அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு

அ.முத்துலிங்கத்தின் முதல் கதையை அவரது முதல் தொகுப்பான ’அக்கா’ வில் நான் வாசித்திருக்கிறேன். அந்நூல் அவர் மாணவராக இருந்தபோது எழுதப்பட்டது. வேதசகாயகுமாரின் சேமிப்பில் இருந்து. அதை அவருக்கு பத்மநாப அய்யர் கொடுத்திருக்கலாம். எழுதாமல் போன ஒரு சிறந்த படைப்பாளி என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை எழுதியிருக்கிறேன். பின்பு ஓய்வுபெற்ற பின்னரே அவர் மீண்டும் எழுத வந்தார். அப்போது அவர் எழுதிய முதல் ஆக்கம் இந்தியாடுடே இதழில் வெளிவந்தது. ஆப்கானிய பின்புலத்தில் ஒரு மரணதண்டனை நிறைவேற்றத்தைச் சித்தரித்த அக்கதையை பாராட்டி அடுத்த இதழில் நான் ஒருவாசகர் கடிதம் எழுதியிருந்தேன். அப்போது முதல் இன்றுவரை தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக அவரை நான் முன்வைத்து வருகிறேன்.

அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கைத்தரிசனத்தை. ’இன்னல்களும் சிக்கல்கலும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுடவாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத்துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஓர் இலக்கிய விமரிசகனாக நான் ஒன்றைச் சொல்வேன், ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே.

அ.முத்துலிங்கத்தின் இணையதளத்தை பெரும்பாலும் இரவில் கடைசியாக வாசிக்கிறேன். விதவிதமான அன்றாட வாழ்க்கையனுபவங்கள் வழியாக செல்லும் அவரது நாட்குறிப்புகள் எப்போதும் என்னை மெல்லிய புன்னகையுடன் தூங்கச்செல்லவைக்கிறது. நாய்கள் மேல் நீரைவிட்டால் அவை கொஞ்சம் உதறிக்கொள்ளுவதுபோல பூமி மெல்ல உதறிக்கொண்டது என்று அவர் நிலநடுக்கத்தைச் சொல்லுமிடத்தில் அவரிடம் இருப்பது ஒரு ஆறுவயதுப்பையன். ஆறு வயதில் புழுக்கள் இருந்த தேன் தட்டு ஒன்றைப்பார்த்துவிட்டு அஜிதன் சொன்னான், ’ஒரே குழந்தைமட்டும் படிக்கிற கிளாஸ்ரூம் மாதிரி இருக்கு’ முத்துலிங்கத்துக்குள் வயதாவதேயில்லை

http://www.amuttu.com/index.php?view=pages&id=219

முந்தைய கட்டுரைசில வம்புக்கடிதங்கள்…
அடுத்த கட்டுரைபழையபாதைகள்