எனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்

“எனது இந்தியா” என்கிற தலைப்பில் துவங்கி, “வெல்க பாரதம்” என்று முடித்து தன்னுடைய தேசப் பற்றை வெளிப்படுத்தி இருந்தார் நமது அன்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். இந்தியா தேசியத்தின் மீதான ஆழ்ந்த அவரது ஈடுபாட்டை அவரது வலைப்பூவில் எழுதுவது பற்றியோ, இந்தியா என்கிற கூட்டு இன தேசியம் சமூக, பொருளாதார முன்நகர்வுகளில் செல்வது பற்றியோ நமக்கு அவருடன் மாற்றுக் கருத்து இல்லை.

கல்வி என்ற பெயரில் சில பல கணினிக் குறியீடுகளை கற்றுக் கொண்டதன் மூலமும், மிகப் பெரும் முதலீடு செய்து, ஏறத்தாழ விலை கொடுத்து வாங்கப்பட்ட கல்விப் பட்டங்களின் மூலமும் மட்டுமே நீங்கள் வளர்க்கும் இந்திய தேசியம் உள்ளடக்கிய விவசாயம் என்கிற இழிதொழில் செய்கிற, கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்ட உழைக்கும் மக்களாகிய, இரண்டு வேலை உணவுக்கும் வழியற்ற எம் அதே இந்திய மக்களின் வளர்ச்சியில் இரட்டை வேடம் புனைவதில் தான் நாம் முரண்படுகிறோம். உலகில் இதுபோன்ற பொருளாதார, சமூக ஏற்றதாழ்வுகளால் அல்லாடும் மக்களின் வளர்ச்சி பற்றியும் நமக்கு மட்டுமல்ல, நேர்மையான எழுத்துக்களை, நடுவுநிலையோடு பதிவு செய்யும் யாருக்கும் இருக்கும், இருக்க வேண்டும்.

இருப்பினும் அவருடைய வாதங்களில் சில நமது கேள்விகளுக்கு உட்படுகின்றன….

தமிழ் இலக்கியச் சிற்றிதழ்கள் இந்திய இறையாண்மையை எதிர்க்கின்றனவா?

ஆம், மிகப் பெரும்பாலான சிற்றிதழ்கள் இந்திய இறையாண்மையை எதிர்க்கின்றன, நாமும் ஒப்புக் கொள்வோம், ஆனால், அதற்கான காரணிகளை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும், நண்பர் ஜெயமோகன் அவர்களே, கிடைத்த நீதியை உரக்கச் சொல்லும், வெகு மக்கள் ஊடகங்களின் பக்கங்களில் கிடைக்காத நீதியை, முரசு கொட்டும் சமூக எதிர்வினைகள் தான் சிற்றிதழ் கட்டுரைகளும், நீங்கள் சொல்லும் இந்திய இறையாண்மை எதிர்ப்பும்.

தலித்தியக் குரல்களும், அவர்களுக்கான மறுக்கப்பட்ட நீதியையும் உங்களுக்குப் பட்டியல் போட்டுத் தர வேண்டுமென்றால், தொடர்ந்து இதுபோன்ற பல கட்டுரைகளை நான் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும், இருப்பினும், திண்ணியத்தில், மலம் தின்ன வைக்கப்பட்ட ஆதிக்க சாதி வெறியையும், இந்து (இந்திய) தேச நீதி அரசர்களால் பணத் தகராறாக புரிந்து கொள்ளப்படுகிற  மன விகாரங்களில் இன்னுமும் வாழும் சாதீய வெறியை, வழங்கப்பட்ட நீதியின் தீராத வேதனைகளையும் தான் சிற்றிதழ்கள் உரக்கக் கூவுகின்றன.கயர்லாஞ்சிகளின் கொடுமைகளை, உத்தபுரங்களின் ஈனச் சுவர்களை, ஒரிஸ்ஸாவின் மரண ஓலங்களை, குஜராத்தின் இந்துத்துவா முகங்களின் கொடூரங்களை எழுத வக்கற்று, நீர்த்துப் போன வெகுமக்கள் ஊடக எழுத்தாளர்களை அவர்களின் கையாலாகாத் தனங்களைத் தான் நீங்கள் சுட்டிக் காட்டும் சிற்றிதழ்கள் செவ்வனே நிரப்புகின்றன. அவற்றை நீங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக நீங்கள் நினைத்தால் அல்லது புரிந்து கொண்டால், உங்கள் புரிதலின் ஆழம் குறித்து நான் கவலை கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அருந்ததிராய் ஒரு குருவி மண்டைக்காரரா?

ஒரு எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட உங்கள் சக துறை சார்ந்தவரின், கருத்துரைகளுக்கான உங்கள் தெளிவான விளக்கங்களைக் கொடுப்பதை விடுத்து அவரது மண்டை குருவியைப் போன்றதா அல்லது கண் மீனைப் போன்றதா என்கிற ஆய்வுகள் ஒரு முதிர்வு பெற்ற எழுத்தாளருக்கான அடையாளங்கள் என்று பொருள் கொள்வது மிகக் கடினம். எனவே அருந்ததி ராய் மீதான உங்கள் குற்றச் சாட்டுகள் அனைத்தும் அவரைப் போல நம்மால் புகழடைய முடியவில்லையே என்கிற உங்கள் இயலாமையாகக் கொள்ளலாம். உங்களால் இயலும் என்று நம்புங்கள், அதற்கான நகர்வுகளை நோக்கி உங்கள் எழுத்தை எடுத்துச் செல்லுங்கள், உங்களைத் தவிர்க்க இயலாது என்கிற நிலையை உங்கள் ஆனித் தரமான எழுத்துக்களால் உறுதி செய்து இந்தியாவின் மிகப் பெரும் அச்சு ஊடகங்கள் என்று நீங்கள் கருதுகின்ற

“இந்தியா டுடே” இல் உங்கள் எதிர் வினையை பதியுங்கள். வாழ்த்துக்கள்.

இஸ்லாம் ஒரு தேசியக் கற்ப்பிதமா?

இந்துமதம் என்பது எப்படி ஒரு தேசியக் கற்ப்பிதமோ அதைப் போலவே இஸ்லாமிய வழியும் ஒரு தேசியக் கற்ப்பிதம், இன்று இந்துத்துவா வெறியர்களின்  முகங்களான ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்க்தல், பாரதீய ஜனதா போன்றவை என்ன வழியை இந்துமதக் கூட்டத்திற்குக் கற்றுக் கொடுக்கிறதோ அதையே தான் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் எதிர்வினை செய்கின்றன. உலகெங்கும் நடக்கும் தீவிரவாதங்கள் வெவ்வேறு அடக்குமுறைகளின் வடிவங்களாகவே இருக்கிறது அல்லது கருத்தியல் சார்ந்த நெருக்கடிக்கு ஆளான மக்கள் குழுவின் ஒரு குறிப்பிட்ட செயலுக்கான எதிர் வினையாகவே இருக்க முடியும்.

ஆதலால், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் தீவிரவாத நிகழ்வுகளுக்கும் நீங்கள் முடிச்சுப் போட நினைப்பது எவ்வளவு சரி என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை, அல்லது அதற்கான முழுமையான ஆய்வறிக்கைகளை நான் படிக்க வேண்டும், நீங்கள் அவ்வாறு படித்து, உலகெங்கும் நடக்கும் பல்வேறு நாடுகளின் தீவிரவாதமும், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதமும் ஒரே காரணத்துக்காக நடக்கிறது என்கிற முடிவுக்கு வந்திருந்தால் ஒரு வேலை உங்கள் கருத்து சரியானதாக இருப்பதற்கு, இருப்பதாக நம்புவதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. வெகு மக்களை நம்ப வைப்பதில் இந்திய பார்ப்பனீய ஊடகங்கள் கண்ட வெற்றியை ஒரு தமிழ் எழுத்தாளரையும் நம்ப வைத்து இப்போது அவரது சுய சிந்தனையை மழுங்கடித்து இருக்கின்றன என்கிற ஒரு செய்தி கொஞ்சம் கவலைக்குரியது.

காஷ்மீர் இஸ்லாமியத் தீவிரவாத விளைநிலமா?

காஷ்மீர் பற்றிய வரலாற்று உண்மைகளை அறிவதில், அதன் உள்ளீடாக இருக்கிற ஒரு உண்மையான இன எழுச்சியை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது உறுதியாக எனக்குப் புரிகிறது, 1846 ஆம் ஆண்டில் இருந்து குலாப் சிங் காலத்தில் துவங்கி ரன்பீர் சிங், பிரதாப் சிங் என்கிற கொடூர இந்துத்துவா முகங்களின் 1931 ஆம் ஆண்டு வரையிலான கொடும் அடக்குமுறைகள் மற்றும் படுகொலைகளின் எதிர்வினைகள் தான் இன்று வரை காஷ்மீர் மக்கள் சந்திக்கும் அவலம் என்பது காஷ்மீர் வரலாற்றைப் படிக்கும் யாருக்கும் மிக எளிதாகவே புலப்படும், உங்களுக்கு புலப்படுமா இல்லையா என்பது உங்கள் நடுவுநிலையின் மீதான நம்பகத்தன்மையின்  கேள்வி. அதனை நீங்கள் தான் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

இறுதியாக தேசத்தின் மீதான அன்பு செலுத்துபவர்கள் பாவிகளா?

இல்லை, நானும் உங்களோடு சேர்ந்து இந்த தேசத்தின் மீது அன்பு செலுத்துகிறேன், ஆனால், ஒரு சமத்துவமான சமூக வாழ்நிலையை நோக்கிய சிந்தனைகளோடு, பொருளாதார பகிர்வுகளோடு, அனைவருக்குமான கல்வி என்கிற உயரிய நோக்கோடு என் தேசத்தை நானும் நேசிக்கிறேன், அந்த தேசம், எம் இனமக்களை கொல்வதற்கு ஆயுதங்கள் கொடுக்காத வரை, என்மொழியை ஆலயங்களில் அவமதிக்கின்ற மணியாட்டிகளின் பின்னால் செல்லாத வரை என்னுடைய நேசத்தில் உங்கள் அளவிற்கு ஆழம் இருக்காது.

நானும் உங்களைப் போல இந்த தேசத்தை நேசிக்கும் காலம் வர வேண்டும் என்கிற ஆசைகளுடனும், கனவுகளுடனும்….

தோழமையுடன்

கை.அறிவழகன்
பெங்களூரில் இருந்து.
அன்புள்ள அறிவழகன்,

நான் எழுதியிருப்பதில் இருந்து நீங்கள் அதிகமாக ஒன்றும் வேறுபடவில்லை. ஒரு கோபத்தைத்தவிர என்றே எண்ணுகிறேன். நான் என் அரசியல் சமூகவியல் நம்பிக்கைகளில் மிதவாதி என்று சொல்லிக்கொள்ள என்றுமே தயங்கியதில்லை. கொந்தளிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த ஒரு சமூக மாற்றமும் சீரான நீண்டகால கருத்தியல் செயல்பாடுகள் மூலம் மட்டுமே நிகழ முடியும் என்றும் அதுவே நிரந்தரமானது என்றும் நம்புகிறவன். எப்போதும் எதிலும் சமரசத்துக்கான ஒரு வாய்ப்பு இருக்கும் என்றும் மோதல் அழிவையே உருவாக்குமென்று உலகவரலாற்றை பலவருடங்கள் அமர்ந்து கற்று தெளிந்தவன். அறிவுஜீவிகள் பொறுப்பில்லாமல் உருவாக்கும் எதிர்மறை வேகங்கள் நீண்டகால அளவில் அழிவுகளை மட்டுமே உருவாக்கும் என்பதற்கு எனக்கு மீண்டும் மீண்டும் உதாரணங்கள் உள்ளன.

நீங்கள் குறிப்பிடும் ஒடுக்குமுறைகள், சமூக அநீதிகள் உங்கள் அளவுக்கே எனக்கும் மனக்கொந்தளிப்பை உருவாக்குகின்றன என்பதை மட்டுமே என்னால் ஆத்மார்த்தமாகச் சொல்ல முடியும். அத்தகைய அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கவும் போராடவும் கூடியவனாகவே இருக்கிறேன். ஒரு போதும் தனிவாழ்வில் சாதி மத அடிப்படைகளுக்குள் நான் சிக்கியதில்லை.

நண்பரே,  ஒடுக்கப்பட்டோர் ஒருங்குதிரண்டு அரசியல் சக்தியாக மாறி அதிகாரத்தை அடைவதற்கான வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கும் ஒன்றாகவே இந்த ஜனநாயகம் இன்றும் உள்ளது என்பதை மாயாவதியை மட்டும் வைத்தாவது நீங்கள் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். நம்மைச்சுற்றியிருக்கும் எந்த தேசத்திலும் இன்று இத்தகைய எளிய வாய்ப்புகூட இல்லை என்பதை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

இந்நிலையில் பிரச்சினைகளின் உண்மைநிலையை ஆராயவும் அதன் தீர்வுகளை நோக்கிச் செல்லவும் தேவையான சமநிலை கொண்ட ஆய்வு நோக்குக்குப் பதிலாக மக்களிடையே அவநம்பிக்கைகளை தூண்டிவிடவும் வன்முறைகளுக்கு தூபம் போடவும் கூடிய விதத்திலேயே நம் அறிவுஜீவிகள் எழுதுகிறார்கள். வரலாற்று நோக்கு கொண்ட எவருமே ஒரு மக்கள் திரளின் துயரங்களுக்குக் காரணம் இன்னொரு மக்கள் திரளே என்ற எண்ணத்தை விதைக்க மாட்டார்கள். அத்தகைய எண்ணங்கள் பேருருவம் கொண்டு இன்று ஆப்ரிக்கா போன்ற மூன்றாமுலக நாடுகளை உதிரத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன.

அத்தகைய முரண்பாடுகளை நம் நாட்டில் உருவாக்குவதற்கான சர்வதேசச் சதியின் ஒருபகுதியாக இவர்கள் கூலிபெற்று எழுதுகிறார்கள் என்பது என் உறுதியான எண்ணம். என்னிடம் நம் முற்போக்கு அறிவுஜீவிகள் சென்ற 10 வருடங்களில் எந்தெந்த ·பாசிச, இனவெறி, மதவெறி அமைப்புகளின் விருந்தினர்களாகச் சென்று வந்தார்கள், எங்கெங்கே நிதிவசதி பெற்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. தொகுத்து எழுதும்  எண்ணம் உண்டு.

சிற்றிதழ்கள் சமூக அநீதிகளை தோலுரிக்கட்டும். போர்முரசுகளைக் கொட்டட்டும். ஆனால் ஒன்றுமட்டும் அவர்கள் உணரவேண்டும், இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் பிறரை ஒழித்துக்கட்ட சதா நேரமும் சதிசெய்துகொண்டிருக்கும் கொடூரக் கொலையாளிகள் அல்ல. மதக்கலவரம் வந்ததுமே மண்ணெண்ணை டப்பாவுடன் தெருவில் இறங்கும் மிருகங்களும் அல்ல. எளிய லௌகீக வாழ்க்கைக்காக ஒவ்வொருநாளும் வியர்வை சிந்துபவர்கள். அவர்களுக்கு மரபு உருவாக்கிக் கொடுத்த நல்லதும் தீயதுமான அனைத்திலும் மூழ்கி வாழ்பவர்கள். அவர்கள் மனசாட்சி உள்ளவர்கள்தான். சகமனிதர்களை விரும்பக்கூடியவர்கள்தான். தியாகமும் பெருந்தன்மையும் கொண்டவர்கள்தான். அவர்களை இழிவுசெய்யாதீர்கள். அவர்களை பிறரது எதிரியாக ஒவ்விரு முறையும் சித்தரிக்காதீர்கள், அவ்வளவுதான்

ஆம்,சிக்கலான வரலாற்று ,சமூகப்பின்புலம் கொண்ட இந்த நாட்டின் சடங்குகளில் ஆசாரங்களில் வாழ்க்கைமுறைகளில் சமூக வைப்புகளில் எத்தனையோ அநீதிகள் உள்ளன. அவை தொடர்ச்சியான கருத்தியல் போராட்டங்கள் மூலம் மாறி வருகின்றன. இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. சக மனிதர் மேல் வெறுப்பில்லாமல் அதைச் செய்ய முடியும். இந்த மண்ணில் நாம் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும்.  ஒருவரை ஒருவர் கொன்று குவித்து எவரும் விடுதலையை அடையப்போவதில்லை.

இந்த தேசம் ஒரு புனித கற்பனை என்று நான் எண்ணவில்லை. இந்த தேசத்தை இந்து தேசிய கற்பிதமாகவும் நான் எண்ணவில்லை. இந்த தேசியத்துக்கான மூலங்களை தொன்மையான பெருமிதங்களில் தேடவும் இல்லை. மாறாக சென்ற  பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கே மக்கள்  ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்ந்ததன் மூலம் இயல்பாக இங்கே ஒரு தேச அமைப்பு உருவாகியிருக்கிறது. தமிழர் பெருங்கூட்டம் இல்லாத இந்தியப்பகுதி இல்லை. எந்த இந்திய நிலத்திலும் பலமொழி பல இன பல மத மக்கள் கலந்துதான் வாழ்கிறார்கள். இந்தப்பரவல் காரணமாக இயல்பாக உருவான ஒரு தேசியம் இது. பேதங்களை பெருக்கி இந்த தேசத்தை உடைத்தால் ஆப்ரிக்கா இன்று காணும் குருதிக்களத்தை நாளை நம் நாடும் காணும். அதற்காகவே காத்திருக்கின்றன ஆயுதம் விற்கும் நாடுகள்.

இந்திய தேசியம் இன்று ஒரு நவீன நிலம் சார் தேசியமாகவே முன்வைக்கபப்டுகிறது. காந்தியும் நேருவும் அம்பேத்கரும் உருவாக்கியளித்த இந்த நவீன தேசிய உருவகமே நமது பெரும் வலிமை. இதை இழந்தால் நாம் அழிவோம். இதை இந்து தேசியம் என்று முத்திரைகுத்தி இந்த தேசியத்துக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மொழிவழி , மதவழி தேசியங்கள்தான் முழுக்கமுழுக்க ·பாசிஸத்தில் வேரூன்றியவை. தொல்பழங்காலப் பெருமையில் ஊறியவை. சமீபத்தில் அருந்ததியர் பற்றிய ஒரு வினாவுக்கு தமிழ்த் தேசியவாதி ஒருவர் திட்டவட்டமாக பதில் சொன்னார், அவர்களுக்கு தமிழ் தேசியத்தில் இடமில்லை, அவர்கள் தமிழ்தேசியத்தின் அகதிகள்தான் என. இங்குள்ள 40 சதவீத தெலுங்கு மக்கள் துரத்தப்படவேண்டும் என. இந்த ·பாசிசத்த்தானே இந்திய தேசியம் என்ற நவீன உருவகத்துக்கு மாற்றாக நம் அறிவுஜீவிகளும் சிற்றிதழ்களும் முன்வைத்து வருகின்றன.

இந்த மண்ணில் சமூக மாற்றம் நிகழவேண்டுமானால், இந்த மண்ணில் பொருளியல் வளார்ச்சி சற்றேனும் நிகழ்ந்து இங்குள்ள கோடானுகோடி மக்கள் பட்டினியை உதற வேண்டுமானால் இது தன் முரண்பாடுகளை களைந்து கொண்டே ஆக வேண்டும். ஒரு சமூகமாக ஒருங்கிணைந்து முயன்றாக வேண்டும். அதற்கான வாய்ப்புகள் தேடி வரும் வேளை இது. அந்த வளர்ச்சி நிகழ்ந்துகொண்டும் இருக்கிறதென இந்நாடெங்கும் பயணம் செய்யும் என்னால் சொல்ல முடியும். இந்நிலையில் முரண்பாடுகளை பெருக்கவும் மோதல்களை வளர்க்கவும் செய்யப்படும் பொறுப்பில்லாத முயற்சிகள் என்னை கொதிக்கச் செய்கின்றன.

உரிமைகளுக்காக போராடுவதும் அதிகாரத்துக்காக திரள்வதும் இந்த தேசத்தை அழித்து, முந்நூறு வருட பழமை கொண்ட ·பாசிச மொழிவெறி மதவெறி தேசியங்களுக்கு உதவுவதாக  அமைய வேண்டிய அவசியம் இல்லை. கயர்லாஞ்சி அல்லது திண்ணியம் என்றீர்கள்.  அந்த கொடுமைகளுக்கு எதிராக ஒரு மாபெரும் தேசியப் பெரும் சக்தியாக திரள்வதில் இருந்து உங்களை தடுப்பது எது? உங்களை விட ஒடுக்கப்பட்டிருக்கும் அருந்ததியரை அன்னியர் என்று வெளியே தள்ள உங்களுக்கே கற்பிக்கும் நசிவுவாத ·பாஸிச தேசிய உருவகம் எது? சிந்தியுங்கள் நண்பரே.

காஷ்மீரின் வரலாறு எனக்கும் தெரியும். நான் சொல்வதை நிரூபிக்கும் தகவலையே நீங்களும் சொல்கிறீர்கள். மதவெறியின் அடிப்படையில் தங்களை ஒரு தேசியமாக எண்ணும் காஷ்மீரி முஸ்லீம்களுக்கு அங்கே இருந்த மன்னராட்சி ஒரு கா·பிரின் கொடுங்கோல் ஆட்சியாக படுகிறது. இஸ்லாமிய விடுதலைக் கனவை அவர்கள் அந்தப் புள்ளியில் இருந்தே தொடங்குகிறார்கள்.  அதேபோல பார்த்தால், இந்தியாவைவே இஸ்லாமியர் பலநூறு வருடம் ஆண்டிருக்கிறார்கள். படையெடுப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். வரலாற்றுச் சின்னங்களையும் வழிபாட்டு இடங்களையும் அழித்திருக்கிறார்கள். இந்து சாம்ராஜ்யக் கனவு கொண்ட ஒரு இந்துமதவாதி  இந்துகள் இந்தியாவில் 900 வருடங்களாக ஒடுக்கப்பட்டிருந்தார்கள் என்று சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா? நான் ஏற்க மாட்டேன். அது வரலாற்றின் சென்ற பக்கம். அதிலிருந்து  இன்றைய இந்தியாவை உருவாக்குவது ·பாஸிசம். இன்றைய இந்தியா இன்றைய தேவையின் அடிப்படையில் மட்டுமே உருவாகமுடியும். அப்படி உருவான ஒன்று இது.

இந்தியாவில் உள்ள எல்லா நிலப்பகுதிகளும் மன்னர்களால்தான் ஆளப்பட்டிருந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒடுக்குமுறையாளர்களே. அவர்களில் நவாபுகள் பற்பலர். சுதந்திர இந்தியா அந்த காலகட்டத்தில் இருந்து மீண்டுதான் இன்றைய வளார்ச்சியை அடைந்திருக்கிறது. நவாபுகள் எங்களை ஒடுக்கினார்கள் அதனால் எங்களுக்கு இந்து தேசம் வேண்டும் என்று அவத் சம்ஸ்தான மக்கள் சொன்னால் நான் அதை பைத்தியக்காரத்தனம் என்பேன்.

காஷ்மீர் மக்கள் அவர்களே தெளிவாக மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள், அவர்கள் தேடுவது ஒரு இஸ்லாமிய அரசை, ஒரு தாலிபானிய அரசை என்று. தமிழ்க இஸ்லாமிய இதழ்கள் ஒவ்வொன்றும் அதை மீண்டும் மீண்டும் வழிமொழிகின்றன. நம் சிற்றிதழ்கள் மட்டும் ஏன் அதை ஒரு ஜனநாயக விடுதலைபோராட்டம் என்று பிடிவாதமாக விளக்க முனைகிறார்கள்?அதை மட்டுமே எளிய இந்தியக் குடிமகனாக நான் கேட்கிறேன்.

தலித்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொல்லி இங்குள்ள எளிய இஸ்லாமிய இளைஞனின் நெஞ்சில் இந்த நாடு மீதும் இங்குள்ள பெரும்பான்மை மக்கள் மீதும் கடும் வெறுப்பை உருவாக்குவதா சிற்றிதழ் அறம்? அதன்மூலம் இங்கே சமூக வன்முறையை உருவாக்கி இங்குள்ள குறைந்த அளவு தொழில் வளர்ச்சியைக்கூட காவு கொடுப்பதா சிற்றிதழ்ச் சிந்தனை? பிகாரில் கயர்லாஞ்சியில் பசுவை உரித்த தலித்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று சொல்லி தமிழ்தேசியம் பேசி இங்கே பசுவைத்தின்னும் அருந்ததியரை அகதிகளாக துரத்த வேண்டும் என்று வாதிடுவதா சிற்றிதழ் அறம்? புரியவேயில்லை நண்பரே.

நான் காஷ்மீர் மக்களுக்காகவும் ஆழமாக வருந்துகிறேன். மதவெறி ஏற்றப்பட்ட எளிய மக்கள் அவர்கள் எந்த திசை நோக்கிச் செலுத்தபப்டுகிறார்கள் என்றே அறிவதில்லை. உதிரத்தில் மிதித்து நடந்து அறிவு ஜீவிகள் மறுபக்கம் சென்று விடுவார்கள். கீழே உள்ள மக்கள்தான் காலந்தோறும் அழிவார்கள். கா·பிரின் கீழ் வாழமுடியாது, இந்து தேசம் தங்களை அழிக்கும் என்று சொல்லபப்ட்டதை நம்பி இஸ்லாமிய தேசிய வெறியுடன் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த பிகாரி முஸ்லீம்கள் இன்றும் அங்கே ரத்தம் சிந்துகிறார்கள். ஏதாவது பாகிஸ்தானி நாளிதழை எடுத்து புரட்டிப்பாருங்கள்.

இந்த தேசம் இங்குள்ள ‘உங்கள் இன’ மக்களுக்கு எதிராக ஆயுதம் அளிக்கிறதா? எப்படி உங்கள் மனதில் அந்த சித்திரம் உருவானது? எவரால்? எந்த அடிப்படையில்? அந்தரங்கமாக ஒருகணம் சிந்தனை செய்து பாருங்கள், உங்களுக்கே உண்மை புரியும். அதன் பிறகு உங்கள் நடுநிலைமையும் நியாய உணர்வும் அனுமதித்தால் அதை வெளியே சொல்லுங்கள்.

போராடும் அனைவருக்கும் வாய்ப்புகளை அளிக்கிறது இந்த நாடு. பிகாரில் மாயாவதியின் வெற்றி ஓர் உதாரணம். இந்தநாடு மிகமிகச் சிக்கலானது. எண்ணற்ற சாதிகளும் உபசாதிகளும் கொண்டது. இதன் இயங்கியலில் தெரிந்தும் தெரியாமலும் பலநூறு சக்திகள் செயல்படுகின்றன. ஒவ்வொன்றும் இன்று விழித்தெழுந்து தங்கள் பங்குக்காக குரலெழுப்புகின்றன. அந்த மோதலின் இயங்கியல்தான் இப்போது நிகழ்வது. போராட்டத்தின் நீதிகளும் அநீதிகளும் உண்டு. ஆனாலும் அந்த போராட்டம் நிகழ்வதே வளர்ச்சியின் அடையாளம்தான்.

அந்த தேவை பலவகையான கருவிகளைக் கண்டடைகிறது. சிறந்த உதாரணம் ஆந்திரத்தில் சிரஞ்சீவி. ஆந்திரத்தில் காப்பு சாதியும் தலித் சாதியும் அரசியலதிகாரம் இல்லாது விடபப்ட்டிருந்தன. அவை ஒன்றாக திரண்டால் மட்டுமே அதிகாரத்தைக் கோரும் எண்ணிக்கை பலம் வரும். அது எளிதாக இல்லை. ஆனால் இப்போது படங்களில் தலித்தாக நடித்த ஒரு காப்பு அரசியலுக்கு வரும்போது சட்டென்று அந்த இணைவு சாத்தியமாகிறது.  அதை ஆந்திரத்தில் கண்கூடாக காண முடிகிறது. தவறோ சரியோ இப்படித்தான் நண்பரே அதிகாரக் கையகப்படுத்தல் நிகழ்கிறது. உங்கள் கொள்கை முழக்கங்களின் அடிபப்டையில் அல்ல.

இந்த ஒட்டுமொத்த உரிமைப் போராட்டமும் இந்த ஜனநாயக அமைப்பு அளிக்கும் முடிவிலா சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்படலாம். இந்த போராட்டம் வன்முறை இன்றி நிகழலாம். வெறுப்பில்லாது நிகழலாம். அதை நிகழ்த்தும் விதமாக எழுதுவதே எழுத்தாளனின் கடமையாக இருக்கமுடியும். தன்னை  புரட்சிப்புயலாக காட்டிக்கொள்வதற்காக வெறுப்பை உமிழும் அரைவேக்காட்டுத்தனம் அல்ல எழுத்தாளனின் கடமை.

வரலாற்றை நீங்கள் புரிந்துகொள்ளும் முறை தவறு. முதிர்ச்சி இல்லாதது, கோபதாபங்களால் மட்டுமே உருவானது என்று சொன்னால் கோபித்துக் கொள்ளமாட்டீர்களே. ‘மணியாட்டி’களின் சாதியத்தைக் காணும் உங்களுக்கு நமது ‘தமிழியர்’களின்  அதைவிட உக்கிரமான சாதிக்காழ்ப்பு கண்ணில் படவில்லை — உத்தப்புரத்துக்குப் பின்னரும் கூட.

நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்நாட்டின் மீது அன்புசெலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  சமத்துவத்துக்காக, தன்மானத்துக்காக, விடுதலைக்காக அந்த அன்பின் அடிப்படையில் ஒன்று திரண்டு முயல்வோம். அது எளிதாக, உடனடியாக இருக்காதென்றாலும் நம் குறிக்கோள் அதுவாக இருக்கட்டும். நம்மை எவரும் பிரிக்காமல் இருக்கட்டும். நூறாண்டுகால போராட்டத்தால் நாம் அடைந்தவற்றை சண்டையிட்டு இழக்காமல் இருப்போம்.

ஜெ
 

முந்தைய கட்டுரைஎனது இந்தியா:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபௌத்த நூல்கள் மொழியாக்கம்