தஞ்சை பிரகாஷ் -கடிதம்

IMG

அன்புள்ள திரு மங்கையர்க்கரசி அவர்களுக்கு,

தஞ்சை பிரகாஷ் பற்றி நான் எழுதிய விமர்சனக்குறிப்பைத்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் அதிலுள்ளவை அல்ல நீங்கள் சொல்பவை.

தஞ்சைப்பிரகாஷ் அவரது இளமைப்பருவ நோயைப்பற்றியும் அது இயற்கைசிகிழ்ச்சைமுறைப்படி குணமானதைப்பற்றியும் அதன் பின் சிலநாள் அச்சிகிழ்ச்சைமுறையின் உதாரணமாக அவர் சுட்டப்பட்டது பற்றியும் என்னிடம் பல நண்பர்கள் நடுவே நேரில் சொன்னதை மட்டுமே எழுதியிருக்கிறேன். அவரே அவற்றை குறிப்பிட்டும் இருக்கிறார். அவை அவரே சொன்னவை என்பதனாலேயே உங்கள் சொற்களை விட எனக்கு நம்பகமானவை.

அவரது நாடோடிவாழ்க்கை பற்றியும் அவர் சொல்லியே தெரியும். அவரது நிலையற்ற வாழ்க்கை குறித்து அவமதிப்பாக எதுவும் கட்டுரையில் சொல்லப்படவில்லை என அதை வாசித்தால் உணர்வீர்கள். இலக்கியத்தில் அத்தகைய வாழ்க்கை ஒரு சிறப்புத் தகுதியாகவே கருதப்படுகிறது — நீங்கள் எண்ணுவதுபோல அல்ல. என் கட்டுரையும் அப்படியே குறிப்பிடுகிறது. அவரது இறப்பு எந்த நோயால் என்றெல்லாம் கட்டுரையில் எங்கும் இல்லை.

இலக்கியமும் அதன் விமர்சன வழிகளும் முற்றிலும் வேறானவை. உங்களுக்கு அவை எந்த அளவுக்கு புரிந்திருக்கின்றன என்பதற்கு உங்கள் கடிதம் சான்று

இலக்கியவாதிகள் இறந்தபின்னர் அவர்களின் மனைவியரின் கண்களில் அவர்களின் பிம்பம் நேர்தலைகீழாக ஆகிவிடுவதை ஜி.நாகராஜன் காலம் முதல் காண்கிறேன். இலக்கியவாதிகள் நம்புவதற்கு ஒரு நல்ல பிடிமானம் இது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன் விமர்சனமலர் 1993