’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48

[ 3 ]

“இது பிறிதொரு கதை” என்று சண்டன் சொன்னான். அவனுடன் பைலனும் சுமந்துவும் ஜைமினியும் நடந்தனர். “இக்கதையை காமரூபத்துப் பாணர் சொல்லக்கேட்டேன். அவர்களிடம் இக்கதையே மூன்று வெவ்வேறு பாணர்பாடலாகத் திகழ்கிறது. இதில் அர்ஜுனனை அவர்கள் மேற்குப்பாலையில் கண்டெடுத்த கதை சொல்லப்படுகிறது.” பைலன் புன்னகைத்து “நூறு இளையபாண்டவர்கள் நூற்றுக்கணக்கான கதைகள்” என்றான். “மாமனிதர்களை மொழி ஆடிகள்போல சூழ்ந்திருக்கிறது. அவர்கள் முடிவிலாது பெருகிக்கொண்டிருப்பார்கள்” என்றான் ஜைமினி.

“அவரை வருணனின் ஏழு மயனீர்கள் வெள்ளாடுகளின் வடிவில் வந்து தங்கள் மேல் ஏற்றிக்கொண்டு பாலையில் வந்த காப்பிரி வணிகர்களிடம் அளித்ததாக ஒரு கதை சொல்கிறது. ஏழு பாலைநிலத்து ஓநாய்கள் அவை என இன்னொரு கதை. அவருக்கு மேல் இந்திரனின் முகிலொன்று குடைபிடித்தது என்றும் அதன்கீழ் அவர் அரசன் என வந்தார் என்றும் பிறிதொரு கதை.”

“எந்தக் கதையை நீங்கள் சொல்வீர்கள்?” என்றான் ஜைமினி.  “அன்று நான் சொல்வதற்கு பொருந்திவரும் கதையை. எல்லாக் கதைகளும் நிகரான உண்மையும் பொய்யும்தான்” என்றான் சண்டன். “அவரை காப்பிரிகள் கண்டெடுத்தனர் என்பது மட்டும் மாறுவதில்லை. அதை நானும் மாற்றுவதில்லை.” பைலன்  “சொல்க!” என்றான். சண்டன் அர்ஜுனன் மீண்டு வந்து கிழக்கை வென்ற கதையை சொல்லலானான். “ஆற்றுவதற்கு கடமைகள் கொண்ட உயிரை அணைத்துக் காக்கும் அன்னையாகிறது ஊழ். அதுவே பனியில் போர்வையும் கடலில் புணையும் பாலையில் நிழலுமென்றாகிறது.”

மேற்குப் பாலைநிலத்தில் சிறியகண் என்று அழைக்கப்பட்ட  ஊற்றொன்றின் கரையிலமைந்த சிற்றூரின் மதுவிடுதியில் பெயரறியா பித்தன் என எட்டு மாதம் இருந்தவன் அர்ஜுனன் என எவரும் அறிந்திருக்கவில்லை. அவன் உடலில் இருந்த அடையாளங்களைப் பார்த்து அறியும் எவரும் அவனை காணவில்லை. அவனை அங்கே கொண்டுசேர்த்தவர்கள் தெற்கே காப்பிரிநிலம் நோக்கி சென்றுகொண்டிருந்த வணிகர்குழு. அவர்கள் அவனை அங்கே விட்டுவிட்டுச்  சென்றபோது அவர்களையும் அவன் அறியவில்லை.

இறந்தவர்களின் நிலத்தருகே உப்புவளையத்திற்கு வெளியே அவன் விழுந்துகிடந்ததை காப்பிரிவணிகர்கள் தொலைவிலேயே கண்டனர். சடலமென்று எண்ணி அருகே வந்தபோதுதான் மூச்சு ஓடிக்கொண்டிருப்பதை விலாவசைவு காட்டியது. அவனை எழுப்பி நீர் அளித்து உயிர்மீட்டனர். “இப்பாலையில் உயிருடன் ஒருவனை மீட்பது இதுவே முதல்முறை” என்றான் அவனைத் தூக்கிய ஏவலன். அவன் நாவில் நீரைத் தடவினர். துளித்துளியாக அவன் உள்நாக்கில் நீரை விட்டனர். ஒருதுளி வெல்லம் உள்ளே சென்றதும் அவன் உடலில் உயிர் பற்றிக்கொள்ள மெல்ல முனகினான்.

ஆனால் அவன் உளம் மீளவில்லை. சொல்கேட்டுப் பொருளுணரவோ விழிநோக்கி முகமறியவோ இயலாதவனாக இருந்தான். அவன் கைகளும் கால்களும் இழுத்துக்கொண்டிருந்தன. தலை ஆடியபடியே இருந்தது. நெடுநேரம் விழிகள் இமைப்பின்றி மீன்நோக்குடன் வெறித்தன. சட்டென்று உதைபட்டவன்போல உடல் அதிர அந்த அசைவின்மையிலிருந்து விடுபட்டபோது அவன் உள்ளுறுப்பில் வலிகொண்டவன்போல உடல்முறுக்கி மெல்ல முனகினான். அவன் உதடுகள் ஓசையின்றி எதையோ சொல்லிக்கொண்டே இருந்தன. எவரோ அவனிடம் பேசிக்கொண்டே இருப்பதுபோல அவன் உடலெங்கும் செவிகள் கூர்ந்திருந்தன.

அவர்களிடம் நீர் சிறிதே இருந்தது. உணவு முற்றிலும் தீர்ந்துவிட்டது. எதிர்பாராத புழுதிப்புயலால் வழிதவறி நாற்பதுநாட்கள் அலைந்து மீண்டும் தடம்தேடி கண்டடைந்திருந்தார்கள். பொதிவிலங்குகளில் ஒன்று இறந்துவிட்டிருந்தது. இருவர் கடும் நோயிலிருந்தனர். ஆகவே அவனை விட்டுவிட்டுச் செல்லலாம் என்று காப்பிரிகளின் இளந்தலைவன் சொன்னான். “இவன் நம் அனைவரையும் கொல்லும்பொருட்டு பாலையின் தெய்வங்களால் அனுப்பப்பட்டவனாக இருக்கலாம். செம்புலத்து நாகங்கள் இவன் உரு கொண்டிருக்கக்கூடும்” என்றான். “நம் உறுதியை சீண்டிநோக்குகிறது இந்தத் தெய்வம். நாம் இறந்தபின் இங்கு எழுந்துநின்று நகைக்கும் இது.”

அவன் முதிய தந்தை உடனிருந்தார். சுருக்கங்கள் மண்டிய கனிய முகம் காற்றிலாடும் சிலந்திவலையென நெளிய அர்ஜுனனை கூர்ந்து நோக்கினார். “மைந்தா, இறந்தவர்களின் கடல் இது. இவ்வழியே பலநாட்களாக வணிகக்குழுக்களேதும் சென்றதில்லை என்று காட்டுகின்றது பாதைக்குறிகள். இவன் எப்படி உயிர் வாழ்ந்தான்? எங்ஙனம் இந்த தனிமையைத் தாங்கிக்கடந்தான்? இந்த வறுநிலத்தை நூறுதலைமுறைகளாக அறிந்துள்ள நாம்கூட இங்கே இப்படி உயிருடன் எஞ்சுவது இயலாது” என்றார். “தெய்வங்கள் இவனை துணைத்துள்ளன” என்று மைந்தன் சொன்னான். “நம்மை பலிகொள்ள எண்ணும் தெய்வங்கள் அவை.”

“இல்லை. இதுநாள்வரை நானறிந்த உண்மைகளில் முதன்மையானது ஒன்றே. பாலையில் தெரியும் கானல்நீர் போன்றதே தெய்வங்களின் தோற்றமும்” என்றார் தந்தை. “ஒன்று மட்டும் உறுதி. குன்றா உளவல்லமைகொண்ட மாமனிதன் இவன். இவன் யாரென்று நாமறியோம். எவராயினும் வென்றுசெல்பவன். மண்ணில் உப்பென என்றுமிருப்பவன். இவன் நிறம் அங்கே கிழக்கே உலகின் மையமெனத் திகழும் பாரதவர்ஷத்தைச் சார்ந்தவன் என்று காட்டுகிறது. முனிவர்களும் அறிஞர்களும் வீரர்களும் செறிந்த நிலம் அது என்று கதைகளினூடாக நாம் அறிவோம்.”

அவன் உடலில் இருந்த அடையாளங்களை அவர் நோக்கினார். “மின்கதிர் இது. இது தாமரை. இது மதுக்கலமென நினைக்கிறேன். அரசகுடியினன் போலும். எளியவர்களுக்கு இக்குறிகள் பொறிக்கப்படுவதில்லை. இவனை நாம் மீட்டாகவேண்டும்.” மைந்தன் சினத்துடன் “தெய்வங்கள் நம்மை நோக்குகின்றன” என்றான். அவர் சிரித்து “ஆம், நாம் என்ன செய்கிறோம் என்று அவை நோக்குகின்றன போலும்” என்றார். “என் ஆணை இது, இவன் உடனிருப்பான்.” மைந்தன் தனக்குள் “நாம் இவனுடன் மடிவோம், அதுவே நிகழவிருக்கிறது” என்றான்.

அவர்கள் இரண்டு நாட்கள் மணல்வெளியில் நடந்தனர். நீரும் முழுமையாக தீர்ந்தது. தோல்பைகளும் குடுவைகளும் உலரலாகாது என்பதற்காக எஞ்சவைக்கப்பட்டிருந்த இறுதித்துளி நீரையும் நாவில் சொட்டிக்கொண்டனர். விடாய் தொண்டையிலிருந்து உடலுக்குப்பரவி உடலும் எரிந்தணைந்தபின் எண்ணமாக எஞ்சி பின் மெல்லிய புகைப்படலம்போல உள்ளம் உடலை உணரும் நிலை எழுந்தது. நிற்கிறோமா செல்கிறோமா என அவர்கள் அறியவில்லை. கேட்கும் சொற்களும் எண்ணும் சொற்களும் இடைகலந்த மொழி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

“வழிக்குறிப்புகளின்படி ஓநாய்முகம்கொண்ட பாறை வருவது வரை நீரோ உணவோ இல்லை. அது நெடுந்தொலைவுக்கு கண்ணில்படவுமில்லை” என்றான் இளையவன். தந்தை ஒன்றும் சொல்லவில்லை. அவரது அமைதியால் சீண்டப்பட்டு “நாம் இன்று மாலைக்குள் நீரை கண்டடையவில்லை என்றால் இறப்போம். ஐயமே வேண்டியதில்லை” என்றான் மைந்தன். அதற்கும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. அக்குழுவிலிருந்த அனைவரும் பழுத்து சொல்மடிந்த விழிகளால் அர்ஜுனனை நோக்கிக்கொண்டிருந்தார்கள். அவனை அவர்கள் திரைமறைவுக்குள்தான் பார்த்தனர். சிலர் அவன் யார் என எண்ணினர். சிலர் மீண்டும் மீண்டும் அவனை கண்டுபிடித்தனர்.

ஒட்டகைகள்தான் அவர்களை கொண்டுசென்றன. அவற்றின் கால்களில் வாழ்ந்த தெய்வங்கள் பாலையை அறிந்திருந்தன. அவர்கள் பிளவுபட்டு நின்ற மணற்பாறை ஒன்றை அடைந்தபோது இடியோசை கேட்டது. “புயல்” என்றான் மைந்தன். “மணற்புயல்தான் அது.” தந்தை கைகளை விழிமேல் வைத்து நோக்கி “இடிபோல் ஒலிக்கிறது” என்றார். “இடியா?” என அவன் இகழ்ச்சியுடன் கேட்டான். மீண்டும் அவ்வொலி எழுந்தபோது அவன் “மலைப்பாறைகள் சரிகின்றன” என்றான். தந்தை  “இப்பாதையில் பெரிய மலைகளென ஏதுமில்லை” என்றார். தென்கிழக்குச் சரிவில் அவர்கள் கரிய தீற்றலை கண்டார்கள். “அது மணற்பெருக்கே” என்றான் மைந்தன். “மணலெழுச்சி செந்நிறம் கொண்டிருக்கும்” என்றார் தந்தை. அந்நிழல் உறுமியது. அதன் சுருள்கள் தெரியத்தொடங்கின.

“என்ன சொல்கிறீர்கள்? முகில்கறுத்து மழையெழுகிறதென்றா?” என்றான் மைந்தன் சினத்துடன். தந்தை “ஏன் வரக்கூடாது? இப்பாலையில் இரண்டு நாட்கள் முகில்நின்று மழைபொழியக் கண்டிருக்கிறேன், எழுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு” என்றார். இடியோசை எழுந்தபோது அவர்கள் ஒட்டகைகளை இழுத்து நிறுத்திவிட்டு நோக்கினர். மின்னல் ஒன்று நெளிந்து அணைந்தது. மீண்டும் முகில் முழங்கியது. “மழையேதான்” என்றார் தந்தை. “ஆம்” என்றான் மைந்தன். சட்டென்று அவன் உடைந்த குரலில் “தெய்வங்களே” என்று கூவி அழத்தொடங்கினான்.

KIRATHAM_EPI_48

அனைவரும் கைகளை வானில்நீட்டி கதறி அழுதனர். முதியவர் திரும்பி பாலையில் கண்டெடுக்கப்பட்டவனை பார்த்தார். அவன் மிக அண்மையில் இருப்பவரிடம் பேசுபவன்போல ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று வந்து ஆடைகளை அசைத்தது. மண்வெந்த மணம் எழுந்தது. புழுதிக்காற்றில் நீராவியை உணரமுடிந்தது. நீராவிக்காக அவர்கள் ஓணான்களைப்போல நாநீட்டினர். திரையை இழுத்து கொண்டுவருவதுபோல காற்று வான்முகில்பரப்பை தலைக்குமேல் கொண்டுவந்து நிறைத்தது. விழியிருட்ட பாலையின் அலைகளின் வளைவுகள் மட்டும் மீனின் தோல்பரப்பென மின்னின.

மின்னல்கள் வாள்வீச்சுகளெனச் சுழல இடி உறுமிக்கொண்டே இருந்தது. மிகத்தொலைவில் சருகுகள் நொறுங்குவது போன்ற ஒலி எழுந்தது. சிறிய மான்கூட்டம் ஒன்று அணுகுவது போல. “மழை!” என்று ஒருவன் கூவினான். “மழை!” என குரல்கள் எழுந்தன. கற்களைப்போல நீர்த்துளிகள் வந்து மேலே விழ இருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். நீர்த்துளி விழுந்ததும் வறுகலம் என வெம்மைகொண்டிருந்த பாறைப்பரப்புகள் நாகக்கூட்டங்கள்போல சீறின.

மண்ணில் விழுந்த நீர்த்துளிகள்  எண்ணையில் மாவுருளை விழுந்து அப்பமாவதுபோல சீறி சுருண்டு உருண்டு எழுந்தன. அவர்கள் முகத்தில் தோளில் தலையிலென விழுந்து சிலகணங்களில் முழுமையாக மூடிக்கொண்டது மழை. சுட்டுப்பழுத்த பாறைகள் மணியோசையுடன் வெடித்தன. கண்மயக்குபோல பாலையின் நிறம் மாறியது. துடிக்கும் தசைப்பரப்பாக அது ஆகியது.

அவர்கள் நீர்ப்புழுக்களைப்போல மழையில் உடலால் திளைத்தனர். கைகளை விரித்து நீரைப்பற்றி அள்ளிஅள்ளிக் குடித்தனர். பின்னர் தன்னிலை உணர்ந்து தோற்பரப்புகளை விரித்து மழைநீரை அதில் பிடித்து தொகுத்து அனைத்துக் குடுவைகளையும் நிறைத்துக்கொண்டனர். பொழிந்து குளிர்ந்து மெல்ல நீர்ப்பொழிவு நின்றது. காற்று பறக்கும் ஊசிகளென நீர்த்துளிகளை அள்ளிச் சாய்த்து கொண்டுசென்றது. பின் நீராவியும் வெந்த மண்ணின் மணமும் நிறைந்த குளிர்காற்று அவர்களை சிலிர்க்கச்செய்தது. நீர் முழுமையாக மண்ணுக்குள் மறைய அப்பம் வெந்து பதமாவதுபோல அதில் குமிழிவெடித்த சிறிய துளைகள் வழியாக புகைபோல ஆவி எழுந்தது.

“இந்த மழை இவர் ஒருவருக்காக” என்றார் முதியவர். “ஆம்” என்றான் ஒரு ஏவலன். “அவர் மார்பில் இருந்த அதே மின்படையை நான் வானிலும் கண்டேன்.” இன்னொருவன் “இதோ, கலங்கள் நிறைந்துள்ளன நமக்கு” என்றான். இளையவன் தலைகுனிந்து அழுதுகொண்டே இருந்தான்.  பாறைகளிலிருந்து புகையென நீராவி எழுந்தது. வான் முகில்உடைந்து வெளித்து ஒளியெழுந்தபோது அது வெண்ணிற இறகுபோல தெரிந்தது. மழை பெற்ற சிறுகுருவிகள் சிறகுகளைக் குடைந்தபடி வானிலெழுந்து சுழன்று சுழன்றமைந்தன.

அனைத்தும் நோக்கியிருக்கவே மாறிவிட்டிருந்தது. புன்னகையுடன் ஒளிகொண்டிருந்தன காற்று கரைத்த பாறைகள். செம்பட்டு என மென்மைகொண்டிருந்தது மண். வானம் இனிய தேன்பரப்பாக மங்கித்தெரிந்தது. காற்றில் மழையின் நினைவு எஞ்சியிருந்தது. அவர்கள் அம்மழையைப்பற்றி தங்களுக்கு அணுக்கமானவர்களிடம் சொல்வதைப்பற்றி எண்ணினர். சொல்லத் தொடங்கினர். அவர்களுடன் அங்கிருந்தனர். மீண்டு வந்து கண்கலங்கி அழுதனர்.

தொலைவில் அவர்கள் புகைஎழுவதைக் கண்டனர். “ஏதோ எரிகிறது” என்றான் இளையவன். முதியவர் சிரிக்கத் தொடங்கினார். அவன் கூர்ந்து நோக்கி “மணற்காற்றா?” என்றான். அதற்குள் இன்னொருவன் கண்டுகொண்டான். “ஈசல்! ஈசல்” என்று கூவினான். அவர்கள் அதை நோக்கி ஓடினர். அவர்களைச் சூழ்ந்திருந்த நிலத்தில் திறந்த நூற்றுக்கணக்கான துளைகளில் இருந்து ஈசல்கள் எழுந்து காற்றை நிறைத்தன. குற்றிலைச் சருகுகள் காற்றில் சுழன்றதுபோல. நீர்நிறம் மின்னும் திரைபோல. விரைவிலேயே அவர்கள் ஈசல்திரைக்குள் திசையழிந்து கூச்சலிட்டனர். முற்றாக வானையே மறைத்தது அது.

ஆடைகளை வீசி வீசி ஈசல்களின் சிறகுகளை உதிரச்செய்து மண்ணில் வீழ்த்தினர். விரித்த தோற்பரப்பில் விழுந்துகுவிந்த ஈசல்களை அள்ளி அப்படியே வாயிலிட்டு மென்று உண்டனர். “இதுதான் தெய்வங்களின் மாயம். இங்கு இதில் நின்றுவிட்டால் நாம் அழிந்தோம்” என்றார் முதியவர்.  “இவை வேறு உயிர்களுக்கான உணவு. நமக்கு போதுமான அளவு கிடைத்துவிட்டது. கிளம்புவோம்.” ஈசல்களைத் தேடி பறவைகள் வரத்தொடங்கின. வானிலிருந்து பிதுங்கி துளித்து மழையெனப் பெய்பவைபோல சிறுபறவைகள் வந்தன. காற்றில் தாவித்தாவி அவை ஈசல்களை உண்டன. ஈசல்கள் அவற்றுக்கு தங்ளை உவந்தளிப்பதாகத் தோன்றியது.

ஈசல்களை வறுத்து உண்டபடி நான்கு நாட்கள் நடந்து அவர்கள் சிறியகண் என்று  அழைக்கப்பட்ட விடுதி இருந்த சிற்றூரை அடைந்தனர்.   அங்கே இருநாட்கள் தங்கி இளைப்பாறி உணவும் நீரும் கொண்டபின் அவனை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். “இவரது பாதை கிழக்கு நோக்கி. நாம் இவரை கொண்டுசெல்வது முறையல்ல. கிழக்கு வணிகர்கள் எவரேனும் இங்கு வரக்கூடும். இவர் உடலில் உள்ள அடையாளங்களை அறியக்கூடும்” என்றார் முதியவர். விடுதித்தலைவனிடம் “இடிமின்னல்களை ஆளும் தெய்வத்தின் அன்புக்குரியவர் இவர். இவர் இங்கிருக்கட்டும். உங்களுக்கு நல்லூழ் தொடரும்” என்றபின் அவர்கள் பிரிந்துசென்றனர்.

விடுதியில் ஒருவேளைமட்டும் உணவுண்டு பாலையிலும் முட்புதர்காட்டிலும் அலைந்து முற்றிலும் தனித்து அவன் தங்கியிருந்தான். அவன் வருவதற்கு முன் பெய்த மழையால் அவ்வூரே செழித்திருந்தது. கலங்கள் முழுக்க ஈசல் நிறைந்திருந்தது. மலைச்சரிவில் நின்றிருந்த ஈச்சைமரங்கள் சிலநாட்களிலேயே பாளை நீண்டு இன்மதுவை சுரக்கலாயின.  அவர்கள் விதைத்து மறந்திருந்த  மணிப்புற்கள் முளைவிட்டெழுந்தன.  மேலுமொரு மழைபெய்து அவை மணிகொள்ளுமென உறுதி எழுந்தது. வரப்போகும் மணிகளின் நினைவே அவர்களை களிவெறியிலாழ்த்தியது. அவர்கள் இரவும் பகலும் பாடிக்கொண்டிருந்தனர்.

மழைமைந்தன் என அவர்கள் அவனுக்கு பெயரிட்டனர். அவனுக்கு ஊனுணவும் கள்ளும் மாறிமாறி கொண்டு கொடுத்தனர். அவனிடம் தங்கள் மொழியில் மாறிமாறி உரையாடினர். அவன் அவர்களின் உதடசைவுகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களின் குழந்தைகளை நோக்கி சிரித்தான். ஏனென்றறியாமலேயே அங்குள்ள அனைத்து மகளிரும் அவனை விரும்பினர். அவர்கள் சமைத்த உணவில் முதல்பங்கை அவனுக்கென எடுத்துவைத்தனர். அவனுக்கு உணவளிக்க அவர்களிடையே எப்போதும் பூசல் இருந்தது. அவனுக்கு உணவு அளிக்க அவர்கள் முறைவகுத்தனர். உணவளித்த பெண்கள் எண்ணி எண்ணி சிரித்து முகம் சிவந்தனர்.

விரைவிலேயே அவன் தெய்வங்களுக்கு நிகரான வில்லவன் என அவர்கள் கண்டுகொண்டனர். புல்பறித்து வீசி பறக்கும் ஈயை வீழ்த்தும் ஒருவனை அவர்கள் கதைகளிலும் கண்டிருக்கவில்லை. வில்தேர்ந்தவனுக்கு கைகளே வில்லென்றாகுமென்று அவர்கள் கண்டனர். பின்னர் அவனை அவர்கள் தெய்வமென வழிபடலாயினர். குலத்தலைவன் அவனுக்கு ஏழு பெண்களை பரிசளித்தான். துணையிழந்து வாழ்ந்த அப்பெண்கள் அம்மாதமே கருவுற்றனர். ஏழு வில்வீரர்களால் அக்குடி பெருகி நிலம் வென்று அரசென்று ஆகும் என்றார் அங்கு வந்து தங்கிச்சென்ற தொல்குடிப்பாடகர்.

அங்கே அடுத்த பீதர்குழு வந்தபோது அவர்களால் உடல்கொண்ட தெய்வமெனக் கருதப்பட்ட அவன் வில்திறனைப்பற்றி விடுதித்தலைவன் சொன்னான். அவர்கள் அதை வெறும்சொல்லென்றே முதலில் கொண்டனர். “அதோ, அந்த ஒட்டடையின் ஒரு சரடை மட்டும் அம்புவிட்டு அறுக்கச்சொல் உன் தெய்வத்திடம்” என்றான் பீதர்தலைவன். வெளியே இளமைந்தருடன் விளையாடிக்கொண்டிருந்த   அர்ஜுனனிடம் சென்று மைந்தர் அதைச் சொல்லி அவன் ஆடையைப்பற்றி இழுத்துவந்தனர். பீடம் மீதிருந்த ஒரு மெல்லிய துரும்பை எடுத்து சுண்டி ஒட்டடையின் ஒரு சரடை மட்டும் அவன் அறுத்தான். மைந்தர் கைகொட்டி குதித்து மகிழ மேலும் சரடுகளை அறுத்தான்.  வலைவடிவு குலையாமல் அது மெல்லிய புகைக்கீற்றென விழுந்து உணவுமேடைமேல் படிந்தது. பீதர்கள் அஞ்சி எழுந்து வணங்கும் விழிகளுடன் நின்றனர்.

அந்தப் பீதர்குழுவுடன் அவன் அயிலம் என்னும் துறைநகரை சென்றடைந்தான்.  அச்சிற்றூர் மக்கள் கண்ணீருடன் அவனை தங்கள் பாலையின் எல்லைவரை வந்து வழியனுப்பினர். அவன் சென்றுவிடுவான் என அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் செல்வதை எதிர்கொள்ள முடியவில்லை. அவன் கருவைச் சுமந்திருந்த ஏழு பெண்களும் தங்கள் குடில்களின் இருளுக்குள் உடல்சுருட்டிப் படுத்திருந்தனர். வெளியே கேட்கும் ஒவ்வொரு ஒலிக்கும் அவர்கள் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. குழந்தைகள் ஓடிவந்து அவன் செல்லும் செய்தியை சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்த இருட்டு மெல்ல நெளிந்தது.

ஒட்டகைகள் பொதிகட்டி எழுந்து காலுதற காவலர் படைக்கலங்களை எடுத்துக்கொள்ள ஏவலர் நீர்க்குடுவைகளை சீர்செய்ய அங்கிருந்து கிளம்பும் அன்று காலை அவனை பீதர்கள் தங்களுடன் அழைத்தபோது  விழிவிரிய வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். “தொலைவில்… கிழக்கே செல்கிறோம். வருகிறீர்களா, வில்லவரே?” என்றான் பீதர் தலைவன். ஆம் என அவன் தலையசைத்தான். அவன் கிளம்பும் செய்தியறிந்ததும் ஊரே சோர்ந்து ஓசையழிந்தது. அவன் நடந்த பாதையில் அவர்கள் கால்வைக்காது அருகே சென்றனர். அவன் ஒருமுறைகூட திரும்பி நோக்கவில்லை. செந்நில மடிப்பில் அவன் வணிகர்குழுவுடன் மூழ்கி மறைந்தான். புழுதிமட்டும் வானில் மெல்ல கரைந்தது.

இருளறைகளிலிருந்து பெண்கள் எழுந்தோடி வந்து கைநீட்டி கதறினர். அவன் நடந்துசென்ற பாதையின் புழுதியை அள்ளி தங்கள் நெஞ்சிலும் முகத்திலும் பூசிக்கொண்டு கண்ணீர்விட்டனர். அவர்களை பிறர் தூக்கி வீடுகளுக்கு கொண்டுசென்றனர். மது அளித்து மயங்கச்செய்தனர். விழித்தெழுந்தபோதெல்லாம் அவர்கள் நினைவுகூர்ந்து அழுதுகொண்டிருந்தனர். நாட்கள் செல்லச்செல்ல அவ்வழுகை இறுகி ஆழ்ந்த அமைதியாகியது.

பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக ஏழு மைந்தர்களை பெற்றனர். கரிய உடல்கொண்டிருந்த மைந்தரின் கண்கள் புதுச்சிப்பியின் ஒளிகொண்டிருந்தன. அவற்றை குனிந்து நோக்கியபோது அவர்கள் உடல்சிலிர்த்து அழுதனர். இறுக்கமெல்லாம் உருகி அழுகையாகப் பெருகியது. அம்மைந்தர்களை கைநீட்டித் தொடவும் அவர்கள் அஞ்சினர். அவர்களுக்கு இடிமழையின் ஏழு பெயர்கள் சூட்டப்பட்டன. அன்னையர் அப்பெயரைச் சொல்லி அழைக்க அஞ்சினர். கிழக்கின் மைந்தர்கள் என அவர்கள் அன்னையரால் அழைக்கப்பட்டனர்.

[ 4 ]

அர்ஜுனன் பீதர்களின் கலத்தில் மேற்குப் பாலைநிலத்தின்  முனம்பிலிருந்த அயிலம் என்னும் துறைநகரிலிருந்து கிளம்பி எட்டுமாதங்கள் பயணம் செய்து பாரதவர்ஷத்தை குமரிமுனம்பு வழியாக சுற்றிக்கொண்டு கிழக்கே சென்று புவியில் இந்திரன் வந்திறங்கும் இடமென்று தொல்கதைகளில் சொல்லப்பட்டிருந்த இந்திரகீலம் என்னும் பறக்கும் மலையை சென்றடைந்தான். முற்றிலும் தன்னுடலுக்குள் தனித்து அடைபட்டவனாக இருந்தான். அடியிலிவரை ஆழம்கொண்ட சிறுதுளைகள் போலிருந்தன அவன் கண்கள். அவன் சொற்கள் மொழியென உருக்கொள்ளா ஒலிகளென்றிருந்தன.

யவன, காப்பிரி, சோனகக் கலங்களுக்கு நிகராக பீதர்நாட்டுக் கலங்கள் நின்றிருந்த அயிலம் என்னும் துறைமுகத்தின் பாலைநிலவிரிவு உயரமற்ற செம்மண் வீடுகளாலும் வீடுகளைவிடப் பெரிதாக தோலுறையால் பொதிந்து கட்டப்பட்ட பண்டப்பொதிகளாலும் நிறைந்திருந்தது. எட்டு நீள்சாலைகள் வந்து அவ்விரிவில் இணைந்தன. அவற்றில் நான்கில் பாலைவணிகர்களின் ஒட்டகைகளின் நிரை பொதிகளுடன் வந்து சேர்ந்தன. அப்பொதிகளை துலாக்கள் தூக்கி நீருள் நின்றாடிய கலங்களில் ஏற்றின. மறுபக்கம் கலங்களிலிருந்து துலாக்கள் எடுத்துச் சுழற்றிவைத்த பொதிகள் நிலத்தில் புழுதியுடன் அமைந்தன.

பொதி ஏற்றப்பட்ட ஒட்டகைநிரை அங்கிருந்து கிளம்பி பாலைப்பாதையில் புழுதிச்சிறகு சூடிச் சென்றது. பொன்னிறப் புழுதியால் அங்கிருந்த அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கலங்கல்நீரில் மீன்கள்போல பலவண்ண ஆடையணிந்திருந்த வணிகரும் ஏவலரும் அதிலிருந்து தோன்றி அதில் மூழ்கி மறைந்தனர். கடலோசையும் சிறகுகுவித்து அணையும்  கலங்களும் சிறகு விரித்து அலைகளில் ஏறிக்கொள்ளும் கலங்களும் எழுப்பும் கொம்பொலியும் ஏவலரும் விலங்குகளும் எழுப்பும் ஓசைகளும் வணிகர்களின் ஆணைக்கூச்சல்களும் திரைக்கு அப்பால் தொடங்கவிருக்கும் நாடகம் ஒலிப்பதுபோல புழுதிக்குள் இருந்து எழுந்தன.

அங்கிருந்த சிறுமண்குடில் ஒன்றில் மேலும் எட்டு மாதம் அவன் தங்கியிருந்தான். அவன் வில்திறன் அதற்குள் அனைவராலும் அறியப்பட்டது. அவனைத் தங்கள் வணிகக்குழுவுடன் சேர்த்துக்கொள்ள அனைவரும் விரும்பினர். அதற்காக பீதர்நாட்டு வணிகர்களிடம் அவர்கள் பொருள் பேசினர். நாள்தோறும் விலையாடியும் அவன் மதிப்பு நிறுத்தப்படவில்லை.  அலைகளை நோக்கியபடி துறைமேடையில் அசைவிலாது அமர்ந்திருந்தான். பாலையில் புழுதிக்காற்று சுருள்வதைக் கண்டும் இருந்த இடம்விட்டு நகராதிருந்தான். ஒரு சொல்லேனும் அவன் உரைக்கவில்லை. ஒருவேளை மட்டும் ஊனுணவு உண்டான். கடல்நாரைகளைப்போல பாறைகளிலும் கலங்களிலும் வடப்பின்னல்களிலும் தாவிச்செல்லும் உடல்கொண்டிருந்தான்.

அவன் உடலில் இருந்த குலக்குறிகளை நோக்க நாள்தோறும் வணிகர் வந்தனர். “அரசகுலத்தான், இடிமின்னலை ஆளும் தெய்வங்களின் மைந்தன்” என்று சொல்லிக்கொண்டனர். கீழ்த்திசையிலிருந்து வந்த பெருங்கலம் ஒன்றின் தலைவர் அவனை பார்க்க வந்தார். பாறைப்பாசி என தொங்கும் நரைத்த தாடியும் நீர்ப்பைபோல தூங்கிய இமைகளும் கொண்டவர். அவனை நோக்கியதுமே அருகே வந்து அவன் உடலில் உள்ள குலக்குறிகளை நோக்கினார். திரும்பி அருகே நின்ற பீதர்நாட்டு வணிகனிடம் “உனக்கு வேண்டியதென்ன? இவரை நான் அழைத்துச்செல்கிறேன்” என்றார்.

அவர் அரசகுலத்தவர் என அறிந்திருந்த வணிகன் மும்முறை வணங்கி அழைத்துவந்தபின் வணங்கிய தோற்றத்திலேயே நின்றிருந்தான். “தாங்கள் என்னிடம் பேசியதே என் நல்லூழ். அதற்குமேல் எதுவும் வேண்டேன்” என்றான். “நன்று, உன் பெயர் நினைவில்கொள்ளப்படும்” என்றபின் அவன் செல்லலாம் என்று கையசைத்தார். அவன் விலகிச் சென்றபின் அர்ஜுனனிடம் குனிந்து “இளைய பாண்டவருக்கு என் வணக்கம். என் நாவாய் தங்கள் காலடிகளுக்காக காத்திருக்கிறது” என்றார். அர்ஜுனன் விழிகளில் ஒரு சிறு அசைவு வந்து மறைந்தது.

“தங்கள் பயணம் கீழ்த்திசை நோக்கியே இருக்குமென எண்ணுகிறேன். நீங்கள் திசைவெல்ல மேற்கே வந்திருப்பதை கதைகள் வழியாக அறிந்திருந்தேன்” என்றார் முதிய வணிகர். “பீதர்நிலத்து தொன்மையான அரசகுலமான நூவா குடியைச்சேர்ந்த என் பெயர் வீ. உங்களுக்குப் பணிசெய்ய காத்திருக்கிறேன்.” அர்ஜுனன் “ஆம், நான் கிழக்கே செல்லவேண்டும்” என்றான். “நீங்கள் நெறிவாழும் மேற்கை அறிந்துவிட்டீர்கள். மீறலின் கிழக்கை அறிந்தாகவேண்டும். என்னுடன் வருக! என் கலம் நாளைமறுநாள் கிளம்புகிறது” என்றார் வீ. அர்ஜுனன் எழுந்து “கிளம்புவோம்” என்றான். அங்கிருந்தே அதுவரை உடன்வந்த எவரையும் திரும்பிநோக்காமல் சென்று அக்கலத்தில் ஏறிக்கொண்டான்.

“எங்கள் மெய்மையின்படி நான்கு அசுரர்களால் பேணப்படுகின்றன திசைகள். செங்குருதிப் பறவை வடிவம் கொண்டது தெற்கின் தெய்வமாகிய அனல். வெள்ளைப் புலியாக மேற்கை ஆள்பவர் உலோகங்களின் தலைவர். கரிய ஆமை வடிவில் நீர்த்தெய்வம் வடக்கை ஆள்கிறது. பறக்கும் நாகத்தின் வடிவம்கொண்ட காடுகளின் தெய்வத்தால் ஆளப்படுவது கிழக்கு” என்றார் வீ. “கிழக்கின் தலைவனுக்குரியது என்று சொல்லப்படும் பொன்மலை ஒன்று அங்கே உள்ளது. அதற்குமேல் பறக்கும்மலை ஒன்றுள்ளது. நான் அதை கண்ணால் கண்டிருக்கிறேன். அதன்பெயர் இந்திரகீலம். அங்குதான் உங்கள் தெய்வமாகிய இந்திரன் வாழ்கிறான் என்கிறார்கள்.”

“வெண்முகில் சிறகுகளுடன் விண்ணில் நிலம்தொடாது பறந்துநிற்கும் மலை அது. அதிலிழிந்து பொழியும் அருவிகள் கீழே அலையடிக்கும் கடலில் வந்துவிழுகின்றன. அங்கே செல்ல பறவைகளாலும் பறக்கும் தெய்வங்களாலும் மட்டுமே முடியும். முகிலின் மேல் எப்போதும் மழைவில் வளைந்துநிற்கும் அம்மலையைப் பற்றி இளமையிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். அதை எவரும் கண்டதில்லை. அங்கே கலங்கள் செல்லமுடியாது. நீருக்குள் இருந்து மலைவடிவ ஆமைகள் எழுந்துவந்து கலங்களைப் புரட்டி மூழ்கடிக்கும். பாறைமுகடுகளாகத் தெரிபவை மூழ்கிக்கிடக்கும் கொலைமுதலைகளின் செதில்கள். கலங்கள் மிகத்தொலைவிலேயே திரும்பிவிடும்.”

“என் முதிரா இளமையில் எந்தையுடன் கடலோடலானேன். அந்நாளில் ஒருமுறை எங்கள் கலம் புயலால் அடித்துச்செல்லப்பட்டு அப்பாறைகள் மேல் மோதியது. சிம்புகளாகச் சிதறிய கலத்திலிருந்து நான் மட்டும் தூக்கிவீசப்பட்டேன். பாறை ஒன்றில் பற்றிக்கொண்டு அலைக்கொந்தளிப்பை கடந்தேன். என் கலத்தில் வந்தவர்களில் எவரும் உயிருடன் எஞ்சவில்லை. நான் மட்டும் பாறைகளைத் தொற்றி மேலேறிச் சென்றேன். மேலும் மேலுமென மலைகள் எழுந்துவந்தன. கருங்கற்பாறைகள் செறிந்த மலைகள் அல்ல. சுண்ணப்பாறையாலான மலைகள். பச்சைமரங்களும் செடிகளும் அடர்ந்து வெட்டிஎடுத்து வைக்கப்பட்ட காட்டின் துண்டு என்றே தோன்றுபவை.”

“அவற்றின்மேல் முகில்கூரை ஒழியாது நின்றிருந்தது. இளமழை எப்போதுமிருந்தது.  அந்த மலைகளுக்கு நடுவே வெண்முகில் செறிந்திருக்கக் கண்டு அருகே சென்றேன். அதற்குள் பல அருவிகள் இழிந்து நீர்ப்பரப்பில் விழக்கண்டேன். கடல்நீர் அங்கே கொந்தளித்துக்கொண்டிருந்தது. அணுகி மேலே நோக்கியபோதுதான் வானில் பறந்து நின்றிருந்த மலையைக் கண்டேன்” என்றார் வீ.

“அங்கே நான் நான்குமாதம் வாழ்ந்தேன். பின்னர் கரையொதுங்கிய மரச்சிம்புகளைக் கொண்டு தெப்பம் ஒன்றைச்செய்து நீந்தி கலங்கள் செல்லும் பாதையை அடைந்தேன். அங்கே நாற்பத்தாறு நாட்கள் மிதந்துகிடந்தேன். தொடர்ந்து மழைபெய்து கொண்டிருந்தமையால் நான்  மீன்களை உண்டு அந்த சிறுதெப்பத்தில் வாழமுடிந்தது. என்னை என் குலத்தினரின் கலம் ஒன்று கண்டுபிடித்தது. அங்கிருந்த பாரதநிலத்துச் சூதன் ஒருவன் சொன்னான் நான் கண்டது இந்திரன் வாழும் பறக்கும் மலையாகிய இந்திரகீலத்தை என்று. நீரில் மூழ்கிக்கிடக்கும் மைனாகத்தின் இளையவள் அவள் என்று அவன் சொன்னான்.”

வீ  சொன்னார் “உத்தமரே, நீங்கள் இந்திரனை தேடிச் செல்வதென்றால் இந்திரகீலத்திற்குத்தான் செல்லவேண்டும்.”  அர்ஜுனன் ஆம் என தலையசைத்தான்.

முந்தைய கட்டுரைதிதலையும் பசலையும்
அடுத்த கட்டுரைகாலனிக்கறை