‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 17

பகுதி நான்கு : எழுமுகம் – 1

அஸ்வபாதத்தின் பிளவுண்ட முடிப்பாறையை தொலைவிலேயே பாமா பார்த்துவிட்டாள். குகர்களில் ஒருவன் மெல்லிய குரலில் மலைமுடி தெரிவதைப்பற்றி சொன்னான். முதியகுகன் அவ்வழியில் உள்ள சுழல்களைப் பற்றி சொல்லி சிறிய கயிறு ஒன்றில் கட்டப்பட்ட தக்கையை நீரில் வீசி அதன் அசைவை கணித்து வழியை வகுத்தான். பிற படகுகள் அனைத்தும் பின்னால் வந்துகொண்டிருந்தன. இறுதியாகத்தான் சத்ராஜித்தும் பிரசேனரும் இருந்த படகு வந்தது. செல்லும்போதிருந்த முறைநிரை திரும்பும்போது இருக்கவில்லை. துவாரகையில் இருந்து கிளம்பும்போது கல்லெறிபட்ட மரத்துப்பறவைகள் போலத்தான் கிளம்பினர். அந்தியில் கூடணைவதுபோல தளர்ந்து கரையணைந்தனர்.

துவாரகையில் விழவு கலைந்து இல்லத்திற்கு வந்ததும் சத்ராஜித் சோர்ந்து பீடத்தில் அமர்ந்துவிட்டார். பிரசேனர் “என்ன சோர்ந்திருக்கிறீர்கள் மூத்தவரே? எது நம் மூதன்னையருக்கு உகந்ததோ அதையே செய்திருக்கிறோம். இன்று ஒரு சிறுவெற்றிக்காக நாம் நம் குலத்தை இழந்தோமென்றால் நாம் மறுமொழி சொல்லவேண்டியது நம் வழித்தோன்றல்களிடம். அதை மறக்கவேண்டாம்” என்றார். சத்ராஜித் “ஆம், அதை உணர்கிறேன் இளையோனே. ஆனால் பிழைசெய்துவிட்டேனா என்ற ஐயம் என்னை அலைக்கழிக்கிறது. என் மகள் இந்நகரில் முடிசூடி அமர்ந்திருப்பாள் அல்லவா?” என்றார். “ஆம், உண்மை. ஆனால் விருஷ்ணிகுலத்துக்கு அடிமையாக குடியையும் குலத்தையும் இழந்து நாம் வாழவேண்டியிருக்கும். மூத்தவரே, ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். கயிற்றை பிடித்திருக்கும் கையை முதல் இழுப்பிலேயே பசு அறிந்துகொள்கிறது. முதல் பிடியை விட்டுவிட்டவர்கள் ஒருபோதும் பசுவை கட்டுக்குள் வைக்கமுடியாது.”

சத்ராஜித் பெருமூச்சு விட்டுக்கொண்டு பேசாமலிருந்தார். பிரசேனர் “ஆம், எனக்கும் துயரம் உள்ளது. நீங்கள் அவளை தோளிலும் மார்பிலும் சூடியதில்லை. நான் சூடியிருக்கிறேன். ஆனால் அவளே ஒருநாள் நம்மிடம் குலத்தை இழந்து அரசியாகியிருக்கவேண்டாம் தந்தையரே என்று சொல்வாள். என்னால் உறுதியாக அதை சொல்லமுடியும். இன்று அந்த அவையிலேயே விருஷ்ணிகளின் சொற்கள் எப்படி ஒலித்தன என்று பார்த்தீர்கள் அல்லவா?” என்றார். சத்ராஜித் தலையசைத்தார். “நாம் நம் மகளை துவாரகைக்குக் கொடுத்திருந்தால் மதிப்பு கொண்டிருப்போம். ஆனால் துவாரகைக்கே மகள்கொடை மறுத்தமையால் இப்போது மேலும் மதிப்பு கொண்டிருக்கிறோம். குலத்தால் யாதவர்களில் முதன்மையானவர்கள் நாமே என்று இதோ இன்று உறுதியாகிவிட்டிருக்கிறது. எண்ணிக்கொள்ளுங்கள், நாளையே நம் இல்லத்து முற்றத்தில் பாரதவர்ஷத்தின் அரசர்கள் வந்து மகள்கேட்டு நின்றிருப்பார்கள்…”

சத்ராஜித் பெருமூச்சுடன் “நல்லது நடக்கவேண்டும். இன்று என் மகள் அவையில் சுடரென நின்றபோது நான் உள்ளூர சிறுத்துவிட்டேன். அவளை வாழ்த்தி துவாரகையின் குடிகள் எழுப்பிய குரல் என் மேல் தீச்சொல் மழை என பொழிந்தது… ” என்றார். “எண்ணி எண்ணி பெரிதாக்கவேண்டாம். நாம் நம் குடியை இழக்க ஒப்பவில்லை… அதில் நமக்கு பெருமையே. அதை மட்டும் நெஞ்சில் வையுங்கள்” என்ற பிரசேனர் திரும்பி ஏவலர்களிடம் “இன்னும் ஒருநாழிகையில் நாம் இந்நகர் நீங்கவேண்டும். அத்திரிகளும் புரவிகளும் சித்தமாகட்டும். பொருட்களை வண்டிகளில் ஏற்றத்தொடங்குங்கள். அரசியர் நீராடி அணிசெய்யவேண்டியதில்லை. முழுதணிக்கோலத்தை மட்டும் களைந்து பயண உடை அணிந்தால் போதும்…” என்று ஆணையிட்டார்.

மாலினிக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் நாம் கிளம்புகிறோம்? எப்போது மீண்டும் துவாரகைக்கு வருவோம்?” என்றாள். “தெரியவில்லை” என்றாள் மஹதி. “அவர்கள் மணச்சடங்குக்காக ஹரிணபதம் வருவார்களா என்ன? அதற்கான செய்தியை அளித்துவிட்டார்களா?” என்றாள். மஹதி ஒன்றும் சொல்லவில்லை. ஆடைகளை மரப்பெட்டிகளில் அடுக்கத் தொடங்கினாள். “அணிகளை கழற்றிக் கொடுங்கள் அரசி…” என்றாள். அணிகளைக் கழற்றியபடி மாலினி “அவையில் மற்ற யாதவ அரசிகள் அணிந்திருந்த அணிகளைக் கண்டு நான் கூசிப்போனேன். அள்ளிப்போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்கள். தேர் போல” என்றபடி சிரித்து “ஆனால் சியமந்தக மணி இருக்கும்வரை நமக்கும் அவர்களுக்கும் நிகரே இல்லை” என்றாள்.

ராகினி அவளை நோக்கிவிட்டு திரும்பி மஹதியிடம் “என்னால் தாளவே முடியவில்லை அன்னையே. நான் எண்ணியதெல்லாம் நிகழ்கிறதென்று நினைத்தேன்” என்றாள். “எண்ணியது முறை என்றால் நிகழும்” என்றாள் மஹதி. “இது நம் இளவரசியின் நகர்… இந்த மூட யாதவர்களா அதை இல்லை என்பது?” என்று ராகினி கண்ணீருடன் கேட்டாள். “இவர்களால் என்ன செய்ய முடியும்? ஆறு கடல்நோக்கித்தான் சென்றாகவேண்டும். நம் இளவரசியும் இளைய யாதவரை அடைவாள். சியமந்தக மணிக்கு ஒரு பாதை உள்ளது. அதன் நீரோட்டங்களில் அது பொறிக்கப்பட்டுள்ளது” என்றாள் மஹதி. ராகினி பெருமூச்சுடன் “எல்லாம் இளையவரின் பொறாமையின் விளையாட்டு. இந்த இரு மூடர்களுக்கும் அது புரியவில்லை” என்றாள். “உன் சொற்களை கட்டுக்குள் வை. அரசர்களை அவமதிக்க நீ இன்னும் அரசியாகவில்லை” என்றாள் மஹதி. “ஆம், ஆனால் இச்சொற்களை சொல்வதன்பொருட்டு கழுவேறவும் நான் சித்தமாக இருக்கிறேன்” என்றாள் ராகினி.

துவாரகையை விட்டு அவர்கள் நள்ளிரவின் இருளுக்குள் கிளம்பினார்கள். பந்தங்களோ வாழ்த்தொலிகளோ இருக்கலாகாது என்று பிரசேனர் சொல்லியிருந்தாலும் பாமா செல்லும் செய்தி எப்படியோ பரவி சாலையின் இருமருங்கும் துவாரகை மக்கள் கூடியிருந்தனர். அவள் வண்டிக்குள் அமர்ந்து சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே அமர்ந்திருந்த ராகினி “சாலையின் இருகரையிலும் மக்கள் இளவரசி” என்றாள். திரும்பி மெல்லிய புன்னகையுடன் “ஆம்” என்றாள் பாமா. ராகினியின் கண்கள் நிறைந்துவிட்டன. “என்னடி இது? நான் ஹரிணபதத்தில் கன்றுமேய்த்தாலும் துவாரகையின் அரசிதான். துவாரகை என்று ஒன்றை இளைய யாதவர் எண்ணும்போதே நான் அதன் அரசியாகிவிட்டேன். நான் அதன் அரசியென்பதை அவர் அறிந்ததே அதற்குப்பின்னர்தான்” என்றாள் பாமா. ராகினி உதட்டை அழுத்தியபடி பார்வையை திருப்பிக்கொண்டாள்.

குதிரைக்குளம்பெழுந்த மலைமுடி அணுகி வந்தபோது மஹதி வெளியே வந்து “மீண்டும் நம் இடம்” என்று பாமாவிடம் சொன்னாள். பாமா புன்னகைத்து “நம் கன்றுகள் நம்மை தேடும்” என்றாள். மஹதி அவளை நோக்கி “ஆம், மீண்டும் துவாரகைக்குச் செல்லும்போது அவற்றையும் கொண்டுசெல்லவேண்டும்” என்றாள். பாமா புன்னகையுடன் “ஆம்” என்று சொன்னபின் கரையோரக்காட்டை பார்க்கத்தொடங்கினாள். எதிர்த்திசைக்கு ஒழுகும் பச்சைநிற நதிபோல கரையோரக்காடு சென்றுகொண்டிருந்தது. பச்சைநிற வில் எய்த வெண்கொக்கு அம்புகள் வானில் எழுந்து வளைந்து நீரில் சரிந்தன. அவற்றின் நிழல்கள் எழுந்து வந்து அவற்றுடன் இணைந்தன.

ஹரிணபதத்தின் படித்துறையில் அவர்களுக்காக யாதவர்கள் காத்து நின்றிருந்தனர். அக்ரூரரின் மணஓலை வந்த செய்தி பறவை வழியாக அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. உடனே ஹரிணபதத்திலும் அதைச்சூழ்ந்த அனைத்து யாதவ ஊர்களிலும் விழவுக்களியாட்டு தொடங்கிவிட்டிருந்தது. உயர்ந்த மரத்தின் மேல் எழுப்பிக் கட்டப்பட்ட மூங்கிலில் விழவாடலுக்குரிய செந்நிறமான கொடி நாற்பத்தெட்டு கதிர் கொண்ட சூரியச் சின்னத்துடன் பறந்துகொண்டிருந்தது. அவர்களின் படகுகள் வருவதை மரங்களின் மேல் காவல்பரணில் இருந்த யாதவன் கண்டதுமே முழவுச்செய்தி அறிவிக்க யமுனைக்கரை முழுக்க யாதவர்கள் வண்ணக்கொடிகளுடனும் மலர்களுடனும் வந்து செறிந்து நின்று படகுகளை நோக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.

ராகினி அதைக்கண்டு அழுதபடி எழுந்து படகறைக்குள் ஓடினாள். அங்கிருந்த மஹதி “உனக்கென்னடி துயரம்? மலர் அரும்பாவதற்கு முன்னரே அதைச் சூடும் மார்பு பிறந்துவிட்டது” என்றாள். ராகினியை அச்சொற்கள் மேலும் அழச்செய்தன. விசும்பியபடி அவள் புலித்தோல் மஞ்சத்தில் படுத்துவிட்டாள். “நீ அழுகிறாய், ஆனால் சென்றபோதிருந்த அதே முகத்துடன் இப்போதுமிருக்கிறாள். அவள் யாரென்றும் அவளைக் கொள்பவர் எவரென்றும் நன்கறிந்திருக்கிறாள்” என்றாள் மஹதி. “நாளையே பாரதவர்ஷத்தின் மன்னர்கள் வருவார்கள் என்று இளையவர் சொல்வதை நானே கேட்டேன்” என்றாள் ராகினி. “வரட்டும்… யாதவப்பெண் களஞ்சியப்பொன் அல்ல. அவள் காமதேனு. கனியாமல் அமுது கொள்ள எவராலும் இயலாது” என்றாள் மஹதி.

படகுகள் ஹரிணபதத்தை அடைந்த முறையை மட்டும் கொண்டே யாதவர்கள் என்ன நிகழ்ந்திருக்குமென உய்த்தறிந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்குள்ளும் மெல்லிய அச்சம் இருந்தது. அந்த அச்சம் அதற்குரிய சான்றுகளை தேடிக்கொண்டே இருந்தது. மிக நுண்மையான கைகளால் அது தொட்டறிந்துவிட்டது. படகுகள் படித்துறையை தொட்டபோது மலர்களுடனும் மங்கலப்பொருட்களுடனும் நின்றிருந்த யாதவர்கள் எவரும் அணுகி வரவிலை. படகுத்துறை ஏவலர் மட்டும் அருகே வந்து வடம் பற்றித் தளைத்து படகை நிறுத்தினர். நடைபாலம் நீண்டு படகின்மேல் அமைய உள்ளிருந்து மஹதி வெளியே வந்ததை எவரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பாமா ராகினி துணையுடன் படகுமேடைக்கு வந்து பாலம் வழியாக கரைக்கு வந்தாள்.

நிமிர்ந்த நோக்கும் இதழ்களில் மலர்ந்த புன்னகையும் அருள்நிறைந்த விழிகளுமாக அவள் இறங்கி நடந்தபோது யாதவர் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். பின்னால் வந்த படகு நின்று அதிலிருந்து மாலினியும் சேடியரும் தளர்ந்த தோள்களும் தாழ்ந்த முகமுமாக இறங்கத் தொடங்கியபோது அவர்கள் எண்ணியது உறுதியாயிற்று. அவர்கள் மேலும் குழப்பத்துடன் அவளையே நோக்கினர். நூபுரம் தாளத்துடன் ஒலிக்க சிவந்த காலடிகளை மண்ணில் ஒற்றி ஒற்றி அவள் நடந்து அருகணைந்தபோது அங்கே நின்றிருந்த முதியபாணன் ஒரு கணநேரத்து மெய்சிலிர்ப்பாக அனைத்தையும் அறிந்துகொண்டான். உரத்த குரலில் “யாதவர்குலத்தின் அரசி வாழ்க! துவாரகைக்கு அரசி வாழ்க!” என்று கூவி அருகே நின்ற பெண்ணின் அணித்தாலத்தில் இருந்த மலர்களை அள்ளி அள்ளி அவள் மேல் வீசினான்.

எண்ணை பற்றிக்கொள்வதுபோல அந்த உணர்ச்சி யாதவர்களில் படர்ந்தது. கண்ணீருடன் கைகளை விரித்து துள்ளி எழுந்து வாழ்த்தொலிகளைக் கூவியபடி அவர்கள் அவளை எதிர்கொண்டார்கள். முதியவர்கள் இன்னதென்றில்லாத உணர்வெழுச்சியால் கண்ணீர்விட்டு அழுதார்கள். வயதான பெண்கள் அவளை நோக்கி கைநீட்டி கண்ணேறு கழிக்கும் அசைவுகளைக் காட்டி கூச்சலிட்டனர்.

அந்த உணர்ச்சிமிக்க அசைவுகளுக்கு நடுவே அவள் தென்றலில் ஆடும் மலர்ப்புதர்களை கடந்து செல்பவள் போன்ற புன்னகையுடன் மெல்ல நடந்து சென்றாள். அவளுக்குப்பின்னால் யாதவர்கள் திரண்டு வாழ்த்தி முழக்கமிட்டபடி வந்தனர். கண்ணீருடன் ‘துவாரகையின் அரசி! யாதவர்களின் தலைவி’ என்று கைவீசி கூவினர். அவள் நடந்த மண்ணை அள்ளி சென்னியில் சூடினர். உணர்வெழுச்சியால் கைதூக்கி நடனமிட்டனர். முழவும் துடியுமாக உடனே பாணர்கள் பாடத்தொடங்கினர். ‘நீலவண்ண மார்பின் ஆரம்! மயிற்பீலி சூடிய சென்னியின் வைரம்.’

இறுதியாக வந்து நின்ற படகிலிருந்து இறங்கிய சத்ராஜித் அந்தக் களியாட்டை நோக்கி புரியாமல் திகைத்தார். என்ன நடந்துகொண்டிருக்கிறது என அவர் உணர சற்று நேரமாகியது. திகைத்து பெருமூச்சு விட்டபடி படித்துறையிலேயே நின்றுவிட்டார். “இறங்குங்கள் மூத்தவரே” என்றார் பிரசேனர். “இளையோனே, அவளை அவர்கள் துவாரகை அரசி என்றல்லவா கூவுகிறார்கள்?” என்றார் சத்ராஜித். பிரசேனர் “அவர்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்கள் மூத்தவரே. பாருங்கள் நாளையே இன்னொரு அரசர் நம் வாயில்முன் வந்து நிற்கையில் என்ன சொல்லப்போகிறார்கள் என்று” என்றார். “எனக்கு ஐயமாக இருக்கிறது இளையோனே. அவர்கள் அவளை யாதவர்களின் தலைவி என ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.”

பிரசேனர் சலிப்புடன் “மக்கள் உணர்வெழுச்சி கொள்ள விழைகிறார்கள் மூத்தவரே. அதற்கான தருணங்களை அவர்கள் எப்படியும் கண்டடைவார்கள். அது அவர்களுக்கு விருப்பமான கேளிக்கை மட்டுமே” என்றார். திரும்பி கொந்தளிக்கும் யாதவர்கூட்டத்தை நோக்கிவிட்டு சத்ராஜித் “இது அங்கே துவாரகையில் அந்த மக்கள் கொண்ட அதே உளஎழுச்சி” என்றார். “ஆம், ஆனால் இப்போது அங்குள்ளவர்கள் நம் இளவரசியை வெறுக்கத் தொடங்கியிருப்பார்கள். அவர்களின் அரசனை அவமதித்து கிளம்பிச்சென்ற அந்தககுலத்து பெண் என அவளை இதற்குள் வகுத்துவிட்டிருப்பார்கள். வெறுப்பும் மக்களுக்கு விருப்பமான கேளிக்கைதான்” என்றார் பிரசேனர். சத்ராஜித் சினத்துடன் “இளையோனே, அங்கே பல்லாயிரம் பேர் நடுவே அவள் சொன்ன சொல்லை மறந்துவிட்டாய், இப்பிறவியில் இனி ஒரு தோள் தனக்கில்லை என்றாள்…” என்றார்.

பிரசேனர் “அந்த அவையில் அச்சொற்களை அவள் சொல்லாமலிருந்தால்தான் வியப்பு. மூத்தவரே, கன்னியின் உள்ளம் அத்தகையது. அது காதலில் தன்னை முழுமையாகவே ஒப்புக்கொடுக்கிறது. அச்சொற்களை சொல்லும்போது அவள் இளைய யாதவனின் காதலி மட்டுமே. பிறிதென ஏதுமற்ற நிலையில்தான் இருந்தாள். ஆனால் இப்போது இதோ ஹரிணபதம் வந்துவிட்டாள். இங்கே இருந்த எளிய யாதவப்பெண்ணாக இன்னும் சிலநாட்களில் மாறிவிடுவாள். துவாரகைக்குச் சென்றதும் இளைய யாதவனின் மணமாலை வந்ததும் அவளுக்கு கனவென ஆகிவிடும். அடுத்த காதலுக்காக அவள் அகம் ஏங்கும்” என்றார். சத்ராஜித் “இளையோனே…” என்று சொல்லத்தொடங்க பிரசேனர் “பார்த்துக்கொண்டே இருங்கள் மூத்தவரே. பெண்கள் ஆறுகளைப்போல. ஒழுகும் மண்ணின் சுவையும் மணமும் நிறமும் அவர்களுடையதென ஆகும்” என்றார்.

சத்ராஜித் தலையை மட்டும் அசைத்தார். “எண்ணிப்பாருங்கள் மூத்தவரே, இவன் உன் கொழுநன் என ஒருவனைக் காட்டியதுமே உள்ளம் இழக்கிறார்கள். முழுதளிக்கிறார்கள். அது முடியும் என்றால் அதைப்போலவே அதைக் கடந்து இன்னொருவரை ஏற்கவும் அவர்களால் முடியும்” என்றார் பிரசேனர். “குலமகளை திருமகள் என்கிறார்கள் மூத்தோர். பொன்னையும் பசுவையும் மண்ணையும் போல வெல்பவன் கைகளை சென்றடைந்து வாழ்பவர்கள் அவர்கள்.”

அரைநாழிகைக்குள் துவாரகையில் நிகழ்ந்தது என்ன என்ற செய்தி அனைவருக்கும் சென்றுவிட்டது. ஆனால் அவர்கள் அந்நிகழ்ச்சிகளை உள்ளூர உணர்ச்சிகரமாக நடித்துவிட்டிருந்தமையால் அதை என்றோ நடந்த புராணமாக அதற்குள் ஆக்கிக்கொண்டிருந்தனர். அவளுடைய பெருமையை நிலைநிறுத்த நடந்த ஒரு நாடகம் என்றே அவர்களுக்கு அது பொருள்பட்டது. அவ்வுணர்ச்சி யாதவர்களிடையே பரவிப்பரவி சிலநாட்களிலேயே அவர்களின் பொது உளநிலையென நிலைகொண்டது. அதன் பின் அவளை மூதன்னையர் கூட பாமா என்று அழைக்கவில்லை, யாதவப்பேரரசி என்ற சொல்லையன்றி எதையும் அவர்களால் எண்ண முடியவில்லை. மாலினி மட்டும் “அவளை யாதவப்பேரரசி என்கிறார்கள்… அப்படியென்றால் துவாரகையில் இருந்து செய்தி வரும் என அறிந்திருக்கிறார்கள்…” என்றாள். மஹதி இதழ் விரியாமல் புன்னகைசெய்தாள்.

அச்சொல் சத்ராஜித்தை உள்ளூர மகிழ்வித்தது. சிறுவர்களோ முதியவரோ அவரிடமே ‘துவாரகையரசி’ என்று சொல்லிவிடும்போது அவர் விழிகளைத் தவிர்த்து நடந்து விலகினார். ஆனால் பிரசேனர் அச்சொல்லைக்கேட்டதும் கொதிப்படைந்தார். “அவள் ஹரிணபதத்தின் இளவரசி. நாளை பாரதவர்ஷத்தின் அரசி…” என்று கூவி அப்படி சொன்னவர்களை நோக்கி வாளை உருவிக்கொண்டு பாய்ந்தார். “அவளைத்தேடி மகத மன்னர் வரவிருக்கிறார். அவள் மகதத்தின் பேரரசி. உங்கள் இளைய யாதவனின் தலையை அவள் காலடியில் வைப்பார் ஜராசந்தர்” என்று கூவினார். அவர்கள் திகைப்புடன் விலகிச்சென்று அவரை நோக்கினாலும் சிலநாட்களில் அச்சொல்லும் பரவியது. ‘அவளை அடைய மகதரும் எண்ணுகிறார். யாதவருக்கும் மகதருக்கும் அவள் பொருட்டு பூசல் என்றார்கள்’ என்று சொன்னார்கள்.

நாளடைவில் அவளுக்கு ஜராசந்தனா கிருஷ்ணனா யார் பொருத்தமானவன் என்று பேசிக்கொண்டனர். சிலநாட்களுக்குள் ஜராசந்தனே பொருத்தமானவன் என்று வாதிடும் ஒரு தரப்பு உருவானது. அவர்கள் சிறுபான்மையினர் என்பதனாலேயே மிகுந்த ஊக்கத்துடன் இருந்தனர். அனைத்து இடங்களிலும் பலகோணங்களில் சொல்நிலைகளை உருவாக்கி சலிக்காது நின்று பேசினர். மெல்ல ஜராசந்தர் அவளை மணக்க வரப்போகிறார் என்ற எண்ணம் வலுப்பெற்றது. ஜராசந்தர் வருவதை துவாரகையின் படைகள் தடுக்கின்றன என்று சொல்லப்பட்டது. “இளைய யாதவரால் ஜராசந்தரை தடுக்க முடியுமா என்ன? துவாரகை நேற்று முளைத்தது. மகதம் தொன்மையான ஆலமரம்” என்றனர்.

எண்ணங்களும் உணர்ச்சிகளும் நீர்ப்பாசிப்படலம் போல ஒவ்வொரு நாளும் வளர்ந்து மூடின. பாமாவை மகதப்பேரரசியாக ஆக்க தடையாக இருப்பவன் என்ற சித்திரம் மிகவிரைவிலேயே இளைய யாதவனைப்பற்றி உருவாகி வந்தது. ‘கோழை… அவனால் ஒருபோதும் வெல்லமுடியாது’ என்று மகதத்தை ஆதரித்த யாதவர் கைதூக்கி கூச்சலிட்டனர். ‘அவன் என்ன செய்தான்?’ என்று எவரோ கேட்க “சியமந்தக மணியை பெண்செல்வமாகக் கேட்டான். அந்தகர்களின் குலமணியைக் கேட்க அவனுக்கென்ன உரிமை? முடியாது என்று நம் அரசர் வந்துவிட்டார்” என்றார் மகதத்தின் ஆதரவாளர். எவர் எங்கு பேச்சின் பெருக்கில் எதை சொன்னாலும் சிலநாட்களுக்குள் அது யாதவச்சிற்றூர்களெங்கும் பேசப்பட்டது. ஓரிரு மாதங்களுக்குள் பாமா வந்திறங்கியபோதிருந்த உணர்வெழுச்சிகள் எல்லாம் எங்கோ நினைவாக மாறி மறைந்தன.

ஊரில் நிகழும் பேச்சுகள் நாளும் சத்ராஜித்திற்கும் பிரசேனருக்கும் வந்துகொண்டிருந்தன. ஒருகட்டத்தில் என்னதான் பேசப்படுகிறதென்பதே விளங்காத அளவுக்கு பல தரப்புகள் உருவாகி ஒவ்வொன்றும் நாள் தோறும் உருமாறின. மாலினி நாள் தோறும் மாறிக்கொண்டிருந்தாள். “அவளுக்கு ஜராசந்தர்தான் சிறந்த கணவர் என்று நிமித்திகரும் சொல்லிவிட்டார்களடி…” என்றாள். “நாம் என்ன செய்ய முடியும்? இறையாணை அப்படி இருக்கிறது.” மறுநாளே “மகதரை யாதவர் வெல்லமுடியாதென்றே நினைக்கிறேன். நீ என்னடி நினைக்கிறாய்?” என்று கேட்டாள்.

ராகினி எரிச்சலுடன் “மகதம் இங்கிருந்து நெடுந்தொலைவில் இருக்கிறது அரசி” என்றாள். சினத்துடன் கையை அசைத்து “அதெல்லாம் எனக்குத்தெரியும். ஆனால் மகத மன்னர் ஜராசந்தர் முன்னரே யாதவர்களுடன் மண உறவுள்ளவர். கம்சரின் அரசிகள் அவரது முறைமகள்கள். அவர்களை இளைய யாதவர் திருப்பியனுப்பிய சினம் அவருக்கிருக்கிறது. விருஷ்ணிகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியை இதற்குள் அவர் அறிந்திருப்பார். இன்னும் சில நாட்களில் என் மகளைத்தேடி கன்யாசுல்கத்துடன் மகதத்தின் பொற்தேர் வரும்” என்றாள் மாலினி. அது அவளுடைய சொற்கள் அல்ல என்று தெரிந்த மஹதி வியப்புடன் நோக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல் விலகிச்சென்றாள்.

யமுனையின் நீராட்டுத்துறைகளில் மகதத்தின் பொற்தேர் வருவதைப்பற்றிய கதைகள் பரவின. முதலில் அது சினமும் நகைப்பும் கொள்ளச்செய்தது. “துவாரகையின் அரசருக்கு பேசப்பட்ட மகளை மகதர் கொள்வதா? விட்டுவிடுவாரா என்ன?” என்று இளையவர் கொதித்தனர். “யாதவர் அரசி அவள்… தெய்வங்கள் எழுந்து வந்து அதை சொல்லிவிட்டன” என்றனர் மூத்தோர். ஆனால் அதையே எண்ணிக்கொண்டிருந்தமையால் அதை ஏற்கும் உளநிலை உருவானது. சிலநாட்களுக்குப்பின் மகதத்தின் தூதை எதிர்நோக்கத் தொடங்கிவிட்டனர். துவாரகையின் அரசி என்பது சலித்து புதியதாக ஏதேனும் நிகழவேண்டுமென்ற விருப்பு மேலெழத்தொடங்கியது. மகத மன்னர் துவாரகையின் அரசியை மணந்தால் என்ன ஆகும் என்ற ஆவல் உருவாகி அதன் பல தளங்கள் பன்னிப்பன்னிப்பேசுவதற்கு உரியவை என்பது கண்டடையப்பட்டது. ஒவ்வொருநாளும் ஹரிணபதத்தின் படித்துறையில் மகதத்தின் அணிப்படகு அணுகுவதை எதிர்நோக்கினர் யாதவர். உள்ளூர அதைத்தடுக்க துவாரகையின் வாளேந்திய படை வந்து இறங்குவதையும் எதிர்நோக்கினர்.

ஆனால் மேலும் சிலநாட்கள் சென்றபோது அந்த எதிர்பார்ப்பும் அணைந்தது. எதிர்பார்ப்பின் எழுச்சியே ஒவ்வொருநாளையும் நீண்டு நீண்டு விரியச்செய்து ஏமாற்றத்தையும் பெரியதாக்கியது. ஏமாற்றம் வெறுமையை உருவாக்கி முற்றான நம்பிக்கையிழப்பை நோக்கி கொண்டு செல்ல “மகதத்தின் பொற்தேரில் சக்கரங்கள் இல்லை” என்ற கேலிச்சொல் பரவியது. அந்த வெறுமையை கேலியினூடாக கடக்கமுடியும் என்று கண்டதும் அதை பிடித்துக்கொண்டனர். அதுவரை இருந்த அனைத்து உணர்வெழுச்சிகளையும் வேடிக்கையாக மாற்றிக்கொண்டனர். “நூறு பசுக்களை இளைய யாதவர் பெண்செல்வமாக கேட்டிருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் இரண்டு அகிடுகள் இருக்கவேண்டுமாம்” என்றான் பாணன் ஒருவன். “இரண்டு அகிடுள்ள பசுக்கள் இங்கே நிறையவே உள்ளனவே” என்றான் அவன் நண்பன். பாணன் சொன்ன மறுமொழி கேட்டு மன்றிலிருந்தவர்கள் சிரித்தபடி அவனை அடிக்கப்பாய்ந்தனர்.

பாமா அனைத்துச் சொற்களுக்கும் அப்பாலிருந்தாள். ஹரிணபதம் மீண்டதுமே அவள் மீண்டும் பழைய யாதவ வாழ்க்கைக்கு திரும்பினாள். தொழுவத்தில் பசுக்களுக்கு புகையிட்டும் புல்லும் மாவும் ஊட்டியும் பணி செய்தாள். பால்கறந்து கலம் சேர்த்து பிற ஆய்ச்சியருடன் அமர்ந்து வெண்ணை கடைந்தாள். முதலில் ராகினியோ பிற ஆய்ச்சியரோ பதறி வந்து “வேண்டாம் அரசி” என்று தடுத்தனர். மாலினியே “நீ எதற்கு இதையெல்லாம் செய்கிறாய்? உன் கைகள் முரடாகிவிடும்” என்றாள். ஆனால் மஹதி “இது அவள் இல்லம். பசுப்பணி செய்யாத ஆயர்ப்பெண் எங்குள்ளாள்?” என்றாள்.

சிலநாட்களிலேயே அவள் பணியாற்றுவது பிழையெனத் தோன்றாமலாயிற்று. அவள் பால்குடம் சுமந்து செல்வதும் புல் வெட்டிக்குவிப்பதும் கண்ணில் படும்தோறும் யாதவப்பேரரசி என்ற சொல் பொருளிழந்து கேலிச்சொல்லாயிற்று. அவளை இளையவர்கள் “யாதவப் பேரரசி, பால் கறந்துவிட்டாயா?” என்று கேட்கும்போது அவள் புன்னகையுடன் “ஆம், இளையோனே” என்று சொல்லி கடந்துசென்றாள். “துவாரகையின் அரசியைப்போல புல்வெட்ட எவரால் முடியும்? அவளைப்போல் பால்கறக்க எவரால் முடியும்?” என்று யாதவக்குலப்பாடகனாகிய பார்க்கவன் பாடிய கேலிப்பாடல் சிறுவர் நாவுகளில் ஒலிக்கலாயிற்று. தொடக்கத்தில் மாலினி அதைக்கேட்டு சினந்து அச்சிறுவர்களை வசைபாடினாள். பின்னர் அவளும் சிரிக்கத் தொடங்கினாள்

சத்ராஜித் களிந்தகத்திற்கு சென்றபின்னர் ஓரிருமுறை மட்டுமே மீண்டுவந்தார். ஒருமுறை படகிறங்கியபோது பாமா இரண்டு பசுக்களை யமுனையில் நீராட்டிவிட்டு கொண்டுசெல்லும் காட்சியைக் கண்டு படகுக்குள்ளேயே இருந்துவிட்டார். பிரசேனர் வந்து “மூத்தவரே ஹரிணபதம்…” என்று சொன்னதும் வெறுப்புடன் முகம்தூக்கி “மூடா, அதோ இளைய யாதவன் மணம் கோரிய பெண் பசுபுரந்து செல்கிறாள். அவள் சூடவிருந்த மணிமுடியை உன் சொல்கேட்டு தடுத்தவன் நான். அவள் முன் எப்படி சென்று நிற்பேன்?” என்றார். “அவள் விழிகளை சந்தித்தால் என் உடல் சிறுத்துவிடுகிறது. இறப்புக்கு நிகரான தருணம் அது” என்றார். தலையை அறைந்து “மூடன்… முழுமூடன்…” என்று சொல்லி கண்ணீர் மல்கினார்.

பிரசேனர் “மூத்தவரே, நாம் பொறுத்திருப்போம்… மகதத்தில் இருந்து…” என்று தொடங்க சத்ராஜித் “இளையவனே, நான் அறிவேன். மகதம் நம்மை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. நாமே நாணிழந்து மகதத்திற்கு அனுப்பிய மணத்தூதை ஜராசந்தரின் நான்காம்நிலை அமைச்சர் கேட்டுவிட்டு திருப்பியனுப்பிவிட்டார்…” என்றார். “யாதவர்களில் முதன்மையானவர்கள் நாம் என நீ சொன்னபோது அது உண்மையென எனக்குப்பட்டது. ஆனால் அத்தனை யாதவகுலங்களும் அவ்வெண்ணத்தையே கொண்டிருக்கின்றன. நம்மை எவ்வகையில் நாம் யாதவரில் முதல்வர் என எண்ணவேண்டும்? நம் மூதாதை ஒரு மணியை அடைந்தார் என்பதற்காக நாம் விருஷ்ணிகளைவிட எப்படி மேலானவர்களாவோம்? என்றார்.

பிரசேனர் “நாம் சூரியவழிபாடு செய்பவர்கள்… நம்முடைய தெய்வம்….” என்று தொடங்க சத்ராஜித் இடைமறித்து “சூரியனை வழிபட்டு நாம் எதை அடைந்தோம்? வெயில்பட்டால் ஒளிவிடும் இந்தக்கல்லை மட்டும்தானே? இதை வைத்துக்கொண்டு என்ன சிறப்பு வந்தது நமக்கு? நாய்பெற்ற தெங்கம்பழம், வேறென்ன? விருஷ்ணிகளின் குலம் இன்று பல்லாயிரம் ஊர்களாகப்பிரிந்து பரவியிருக்கிறது. அவர்களின் குலத்தில் இரு மாவீரர்கள் பிறந்திருக்கிறார்கள். அதற்குமுன் ஒரு பேரரசி பிறந்து அஸ்தினபுரியின் அரியணையை அடைந்திருக்கிறாள். இன்று அவர்களே யாதவர்களின் தலைவர்கள். நாம் யார்? சிப்பி மூடியில் அள்ளிய மண்ணளவுக்கு ஒரு நகர். சில மேய்ச்சல் சிற்றூர்கள். பன்னிரண்டு ஆண்டுகளாக ஒரு துறைமேடை அமைக்க எண்ணி நிதியில்லாது திணறும் சிற்றரசு நாம்… நமக்கு எதற்காக இந்த ஆணவம்?” என்றார்.

“மூத்தவரே, சியமந்தகமணியைப்பற்றி தாங்கள் சொன்ன இச்சொற்களுக்காக நம் மூதாதையர் நம்மை பொறுத்தருளவேண்டும்” என்றார் பிரசேனர். “எளிமையாக ஒன்று மட்டும் கேட்கிறேன். நாளையே மகதமோ இல்லை இன்னொரு பேரரசோ நம்மிடம் மணத்தூதுடன் வந்தால் என்ன சொல்வீர்கள்? நம் இளவரசி ஓர் அரியணையில் அமர்ந்து செங்கோல் ஏந்தினாளென்றால் என்ன சொல்வீர்கள்? அப்போது நான் சொன்னதெல்லாம் உண்மை என்றும் இந்த உணர்ச்சிகளனைத்தும் பொய்யென்றும் ஆகிவிடுமல்லவா?” சத்ராஜித் “ஆனால்…” என்றார். “அவ்வண்ணமே எண்ணுங்கள் மூத்தவரே, இவ்வுணர்ச்சிகள் அனைத்துமே பொய்யானவை. பொருளற்றவை. இன்றைய நிலையில் இருள்தெய்வங்கள் நம் நெஞ்சில் நிறைக்கும் வீண் உணர்ச்சிகள் இவை. நம்மை அவை மதிப்பிட்டு நோக்குகின்றன. அவற்றின் ஆடலை கடந்து செல்வோம்…” சத்ராஜித் பெருமூச்சுடன் தலையசைத்தார்.

அதன்பின் சத்ராஜித் ஹரிணபதத்திற்கு வருவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். பாமா சிறுமியாக இருந்தபோதிருந்த நிலையே திரும்பிவந்தது. அவள் பசுமேய்த்து காடுகளில் அலைந்தும் வெண்ணை கடைந்தும் யமுனையில் நீராடியும் வாழ்ந்தாள். அவளிடம் துயரமென ஏதுமிருந்ததாக தெரியவில்லை. சிறுமியென இருந்தபோதிருந்த அதே முகமலர்வும் உடல்துடிப்பும் இன்குரலும் கொண்டிருந்தாள். ஒவ்வொருநாளும் இல்லத்தின் மேல் எழுந்த கன்று நோக்கும் மேடையில் ஏறி நின்று புலரியின் இளநீலத்தை வெயில் எழுவது வரை நோக்கினாள். காலைமழை பெய்யும்போது மட்டும் முழுமையாகவே இவ்வுலகிலிருந்து அகன்று விழிவிரித்து உடல் மெய்ப்புகொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது மலர் உதிர்ந்தாலும் அவள் உடல் அதிர்ந்தது. நூறுமுறை பெயர்சொல்லி அழைத்தாலும் அவள் அறியவில்லை.

முந்தைய கட்டுரைடொரெண்டோ விழா- ரசனை ஸ்ரீராம்
அடுத்த கட்டுரைநச்சரவம்-சிறுகதை