‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 11

பகுதி மூன்று : இருகூர்வாள் – 1

கதவுகளும் சாளரங்களும் முழுமையாக மூடப்பட்டு இருள் அடர்ந்துகிடந்த ஆயுதசாலைக்குள் அர்ஜுனன் வில்பயிற்சி செய்துகொண்டிருந்தான். எதிர்மூலையில் ஆட்டிவிடப்பட்ட ஊசலில் உள்ளே விதைகள் போடப்பட்ட சிறிய மரக்குடுக்கைகள் தொங்கி ஆடின. அவற்றின் ஒலியை மட்டுமே குறியாகக் கொண்டு அவன் அம்புகளால் அடித்து உடைத்துக்கொண்டிருந்தான். ஊசலருகே இருளில் நின்றிருந்த இருவீரர்கள் மேலும் மேலும் குடுக்கைகளைக்கட்டி வீசி விட்டுக்கொண்டிருந்தனர்.

நூறு குடுக்கைகளை அடித்து முடித்ததும் அவன் வில்லை தாழ்த்தினான். மர இருக்கையில் அமர்ந்து தன் கூந்தலை அவிழ்த்து தோளில் பரப்பினான். காற்றோட்டமில்லாத அறையின் வெப்பத்தால் அவன் தலை வியர்த்து நனைந்திருந்தது. ஒரு வீரன் சாளரத்தைத் திறக்கப்போனபோது ‘வேண்டாம்’ என்று கையால் தடுத்தான். வீரர்கள் உடைந்து சிதறிய குடுக்கைகளை பொறுக்கி சேர்க்கத் தொடங்கினர்.

கிரீச் என்ற பேரொலியுடன் கதவு திறந்தது. வீரர்கள் திகைத்து கதவை நோக்க அர்ஜுனன் கைகளால் கண்களை மூடிக்கொண்டான். பீமனின் பெரிய உருவம் இடைவெளியை மறைத்து நின்றது. பின் எதிர்ச்சுவரில் ராட்சத நிழல் விழுந்து அசைய அவன் நடந்து உள்ளே வந்தான். “சாளரங்களை திறவுங்கள்” என கனத்த குரலில் ஆணையிட்டான். வீரர்கள் சாளரங்களைத் திறக்கத் தொடங்கினர். பீமன் அர்ஜுனன் அருகே வந்து அவன் வழக்கப்படி மார்பில் பெரிய கைகளைக் கட்டியபடி நின்றான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

வீரர்கள் சாளரங்களைத் திறந்தபின் ஒரு கணம் தயங்கினர். திரும்பாமலேயே அவர்களை போகும்படி சொல்லி பீமன் கையசைத்தான். அவர்கள் சென்றதும் அமர்ந்திருந்த அர்ஜுனனின் அருகே அமர்ந்து அவன் முகத்தை நோக்கினான். “மூத்தவர் சொன்னார், நீ இரவுபகலாக படைக்கலப்பயிற்சி செய்வதாக… அவருக்கு உன் மனநிலை புரியவில்லை. எனக்குப்புரிந்தது” என்றான். “நான் சாதாரணமாகத்தான் இருக்கிறேன்… இது…” என அர்ஜுனன் ஆரம்பிக்க “நான் பிதாமகரை சிறுவயது முதலே கண்டு வருகிறேன். அகம் நிலைகொள்ளாதபோதுதான் அவர் இடைவிடாத பயிற்சியில் இருப்பார்” என்றான்.

அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “என்ன ஆயிற்று உனக்கு?” என்றான் பீமன். “ஒன்றுமில்லையே” என்று சொல்லி பொருளில்லாமல் அர்ஜுனன் சிரித்தான். “நான் உன்னை எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பவன். உனது இந்த சஞ்சலம் தொடங்கியது நாம் துருபதனை வென்று திரும்பியபோது” என்றான் பீமன். “இல்லை” என சொல்லப்போன அர்ஜுனனை இடைமறித்து “அது ஏன் என்றும் நானறிவேன்” என்றான் பீமன். ”துரோணர் முன் துருபதனை கொண்டுசென்று போட்டபோது உன் கண்களையே நான் நோக்கினேன். நீ துரோணர் கண்களையே நோக்கினாய். அவர் புன்னகை செய்ததை உன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.”

நிமிர்ந்து நோக்கி “ஆம்” என்றான் அர்ஜுனன். “அந்த ஒரு கணத்தில் இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.” பீமன் உரக்கநகைத்து “இளையவனே, உலகைப்பற்றிய நம்பிக்கைகள் உடைவதன் வழியாகவே சிறுவர்கள் ஆண்மகன்களாகிறார்கள். நீ முதிரத்தொடங்கிவிட்டாய்” என்றான். அர்ஜுனன் “நான் தத்துவம் பேச விரும்பவில்லை” என்று சிடுசிடுத்தான். “அவநம்பிக்கையையும் கசப்பையும் வெளிப்படுத்த தத்துவத்தைப்போல சிறந்த கருவியே வேறில்லை” என்று மேலும் நகைத்தான் பீமன்.

“மூத்தவரே, எப்போதும் உங்களிடமிருக்கும் கசப்பைக் காண்கிறேன். அரசவை நிகழ்ச்சிகள், சடங்குகள் எதிலும் நீங்கள் மனமுவந்து கலந்துகொள்வதில்லை. எப்போதும் சேவகர் நடுவே இருக்கிறீர்கள்…” என்றான் அர்ஜுனன். “என்ன ஆயிற்று உங்களுக்கு? நான் அதை முதலில் கேட்க விரும்புகிறேன்.” பீமன் கோணலாகச் சிரித்து “ஒரு குமிழி உடைந்த துயரில் நீ இருக்கிறாய். அத்தனை குமிழிகளும் ஒரு பெரிய குமிழியாக ஆகி அது உடைந்ததை நான் அறிந்தேன்.”

சிலகணங்கள் நோக்கியபின் அர்ஜுனன் கேட்டான் “நான் எப்போதும் உங்களிடம் கேட்கவிரும்பிய வினா இது. மூத்தவரே, அன்று கங்கைக்கரையில் என்ன நடந்தது? கௌரவர்களுடன் விருந்துண்ட பின் நீங்கள் மறைந்தீர்கள். பின்னர் திரும்பிவந்த நீங்கள் இன்னொருவர்…” என்றான்.

பீமன் சிரித்து “கங்கைக்கரையில் நடந்தது வரலாற்றில் எப்போதும் நடப்பது. நம்பிக்கையும் துரோகமும்” என்றான். “பார்த்தா, நான் ஒரு நல்ல புராணக்கதை வைத்திருக்கிறேன். சுஜலன் என்னும் சூதன் அதைச் சொன்னான். கதைசொல்லி சூதனல்ல, சமையற்காரச் சூதன். பிரம்மன் அனைத்து மிருகங்களையும் படைத்தபின் அவற்றை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவர் நெஞ்சில் ஒரு நகைப்பு எழுந்தது. சிவனும் விஷ்ணுவும்கூட புரிந்துகொள்ள முடியாத ஒரு பிறவியைப்படைக்க எண்ணினார். அவர்கள் யுகயுகமாக அப்பிறவியுடன் ஆடி சலிக்கவேண்டும். அப்பிறவியை தாங்களும் அடைந்தாலாவது அதைப்புரிந்துகொள்ளமுடியுமா என்று முயலவேண்டும். அப்போதும் புரிந்துகொள்ள முடியாமல் பிரம்மனை எண்ணி வியக்கவேண்டும்.”

“அதன்பொருட்டு அவர் உருவாக்கியவன் மனிதன்” என்றான் பீமன். “மானில் ஒருபகுதியையும் வேங்கையில் ஒருபகுதியையும் இணைத்து அவனைப்படைத்தார். பாம்பில் ஒருபகுதியையும் பறவையில் ஒருபகுதியையும் அதிலிணைத்துக்கொண்டார். ஆகவேதான் எப்போதும் வேட்டையாடுகிறான், வேட்டையாடவும் படுகிறான். சேர்ந்து வாழ விழைகிறான். உடனிருப்பவர்களை உண்ணவும் எண்ணுகிறான். விண்ணில் பறந்து விட்டு மண்ணிலிறங்கி பொந்துக்குள் சுருண்டுகொள்கிறான்.” புன்னகையுடன் “குழந்தைக்கதை என நீ எண்ணுவது தெரிகிறது. எனக்கு நூல்கள் சொல்லும் நுட்பமான கதைகள் புரிவதில்லை. சமையற்காரர்களின் கதைகளே பொருள் அளிக்கின்றன” என்றான்.

“அன்று அவர்கள் உங்களுக்கு விஷம் வைத்துவிட்டார்கள் என்று அறிந்தேன்…” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றான் பீமன். பின் அவன் முகம் மாறியது. கண்கள் தழைய கைகளால் மரப்பலகையின் நுனியை நெருடியபடி சொன்னான். “இப்புவியில் ஒவ்வொரு மனித உடலும் அறியும் நிறைவின்மை ஒன்றுண்டு பார்த்தா. அது தனியாக நின்றால் தவித்துக்கொண்டே இருக்கிறது, இன்னொரு உடலுக்காக. முழுமைக்காக. நான் தேடிய அந்த இன்னொரு உடல் துரியோதனன். நான் சேர்ந்து என்னை முழுமையாக கரைத்துக்கொள்ள விழைந்த மந்தை கௌரவர்கள். இளமையிலேயே நான் அதை அறிந்ததை பெரும் நல்லூழாகக் கருதினேன். பிறிதெதையும் நான் விழையவில்லை.”

பீமனின் குரல் மேலும் இறங்கி அவன் தனக்குத்தானே சொல்வதுபோல பேசினான் “துரியோதனன் என்னைவிட்டு விலகிச்செல்லத் தொடங்கியதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவ்விலகலை சரிசெய்ய ஒவ்வொருமுறை முயல்கையிலும் அம்முயற்சியே மேலும் விலகலை உருவாக்கியது. ஒவ்வொருநாளும் அவனையே நினைத்துக்கொண்டிருந்தேன். அவன் என்னை எப்படி வெறுக்கமுடியும் என்று எண்ணி எண்ணி மருகினேன். அவனிடம் நட்புக்காக கையேந்தி இறைஞ்சி நின்றேன். நான் அவன் உயிரைக்காப்பாற்றினேன்.”

“ஆகவேதான் அவர்கள் என்னை உணவுண்ண அழைத்தபோது உவகையில் மலர்ந்தேன். மனிதர்களுக்கிடையேயான அவநம்பிக்கைகளும் கசப்புகளும் மேலோட்டமானவை என்றும் ஆழத்தில் அன்பும் பாசமும்தான் உள்ளன என்றும் நாம் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு புன்னகையில் அல்லது கண்ணீரில் எல்லாம் கரைந்துபோகுமென கற்பனை செய்துகொள்கிறோம். அந்த மாயை கலையாமல் ஒருவன் விவேகம் அடைவதில்லை.” பீமன் பற்களைக் கடித்து கண்களைச் சுருக்கி முகத்தை திருப்பிக்கொண்டான். அவன் பெரியதோள்கள் மூச்சில் அசைந்தன. “அன்று அவர்கள் என்னை அழைக்கும்போது, எனக்கு உணவு பரிமாறும்போது நான் ஒரு துளியும் ஐயப்படவில்லை என்பதுதான் இன்றும் என்னை வாட்டுகிறது. இப்போது அவர்களின் அன்றைய கண்களை மீண்டும் எண்ணிப்பார்க்கையில் அவற்றில் எல்லாமே அப்பட்டமாகத் தெரிவதைக் கண்டு திகைக்கிறேன். அப்படியென்றால் ஏன் அப்போது எதுவுமே தெரியாமல் போயிற்று? எனக்களித்த உணவை அவர்கள் எவருமே தொடவில்லை என்றுகூட என்னால் ஏன் அறியமுடியவில்லை?”

“ஏனென்றால் என்னுள் இருந்தது அன்பு. இப்புவியில் மிகப்பெரிய மாயை அதுவே. அது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கனிவையும் அகத்தில் நிறைக்கிறது. அதனூடாக சித்தத்தை முழுமையாகவே மாயையால் மூடிவிடுகிறது. அன்புகொண்டவன் ஒருபோதும் மெய்மையைத் தீண்டமுடியாது. யோகி என்பவன் அன்பைக் கடந்தவன். ஞானி என்பவன் முற்றிலும் அன்பற்றவன்” என்றான் பீமன். “அன்று விஷத்துடன் கங்கையில் விழுந்தேன். விஷநாகங்களால் கடிபட்டேன். விஷம் விஷத்தை முறித்தது. வாழ்வின் சாரமான பேரறிவு ஒன்றை பாதாள நாகங்கள் எனக்கு அளித்தன. இப்புவியில் எங்கும் நிறைந்துள்ள விஷத்தை வெல்ல ஒரே வழி நம்மை விஷத்தால் நிறைத்துக்கொள்வதுதான்.” சட்டென்று மீண்டும் நகைத்து “உனக்குத்தேவைப்படுவதும் விஷம்தான். நான் வேண்டுமென்றால் உன்னைத் தீண்டுகிறேன்.”

அர்ஜுனன் மெல்ல நகைத்தான். “நீ எண்ணுவதை என்னிடம் சொல்லலாம். நான் உனக்கு நல்ல விடைகளைச் சொல்லி வழிகாட்டுவேன் என்பதற்காக அல்ல. சஞ்சலங்களை சரியான சொற்களில் சொல்லிவிட்டாலே நம் அகம் நிறைவடைந்துவிடுகிறது. அந்தப்பெருமிதத்தில் அதற்குக் காரணமான இக்கட்டை மறந்துவிடுவோம். அந்த சொற்றொடரை முடிந்தவரை சொல்லிச்சொல்லி பரப்பி நிறைவடைவோம். இக்கட்டுகளின் நிகர விளைவு என்பது சிந்தனையாளர்களை உண்டுபண்ணுவதுதான்” என்றன் பீமன். அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “இத்தனை பகடியாக உங்களால் பேசமுடியுமென நான் எண்ணியிருக்கவேயில்லை” என்றான். “நான் சிந்தனையாளன் அல்லவா?” என்றான் பீமன்.

அர்ஜுனன் நகைப்புடன் “சரி, நீங்கள் சொன்னபடி என் இக்கட்டைச் சொற்களாக ஆக்கிப்பார்க்கிறேன்” என்றான். “மனிதர்களுக்கு சிறுமை ஏன் இத்தனை இயல்பாகக் கைவருகிறது? பெருந்தன்மையையும் கருணையையும் வெளிப்படுத்தி ஒளிவிடவேண்டிய மகத்தான தருணம் அமையும்போது ஏன் அது அவர்களின் கண்களுக்கே படுவதில்லை? எத்தனை நூல்கற்றாலும் எத்தனை சிந்தனை செய்தாலும் வாழ்க்கையின் இக்கட்டான தருணத்தில் எளிய உணர்ச்சிகள்தான் மேலோங்கி நிற்கும் என்றால் கல்வியும் ஞானமும் எதற்காக?” அதை அவன் உணர்ச்சிமிக்க கண்களுடன் கேட்டாலும் கேட்டு முடித்ததுமே புன்னகை செய்து “சரியான சொற்றொடராக ஆக்கிக்கொண்டுவிட்டேனா?” என்றான்.

“அழகான கேள்வி. ஆகவே அதற்கு விடைகூட தேவையில்லை” என்று பீமன் சிரித்தான். “நீ கேட்பதற்கு ஒரே பதில்தான். புழுக்கள் ஏன் நெளிகின்றன, ஏன் அவை பறப்பதில்லை?” என்றான் பீமன். “பறக்கமுடியாததனால்தான் அவை சிறகுகளைப்பற்றி கனவு காண்கின்றன. சிறகுகளை கலையாகவும் தத்துவமாகவும் ஆன்மீகமாகவும் சமைத்து வைத்திருக்கின்றன.”

அர்ஜுனன் தலையசைத்து “இல்லை மூத்தவரே. மானுடகுலத்தைப்பற்றிய உங்கள் கணிப்பை என்னால் ஏற்கமுடியாது. அது வெறும் புழுக்கூட்டம் அல்ல. அல்லது…” என்றான். அவனால் சரியாகச் சொல்ல முடியவில்லை. பீமன் அத்தனை சரியான சொற்களால் பேசுவதை அவனால் வியப்புடன்தான் எண்ணிக்கொள்ள முடிந்தது. சிலகணங்கள் தத்தளித்தபின் அவன் கேட்டான் “அன்று அந்த இடத்தில் நம் மூத்த தந்தையார் துருபதனை எதிர்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?”

பீமன் புன்னகையுடன் “அவர் கண்ணீருடன் ஓடிச்சென்று துருபதனை ஆரத்தழுவி மார்போடு இறுக்கியிருப்பார். அவனிடம் தன்னை மன்னிக்கும்படி மன்றாடியிருப்பார். அவன் மனமுருகி அவர் காலில் விழுந்திருப்பான்” என்றான். “ஆனால் அவர் அத்தனை நாள் அந்த வஞ்சத்தை நெஞ்சுக்குள் வைத்திருக்கவும் மாட்டார். தன் சினங்களை அந்தந்தக் கணங்களிலேயே உடலால் வெளிப்படுத்துபவர் அவர். அவர் அவமதிக்கப்பட்டால் அவமதித்தவன் தலையை உடைப்பார். முடியவில்லை என்றால் அவன் கையால் இறப்பார். அவமதிக்கப்பட்டவராக வாழமாட்டார்.”

“ஆம், நான் சொல்வது அதைத்தான் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “அவரைப் போன்றவர்கள் எந்தத் தருணத்திலும் தங்கள் மாண்பை விட்டுக்கொடுப்பதில்லை. இக்கட்டுகளில் எப்போதும் பறந்தெழுவதையே தேர்ந்தெடுக்கிறார்கள்.” அவன் குரலில் ஊக்கம் ஏறியது. உடலில் படர்ந்த பரபரப்புடன் எழுந்துகொண்டு “அவர் நம் தந்தைக்கு தன் மணிமுடியை அளித்த தருணத்தை எப்போது கேட்டாலும் என் உடல் சிலிர்க்கும்… குருவம்சத்தின் மகத்தான தருணங்களில் ஒன்று அது.”

பீமன் புன்னகையுடன் தலையை ஆட்டினான். “ஆம், இதுவரை அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார். இதுவரை…” என்றான். “மீண்டும் உங்கள் விஷத்தையே உமிழ்கிறீர்கள் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம்… என்னுள் இருப்பது அதுதான். என்னால் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. அவர் தன் சிறகுகளை எல்லாம் இழந்து மண்ணில் தவழும் தருணம் எது? இப்போது தெரியவில்லை, ஆனால் அதை நாம் காண்போம்.” அர்ஜுனன் சீற்றத்துடன் “அதை விரும்புகிறீர்களா? அதற்காக காத்திருக்கிறீர்களா? என்ன சிறுமை!” என்றான். “ஆம், அதை என்னுடைய சிறுமை என்றே கொள்” என்றான் பீமன்.

இருவரும் சற்றுநேரம் தங்களுக்குள் ஆழ்ந்து அமைதியாக இருந்தனர். பீமன் தன் கைகளால் அந்த இருக்கையின் மரப்பலகையை பெயர்த்து எடுத்தான். அதை சிறிய சிம்புகளாக பிய்த்து வீசிக்கொண்டிருந்தான். அர்ஜுனன் அகத்தில் அந்த மெல்லிய ஐயம் எழுந்தது. அதை அவன் நோக்கியதுமே அது பெருகி பேருருவம் கொண்டு நின்றது. “மூத்தவரே, இப்போது இந்த ஐயத்தை தாங்கள் சொல்வதற்குக் காரணம் உண்டா?” என்றான். பீமன் கண்களைச் சுருக்கி “உன் வினா புரியவில்லை” என்றான். “பெரியதந்தையார் தன் பெருந்தன்மையை இழக்கும் கணம் வரும் என்றீர்கள்!”

பீமன் உடனே புரிந்துகொண்டு கண்களில் நகைப்புடன் “ஆம்” என்றான். “அதை ஏன் சொன்னீர்கள்? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” பீமன் “நீ எண்ணுவதென்ன என்று சொல்” என்றான். அர்ஜுனன் பார்வையை விலக்கியபடி “இந்த முழுநிலவுநாளில் இளவரசுப்பட்டம் சூட்டப்படவேண்டும்” என்றான். “ஆம்” என்றான் பீமன். “மூப்பு முறைப்படி நம் தமையனுக்குரியது அந்தப்பட்டம். குலமரபுப்படி வரும் முழுநிலவுநாளில் தமையனார் இளவரசாக ஆகிவிடவேண்டும்…” என்றான் அர்ஜுனன். பீமன் மேலும் சிரித்து “சொல்” என்றான்.

அர்ஜுனன் சினத்துடன் தலைதூக்கி “என்னிடம் விளையாடுகிறீர்களா மூத்தவரே? நான் என்ன கேட்கிறேன் என உங்களுக்கே தெரியும். இந்த அஸ்தினபுரியே அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது” என்றான். பீமன் தலையசைத்தான். “ஆனால் இன்னொரு முறைப்படி துரியோதனனே இம்முடிக்குரியவர் என்று ஒரு சாரார் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். காந்தார இளவரசர் சகுனி அதை இந்நகரில் பரப்பியிருக்கிறார்.”

பீமன் “இளையவனே, அவர்களின் கோணத்தில் அதுவும் சரிதானே? இந்த மணிமுடி பதினெட்டு வருடம் நம் தந்தையார் பாண்டுவுக்கு அளிக்கப்பட்டது. இதோ பதினெட்டு வருடம் ஆகிவிட்டிருக்கிறது. அஸ்தினபுரியின் அரியணையும் செங்கோலும் இத்தனை வருடமாக கருவூலத்தில் காத்திருக்கின்றன” என்றான். அர்ஜுனன் சீற்றத்துடன் “என்ன சொல்கிறீர்கள்? இன்று குருகுலத்தில் மூத்தவர் யார்? மூத்தவரே இளவரசர் என்று தெரியாதவர்கள் பாரதவர்ஷத்தில் யார் இருக்கிறார்கள்?” என்றான். “அற்ப விவாதங்களால் நம்மை சிறுமைப்படுத்தி அகற்ற காந்தாரத்து ஓநாய் முயலுமென்றால் என்ன செய்வதென்று எனக்குத்தெரியும்” என்றான்.

பீமன் “அதை நாம் சேர்ந்தே செய்வோம்” என்றான். “ஆனால் நீ உன் பெருந்தன்மை, அறம் பற்றிய கவலைகளை எல்லாம் விட்டுவிட்டு எளிய மானுடனாக மீண்டு வந்திருப்பது உவகை அளிக்கிறது” என்றான். அர்ஜுனன் “என்னை சிறுமை செய்கிறீர்கள்” என்றான். “இல்லை இளையவனே. எளிய மிருகத்தைப்போல வேட்ட உணவுக்காக உறுமி முண்டியடித்து பல்லையும் நகத்தையும் கொண்டு போராடி வென்று உண்ணும்போதுதான் நாமெல்லாம் இயல்பாக இருக்கிறோம். நடுவே இந்த நீதிநூல்கள் வந்து நம்மை வார்த்தைகளால் நிறைத்து குழப்பியடிக்கின்றன” என்றான்.

அர்ஜுனன் சீற்றத்துடன் ஏதோ சொல்ல வந்து நிறுத்திக்கொண்டான். “நம் மூத்தவர் அஸ்தினபுரிக்கு பட்டத்து இளவரசர் ஆகவேண்டும். நாமெல்லாம் பட்டத்து இளவல்களாக இங்கே ஆளவேண்டும். அதற்காக நாம் போராடுவோம். அவ்வளவுதான் நீதி. அந்தத் தெளிவுடன் இருப்போம்” என்றபின் பீமன் வெளியே சென்றான். அர்ஜுனன் பல்லைக் கடித்து சிலகணங்கள் நின்று பின் மெல்லத் தளர்ந்தான். “இந்தக் கசப்புப் பாவனை வழியாக நீங்களும் உங்கள் ஆசைகளை மறைத்துக்கொள்கிறீர்கள் மூத்தவரே” என்றான். சென்றபடியே “இதைக்கேட்டு நான் புண்படுவேன் என்று நினைத்தாயா?” என்றான் பீமன்.

அர்ஜுனன் பீமனின் பின்னால் நடந்தபடி “சரி, அவர்கள் சொல்வதில் உள்ள நியாயம்தான் என்ன? அதைச்சொல்லுங்கள்” என்றான். “மிக எளிய நேரடியான நியாயம்தான் பார்த்தா. எந்த முறைப்படி நீ நம் தமையனுக்கு முடியுரிமை கோருகிறாயோ அந்த முறைப்படி இந்த நாட்டுக்கு முற்றுரிமை உடையவர் பெரிய தந்தையார் திருதராஷ்டிரர். பதினெட்டாண்டுகளுக்கு முன் குலச்சபை ஒப்பவில்லை என்பதனால் அவரே மனமுவந்து நம் தந்தைக்கு பதினெட்டு ஆண்டுக்கால ஆட்சியுரிமையாக அளித்தது இம்மணிமுடி. அவரது மைந்தன் இளைஞனாக ஆவது வரை மட்டுமே இது நம் தந்தை பாண்டுவுக்குரியதாக இருக்க முடியும்” என்றான் பீமன்.

“தன் இளவல் பாண்டுவுக்கு இம்மணிமுடியை அளித்த ஒரே காரணத்தாலேயே பாண்டுவின் மரணத்துக்குப்பின் நம் பெரியதந்தையார் மீண்டும் மணிமுடிசூடவில்லை. அஸ்தினபுரியின் அரியணையில் அமரவோ செங்கோலைத் தொடவோ செய்யவில்லை. அரசு இன்றுவரை அவரும் பிதாமகர் பீஷ்மரும் விதுரரும் இணைந்து ஆளும் கூட்டுப்பொறுப்பு கொண்டதாகவே இருக்கிறது. அவர் மதிக்கும் அந்த வாக்கையும் முறைமையையும் நாமும் மதித்தாகவேண்டும். பதினெட்டாண்டு காலமாகியதும் பாண்டுவின் மணிமுடியுரிமை முழுமையாகவே இல்லாமலாகிவிட்டது. அதன்பின் அதை எப்படி நாம் உரிமைகொள்ளமுடியும்?”

அர்ஜுனன் “இருங்கள் மூத்தவரே, நான் சொல்கிறேன்” என அவனைத் தடுத்தான். “முதலில் நாம் கொள்ளவேண்டியது ஒன்றை. இந்த மணிமுடியை திருதராஷ்டிரருக்கு மறுத்தவர்கள் இங்குள்ள குலச்சபையினர். பெரியதந்தையாருக்கு விழியில்லை என்பதனால் அவரை ஏற்கமுடியாதென அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்காகத்தான் நம் தந்தையார் அரசரானார். இம்மணிமுடி எவராலும் நம் தந்தைக்கு கொடையளிக்கப்பட்டது அல்ல. இது நூல் நெறிப்படி எவர் மணிமுடியை அளிக்க முடியுமோ அவர்களால் அளிக்கப்பட்டது, நம் குடிமக்களால். மன்னன் என்பவன் குலசேகரன். குலம் ஆணையிட்டால் எவனும் மன்னனாகலாம் என்கின்றது பராசரநீதி.”

“ஆகவே இது திருதராஷ்டிரரால் பாண்டுவுக்கு பதினெட்டாண்டுகாலம் தற்காலிகப் பொறுப்பாக அளிக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றான் அர்ஜுனன். “இம்மணிமுடியின் உரிமை பாண்டுவிடமிருந்து விலகினால் அது சென்று சேர்வது மீண்டும் குலத்திடமே ஒழிய திருதராஷ்டிரரிடம் அல்ல. குலம் மீண்டும் அதை தருமருக்கு அளிக்கலாம். திருதராஷ்டிரரின் மைந்தருக்கும் அளிக்கலாம். இதுவே முறைமை.”

பீமன் புன்னகை செய்தான். “அத்துடன் பதினெட்டாண்டுகாலம் மட்டுமே பாண்டுவுக்கு மணிமுடி உரிமை உள்ளது, அதன்பின் திருதராஷ்டிரரின் மைந்தன் மணிமுடி சூடலாமென்ற வாக்குறுதியை அளித்தவர் யார்? பாண்டு அதை அளித்தாரா? இல்லை. அவ்வாக்குறுதியைச் சொன்னவர் பீஷ்மபிதாமகர். அவர் அப்போது திருதராஷ்டிரரை ஆறுதல்படுத்தும்பொருட்டு சொன்னது அது” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, நமக்கெல்லாம் அவர்தான் பிதாமகர். ஆனால் அவருக்கும் அஸ்தினபுரியின் மணிமுடிக்கும் என்ன உறவு? அவர் எப்படி இம்மணிமுடியை வாக்குறுதியளிக்க முடியும்?”

பீமன் நகைத்து “பார்த்தா, தேவைப்பட்டால் நீயும் யுதிஷ்டிரனே என நான் அறிவேன்” என்றான். “பிதாமகர் பீஷ்மருக்குரியதல்லவா இந்த மணிமுடி? அவரிடமிருந்து நம் மூதாதையர் பெற்றுக்கொண்டதல்லவா அஸ்தினபுரி?” என்றான் . அர்ஜுனன் “ஆம், அதையே நான் சொல்கிறேன். இந்த மணிமுடியை துறப்பதாக தன் தந்தை சந்தனுவுக்கு வாக்களித்தவர் பிதாமகர். அப்படியென்றால் இதில் அவர் எவ்வகையிலும் உரிமை அற்றவர். அவர் வாக்குறுதி அளித்ததே சந்தனு மன்னருக்கு அளித்த வாக்குறுதிக்கு எதிரானது.”

“தெளிவாகப்பேசினாய். இத்தெளிவை உன் தமையனிடம் சொல். அள்ளி அணைத்து உச்சி முகர்வார்” என்றான் பீமன். “நான் காட்டுக்குச் செல்கிறேன். உள்காட்டில் சில மலைப்பாம்புகளை பார்த்து வைத்திருக்கிறேன்.” அர்ஜுனன் அந்தப் புறக்கணிப்பால் சினமடைந்து ஏதோ சொல்ல முயல்வதற்குள் “நீ சொன்னவை வலுவான வாதங்கள் பார்த்தா. எனக்கு அவற்றில் ஆர்வமில்லை. அந்த வாதங்களை வாதத்தால் எதிர்கொள்வதை விட அவ்வாதங்கள் நிறைந்திருக்கும் தலைகளையும் நெஞ்சுகளையும் கதையால் அடித்து உடைப்பதே எனக்கு எளிது” என்றபடி பீமன் தன் ரதம் வருவதற்காக கைகாட்டினான்.

ரதத்தில் ஏறிக்கொண்டு “எங்கு எப்போது எவரது தலைகளை உடைக்கவேண்டும் என்று மட்டும் எனக்குச் சொல்லுங்கள். வந்துவிடுகிறேன்” என்றான்.  அவன் கைகாட்ட ரதம் சகட ஒலியுடன் கிளம்பிச்சென்றது. அவன் செல்வதை நோக்கி நின்ற அர்ஜுனன் மெல்ல தோள் தளர்ந்து திரும்பினான். யாரிடம் வாதிடுகிறேன்? மண்ணில் உரிமைகளுக்காகப் பேசும் அனைவரும் சகமனிதர்களிடம் சொல்வதைவிட அதிகச் சொற்களை ககனவெளியிடம்தான் சொல்வார்கள் போலும். அங்கிருந்துதான் அவர்கள் தங்களுக்குரியதை அகழ்ந்து எடுத்தாகவேண்டும்.

அர்ஜுனன் மீண்டும் உள்ளே சென்று வில்லை எடுத்தான். கைநிறைய அம்புகளை அள்ளிக்கொண்டாலும் தொடுக்கத் தோன்றவில்லை. வீசிவிட்டு சால்வையை எடுத்து போர்த்திக்கொண்டு வெளியே வந்தான். சாரதி ரதத்தைக்கொண்டுவந்து நிறுத்த ஏறிக்கொண்டு “அரண்மனைக்கு” என்றான். குதிரைகளின் குளம்படியோசை கருங்கல் பரப்பிய சாலையில் ஒலிக்கத் தொடங்கியதும் அந்த ஓசை தன் எண்ணங்களை ஒழுங்குபடுத்தித் தொகுப்பதை உணர்ந்தான். பீமன் சொல்வது மட்டுமே உண்மை என்று தோன்றியது. இளவரசுப்பட்டத்தைப்பற்றிய விவாதத்தில் ஒவ்வொருவரும் அதன்மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்பதன் அடிப்படையிலேயே முடிவெடுத்தனர். அதற்கான நியாயங்களை உருவாக்கி முன்வைத்து வாதாடினர். ஒருவர் கூட நியாயத்திலிருந்து தொடங்கவில்லை. ஒருவேளை அப்படி எவரேனும் தொடங்கினால்கூட அதற்குப்பின் அவரது சுயநலம் உள்ளது என்றே எண்ணத்தோன்றும் என்று நினைத்துக்கொண்டான்.

தன் அரண்மனைக்குச் சென்றதும் சேவகனை அழைத்து “இளைய அரசியாரை நான் காணவேண்டுமென்று விரும்புவதாகச் சொல்” என்றான். நீராட்டறைக்குள் இளவெந்நீர் நிறைந்த செம்புக்கடகத்தில் அமர்ந்து கொண்டிருக்கையில் குந்தியிடம் எதைப்பேசுவதென்றே அவன் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. அங்கே தருமனின் இளவரசுப்பட்டம் பற்றிய செய்திகள்தான் நிறைந்திருக்கும். அவள் அத்தனைகாலம் ஒவ்வொருநாளும் காத்திருந்த தருணம். அவளுடைய முழுத்திறனும் வெளிப்படவேண்டிய நேரம்.

அவள் அந்தத் தருணத்தை கொண்டாடிக்கொண்டிருப்பாள் என்று அவன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். ஆண்டுக்கணக்கில் படைக்கலப்பயிற்சி எடுத்த வீரன் களத்தில் அறியும் களிப்பு அது. இதுதான் அவள் களம். அவள் முழுவுருவம் கொண்டு எழும் பீடம். அவளைச் சந்திப்பது எப்போதுமே அவனுக்குள் தத்தளிப்பை நிறைக்கும் அனுபவமாகவே இருந்தது. அவளுடைய சதுரங்கக் களத்தில் ஒர் எளிய காயாக மாறிவிட்டோம் என்ற சிறுமையுணர்வு. தன் வீரமும் திறனும் எல்லாம் அந்தச் சதுரங்கத்தில் பொருளற்றவை என்ற உணர்வு அளிக்கும் அச்சம். சிலந்தி வலைபின்னுவதுபோல அவள் மெல்ல உருவாக்கும் உரையாடலை அறுத்துக்கொண்டு வெளியே பாய்ந்துசெல்லவே அவன் விரும்புவான்.

ஆனால் அப்போது தருமனைப்பற்றிய செய்திகளை அறியாமல் இருக்கமுடியாது என்று உணர்ந்தான். அவனை மீறி ஏதேதோ நிகழ்ந்துவிட்டிருக்கின்றன. தன் வில்லம்புகளுடன் எங்கோ புதைந்து வாழ்ந்துகொண்டிருந்துவிட்டான். அதை எண்ண எண்ண ஏதேதோ நிகழ்ந்துவிட்டன. இனி வாளாவிருக்கலாகாது. அவளைப்பார்த்து அனைத்தையும் பேசிவிடவேண்டியதுதான். எண்ண எண்ண அந்த இளவெந்நீரில் இருக்கவேமுடியாதென்று தோன்றியது. அவன் எழுந்து தன் முதுகை கடற்பஞ்சால் தேய்த்துக்கொண்டிருந்த சேவகனை விலக்கி மரவுரியை எடுத்துக்கொண்டான்.

ஆடையணிந்துகொண்டிருக்கையில் சேவகன் வந்து வணங்கி “மூத்தவர்” என்றான். வரச்சொல் என்று சைகை காட்டியபின் அர்ஜுனன் எதற்காக இப்போது வருகிறார் என எண்ணினான். முடியுரிமை பற்றிய பேச்சுக்கள் அவரை நிலைகொள்ளாது ஆக்கிவிட்டிருக்கவேண்டும். மண்ணாசையின் வதை. அவனுக்கு அப்போது ஓர் எரிச்சல்தான் வந்தது. தருமனிடம் காலையில் பீமனிடம் பேசிய எதையும் சொல்லக்கூடாது என்றும் அவரே அந்த நியாயங்களைப்பேசினால் உடனே மறுத்துரைக்கவேண்டும் என்றும் எண்ணிக்கொண்டான்.

அந்த மெல்லிய முகச்சுளிப்புடன் அர்ஜுனன் வெளியே வந்து தருமனை அணுகி தலைவணங்கினான். தருமன் கைகாட்டி அவனை அமரச்சொன்னான். சஞ்சலத்துடன் தருமன் இருப்பதை அவனுடைய கைவிரல்களின் அசைவு காட்டியது. அர்ஜுனன் அமர்ந்து சால்வையை சரிசெய்தபின் நிமிர்ந்து அவன் முகத்தை நோக்கினான். கண்களுக்குக் கீழே துயிலின்மையின் நிழல் விழுந்திருந்தது. இதழ்களுக்கு இருபக்கமும் புதிய சுருக்கம் விழுந்திருந்தது. தருமன் “நான் தடுமாறிக்கொண்டிருக்கிறேன் தம்பி” என்றான்.

அச்சொற்றொடரை காதில்கேட்டதுமே அர்ஜுனன் அகம் நெகிழ்ந்தது. எழுந்து தருமனை தொடவேண்டும் போலிருந்தது. “மூத்தவரே, ஒருகணம்கூட தாங்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை. என் வில்லும் உயிரும் தங்களுக்குரியவை. எல்லா நியாயங்களும் நம்முடன் உள்ளன. இக்குடிமக்களும் நம்மிடமே” என்றான்.

தருமன் நிமிர்ந்து “அதை நான் அறிவேன் தம்பி. நீ இருக்கையில் நான் இப்புவிக்கே அரசன்” என்றான். தலையை அசைத்து சஞ்சலத்துடன் “சற்றுமுன் அன்னையைப் பார்த்துவிட்டு வந்தேன். மணிமுடிக்கு நானே உரியவன் என்கிறார்கள்” என்றான். “ஆம், அதிலென்ன ஐயம்?” என்றான் அர்ஜுனன். தருமன் தலையை அசைத்து “இல்லை தம்பி, அதுவல்ல முறை. அதுவல்ல நெறி” என்றான். “என்ன நெறியைக் கண்டீர்கள் மூத்தவரே?” என்றபடி அர்ஜுனன் சினத்துடன் எழுந்துவிட்டான்.

“இளையவனே, அரசு என்பது என்ன? முதலில் அது அரசகுலத்தவரின் அதிகாரம். அடுத்த கட்டத்தில் அது குடிகளின் கூட்டுஅதிகாரம். ஆனால் அதற்கும் அடியில் அது குலமரபின் அதிகாரமேயாகும். மண்ணில் முதலில் உருவாகிவந்த அரசு என்பது குலமூத்தாரால் உருவாக்கப்பட்டது. பின்னர் அது குடிச்சபைகளுக்கு வந்தது. அதன்பின்னரே அரசகுலங்கள் தோன்றின. இன்றும் மச்சர்கள் போன்ற சிறிய அரசுகளில் குடிச்சபையே உள்ளது, அரசன் இல்லை. பழங்குடிகளிடம் குலமுறையே உள்ளது, குடிச்சபைகூட இல்லை” என்றான் தருமன். “ஆகவே அரசகுலமரபுகள் அனைத்தையும் குடிமரபுகள் மறுக்க முடியும். குடிமரபுகளை குலமுறைமைகள் மறுக்கமுடியும்.”

அவன் சொல்லவருவதென்ன என்று அர்ஜுனனுக்கு புரியவில்லை. அவன் பார்த்து அமர்ந்திருந்தான். “ஆகவே அடியாழத்தில் அரசதிகாரம் என்பது மூத்தோர் கொள்ளும் அதிகாரமே. மூத்தோர் வணக்கத்தையும் நீத்தோர் வழிபாட்டையும் ஒரு சமூகம் கைவிடுமென்றால் ஒரு தலைமுறைக்குள்ளேயே அங்கே ஒரு நல்லரசு இல்லாமலாகும். அங்கே படைக்கலங்களின் அதிகாரம் மட்டுமே எஞ்சியிருக்கும்” தருமன் சொன்னான். “ஒருபோதும் ஒருநாட்டில் மூத்தோர் சொல் மதிப்பழியலாகாது. அந்த மொத்தச்சமூகமே அச்சொல்லைக் காப்பதற்காக தன்னை இழக்க சித்தமாக இருந்தாகவேண்டும். அக்குலமே அழிந்தாலும் அதன் மூத்தார் சொல் நின்றாகவேண்டும்.”

புரிந்துகொண்டு அர்ஜுனன் மெல்ல கால்களை நீட்டி தளர்ந்தான். “அரசமுறைப்படி நான் அஸ்தினபுரிக்கு உரிமையானவன். குடிச்சபை முறைப்படியும் அப்படியே. ஆனால் பீஷ்மபிதாமகரின் சொல்லின்படி இம்மணிமுடி துரியனுக்குரியது. நானும் நீயும் இக்குடிகள் முழுதும் அச்சொல்லைக் காக்கவே உயிர்வாழவேண்டும். இதுவே முறை” என்றான் தருமன். அர்ஜுனன் தலையசைத்தான்.

“அதை நம் அன்னை புரிந்துகொள்ளமுடியாது என்கிறார்கள்” என்றான் தருமன். “நீ எனக்காக இதை அவர்களிடம் சொல். என்னால் அவர்களை ஏறிட்டே நோக்கமுடியவில்லை. அவர்களை அவமதிக்கும் எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒருபோதும் பீஷ்மபிதாமகரின் எண்ணத்தை மீறி நான் இம்மணிமுடியை சூடப்போவதில்லை. அன்னை அவரது கருவறை உரிமையை என்மேல் செலுத்தினால் உடைவாளை கழுத்தில் வைப்பதைத்தவிர எனக்கு வேறுவழியில்லை” என்ற தருமன் எழுந்து “இதில் எந்த மறுவிவாதத்திற்கும் இடமில்லை என அன்னையிடம் சொல். உன் சேவகன் அன்னையிடம் சென்று நீ சந்திக்க விரும்புவதாகச் சொல்வதை என் சேவகன் கண்டுவந்து சொன்னான். உடனே கிளம்பிவந்தேன்.”

அர்ஜுனன் “தங்கள் ஆணை” என்றான். தருமன் திரும்பி நோக்கி பின் பெருமூச்சு விட்டு “ஆம், ஆணை. நீயும் உன் உடன்பிறந்தார் நால்வரும் தலைமேல் சூடிக்கொள்ளவேண்டிய ஆணை இதுவே. நாம் நம் மூதாதையரின் குருதி. மூதாதையர் மண்ணில் நம்மை விட்டுச்செல்வது அவர்களின் சொல் வாழவேண்டும் என்பதற்காகவே” என்றான்.

அர்ஜுனன் தருமனுக்கு முடியாசை இல்லையா என எண்ணிக்கொண்ட அதே கணம் தருமன் “நீ எண்ணுவது புரிகிறது. எனக்கு முடியாசை உள்ளது. முடியை இழப்பதில் துயரமும் கொள்கிறேன். ஆனால் நெறி நம் அனைவரை விடவும் மேலானது” என்றான். பின் வெறுமைகலந்த புன்னகையுடன் “இவர்களை நான் அறிவேன். முடியுரிமை இல்லையேல் நமக்கு இந்நாடு இல்லை. சரி, அதனாலென்ன? மீண்டும் சதசிருங்கம் செல்வோம். மரவுரி அணிந்து வேட்டையாடி உண்டு வாழ்வோம். நம் தந்தை அங்குதானே இருக்கிறார்? அவர் நமக்கு சதசிருங்கத்தையே அளித்துச்சென்றார் என கொள்வோம்” என்றான். ”அன்னையிடம் பேசு” என்றபின் வெளியே சென்றான்.

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைவெண்முரசு விழா ஃபேஸ்புக் பக்கம்
அடுத்த கட்டுரைபுராவதியும் சுநீதியும்