பட்டது. அறத்துலா கணமும் அசையாது புவியாண்டான் புரூரவஸ்.

ஒருமுறை அறம் பொருள் இன்பம் எனும் மூன்று மெய்மைகளும்  மூன்று முனிவர்களென உருக்கொண்டு அவன் அரண்மனைக்கு வந்தன. முனிவர்களைப் பணிந்து வரவேற்று அவையில் அமர்த்தி முகமனும் முறைமையும் செய்து நற்சொல் கேட்க அமர்ந்தான்.

அம்மூன்று முனிவரில் நீண்ட வெண்தாடியும் புரிசடையும் குழலும் கனிந்த விழிகளும் கொண்டிருந்த முதியவரே இன்பர்.  நரைமீசையும் கூரிய தாடியும் அச்சமில்லா விழிகளும் கொண்டிருந்த நடுஅகவையர் பொருளர். நாணச்சிரிப்பும் தயங்கும் விழிகளும் மெலிந்த சிற்றுடலும் பெண்களுக்குரிய மென்முகமும் தோளில் சரிந்த சுரிகுழலும் கொண்டிருந்த பதினகவையர் அறத்தார். அவர் தங்களை இன்பர் என்றும் பொருளர் என்றும் அறத்தார் என்றும் அறிமுகம் செய்துகொண்டபோது அரியணை விட்டெழுந்து வந்த புரூரவஸ் இரு கைகளையும் கூப்பியபடி சென்று இளையவராகிய அறத்தாரை கால்தொட்டு சென்னிசூடி  “என் அவைக்கு முதல் நல்வரவு, முனிவரே” என்றான்.

சினம்கொண்ட இன்பர் முழங்கும் குரலில்  “மூத்தவருக்கு முதன்மையளிக்காத முறை கொண்டதா உனது அரசு?” என்று கேட்டார்.  “பொறுத்தருள்க முனிவரே, இவ்வவையில் என்றும் அறமே முதன்மைகொண்டது” என்றான் புரூரவஸ். மேலும் சினம்கொண்ட பொருளர்  “இங்கு நீ அமர்ந்திருப்பது பொருள்மேல் என்று அறிந்திராத மூடனா நீ?  அறம் மட்டும் ஓச்சி வாழ்வதென்றால் காட்டுக்குள் தவக்குடில் அமைத்து அங்கு சென்று தங்கு. கோலும் முடியும் அரணும் குடியும் வாழ்வது பொருள்மேல் என்பதை எப்படி மறந்தாய்?” என்றார்.

புரூரவஸ் மேலும் பணிந்து  “முனிய வேண்டாம் பொருளரே, இங்கு நான் ஈட்டியுள்ள பொருளனைத்தும் அறத்தின் விளைவாக அதர்வினவி எனைத் தேடிவந்தவையே. அறம் துறந்தொரு பொருளை என் உள்ளமும் தொட்டதில்லை” என்றான். “இன்பமே மங்கலம் என்றறிக! இன்பத்தை அறியாத அரசன் மங்கலம் அற்றவன். அவன் மண்ணில் மைந்தரும் ஆக்களும் விளைகளும் பெருகாது. மழைவிழுந்து நிலம் பொலியாது” என்றார் இன்பர். “அனைத்துமாகி நின்றிருக்கும் அறம் என்னையும் குடிகளையும் வாழவைக்கும்” என்றான் புரூரவஸ்.

இன்பரும் பொருளரும் சினந்து “இனி ஒரு கணம் இங்கிருக்கமாட்டோம்” என கூவியபடி அவைவிட்டு எழுந்தனர். பொருளர் திரும்பி “மூடா, பொருள் என்பதன் திறன் அறியாமல் பேசினாய். பொருள் அளிக்கும் பெருந்துன்பம் இரண்டு. பொருளருமை அறியாது அள்ளி இறைக்கும் வீணன் எய்தும் வெறுமை முதலாவது. அதைவிடக் கொடியது, பொருளை அஞ்சி அதை பதுக்கி வாழும் கருமி அறியும் குறுகல். நீ    ஏழாண்டு காலம் வீணனாய் இருப்பாய்! எஞ்சிய இருபத்தோராண்டு காலம் கருமியாயிருப்பாய்! பொருளெனும் பெருந்துன்பத்தை அறிந்தபின் அதன் அருளைப்பெறுவாய்” என்றபடி வெளியேறினார்.

இன்பர் சினத்துடன் சிறிதே நகைத்து “காமத்தின் பெருந்துன்பம் பிரிவு. பிரிவு பேருருக்கொள்ள வேண்டுமென்றால் அரிதென ஓர் உறவு நிகழவேண்டும். பெருங்காதல் உனக்கு அமையும். அதை இழந்து பிரிவின் துயரை அறிவாய்! அறிந்தபின்னரே அதை கடப்பாய்” என்றுரைத்து உடன் வெளியேறினார். தயங்கியபடி எழுந்த அறத்தார் “நானும் அவர்களுடன் செல்ல கடமைப்பட்டவன், அரசே. இன்பத்தையும் பொருளையும் இரு கைகளென உணர்பவன் தன் தலையென கொள்ளத்தக்கது அறம். அவை இரண்டையும் நீர் அறிந்து நிறைகையில் உம்மில் நான் அமைவேன்” என்று சொல்லி வெளியேறினார்.

MAMALAR_EPI_15

“இன்பத்துயரும் பொருள்துயரும் பெற்று அறமறிந்து அமைந்தார் உம் மூதாதை புரூரவஸ். அவர் புகழ் வாழ்க!” என்றான் முண்டன். “அவர் அவ்விரு பெருந்துயர்களையும் அறிந்தது ஊர்வசியுடன் கொண்ட காதலால். அவளை அவர் சந்தித்த இடம் இந்தச் சோலை. அவள் நினைவாக அவர் அமைத்ததே இச்சிற்றாலயம்.”

முந்தைய கட்டுரைகந்து
அடுத்த கட்டுரைசு.வேணுகோபால் -இருகடிதங்கள்