‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64

பகுதி ஐந்து : தேரோட்டி – 29

அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துவாரகையின் நால்வகை குடித்தலைவர்களும் அமைந்த சிற்றவையில் அன்றைய அலுவல்கள் முடிந்து திரண்டு வந்த ஆணைகளை அக்ரூரர் ஓலைநாயகத்திற்கு அளித்தார். அவர் அவற்றை எழுதியளித்ததும் பெற்று ஒவ்வொன்றாக உரக்க வாசித்தார். “ஆம்! ஆம்! ஆம்” என்று உரைத்து அவை அதை ஏற்றது. அரியணை அமர்ந்திருந்த இளைய யாதவரின் பொருட்டு அவரது அணுக்கன் முத்திரை மோதிரத்தால் அவ்வோலைகளில் சாத்து இட்டான். ஓலைகள் முடிந்ததும் அக்ரூரர் அவை நோக்கி தலைவணங்கி “நன்று சூழ்க!” என்றார்.

மெல்லிய உடை அசைவுகளுடன் குடித்தலைவர்கள் பின்நிரையிலிருந்து தங்கள் பொருட்களை எடுக்கத் தொடங்கியபோது அர்ஜுனன் எழுந்து கைகூப்பி “நான் இந்நகர் விட்டு செல்ல அரசரும் இந்த அவையும் ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றான். இளைய யாதவர் புருவங்கள் சற்றே சுருங்க “ஏன் இந்த உடன் முடிவு?” என்றார். அக்ரூரர் “தாங்கள் இங்கு ஒரு மாதம் இருப்பதாகத்தானே சொல்லப்பட்டது?” என்றார். “ஆம். அரசருக்கும் இளவரசிக்கும் நான் அறிந்த சில படைக்கலப் பயிற்சிகளை கற்றுக் கொடுப்பதற்காக இங்கு வந்தேன். ஆனால் இந்நகரில் தொடர்ந்து தங்குவதற்கு என் உள்ளம் ஒப்பவில்லை” என்றான்.

“எதனால் என்று இந்த அவைக்கு சொல்ல முடியுமா?” என்றார் அக்ரூரர். இளைய யாதவர் புன்னகைத்து “யோகியர் உள்ளம்… அதை நாம் மறுக்க என்ன இருக்கிறத!” என்றார். ஸ்ரீதமர் “தாங்கள் எப்போது கிளம்புவதாக எண்ணம்?” என்றார். “இன்றே, இப்போதே” என்றான் அர்ஜுனன். “எண்ணிய பின் ஒரு கணமும் பிந்த முடியாது. ஊர் ஊராகத் திரிபவர்களுக்கு கொண்டு செல்வதற்கு நினைவுகளும் சுமையே. இந்த நன்னகரில் பெருநிகழ்வொன்றுக்கு சான்றாகி நிற்கும் பேறு பெற்றேன். அதன் பொருட்டு அரசரையும் அவையையும் வணங்குகிறேன்” என்றான். அக்ரூரர் “நன்று சூழ்க!” என்றார்.

இளைய யாதவர் “சென்று வருக யோகியே! இந்நகருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு இதன் எல்லை கடந்து செல்லுங்கள். இந்நகருக்குள் வரும் எவருக்கும் வரிசை அளித்து அனுப்பும் வழக்கம் உள்ளது. சிவயோகியர் எதையும் கொள்வதில்லை என்பதனால் எங்கள் வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார். அர்ஜுனன் “அவ்வண்ணமே” என்று மீண்டுமொருமுறை தலை வணங்கினான்.

அவையறைவோன் தன் குறுபீடத்தில் எழுந்து கையிலிருந்த தண்டைச் சுழற்றி உரத்தகுரலில் அவை நிறைவுறுவதை அறிவிக்க அவையினர் சால்வைகளையும் கோல்களையும் பைகளையும் எடுத்துக்கொண்டு எழுந்தனர். அர்ஜுனன் அவை நீங்கும்போது அக்ரூரர் அரசரின் முகத்தைப் பார்ப்பதையும் அதைத் தவிர்ப்பவர் போல இளைய யாதவர் எழுந்து தன் சால்வைக்காக அணுக்கனிடம் கை நீட்டுவதையும் அவன் கண்டான். வெளி வந்து இடைநாழியில் தூண்களின் நிழல்கள் உடலை வருடி பின் செல்ல மெல்ல நடந்தபோது பின்னால் வந்த விருஷ்ணி குலத்தலைவராகிய சுதாமர் “உடனே கிளம்புவதற்கு தூண்டுதல் என்ன என்று நான் அறியலாமா?” என்றார்.

“ஏதுமில்லை. தூண்டுதலின்றியே நான் இங்கு வந்தேன். அவ்வண்ணமே கிளம்புகிறேன்” என்றான். “இல்லை. தங்கள் வரவு தெய்வங்களால் வகுக்கப்பட்டது என்று இந்நகர் மக்கள் நம்புகிறார்கள். வெள்ளையானை மீதேறி எங்கள் குடியின் இளவரசர் இந்நகர் நீங்கியதைக் கண்டது தாங்கள் மட்டுமே. உங்கள் சொற்களையே இன்று நகரெங்கும் சூதர்கள் பாடல்களாக பாடியலைகிறார்கள்” என்றார்.

அவருக்குப் பின்னால் வந்த இன்னொரு குடித்தலைவர் “பாலைவனப் பாதையில் விரிந்த சிறகுகளுடன் வந்திறங்கிய ஐந்து தேவர்கள் அவரை இருபக்கமும் நின்று காத்து அழைத்துச் சென்றதை தாங்கள் சொல்வதாக ஒரு பாடல் நேற்று எங்கள் குடி மன்றில் பாடப்பட்டது” என்றார். “கதைகள் பெருகி வளர்பவை. ஒவ்வொரு நாளும் நாம் கேட்பது ஒரு புதிய கதையை” என்றான் அர்ஜுனன். “தாங்கள் இங்கு வந்த பணி முடிந்தது என்று கிளம்புகிறீர்களா?” என்றார் சுதாமர். “அறியேன். நான் பெற வேண்டியதை பெற்றுவிட்டேன் என்பதனால் இருக்கலாம்” என்றான் அர்ஜுனன். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி தலை அசைத்தனர்.

அர்ஜுனன் முற்றத்தில் இறங்கி தன் ஒற்றைக்குதிரைத் தேரிலேறி சாலையோரத்தை நோக்கியபடி அமைதியாக அமர்ந்து பயணித்து விருந்தினர் மாளிகைக்கு வந்தான். காலையிலேயே தனது சிறிய தோல் மூட்டையை முடிந்து மஞ்சத்தில் வைத்திருந்தான். அப்போது உடனிருந்த அணுக்கனிடம் முன் மதியத்தில் அவை முடிந்தவுடன் கிளம்பி நகர்நீங்குவதை சொல்லியிருந்தான். இடைநாழியில் காத்திருந்த அவன் தலை வணங்கி “அவை முடிந்துவிட்டதா யோகியே?” என்றான். “ஆம். நான் கிளம்புகிறேன்” என்றபடி அர்ஜுனன் உள்ளே சென்று படியேறி தனது மஞ்சத்தறையை அடைந்தான்.

அவன் பின்னால் வந்த ஏவலன் “தாங்கள் ஆடை மாற்றிக் கொள்ளப் போகிறீர்களா?” என்றான். “ஆம். இந்த உயர்தர தோலாடையுடன் நான் பாலைவனத்தில் செல்ல முடியாது. என்னிடம் பொன் இருக்கும் என்று திருடர்கள் என்னை கொல்லக் கூடும். யோகியருக்கு உயர்வு மரவுரி ஆடையே” என்றான். “உணவு அருந்திவிட்டு கிளம்பலாம்” என்றான் அணுக்கன். “அருந்தும் உளநிலை எனக்கில்லை. பால் மட்டும்கொண்டு வருக!” என்று சொல்லி அவனை அனுப்பியபின் அர்ஜுனன் உடைமாற்றினான்.

மரவுரியை தோளில் முடிந்து இறுக்கிக் கொண்டிருந்தபோது வெளியே காலடி ஓசையை கேட்டான். உள்ளம் படபடக்கத் தொடங்கிய பிறகே அது சுபத்திரையின் காலடி ஓசை என்று தான் அறிந்திருப்பதை அவன் உணர்ந்தான். கதவருகே வந்து மெல்லிய குரலில் “தங்களை நான் சந்திக்க விழைகிறேன் யோகியாரே” என்றாள் சுபத்திரை. “உள்ளே வருக!” என்றான் அர்ஜுனன். அவள் உள்ளே வந்து கதவருகே கைகளை வைத்துக்கொண்டு சாய்ந்து நின்று “தங்களுக்காக இன்று காலை பயிற்சிக்களத்தில் காத்திருந்தேன்” என்றாள். “இன்று அவைக்குச் சென்றேன்” என்றான்.

“அவையில் இன்று தாங்கள் நகர்நீங்குவதாக சொன்னீர்கள் அல்லவா?” என்றாள் அவள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “ஏன்?” என்றாள் அவள். தன் நாவில் எழுந்த ஒரு சொல்லை ஓசையின்றி உருட்டி பின் விழுங்கிவிட்டு மேல் மூச்சுடன் திரும்பி “இங்கு நான் இருப்பது நல்லதல்ல என்று தோன்றியது” என்றான். சுபத்திரை “நான் இன்னும் பத்து நாட்களே இங்கு இருக்கப் போகிறேன். வரும் வைகாசி முழு நிலவு நாளில் மணத்தன்னேற்புக்காக மதுராவில் நான் இருந்தாக வேண்டும். இங்கிருந்து என்னுடன் தாங்களும் வரப்போவதாக இளைய யாதவர் சொன்னார்” என்றாள்.

“ஆம். அவ்வாறு முதலில் சொல்லியிருந்தேன். ஆனால்…” என்ற அர்ஜுனன் திரும்பி சாளரத்தை பார்த்தான். சாளரத்துக்கு அப்பால் அசைந்த மரக்கிளையின் சீர்தாளம் அவனை உளம் அமையச் செய்தது. அதை நோக்கிக் கொண்டிருக்கையில் அவனுள் எழுந்த அலைகள் முற்றிலும் அடங்கின. திரும்பி “இளவரசி, நான் தங்களுக்கு படைக்கலப் பயிற்சி அளிப்பதை தங்கள் குலங்கள் விரும்பவில்லை. இங்குள யாதவர் அனைவருமே அதைப்பற்றி அலர் பேசுகிறார்கள் என்பதை நான் அறிந்தேன். என்னை மாறு தோற்றத்தில் இங்கு வந்த பிறநாட்டு அரசர் எவரோ ஒருவருடைய ஒற்றர் என எண்ணுவாரும் உளர். தங்கள் மணத்தன்னேற்பு நிகழவிருக்கும் இந்நேரத்தில் இவ்வீண் சொற்கள் எழவேண்டியதில்லை என்று தோன்றியது” என்றான்.

அவள் மெல்ல அவன் அருகே வந்து “அலரை நீங்கள் அஞ்சமாட்டீர்கள் என்று நான் அறிவேன். ஏனெனில் நாம் இந்நகருக்கு வரும்போதே அது தொடங்கிவிட்டது” என்றாள். அர்ஜுனன் “ஆம்” என்றான். “பின் என்ன?” என்றாள். “வெள்ளையானை மீதேறி மூத்தவர் சென்ற அக்காட்சி கண்ணில் உள்ளது” என்றான் அர்ஜுனன். “எனவே…?” என்றாள் அவள். “அரியவை, அருள் நிறைந்தவை அனைத்தும் நூல்களிலேயே நிகழுமென்றும் எண்ணியிருந்தேன். என் கண் முன் அவ்வாறு ஒன்று நிகழ்ந்தபோது நான் எண்ணுபவை, இயற்றுபவை, எஞ்சுபவை அனைத்தும் எத்தனை சிறியவை என்றுணர்ந்தேன். சின்னஞ்சிறு கூழாங்கற்களை மலை என எண்ணி ஏறும் எறும்பு போல தோன்றுகிறது என எண்ணிக் கொண்டேன்.”

தலையசைத்து தனக்குள் என “மிக எளியவை மிகச் சிறியது” என்றான். “எதைச் சொல்கிறீர்கள்?” என்றாள் சுபத்திரை. “எதை சொல்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள்” என்றான். “ஆம்” என்றாள். அவள் அவன் விழிகளை நோக்கிய தன் பார்வையை தழைக்கவில்லை. “பெண் ஒரு போதும் அப்படி எண்ணப் போவதில்லை. எந்தப் பெண்ணுக்கும் இவை எவையும் எளியவையோ சிறியவையோ அல்ல” என்றாள். முகம் சிவந்து கூர்மைகொள்ள “ஆம். நானும் அறிவேன். வெண்களிறு ஏறி விண் நோக்கிச் சென்ற பேருருவனை. இன்று அவரை என்னால் முழுதறிய முடியாமல் இருக்கலாம். என்றோ ஒரு நாள் அவரை சிறு கருவென தன் வயிற்றில் அடக்கிய அன்னையென என்னை எண்ணிக் கொள்ள முடியும்” என்றாள்.

அர்ஜுனன் அவள் கண்களை நோக்கினான். “அவ்வன்னை என நின்று சொல்கிறேன். இவை எதுவும் பொருளற்றவை அல்ல. நீங்கள் கண்ட அவ்வரிய நிகழ்விற்கு எவ்வகையிலும் குறைந்தவையும் அல்ல” என்றாள் சுபத்திரை. நடுக்கம் ஓடிய மெல்லிய குரலில் அவன் “எதைச் சொல்கிறாய்?” என்றான். “நான் எதைச் சொல்கிறேன் என நீங்கள் அறிவீர்கள்” என்றாள். சில கணங்கள் அர்ஜுனனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. “நான் யார் என்று அறிவாயா?” என்றான். தன் குரல் ஏன் அப்படி குழைந்து அதிர்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. “அறிவேன்” என்றாள். அவன் விழிதூக்கி அவளை நோக்க “குலமோ நாடோ அல்ல பெண் அறிய விழைவது. பெண்ணென நான் விழைவது எதுவோ அதை உங்களில் அறிந்தேன். அது எனக்குப் போதும்” என்றாள்.

அர்ஜுனன் தோள்கள் மெல்ல தளர்ந்தன. “நான்…” என்று அவன் எதோ சொல்லத் தொடங்க, அவள் அவன் கைகளை பற்றிக் கொண்டாள். அவன் கைகளை பின்னுக்கு இழுக்க இன்னொரு கையால் அவன் இடையை வளைத்து அவன் அருகே உடலை நெருக்கி வந்து நின்று சற்றே முகத்தை தூக்கி அவன் விழிகளை நோக்கி “நான் அறிவேன்” என்றாள். அவள் வியர்வையின் வெம்மை கலந்த மணம் அவனை அடைந்தது. அவன் மூக்கருகே அவள் காதோர மென்மயிர் சுருள்கள் அசைந்தன. கழுத்தின் மெல்லிய வரிகள். விரிந்த தோளில் வெண்ணிற மென்தோலின் மலர்க்கோடுகள். “அஞ்சுகிறேன்” என்றான் அர்ஜுனன். “எதை?” என்றாள். “பிறிதெப்போதும் இதுபோல அஞ்சியதில்லை” என்றான். “அஞ்ச வேண்டியதில்லை” என்று சொல்லி அவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவள் முலைகள் அவன் மார்பில் பதிந்தன. முலைக்கண்களை உணரமுடிந்தது.

தயங்கியபடி அவன் கைகள் அவள் உடலை தொட்டன. பின்பு உளஎழுச்சி கொண்டு வலக்கையால் அவள் இடையைச் சுற்றி தன் இடையுடன் சேர்த்துக் கொண்டு குனிந்து அவள் வெண்ணிற வட்ட முகத்தை பார்த்தான். சிறிய விழிகள் கனன்றபடி இருந்தன. நுனிநா வந்து இதழ்களை தொட்டு மீண்டது. கொழுவிய வெண்கன்னங்களில் சேர்ந்த சிறிய பருக்கள் மொட்டுகள் போல் தெரிந்தன. “வேண்டாம் இளவரசி” என்றான். அவள் “நான் பிறிதொரு ஆண்மகனை எண்ணப்போவதில்லை. அதை தாங்கள் அறிவீர்கள். விழைந்தால் என்னைத் துறந்து இந்நகர் நீங்கலாம். நான் தடுக்கப்போவதில்லை. இதை சொல்லிச் செல்லவே இங்கு வந்தேன்” என்றபின் அவள் தன் கைகளை அவனிடமிருந்து எடுத்தாள்.

அறியாமல் அவனில் முன்னால் செல்லும் ஒரு மெல்லசைவு எழுந்தது. அவள் தன் இடையிலிருந்து அவன் கையை தொட்டு விலக்கிவிட்டு “விரும்பாத ஆண்மகனை விழைவைக் காட்டி உடன் நிறுத்துவது எனக்கு இழிவு” என்றாள். மந்தணக் குரலில் “நான் அஞ்சுவது என் விழைவையே என்று உனக்குத் தெரியாதா?” என்றான் அர்ஜுனன். விழிதூக்கி அவளைப் பார்த்தபோது அவள் முகம் மலர்ந்திருந்தது. கன்னங்களில் சிறிய சிவப்புத் திட்டுகள் எழுந்து மறைந்தன. “விழைவு ஆணுக்கு அழகு” என்றாள். “எதை அஞ்சுகிறீர்கள்? என் குலத்தையா? என் தேர்வுக்கு அப்பால் என் குல மூத்தார் சொல்வதற்கு ஏதுமில்லை” என்றாள்.

“இன்று உன் கை பற்றுவதற்கு யாதவ குலங்களும் ஷத்ரிய அரசுகளும் முந்தி நிற்கின்றன” என்றான். “ஆம். அதனால் நான் விழைந்த கையை பற்றுவதற்கு எனக்கு தடை ஏதுமில்லை” என்றாள். “அதன் பின் அவர்களை எதிர்கொள்ளும் பொறுப்பும் எனக்கே. தங்களுக்கில்லை.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு கால் தளர்ந்து பின்னால் நகர்ந்தான். அங்கிருந்த சிறிய பீடத்தில் அமர்ந்து கைகளை மடிமேல் வைத்துக்கொண்டான். அவள் இடையில் கைவைத்து முன்னின்று “இத்தனை அஞ்சுவதற்கு இதில் என்ன உள்ளது?” என்றாள். இல்லை என்பதுபோல தலையசைத்து “இது மேன்மையை நோக்கி இட்டுச் செல்வதில்லை” என்றான் அர்ஜுனன்.

“மெய்க்காதல் என்பது மேன்மை அல்லவா?” “ஆம்” என்றான் அவன். “ஆனால் என்னுடையது மெய்க்காதலா என்று நான் ஐயம் கொள்கிறேன்” என்றான். “ஏன்?” என்றாள் அவள். “இது மேன்மையானது என்றால் ஏன் உள்ளம் அஞ்சுகிறது? என் நினைவுகள் அனைத்திலும் இனிமை நிறையவில்லை. வெண்களிறு ஏறிச்சென்ற வேந்தனுக்கு ஏதோ பிழையை நான் ஆற்றுவது போல் என் உள்ளம் சுருங்குவது ஏன்?” என்றான். “நான் இங்காவது விழைவுகளில் நீந்தாமல் அதை ஆளமுடியாதா என்ன?”

அவள் முகத்தில் இரு புன்னகைக்குழிகள் எழுந்தன. “இங்கு நிகழ்ந்த அவ்வருஞ்செயலில் எவ்வகையிலோ உங்கள் உள்ளம் ஈடுபட்டுவிட்டது. தாங்கள் யோகியல்ல. எண்ணியும் கருதியும் எவரும் யோகியாவதில்லை. கனிந்த கனியென உதிர்ந்து செல்பவர்களே முற்றிலும் துறக்க முடிகிறது. கனி உதிர எண்ணுகையில் மரம் உதிர்க்கவும் வேண்டும். ஒரு ஊழின் கணம் அது” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “பெரும் பாறை வெடித்து பிளவுறுவது போல அக்கணத்தில் நிகழ்ந்தது. நான் அருகிருந்து கண்டேன். பல்லாயிரம் முறை எனக்குள் அதை மீட்டிக் கொண்டேன். ஒரு முழு வாழ்க்கையின் அக்கணத்தை வாழ்ந்து முடித்தேன். அவை எனக்கில்லை என்று அப்போது தெளிந்தேன்” என்றான்.

“அவ்வண்ணமெனில் இத்திசைக்கு வருவதன்றி வேறென்ன வழியுள்ளது?” என்றாள் அவள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “தாங்கள் இந்நகர் விட்டு எங்கும் செல்லப்போவதில்லை. தங்கள் முடிவை மாற்றிக் கொண்ட செய்தியை அவைக்கு நான் அறிவித்துவிட்டே வந்தேன்” என்றாள் சுபத்திரை. அவன் திகைத்து ஏதோ சொல்ல முயல அவன் கையைப்பற்றி “விற்கூடத்தில் நிறைந்த ஆவநாழியும் நாணேற்றிய விற்களும் நமக்காக காத்துள்ளன” என்றாள். சில கணங்கள் அவள் முகத்தை பார்த்தபின் புன்னகைத்து அர்ஜுனன் எழுந்தான்.

அவள் மேலாடையை சீர்செய்து குழல் ஒதுக்கி முன்னால் நடந்தபடி “தங்களை அழைத்து வருவதாக பயிற்சிக் களத்தில் சொல்லிவிட்டே வந்தேன்” என்றாள். “என்னை முற்றிலும் அறிந்திருக்கிறாய்” என்றான் அர்ஜுனன். திரும்பி “இல்லை, என்னை அறிந்திருக்கிறேன்” என்றாள். அவள் சிரிப்பைக் கண்டதும் இரண்டு அடிகள் முன்னெடுத்து வைத்து அவள் இடையை வளைத்து இழுத்து தன் உடலுடன் சேர்த்து இறுக்கி குழலுக்குள் விரல் செலுத்தி அள்ளி பற்றித் தூக்கி அவள் இதழ்களில் தன் இதழ்களை பதித்துக் கொண்டான். பின்பு அம்முத்தத்திலிருந்து மீண்டு நீள்மூச்சுவிட்டு புன்னகையுடன் அவள் விழிகளை பார்த்தான். சிவந்த முகத்தில் சிரிப்பு இரு துளிகளாக மின்னிய விழிகளுடன் “யோகியின் முத்தம்” என்று அவள் மெல்ல சொன்னாள்.

அச்சிரிப்பு அவனை கிளர்ந்தெழச் செய்து வெறி கொண்டு அவள் கன்னங்களிலும் கழுத்திலும் திரண்ட தோள்களிலும் முத்தமிடத் தொடங்கினான். நீர்த்துளிகளை உதிர்க்கும் பனிமரம் போல. வெளியே ஏவலனின் கால் ஒலி கேட்டு “ஏவலன்” என்று மெல்ல சொல்லி அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள். சற்றே விலகியபின் மீண்டும் அவள் இடைவளைத்து அருகணைத்து இதழ்களை ஆழ முத்தமிட்டான். பெருமூச்சுடன் அவள் விலகிக்கொண்டு தன் ஆடையையும் குழலையும் சரி செய்து கொண்டாள். “உள்ளே வருக!” என்று ஏவலனுக்கு ஆணையிட்டாள். பொற்கிண்ணத்தில் பாலுடன் உள்ளே வந்த ஏவலன் தலை குனிந்து நிற்க அதை வாங்கி அவனிடம் “அருந்துங்கள்” என்றாள்.

அவன் அதை வாங்கி மும்முறை அருந்திவிட்டு சிரிக்கும் கண்களுடன் அவளுக்கு நீட்டினான். “பகிரப்படுகையில் அனைத்தும் அமுதாகிறது என்றொரு சூதர் பாடல் உண்டு” என்றபடி அவள் அதை வாங்கி அருந்தினாள். இரு மிடறு அருந்திவிட்டு திருப்பிக் கொடுத்தாள். கிண்ணத்தை பீடத்தின் மேல் வைத்துவிட்டு அவன் கிளம்ப அன்னைபோல் தன் மேலாடையால் அவன் தாடியில் ஒட்டியிருந்த பால் துளியை துடைத்து “செல்வோம்” என்றாள்.

இடைநாழியில் செல்லும்போது அர்ஜுனன் “நான் அவையில் இந்நகர் நீங்குவதை அறிவித்ததை உன்னிடம் சொன்னது யார்?” என்றான். “இளைய தமையனார்தான்” என்றாள். “செய்தியை தூதனிடம் சொல்லி அறிவித்தாரா?” என்றான். “இல்லை, படைக்கலச் சாலைக்கு அவரே வந்தார். இனிமேல் பயிற்சி இல்லை. சிவயோகி கிளம்பவிருக்கிறார் என்றார்.” அர்ஜுனன் அவளை கூர் நோக்கியபடி “சரியாக எச்சொற்களை சொன்னார்?” என்றான். “சிவயோகி இன்று கிளம்பக்கூடும் என்றார்.” அர்ஜுனன் புன்னகைத்து “கிளம்பப் போவதில்லை என்று அறிந்திருக்கிறார்” என்றான். சுபத்திரை உரக்க நகைத்தாள்.

படைக்கலச் சாலைக்கு செல்லும் வழியில் சுபத்திரை சிறுமியைப் போல படிகளில் துள்ளி இறங்கினாள். திரும்பி அவனை நோக்கி கை நீட்டி “வாருங்கள்” என்று சிணுங்கினாள். காதல் பெண்களை சிறுமிகளாக்கும் விந்தையை எண்ணி அர்ஜுனன் புன்னகை செய்தான். அவள் புருவம் சுருங்க “என்ன?” என்றாள். “இல்லை” என்றான். “என்னைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டு சிரிக்கிறீர்கள்” என்றாள். “உன்னை பற்றித்தான்” என்றான். “என்ன?” என்றாள் அவள். “அழகியாகிவிட்டாய்” என்றான்.

அவள் கண்கள் ஒளிர்ந்தன. தலையை மெல்ல சரித்தபோது வலக்குழை கன்னத்தில் முட்ட இடக்குழை ஆடியது. கை இயல்பாக எழுந்து கூந்தலிழையை காதோரம் ஒதுக்கியது. செல்லமாக உதடுகளைக் குவித்து “முன்னரே அழகியாக இல்லையா?” என்றாள். “முந்தைய கணத்தைவிட அழகியாகிவிட்டாய்” என்றான். “இப்போது?” என்று அவள் தன் இடுப்பில் கை வைத்து திரும்பி நின்றாள். “முந்தைய கணத்தை விட மேலும் அழகாகிவிட்டாய்” என்றான். சிரித்து “ஒவ்வொரு கணத்திலுமா?” என்றாள். “ஆம்” என்றான். “ஓரிரு நாட்களில் அழகு தாளாமல் வெடித்து விடுவேன் போலிருக்கிறதே” என்றாள். “இல்லை அழகுக்கு எல்லை என்று ஒன்றில்லை” என்றான் அர்ஜுனன். “வானம் போல. எத்தனை சென்ற பின்னும் செல்வதற்கு வானம் எஞ்சியிருக்கும்.”

அவள் வாய்விட்டுச் சிரித்து “சிவயோகி ஆவதற்கு முன்பு பல காதலிகள் இருந்தார்களோ?” என்றாள். “நிறைய” என்றான் அர்ஜுனன். “நினைத்தேன்” என்று அவள் சொன்னாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இல்லை” என்று உதடை இறுக்கியபடி அவள் தலை அசைத்து சிரித்தாள். “சொல்” என்றான். வாய்க்குள் நாவை சுழற்றியபடி “தெரியும்” என்றாள். “எப்படி?” என்றான் அர்ஜுனன். “சொல்ல மாட்டேன்” என்று அவள் முன்னால் ஓடினாள். பின்னால் சென்று அவள் மேலாடையைப் பற்றி நிறுத்தி “சொல்” என்றான். “ஐயோ! என்ன இது ஏவலர்கள் அனைவரும் பார்க்கிறார்கள்” என்றாள். “பார்க்கட்டும். எப்படி தெரியும் என்று சொல்” என்றான். “மாட்டேன்” என்றாள்.

அவன் அவளை உந்தி “சொல்” என்று சொல்லி அவள் கையைப்பற்றி சற்றே முறுக்கி தூணோடு சேர்த்து அழுத்தினான். “வலிக்கிறது. ஐயோ வலிக்கிறது” என்றாள். “வலிப்பதற்காகத்தான், சொல்” என்றான். “காவலர்கள் அனைவரும் பார்க்கிறார்கள். விடுங்கள்” என்றாள். “எப்படி தெரியும்? சொல்” என்றான். “கையை விடுங்கள் சொல்கிறேன்” என்றாள். அவன் கையை விட்டான். “சொல்” என்றான். “சற்று முன் முத்தமிட்டீர்களே” என்றாள். “ஆம்” என்றான். “நான் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி தள்ளினேன்.” “ஆமாம்” என்றான். “நீங்கள் விட்டு விலகிச் சென்றீர்கள். ஆனால் அந்த ஏவலன் அறைக்குள் வர சில கணங்கள் ஆகுமென கணித்து என்னை அணைத்து மீண்டும் ஓர் ஆழ்முத்தமிட்டீர்கள்.” “ஆமாம். அதற்கென்ன?” “அந்த கடைத்துளி முத்தம் பெண்களுக்குப் பிடிக்கும் என்று அறிந்திருக்கிறீர்கள்.”

ஒரு கணம் குழம்பியபின் அர்ஜுனன் நகைத்து “ஆம் உண்மைதான்” என்றான். “எனக்கு அது பிடித்திருந்தது. பிடிக்குமென உங்களுக்கு முன்னரே தெரியும் என்றும் பின்னர் நினைத்துக் கொண்டேன்” என்றாள் சுபத்திரை. “தெரியும்” என்று தோளில் கைவைத்து அர்ஜுனன் சொன்னான். “முழு நாடகம் முடிந்து மங்கலப் பாடல் நிறைவுற்ற பின்னர் ஒரு பாடல் இருந்தால் பெண்களுக்கு அதுவே முதன்மையானதாக இருக்கும்” என்றான். கண்கள் சுருங்க “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “இப்போது புரியாது. பிறகு விளக்குகிறேன்” என்றான்.

அவள் முகம் சிவந்து வேறு பக்கம் பார்த்தபடி “எல்லோரும் பார்க்கிறார்கள்” என்றாள். அப்போது அவள் கழுத்தில் வந்த மெல்லிய நொடிப்பை எந்த நடனமும் நிகழ்த்தமுடியாது என தோன்றியது. “எல்லோரும் பார்க்க வேண்டுமென்றுதானே” என்றான். “என்ன?” என்று அவள் கேட்டாள். “இந்தப் படிகளில் நீ துள்ளி இறங்கியதே அதற்காகத்தான். அனைவரும் அறிய வேண்டுமென்று நீ விரும்புகிறாய்” என்றான். சினப்பதுபோல விழிகள் சுருங்க “யார்? நானா?” என்றாள். “ஆம். இப்போது நீ பேசியதும் கொஞ்சியதும் உன் உடலில் கூடிய செல்லமும் அதற்காகத்தான்.”

அவள் சினம் படிந்த குரலில் “இல்லை. நான் அவ்வண்ணம் எண்ணவில்லை” என்றாள். “நீ எண்ணவில்லை. உன் அகம் எண்ணியது.” அவள் “இல்லை” என்றாள். “ஆமாம்” என்றபின் அவன் அவள் பின்புடைப்பை தட்டினான். “அய்யோ” என நான்குபக்கமும் நோக்கியபின் அவள் தலைதாழ்த்தி “உம்” என்றாள். நிமிர்ந்து விழிகளை ஓட்டி இருபக்கமும் பார்த்தபின் “தெரியவில்லை, இருக்கலாம்” என்றாள்.

அர்ஜுனன் “காதலை பிறர் அறிய வேண்டுமென்று பெண்கள் எப்போதும் விழைகிறார்கள். அதை அறிவிப்பதற்கு என்று அவர்களுக்கு சில வழிமுறைகள் உள்ளன. கொஞ்சுதல் சிவத்தல் சிரித்தல் ஒரு வழி. அக்கறையற்றது போல பிறிது எதையோ உரக்க பேசுதல் ஊடலிடுதல் பிறிதொரு வழி” என்றான்.

அவன் கைகளை பற்றி அவன் தோளுடன் தன் தோளை சேர்த்தபடி “இரண்டு வழிகள்தானா?” என்றாள் தாழ்ந்த குரலில். “மூன்றாவது வழியும் உண்டு, இப்போது நீ செய்தது.” “என்ன?” என்றாள் அவள். “தொட்டுக்கொண்டிருப்பது. சிறு குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான பாவைகளை தொட்டுக் கொண்டிருக்க விழையும். அது போல” என்றான். “ஆம். தொடாமல் அகன்றிருக்க என்னால் முடியவில்லை. எப்போதும் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டுமென்று உடல் தவிக்கிறது” என்றாள். அதுதான் “காதல்” என்றான் அவன். “அத்துடன் அது உரிமை நிலைநாட்டலும் கூட.”

அவள் “யாரிடம் நான் உரிமை நிலைநாட்ட வேண்டும்? இந்த வீரர்களிடமா?” என்றாள். “இல்லை. இங்கு விழிகளாக வந்து நிற்பவர்கள் நம்மைச் சூழ்ந்துள்ள குலங்கள். அவர்கள் முன்” என்றான். “குன்றின் மேலேறி முரசு கொட்டுவதுபோல் தன் காதலை உலகுக்கு அறிவித்து விடுகிறார்கள் பெண்கள்.” அவள் சட்டென்று சிறகடித்து நிறம் மாறி எழும் மைனா போல மலர்ந்து சிரித்து “நிறைய அறிந்திருக்கிறீர்கள் பெண்களைப்பற்றி” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அதுவே ஒரு படபடப்பை அளித்து உங்களைப் பற்றியே எண்ணச் செய்தது” என்றாள்.

அர்ஜுனன் அவள் கண்களுக்குள் நோக்கி “அதை நீயே உய்த்துணர்ந்தாயா?” என்றான். “ஆம்.” “எப்போது?” என்று அர்ஜுனன் கேட்டான். “தங்களை சந்தித்த மறுநாளே” என்றாள். “எப்படி?” என்றான். “நிறைய பெண்களை பார்த்த விழிகள் என்று தோன்றியது.” “எப்படி?” என்றான் அர்ஜுனன். “பெண்களை உணராதவன் விழிகளில் ஒரு பரபரப்பு இருக்கும். அத்தனை பெண்களுக்கும் அவன் விழி சென்று சென்று மீளும். உலோபி செல்வத்தை அளைவதுபோல உடலை மீள மீள வருடும். பெண்களைப் பார்த்தவன் விழிகளோ நிலை கொண்டிருக்கும். மெல்லிய சலிப்பும் அகலுதலும் இருக்கும்.”

அர்ஜுனன் நகைத்து “இதை யார் சொன்னது?” என்றான். “எவரும் சொன்னதில்லை. நானே அறிந்தேன்.” அவன் “நிலை கொண்ட விழிகள் கொண்ட பிறிதெவரை பார்த்தாய்?” என்றான். அவள் சிரித்து பார்வையை திருப்பி “என் இளைய தமையனை பார்த்தால் போதாதா?” என்றாள். அர்ஜுனன் உரக்க நகைத்து தொடையில் தட்டி “ஆம். போதும். அவர் ஒருவரே போதும்” என்றான். “அதை யோகியின் விழிகள் என்கிறார்கள் சிலர்” என அவள் புன்னகையை உதட்டை இறுக்கி அடக்கியபடி சொன்னாள். “யோகம்தான் அதுவும்” என்று அர்ஜுனன் வெடித்துச் சிரித்தான்.

“போதும். என்ன சிரிப்பு? இப்படியா சிரிப்பது? அறைகள் அனைத்தும் பதறுகின்றன” என்றாள் அவள் அவன் தோளை செல்லமாக அடித்தபடி. “என் சிரிப்பை விட அறைகள் அனைத்தையும் அதிகமாக அதிர வைப்பது என் கையைப்பற்றி நீ இப்படி நடந்து வருவது. என்னை அடித்து மந்தணக் குரலில் பேசுவது” என்றான் அர்ஜுனன். “அனைவரும் அறியட்டும். இதில் ஒளிக்க என்ன இருக்கிறது?” என்று அவள் சொன்னாள். “எப்படி அறிந்தாய்?” என்றான் அர்ஜுனன். “எதை?” என்றாள் அவள். “என் விழிகளை” என்றான் அவன்.

“அலையாத விழிகள் எனக்கு பிடித்திருந்தன. ஏன் பிடிக்கிறது என்று எண்ணிக்கொண்ட பின்புதான் அவை நிலைத்தவை என்பதனால் என்றறிந்தேன். நிலைத்த விழிகள் கொண்டவர் என் இளைய தமையன் என்பதை பிறகு புரிந்து கொண்டேன்” என்றபின் “மகளிர் அறைகளில் சேடியர் பேசிக்கொள்வதே ஆண்களை பற்றித்தான். அங்கு ஒரு வாரம் இருந்தாலே உலகின் அனைத்து ஆண்களையும் புரிந்து கொள்ள முடியும்” என்றாள். “ஆண்களைப் பற்றியே பேசிக்கொள்வீர்களா?” என்றான். “ஆண்கள் உலகைப்பற்றி பேசுகிறார்கள். பெண்கள் ஆண்களைப் பற்றி பேசுகிறார்கள்” என்றாள் சுபத்திரை சிரித்தபடி.

படைக்கலப் பயிற்சி சாலையின் உள்ளே அவர்கள் நுழைந்ததும் அங்கே நின்றிருந்த படை வீரர்கள் படைக்கலப் பணியாளர்கள் அனைவரின் விழிகளும் ஒருகணம் அவர்களை நோக்கி திரும்பியபின் விலகிக்கொண்டன. அவர்களின் காலடி ஓசையிலேயே இருவரும் எந்த உள நிலையில் அங்கு வருகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்ஜுனன் அறிந்தான். ஆணாயினும் பெண்ணாயினும் பிறர் கொண்ட காதலை அறிய விழையாதவர் எவருமில்லை. அறியும் நுண்ணுணர்வற்றவர்களும் எவருமில்லை. பசித்தவன் உணவுண்ணும் ஓசையை அறிவது போல என்று எண்ணிக் கொண்டான்.

சாலைத்தலைவர் அவனை அணுகி வணங்கி “விற்கள் இங்குள்ளன யோகியே” என்றார். அர்ஜுனன் கை நீட்டியதும் அங்கிருந்த பெரிய வில் ஒன்றை அவர் எடுக்கப்போனார். “அந்த மிகச் சிறிய வில் போதும்” என்றான் அர்ஜுனன். மூங்கிலால் ஆன சிறிய வில்லை அர்ஜுனன் கையில் அளித்தார். அர்ஜுனன் திரும்பி சுபத்திரையிடம் “காட்டில் கொடிய நஞ்சுள்ளவை மிகச்சிறிய பாம்புகளே. பெரியவற்றுக்கு அவற்றின் வலுவே படைக்கலமாகிறது. அம்புகளிலும் தசைகளைக் கிழிப்பவை எலும்புகளை உடைப்பவை உண்டு. பெரிய விற்கள் அவற்றுக்குரியவை. நுண்ணிய நரம்பு நிலைகளை மட்டும் தீண்டும் சிறிய அம்புகளுக்கு சிறிய விற்களே உகந்தவை” என்றான்.

சுபத்திரை “காட்டில் நஞ்சு பூசப்பட்ட அம்புகளை ஏவும் வில்லவர் உண்டென்று கேட்டிருக்கிறேன்” என்றாள். “இளைய பாண்டவர் நாகநாட்டரசி உலூபியை மணந்தபோது அவர்களிடமிருந்து நஞ்சு பூசிய அம்பை ஏவும் கலையை கற்றதாக சூதன் ஒருவன் இங்கு பாடினான்” என்றாள். “ஆம். அவற்றை நானும் பயின்றிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். வில்லை நீட்டி எதிரே இருந்த தோலால் ஆன குறிப்பாவையை பார்த்தபடி “ஆனால் உடலுக்கு புறநச்சு தேவையில்லை. அதற்குள்ளாகவே நஞ்சு நிறைந்துள்ளது” என்றான்.

“நூற்றி எட்டு நரம்புப் புள்ளிகளால் ஆனது மானுட உடல். நூற்றி எட்டு சிலந்தி வலைகள் நூற்றி எட்டு நச்சுச் சிலந்திகள். நரம்புவலை மையத்தை தாக்கும் சிறிய நாணல் ஒன்று அந்த நச்சை உடைத்து சிந்தவைக்கும். அவ்வலை நுனிகள் சென்று தொட்டிருக்கும் அனைத்துப் பகுதிகளையும் செயலிழக்க வைக்கும். இதோ இத்தோளின் பொருத்துக்குக் கீழே உள்ள புள்ளி” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று அவள் சொன்னாள். மறுகணம் அவன் அம்பு சென்று அதை தைத்து நின்றாடியது. “இவ்வம்பு தைத்தவன் இடப்பக்கம் முற்றிலுமாக செயலிழந்து களத்தில் கிடப்பான். பிறகெப்போதும் இருகால் ஊன்றி எழமுடியாது” என்றான் அர்ஜுனன்.

“பெரிய அம்புகள் களத்தில் ஓர் அச்சத்தை அளிக்கும் அல்லவா?” என்றாள் சுபத்திரை. “ஆம். அவற்றின் நாணொலியும் காற்றில் அம்புகளின் சிறகதிரும் ஒலியும் அச்சுறுத்துபவை. ஆனால் அவை என்ன செய்யும் என்று அறிந்திருப்பதனால் அவ்வச்சம் எல்லைக்குட்பட்டது. இச்சிறு நாணல்கள் எதை இயற்றப்போகின்றன என்று அறியமுடியாதவை என்பதனாலேயே இவை மேலும் அச்சமூட்டக்கூடியவை” என்றான். “உனக்கு நான் கற்பிக்கவிருப்பது இந்நரம்பு முனைகளையே. ஒரு விரலை மட்டும் செயலிழக்கச் செய்யும் அளவுக்கும் நரம்பு முனைகளை தாக்க முடியும்.”

அவள் அவன் கைகள் சுட்டிய பாவையின் கால்களை நோக்கினாள். “தொடைகள் இணையும் அப்புள்ளியில் உள்ளது காலை செயலிழக்க வைக்கும் நரம்பு முனை” என்றான். “அதை நான் அறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான் அர்ஜுனன். “பெண்களுக்கு அது தெரிந்திருக்கும்” என்றபடி அம்பை எடுத்து இழுத்து அவ்விலக்கை தாக்கினாள். அர்ஜுனன் “காதுக்குப் பின்னால் உள்ளது பிறிதொரு நரம்பு முடிச்சு” என்றான். “இந்நாணலால் அதை அடிக்க முடியாது. காது மடல் அதை தடுக்கும்” என்றாள் சுபத்திரை.

“ஆம். ஆனால் அதற்கு ஒரு அம்பு முறை உள்ளது” என்றபின் அவன் இரு அம்புகளை எடுத்தான். ஒரே தருணத்தில் அதை தொடுத்து ஏவ முதல் அம்பு அப்பாவையின் மூக்கை தைத்தது. பாவை இயல்பாக சற்றே திரும்ப காது மடலுக்கு அடியிலிருந்த குழியில் இரண்டாவது அம்பு தைத்தது. சுபத்திரை அவனை நோக்கிக் கொண்டிருந்தாள். “என்ன?” என்றான் அர்ஜுனன். அவள் தலை நடுங்கியது. மெல்லிய மூச்சுக்குரலில் “நீங்கள் யார்” என்று அவள் கேட்டாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். அவள் குரல் மேலும் தாழ்ந்தது. “நீங்கள் யார்?” என்று அவள் கேட்டாள். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். பற்களைக் கடித்து கழுத்துத்தசைகள் இழுபட “இப்போது தெரிந்தாக வேண்டும். நீங்கள் யார்?” என்றாள்.

“நான் இளைய பாண்டவன் அர்ஜுனன்” என்றான் அவன். அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. “யார்?” என்று கேட்ட குரல் மிகத் தாழ்ந்திருந்தது. “சொல்கிறேன். என்ன நடந்தது என்றால்…” என்று அவன் சொல்லி கை நீட்ட “தொடாதீர்கள்” என்று கூவியபடி அவன் கையை அவள் தட்டி விலக்கினாள். “கூவாதே. இங்கு அனைவரும் இருக்கிறார்கள்” என்றான். அவள் திரும்பி பணியாளர்களை பார்த்தபின் தன் கையில் இருந்த வில்லை தரையில் வீசினாள். அது துள்ளித்துள்ளி சரிந்தது.

அவள் செயலற்றவள் போல ஒருகணம் நின்றபின் திரும்பி படைக்கல சாலையின் கதவை நோக்கி ஓடினாள். அவளை பின்னாலிருந்து அழைக்க கைதூக்கியபின் அர்ஜுனன் தோள்தளர்ந்து வெறுமனே நின்றான். குழல் உலைய ஆடை பறக்க ஓடி அவள் வெளியே செல்வதை பார்த்தபின் இன்னொரு அம்பை எடுத்து குறி நோக்கி அப்பாவையின் நெஞ்சுக்கு மேலிருந்த பெரு நரம்பை அடித்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைஎன்னை வாசிக்கத் தொடங்குதல்
அடுத்த கட்டுரைடப்பிங்