டி.பி.ராஜீவன் கவிதைகள்

06lr_rajeevan_jpg_380595e

1959 ல் கோழிக்கோடில் பாலேரி என்ற ஊரில் பிறந்தவர் டி.பி.ராஜீவன் என்னும் தச்சம்போயில் ராஜீவன். ஒற்றப்பாலம் என்.எஸ்.எஸ். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றபின் டெல்லியில் இதழாளராகப் பணியாற்றினார். இப்போது கோழிக்கோடு பல்கலையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கிறார்

இளமையிலேயே கவிதைகள் எழுதிவந்தார். இளங்கவிக்கான வி.டி.குமாரன் விருது வழியாக அறியப்படலானார். கேரள நவீனக்கவிதையின் முதன்மை முகமாக அறியப்படுகிறார்.

இருநாவல்கள் வெளிவந்துள்ளன. ‘பாலேரிமாணிக்யம் ஒரு பாதிரா கொலபாதகத்திண்டே கதா’ ‘என் என் கோட்டூர் ஜீவிதமும் எழுத்தும்’ ஆகிய இரு நாவல்களுமே ரஞ்சித் இயக்கத்தில் திரைபடங்களாக வந்துள்ளன. [பிந்தையது ஞான் என்றபேரில்]

12ctrmn01_Bilingual_161782e

காய்கறிகளில் முயல்

தக்காளி கேட்டது
இன்றைக்கு என்ன குழம்பு?
சாம்பாரா அவியலா ஓலனா?
ஆடு கோழி
அயிலை சாளை
ஆகியவற்றுடன் இணைந்து
நாங்கள் இன்று
நெடுக்காகப் பிளக்கவேண்டுமா
துண்டுதுண்டாகவேண்டுமா
கத்தி
பலகையிடம்
ரகசியப்புன்னகையுடன் பேசுவதை
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்
மேஜைமேல்
பாத்திரங்கள் அவசரப்படுவதையும்
வாணலியில்
எண்ணை துள்ளிக்குதிப்பதையும்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்
எங்களுக்குத்தெரியும்
இந்தச் சின்ன வெங்காயத்தை
சமையலறையில்
எவரும் சும்மா வெட்டிக்குவிப்பதில்லை
சிரிக்கும் பற்கள்தான்
கடித்துக் கிழித்து மெல்பவை
கருணைக்கிழங்கு அரிக்கும்
பாகற்காய் கசக்கும்
மிளகாய் எரியும்
பலாவுக்கு முள் உண்டு
வாழைக்காயில் கறை.
நாங்கள்
எப்போதும்
அக்கணம் பிறந்தவர்களைப்போல இருப்போம்
காய்கறிகளில்
முயல்!

pic_2053138e

புழு

தலைக்கு மேல்
கால்கீழே
வாயில்
தொண்டைக்குழியில்
சென்று சேரும்வரை
எங்கிருந்தது
இந்தப்புழு?
தேதிகளில்லாத
வழி
தனிமை
நுட்பம்
இதன் பயணம்
பூவிலும்
புண்ணிலும்
ரகசியம்
இதன் வாழ்க்கை
ஆயிரம் வேனில் கண்ட
ஒரு ஆலமரம்
காட்டைக்கலக்கும்
மதகளிறு
கடலைக் கருக்கலைக்கும்
திமிங்கலம்
உலகை
காலடியில் நிறுத்தும் பேரரசன்
இச்சிறு புழு
தன் உடலால்
பிரபஞ்சத்தை எழுதுகிறது
தொட்டுத்தொட்டு வாசிக்கிறது
இங்குள்ள
ஒவ்வொரு மண் துளியும்
இந்தத் திகம்பரனுக்கு
இடிந்துகிடக்கும்
ஒரு தேவாலயம்

31MPCT-RAJEEVAN_1567879f

தண்டனை

இறுதியில் என்னை
என்னை நோக்கியே
நாடுகடத்த
முடிவுசெய்தேன்
நான் ஒரு நாடு என்றால்
அதன் இறையாண்மைக்கு எதிராக
நான் நடத்திய
சதிவேலைகள்
கவிழ்ப்பு முயற்சிகள்
கலவரங்கள்
அனைத்தையும் பரிசீலித்தால்
இதைவிடக் குறைந்த ஒரு தண்டனையை
என்னாலேயே
எனக்கு விதிக்கமுடியாது
பிறப்பதற்கு முன்னரே
எனக்கு மனைவியின்
குழந்தைகளும் இருந்தன
எத்தனை பிறவிகள் வாழ்ந்து முடித்தாலும்
தீராத பாவங்களும் கடன்களும்.
சங்கம்புழையோ ஷெல்லியோ
கீட்ஸோ
ஆக இருந்திருந்தேன் என்றால்
பிறப்பதற்கு முன்னரே
காசநோயாலோ
படகு கவிந்தோ
செத்திருக்கவேண்டியவன்
சென்ற நூற்றாண்டின்
முதற்பாதியிலோ
அதற்கு முன்பு
ஏதேனும் நூற்றாண்டின் இறுதியிலோ
என் பிறப்பு நிகழ்ந்திருந்தால்
கலிங்க
சிலுவை
பிளாஸி
சிப்பாய்
முதல் இரண்டாம்
உலகப்போர்கள்
ஏதாவது ஒன்றில்
கொல்லப்பட்டிருப்பேன்.
நான் ஒரு தீவோ
பாலைவனமோ
ஆக இருந்திருந்தால்
என்னைப்போன்ற ஒரு குற்றவாளியை
திறந்துவிட
என்னைவிட தனித்த
குளிர்ந்து விரைத்த
பற்றி எரியும்
ஒரு நிலம்
வேறு ஏதுமில்லை

T-P-Rajeevan

நட்பு

ஆற்று நீர்
மல்லாந்து
பொக்கை காட்டிச் சிரித்தது

பிறகு
குப்புறப்படுத்து
மூச்சு கிடைக்காமல்
கால்கை உதறிக்கொண்டது

மணலில்
கூழாங்கல் பரப்பில்
முழந்தாளிட்டு ஊர்ந்தது

கருங்கல் பாறை விளிம்பில்
பிடித்து எழுந்து நிற்க முயன்றது

மல்லாந்து விழுந்து
தலை முட்டி அழுது
மீண்டும் தயங்கி எழுந்து
நின்று சிறுகால் வைத்து
தள்ளாடி நடந்தது

நண்டு வளைகளில் கைநுழைத்து
பரல் மீன்களை
கிச்சுகிச்சு மூட்டியது

மென்மணல் கரைகளுக்கும்
பாறைக்கூட்டங்களுக்கும்
நடுவே ஓடியது

கோயில் துறைப்படிக்கட்டுகளில் ஏறி
அரசமர மேடையை
வலம் வந்தது

என்னைக் கண்டு
அடையாளம் அறிந்து
உரக்கச் சிரித்து
கட்டிக்கொண்டது

மெல்லக் கைபிடித்து
காலடிகள் பதியாத
பாதைகளினூடாகக்
கொண்டு சென்றது

மரக்கொம்பில் அவிழ்த்து வைத்த
உள்ளாடைகளைக் கூட எடுக்காமல்
பிறந்த மேனியாய்
வீடு நோக்கி

டி.பி.ராஜீவனின் குரல் கவிதை மக்கு

குற்றாலம் பதிவுகள்

முந்தைய கட்டுரைவிழா 2014 [நினைவுகள்!]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 68