‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 3

வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது. அங்குள்ள புழுதியும் பொன்னே. அங்கு தன் அரசி சித்ரரேகையுடனும் மைந்தன் நளகூபரனுடனும் இனிதிருந்து ஆண்டான் குபேரன்.

ஒழியாத கருவூலம் கொண்டவன். எண்ணிமுடியாத செல்வங்களின் மேல் அமர்ந்திருப்பவன். ஆடகப் பசும்பொன்னில் முற்றிய கதிர்மணியில் பழுத்த இலைகளில் அடிமரத்தின் வைரத்தில் அடிவானத்து ஒளியில் கைம்மகவின் கால்களில் இளங்கன்னியர் தோள்களில் எழுபவன். அவன் துணைவியோ உருகிவார்த்த பசும்பொன்னில் எழும் வரியின் வடிவாக தோன்றுபவள். அன்னையர் அடிவயிற்றில், வசந்தகால ஆற்றுமணலில், தேக்குமரப்பரப்பில் பரவியிருப்பவள். அவர்களின் நகரில் அழகென்பதே செல்வமென்று இருந்தது. அடைவதென்பது இல்லாமலாகி அனைத்தும் அறிதலென்று மட்டுமே இருந்தன. கொள்வதோ கொடுப்பதோ இன்றி செல்வம் மங்கலம் என்றே பொருள்பட்டது.

இந்திரன் ஆளும் தேவர்கள் உலகத்தில் ஐந்து தேவகன்னியர் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர். வர்கை. சௌரஃபேயி, சமீசி, ஃபுல்புதை, லதை என்னும் ஐவரும் தேவருண்ணும் அமுதத்தால், கற்பகக் கனிகளால், காமதேனுவின் கருணையால் வாழ்த்தப்பட்டிருந்தனர். கண்நிறைக்கும் பெருஞ்செல்வம் தங்களை சூழ்ந்திருக்கும் பேறு கொண்டவர்களாயிருந்தனர். ஆயினும் பெண்ணெனும் அழகிய பேதைமையால் அவர்களின் உள்ளம் திரிபுகொள்ளும் நாள் ஒன்று வந்தது.

வெண்முகில் வடிவம் கொண்ட ஐராவதத்தின் மேல் அமர்ந்து தேவர்க்கரசன் நகருலா செல்லும்போது அவனைத் தொடர்ந்து சென்ற அணியூர்வலத்தில் ஐவரும் முழுதணிக்கோலம் கொண்டு மங்கலம் ஏந்தி சென்றுகொண்டிருந்தனர். இந்திரன் காலில் அணிந்திருந்த பொற்கழலில் இருந்து ஒரு மணி உதிர்ந்து மண்ணில் விழுந்தது. அதை அறியாது தேவருலகின் எழிலில் அவன் ஈடுபட்டிருந்தான்.

அவ்வணியூர்வலத்தில் அவனுக்குப் பின் வந்த வர்கை தன் காலடியில் மின்னிக் கிடந்த பொன்மணியை கண்டாள். நடக்கும்போதே இருவிரலால் அதைக் கவ்வி தோழியின் தோள்பற்றி கால் தூக்கி கையில் எடுத்தாள். “கொடுடீ” என்று அதை வாங்கிப் பார்த்த தோழி “அழகியது. இதை அரசரிடம் திருப்பி அளிப்போம்” என்றாள். “எண்ணி முடியா பெரும் பொருள் கொண்ட இந்திரனுக்கு எதற்கு இது மேலும்? இதை நாமே வைத்துக்கொள்வோம்” என்றாள் வர்கை. அவள் அருகே நின்ற சமீசி “ஐயோடி, இது பிழையல்லவா? பெரும் செல்வத்தின் மேல் வாழும் நாம் நமக்கென்று ஒரு துளி செல்வமும் கொண்டிருக்க ஆணை இல்லை. பொன் விழைவு தேவர்க்கு பாவம் என்றே சொல்லப்பட்டுள்ளது. அருந்தவத்தோர் வேள்வி மேடையில் அளிக்கும் அவி ஒன்றே நாம் விரும்பத்தக்கது” என்றாள்.

“போடீ, இதை நான் விடப்போவதில்லை” என்றாள் வர்கை. “வீண் பழி சேரும்” என்றாள் ஃபுல்புதை. அணியூர்வலத்தில் அவர்களைச் சூழ்ந்து ஒலித்த கொம்புகளும் முழவுகளும் சல்லரிகளும் பெருஞ்சங்குகளும் மணிகளும் அவர்களின் பேச்சொலியை மறைத்தன. சூழ்ந்து அசைந்த வண்ணங்களும் அசைவுகளும் அவர்களின் முகங்களை ஒளித்தன. மறைவே அவர்களுக்கு உள்ளக்கரவை அளித்தது. வர்கை சொன்னாள் “ஊழின் விளையாட்டென்றே இருக்கலாம். என் கைக்கு வந்துள்ளது இவ்வணிகலன். தேடிவரும் திருவை எப்படி துறப்பேன்? என் உள்ளத்தை உசாவினேன். இல்லை, இதை ஒருபோதும் வீச என்னால் இயலாது. எனக்குரியது என இவ்வொரு துளி மணி என்னுடன் இருக்கட்டும்.”

“வேண்டாமடி. இது பழிசேர்க்கும் நமக்கு” என்றாள் லதை. “அவ்வண்ணமெனில் இதோ இதை உன்னிடம் அளிக்கிறேன். எடுத்த இடத்திலேயே இதை வீசு” என்றாள் வர்கை. “சரி கொடு” என கையில் அதை வாங்கிய லதை சற்று தெளிந்து “இல்லை, நானும் இதை எனக்கென கொள்ளவே விரும்புகிறேன்” என்றாள்.

“சரி இவளிடம் கொடு, துணிவிருந்தால் அதை இவள் துறக்கட்டும்” என்றாள் வர்கை. சமீசி அதை வாங்கி கை ஓங்கி பின் தோள் தழைத்து “இல்லையடி, என்னால் ஆகவில்லை” என்றாள். “உம், கொடு நான் வீசுகிறேன்” என்றாள் ஃபுல்புதை. ஆனால் கையில் வாங்கியதுமே “ஒரு கணம் துணிந்து இதை வீசிவிடலாம். பின்பு பல்லாயிரம் யுகம் தவம் இருந்தாலும் இது மீளக்கிடைக்காது போகலாம் அல்லவா? என்னால் முடியவில்லை” என்றாள்.

சௌரஃபேயி “என்னால் முடியுமா இல்லையா என்றே அறிகிலேன். அவ்வெல்லையை தொட்டுப் பார்க்க அஞ்சுகிறேன். வேண்டாம்” என்றாள். “இங்கு கொடுடீ அதை” என வர்க்கையே அதை வாங்கி உள்ளங்கையில் வைத்து “பொன்னைப்போல் பெண்ணுடலுடன் பொருந்தும் பிறிதொரு பொருள் எங்கும் உண்டோடி?” என்றாள். தன் நெஞ்சுக் குவையில் அதை வைத்து “பொன் பட்ட உடனே பெண்ணுடல் கொள்ளும் அழகு… இது தெய்வங்களின் ஆணை அல்லவா?” என்றாள்.

“கொடுடி, ஒரு முறை நானும் வைத்துப் பார்க்கிறேன் என்ற சமீசி அதை தன் மூக்கில் வைத்து “எவ்வண்ணம் உள்ளது?” என்றாள். “செந்தாமரை மேல் ஒரு பொன்வண்டு அமர்ந்ததுபோல்” என்றாள் சௌரஃபேயி. “எனக்குக் கொடுடி… ஒரு கணம்… ஒரே கணம்” என்று வாங்கி அதை தன் காதுகளில் வைத்தாள் லதை. “தளிரிதழில் நீர்மணி நின்றதுபோல்” என்றாள் வர்கை. ஃபுல்புதை அதை வாங்கி தன் நெற்றிப்பொட்டில் சூடினாள். செவ்வானில் எழுந்தது இளங்கதிர். சௌரஃபேயி அதை மென்வயிற்றில் வைத்தாள். “இளஞ்சேற்றில் எழும் முதல் தளிர்” என்றாள் வர்கை.

“எங்கும் இது பொருள் கொள்கிறது. ஆலயத்தில் தெய்வம் அமர்வதுபோல் பெண்ணுடலில் பொன் அமைகிறது” என்றாள் வர்கை. தன் நெஞ்சக்குவையில் வைத்து “தீரா பெருங்காமம் கொண்ட இதழ் ஒன்றின் முத்தம்போல் சிலிர்க்க வைக்கிறதடி இது” என்றாள். “பெண்ணுடன் முற்றிலும் ஒன்றாகி ஒளிவிட பொன்னால் மட்டுமே முடியும்” என்றாள் சமீசி. “பொன் என்பது ஒருபோதும் வாடாத வண்ண மலரல்லவா?” என்றாள் லதை.

“பொன் என பிறக்க வேண்டும் ஒரு பிறவி” என்றாள் ஃபுல்புதை. “என்றும் புதிதாக என்பதனாலேயே இது தெய்வங்களாலும் விரும்பப்படுகிறது” என்றாள் சௌரஃபேயி. “அழியா மங்கலங்கள் அழியலாகும். எங்கும் எந்நிலையிலும் மங்கலம் கொள்வதே பொன்” என்றாள் வர்கை.

அணி ஊர்வலம் முடிந்து தங்கள் மாளிகைகளுக்கு சென்றபின் பிற தேவகன்னிகளின் விழி தவிர்த்து தங்கள் அறைக்குள் புகுந்து அமர்ந்துகொண்டு அந்தப் பொன் மணியை மாறிமாறி கைகளில் வைத்து நோக்கி உடல் பொருத்தி உணர்ந்து, ஒளித்துவைத்து எண்ணி உளம் மகிழ்ந்தனர். பின்பு தங்கள் ஆடைப்பட்டில் சுற்றி உடல் மடிப்புகளுக்குள் ஒளித்துக்கொண்டு ஒடுங்கி படுத்துத் துயின்றனர்.

அத்துயிலில் தொலைவில் ஒரு பொற்த்துளி கிடப்பதை வர்கை கண்டாள். ஆவலுடன் சென்று குனிந்து அதை தொட்டாள். மெல்ல அசைந்து அது ரீங்கரித்தபோது அது ஒரு பொன்வண்டு என்று உணர்ந்தாள். விழிகள் மயங்கி மயங்கி மறைய குனிந்து நோக்கியபோது அது பொன்னிறத்து முட்டை என்று தெளிந்தாள். முட்டை ஓட்டை கையால் அழுத்தி விரிசலிடச்செய்து மெல்ல உடைத்துத் திறக்க உள்ளிருந்து பொற்கம்பி சுருளவிழ்வது போல மெல்ல நெளிந்தபடி நாகக்குழவி வெளிவந்தது.

சிறுவால் விடைத்து மெல்ல அசைய தலைதூக்கி பத்தி விரித்து ஆள்நோக்கி நா நீட்டி சீறி அவளை நோக்கி வந்தது. அவள் அஞ்சியபடி கைநீட்டி அதை தொட்டாள். சுட்டு விரலில் பற்றி சுற்றி ஏறி மோதிர விரலில் வளைந்து ஓர் கணையாழி ஆயிற்று. “பாரடி இதை” என்று சொல்லி திரும்புகையில் மெல்ல வளைந்து மணிக்கட்டை அடைந்து கங்கணமாயிற்று. “வளர்கிறது” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலே தோள்வளை வடிவு கொண்டு மேலேழுந்தது. அவள் இடை வளைத்து சல்லடம் ஆயிற்று. எழுந்து முலை இணைகளின் நடுவே சென்று தோளை அடைந்து சுற்றி தோளாரம் ஆயிற்று. முதுகின் பின் எழுந்து அவள் நெற்றி வழியாக வந்து நாகபட மணி முடியாயிற்று.

“பொன்! ஆடகப் பசும்பொன்!” என்று அவள் அடைத்த குரலில் எவரிடமோ சொன்னாள். அவள் தலைக்கு மேல் எழுந்து மரம்போல் வளர்ந்து வான் நோக்கி படம் விரித்தது நாகம். அதன் வால் முனையில் அவள் சுற்றப்பட்டிருந்தாள். எத்தனை விரைவில் அது வீங்கி பேருரு கொள்கிறது என்று அவள் வியந்தபோது, அந்த வியப்பையே பொருளற்றதாக்கும் வண்ணம் அடிமரம்போல் மண்டபத்தூண் போல் கோபுரம் போல் உடல் பெருத்து வளர்ந்தது. காலை இளவெயிலில் அதன் பொற்செதில்கள் ஒளிவிட்டன.

ஈரம் என குளிர்ந்திருந்தது அதன் பொன்னுடல். இடி ஓசையை கேட்டாள். மின்னலென அதிர்ந்து அடங்கியது அதன் நா பறத்தலே என்று கண்டாள். தன்னை கால் முதல் தலைவரை சுற்றி இறுக்கி இருக்கிற அதன் வாலை விலக்க முயலும்போது அது மேலும் இறுகுவதையும் அறிந்தாள். ஆலமரத்தின் வேரால் சுற்றப்பட்ட பாறை என நெரிந்தாள்.

பொருளிலாச் சொல் ஒன்றைக் கூவியபடி எழுந்து அமர்ந்து நெஞ்சை அழுத்தினாள்.   “என்னடி? கனவா?” என்றபடி தோழிகள் சூழ்ந்தனர். “ஆம், கனவுதான்.” அவள் கண்டவற்றை தொகுத்துக் கொள்ள முயன்றாள். ஒரு சொல்லும் எழாமல் தலையை அசைத்ததும் “கொடுங்கனவு” என்றாள். “என்ன கண்டாய்?” என்றாள் லதை. “நாகம்… பொன்னுடல் கொண்ட நாகம்” என்றாள். ஃபுல்புதை அவள் தொடையை அழுத்தி, “நாகத்தை கனவு கண்டால் இனிய கூடல் ஒன்று நிகழ இருக்கிறது” என்றாள். “போடீ” என்று அவளை தள்ளினாள்.

“பொன்னிற நாகத்தை கனவு காண்பவள் பெருந்தோள் கொண்ட வீரனால் அணைக்கப்படுவாள்” என்றாள் சமீசி. “பேசாதே” என்று சொல்லி முழங்கால் மடிப்பில் முகம் சேர்த்து, உடல் ஒடுக்கி அமர்ந்தாள். “என்னடி அக்கனவு?” என்றாள் சௌரஃபேயி. “நான் அஞ்சுகிறேன். இந்தப் பொற்துளியை பெருங்காட்டை தன்னுள் அடக்கிய விதை என்று நான் உணர்கிறேன். என் உடல் சதுப்பென இதை வாங்கிக் கொண்டுள்ளது. இது முளைத்து எழுந்து விரியும்” என்றாள் வர்கை. “அவ்வண்ணமே ஆகட்டும். மட்கி இதற்கு உரமாகுவோம்” என்றாள் லதை.

சமீசி சினந்து “என்னடி வெறுஞ்சொல் சொல்கிறாய்?” என்றாள். “நான் இதை அஞ்சுகிறேன்” என்றாள் வர்கை. “அப்படியென்றால் என்னிடம் கொடுத்துவிடு” என்றாள் லதை. “போடீ” என்று சொல்லி தலையை திருப்பிக் கொண்டாள். சற்று நேரம் கழித்து பெருமூச்சுடன் “என்னை எது கொண்டு அழித்தாலும் சரி, இதன் உறவிலாது இனி வாழ்க்கையில்லை எனக்கு. ஒன்று பிறிதொன்று என நீளும் முடிவற்ற காலம் கொண்ட நம்மால் இத்தகைய நிகழ்வுகளினூடாகவே அலையென ஒன்றை அறியமுடிகிறது” என்றாள்.

“விளைவுகள் எவ்வகையிலும் ஆகுக! நிகழ்வுகள் எவையாயினும் அவை அறிதலை உள்ளடக்கியவையே. நன்றெனினும் தீதெனினும் அந்நிகழ்வு அளிக்கும் அறிதல் தூயதே. சந்தனத்திலும் மலத்திலும் எரியும் தழல் என்பது அவிகொள்ளும் தேவனே அல்லவா?” என்றாள். “ஞானியைப்போல் பேசுகிறாய்” என்றாள் ஒருத்தி. “அவ்வண்ணம் பெருஞ்சொல் எடுப்பவள் தாளா காமம் கொண்டுவிட்டாள் என்றே பொருள்” என்றாள் ஃபுல்புதை.

அவள் அதை தன்னுடலில் ஒளித்துக்கொண்டாள். விதையிலை நடுவே முளைக் கருத்துளிப்போல் அப்பொன்மணி அவள் உடலில் இணைந்து உயிர்த்தசையென ஆகியது. அதன் பின் அவள் எழுந்து வெளிவந்து நோக்கியபோது தேவர் குலம் முற்றிலும் பிறிதென தெரிந்தது. பொன்னிலும் பளிங்கிலும் செம்மணியிலும் புனையப்பட்ட அப்பெரும் நகரம் துடிக்கும் தசையினால் ஆனது என மயக்கு காட்டியது. சுவர்களைத் தொட்டு தோல் மென்மையை உணர முடிந்தது. தூண்களைத் தழுவி உள்ளே குருதி ஓடும் வெம்மையை உணர முடிந்தது. கட்டடங்களின் மூச்சோட்டத்தை இருண்ட அறைகளில் நிறைந்திருந்த இதயத் துடிப்பை அவள் அறிந்தாள்.

அமராவதியின் அழியா வசந்தத்தை தேன்நிறை மலர்களை தொட்டுத் தொட்டு விலக்கி ரீங்கரித்து தவித்து அலையும் விழிஎழுந்த பட்டாம்பூச்சி போல அவள் சுற்றிவந்தாள். அவள் தோழிகள் உடனிருந்தனர். அவர்கள் அன்றுவரை கண்டதை தங்களிலிருந்து பிறிதென அறியும் அகப்பிரிவு கொண்டிருக்கவில்லை. அவ்விரண்டின்மை அழிய அவர்கள் காண்பவை அனைத்தும் புறம் என்றாயின. அள்ளி அள்ளி நிறைத்துக்கொண்ட அகம் எப்போதும் குறைகொண்டு தவித்தது.

தன் வைஜயந்தம் என்னும் உப்பரிகையில் அமர்ந்து இந்திராணியுடன் நாற்களச் சூது ஆடிக்கொண்டிருந்தான் இந்திரன். எட்டுத் திசைத் தெய்வங்களையும் எட்டு வசுக்களையும் புவி தாங்கும் நாகங்களையும் ஏழு முனிவர்களையும் காய்களென அக்களத்தில் வைத்து அவர்கள் ஆடினர். வெற்றியும் தோல்வியும் இன்றி இந்திரனும் அரசியும் ஆடி முடித்தாக வேண்டும் என்பதே அமராவதியின் நெறி. இருவரில் ஒருவர் வென்றாலும் இந்திரபுரியின் முறையமைவு பிழைவுறும் என்பது தெய்வங்களின் ஆணை. அதை சீரமைத்த பின்னரே நகர் தன் இயல்புக்கு வரலாகும்.

அம்முறை அதில் இறுதிக் காய் ஒன்றை நகர்த்தி இந்திராணி வென்றாள். சினந்து களம் மீது இரு கைநீட்டி “என்ன ஆயிற்று?” என்றான் இந்திரன். “எனது இந்தக் காய் ஏழு காய்களை வெட்டி இங்கு வந்தது” என்றாள் இந்திராணி. குனிந்து இறுதியில் வென்று நின்ற காமனை நோக்கினான் இந்திரன். “நாகங்களையும் திசைத்தேவர்களையும் எப்படி கடந்தது? ஏழு முனிவரையும், எட்டு வசுக்களையும் எப்படி வென்றது காமம்?” என்றான். காமனுக்கு தடை வைக்க ரதியையும் அவன் நகர்த்தியிருந்தான். ஊசி அசையா துலாக்கோலென ஒருவரையொருவர் தடுக்கும் இரு முனைகள் அவை. அன்றோ ரதியை தன்னுடன் தூக்கி மும்முடங்கு விசைகொண்டு முன்நகர்ந்திருந்தான் மலரம்பன்.

களம் நோக்கி சற்று அமைந்திருந்த பின் எழுந்து வெம்மூச்சு விட்டு “என்ன நிகழ்ந்துள்ளது என்று பார்க்கிறேன்” என்றான் இந்திரன். எடை மிக்க கால்களுடனே நடந்து சுதர்மை என்னும் தன் அவைக்கு வந்தான். கால மடிப்புகளின் கதைமுறைகள் அறிந்த நாரதரை அழைத்து வரச்சொன்னான். அவை வந்த இசைமுனிவரிடம் “காலமும் விழியும் கொள்ளும் கணக்குகள் அனைத்தும் நிகர்நிலை கொண்டுள்ள இந்நகரில் எங்கனம் காமம் வென்றது?” என்று அவன் கேட்டான்.

முறுவலுடன் “தேவர்க்கு அரசே, இப்பெரும் நகரிலுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களுள் ஒருத்தி காமம் கொண்டிருக்கிறாள். அவளிடமிருந்து அவள் தோழியர் நால்வருக்கும் அக்கனல் பற்றிக்கொண்டுள்ளது” என்றார். “எவர் அவர்கள் என்று அறிந்துகொள்ள வேண்டும் இக்கணமே” என அவன் எழுந்தான். “எவர் என்று எளிதில் காண முடியாது அரசே. ஐம்புலனும் முற்றிலும் நிகரமைந்தமையால் இமையாவிழி அமைந்தவர்கள் தேவர்கள். இமைப்பு என்பது ஐம்புலன்களும் ஐந்து தட்டுகளாக ஆடும் துலாவின் நடுவில் நின்றாடும் முள்ளின் தவிப்பே ஆகும். அது மானுடர்க்குரியது. இமைப்பை வென்றவர் முனிவர். கடந்தவர்கள் தேவர்” என்றார் நாரதர்.

“எழுக என் தேர்” என்றான் இந்திரன். வியோமயானம் என்னும் தன் ஒளித்தேரில் ஏறி அமராவதியின் அகன்ற தெருக்களில் ஊர்ந்தான். பொன்னொளிர் நாடெங்கும் பரந்தும் புணர்ந்தும் இசைத்தும் இனித்தும் இயைந்தும் குறையா பேரின்பத்தில் திளைத்திருந்த தேவர்களிள் முகங்களை நோக்கியபடி கடந்து சென்றான். விழைவின் துயரின் இன்பத்தின் அளவு வேறுபாடுகளாலேயே முகங்கள் ஒன்று பிறிதென ஆகின்றன. காற்றின் குளிரின் அளவின் ஆடலால் மழைத்துளிகள் ஒன்று பிறிதொன்றிலாது ஆவதுபோல. தேவர் உலகில் ஒவ்வொன்றும் முற்றிலும் நிகர் என்பதால் முகங்கள் அனைத்தும் ஒன்றே. ஒரு முகம் தன்னை ஆடிப் பரப்புகளில் பெருக்கிக்கொண்டதைப் போல. முடிவிலாது ஒரு முகமே வந்து விழிகாட்டி திரும்புவதுபோல.

பிறகு இந்திரன் கண்டான், இமைக்கும் ஐவர் விழிகளை. பற்றி எரிந்த சினத்துடன் சென்று அவர்கள் முன் நின்றான். அமராவதியின் பூந்தோட்டத்தில் சகஸ்ரம் என்னும் அழகிய நீலக் குளத்தின் கரையில் பூத்தெழுந்த சௌவர்ணம் என்னும் கொன்றை மரத்தின் அடியில் அவர்கள் இன்மொழி பேசி கனவினிலாடி அமர்ந்திருந்தனர். பொன் மலர்கள் உதிர்ந்த பெருங்கம்பளம் அவர்களைச் சுற்றி விரிந்திருக்க நடுவே அனல் வைத்து மூடிய பளிங்குபோல் ஒளிவிட்டுக்கொண்டிருந்தாள் வர்கை. இந்திரனைக் கண்டதும் தன் நெஞ்சில் அழுந்திய கைகளுடன் எழுந்து நின்றாள். கரவுள்ளம் கொண்ட பெண்ணின் உடல்மொழி அது என இந்திரன் அறிந்திருந்தான்.

“உன் விழிகள் இமைக்கின்றன. நீ உடல்கரந்தது எதுவென அறிவேன். விழைவின் துளிக்கனல் அது. எனவே இங்கு தேவர் என இருந்து வாழும் தகுதியை இழந்துவிட்டாய். இது நிகர் நிலையில் நின்றிருக்கும் நகரம். முள்முனை பனித்துளி என்று இதனை சொல்கின்றனர் முனிவர். உன்னால் இது சரிவுற்றது” என்றான். “வேந்தே, விழைவுகளுக்கு எவரும் பொறுப்பல்ல” என்றாள் வர்கை. “ஆம். பொருள் ஒவ்வொன்றிலும் அனல் உறைகிறது. ஆனால் ஒவ்வொன்றும் தன் அமைப்பால் மட்டுமே இருப்பு கொள்கின்றது. உள்ளிருக்கும் அனல் எழுந்தால் அவ்வமைப்பையே அது உண்டு சாம்பலாக்கும்.”

“தன்னுள் இருக்கும் நெருப்பை சூடும் தகுதி பசுமரத்திற்கில்லை” என்றான் இந்திரன். “இக்கணமே இங்கிருந்து நீ உதிர்க! உன் விழைவு எங்கு உன்னை இட்டுச்செல்கிறதோ அங்கு சென்று விழுக!” என்றான். கைகூப்பி “தேவர்க்கரசே, இத்தீச்சொல்லை தங்கள் ஆணை என்றே கொள்கிறேன். எங்கணம் இங்கு மீள்வோம் அதை மட்டும் கூறி அருள்க!” என்றாள் வர்கை. “ஆம், அருள்க!” என்றனர் தோழியர்.

“கன்னியரே, விழைவு என்பது இன்னும் இன்னும் என்று மீறும் எழுச்சியையும் போதும் போதும் என்று தள்ளும் தவிப்பையும் தன் இரு முனைகளாக கொண்டுள்ளது. அத்தவிப்பு மறைந்த மறுகணமே நீ எங்கிருந்தாலும் அங்கிருந்து எழுந்து மீண்டும் இங்கு வருவாய். இங்கிருந்து சென்றபோது இருந்த கணத்தின் மறுகணத்தை அடைவாய். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி இந்திரன் மறைந்தான்.

அந்தியில் வாடி உதிர்ந்து புலரியில் முளைத்தெழும் மலர்கள் போல் அவர்கள் குபேரனின் அளகாபுரியில் எழுந்தனர். தன் காலில் இடறி கையில் வந்து உடலில் கரந்த அச்சிறு பொன்மணி பல்லாயிரம் இதழ் விரித்து மலர்ந்து ஒரு நகரமென ஆனதுபோல் அளகாபுரியின் விரிவை வர்கை உணர்ந்தாள். பொன்னன்றி ஏதும் விழி படவில்லை. காற்றும் பொன்னலைகளாக இருந்தது. முகில்கள் பொற்புகைபோல் மிளிர்ந்தன. அங்கு வாழ்ந்த தேவர்களும் பொன்னுடல் கொண்டு இருந்தனர். அவர்களது விழிகள் பொற்சுடர் விட்டன. அவர்களின் இசை கலந்த மொழிகளும் பொன்னென அலையிளகின.

“பொன்னன்றி பிறிதிலா பேருலகு” என்றாள் வர்கை. “அள்ளி அள்ளிக் குவித்தாலும் முடிவிலியே மிஞ்சும் பொன்” என்று நெஞ்சம் அழுத்தி விம்மினாள் லதை. “கடலென கொண்டு கரந்தாலும் ஒரு துளியும் இடைவெளி விழா பெருக்கு இது” என்றாள் சமீசி. களித்தனர். முழுதுடலாலும் அங்கே திளைத்தனர். குபேரனின் அவைக்குச் சென்று அரசி சித்ரரேகையுடனும் மைந்தன் நளகூபரனுடனும் அமர்ந்திருந்த அவனை வணங்கினர். “துளி விழைந்தீர். பெருங்கடல் பெற்றீர். மகிழ்ந்திருப்பீர்” என்று குபேரன் அவர்களை வாழ்த்தினான்.

வந்தமைந்த முதல் நாளே களிவெறி கொண்டவர்களாக அப்பொன்வெளியில் அவர்கள் மிதந்தலைந்தனர். சிரித்தும் அழுதும் பொன்னில் விழித்து எழுந்தனர். பொன்நிற அமுதை உண்டனர். பொன்நிற அலைகளில் நீராடினர். பொற்பட்டாடை அணிந்தனர். பொன் மலர் சூடினர். பொன்னில் அளைந்து விளையாடி பொற்சேக்கையில் படுத்து பொற்கனவுகளில் எழுந்தனர். பொற்சரடென சுற்றிக் கட்டி இழுத்துச் சென்ற கனவுகளில் ஆழ்ந்தனர்.

பொற் தூண்களென அடிமரங்கள் சரிந்த பொற்தகடுகளென மின்னும் சருகுகளில் விழுந்து ஒளிர்ந்த கதிர்குழல்கள் வருடிச்சென்ற பொற்காடு ஒன்றுக்குள் வர்கை சென்று கொண்டிருந்தாள். அங்கு விரியத் திறந்து அவளை வரவேற்ற சிறு குடில் ஒன்றுக்குள் நுழைந்தாள். அவளைச் சூழ்ந்து அமைதி கொண்டு உருகி இணைந்து மூடிக்கொண்டன அவ்வில்லத்தின் சுவர்கள். திகைத்து திரும்பும் வழி நோக்க நாற்திசையும் ஒன்றுபோல் வளைந்திருப்பதை கண்டாள். பொன்முட்டை ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டிருப்பதை அறிந்து அஞ்சி பதறி அதன் சுவர்களை அறைய உலோகத்தின் உறுதியை, தண்மையை, அசைவின்மையை, அமைதியை அறிந்தாள். அவள் தவிப்பை இழுத்தும் நீட்டியும் சுருட்டியும் காட்டி களியாடியது அது.

அலறி விழித்து அது கனவல்ல என்று உணர்ந்து மீண்டும் அறைந்து கூவி தளர்ந்து முடிவிலா காலம் அங்கு இருப்பதன் பேரச்சத்தால் உடல் விதிர்த்து பின் தளர்ந்தாள். கூவி ஒலி எழுப்பும்போது அங்கு ஒலி என எதுவும் எழாது என அறிந்தாள். குரல் மறைந்துவிட்டதை உணர்ந்ததும் நெஞ்சு மும்மடங்கு கொப்பளித்து எழுந்து ஓலமிட்டது. உடல் திறந்து எழுந்த ஓசை வெறும் ஒரு பொற்கொப்புளம் என விரிந்து சூழ அக்கொப்புளத்தின் முட்டைக்குள் தான் இருப்பதை கண்டாள்.

இரு கைகளாலும் மஞ்சத்தை ஓங்கி அறைந்து கொண்டிருப்பதை உணர்ந்து, விழித்து எழுந்து நெஞ்சு பற்றி அமர்ந்து அவள் நடுங்கியபோது தோழியர் அவள் கைகளை பற்றிக்கொண்டனர். “என்ன ஆயிற்று? என்ன கண்டாய்?” என்றனர். “ஒரு கனவு” என்றாள் அவள். “என்ன கனவு?” என்றாள் அஞ்சிய லதை. “உலோகம்!” என்றாள் அவள்.

பின்பு தோழியரின் கை பற்றி “பொன் என்பது ஓர் வெறும் உலோகம். அதை எப்படி மறந்தோம்?” என்றாள். “உலோகம் தன்னுள் தானே அமைதி கொண்டது. பிறிதனைத்தையும் தன் பரப்பில் எதிரொளித்து மறுதலித்து உள்ளே தனித்து குளிர்ந்திருப்பது. எத்தனை ஓசையற்றவை இவ்வுலோகங்கள்!” லதை “ஆயினும் பொன் உலோகங்களில் பேரழகு கொண்டதல்லவா?” என்றாள். “இரக்கமின்மை முழுமை அடையும்போது அது பேரழகு கொண்டதாக ஆகிறது” என்றாள் வர்கை.

கண்ணீருடன் தலையசைத்து “இல்லையடி, இங்கு இல்லை நமது இடம்” என்றாள். “என்னடி சொல்கிறாய்?” என்று தோழியர் கேட்டனர். “நாம் அடைந்தது நமக்குரிய வாழ்வு அல்ல. இதை நாம் விழையவில்லை. நம்மில் விழைவெழுப்பியது இச்சிறு பொன்துளி. இது தூண்டிலின் முள்” என்றாள் வர்கை. “அப்பொற்குவைக்குள் என்னை உணர்ந்தபோது நான் விழைந்தது ஒரு சொல். என்னை அறிந்து அழைக்கும் ஒலி. அது மட்டுமே” என்றாள். எழுந்து முழங்கால்மேல் முலை வைத்து குறுகி அமர்ந்து உடல் சிறுத்தாள்.

“இப்பொன்வெளியில் சிறையிடப்பட்டிருக்கிறோமடி” என்றாள். அவள் சொன்னதை பிறர் நால்வரும் உணர்ந்துகொண்டனர். நீள்மூச்சுடன் அவள் அருகே அமர்ந்து “ஆம், அதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உணரத் தொடங்கியிருக்கிறோம்” என்றனர்.

முந்தைய கட்டுரைகல்பூர்கி, தாத்ரி, சாகித்ய அகாடமி
அடுத்த கட்டுரைபுதியவற்றின் வாசலில்