வானதி வல்லபி – கடிதங்கள்

 

12794528_10205342526593163_158806621050748252_n(1)

வானதி வல்லபி சகோதரிகளின் இல்லத்திறப்பு விழா குறித்த இன்றைய பதிவு சமீப நாட்களில் நான் படிக்க நேர்ந்த மிக நல்ல செய்தி. எல்லா நலங்களும் வளங்களும் பெற்றவர்களே,சமூகத்தில் தங்கள் ஆதிக்கம் நிலைக்க எடுத்துக் கொள்ளும் கீழ்மை மிகுந்த முயற்சிகளையே செய்திகள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், காரணம் கேட்கவியலாத இயற்கையால் ஏனோ சற்று கைவிடப்பட்டவர்கள் தங்களது மேன்மையால், அதைக் கடந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இயங்குவது அசாதரணமான செயல். நீங்கள் சொல்லியிருப்பது போல் உங்களது வாழ்வின் பெருமை மிகு தருணங்களில் ஒன்று இது. கட்டுரையின் படங்களும் வெகு சிறப்பாக அமைந்துள்ளன. இந்த நேரத்தில், இந்தச் சகோதரிகளை நேரடியாக அறிந்திருக்கிறேன் அவர்களுடன் நேரடிப் பழக்கமும் உண்டு என்பதிலே பெருமிதமும் கொள்கிறேன். அவர்களுக்கும், அவர்தம் பெற்றோருக்கும், உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

சுரேஷ்

அன்புள்ள ஜெமோ
வானதி வல்லபி நிகழ்ச்சி பற்றிய குறிப்பைக் கண்டேன். மனம் நெகிழவைக்கும் பதிவு. வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்போது இன்னும் இன்னும் என்று தோன்றுகிறது.  வாழ்க்கையின் விளிம்பில் நிற்பவர்களோ கொடுக்ககொடுக்க ஊறிக்கொண்டிருக்கிறது
நீங்கள் சொல்வது சரிதான். அவ்வப்போது நமக்கு இப்படிச் சில நினைவூட்டல்களை அளிக்கிறது தெய்வம்
சித்ரா
முந்தைய கட்டுரைபுனைவும் புனைவாடலும்
அடுத்த கட்டுரைஉரையாடல்களின் வெளி