நமது கோட்டையின் கொடி

g

இலக்கியவாதி இலக்கியமேதை என்ற பிரிவினை அடிக்கடி இலக்கியத்தில் செய்யப்படுகிறது. எப்படி அதை வரையறைசெய்வது? இலக்கியவாதி என்பவன் இலக்கியத்தை அறிந்தவன், அதில்பயிற்சிபெற்று தன் வாழ்க்கைநோக்கையும் அனுபவங்களையும் ஒட்டி எழுதுபவன். உண்மையில் பயிற்சி எடுத்துக்கொண்டால் எவரும் ஒரு நாவலை எழுதிவிடமுடியும் என்பார்கள். நாம் வாசிக்கும் பெரும்பாலானவர்கள் இலக்கியவாதிகள்தான்

இலக்கியமேதை என்பவரை மேலும் விரிந்த பொருளில் புரிந்துகொள்ளவேண்டும். படைப்புலகம் என்ற சொல்லாட்சியை மிக அலட்சியமாகப் பயன்படுத்துவது நம் வழக்கம். உண்மையில் உலகம் என்று சொல்லத்தக்க படைப்புவெளி இலக்கியமேதைகளுக்கு மட்டுமே உரியது. பல்வேறுவகையான வாழ்க்கைக் களங்கள், மானுடர்கள், காலகட்டங்கள் என விரிந்து உலகம்போலவே ஒற்றைப்பார்வையில் பார்த்து வகுத்துவிடமுடியாததாகவே அது இருக்கும். அனைத்துவகையான சிந்தனைகளுக்கும் அங்கே முன்மாதிரிகளைக் காணமுடியும். அள்ள அள்ளக்குறையாமல் வாழ்க்கைநுட்பங்களை அங்கிருந்து பெறமுடியும். தனக்கென ஒரு படைப்புலகைப் படைத்தவரே இலக்கியமேதை.

தமிழில் இலக்கியமேதை என்று சொல்லத்தக்க மிகச்சிலரில் ஒருவர் அசோகமித்திரன். இந்திய இலக்கியப்பரப்பில் அவருக்கு நிகரான மேதைகள் சிலரே இன்றுள்ளனர். உலக இலக்கியப்பரப்பிலேயே அவருடன் ஒப்பிடத்தக்க பெரும்படைப்பாளிகள் குறைவு. இந்நூற்றாண்டில் தமிழர் பெருமிதம் கொண்டு முன்வைக்கவேண்டிய ஆளுமைகளில் ஒருவர். ஆனால் நுட்பங்களையும் ஆழங்களையும் சென்றடய முடியாத தமிழ்ப்பொதுச்சூழலில் அவர் குறைவாகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறார், அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். நாமே அவரை அங்கீகரிக்காதபோது ஞானபீடம், நோபல்பரிசு போன்றவை அவரை அறியாமலிருப்பதில் வியப்புகொள்ள ஏதுமில்லை.

தமிழ்ச்சூழலில் எழுதவரும் இலக்கியவாதிகள் மிகச்சீக்கிரத்திலேயே எழுதித்தீர்ந்துவிடுவதே வழக்கம். ஏனென்றால் அவர்களிடமிருப்பது இளமையில் அவர்கள் நேரடியாக அடைந்த அனுபவங்களால் ஆன ஓர் உலகம். சூழலின் புறக்கணிப்பால் சோர்ந்து நின்றுவிடுபவர்களும் உண்டு. ஆனால் கடந்த ஐம்பதாண்டுக்காலமாக தொடர்ச்சியாக தரமும் வேகமும் குறையாமல் எழுதிவருகிறார் அசோகமித்திரன். அவர் எழுதவந்தபின் மூன்று இலக்கிய அலைகள் வந்து சென்றுவிட்டன. அவரது எழுத்து அதன் நிமிர்வு குறையாமல் நின்றுள்ளது.

எழுத ஆரம்பித்து பலபத்தாண்டுகளுக்குப்பின்னரே அவருக்கு எளிய அளவிலேனும் அறிமுகம் கிடைத்தது. இன்றும் அவருக்கு பெரிய அளவில் வாசகர்கள் இல்லை. வாழ்நாளெல்லாம் தொடர்ந்த கடும் வறுமை. மிக எளிய வேலைகளிலெல்லாம் அவர் இருந்திருக்கிறார். எப்போதுமே நோயுடன் வாழ்ந்தார். ஆனால் மேதைகளுக்கு மட்டும் தடைகள் ஒருபொருட்டே அல்ல. ஏனென்றால் அவர்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்களே அல்ல. இங்கு இருக்கிறார்கள், அவ்வளவுதான்.

அசோகமித்திரனின் கலையின் சிறப்பம்சங்களை இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம். கண்முன் காணும் இந்த உலகியல்வாழ்க்கையை மட்டுமே எழுதவேண்டும் என அவர் எண்ணுகிறார். அவர் பிறந்து வளர்ந்தது செகந்திராபாத். வாழ்ந்தது சென்னை. இரு பெருநகரங்களின் கீழ்நடுத்தர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையையே அவர் எழுதுகிறார்.

எளிய மனிதர்கள். மாதச்சம்பளத்தை எண்ணி எண்ணி ஒண்டுக்குடித்தனத்தில் வாழ்பவர்கள், இரண்டே புடவைகளை மாற்றிமாற்றிக் கட்டிக்கொண்டு கடைகளில் வேலைக்குச் செல்பவர்கள், இரவெல்லாம் குடிநீர் பிடிக்க அலைபவர்கள், குடிசைகளின் முன்னால் சாலையில் உறங்குபவர்கள் ஆகியவர்களே கதைமாந்தர்கள். அவர்கள் பிழைப்பு மட்டுமே கொண்டவர்கள், அரசியலற்றவர்கள், அவர்களின் கருணை குரூரம் சுயநலம் அன்பு எல்லாமே இந்த அன்றாட வாழ்க்கையை கடத்திக்கொண்டு செல்வதற்காகத்தான்.

ஆனால் இந்த வாழ்க்கையை அவர் ‘பதிவு செய்கிறார்’ என்பது ஒரு புரிதல்பிழை. இவ்வாழ்க்கை அவரது எழுத்தின் களம். இங்கிருந்து மானுட உறவுகளைப்பற்றி, வாழ்க்கையின் ஒட்டுமொத்த பெறுமதி பற்றி அடிப்படையான வினாக்களை அவர் எழுப்பிக்கொள்கிறார். நடுத்தர நகர்மக்களின் வாழ்க்கை என்பது அவரது புனைவுலகுக்கான கட்டுமானப்பொருள் மட்டுமே.

உதாரணமாக புலிக்கலைஞன். டைகர்பைட் காதர் புலிபோல வேடமிட்டு ஆடுபவன். வாய்ப்புக்காக சினிமாக்கம்பெனிகளில் ஏறியிறங்கி அவமதிக்கப்பட்டு மறைந்துபோகிறான். ஒரு கலைஞனின் அவலத்தைப் பதிவுசெய்வதல்ல அவரது நோக்கம். அவமதிக்கப்பட்டு கீழ்மைப்பட்டு ஒடுங்கிய காதர் புலிவேடம்போடும்போது உண்மைப்புலியாக, அதைவிடவும் உக்கிரமாக, ஆவதை அவர் காட்டுகிறார். அதில் உள்ளது கலை உருவாக்கும் மாற்றம் பற்றிய சித்திரம். கலைஞன் கொள்ளும் பேருருவக்காட்சி. கலைக்கும் சமூகத்திற்கும், கலைக்கும் அக்கலைஞனுக்குமான உறவைப்பற்றி சிந்தித்துக்கொண்டே செல்லவைக்கும் படைப்பு இது.

எந்த ஒரு மேதையின் படைப்புலகையும்போலவே அசோகமித்திரனின் படைப்புகளும் மேலே சொன்ன ஒரு வரையறையை அளித்ததுமே அதை மீறி வளரத்தொடங்குகின்றன. எளிய அன்றாட வாழ்க்கையைச் சொல்லும் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆழமான தத்துவவிசாரணைகளுக்குச் செல்லும் காந்தி, நூலகத்திற்குச் செல்லும் வழியில்.. போன்ற பல கதைகளை நாம் அவரிடம் காணலாம். இன்னும் சிலநாட்கள், குகை ஓவியங்கள் போன்ற அற்புதமான குறியீட்டுப்படைப்புகளை அவர் எழுதியிருக்கிறார்.

அசோகமித்திரனின் காலகட்டத்தில்தான் நவீனத்துவ அழகியல் உலகெங்கும் உருவாகி வந்தது. கதை என்ற வடிவை விட நிகழ்ச்சிகளை உணர்ச்சிகளை மட்டுமே சொல்லி மையம்நோக்கிக் கொண்டுசெல்லும் படைப்புகள் அவை. ஆனால் அசோகமித்திரன் மிகவலுவான கதைக்கட்டுமானம் கொண்ட கதைகளை எழுதினார். அவரது கதைகளின் இறுதிமுடிச்சுகள் எப்போதுமே தீவிரமானவை , ஆனால் மிக இயற்கையாக நிகழ்பவையும்கூட. கடைசிவரியில் கதையை முற்றிலும் வேறுதளத்திற்குக் கொண்டுசெல்லும் கதைகளை அவர் புனைவுலகில் காணலாம். உதாரணம் பிரயாணம்.

ஆனால் இதையும் அவர் கதைகளின் மாறா இயல்பாகக் கொள்ளமுடியாது. வெறும் நிகழ்ச்சிகள், எண்ணங்கள், உணர்ச்சிகளை மட்டுமே முன்வைக்கும் நவீனத்துவபாணிக் கதைகளால நூலகத்தில் போன்ற பல ஆக்கங்களை எழுதியிருக்கிறார். சொல்லப்போனால் தமிழின் அவ்வகைக்கதைகளில் மிகச்சிறந்தவை பெரும்பாலும் அவர் எழுதியவைதான்.

அசோகமித்திரனின் கதைகள் மானுடவாழ்க்கையின் துயரத்தைச் சொல்பவை. அன்றாடவாழ்க்கையில் வெளிப்படும் துயரம் என அதைச் சொல்லலாம். ஆனால் உண்மையில் அது என்ன? குழந்தைக்கு மருந்துவாங்க முடியாத தந்தையின் துயரம் என்பது ஒரு எளிய துயரம்தானா? மனிதனின் எல்லைகள் வெளிப்படும் தருணம் அல்லவா அது.

ஒன்றும் செய்யமுடியாது என நாம் உணரும் நிலையில் அக்கணம் வரை நம்மையே மையமாக்கி வாழ்க்கையை அறிந்துகொண்டிருக்கிறோம் என்று உணர்கிறோம். நமக்கு அப்பால் நின்று நம்மை ஆட்டுவிக்கும் விசைகளை கண்டு திகைக்கிறோம்.மகன் விபத்தில் சிக்கியதை அறிந்து பைக்கில் ஆயிரம் கிலோமீட்டர் பயணம்செய்யும் ஒரு தந்தை செல்லும்வழியில் படுத்துத் தூங்கும் ஒரு சித்திரம் ஒரு கதையில் வருகிறது. அச்சுறுத்தும் அகநுட்பம் என்றே அதைச் சொல்லலாம்.

ஆனால் மறுபக்கமாக மிக உற்சாகமான வாசிப்பனுபவத்தை அளிக்கும் ரிக்‌ஷா  போன்ற ஏராளமான நகைச்சுவைக் கதைகளை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். அவர் தன் இளமைப்பருவச்சூழலை சித்தரிக்கும் கதைகள் அனைத்துமே பிரகாசமானவை. வில்லியம் சரோயனின் ’மை நேம் இஸ் அராம்’ வகை கதைகளுடன் ஒப்பிடத்தக்கவை அவை.

வேதாந்த சிந்தனையில் இதம் என்ற சொல் முக்கியமானது. ‘இங்கே, இப்போது, இவ்வாறு’ என அதற்குப்பொருள். பெருவெளியாக முடிவிலியாக நிறைந்திருக்கும் பேருண்மையைக்கூட இங்கே இப்போது இவ்வாறு அது எப்படி நிகழ்கிறது என்பதில் தொட்டு அறிவதே மெய்ஞானமாகும். தமிழில் ஒவ்வொரு கணமும் ’ஆம் இது நானறிந்த வாழ்க்கை’ என்றும் மறுகணமே ‘அய்யோ இதை இப்போதுதான் அறிகிறேன்’ என்றும் உணரச்செய்யும் எழுத்து என்பது அசோகமித்திரனுடையது.

என் இல்லத்துச் சுவரில் நான் தல்ஸ்தோயின் படம் ஒன்றையும் அசோகமித்திரனின் படம் ஒன்றையும் மட்டுமே மாட்டி வைத்திருக்கிறேன். தல்ஸ்தோய்க்கு நிகராக நாம் இங்கிருந்து முன்வைக்கத்தக்க நம் படைப்பாளி அவர்.

[செப்டெம்பர் 22 அன்று அசோகமித்திரனுக்கு 85 வயதாகிறது. அதை ஒட்டி தமிழ் ஹிந்து நாளிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை]
http://tamil.thehindu.com

முந்தைய கட்டுரைகாந்தி உரை -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9