தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்:ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் மிகவும் மதிக்கும்,வியந்து போற்றும் எழுத்தாளர்  நீங்கள். சிறந்த விமர்சகரும் ஆனவர்.தங்களின் சர்ச்சைகளும்,கலகங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருபவை.ஆனால் நான் தங்களின் சர்ச்சைகளை ஆரோக்கியமான கண்ணோட்டத்துடனும் நேர்மறையான சிந்தனையுடனுமே அணுகுகிறேன்.ஒருவேளை,பலரும்பழி சுமத்துவதுபோல்,தங்களின் செயல்களில் உள்ளூர அரசியல் ஒளிந்திருக்கிறதா எனக் கண்டறியும் திறன் எனக்கில்லை.தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் பற்றிய தங்களின் விமர்சனம் குறித்தே நான் இங்கு எழுதுகிறேன்.எனக்குத் தெரிந்தவரை.

 இது பற்றிய விமர்சனம் உங்களிடமிருந்து வரும் என்பது நான்        எதிர்பார்த்ததுதான்.சொல்லப்போனால் சற்று தாமதம்.’இரு படைப்பாளிகள்’ என்ற தங்களின் பதிவின்போதே வன்னியர் இலக்கியம் என்ற சொல் இடம்பெற்றுவிட்டது.(சொன்னவர் அபிமானத்திற்கும்,மதிப்பிற்குமுரிய கவிஞர் அமிர்தம் சூர்யா அவர்கள்).நீங்களாகட்டும்,மற்றவர்களாகட்டும்…த.ப.பே த்தை ஏன் நேர்மறையான,ஆரோக்கியமான கண்ணோட்டத்தோடு அணுகக்கூடாது?பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாசு,வன்னியர்களின் நலனுக்காக பலவழிகளில் பாடுபடுகிறார்.(அதற்காக, மற்றவர்களுக்காக பாடுபடவில்லை என்பது இதன் அர்த்தமாகாது)அதில் த.ப.பே.மும் ஒன்று. சொல்லப்போனால் சற்று தாமதமான ஒன்று. கண்மணி குணசேகரனைப் பற்றி பரிந்துரைத்து நீங்கள் நிறையவே செயல்படுவது வரவேற்கத் தகுந்த,பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.சாதி அரசியல் செய்து ஒதுக்கும் படைப்பாளியாய் நீங்களில்லை. கண்மணி குணசேகரனே ஆதங்கப்படுவது போல் அவரை வன்னியர்கள் முன்வந்து பாராட்டவில்லை.இங்குதான் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.ஏன் பாராட்டவில்லை? அவரென்ன வன்னியர்களுக்கு எதிரானவரா? இல்லையே.பிறகேன்? ஏனெனில், வன்னியர்களின் இலக்கிய அறிமுகம் ஆளுமை, என்பது அந்தளவில்தான் உள்ளது.குறைந்தபட்சமாகவே இருப்பவர்களில், பாராட்டிக் கொண்டுதான் உள்ளனர்.பாராட்டாதவர்களின் இலக்கிய ரசனை உங்களளவுக்கு இல்லாமலிருக்கலாம் .அதுவும் வளர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது.

தமிழகத்தின் தனிப்பெரும்பான்மையான சமுதாயமாக வன்னியர் சமுதாயம் உள்ளது.எனினும் மிகமிகப் பிற்படுத்தப்பட்ட ,விழிப்புணர்வற்ற சமுதாயமாகத்தான் உள்ளது.அரசியலில் மட்டும் ஓரளவு ஆளுமையுடையதாயிருக்கிறது.தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் கூட வன்னியர்களால் தலைதூக்கமுடியாத நிலைதான்.பலரும் சிற்றின்பங்களினாலும்,போதிய கல்வியறிவு,பொருளாதாரம்,விழிப்பணர்வு அற்றவர்களாகவே உள்ளனர்.தாழ்த்தப்பட்டவர்களைப் போலவே இருக்கிறது இவர்களின் வாழ்க்கைப் படிநிலையும்.இதில் இலக்கிய ஆளுமை என்பதேது? ஏதாவது ஒரு பத்திரிக்கையில் கவுண்டர்,நாயக்கர்,ரெட்டியார் என்று பொதுவாகக் குறிக்கப்பட்டு படிக்க நேர்ந்தால் ,இச்சொற்கள் வன்னியர்களை நினைவுபடுத்துமா?ஆனால்,உண்மை நிலவரத்தில் இதுபோன்ற சாதிப்பட்டங்களோடு பல லட்சம் வன்னியர்கள் காலங்காலமாக வாழ்ந்துதான் வருகிறார்கள்.(படையாட்சி மட்டுமே விதிவிலக்கு).இதற்கென்ன காரணம்?

 உதாரணமாக கவுண்டர் என்ற சாதிப்பட்டம் ,எவ்விதமான நிலஅடையாளமும் அற்ற ,பொதுநிலையில்,கொங்கு வெள்ளாள கவுண்டர்களையே குறிக்கிறது.ஏன்? கவுண்டர் என்ற சொல்,உண்மையில் பல பிரிவினருக்குப் பொதுவாக இருந்தபோதும், கொ.வெ.கள் நன்கு முன்னேறியவர்களாக பெரும்பான்மையோர் உள்ளனர்.அச்சு ஊடகம்,திரைப்படம் போன்ற காட்சி ஊடகங்களில் இவர்களே கவுண்டர்கள் என்ற அடையாளத்தோடு,வெளிவந்து,பதிவாகி,உள்ளனர்.நீங்களும் தருமபுரியில் வசித்தவர் என்பதால் நன்கு அறிந்திருக்கலாம்.(வாழ்விலே ஒருமுறை – என்ற தங்களின் நூலில், ஒரு அப்பாவி கிராமத்தானைப் பற்றி குறிப்பட்டிருப்பீர்கள்.அவரை,”...கவுண்டர்சாதியைச் சேர்ந்தவர்.கவுண்டர் என்றால்   
கொங்கு வெள்ளாள கவுண்டர் இல்லை.வன்னியக் கவுண்டர்.ஆனால்,இந்த சாதியும் கொ.வெ.க.களுக்கு இம்மியும் குறைந்ததில்லை” என்று.இது பெருமைக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.படிநிலையில் உண்மையில்லை)  

மருத்துவர் இராமதாசு வெளிப்படையாகப் பேசுபவர்.நேரடியாகவும்,காட்டமாகவும் அவர் செயல்பாடுகளிருக்கும்.திரைப்படங்களிலும்,பத்திரிக்கைகளிலும் கவுண்டர்,முதலியார்,தேவர்,நாடார்,நாயுடு மற்றும் பல பெயர்கள் இடம்பெறும்போது,இது மிகவும் இயல்பாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.அதற்கு நாம் பழக்கப்பட்டுள்ளோம்.ஆனால் படையாச்சி,வன்னியர் என்று வந்தால்,சாதிவெறி,திணிப்புமுயற்சி,ஆபாசம் ,தவறான முன்னுதாரணப் போக்கு என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது.மற்றவர்கள் த.ப.பே என்பதுபோல் அறிவிக்கப்பட்ட அமைப்பாக  அல்லாமல்,நல்ல புரிதல்களுடன் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற உண்மையை நான் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா?ஆனால், மருத்துவர் தனக்கேயுரிய பாணியில் நேரடியாக செயல்படுகிறார்.அவ்வளவுதான்.இது ஒரு தேவையாகவுமிருக்கிறது.தலித் இலக்கியம் போலத்தான்.மற்றபடி அரசியல் ,கட்சி வளர்ச்சியின் பொருட்டாகவே செய்யப்படுகிறது என்ற பார்வையை,அவதூறை புறந்தள்ளிவிடலாம் என்றே கருதகிறேன்.
                     
  பொதுவாக எழுத்தாளர்கள் தங்களை சாதி,மதம்,இனம் சார்ந்து பொது அடையாளத்தின்கீழ் காட்டிக்கொள்ள தயங்குவார்கள். என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
இதில் எந்தளவு உண்மையிருக்கிறது.அவரவர் சார்ந்த சாதியை அவரவர் பதிவு செய்வது பெரும்பான்மையாக நடந்துகொண்டுதானிருக்கிறது.
நல்ல இலக்கிய வாசகன் ஒருபோதும் எழுதுபவன் தன் இனம்,மதம்,சாதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்க மாட்டான்
உண்மைதான். ஆனால் அவ்வாறு இருக்கும்பட்சத்தில்,இன்னும் வெளிவராத பலருக்கு ,அது நம்பிக்கையை ,உந்துதலை ஏற்படுத்துமல்லவா.நாம் இன்னமும் சாதி என்பது ஒழியாத,ஒழிக்க விரும்பாத காலகட்டத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.சாதிகளின் பேரில் கீழ்த்தரமாக நடத்தப்படுவதுதான் அனுமதிக்கமுடியாதது.
அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு. இத்தகைய அடையாளப்படுத்தல்கள்மூலம் மக்களை ஒன்றாக்கி  அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் அரசியல்வாதிகளே இத்தகைய அமைப்புகளை உருவாக்குகிறார்கள். அவற்றில் இணைவதன்மூலம் எழுத்தாளர்கள் தங்களை வழிநடத்தும் பொறுப்பை அரசியல்வாதிகளுக்கு அளிக்கிறார்கள். தன்னகங்காரம் கொண்ட ஒரு சாதாரண எழுத்தாளன்கூட அதற்கு துணிய மாட்டான்
துவக்க விழாழா அன்று, மருத்துவர் இராமதாசு,குறைகளைச் சுட்டிக்காட்டி எழுதுங்கள்.என்னைப் பற்றி விமர்சியுங்கள்.அதைத்தான் நானும் விரும்புகிறேன்.வரவேற்கிறேன் என்று பேசினார் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.இதை பல சந்தர்ப்பங்களில் கடைபிடித்தும் வந்திருக்கிறார்.எ.கா.மக்கள் தொலைக்காட்சி பற்றிய சான்றோர்களின் விமர்சனக்கூட்டம்.
இலக்கியத் தளத்தில் எழும் கேள்விகள் மிக அடிப்படையானவை. இனிமேல் இந்த எழுத்தாளர்கள் ஒரு குழுவாகச் செயல்படுவார்களா? ஒருவர் எழுதியதை பிறர் பாராட்டிக் கொள்வார்களா? இலக்கிய மதிப்பீடுகளில் இனி வன்னியர் என்ற பரிசீலனையும் இடம்பெற வேண்டும் என்று கோருவார்களா?
இப்படிப்பட்ட ஐயங்கள் எழுப்புவது தேவையற்றது.மற்ற கலை, இலக்கிய அமைப்புகளைப்போலத்தான் இதுவும்.
உயிர்மை,காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை,தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை
கலகம் வரவேற்கத்தகுந்ததுதான்.அவர்களுக்குத் தெரியாததா?ஏன் தூண்டிவிடுகிறீர்கள்? இருந்தாலும் நேர்மறையாகவே ஏற்றுக்கொள்கிறேன்.
மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தமிழ்ப்பற்று, மக்கள் தொலைக்காட்சியின் செயல்பாடு இரண்டியிலும் மரியாதை கொண்டவன் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்
நேர்மையான பதிவு.பாராட்டத்தகுந்தது.நன்றி.

கண்மணி குணசேகரனும்.பழமலய் அவர்களும் மேடையில் உரசிக்கொண்டது,ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சாதாரண சிக்கல் போன்றதே.பாவம்.அதைக்கூட அவர்கள் ஒளிவுமறைவாய்,உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாதவர்களாக நேரடியான செயல்பாடுகளும்,மனமும் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.மற்றபடி,அவர்களுக்கள் நல்ல புரிதல் உண்டு என்பதை ஐயமுள்ளவர்கள் விசாரித்துத் தெரிந்துகொள்ளட்டும்.

இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடத்துவது,எழுத்தாளர்களுடனான உறவை வைத்துக்கொண்டு ஒருவர் தன்னை வளர்த்துக்கொள்வது ,நம்பிக்கையையும் ,உந்துதலையும்,ஆர்வத்தையும் ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகள் ஆரம்ப நிலையில் இருக்கும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களை வளர்த்தெடுக்க உதவுமல்லவா.நீங்கள் கூட அவ்வப்போது எழுதி வழிகாட்டி உதவுகிறீர்கள் அல்லவா.அதுபோன்றதொரு நோக்கத்தோடு செயல்படவே துவங்கப்பட்டதுதான் த.ப.பே.
இதில் மிகவும் முக்கியமான,அடிப்படையான ஒன்று.இது வன்னியர்களுக்கு மட்டுமேயான அமைப்பு என்பதே மிகவும் தவறு.ஆலோசகர்களாக பலரும் பல சாதியினரும் இருக்கிறார்கள்.ஆதரவுக்கரம் நீட்டி ,இணைந்துகொள்ள விரும்பும் யாவரையும் ,ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர் என்பதே நான் அறிந்தது.

நடந்து முடிந்தது ஒரு குடும்ப நிகழ்வு.இதில் நண்பர்களுக்கும் இடம் உண்டு.
முத்து

*

அன்புள்ள முத்து,

உங்கள் கடிதம். நீங்கள் சொல்வது சரி– இம்மாதிரி விஷயங்களின் சாதகமான தரப்பை மட்டும் பார்த்தால். ஆனால் அதை இந்தியாவில் நிகழும் விஷயங்களின் பார்வையில் நோக்கினால் தவறானவையே நிகழும் என்பதே மனதில் எழுவதாக இருக்கிறது.நான் ஏற்கனவே பலமுறை எழுதியிருப்பதுபோல, தர்மபுரி திருப்பத்தூர் மாவட்டங்கள் வன்னியர், யாதவர்,தலித் சாதிகளின் முன்னேற்றம் மூலமே வளர்ச்சிப்பாதையில் காலெடுத்துவைக்க முடியும். நான் தர்மபுரியில் வாழ்ந்த நாட்களில்பாட்டாளி மக்கள்  கட்சி உருவானது. அது வன்னியரிடையே உருவாக்கிய உணர்வு, அதன் மூலம் உருவான பொருளியல் மாற்றம் எல்லாவற்றையும் கண்டிருக்கிறேன். ஆகவே அதை எப்போதும் சாதகமாகவே குறிப்பிடவும் செய்கிறேன். ஆனாலும் கோட்பாடு- கலை இரு தளத்திலும் சாதிய அடையாளத்துடன் திரள்வது உண்மைகளை பார்க்க முடியாத நிலையையே உருவாக்கும், பார்வையை குறுக வைக்கும், நீண்டகால அளவில் தேக்கத்தை உருவாக்கும் என்றே எண்ணுகிறேன். என் நோக்கில் எழுத்தாளர்கள் எந்த அடையாளத்துடன் திரண்டாலும் நிகழ்வது இதுவே. தலித்தாக திரண்டாலும்கூட. நீங்கள் சொல்வதுபோல நல்லது நடந்தால் அது வரவேற்கத்தக்கதே. பாப்போம்
ஜெ

நிழல் நாடுவதில்லை நெடுமரம்

படைப்பாளிகள்பேரவை,ரமணர்,சைவசித்தாந்தம்:கடிதங்கள்

முந்தைய கட்டுரைரசனை இதழ்
அடுத்த கட்டுரைகீதை வழிகள்