‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 72

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 1

தெற்குப் பாஞ்சாலத்தின் தலைநகரான காம்பில்யத்தின் தெற்குவாயிலில் இருந்து கிளம்பிய ரதசாலை அரசகுலத்தின் மயானத்தைக் கடந்து வெவ்வேறு குலங்களுக்குரிய பன்னிரு பெருமயானங்களுக்கு அப்பால் சிறுபாதையாக மாறி கங்கையில் இறங்கிய சிற்றாறு ஒன்றின் நீர் ஊறி சதுப்பாகி கோரைப்புல் மண்டிக்கிடந்த தாழ்நிலத்தை அடைந்ததும் மறைந்தது. காற்று அலையடித்துச் சென்றுகொண்டிருந்த பொன்னிறமான புல்பரப்புக்குள் சேற்றில் பாதிப்பங்கு புதைந்து சற்றே சரிந்து அமைந்திருந்த சிறிய கற்கோயில் விண்ணிலிருந்து விழுந்ததுபோல நின்றது. அதன் மேல் பறவைகளின் எச்சம் வெண்சுண்ணம்போல வழிந்து மூடியிருந்தது. மூடாத சிறிய வாயிலுக்கு அப்பால் இருளுக்குள் அமைந்திருந்தாள் இருள் ஆளும் இறைவி.

தெற்குக் கோட்டைவாயில் கனத்த அடிமரங்களால் ஆனது. அது நெடுங்காலமாக திறக்கப்படாமல் மண்ணில் கனத்துப் புதைந்து கொடிகள் படர்ந்தேறி இலைவிரித்து ஆட மேலே கோட்டை முகட்டின் காவல்மாடம் கைவிடப்பட்டு உடைந்த மரக்கூரையில் சருகுகள் பரவியிருக்க எழுந்து நின்றிருந்தது. ஓர் உடல் மட்டும் நுழையும் அளவே இருந்த திட்டிவாயிலை உள்ளிருந்து கனத்த குட ஓசையுடன் திறந்து நரைகுழல் கற்றைகளை தோளில் பரப்பி மான்தோலாடை உடுத்து காதுகளில் சிறிய வெள்ளிக்குண்டலங்களும் கையில் கங்கணமும் அணிந்த கணியர் குலத்து முதுபூசகர் ஒருவர் சாலைக்கு வந்தார். கதவுக்கு அப்பால் பொறுமையிழந்த காட்டுவிலங்கொன்றின் உறுமலென முழவின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

அவருக்குப் பின்னால் கையில் உருவிய உடைவாளுடன் இடையில் மரவுரி மட்டும் அணிந்து நீள்குழலை இடைவரை விரித்திருந்த இளம்படைவீரன் ஒருவன் குனிந்து வெளிவந்து நின்றான். சிவமூலிப்புகையால் சிவந்த விழிகளும் எச்சில் ஊறிச் சிவந்த உதடுகளும் சற்று வீங்கிய முகமும் கொண்டிருந்த அவன் உடலில் முழவின் ஒவ்வொரு அதிர்வொலியும் அம்புகளைப்போல சென்று பதிவதை கண்களாலேயே காணமுடிந்தது. அவன் கழுத்தில் வெட்டுண்டவை போல தசைகள் வலிப்பு கொண்டு அதிர்ந்தன. கால்கள் மண்ணை விட்டு எழத்தவிக்க நிலையழிந்து ஆடிக்கொண்டிருந்தான்.

தொடர்ந்து முழவும் பறையும் துடியும் ஏந்திய மூன்று சூதர்களும் அவர்களுக்குப்பின்னால் பூசைத்தாலங்கள், மதுக்குடங்கள் ஏந்திய மூன்று இளம்சூதர்களும் வந்தனர். நன்கு வளைந்த முதுகும் முதுமையால் செதில்களாகி மின்னிய தோலுக்குள் எலும்புகள் உந்தி அசையும் மெலிந்த உடலும் கொண்ட முதுகணியர் சற்று வளைந்து சுள்ளிபோலாகிவிட்டிருந்த கால்களை விரைவாகத் தூக்கி வைத்து விரல்கள் வளைந்து பின்னியிருந்த கைகளை வீசி கண்களைச் சுருக்கி பாதையை மட்டும் நோக்கியபடி நடந்தார். அவருக்குப்பின்னால் பிறர் சென்றனர். முழவோசை அவர்களைத் தூக்கிச் செல்வதுபோல் தோன்றியது. தொலைவிலிருந்து நோக்கியபோது முழவோசையே அவர்களின் காலடியென எண்ணச்செய்தது.

முழவின் ஒலி அமைதி நிறைந்து கிடந்த மயானங்களுக்குள் நெடுந்தொலைவுக்குச் சென்று பெரிய நடுகற்களில் பட்டு அதிர்ந்தது. மரங்களின் நிழல்களும் இலைநுனிகளும்கூட அதனால் அதிர்வதுபோல் தோன்றியது. புதர்களுக்குள் ஓய்ந்து துயின்ற நரிகள் வெருண்டு எழுந்து செவிகளை முன்கோட்டி நாசி நீட்டி மெல்ல காலெடுத்து வைத்து வெளிவந்து நோக்கின. இளம்நரி ஒன்று எழுந்து செவிகளை விடைத்து தலையைத் தூக்கி கூர்ந்து நோக்கி மெல்ல உறுமியது. அதன் அன்னை “ஜிஹ்வா, உள்ளே வா” என்று பின்னாலிருந்து அழைத்தது.

வைக்கோல் நிறமும் கூழாங்கல்போன்ற விழிகளும் கொண்டிருந்த ஜிஹ்வன் “உணவு! உணவு வருகிறது!” என்றான். “இல்லை, அவர்கள் வேறு ஏதோ செய்யப்போகிறார்கள்” என்று அன்னை சொன்னது. “என் வயிற்றில் வாழும் தேவி சொல்கிறாள். அது உணவு” என்றான் ஜிஹ்வன். புதருக்குள் இருந்து முகம் மட்டும் நீட்டிய கிழட்டு நரியான காகுகன் “நான் இதுவரை இப்படி எவரும் சென்றதை கண்டதில்லை. உணவாகக்கூடிய எதுவும் அவர்களிடமில்லை” என்றான். பின்னர் வாயைச் சுருக்கி தென்னைவேர்நுனிகள் போல பற்கள் தெரியச் சிரித்து ”ஒருவேளை அவர்கள் நரிகளை வேட்டையாடக்கூட வந்திருக்கலாம்” என்றான்.

ஜிஹ்வன் வாலை ஒருமுறை குலைத்து வீசிவிட்டு “என்னால் அவர்களைப் பார்க்காமலிருக்க முடியாது” என்றபடி புதர்களுக்குள் பாய்ந்து மறைந்தான். அன்னைநரிக்குப்பின்னால் நின்றிருந்த இன்னொரு சிறிய நரியான பூமிகன் “மூத்தவரே, நானும் வருகிறேன்” என்று சொல்லி அவன் பின்னால் ஓடினான். அன்னை பின்னால் செல்வதா வேண்டாமா என்று தவித்து முதியநரியை நோக்க “செல், உனக்கு வேறென்ன வழி?” என்றது. அன்னை முன்னங்கால்களால் மண்ணைக் கீறியது. “அங்கே உணவு வருமென்றால் என்னை நோக்கி கூவு… வந்துவிடுகிறேன். நான் வயிறு நிறைய உண்டு நீண்டநாள் ஆகிறது. என் பற்களும் தேய்ந்துவிட்டன” என்றது முதியநரி.

அன்னை புதருக்குள் சென்று இலைகளில் இருந்த தன் மைந்தரின் வாசனையை முகர்ந்தபடி ஓசையில்லாமல் ஊடுருவிச் சென்றது. அப்பால் புதருக்குள் மைந்தரின் வாலசைவு தெரிந்ததும் நின்று சுற்றுமுற்றும் நோக்கியபின் மெல்ல அணுகி அவர்களுக்குப்பின்னால் நின்றுகொண்டது. அவர்கள் கோரைப்புல் விரிவில் மிதந்து அலைபாய்வது போல் சிற்றாலயத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்களை நோக்கிக் கொண்டிருந்தனர். பூமிகன் நாக்கை நன்றாக நீட்டி தலையை தாழ்த்தி மெல்ல முனகினான். ஜிஹ்வன் திரும்பாமலேயே தன் தோள்முடிகளைச் சிலிர்த்து அவனை எச்சரித்தான்.

முதுகணியரும் சூதர்களும் புற்பரப்புக்கு நடுவே இருந்த சிறிய பாறை ஒன்றின்மேல் ஏறி அமர்ந்துகொண்டனர். கோரைப்புல்வெளியில் அவர்கள் வந்த பாதை வகிடு போல நீண்டுகிடக்க காலடிகள் அழுந்திய சேற்றுப் பள்ளத்தில் நீர் ஊறி நிறையத் தொடங்கியது. அவர்களின் உடல்பட்டு கலைந்த சிறிய பூச்சிகள் எழுந்து அந்திச்செம்மை பரவிய காற்றில் புகைச்சுருள் போல சுழன்று பறந்தன. முழவுகளை ஏந்தியவர்கள் வாய்க்குள் பூச்சிகள் நுழையாமலிருக்க மேலாடையால் முகத்தை மூடிக்கொண்டனர். வாளேந்தியவன் பாறைமேல் அமரப்போய் அப்படியே குப்புற விழுந்தான். முதுகணியர் அவனை திரும்பி நோக்கியதும் இருவர் அவனை புரட்டிப்போட்டு எழுப்ப முயன்றனர். அவர் அவன் கிடக்கட்டும் என்று கண்களால் சொன்னார்.

தீராவலி கொண்டவன் போல அவன் பாறைமேல் மெல்ல நெளிந்துகொண்டும் முனகிக்கொண்டும் கிடந்தான். முழவையும் பறையையும் துடியையும் வைத்துவிட்டு சூதர்கள் உடல்குவித்து அமர்ந்துகொண்டனர். தாலங்களை மடியில் வைத்தபடி பிறர் பின்னால் அமர்ந்தனர். முதுகணியரின் ஒடுங்கிய கரிய முகத்தில் தாடைக்குக் கீழே மட்டும் மெல்லிய வெண்தாடி புதர்ச்சிலந்தியின் வலைக்கூடுபோல பரவியிருந்தது. பரந்த மூக்கின் கீழே மீசையாக சில முடிகள் வெண்சுருள்களாக தெரிந்தன. கண்களைச் சுருக்கி அணைந்துவரும் சூரியனை நோக்கியபடி அவர் அமர்ந்திருந்தார்.

அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. சிறிதுநேரத்திலேயே சதுப்பைவிட்டு எழுந்து வந்த கொசுக்களின் படை அவர்களை சூழ்ந்துகொண்டது. அந்தியின் ஒளியில் கொசுக்கள் அனல்துளிகள் போல் சுழன்றன. காதருகே அவற்றின் ரீங்காரம் எழுந்துகொண்டே இருந்தது. சிலர் கைகளை வீசி அவற்றை துரத்தினர். சால்வைகளால் முகத்தையும் உடலையும் முழுமையாகவே மூடிக்கொண்டனர். கிழவரின் உடலெங்கும் கொசுக்களே சால்வைபோல போர்த்திமூடியிருந்தன. அவர் அவற்றை அறிந்ததாகவே தெரியவில்லை.

ஜிஹ்வன் திரும்பி பூமிகனை நோக்கியபின் பின்னங்காலில் அமர்ந்து கொண்டான். பூமிகனும் மேலும் அருகே சென்று பின்னங்காலில் அமர்ந்து தமையனை நக்க முயல உடலை அசைத்து வேண்டாம் என்றான் ஜிஹ்வன். அன்னை பின்னால் அமர்ந்துகொண்டு தன் முன்னங்கால் பாதத்தை தூக்கி நாநீட்டி நக்கியது. அவற்றைச் சுற்றி கொசுக்கள் அடர்ந்து சுழன்றன. அவற்றைக் கடந்து புதருக்குள் ஒரு கீரி சென்றது. பிடிக்கலாமா என்ற பார்வையை பூமிகன் ஜிஹ்வன் மேல் வீச வேண்டாம் என்று ஜிஹ்வன் காதை மட்டும் அசைத்தான். எதிரே பாறைமேல் அமர்ந்திருப்பவர்களை நோக்கியபடி அவையும் அமர்ந்திருந்தன. காட்டுக்குள்ளும் புல்வெளியிலும் எழுந்த ஒலிகளுக்கு அவற்றின் செவிகள் மட்டும் தன்னிச்சையாக எதிர்வினை அளித்துக்கொண்டிருந்தன.

ஜிஹ்வன் மூச்சிழுத்து மெல்லச் சிலிர்த்து இடதுகாதை மட்டும் நுனிமடித்து தலையை தாழ்த்தினான். உடனே பூமிகனும் அன்னையும் தரையோடு உடலை ஒட்டி படிந்துகொண்டனர். ஜிஹ்வன் திரும்பி மெல்ல காலடி எடுத்துவைத்து சற்று முன்னால் சென்று தூக்கிய முன்வலதுகாலுடன் அசையாமல் நின்று நோக்கி இருகாதுகளையும் பின்னால் மடித்து வாலை குலைத்தான். இரு நரிகளும் எழுந்து புதர்களுக்குள் தவழ்ந்து அதன் இரு பக்கங்களிலும் சென்று நின்றன. ஜிஹ்வன் தன் முன்னங்காலால் மண்ணை மெல்ல பிறாண்டி வண்டு முரள்வதுபோல ஒலியெழுப்பினான்.

அப்பால் தாழ்ந்து இலைகனத்து தரைதொட்ட கிளைகளுடன் நின்ற நெல்லிமரத்திற்கு அப்பால் ஒருவன் நின்றிருந்தான். கரிய உடலெங்கும் சாம்பல்பூசி புலித்தோலாடையை இடையில் அணிந்து, நெற்றியில் செந்நிறமான மூவிழி வரைந்து, சடைமுடிக்கற்றைகளை தோளில் பரப்பி கையில் கூர்முனை செதுக்கப்பட்ட நீள்கழியுடன் நின்று அந்த பூசகர்குழுவை நோக்கிக் கொண்டிருந்தான். அவன் இருவிழிகள் அவர்களை நோக்க நுதல்விழி அப்பால் அணைந்துகொண்டிருந்த சூரியனை நோக்கி வெறித்து அசைவிழந்திருந்தது. சடைமுடியில் பிசிறி நின்றிருந்த மயிர்களில் அந்திச்செம்மை பட்டு அவை ஒளியுடன் தெரிந்தன. ஜிஹ்வன் கால்களை பின்னால் எடுத்துவைத்து “அவன் நம்மவன்” என்றான்.

புதர்களுக்குள் கூடுகாத்தான் குருவி எழுந்து அவர்களை திசைதிருப்பி அழைத்துச்செல்வதற்காக தலைக்குமேல் சிறகடித்து அம்புபட்டதுபோலச் சென்று விழுந்து எழுந்து மீண்டும் சிறகடித்துக்கூவியது. அவர்கள் அசையாமலிருக்கக் கண்டு விலகிச்சென்று தன் பேடையிடம் ஏதோ சொன்னது. கோரையடர்வுக்குள் ஓடிய கீரி ஒன்றின் அசைவு மேலே தெரிந்தது. வடக்கிலிருந்து வந்த காற்று புல்லில் அலையடித்துக்கொண்டு சென்று சதுப்பின் நடுவே செந்நிற ஒளியாக ஊறிவழிந்து சென்றுகொண்டிருந்த ஆற்றுநீரைத் தொட்டு மறுபக்கம் சென்று தொலைவில் இருள்குவியல்களாகத் தெரிந்த காட்டின் மரக்கிளைகளை அசையச்செய்தது.

கோரைவெளிக்குமேல் அழுகியசேற்றும்ணம் கொண்ட நீராவி நிறைந்திருந்தது. புதர்களின் உள்ளேயும் அப்பால் சேற்றுக்கதுப்பிலும் நீர்விளிம்புகளிலும் அமர்ந்திருந்த கொக்குகள் ஒவ்வொன்றாக சிறகடித்து எழுந்து காற்றிலேறி காடுநோக்கி விலகிச் சென்றன. சிற்றாலயத்தின் மேலே அமர்ந்து ஓயாமல் கரைந்துகொண்டிருந்த காகங்களில் ஒன்று எழுந்து சென்றதும் பிற காகங்களும் கூச்சலிட்டபடி எழுந்து பின்தொடர்ந்தன. மைனாக்கள் காற்றில் அலையும் சருகுகள் போல சிறகசைத்து சுழன்று சுழன்று சென்று மறைந்தன. சதுப்பில் பெரிய மேழித்தலைகள் போலத் தெரிந்த சாம்பல்நிறமான நாரைகளும் விறகுபோன்ற அலகுகளை சதுப்பில் தாழ்த்தித் தாழ்த்தி எடுத்துக்கொண்டிருந்த கூழைக்கடாக்களும் மட்டும் எஞ்சின. மேலே மெல்லிய ஒளி நிறைந்த வானில் மிக உயரத்தில் பனங்குருவிகள் பாய்ந்துகொண்டிருந்தன.

பின்னர் நாரைகள் ஒவ்வொன்றாக பெருஞ்சிறகுகளை விரித்து காற்றில் மிதந்து ஏறி மறைந்தன. கூழைக்கடாக்களும் மறைந்தபின் கோரைப்பரப்பில் உயிரசைவு அகன்றது. சேற்றுக்கலங்கலில் செம்மை மறைந்து நீலநிற ஒளி எஞ்சியது. வானில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக விழிதிறந்து வந்தன. மிகத்தொலைவில் ஏதோ நரி ஊளையிட்டது. பூமிகன் காதுகளை அசைத்து மெல்லிய குரலில் “அவன் ஜூகு” என்றான். “நம் புல்வெளியில் நுழையவிருக்கிறான்.” ஜிஹ்வன் பேசாதே என்று முதுகுத்தோலை மட்டும் அசைத்து எச்சரித்தான்.

சதுப்புக்கு மறுபக்கம் காட்டில் இருந்து நிழல் போல ஒரு காட்டுஆடு எச்சரிக்கையுடன் நடந்துவருவதை காணமுடிந்தது. பூமிகன் “சுவையானது” என்று சொல்ல மெல்லிய முனகலால் ஜிஹ்வன் “பேசாதே” என்றான். மேலும் நாலைந்து காட்டு ஆடுகள் நடந்து சேற்றில் காலூன்றி வந்து நீர் அருகே குனிந்தன. அவை பேசிக்கொள்ளும் ஒலி கேட்டது. மேலும் காட்டு ஆடுகள் வந்தன. தொடர்ந்து பெரிய உடலைத் தூக்கி வைத்து காட்டுமாடு ஒன்று வந்தது. அதன் துணை காட்டின் விளிம்பிலேயே நின்றிருந்தது. பின்னர் அது வந்தபோது அதனுடன் குட்டி இருப்பது தெரிந்தது. தொடர்ந்து காட்டுமாடுகள் வந்துகொண்டே இருந்தன.

“ஆம், நாம் சென்றிருந்தால் அவை நம்மைக் கொன்றிருக்கும்” என்றான் பூமிகன். ஜிஹ்வன் ஒன்றும் சொல்லவில்லை. இருட்டு கனத்து காட்டுமாடுகளும் ஆடுகளும் மறைந்தன. அப்போது அவற்றின் ஒலிகள் மேலும் துல்லியமாக கேட்கத்தொடங்கின. பாறையில் அமர்ந்திருந்தவர்களை வானப்பின்னணியில் நிழலுருவாக காணமுடிந்தது. பாறையில் கிடந்தவன் எழுந்து ஏதோ குழறினான். சூதர்களில் ஒருவர் அவனுக்கு ஏதோ கொடுக்க அவன் அதை வாயிலிட்டு மென்றுகொண்டு தலையை தன் முழங்கால்களில் புதைத்து அமர்ந்துகொண்டான்.

காற்று முழுமையாக நிலைத்தபோது சேற்றின் வாசனை கனத்து வந்தது. நீராவி காதுகளை வெக்கைகொள்ளச்செய்தது. ஜிஹ்வன் காதுகளை மெல்ல மடித்துக்கொண்டே இருந்தான். திரும்பி நெல்லிமரத்துக்கு அப்பால் நின்றவனை நோக்கினான். அவன் அங்கேயே இன்னொரு மரமென நின்றிருந்தான். ஒரு கோரைப்புல்நுனிகூட அசையவில்லை. விண்மீன்கள் வானில் நிறைந்து உதிரப்போகின்றவை என அணுகி வந்தன. பூமிகன் மூக்கைத் தூக்கி அண்ணாந்து நோக்கி நாக்கால் வாயை நக்கிக்கொண்டு “சிறியவை” என்றான். அவன் அன்னை “பேசாதே…” என்றது.

மிக அப்பால் காற்று கிளைகளை அசைத்தபடி பெருகிவரும் ஒலி கேட்டது. மழை வருவதுபோல. கோரைவெளியில் காற்று நுழைந்தபோது பல்லாயிரம் பாம்புகள் இணைந்து சீறும் ஒலி எழுந்தது. காற்றுடன் வந்த சருகுகளும் இலைகளும் புழுதியும் அனைவரையும் மூடி மூழ்கடித்தன. காற்று ஒரே ஒருமுறை வானம் வாய்குவித்து ஊதியதுபோல வந்து முழுமையாகக் கடந்துசென்றது. ஆற்றுக்கு அப்பால் காடு ஓலமிடத்தொடங்கும்போது கோரைப்புல்வெளியில் ஓரிடத்தில் சிவந்த நெருப்பு தயங்கியபடி கோரையின் உடலில் பற்றிக்கொண்டு கீழிறங்குவதைக் காணமுடிந்தது. புல்பொசுங்கும் வாசம் எழுந்தது.

அன்னைநரி வாலைக் குலைத்தபடி எழுந்து பின்னால் செல்ல பூமிகன் ஓரிரு அடிகள் எடுத்துவைத்து கூடச்சென்றபின் ஜிஹ்வன் திரும்பவில்லை என்று கண்டு திரும்பிவந்து நின்று நோக்கினான். அந்த அசைவில் அப்பால் நெல்லிமரத்தடியில் நின்றவன் திரும்பி நோக்கி அக்கறையில்லாமல் மீண்டும் பூசகர்களை நோக்கினான். முதுகணியர் எழுந்து அந்த நெருப்பை நோக்கி இரு கைகளையும் விரித்தார். பின்னர் அதை நோக்கி வெறிகொண்டவர் போல ஓடினார். ஒரு சூதன் பறையை எடுத்து ஓங்கி அறைந்தான். சூழ்ந்திருந்த இருளில் அந்தக் கோலின் அடி விழுவதுபோலிருந்தது. பின்னர் துடிப்பான தாளத்துடன் பறை அதிரத் தொடங்கியது.

முதுகணியர் அந்த நெருப்பை அணுகி தன் இடைக்கச்சையில் இருந்த சிறிய நெய்ப்பந்தத்தில் நெருப்பை பற்றவைத்துக்கொண்டு திரும்பி வந்தார். அவருக்குப்பின்னால் புல்லில் பற்றிக்கொண்ட நெருப்பு புகையுடன் பரவி மெல்ல வலுவிழந்து கீழிறங்கத்தொடங்கியது. அப்பகுதியில் இருந்து கீரிகளும் பாம்புகளும் விலகிச்செல்வதன் அசைவுகளை கேட்க முடிந்தது.

முதுகணியர் சிற்றாலயத்தின் முன்னால் வந்து நின்றார். பறையேந்தியவன் ஆலயத்தின் இடப்பக்கம் சென்று நின்றான். முழவை முழக்கியபடி இன்னொரு சூதன் அருகே சென்று நின்று அடிக்கத் தொடங்கினான். நெடுந்தொலைவில் கோட்டைச்சுவரில் அவ்வொலி தனியாகக் கேட்டது, அங்கிருந்து எவரோ இசையுடன் வந்துகொண்டிருப்பதுபோல. பூமிகன் திரும்பி ஐயத்துடன் நோக்கிவிட்டு அன்னையை கேள்வியுடன் நோக்கி வாலைக் குலைத்து கடைவாயை நக்கிக்கொண்டான்.

முதுகணியர் தன் கையிலிருந்த சிறிய பந்தத்தைச் சுழற்றி தழல் எழச்செய்தபின் சிற்றாலயத்திற்குள் நுழைந்தார். உள்ளே சுவரில் சுதைபூசப்பட்டு அதில் ஆளுயரத்தில் வரையப்பட்டிருந்த உக்ரசண்டிகைதேவி வண்ண ஓவியத்தின் விழிகள் செவ்வொளி பட்டு உயிர்கொண்டது போல எழுந்து வந்தன. முதுகணியர் கைநீட்ட அவரது மாணவர்கள் பூசனைப்பொருட்களை கொண்டுசென்று அவர் அருகே வைத்தனர். தாலத்தில் இருந்து ஏழு சிறிய நெய்ப்பந்தங்களை எடுத்து பற்றவைத்து ஓவியத்தின் அருகே நட்டார். அவை மெல்ல துணிபொசுங்கும் ஒலியுடன் சுடரெழுந்து நெய்வாசனையுடன் இதழ்விரித்து ஒளிவிடத் தொடங்கின.

பந்தங்களின் ஒளி எழுந்தபோது செம்மை, மஞ்சள், வெண்மை நிறங்கள் கலந்து வரையப்பட்ட சண்டிகையின் தோற்றம் துலங்கி வந்தது. முழவும் பறையும் எழுப்பிய தாளத்துக்கு இசைய பந்தங்களின் தழல் ஆடுவதாகவும் அதற்கேற்ப தேவியின் ஓவியம் நெளிவதாகவும் வெளியே வணங்கி நின்ற சூதர்களுக்கு விழிமயக்கு ஏற்பட்டது. அவர்களின் உடல்களிலும் அந்தத் தாளம் அறியாமலேயே வெளிப்படத்தொடங்கியது.

சண்டிகை கிளை தழைத்த கனிமரம் போல இருபது கைகள் கொண்டிருந்தாள். வலப்பக்கக் கைகளில் சூலம், வாள், வேல், சக்கரம், பாசச்சுருள், கேடயம், கதை, உடுக்கு, வஜ்ரம் ஆகியவை இருந்தன. வலதுகீழ்க்கை அஞ்சல் முத்திரை காட்டியது. இடது கைகளில் நாகச்சுருள், கேடயம், மழு, துரட்டி, சக்ரபாசச்சுருள், மணி, சிம்மக்கொடி, உழலைத்தடி, ஆடி ஆகியவை இருக்க இடது கீழ்க்கரம் வரமருள் முத்திரை காட்டியது. விரிந்த பெருவிழிகளில் பதிக்கப்பட்ட செம்பளிங்குக் கற்கள் பந்த ஒளியில் அனலாக சுடர்ந்தன. வெறிநகையில் விரிந்த வாயின் இருபக்கங்களிலும் பன்றித்தந்தங்கள் வளைந்திருக்க நடுவே குருதியாலான அருவியென நீளநாக்கு கழுத்துவரை தொங்கிக்கிடந்தது.

செந்நிறமுலைக்குவைகள் நடுவே கருநிறப் பளிங்காலான முலைக்காம்புகளிலும் அனல்துளிகள் அசைந்தன. உந்திச்சுழியில் தாமரை வரையப்பட்டிருந்தது. விரித்த கால்களுக்கு நடுவே செந்நிறத் தழல் போல பிளந்தகன்ற அல்குல் வாயிலுக்குள் மும்மூர்த்திகளின் சிறிய உருவங்கள் வரையப்பட்டிருந்தன. இருபக்கமும் வளைந்து விரிந்திருந்த தொடைகளுக்குக் கீழே வலக்கால் மண்ணில் ஊன்றி மறைந்திருக்க இடக்கால் செந்நிறமான அடிப்பாதம் தெரிய தூக்கப்பட்டிருந்தது. பாதப்பரப்பில் மேலே சங்கும் கீழே சக்கரமும் நடுவே தாமரையும் இருந்தன.

தேவிக்கு முன்னால் தாலங்களை வைத்து அவற்றில் படையல்பொருட்களை பரப்பினார் முதுகணியர். பொரிக்குவைகள் மூன்று. மலர்க்குவைகள் மூன்று. மதுக்குடங்கள் மூன்று. நடுவே சங்கு, மணி, காசுகள் என மூன்று மங்கலக்குவைகள். தேவிமுன் அமர்ந்து விரைவான கைமுத்திரைகளுடன் மந்திரங்களை சொல்லத் தொடங்கினார். முழவும் பறையும் உச்சவிரைவு கொண்டு மானுடக்கைகளை விட்டு பறந்தெழுந்து இருளுக்குள் தங்களைத் தாங்களே நிகழ்த்திக்கொண்டிருந்தன. ஒரு கணத்தில் விரைந்தோடும் புரவி காற்றில்பறந்து எழுந்ததுபோல அவற்றுடன் வந்து இணைந்து அவ்விரைவிலிருந்து மேலே சென்றது துடி.

துடியோசை முந்தியதும் பறையும் முழவும் ஓய்ந்தன. துடி அதிர்ந்து அதிர்ந்து ஒருகட்டத்தில் அதை செவிகளால் கேட்கமுடியாதென்று தோன்றியது. அதன் சொற்களெல்லாம் இணைந்து ஒற்றைச் சொல்லாக ஆனதுபோல. அது ஓர் உறுமல் மட்டுமே என்பதுபோல. அதனுடன் இணைந்ததுபோல “ஏஏஏ!” என்ற பேரொலியுடன் பாறையில் படுத்திருந்த வீரன் தன் வாளைச் சுழற்றியபடி பாய்ந்தோடி வந்தான். அவன் விழிகள் வெறித்து முகம் தழலால் ஆனதுபோலிருந்தது. அலறலில் தொண்டைநரம்புகள் புடைத்து பின்னித் தெரிந்தன.

வாளைச்சுழற்றியபடி அவன் ஆடினான். உடலில் அனல்பற்றி எரிய துடித்துத் துள்ளுவதுபோல. கைகளும் கால்களும் உடலில் இருந்து பிய்ந்து தெறித்துவிடுமென்பதுபோல. கூந்தல் அலைகள் சுழன்று பறந்தது. இடையாடை அவிழ்ந்து விழுந்தது. உடுக்கின் தாளத்தின் மூன்று ஒலியடுக்குகளும் ஒரு வடமாக முறுகி முறுகி முறுகி கேட்பவர்களின் தலைநரம்புகளை முறுக்கி முறுக்கி முறுக்கிச் சென்று டிண்ண்ண்ண் என்ற ஒலியுடன் அறுந்து மென்சதைக் கதுப்பில் பாய்ந்து மறையும் அம்பு போல ஒலி அமைதியில் புதைந்து மறைந்த துடிப்பில் அங்கிருந்த அத்தனை உடல்களும் வில்நாண் உமிழ்ந்த அம்பு என துடித்து காற்றில் எழுந்தன.

அக்கணத்தில் அவன் இடக்கரம் அவன் மேல் கடுவஞ்சம் கொண்டது என எழுந்து அவன் குழலை முறுகப்பற்றி மேலிழுத்துத் தூக்க அவன் கழுத்து நீண்டு தசை தெறித்த அதே நேரம் வலக்கரம் சீறிச்சுழன்று வந்து குரல்வளையை வெட்டி முதுகெலும்பில் முட்டி சீவிச்சென்றது. வாள் பாய்ந்த கணமே இடக்கரத்தால் தலை மேலே தூக்கப்பட்டது. தலையிலிருந்து உடலுக்கு வந்த ஒரு செங்குருதிக் கோழைச்சரடு வளைந்து துவள அதிர்ந்து கீழே விழுந்த உடலின் கால்கள் ஓடத்தவித்து மண்ணில் உதைத்து உதைத்து தாவ குருதிகொப்பளித்த கழுத்தின் வெட்டுவாயை அச்சாக்கி அவன் உடல் அரைவட்டமாகச் சுழன்றது. குழலைப்பற்றி தலையை எடுத்த இடக்கரம் அதை மண்ணில் உருட்டியது. வாளை முறுகப்பற்றிய வலக்கரம் இழுத்து இழுத்து துள்ளியது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

முதுகணியர் உள்ளிருந்து ஒரு சிறிய சுரைக்காய் கொப்பரையுடன் வெளியேவரும்போது தாலமேந்தியவர்களில் ஒருவன் அலறியபடி விரைத்து நடுங்கிய இருகைகளையும் நீட்டி உடல் துள்ள முன்னால் பாய்ந்தான். “பிடி! பிடி!” என முதுகணியர் கூவினார். அவனைப்பிடித்த இரு துணைவர்களையும் ஒரேகணத்தில் தூக்கி இரு திசைகளிலும் வீசிவிட்டு அவன் குனிந்து அந்த வாளை எடுத்து இடக்கையால் தன் குழலைப்பிடித்து இழுத்து வலக்கையால் கழுத்தைவெட்டி அதிர்ந்து எம்பிக்கொண்டிருந்த முதல்சடலம் மீதே விழுந்தான். அதன் மேல் கிடந்து துடித்தான்.

கீழே விழுந்த துணைவர் இருவரும் எழும்போது இரு தலைகளுடன் இரு கைகள் துள்ளியதிர்ந்துகொண்டிருந்தன. கண்களிலும் உயிர் எஞ்சியிருந்தது. உதடுகளும் இறுதிச்சொல்லை சொல்லி முடித்திருக்கவில்லை. அவ்வுடல்களின் நுரையீரல்களில் இருந்து வெளியே வந்த காற்று குருதியுடன் சேர்ந்து குமிழியிட்டுக்கொண்டிருந்தது. குருதிவாசம் காற்றிலெழுந்தது. குருதிக்கொப்புளங்கள் வெடிக்கும் ஒலி. நிறமற்றது என செவ்வொளியில் விழிமயக்கு காட்டிய குருதி மண்ணில் விழுந்து ஊறி பரவத் தொடங்கியது.

முதுகணியர் கையில் கொப்பரையுடன் இரு உடல்களையும் நோக்கி நின்றார். ஓரிரு கணங்களில் அனைத்தும் முடிந்துவிட்டது. அல்லது அது ஒரு பாழ்கனவு. அல்லது ஒரு நாடகத்தின் கணம். அல்லது… அவர் அருகே அமர்ந்து அந்த வாளை இறந்தவன் கையில் இருந்து பிடுங்கினார். கையில் அப்போதும் உயிர் இருந்தமையால் பிடிவிட்ட அவன் விரல்கள் யாழ் வாசிக்கும் கலைஞனைப்போல அசைந்தன. அவர் மேலே கிடந்தவனின் உடலைப்பற்றிச் சரித்து அவன் கழுத்திலிருந்து குமிழி வெடித்துக் கொப்பளித்த குருதியை அக்கொப்பரையில் ஊற்றினார். தலையற்ற உடல் எதையோ எண்ணிக்கொண்டதுபோல ஒருமுறை நெஞ்சு விம்மியது.

அவனை புரட்டிப்போட்டுவிட்டு கீழேகிடந்தவன் கழுத்திலிருந்து வழிந்த குருதியை கொப்பரையில் பிடித்தார் முதுகணியர். நிறைந்த கொப்பரையுடன் அவர் உள்ளே நுழைந்ததும் இருவர் சென்று இரு தலைகளின் நிணச்சரடுகளையும் வெட்டினர். முடியைப்பற்றிய கைகளுக்குள் வாளைக்கொடுத்து நெம்பி பிடியை விடுவிக்கவேண்டியிருந்தது. இருதலைகளின் முடிகளும் குருதியில் ஊறி உரிக்கப்பட்ட மரப்பட்டைகள் போலிருந்தன. அவர்கள் முடியைப்பிடித்து தலைகளைத் தூக்கியபோது வழுக்கி தலைகள் கீழிறங்கின. மனிதத்தலைக்கு அத்தனை எடை உண்டு என அப்போதுதான் அவர்கள் அறிந்தனர். ஒருவரை ஒருவர் நோக்கியபின் முடியைச் சுழற்றிப்பிடித்து தூக்கிக்கொண்டு சிற்றாலயத்தின் வாயிலில் வைத்தனர்.

முதுகணியர் அவற்றை எடுத்துக்கொண்டு உள்ளே இருந்த தேவியின் கால்களுக்குக் கீழே வாய் மேலிருக்கும்படி வைத்தார். இரு சிறியபந்தங்களைக் கொளுத்தி அவற்றின் வாயில் நட்டார். அவர் கைகாட்ட முழவும் பறையும் உடுக்கும் சேர்ந்து ஒலித்தன. அவர் குருதிநிறைந்த கொப்பரையை பொரிமேல் கவிழ்த்து மலருடன் சேர்த்துப் பிசைந்து தாலத்தில் பத்து உருளைகளாக உருட்டிக்கொண்டார். அதை தேவி முன் படைத்து மும்முறை வணங்கி எழுந்தார்.

உருளைகளை தாலத்துடன் எடுத்துக்கொண்டு வெளியே வந்து நின்று முதல் உருளையை தென்மேற்கு திசை நோக்கி வீசினார். எட்டுத்திசைகளை நோக்கியும் உருளைகளை வீசி ஒன்பதாவது உருளையை வானம் நோக்கி வீசினார். பத்தாவது உருளையுடன் திரும்பிப்பார்க்காமல் கோட்டைநோக்கி நடந்தார். பறையும் முழவும் உடுக்கும் முழங்க பிறர் அவருக்குப்பின்னால் ஓடினர்.

அவர்கள் சென்று மறைவதை பூமிகன் முன்னங்காலை எம்பி காதுகளை முன்னால் கோட்டி நோக்கினான். திரும்பி ஜிஹ்வனை நோக்கி “அது பரவும் தீ அல்ல” என்றான். அதற்குள் அவன் வாயிலிருந்து எச்சில் கொட்டியது. அவன் அன்னையும் எச்சில் ஊறிய வாயை நாவால் துழாவியபடி எழுந்தது. “நில்” என்றான் ஜிஹ்வன். “அவன் என்ன செய்யபோகிறான் என்று பார்ப்போம்.”

நெல்லிமரத்தடியில் நின்றவன் கோரைப்புல் வழியாகச் சென்று சிற்றாலயத்தை அடைந்து பந்தங்களின் ஒளியில் நடனமாடுவதுபோலத் தெரிந்த சண்டிகையைப் பார்த்தபடி சற்று நேரம் நின்றான். அந்தச் சடலங்களை இழுத்து வந்து சிற்றாலயத்தின் முன்னால் ஒன்றன்மேல் ஒன்றாக குறுக்காகப் போட்டான். அவை சந்திக்கும் இடத்தை மேடைபோல ஆக்கி அதன் மேல் ஏறி மலரமர்வில் கால்மடித்து அமர்ந்தான். இருகைகளையும் சித்தமுத்திரையாக குவித்துக்கொண்டு கண்மூடி அமர்ந்தான்.

ஜிஹ்வன் அவனை நோக்கிக் கொண்டு எழுந்து நின்றான். பூமிகன் “இறந்துவிட்டானா?” என்றான். ஜிஹ்வன் “இல்லை” என்றபின் கால்களை மடித்து அமர்ந்து கொன்டான். ”எவ்வளவுநேரம்!” என்று முனகியபடி பூமிகன் அதனருகே அமர அன்னைநரி அப்பால் நன்றாகவே படுத்துவிட்டது. மெல்லிய காற்று புல்வெளியை அலையடிக்கச்செய்து கடந்துசென்றது. ஆற்றுக்கு அப்பால் யானைக்கூட்டம் ஒன்று வந்து இறங்கி சேறாடுவது ஒலிகள் வழியாகத் தெரிந்தது. மந்தையில் இருந்த இரு குட்டிகள் அடிக்கடி சங்கொலி போல பிளிற அன்னையர் அவற்றை வயிறு அதிர உறுமி அடக்கினர்.

விண்மீன்கள் இடம் மாறின. ஏதோ எண்ணமொன்று எழுந்ததுபோல ஒரு விண்மீன் சற்று ஒளிர்ந்து முகிலில் மறைந்தது. சதுப்பிலிருந்து கிளம்பிய மின்மினிகள் அவனைச்சூழ்ந்து பறந்துகொண்டிருந்தன. பந்தங்கள் எரிந்து அணைந்துவிட்ட இருளில் அந்த மின்மினி ஒளியாலே அவன் தெரிந்தான். அவன் அங்கிருப்பதை கண் அறிகையிலேயே உள்ளம் அறியாமலாகிவிட்ட விந்தையை ஜிஹ்வன் எண்ணிக்கொண்டிருந்தான்.

அவன் கைகளைத் தூக்கி “ஓம்”” என்றான். “ஓம், ஹ்ரீம், ஸ்ரீம், ஹம்” என்று பன்னிருமுறை முழங்கியபின் எழுந்து கோரைநடுவே நடந்து சென்று இருளில் மறைந்தான். “செல்வோம்… அன்னையை எழுப்பு” என்றான் ஜிஹ்வன். “விடிவதற்குள் நாம் உண்டுவிடவேண்டும். அக்கரையில் இருந்து கழுதைப்புலிகள் வரலாம். ஓநாய்கள் கூட வரலாம்” என்றான் பூமிகன். “அன்னையே… உணவு…” அன்னைநரி எழுந்து நான்கு கால்களையும் நீட்டி ஊன்றி முதுகை வளைத்து சோம்பல் முறித்தபின் முன்னால் ஓடும் மைந்தரை தொடர்ந்து சென்றது.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைஅறம் வரிசையில்…