அன்பு ஜெமோ,
தளத்தில் வேறெதையோ தேடிக்கொண்டிருந்தபோது இது கிடைத்தது.
இவ்வளவு புத்தகங்கள் வாசிக்க வேண்டியிருக்கிறது. வாசிப்பதாக வாக்குறுதி வேறு கொடுத்திருக்கிறீர்கள். கலீல் ஜிப்ரனைபோல் கவிதைகளை வேறு எழுத வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் எப்போது செய்யப்போகிறீர்கள் என்று திகைப்பாக இருக்கிறது. இதையெல்லாம் படிப்பதற்கு முன்பே அவசரமாக எழுதிவிட்டவைகளையும் என்ன செய்வது என்று புரியவில்லை.
பி.கு: நீங்கள் எழுதிய காதல் கதைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவற்றின் சுட்டிகளை அனுப்பவும். மேலும் மன அளவில் லீலையில் ஈடுபடுவது எப்படி என்பது பற்றி புத்தகம் ஏதேனும் தேடிப் படித்திருந்தால் அதையும் அனுப்பவும்.
அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்
அன்புள்ள ராஜன்,
ராலேயில் கோடைகால இசைநிகழ்ச்சிகள் தொடங்கியிருக்குமென நினைக்கிறேன்
இப்படி நான் வாசிக்கவேண்டிய நூல்கள் நிறைய உள்ளன. முன்பு அந்திமழை பத்த்ரிகையில் ஒரு டிவிட்டரி மங்கை புகழ் பெற்றதைப்பற்றி நான் பொறாமை கொள்வதாகவும் நானும் கடுமையாக உழைத்தால் புகழ்பெறலாம் என்றும் ஒருவர் எழுதியிருந்தார். கடுமையாக உழைப்பதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா?
மேலே சொன்ன கடிதத்திலிருந்து ‘மன அளவில் லீலையில்’ ஈடுபடாமல் ஓஷோவை புரிந்துகொள்ள முடியாதென்றுதான் அவர் சொல்கிறார் என்றுதான் நான் புரிந்துகொண்டேன். அதெல்லாம் எனக்கு இனிமேல் சாத்தியமில்லை என்பதனால் விட்டுவிட்டேன்.
ஆனால் நீங்கள் கேட்கும்போது சந்தேகமாக இருக்கிறது. wet chat என்று ஆங்கிலத்திலே சொல்லும் ஈரமான உரையாடலைத்தானே ’மனலீலை’ என்று சொல்கிறார்கள்? நான் தான் தப்பாகப்புரிந்துகொண்டேனா?
ஜெ