ஒரு வக்கீல் நோட்டீஸ்

senthil -article vallavan oruvan

 

ஐயா,

தாங்கள் தங்கள் வலைதளத்தில் “வல்லவன் ஒருவன்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் எனது புகைப்படத்தை போட்டுள்ளீர்கள். அழகில்லாமலும் மிகவும் மோசமாகவும் காட்சியளிக்கக்கூடிய அந்த புகைப்படத்தை கண்ட மக்கள் பெரும் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்கள். குறிப்பாக பெண்கள். அழகும் ஆண்மையும் நிறைந்த ஒருவனை இப்படி ஒரு மோசமான புகைப்படத்தை போட்டு அதன் மூலம் அவன் புகழை சீர்குலைக்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளீர்கள். இந்த புகைப்படத்தை பார்த்தபின் பெண்கள் கடிதம் வாயிலாகவும் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு எனக்கு ஏதேனும் உடல்நிலை சரி இல்லையா என்ன ஆயிற்று உங்களுக்கு என்று நலம் விசாரிக்கிறார்கள்.

அகில இந்திய பயணத்தை முடித்துவிட்டு மிகவும் சோர்வாகவும், களைப்பாகவும் இருந்த சமயத்தில் சிவா என்ற ஒரு மோசமான புகைப்பட நிபுணர் மூலம் மிகவும் மோசமாக எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்று விளக்கம் அளித்தாலும் பெண்களின் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. இதனால் நான் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன். இந்த கடிதம் கிடைத்தவுடன் எனது ஒரு அழகான புகைப்படத்தை தங்கள் வலைதளத்தில் பதிவிட்டு இழந்த என் புகழை மீட்டுத் தர வேண்டும்.

இல்லையெனில்; மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் புகழையும் செல்வாக்கையும் சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு, ஒரு மோசமான புகைப்படத்தை பதிவிட்டு அதன்மூலம் என் புகழுக்கு களங்கம் விளைவித்த தங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன்.

இப்படிக்கு

செந்தில் குமார்

சென்னை

*

அன்புள்ள செந்தில்குமார்

நீங்கள் வழக்கறிஞர்தானா என ஐயப்படுகிறேன். ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அறிவிக்கை சட்டத்தின் மொழியில் இல்லை

சட்டத்தின் மொழியில் வழக்கறிஞர் அறிவிக்கையை எழுதுவது எப்படி என்பதை கீழ்க்கண்ட அறிவிக்கையை நாலைந்து முறை படித்துப் புரிந்துகொள்ளவும்

வழக்கறிஞர் விஜயனின் வக்கீல் நோட்டீஸ்

அதை ஒரு முன்னுதாரணமாக சென்னை வழக்கறிஞர் மன்றத்தில் பயில்வதற்கு ஆவன செய்யவும்

பிக்கு

தங்கள் கோரிக்கையை ஏற்று அழகிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது

1

ஜெ

 

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11
அடுத்த கட்டுரைடின்னிடஸ் -கடிதங்கள்