‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59

[ 6 ]

விறலியின் கதை முடிவடைந்தபோது கர்ணனும் ஜயத்ரதனும் அழுத்தமான தனிமை ஒன்றை அடைந்தனர். அவள் ஆடிக்கொண்டிருந்த கதையே தங்களின் நிலையழிவை உருவாக்கியதென்பதை அவர்கள் ஆழத்தில் உணர்ந்தனர். அது ஏன் ஏன் என எண்ணி முன்சென்ற சித்தம் சலித்து விட்டுவிட்டு அமைந்தது. அந்தச் சலிப்பு நெஞ்சை அமைதிகொள்ளச் செய்தது. விழிகள் எடைகொள்ள அவர்கள் துயிலத் தொடங்கினர். கர்ணன் தன் குறட்டையொலியைக் கேட்டு விழித்துக்கொண்டபோது அங்கிருந்த ஷத்ரியர் பலரும் துயில்கொண்டிருப்பதை கண்டான்.

அவன் விழித்தெழுந்து உடலை அசைத்த ஒலி கேட்டு ஜயத்ரதன் விழிப்பு கொண்டான். “நெடுநேரமாயிற்றா, மூத்தவரே?” என்றான். கர்ணன் “இல்லை” என்றான். அவர்கள் துயிலாது விழிகளை தொலைவில் நட்டு இறுகிய உடலுடன் படுத்திருந்த துரியோதனனை நோக்கினர். கர்ணன் “நான் சென்று முகம்கழுவி வரவேண்டும்…” என்றான். ஜயத்ரதன் “நானும் எதையாவது அருந்த விழைகிறேன். திரிகர்த்தநாட்டின் கடும் மதுவை அருந்தினேன். என் உடலெங்கும் அதன் மணம் நிறைந்திருக்கிறது” என்றான்.

கர்ணனின் உடலில் தெரிந்த அசைவைக்கண்டு ஜயத்ரதன் திரும்பி நோக்கியபோது எதிர் வாயிலினூடாக சிசுபாலன் உள்ளே வருவதை பார்த்தான். கர்ணனைத் தொட்டு “மூத்தவரே, அவரில் இருக்கும் தனிமையை பாருங்கள். விரும்பினாலும்கூட அவருடன் எவரும் இருக்க முடியாதென்பதைப்போல” என்றான். கர்ணன் “ஆம், இங்கு இருப்பவன் போல் அல்ல, எங்கோ சென்று கொண்டிருப்பவன் போலிருக்கிறான்” என்றான்.

அங்கிருந்த எவரையும் பார்க்காமல், நிமிர்ந்த தலையுடன், சொடுக்கிய உடலுடன், நீண்ட தாடியை கைகளால் நீவியபடி உள்ளே வந்த சிசுபாலன் தன்னை நோக்கி வந்து பணிந்த அக்கூடத்தின் ஸ்தானிகரிடம் தனக்கொரு மஞ்சம் ஒருக்கும்படி சொன்னதை அவர்கள் கண்டனர். அவனையே விழித்திருந்த அத்தனை ஷத்ரியர்களும் நோக்கினர். அவர்கள் கொண்ட அந்த உளக்கூர்மையை அரைத்துயிலில் உணர்ந்தவர்கள்போல பிறரும் விழிப்பு கொண்டனர். அவர்களும் உடல் உந்தி எழுந்து அவனை நோக்கினர்.

ஸ்தானிகர் சிசுபாலனை அழைத்துச் சென்று கர்ணனுக்கும் ஜயத்ரதனுக்கும் பின்னால் இருந்த ஒழிந்த பீடமொன்றில் அமரச்செய்தார். “இன்னீர் அருந்துகிறீர்களா, அரசே?” என்று அவர் கேட்க அவன் “செல்க!” என்பதுபோல கையசைத்துவிட்டு மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டிக்கொண்டான். தன்னைச் சுற்றிலும் சிறகதிரும் பூச்சிகள்போல் மொய்த்த விழிகளுக்கு நடுவே அவன் படுத்திருந்தான்.

கண்களை மூடிக்கொண்டபோதுதான் முகம் எத்தனை ஒடுங்கியிருக்கிறது என்று தெரிந்தது. கண்ணுருளைகள் இரு எலும்புக்குழிக்குள் போடப்பட்டவை  போலிருந்தன. பல்நிரையுடன் முகவாய் முன்னால் உந்தியிருந்தது. கன்ன எலும்புகள் மேலெழுந்திருந்தன. கழுத்தின் நரம்புகள் புடைத்து, தொண்டை எலும்புகள் அடுக்கப்பட்ட வளையங்கள் போல புடைத்திருக்க கழுத்தெலும்புகளின் வளைவுக்குமேல் ஆழ்ந்த குழிகள் மூச்சில் எழுந்தமைந்தன. அவற்றில் இரு நரம்புகள் இழுபட்டிருந்தன. ஒடுங்கிய நெஞ்சப்பலகைகள் நடுவே மூச்சு அதிர்ந்த குழிக்கு இருபக்கமும் விலாநிரைகள் நரம்புகளால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன.

ஜயத்ரதன் அவனை நோக்கிக் கொண்டிருக்க கர்ணன் அவன் தோளை தொட்டான். “உருகிக்கொண்டிருக்கிறார், அரசே” என்றான் ஜயத்ரதன். “ஆம்” என்றான் கர்ணன். “அவருள் எரிவது எது?” கர்ணன் “ஆழமான புண்கள் உடலில் இருந்து அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன என்பர் மருத்துவர்” என்றான். ஜயத்ரதன் நோக்க “வெளியே இருந்து உருவாகும் புண்களை உடல் நலப்படுத்திக்கொள்ளும், அதுவே உருவாக்கிக்கொள்ளும் புண்களே அதை கொல்பவை என்பார்கள்” என்று அவன் தொடர்ந்தான்.

சிசுபாலனுக்கு அப்பால் படுத்திருருந்த உலூகநாட்டு பிரகந்தன் கையூன்றி எழுந்து “சேதி நாட்டரசே, தாங்கள் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படை கொண்டு  வருவதாகவும், மகதரின் இறப்பிற்கு பழியீடு செய்யப்போவதாகவும் சூதர் பாடல்கள் உலவியதே? ஒருவேளை ராஜசூயத்திற்குப் பிறகு அப்படைப் புறப்பாடு நிகழுமோ?” என்றார். கண்கள் ஒளிர பல ஷத்ரியர் நோக்கினர். கோசலநாட்டு நக்னஜித் “அவர் தவம் செய்கிறார். படைக்கலம் கோரி தெய்வங்களை அழைக்கிறார்” என்றார்.

சிசுபாலன் எதையும் கேட்டதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் தாடை இறுகி அசைவதை கால்களின் இரு கட்டைவிரல்கள் இறுகி சுழல்வதை கர்ணன் பார்த்தான். “மூடர்கள்!” என்றான். “அது அரசர் இயல்பு, மூத்தவரே. ஒருவரை இழிவுபடுத்துவதனூடாக தங்கள் மேன்மையை அவர்கள் நிறுவிக்கொள்கிறார்கள். அவர்கள் இருவருமே தோற்றவர்கள்” என்றான் ஜயத்ரதன். “இவ்விளிவரலுக்கு சில உயர்குடி ஷத்ரியர்கள் புன்னகைப்பார்கள் என்றால் சிறுகுடியினர் அனைவரும் இதை தொடர்வார்கள்.”

கலிங்கனும் மாளவனும் தங்களுக்குள் ஏதோ சொல்லி சிரிக்க அவந்தியின் விந்தன் “அவர் படைதிரட்டிக் கொண்டிருக்கிறார். இளைய யாதவர் அவருக்கு உதவுவதாக சொல்லியிருக்கிறார் என்று அறிந்தேன். அவர்கள் ஒரு குலம் அல்லவா?” என்றான். அனுவிந்தன் உரக்க நகைத்தான். அவனுடன் மேலும் ஷத்ரியர் இணைந்துகொண்டனர். “ஆனால் இளைய யாதவர் தன் மாமனை கொன்றவர். இளைய யாதவர் இவருக்கு மாமன் மகன் அல்லவா? மாமன்குலத்தை அழிப்பது ஒரு அரசச் சடங்காகவே யாதவர்களில் மாறிவிட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.” மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.

கர்ணன் “எத்தனை பொருளற்ற சொற்கள்!” என்றான். “இளிவரல் என்றாலும்கூட அதில் ஒரு நுட்பமோ அழகோ இருக்கலாகாதா?” என்றான்.  ஜயத்ரதன் சிரித்து “அவர்கள் அருந்திய மதுவுக்குப் பிறகு அவர்கள் இத்தனை பேசுவதே வியப்புக்குரியதுதான்” என்றான்.

“ஆனால் சேதிநாடு ஷத்ரியர்களின் அரசாயிற்றே?” என்று கௌசிகி நாட்டு மஹௌஜசன் கேட்டான். “சேதி நாடு ஷத்ரியர்களைவிட மேம்பட்ட குலப்பெருமை கொண்டது. ஷத்ரியர்கள் என்னும் ஈயமும் யாதவர்கள் என்னும் செம்பும் கலந்துருவான வெண்கலம் அது” என்றான்  காஷ்மீரநாட்டு லோகிதன். “அவ்வாறென்றால் தேய்த்தால் பொன் போல் ஒளிரும்” என்றான் தென்னகத்து பௌரவன். “ஆம், நாளும் தேய்க்காவிட்டால் களிம்பேறும்” என்று அவனருகே அமர்ந்திருந்த வாதாதிபன் சொன்னான். நகைப்பு அந்தக்கூடமெங்கும் நிறைந்தது.

சிசுபாலன் எழுந்து அவர்களை நோக்காமல்  கூடத்திலிருந்து வெளியே சென்றான். அவன் எழுந்ததுமே சிரிப்புகள் அடங்கி இளிவரல் நிறைந்த முகங்களுடன் நஞ்சு ஒளிவிடும் கண்களுடன் அவர்கள் அவன் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் வாயிலைக் கடந்ததும் மீண்டும் அக்கூடமே வெடித்துச் சிரித்தது.

[ 7 ]

மீண்டும் வேள்விக்கான அவை கூடுவதற்கான மணியோசை கோபுரத்தின் மேல் எழுந்தது. விண்ணில் முட்டி அங்கிருந்து பொழிந்து அனைவர் மேலும் வருடி வழிவது போலிருந்தது அதன் கார்வை. மரநிழல்களிலும் அணிப்பந்தல்களிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வைதிகர்களும், மாளிகைகளில் துயின்ற அரசர்களும் விழித்து முகமும் கைகால்களும் கழுவி மீண்டும் வேள்விக்கூடத்தை நிறைத்தனர்.

அதுவரை வேள்விக்கு அவியளித்தவர்கள் எழுந்து புதிய அணியினர் அமர்ந்தனர். ஓய்வெடுத்து மீண்ட தௌம்யர் எழுந்து அவையை வணங்கி “அவையீரே, வைதிகரே, முனிவரே, இந்த ராஜசூயப் பெருவேள்வியின் முதன்மைச் சடங்குகளாகிய வில்கூட்டலும் ரதமோட்டலும் ஆநிரை படைத்தலும் நடைபெறும்” என்று அறிவித்தார். பைலர் சென்று தருமனை வணங்கி வில்குலைக்கும் முதற்சடங்கு நிகழவிருப்பதாக அறிவித்தார். அவர் தலையசைத்து செங்கோலை அருகில் நின்ற ஏவலனிடம் அளித்துவிட்டு  எழுந்து அவைமுன் வந்து நின்றார். புதிய மஞ்சள்மூங்கிலால் ஆன வில் ஒன்றை மூன்று வைதிகர் அவர் கையில் அளித்தனர். அதில் மஞ்சள்கொடி சுற்றப்பட்டிருந்தது. பிரம்புக் கொடியால் ஆன நாணை இழுத்துப்பூட்டி மும்முறை மூங்கில் அம்பை தொடுத்து தௌம்யரின் முன் அதை தாழ்த்தி தலைசுண்டி நாணொலி எழுப்பினார் தருமன்.

அவர் சென்று தௌம்யரை வில்தாழ்த்தி வணங்க அவர் தர்ப்பையில் கங்கைநீர் தொட்டு தருமன் தலையில் தெளித்து வேதமோதி வாழ்த்தினார். வைதிகர்கள் அவர் மேல் மலர் தூவி வாழ்த்த வில்லுடன் வேள்விச்சாலைக்கு வெளியே சென்றார். அவருடன் நான்கு தம்பியரும் தொடர்ந்தனர். முதல் அம்பை குறிவைத்து மூன்றுமுறை தாழ்த்தி ஏற்றியபின் இந்திரனின் கிழக்குத்திசை நோக்கி எய்தார். கூடிநின்றவர்கள் கைதூக்கி “ஹோ! ஹோ! ஹோ!” என்று ஓசையிட்டனர்.

எட்டு திசைகளுக்கும் எட்டு அம்புகளை எய்தபின் வில்லுடன் நடந்து அங்கு நின்ற தேரை அடைந்தார். மென்மரத்தாலான சகடங்களும் மூங்கில்தட்டுகளும் கொண்ட அந்த எளிமையான தேர் மலைப்பழங்குடிகளின் வண்டி போலிருந்தது. சௌனகரும் இளைய பாண்டவர் நால்வரும் அவரை வழிநடத்திச் செல்ல, அத்தேரில் ஏறி வில்லுடன் நின்றார்.

மூன்று வெண்புரவிகள் பூட்டப்பட்ட தேர் வேள்விச்சாலையை மும்முறை சுற்றி வந்தது. தேரில் நின்றபடியே தருமன் ஒவ்வொரு மூலையிலும் அம்பு எய்தார். நான்காவது மூலையில் மரத்தில் கட்டப்பட்டிருந்த அத்தி, மா, வாழை எனும் மூன்றுவகை கனிகளை நோக்கி அவர் அம்புவிட அவற்றை அவிழ்த்து அவர் தேரில் வைத்தனர் ஏவலர்.

தேரிலிருந்து இறங்கி வில்லுடன் சென்று வேள்விச்சாலைக்கு இடப்பக்கமிருந்த திறந்த பெருமுற்றத்தை அடைந்தார். பாரதவர்ஷமெங்கிலுமிருந்து கவர்ந்துகொண்டு வரப்பட்ட ஆநிரைகள் அங்கே கட்டப்பட்டிருந்தன. மூன்று வீரர்கள் இடையில் புலித்தோலாடையும் உடம்பெங்கும் சாம்பலும் தலையில் பன்றிப்பல்லாலான பிறையும் அணிந்த காட்டாளர்களாக உருமாற்று கொண்டு அவரை எதிர்கொண்டனர். அவர்கள் மூன்று அம்புகளை தருமனை நோக்கி எய்தனர். அவர்கள் கையை வாயில் வைத்து குரவையொலி எழுப்பினர். தருமன் தன் இடையிலிருந்த சங்கை ஊதினார்.

தருமன் மூன்று அம்புகளை அவர்களை நோக்கி எய்தார். அச்சடங்குப்போர் முடிந்ததும் அவர்கள் மும்முறை நெற்றி நிலம்பட குனிந்து வணங்கி அந்த ஆநிரைகளிலிருந்து குற்றமற்ற சுழிகள் கொண்டதும், செந்நிற மூக்கும் கரிய காம்பும்  உடையதுமான பசு ஒன்றை அவரிடம் அளித்தனர். அப்பசுவை ஓட்டியபடி அவர் வேள்விச்சாலை நோக்கி வந்தார். அவருக்குப்பின் தம்பியர் தொடர்ந்தனர்.

வேள்விச்சாலையிலிருந்த மக்களைக் கண்டு பசு திகைத்து நிற்க ஏவலன் ஒருவன் அதன் கன்றை முன்னால் இழுத்துச் சென்றான். கன்றை நோக்கி நாநீட்டி மூச்செறிந்த பசு தலையைக் குலுக்கியபடி தொடர்ந்து சென்று வேள்விச்சாலைக்கு முன் வந்து நின்றது. அதன் கழுத்தில் வெண்மலர் மாலை சூட்டப்பட்டது. கொம்புகளுக்கு பொற்பூண் அணிவிக்கப்பட்டது. நெற்றியில் பொன்குமிழ் ஆரமும் கழுத்தில் ஒலிக்கும் சிறு மணிமாலையும் சூட்டினர்.

பசுவின் கன்று அதன் முன் காட்டப்பட்டபின் வேள்விச்சாலைக்குள் கொண்டு சென்று மறைக்கப்பட்டது. ஐயுற்று தயங்கி நின்றபின் பசு மெல்ல உடல் குலுங்க தொடை தசைகள் அதிர காலெடுத்துவைத்து கிழக்கு வாயிலினூடாக வேள்விச் சாலைக்குள் நுழைந்தது. அது உள்ளே நுழைந்ததும் அனைத்து வைதிகரும் வேதக்குரல் ஓங்கி முழங்க அதன் மேல் அரிமஞ்சள் தூவி வாழ்த்தினர். மஞ்சள் மழையில் நனைந்து உடல் சிலிர்த்தபடி பசு நடந்து வேள்விச்சாலை அருகே தயங்கி நின்று “அம்பே” என்றது. நற்தருணம் என்று வைதிகர் வாழ்த்தொலி எழுப்பினர்.

பசுவை பைலர் வந்து தர்ப்பையில் கங்கைநீர் தொட்டு நெற்றியில் வைத்து வாழ்த்தி அழைத்துச் சென்றார். முதல் எரிகுளத்தருகே நிறுத்தப்பட்ட பசுவின் நான்கு காம்புகளில் இருந்தும் பால் கறக்கப்பட்டு ஒரு  புதிய பாளைக்குடுவையில் சேர்த்து பின் ஆறு மூங்கில் குவளைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டு ஆறு தழல்களுக்கும் அவியாக்கப்பட்டது. கிழக்கு நோக்கி நிறுத்தப்பட்ட பசுவின் கருவறைவாயிலை  வைதிகர் பூசை செய்து வணங்கினர்.

அப்பசுவை மஞ்சள் கயிற்றால் கட்டி அரியணைக்கு முன் நின்ற தருமன் அருகே கொண்டுவந்து நிறுத்தினர். அவர் அதன் கயிற்றை வாங்கி கொண்டுசென்று தன் பீடத்தில் அமர்ந்திருந்த தௌம்யரின் அருகே காலடியில் வைத்தார். தௌம்யர் அப்பசுவை கொடையாக பெற்றுக்கொண்டு அவர் தலையில் மஞ்சளரிசி இட்டு வாழ்த்தினார்.

ஆநிரை கொள்ளலில் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்துசேர்ந்த  அனைத்துப் பசுக்களும் அங்கிருந்த அந்தணர்களுக்கு வைதிகக்கொடையாக வழங்கப்பட்டன. முதல் நூற்றெட்டு பசுக்களும் தௌம்யரின் குருகுலத்திற்கு அளிக்கப்பட்டன. தௌம்யரின் சார்பில் அவற்றில் ஒரு பசுவின் கயிற்றை அவரது மாணவன் தருமனிடமிருந்து பெற்றுக் கொண்டான். ஒவ்வொரு வைதிகர் குலத்துக்கும் பசு நிரைகள் அளிக்கப்பட்டன. இந்திரப்பிரஸ்தத்தின் இருபத்து மூன்று பெருமுற்றங்களிலும், நகரைச்சூழ்ந்த பன்னிரண்டு குறுங்காடுகளிலுமாக கட்டப்பட்டிருந்த எழுபத்தெட்டாயிரம் பசுக்களும் அங்கிருந்த அந்தணர்களுக்கு கொடையளிக்கப்பட்டன. அந்தணர் எழுந்து தருமனை வாழ்த்தி அவர் குலம் சிறக்க நற்சொல் அளித்தனர்.

பைலரின் வழிகாட்டலின்படி  அன்னம்கொள்ளலுக்காக தருமன் அரியணையிலிருந்து எழுந்து அரசணிகோலத்தில் திரௌபதியுடன்  வேள்விப்பந்தலை விட்டு வெளியே வந்தார். அங்கு காத்திருந்த பன்னிரு வேளாண்குடித்தலைவர்கள் அவர்களை வழிநடத்தி அழைத்துச்சென்று வேள்விப்பந்தலுக்கு இடப்பக்கமாக செம்மைப்படுத்தப்பட்டிருந்த சிறிய வயல் அருகே கொண்டு சென்றனர். அங்கு தொல்குடிகள் பயன்படுத்துவது போன்ற ஒற்றைக்கணுவில் செதுக்கி எடுக்கப்பட்ட சிறிய கைமேழி மூங்கில் நுகமும் எருமையின் தொடை எலும்பால் ஆன  மண்கிளறியும் மூங்கில் கூடையும் இருந்தன.

பைலர் வயலருகே தருமனை நிறுத்தி “வளம் பெருகுக! விதைகளில் உறங்கும் பிரஜாபதிகள் இதழ்விரியும் காலத்தை கண்டு கொள்க! அன்னம் அன்னத்தை பிறப்பிக்கட்டும். அன்னம் அன்னத்தை உண்ணட்டும். அன்னம் அன்னத்தை அறியட்டும். அன்னத்தில் உறையும் பிரம்மம் தன் ஆடலை அதில் நிகழ்த்தட்டும். அன்னமென்று இங்கு வந்த அது நிறைவுறட்டும். ஓம்! அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தி திரும்பி வேள்விக்கூடத்திற்கு சென்றார்.

வேளிர்களால் அழைத்துச் செல்லப்பட்ட யுதிஷ்டிரர் தன் மிதியடிகளை கழற்றிவிட்டு மரத்தாலான கைமேழியை எடுத்து கிழக்கு நோக்கி மண்ணில் வைத்தார். அதன் சிறு நுகத்தை அர்ஜுனனும் பீமனும் பற்றிக் கொண்டனர். கரையில் நின்றிருந்த முன்று வைதிகர்கள் வேதச் சொல் உரைக்க அதைக் கேட்டு திரும்பச் சொன்னபடி அவர்கள் நுகத்தைப்பிடித்து இழுத்துச்சென்றனர். தருமன் அவ்வயலை உழுதார். நகுலனும் சகதேவனும் இருபக்கமும் மண் குத்திகளால் நிலத்தைக் கொத்தியபடி உடன் வந்தனர். திரௌபதி மூங்கில் கூடையை இடையில் ஏந்தி அதிலிருந்த  வஜ்ரதானிய விதைகளை அள்ளி வலக்கை மலரச்செய்து விதைத்தபடி பின் தொடர்ந்தாள்.

ஏழுமுறை உழுது சுற்றிவந்து விதைத்ததும் அவர்கள் கரையிலேறி ஓரிடத்தில் அமர்ந்தனர். வைதிகர் சொல்லெடுத்தளிக்க “விடாய் அணையாத அன்னையின் வயிறே! ஊற்று அணையாத முலைக்கண்களே! அளித்துச்சோராத அளிக்கைகளே! எங்களுக்கு அன்னமாகி வருக! எங்கள் சித்தங்களில் அறிவாகவும் எங்கள் குல வழிகளில் பணிவாகவும் இங்கு எழுக!” என்று வாழ்த்தினர். குலமுறை கூறுவோர் தருமனுக்கு முன்னால் வந்து யயாதியிலிருந்து தொடங்கும் அவரது குலமுறையை வாழ்த்தி ஒவ்வொருவருக்கும் உணவளித்த மண் அவர்களுக்கும் அமுதாகுக என்று வாழ்த்தினர்.

பன்னிரு ஏவலர் கதிர் முதிர்ந்த வஜ்ரதானியத்தின் செடிகளை அவ்வயலில் நட்டனர். தருமன் தன் துணைவியுடன் மண் கலங்களில் நீரேந்தி வயலுக்குள் இறங்கி அவற்றுக்கு வலக்கை மேல் இடக்கை வைத்து  நீர் பாய்ச்சினார். பின்னர் கிழக்கு நோக்கி திரும்பி நின்று “எழுகதிரே, இங்கு அன்னத்திற்கு உயிரூட்டுக! அமைந்துள்ள அனைத்திற்குள்ளும் அனலை நிறுத்தி அசைவூட்டுக! ஒவ்வொன்றிலும் எழும் தவம் உன்னால் நிறைவுறுக!” என்று வணங்கினார்.

தொன்மையான முறையில் எருதின் வளைந்த விலா எலும்புகளில் கல்லால் உரசி உருவாக்கப்பட்ட அரம் கொண்ட கதிர் அரிவாளை  வேதியரிடமிருந்து பெற்று வயலில் இறங்கி அதைக் கொண்டு அக்கதிர்களை கொய்தார். அவற்றை அவருக்குப் பின்னால் சென்ற திரௌபதி பெற்று தன் கூடையில் நிறைத்தாள். பத்தில் ஒரு பங்கு கதிரை பறவைகளுக்கென நிலத்திலேயே விட்டுவிட்டு கரையேறினர்.

வரப்பில் நின்று மண் தொட்டு சென்னி சூடி தருமன் “அன்னையே, உன்னிடமிருந்து இவ்வன்னத்தை எடுத்துக் கொள்கிறோம். பெற்றுக் கொண்டவற்றை இம்மண்ணுக்கே திருப்பி அளிப்போம். இங்கு உணவுண்ணும் பூச்சிகள் புழுக்கள் விலங்குகள் அனைவருக்கும் நீ அமுதாகி செல்க! உயிர்க்குலங்கள் அனைத்தும் உன்னால் பசியாறுக! உன்னை வணங்கும் என் சென்னி மீது உன் கருணை கொண்ட கால்கள் அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!”  என்று வேண்டி திரும்பி நடந்தார். அவர் தோளில் அந்த மேழியும் வலக்கையில் கதிர் அரிவாளும் இருந்தன. கொய்த கதிர்களுடன் திரௌபதி அவருக்குப் பின்னால் செல்ல இளைய பாண்டவர்கள் தொடர்ந்தனர்.

அவர்களை வேள்விப்பந்தலருகே எதிர்கொண்ட பைலரும் வைதிகரும் “நிறைகதிர்களுடன் இல்லம் மீளும் குலத்தலைவரே, பெற்றுக் கொண்டவர்கள் திருப்பி அளிக்க கடமைப்பட்டவர்கள். மண் அளிப்பவை அனைத்தும் விண்ணுக்குரியவை என்றுணர்க! விண்ணோக்கி எழுகிறது பசுமை. விண்ணோக்கி நா நீட்டி எழுகிறது அனல். விண்ணோக்கி பொருள் திரட்டி எழுகிறது சொல். விண்ணிலுறையும் தெய்வங்களுக்கு மண் அளித்த இவ்வுணவை அளிக்க வருக!” என்றனர்.

அவர்கள் வழிகாட்ட தருமனும் துணைவியும் பந்தலுக்குள் சென்று எரிகுளங்களுக்கு நடுவே அமர்ந்தனர். திரௌபதி அவ்வஜ்ரதானியங்களை மென்மரத்தாலான கட்டையாலடித்து உதிர்த்தாள். கையால் அம்மணிகளை கசக்கி பிரித்தெடுத்தாள். மூங்கில் முறத்தில் இட்டு விசிறி, பதரும் உமியும் களைந்து எடுத்த மணிகளை ஐந்து பிரிவாக பிரித்தாள். முதல் பிரிவை தனக்குரிய மூங்கில் நாழியில் இட்டாள். இரண்டாவது பிரிவை அவள் முன் வந்து வணங்கிய வேள்வி நிகழ்த்தும் அந்தணருக்கு அளித்தாள். மூன்றாவது பிரிவை கையில் முழவுடனும் கிணைப்பறையுடனும் விறலியுடன் வந்த பாணன் பெற்றுக்கொண்டான். நான்காவது பிரிவு தென்திசை நோக்கி விலக்கி வைக்கப்பட்டது. ஐந்தாவது பிரிவு தெய்வத்திற்கென சிறு கூடையில் இடப்பட்டது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்று ஐம்புலத்தாரும் ஓம்பி அமர்ந்த அவளை தௌம்யர் வாழ்த்தினார். வேள்விக்கென அளிக்கப்பட்ட வஜ்ரதானியம் முப்பத்தியாறு சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு எரிகுளத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு அவியிடப்பட்டது. தௌம்யர் “ஆவும் மண்ணும் அன்னையும் என வந்து நம்மைச்சூழ்ந்து காக்கும் விண்கருணையே! இங்கு அனலென்றும் விளங்குக! இவை அனைத்தையும் உண்டு எங்கள் மூதாதையருக்கும் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் அளிப்பாயாக! அவர்களின் சொற்கள் என்றும் எங்களுடன் நிறைந்திருக்கட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார். “ஓம் ஓம் ஓம்” என்று அவை முழங்கியது.

முந்தைய கட்டுரைதத்துவக்கல்வியின் தொடக்கத்தில்…
அடுத்த கட்டுரைஅரசியல் கடிதங்கள்