குப்பைகள்…ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் கடற்கேரளம் பழைய நினைவுகளையும், கேரளா, இந்தியா குறித்த மன வேதனைகளையும், பீதியையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. நானும் கேரளாவிலிருந்து கோவா செல்லும் வரையிலான கடற்கரைச் சாலையில் பயணிக்கும் பொழுது இந்த நிலையைக் கண்டிருக்கிறேன். கேரள மக்கள் கொஞ்சமாவது சுத்தம் குறித்த உணர்வு கொண்டிருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். உங்கள் கடற்கரைக் குப்பைகள் பற்றி படிக்கும் பொழுது அந்த நினைப்பிலும் மண். ஒரு வேளை அந்தக் குப்பைகள் நிறைந்த கடற்கரை கிராமம் கன்யாகுமரி மாவட்டத்திற்குள் வருகிறதோ? நான் சென்ற பொழுது கோவளம் கடற்கரை சுத்தமாகவும், குளிப்பதற்கும் அமைதியாக ஓய்வெடுப்பதற்கும் ஏற்ற இடமாகவே இருந்தது. மோகன்லால் நடித்த பத்மராஜனின் சீசன்ஸ் என்றொரு மலையாளப் படம் முற்றிலும் கோவளம் பின்ணணியில் எடுக்கப் பட்டிருக்கும்.  தமிழ் நாட்டில் இன்று நிலவும் மூச்சு முட்ட வைக்கும் முட்டிகளைப் பெயர்க்கும் சிக்குன் குனியா உருவாக்கும் குப்பை மலைகளைப் பற்றி தனியே எழுத வேண்டும்.

நான் சமீபத்தில் மதுரைக்குச் சென்றிருந்த பொழுது தங்கியிருந்த நகர், பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், டாக்டர்கள், எஞ்சீனீயர்கள் போன்ற மேல் தட்டு மக்களும் வாழும் ஒரு குடியிருப்புப் பகுதி. வீட்டுக்கொரு பி எச் டி இருக்கும் குடியிருப்புப் பகுதி. அந்த நகரின் வழியே போகும் நெடுஞ்சாலை வழியே அரசின் உயர் அதிகாரிகளும், மந்திரிப் பிரதானிகளும், பல்கலைக் கழக துணைவேந்தர்களும், பேராசிரியர்களும் உயர்கல்வி கற்கும் மாணவர்களும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் தினம் தினம் சென்று வருகிறார்கள். அப்படியாகப் பட்ட ஒரு இடத்தில் குப்பைகள் சிறு சிறு குன்றுகளாக குவித்து வைக்கப் பட்டிருக்கின்றன. அனைவர் பார்வையிலும் தினமும் அந்தக் குப்பை மலைகள் காட்சியளித்துக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் யாரையும் அந்தக் காட்சிகள் உறுத்தவேயில்லை.

மிகவும் அசுத்தமான குப்பைகள் அவை. வீட்டுக்குள் உருவாக்கப் படும் அத்தனை மாசுக்களும் பாலித்தீன் பைகளில் கட்டப் பட்டு அந்தக் குப்பை மலைகளில் ஐக்கியமாகின்றன. அழுகிய உணவுப் பொருட்கள், மாமிசங்கள், எலும்புத் துண்டுகள், ரத்தம் தோய்ந்த பஞ்சுகள், ஊசிகள், பிளஸ்டிக் குப்பைகள், நோய் பரப்பும் கிருமிகள் நிறைந்த துணிகள், பஞ்சுகள், வீணாய்ப் போன பொருட்கள், பெண்களின் மாதவிலக்குக்குப் பயன் பட்ட துணிகள், டயப்பர்கள், மலங்கள், பாத்திரங்கள் என்று அத்தனை விதமான குப்பைகளும் எளிதில் மக்கிப் போக விடாத பாலீத்தீன் பைகளில் அடைக்கப் பட்டும், அப்படியேயாகவும் இந்த குப்பை மலைகளில் கொட்டப் பட்டு கொட்டப் பட்டு தொடர் மலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு தெருவில் இருக்கும் காலி மனைகள் இந்தக் குப்பைகள் கொட்டுவதற்காகவே படைக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் குப்பைகளுடன் மழை நீர் சேரும் பொழுது மழை நீர் வெளியே விடாமல் அடைக்கப் பட்டு அவை சாக்கடைகள் நிறைந்த குப்பை நீராக மாறுகின்றன. மெல்ல மெல்ல இந்த அசுத்தங்கள் மண்ணுக்கு அடியில் சேர்ந்து அடி மண்ணையும் அசுத்தமாக்குகின்றன. நிலத்தடி நீரிலும் கலக்கின்றன. மொத்தத்தில் மண், நீர் என்று ஒட்டு மொத்த சுற்று சூழலுமே நச்சாக மாறுகின்றன. அருகில் சென்றால் கடும் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குப்பை மலைகளை நகராட்ச்சியினர் அப்புறப் படுத்துவதேயில்லை. மலைகள் கட்டுக்கடங்காமல் விரியும் பொழுது தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். அவை பாதி எரிந்தும் எரியாமலும் சாம்பல் குப்பைகளை உருவாக்கி நீருடன் கலக்கின்றன. அந்த நகர் முழுக்க அனைத்து வீடுகளிலும் சிக்கன் குனியா நோய் பரவியுள்ளது. கொசுக்கள் இந்த குப்பை மலைகளில் கழுகள் போலக் கொழுத்து வளர்கின்றன, கரிய மேகங்கள் போல வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. காலை, மதியம், மாலை இரவு என்று எப்பொழுதும் கொசுக்கள் கூட்டம் கூட்டமாகத் தாக்குகின்றன. நகரின் உள்ள அனைத்து வாய்க்கால் தண்ணீர் வெளியேறும் வழித்தடங்களும் குப்பைகளால் மூடப் பட்டு குப்பைகளினால் ஆன சாக்கடைகளாக மாற்றப் பட்டுள்ளன.  இந்தக் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக்களை வெளியில் எடுக்க எல்லா குப்பை மலைகளைக்கு அருகிலும் நாலைந்து பேர்கள் கை கால்களில் எவ்வித பாதுகாப்பு உறைகளும் இன்றி குப்பைகளுக்குள் நுழைந்து குடைந்து பிளாஸ்டிக் பொருட்களை வெளியில் எடுத்துச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒட்டு மொத்த நகருமே குப்பைகளின் நடுவே நச்சு மூச்சை  விட்டுக் கொண்டிருக்கின்றது. சிவகெங்கை ரோட்டில் செல்லும் பொழுது வரிசையாக மருத்துவமனைகள் இருப்பதைப் பார்த்தேன். அனைத்து மருத்துவமனைகளுமே ஒரு மாபெரும் குப்பைகள் நிறைந்த, அகழி போன்ற, பெரிய நதி போன்ற திறந்த வெளிச் சாக்கடைகள் மீது அமைந்திருக்கின்றன. அந்தச் சாக்கடைகளைத் தாண்டித்தான் இந்த மருத்துவமனைகளின் உள்ளே போக வேண்டும். நோய் தீர்க்க வேண்டிய இடங்களே நோய் உற்பத்தி ஸ்தானங்களின் மேல் அமர்ந்திருப்பது எந்தவிதமான ஒரு முரண்? மதுரையிலும் பிற நகரங்களிலும் இதே நிலைமையைக் கண்டேன். ஏறக்குறைய ஒட்டு மொத்த தமிழ் நாடுமே மாபெரும் சாகக்டையாக, மாபெரும் குப்பை மலையாக எனக்குக் காட்சியளித்தது. முன்பெல்ல்லாம் அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். இப்பொழுது நாடே பெரும் சாக்கடையாக மாற்றி விட்டிருக்கிறார்கள். நாங்கள் மட்டும் என்ன சாக்கடை நீயும்தான் குப்பை, நீயும்தான் சாக்கடை என்று மக்களுக்கு லஞ்சம் கொடுத்து மக்களை உணர்வில்லாத பிண்டங்களாக மாற்றி ஒட்டு மொத்த தேசத்தையுமே அழுகிச் சீரழியும் ஒரு மாபெரும் அசுத்தம் பிடித்த இடமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு இரண்டு முக்கிய பிரச்சினைகளை நான் அவதானித்தேன். ஒன்று இந்தக் குப்பைகளை அழிக்கப் போதுமான உரிய கட்டமைப்புகள் இல்லை. ஊழியர்களும் இல்லை. மேலும் வார்டு கவுன்சிலர்கள் முதல் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் வரை அனைவருமே இப்பொழுதெல்லாம் கட்சி சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு வார்டு கவுன்சிலர் பதிவிக்குக் கூட சில லட்சம் செலவு செய்து வருகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அக்கறையுள்ள பொது மக்கள் கூட துணிந்து அவர்களது செயலின்மையைத் தட்டிக் கேட்க முடிவதில்லை. பயப்படுகிறார்கள். ஆக உள்ளாட்சி அமைப்புகளின் அவற்றின் நிர்வாகிகளின் மெத்தனம், அலட்சியம், நிதியின்மை, நிதி வேறு தேவையற்ற திட்டங்களுக்கு மாற்றப் படுதல், ஊழியர்களின் வேலை பார்க்காமல் இருக்கும் போக்கு ஆகியவற்றை கேள்வி கேட்க்க ஆளில்லாமல் போய் அடிமட்டக் கட்டமைப்பே சீரழிந்து போய் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போல அரசின் வருமானம் எல்லாமே தேவையற்ற கவர்ச்சி செலவுகளான கலர் டி வி திட்டத்திற்குப் போகின்றது.

இரண்டாவது முக்கிய பிரச்சினை: இப்படி குப்பைகளை வீசி எறிபவர்கள் சாதாரண ஆசாமிகள் அல்லர். மெத்தப் படித்தவர்கள். பல்கலைக் கழகப் பேராசிரியர்கள். கல்லூரிப் பேராசிரியர்கள். அரசு அதிகாரிகள். மாதம் ஒரு லட்சத்துக்கும் குறையாமல் சம்பாதிப்பவர்கள். இவர்களுக்கு முதலில் இப்படி குப்பைகளை மலை போலக் குவித்து சாக்கடையாக்கி அசிங்கப் படுத்துவது ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை புரியவில்லை. நான் சில பேராசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது “ஏன் சார் இதையெல்லாம் அகற்ற முயற்சிக்கக் கூடாதா?” என்று கேட்ட பொழுது அவர்கள் சொன்ன பதில்கள் என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

“இப்படித்தானே இருக்கிறது? இதில் என்ன பிரச்சினை?”

“குப்பைகள் ஒரு ஓரமாக குவிந்திருந்தால் நமக்கு என்ன? நம் வீட்டுக்குள்ளா இருக்கிறது?”

“அதெல்லாம் பஞ்சாயத்தில சொல்ல முடியாது சார், அவன் கட்சிக்காரன் ஏதாவது நம்மை செஞ்சு போடுவான்”

“இந்தியா மாதிரி நாட்டுல இப்படித்தான் சார் குப்பை எல்லாம் இருக்கும் இதெல்லாம் ஒரு பெரிய ப்ராப்ளமே கிடையாது சார்”

”கொசு இல்லாத இடம் எது சார்?”

“சாக்கடை வெளியே தான சார் இருக்கு நம்ம நடு வீட்டுக்குள்ளயா இருக்கு இருந்தா இப்ப என்ன?”

இப்படியான ரீதியிலேயே மெத்தப் படித்த மேல் தட்டு அறிவாளிகள் பதில் சொன்னார்கள். முதலில்  இவர்கள் அனைவருக்கும் குப்பைகளும், சாக்கடைகளும், கொசுக்களும், ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை. சிக்குன்குனியா போன்ற நோய்களை உருவாக்குவதும், நம் சுற்றுச் சூழல் மாசுகளை உருவாக்குவதும், குடி நீரை நச்சாக்குவதும் இந்தக் குப்பைகள்தான், இவற்றை அகற்ற வேண்டும் என்ற உணர்வே படித்த மேல் வர்க்கத்தினருக்கே இல்லை என்பதே எனக்குக் கடும் அதிர்ச்சியை அளித்தது. நான் இது குறித்து பேசியதில் பெரும்பாலானவர்கள் டாக்டர் பட்டம் படித்தவர்கள் என்பதை நான் குறிப்பாகச் சொல்ல வேண்டும்.

முதலில் இது ஒரு அபாயம் என்ற விழிப்புணர்வை நாம் படித்தவர்களிடம் உருவாக்க வேண்டும். அனைவருக்கும் வீட்டுக்குள் சுத்தமாக இருக்க வேண்டும், டி வீ பார்க்க வேண்டும் சீரியல் பார்க்க வேண்டும் பிள்ளைகள் படித்து ஐ டி வேலைக்குப் போக வேண்டும் ஆனால் தன் வீட்டுக் குப்பைகள் மட்டும் வெளியில் வீசி எறிய வேண்டும் என்பது அன்றாட வாழ்க்கை லட்சியங்களாக இருக்கின்றன. இந்த ஊரில் அமைப்பு குப்பைகளை தினமும் வீடுகளில் இருந்து பெற்றுக் கொண்டு அகற்றி வந்தனர். அவர்கள் மாதம் ஒரு வீட்டுக்கு இருபது ரூபாய்கள் வசூலித்து வந்தனர். இருபது ரூபாயை இவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் குப்பையைப் போடத்தான் காலி மனைகளும் தெருவோரங்களுமே இருக்கின்றனவே என்று நினைத்து பெரும்பாலான வீட்டினர் அந்த இருபது ரூபாயைக் கொடுக்க மறுத்ததின் காரணமாக அந்த தன்னார்வ அமைப்பே இப்பொழுது செயல் படவில்லை. ஹோட்டல்களில் உண்ண, சினிமாவுக்குப் போக, உல்லாசமாக இருக்க என்று ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவழிப்பவர்கள் பொது சுகாதாரம் என்று வரும் பொழுது சிக்கன உணர்வு பொங்கி வர இருபது ரூபாயை மிச்சம் பிடித்து விட்டனர். இங்கு தலையாய பிரச்சினையே “குப்பைகளும் சாக்கடைகளும் ஒரு மாபெரும் சுகாதாரப் பிரச்சினை” என்பதையே உணராத நம் மக்களே. “அதன் காரணம் எதுவென்று அறியுமிலார்” என்று பாரதி சொன்னது இதற்கும் பொருந்தும்தான். முதலில் ஒரு பிரச்சினையை அது பிரச்சினை என்று உணர்ந்தால்தானே நம் மக்கள் அதற்கு தீர்வு காண முற்படுவார்கள். மக்களுக்கே குப்பைகள் சேர்வது ஒரு பொருட்டாக இல்லாத பொழுது அரசுக்கு அதை பற்றி என்ன அக்கறை? ஆக இங்கு பொது மக்கள், அரசாங்கம் என்று யாருக்குமே இந்த மாபெரும் சுகாதாரக் கேட்டின் காரணம் குறித்து அறிவும் அக்கறையும் இல்லை. விளைவு தமிழ் நாடு ஒரு மாபெரும் குப்பை மேடாக, சாக்கடையாக மாறி வருவதுதான்.

கடந்த பத்து வருடங்களில் இந்த குப்பைகளின் அளவு பல மடங்கு வளர்ந்து பூதாகரமான ஒரு ராட்சச அசுத்தமாக உருவாகி வருவதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. என்னைப் போல வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்குத்தான் இந்த அசுர வேக குப்பை மலைகளின் நிதர்சனம் புரிகிறது. அங்கேயே இருக்கும் மக்களுக்கு இது ஒரு வித்தியாசமாக இயல்பான வாழ்க்கையின் அங்கமாக மாறி விட்டிருக்கிறது. இந்தக் குப்பைகளும் சாக்கடைக் குட்டைகளும் சாக்கடைக் கால்வாய்களும் அந்த நகரில் இருக்கும் சாலைகள் போல, தண்ணீர் தொட்டிகளைப் போல, பள்ளி கல்லூரிகளைப் போல, அந்த நகரின் நிரந்தர சின்னங்களாகவே மாறி விட்டிருக்கின்றன. ஒரு வீட்டுக்கு அடையாளம் சொல்ல குப்பை மலைகளைப் பயன் படுத்திக் கொள்கிறார்கள். யாருக்கும் இதன் விபரீதம் புரியவேயில்லை என்பதுதான் உண்மைப் பிரச்சினையே. உடலில் வலி இருப்பதை உணர்ந்தால்தானே மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போவார்கள்? அந்த உணர்ச்சியே முதலில் எழாமல் உள்ளுக்குள்ளேயே வெளியில் தெரியாத கான்சராக வளர்ந்தால் முற்றிய பின் தானே வலி தெரியும்? அப்படித் தெரிய வரும் பொழுது யார் காப்பாற்ற முடியும்? நோய் முதல் நாட வேண்டியது முக்கியம் அல்லவா?

எல்லா ஊர்களிலும் “இது உங்கள் நகரம் இதைச் சுத்தமாகப் பேணவும்” என்றொரு நோட்டீஸ் அடித்து எல்லாச் சுவர்களிலும் ஒட்டியிருக்கிறார்கள். அத்துடன் நகராட்சிகளின் சுகாதாரப் பணி முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். மக்களுக்கோ பார்வைக் கோளாறு, ”சுத்தமாகப் பேணவும்” என்பதில் இருக்கும் ”ண” கரத்தை “ள” கரமாக்கி மாற்றிப் படித்து விட்டு ஊர்களை மாபெரும் கழிப்பிடமாக மலக் குவியல்களாக மாற்றி விட்டிருக்கிறார்கள்.

நான் தமிழ் நாட்டில் பயணம் மேற்கொண்ட பல மாவட்டங்களின் நிலை இதுதான். நாகர்கோவில் நகரம் மட்டும் சற்று சுத்தமாக இருந்தது. ஒப்பீட்டளவில் நாகர்கோவில் பரவாயில்லாத சுத்த நகரம் என்று சொல்லலாம். அதையே நீங்கள் உள்ளூர்காரர்கள் மோசம் என்று நினைப்பீர்களாயின் பிற நகரங்களின் நிலையை சற்று எண்ணிப் பாருங்கள். தமிழ் நாட்டின் நதிகள் பற்றி தனியே ஒரு முறை புலம்ப வேண்டும்.

அன்புடன்
ராஜன்

அன்புள்ள ராஜன்

இன்றுதான் கேரளப்பயணம் முடிந்து திரும்பிவந்தேன். பொதுவாக கேரளத்தில் குப்பைகள் மிக அதிகமாகஏ இருக்கும் என்பது என் எண்ணம். பொது இடங்களில் மலம் கழிப்பது நகரச்சேரிகள் அல்லாத இடங்களில் குறைவு என்பது மட்டுமே வேறுபாடு. கேரள ரசின் குப்பை அள்ளும் நிர்வாகம் என்பது தொழிற்சங்க அரசியலில் முடங்கிச் சீரழிந்து கிடக்கிறது. குப்பை போட இடமே இல்லை என்ற நிலை. சொந்த வீட்டுக்குப்பையை காரில் கொண்டுவந்து சாலையோரம் வீசிவிட்டு போகிறார்கள் மக்கள். கோவளம் போன்ற சுற்றுலாத்தலங்களின் நிலை வேறு. அங்கே சுற்றுலாப்பயணிகளுக்காம்க அந்த சுத்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் இந்தமுறை என் கண்ணுக்கு குறைவாகவே குப்பை தென்பட்டது– வேறு ஒன்றுமில்லை. தமிழகம் குப்பைமலைகளை அதைவிடபலமடங்கு உருவாக்கி கண்ணை பழக்கிவிட்டிருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைஉலோகம் – 9
அடுத்த கட்டுரைஉலோகம் – 10