‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29

இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில் மனிதர்களை ஊட்டி வளர்ப்பதற்காக பூமியன்னையே பசுக்களின் வடிவெடுத்து வந்தாள் என்றனர் முனிவர்கள். பசுக்களை மேய்க்கும் ஆயர்குலமே குலங்களில் முதன்மையானது என்றனர். ஆயர்களிலிருந்தே பிற அனைத்துக்குலங்களும் உருவாகி வந்தன என்று புராணங்கள் சொல்லின.

ஆரியவர்த்தத்தின் ஆயர்குலங்களை யாதவர்கள் என்றனர். அவர்கள் யயாதியின் மைந்தனான யதுவின் வம்சத்தில் பிறந்தவர்கள் என்று யாதவபுராணங்கள் வகுத்தன. அத்ரி பிரஜாபதிக்கும் அனசூயைக்கும் சந்திரன், துர்வாசர், தத்தாத்ரேயர் என்னும் மூன்று குழந்தைகள் பிறந்தன. சந்திரனிலிருந்து புதன் பிறந்தான். புதனிலிருந்து புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் யயாதி என்று குலமுறை தொடர்ந்தது.

யயாதிக்கு தேவயானியில் யது என்றும் துர்வசு என்றும் இரு மைந்தர்கள் பிறந்தனர். யயாதி சுக்கிர முனிவரின் சாபத்தால் முதுமையை அடைந்தபோது தன் மைந்தர்களிடம் அம்முதுமையை ஏற்றுக்கொள்ளும்படி கோரினான். பிற மைந்தர் தயங்கியபோது யயாதியின் இரண்டாவது மனைவியும் அசுரகுலத்தோன்றலுமான சர்மிஷ்டையின் மைந்தன் புரு முதுமையை ஏற்றுக்கொண்டான்.

தந்தையால் தீச்சொல்லிடப்பட்டு நாடு மறுக்கப்பட்ட துர்வசு வடதிசையில் காந்தார நாட்டைநோக்கிச் சென்றான். யது தனக்குரிய நிலம்தேடி தன் படைகளுடன் தென்றிசை நோக்கி வந்தான். அஸ்தினபுரியின் கங்கையைக் கடந்து, மச்சர்கள் ஆண்ட யமுனையைக் கடந்து, மாலவத்தையும், கிகடர்களின் தேவபுரியையும் தாண்டி தென்மேற்காகச் சென்றான். ஒவ்வொருநாட்டிலும் அந்நாட்டுப்படைகள் வந்து அவனை எதிர்கொண்டு உணவும் நீரும் அளித்து அவர்களின் நிலத்தில் தங்காமல் கடந்துபோகச் செய்தன. இறுதியாக நிஷாதர்களின் நாட்டில் தோலூறிய கழிவுநீர் ஓடிய சர்மாவதி நதியை அடைந்தான். நிஷாதர்கள் அவர்களை மூன்றுநாட்களுக்குள் நாட்டைக்கடந்துபோகும்படி ஆணையிட்டனர்.

யதுவும் அவன் படையினரும் மேலும் சென்று மனிதர்கள் வாழாது வெயில் பரவி வீண்நிலமாகக் கிடந்த பர்ணஸா என்னும் ஆற்றின் படுகையை அடைந்தனர். அங்கே யது கடந்துசென்ற காற்றில் ‘ஆம்’ என்ற ஒலியைக் கேட்டான். அங்கேயே தங்கும்படி படைகளுக்கு ஆணையிட்டான். அவனுடன் வந்த ஆயிரம் வீரர்கள் பர்ணஸாவின் வெற்று மணற்பரப்பில் ஊற்று தோண்டி நீர் அருந்திவிட்டு அங்கே ஒரு சிறிய பிலுமரச்சோலையில் ஓய்வெடுத்தனர். யதுவின் அமைச்சரான லோமரூஹர் நிமித்தங்களைக் கணித்து மேற்கொண்டு பயணம்செய்யலாமா என நோக்கினார்.

அச்சோலையில் இருந்து எந்தப்பறவையும் மேலும் தென்மேற்காகப் பயணம் செய்யவில்லை என்பதையும் தென்மேற்கிலிருந்து எப்பறவையும் சோலைக்கு வரவுமில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். எலும்புதின்னும் கருஞ்சிறகுப் பருந்தான ஊர்த்துவபக்‌ஷன் தொலைவில் வானில் சுற்றிக்கொண்டிருந்தது. “இளவரசே, இந்நிலத்துக்கு அப்பால் வெறும்பாலை. அங்கே பறவைகள்கூட வாழமுடியாது. அது ஊர்த்துவபக்‌ஷனுக்கு மட்டுமே உணவூட்டும்” என்ற லோமரூஹர் “இங்கு நீரே இல்லை. செடிகளேதும் இங்கு வளர்வதுமில்லை. ஆகவேதான் இங்கு ஜனபதங்கள் உருவாகவில்லை. நாம் மேலும் தென்கிழக்குத் திசை நோக்கிச் செல்வதே சரியாக இருக்கும்” என்றார்.

அவரது சொல்லைக் கேட்ட யது “அமைச்சரே, தாங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தச் சிற்றாறை நான் அடைந்தபோதே நான் விரும்பும் மண்ணுக்கு வந்துவிட்டேன் என்ற உணர்வை அடைந்தேன். இங்கேயே நான்குநாழிகை நேரம் நான் காத்திருக்கப்போகிறேன். நான் வழிபடும் பூமியன்னை என்னை வழிகாட்டி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மேலும் தென்மேற்காகச் சென்று பாலையில் ஊர்த்துவபக்‌ஷனுக்கு உணவாக ஆவதையே நாடுவேன்” என்றான். அரசனின் ஆணையை அமைச்சர் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு “அவ்வண்ணமே ஆகுக அரசே. தங்களுடன் நாங்கள் ஆயிரம்பேரும் பாலைபுகுவதற்கு சித்தமாக உள்ளோம்” என்றார்.

அவர்கள் அங்கே நான்கு நாழிகை நேரம் காத்திருந்தனர். வெயில் அனலாகி பின்பு அடங்கத் தொடங்கியது. விண்மீன்கள் செந்நிற வானிலேயே தெளிவாக முளைத்து வந்து அதிர்ந்தன. மாலையானதும் அந்த பாலைப்பொழிலில் குறுமொழிபேசும் சிறுபறவைகள் வந்து சேர்ந்தன. அவர்கள் தோண்டிய ஊற்று நீரில் நீராடிய சிறிய தவிட்டுக்குருவி ஒன்று தன் குலத்தையே அழைத்துவந்தது. அவற்றைக் கண்டு பிற பறவைகள் தங்கள் குலங்களைக் கூவி அழைத்து அங்கே வந்துசேர்ந்தன. ஆற்றங்கரையில் பறவைகளின் சிறகுகள் நிறைந்திருப்பதை யது பார்த்துக்கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் பறவைக்குரல் கேட்டு அங்கு நீர் இருப்பதை அறிந்த காட்டுப்பசு ஒன்று கனத்த காலடிகளுடன் அங்கே வந்தது. தலையைத் தாழ்த்தி கொம்புகளை உதறியபடி அந்த வெண்பசு ஆற்றுக்குள் இறங்கி ஊற்றுநீரை அருந்தியது. அனைத்துப்பறவைகளும் பசுவை சுற்றிப்பறந்தும் அதன் முதுகில் அமர்ந்தும் குரலெழுப்பின. யது எழுந்து கண்ணீருடன் கைகூப்பி அந்தப் பசுவை வணங்கினான். “அன்னையே, தங்கள் ஆணை. இந்த நிலத்தில் நான் என் அரசை அமைப்பேன்” என்றான்.

அவ்வாறு அங்கே முதல் யாதவ அரசு அமைந்தது. யதுவின் படையினர் அந்தப்பசுவை போகவிட்டு காத்திருந்தனர். மறுநாள் அது இருபது காட்டுப்பசுக்களுடன் அங்கே வந்தது. மூன்றாம்நாள் ஐம்பது பசுக்கள் அங்கே நீருண்ண வந்தன. யது அந்தப்பசுக்களை உரிமைகொண்டான். அவற்றைச் சோலைகளில் மேயவிட்டு பேணி வளர்த்தனர் அவன் படையினர். மெல்ல அவை பெருகின. ஆயிரம் பல்லாயிரமாக ஆயின. அவர்கள் அங்கே பாலைநிலப்பெண்டிரை மணந்து மைந்தரைப்பெற்று நூறு கணங்களாக ஆனார்கள். அந்த நூறு கணங்களும் பதினெட்டு ஜனபதங்களாக விரிந்தன. பதினெட்டு ஜனபதங்களும் இணைந்து யாதவகுலமாக மாறியது.

யதுவுக்கு சஹஸ்ரஜித், குரோஷ்டன், நளன், ரிபு என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். சஹஸ்ரஜித்துக்கு சதஜித் என்னும் மைந்தன் பிறந்தான். சதஜித்துக்கு மகாபயன், வேணுஹயன், ஹேகயன் என்ற மூன்று மைந்தர்கள் பிறந்தனர். ஹேகயன் ஏகவீரன் என்ற பேரில் பெரும்புகழ்பெற்றான். ஹேகயனின் வம்சம் பாரதத்தில் அரசகுலமாக புகழ்பெற்றது. ஹேகய வம்சத்தில் கார்த்தவீரியன் பிறந்தான். கார்த்தவீரியனின் வல்லமையால் புதியநிலங்களில் பரவி யதுவம்சம் வடக்கே யமுனையிலும் கங்கையிலும் நிறைந்தது. அவர்களனைவரும் யாதவர்கள் என்றழைக்கப்பட்டனர்.

ஹேகயப் பெருங்குலம் ஐந்து ஜனபதங்களாகப் பிரிந்தது. விதிஹோத்ரர்கள், ஷார்யதர்கள், போஜர்கள், அவந்தியர், துண்டிகேரர்கள் என்னும் ஐந்து குலங்களும் ஐந்து அரசுகளாயின. அவர்களில் போஜர்கள் மார்த்திகாவதியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சிசெய்தார்கள். கார்த்தவீரியனுக்கு ஜயதுவஜன், சூரசேனன், விருஷபன், மது, ஊர்ஜிதன் என ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மதுவுக்கு விருஷ்ணி என்னும் மைந்தன் பிறந்தான். விருஷ்ணியின் மைந்தர்கள் விருஷ்ணிகுலமாக வளர்ந்தனர்.

விருஷ்ணிக்கு சுமித்ரன், யுதாஜித், வசு, சார்வபௌமன் என்னும் நான்கு மைந்தர்கள் பிறந்தனர். விருஷ்ணிகுலம் யுதாஜித்தில் இருந்து வளர்ந்து நிலைகொண்டது. ஸினி, சத்யகன், சாத்யகி, ஜயன், குணி, அனமித்ரன், பிருஸ்னி, சித்ரரதன், விடூரதன், சூரன், ஸினி, போஜன் என விருஷ்ணிகுலம் வளர்ந்தது. அவர்கள் யமுனைக்கரைகளெங்கும் பரவி நூற்றுக்கணக்கான ஜனபதங்களை அமைத்தனர். அங்கே கன்றுகள் பெருகப்பெருக ஆயர்குலமும் பெருகியது. நீர்நிறைந்த ஏரி கரைகளை முட்டுவதுபோல அவர்கள் தங்கள் நாடுகளின் நான்கு எல்லைகளிலும் அழுந்தினர். மடைஉடைத்து பெருகும் நீர் வழிகண்டடைவதைப்போல அவர்கள் சிறிய குழுக்களாக தங்கள் ஆநிரைகளுடன் கிளம்பிச்சென்று புதிய நிலங்களைக் கண்டடைந்தனர்.

யமுனைக்கரையில் இருந்த தசபதம் காட்டுக்குள் சென்று நுழைந்து மறுபக்கம் செல்லும் பத்து கால்நடைப் பாதைகளின் தொகையாக இருந்தது. அங்கே வருடம்முழுக்க புல்லிருந்தாலும் ஆநிரைகளை புலிகளும் சிம்மங்களும் கவர்ந்துசெல்வதும் அதிகம். ஆகவே மழைபெய்யத் தொடங்கிய காலமுதலே அது மனிதர்வாழாத காடாகவே இருந்தது. கார்த்தவீரியனின் காலகட்டத்தில்தான் அங்கே எட்டு காவல்நிலைகள் உருவாக்கப்பட்டு நிலையான வில்வேட்டைக்குழு ஒன்று அமர்த்தப்பட்டு ஊனுண்ணிகள் தடுக்கப்பட்டன. அதன் பின்னர் அங்கே சிறிதுசிறிதாக யாதவர்கள் குடியேறினர்.

தசபதம் உருவான தகவலறிந்து கன்றுகாலிகளை ஓட்டியபடி தோள்களில் குழந்தைகளுடன், காளைகளின் மேல் கூடைக்குடில்களுடன் கிழக்கே இருந்து அவர்கள் வந்தபடியே இருந்தனர். காடுகளில் வட்டவடிவமாக குடில்களை அமைத்து சுற்றிலும் மரம்நட்டு வேலியிட்டு நடுவே தங்கள் கன்றுகாலிகளைக் கட்டி அவர்கள் தங்கள் ஊர்களை அமைத்தனர். அவ்வாறு நூறு இடையர்கிராமங்கள் உருவானதும் அப்பகுதி தசபதம் என்றழைக்கப்பட்டது. அதன் தலைவராக விருஷ்ணிகளின் குலத்தைச்சேர்ந்த ஹ்ருதீகர் நூறு கிராமங்களின் தலைவர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

VENMURASU_EPI_79
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

விருஷ்ணிகுலத்தைச் சேர்ந்த பிருஸ்னிக்கு சித்ரரதன், ஸ்வபல்கன் என்னும் இரு மைந்தர்கள் இருந்தனர். சித்ரரதனின் மைந்தன் விடூரதன். விடூரதனின் குருதிவரியில்தான் ஹ்ருதீகரும் சூரசேனரும் வசுதேவனும் பிறந்தனர். விடூரதனின் தம்பியான குங்குரனின் குருதிவரி வஹ்னி, புலோமன், கபோதரோமன், தும்புரு, துந்துபி, தரித்ரன், வசு, நாகுகன், ஆகுகன் என வளர்ந்தது. ஆகுகனுக்கு தேவகன், உக்ரசேனன் என இரு மைந்தர்கள் பிறந்தனர். உக்ரசேனன் யமுனைக்கரையில் இருந்த யாதவர்களின் தலைமையிடமான மதுபுரத்தை ஆண்டான்.

ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான படகுகளில் நெய்ப்பானைகள் வந்துசேருமிடமாக இருந்த மதுபுரம் விரைவிலேயே ஒரு நகரமாக ஆகியது. நெய்கொள்வதற்காக பல்லாயிரம் வண்டிகள் மதுபுரத்துக்கு வரத்தொடங்கின. ஆக்னேயபதங்கள் என்றழைக்கப்பட்ட எட்டு வண்டிச்சாலைகள் அங்கே வந்துசேர்ந்தன. பாரதவர்ஷத்தின் பன்னிரண்டு நாடுகள் நெய்க்காக மதுபுரத்தை நம்பியிருந்தன. நெய் யமுனைவழியாக கங்கைக்குச்சென்று நாவாய்கள் வழியாக மகதத்துக்கும் வங்கத்துக்கும்கூடச் சென்றது.

நெய்ச்சந்தையாக இருந்த மதுபுரத்தை யமுனைவழியாக படகுகளில் வந்து தாக்கிக் கொள்ளையடித்துவந்த லவணர்களை கோசலத்தை ஆண்ட இக்ஷுவாகு வம்சத்து மன்னனான சத்ருக்னன் தோற்கடித்து துரத்தி அங்கே ஓர் அரண்மனையையும் சிறிய மண்கோட்டையையும் நிறுவி சுங்கம்பெறுவதற்காக கோசல அரசகுலத்தைச்சேர்ந்த ஓர் இளவரசனை அதிகாரியாக அமைத்தார். படையும் காவலும் மதுபுரத்தை விரைவிலேயே வளரச்செய்தன. ஹேகயமன்னரின் ஆட்சிக்காலத்தில் கோசலத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மதுபுரம் தனி அரசாகியது.

விருஷ்ணிகுலத்தைச்சேர்ந்த விடூரதன் மதுபுரத்தை ஆண்டதாக குலக்கதைகள் பாடின. விடூரதனின் மைந்தனான சூரசேனன் அந்நகரை தலைமையாக்கி ஆண்ட சுற்றுநிலம் சூரசேனம் என்றழைக்கப்பட்டது. ஆனால் விடூரதனின் தம்பியான குங்குரன் விடூரதனின் குலத்தை மதுபுரத்தில் இருந்து துரத்திவிட்டு நகரைக் கைப்பற்றிக்கொண்டான். சூரசேனனின் மைந்தன் ஸினி தன் மகன் போஜனுடன் வடக்கே சென்று மார்த்திகாவதி என்ற ஊரை அமைத்துக்கொண்டான். போஜனின் குருதிவரியில் வந்த குந்திபோஜனால் ஆளப்பட்டுவந்த மார்த்திகாவதி முந்நூறு வீடுகளும் சிறிய அரண்மனையும் கொண்ட சிறியநகரமாக வளர்ந்து தனியரசாக நீடித்தது.

குங்குரனுக்குப்பின் வஹ்னியும் அவன் மைந்தர்களும் சூரசேனநாட்டையும் மதுபுரத்தையும் ஆண்டனர். ஹேகயனால் கட்டப்பட்ட மதுபுரத்தின் மண்கோட்டையை ஆகுகன் கல்கோட்டையாக எடுத்துக்கட்டி கலிங்கத்திலிருந்து காவல்படைகளையும் கொண்டுவந்து நிறுத்தினான். ஆக்னேயபதங்களின் வண்டிகளும் யமுனையின் படகுகளும் கொண்டுவந்து குவித்த சுங்கத்தால் மதுபுரம் நெய்கொட்டப்படும் வேள்வித்தீ என வளர்ந்தது.

தங்கள் மூதாதையரை துரத்தியடித்த மதுபுரத்தின் மன்னன் மீது போஜர்களும் விருஷ்ணிகளும் ஆறாச்சினம் கொண்டிருந்தனர். மதுபுரத்தின் மன்னனை நூற்றியெட்டு யாதவர்குலங்களும் தங்களவனல்ல என நிராகரித்தன. யாதவர்களின் பெருங்கூடல்விழவுகள் எதற்கும் மதுபுரத்து மன்னன் அழைக்கப்படவில்லை. யாதவர்கள் அனைவரும் மதுபுரத்தின் படைவல்லமையை அஞ்சினர். மதுபுரத்து மன்னன் உக்ரசேனன் போஜர்களின் மார்த்திகாவதியை வென்று தன் அரசை விரிவுபடுத்தும் வேட்கைகொண்டிருந்தான். வல்லூறை அஞ்சும் காக்கைகள் போல அனைத்து யாதவர்குடிகளும் சிற்றரசுகளும் ஒன்றாகி மதுபுரத்தைச் சூழ்ந்து நின்றதனால் அவன் காத்திருந்தான்.

மதுபுரத்தின் சுங்கச்செல்வத்தைப்பற்றி மகதனும் அங்கனும் வங்கனும் பொறாமைகொண்டிருந்தனர். மூன்றுமுறை மகதம் ஆக்னேயபதங்களைக் கைப்பற்ற முயன்றது. தன்னிடமிருந்த செல்வத்தைக்கொண்டு கலிங்கத்தில் இருந்து படைகளைக்கொண்டுவந்து ஆக்னேயபதம் முழுக்க நூற்றுக்கணக்கான காவல்சாவடிகளை அமைத்தான் உக்ரசேனன். ஒருகட்டத்தில் சுங்கச்செல்வத்தில் பெரும்பகுதி படைகளுக்கான ஊதியமாகவே செலவழிந்துகொண்டிருந்தது. மகதம் படைகொண்டுவருமென்றால் அதைத் தடுக்க தன் கருவூலத்தை முழுக்கச் செலவிட்டு படைதிரட்டவேண்டுமென உக்ரசேனன் அஞ்சினான்.

குடிகளே மன்னனின் முதற்பெரும் செல்வம் என்று அவன் உணரத்தொடங்கினான். யாதவக்குடிகளை நல்லெண்ணம் மூலம் தன்னை ஏற்கும்படிச் செய்யமுடியுமா என்று அவன் திட்டமிட்டான். அவனுடைய தூதர்கள் யாதவர்களின் ஜனபதங்கள்தோறும் சென்று மதுபுரத்தின் தலைமையை அவர்கள் ஏற்கும்படி செய்வதற்காக முயன்றனர். அவர்களுக்கு அரசகாவலும் ஆட்சியுரிமைகளும் அளிக்கப்படும் என்றும் அவர்களின் ஜனபதமுறைகளை மதுபுரம் முழுமையாக ஏற்கும் என்றும் தூதர்கள் சொன்னார்கள்.

மதுபுரத்தின் முயற்சிகளுக்கு முதற்பெரும் எதிரியாக இருந்தவர் தசபதத்தின் தலைவரான விருஷ்ணிகுலத்து சூரசேனர். ஹ்ருதீகரின் மைந்தரான அவரை அனைத்துயாதவக்குடிகளும் ஏற்றுக்கொண்டன. சூரசேனரின் நட்புக்காக பதினெட்டுமுறை தூதர்களை அனுப்பினார் உக்ரசேனர். ஒவ்வொருமுறையும் மரியாதையான ஒற்றை மறுப்புச்சொல்லை மட்டுமே பதிலாகப் பெற்று அவர்கள் மீண்டனர். தன்னுடைய அச்சுறுத்தலால்தான் மார்த்திகாவதியின் குந்திபோஜன் சூரசேனரின் மகளான பிருதையை மகளேற்பு செய்ய முயல்கிறான் என்று உக்ரசேனர் அறிந்திருந்தார்.

ஒற்றர்கள் வழியாக குந்திபோஜன் பிருதையை மகளேற்பு செய்து மார்த்திகாவதிக்குக் கொண்டுசென்றுவிட்டான் என்ற செய்தியை அறிந்து உக்ரசேனர் தன் அமைச்சர்களுடன் மதியூழ்ந்தார். மார்திகாவதியின் குந்திபோஜனின் அரசு இன்று யாதவர்களின் நூற்றெட்டு ஜனபதங்களின் பின்புலவல்லமையைப் பெற்றுவிட்டது என்று பேரமைச்சரான கிருதர் சொன்னார். அதை படைகொண்டு வெல்வது யாதவர்களின் முழு எதிர்ப்பையும் அடைவதாகவே முடியும். மார்த்திகாவதியை மதுபுரத்தின் நட்புநாடாக ஆக்கமுடியுமா என்பதே இனி எண்ணவேண்டியதாகும் என்றார்.

அதற்கான வழிகளை பலதிசைகளில் மதுபுரத்தின் மதியூகிகள் சூழ்ந்துகொண்டிருக்கையில்தான் சூரசேனரின் ஓலையுடன் வசு தன் கடையிளவல் வசுதேவனின் கையைப் பற்றிக்கொண்டு மதுபுரத்தை வந்தடைந்தான். சிறுபடகில் வந்த அவர்கள் மதுபுரத்தின் பெரிய படகுத்துறையில் இறங்கினர். பெரும் வெண்கலத்தாழிகளை ஏற்றிக்கொண்ட சிறுபடகுகள் நத்தைகள் போல மெல்ல ஊர்ந்து அணைந்துகொண்டிருந்த மதுபுரத்தின் படித்துறையில் யாதவர்களின் அனைத்துக்குடிகளும் வந்திறங்கியபடியிருந்தனர். அனைவரின் கொடிகளும் அங்கே பறந்துகொண்டிருந்தன.

தமையனின் கையைப்பற்றிக்கொண்டு விழித்த கண்களுடன் வசுதேவன் மதுபுரத்தின் தெருக்களில் நடந்தான். மக்கள் வழக்கில் அது மதுராபுரி என்றும் மதுரா என்றும் அழைக்கப்படுவதைக் கேட்டான். ஊரெங்கும் வெயிலில் உருகும் நெய்யும் நாள்பட்டு மட்கிய நெய்யும் கலந்த வாசனையே நிறைந்திருந்தது. வசு அங்கே பெரிய வெண்கலக் கலன்களில் நிறைக்கப்பட்ட நெய்யைக் கண்டதும் பல்லைக் கடித்தபடி “எளிதில் கொளுத்தமுடியும் நகரம்” என்று சொன்னான். அதன்பின் வசுதேவன் அந்நகரை இன்னமும் எரியேற்றப்படாத வேள்விக்குளமாக மட்டுமே பார்த்தான்.

மதுபுரத்தின் நடுவே செந்நிறக் கற்களால் கட்டப்பட்ட பெரிய அரண்மனை இருந்தது. உள்கோட்டைவாயிலில் காவலுக்கு நின்றிருந்த கலிங்கவீரர்கள் வசுவின் கையில் இருந்த ஓலையின் இலச்சினையை யாதவகுலத்தைச்சேர்ந்த மூத்த வீரனிடம் அளித்து சரிபார்த்தபின் உள்ளே அனுப்பினார்கள். ஒளிவிடும் வேல்முனைகளும் ஆமையோட்டுக் கவசங்களும் அணிந்த அவ்வீரர்களை கூரிய அலகுகள் கொண்ட கழுகுகளாக வசுதேவன் எண்ணிக்கொண்டான். அந்நகரம் செத்துக்கிடக்கும் யானை என்று தோன்றியது.

சூரசேனரின் ஓலையைக் கண்டதுமே உக்ரசேனர் மகிழ்ந்து தன் அமைச்சரான கிருதரை வரவழைத்தார். “ஆம் அரசே, மதுபுரத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டம் தொடங்கியிருக்கிறது. யாதவகுலத்துடன் நம் உறவுகள் வலுப்பெறவிருக்கின்றன. அத்துடன் மார்த்திகாவதியும் நம் அண்மைக்கு வரப்போகிறது” என்றார் கிருதர். உக்ரசேனர் வசுவை தன் அவைக்கு வரவழைத்தார்.

ஓர் இளவரசனுக்குரிய அரசமரியாதையுடன் மதுபுரத்து சபாமண்டபத்துக்குள் நுழைந்த வசு அங்கே இருந்த அமைச்சர்களும் தளகர்த்தர்களும் தன்னை எழுந்து நின்று குலமுறைகிளத்தி வாழ்த்தியதைக் கண்டு திகைத்தான். அவனுக்கு அரசமுறைமைகளும் அதற்கான சொற்களும் தெரியவில்லை. வனத்தில்வாழும் யாதவர்களுக்குரிய முறையில் இடத்தோள்கச்சாக தோலாடை உடுத்தி காதில் மரக்குழைகள் அணிந்திருந்தான். அங்கே ஆடையின்றி நிற்பதுபோல உணர்ந்த அவன் ஓரிரு சொற்கள் சொல்வதற்குள் திணறி கண்ணீர்மல்கினான்.

வசுதேவனை அங்கேயே விட்டுவிட்டு வசு திரும்பிச்சென்றான். அவனுக்கு விலைமதிப்புமிக்க பொன்னணிகளையும் பட்டாடைகளையும் பரிசாக அளித்து அரசமுறைப்படி வழியனுப்பியது மதுபுரம். வசுதேவனை தன் மைந்தன் கம்சனின் துணைவனாக அரண்மனையில் தங்கச்செய்தான் உக்ரசேனன். அவனுக்கு செம்மொழியும் அரசுநூலும் பொருள்நூலும் கற்பிக்க ஆணையிட்டான்.

அரண்மனை உள்ளறைக்கு சேவகர்களால் இட்டுச்செல்லப்பட்ட வசுதேவன் தன்னைவிட இரண்டடி உயரமான தன்னைவிட இருமடங்கு எடைகொண்ட சிறுவனாகிய கம்சனை முதல்முறையாகப் பார்த்தான். அவனுக்கும் தனக்கும் ஒரே வயது என்று சொல்லப்பட்டிருந்த வசுதேவன் அவன் உருவத்தைப்பார்த்து வியந்து நின்றுவிட்டான். சிரித்தபடி வந்த கம்சன் வசுதேவனை ஆரத்தழுவிக்கொண்டான். “இந்த அரண்மனையில் உனக்கு எது தேவை என்று சொல்…அனைத்தும் உன்னுடையதே” என்று சொன்னான். அக்கணம் முதல் வசுதேவனின் உயிர்நண்பனாக ஆனான்.

கம்சனுடன் சேர்ந்து மதுராபுரியில் வளர்ந்தான் வசுதேவன். கம்சன் ஆயுதவித்தையைக் கற்றபோது அவன் நூல்களைக் கற்றான். “நான் நூல்களைக் கற்கவேண்டியதில்லை….எனக்கான ஞானம் முழுக்க என் மைத்துனன் உள்ளத்தில் இருக்கிறது” என்று கம்சன் சொல்வான். வசுதேவனின் தோற்றம் மாறியது. பட்டாடைகளும் பொற்குண்டலங்களும் மணியாரமும் அணிந்தான். சந்தன மிதியடியுடன் நடந்தான். அரண்மனையின் உணவில் அவன் மேனி தளிர்ப்பொலிவு கொண்டது. அவனுடைய பேச்சுமொழியும் பாவனையும் முழுமையாக மாறின.

மதுராபுரிக்கு வந்தபின் அவன் ஓரிருமுறை மட்டுமே மதுவனத்துக்குச் சென்றான். அவனை அவன் தமையன்கள் முற்றிலும் அன்னியனாகவே எண்ணினார்கள். அவனை முதலில் கண்டதும் வசு மரியாதையுடன் எழுந்து நின்றான். அதன்பின்னர்தான் அவன் தன் இளவலென்று அவன் அகம் உணர்ந்தது. ஆனாலும் அவன் தமையன்கள் எவரும் அவன்முன்னால் ஒலிஎழுப்பிப் பேசவில்லை. அவன் கண்களை அவர்களின் கண்கள் தொட்டுக்கொள்ளவேயில்லை. சூரசேனர் அவனை ஒருகணம்தான் நோக்கினார். “நீ உன் வழியை அடைந்துவிட்டாய். உனக்கு நன்மை நிகழட்டும்” என்று மட்டும் சொன்னார்.

அவன் அன்னை மட்டும்தான் எந்த மாற்றமும் இல்லாதவளாக இருந்தாள். அவளுடைய சுருண்டதலைமயிர் நரைத்து பால்நுரைபோலிருந்தது. முகத்தில் சுருக்கங்கள் பரவியிருந்தன. ஆயினும் அவள் ஆற்றல்கொண்ட தோள்களுடன் இல்லத்தின் அனைத்துப்பணிகளையும் செய்பவளாக இருந்தாள். வெண்ணிற ஒளிகொண்ட அவளுடைய சிரிப்பு அப்படியே இருந்தது. அவனைக் கண்டதும் சிரித்தபடி ஓடிவந்து அவன் தோள்களையும் தலையையும் தொட்டாள். அவன் மதுராபுரியில் என்னசெய்கிறான் என்று அவள் ஒருமுறைகூட கேட்கவில்லை. மதுவனத்தில் அவனுக்கு தேவையானவற்றை செய்துகொடுப்பதில்தான் அவளுடைய ஆர்வமிருந்தது.

மார்த்திகாவதியில் பிருதையுடன் வசுதேவன் எப்போதும் தொடர்பில் இருந்தான். அவளைக்காண்பதற்காக இரண்டுமாதங்களுக்கொருமுறை அவன் மார்த்திகாவதிக்குச் சென்றான். அவனுடைய முயற்சியால் மதுராபுரிக்கும் மார்த்திகாவதிக்கும் நல்லுறவு உருவானது. இரு மன்னர்களும் காளிந்தியின் கரையில் இருந்த ஷீரவனம் என்னும் சோலையில் சந்தித்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்கள். அதன்படி மார்த்திகாவதியும் மதுராபுரியும் ஒன்றையொன்று தாக்குவதில்லை என்று முடிவெடுத்து எல்லையை வகுத்துக்கொண்டனர். ஒருவருக்கொருவர் படைத்துணையும் நிதித்துணையும் அளிப்பதாக முடிவுகொண்டனர்.

நெடுநாட்களாக மதுராபுரி எதிர்கொண்டுவந்த அனைத்து அரசியல் இக்கட்டுகளும் வசுதேவனால் முடிவுக்கு வந்தன. யாதவர்குலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம்பேர்கொண்ட படை ஒன்று மதுராவில் அமைந்தது. மதுராபுரியின் மன்னனான உக்ரசேனரைத் தொடர்ந்து கம்சன் மன்னனானான். கம்சனுக்கு வசுதேவன் அமைச்சனானான். அவன் சொல்லில்தான் யாதவகுலத்தின் முதன்மை அரசு சுழல்கிறது என்று சூதர்கள் பாடினர்.

மழைபெய்துகொண்டிருந்த இரவொன்றில் படகில் மார்த்திகாவதியில் இருந்து கிளம்பி யமுனையின் பெருவெள்ளத்தில் சுழித்தும் சுழன்றும் விரைந்து படித்துறையை அடைந்த பிருதையின் அணுக்கத்தோழியான அனகை தன் முத்திரைமோதிரத்தைக் காட்டி காவலைத் தாண்டி அரண்மனைக்கு வந்து வசுதேவனின் மாளிகையை அடைந்தாள். வசுதேவன் மஞ்சத்துக்குச் சென்றுவிட்டிருந்தான். சேவகன் சொன்னதைக்கேட்டு அவன் சால்வையை எடுத்துப்போட்டபடி வெளியே வந்தபோது மழைசொட்டும் உடலுடன் நடுங்கிக்கொண்டு நின்றிருந்த அனகையைக் கண்டான்.

முந்தைய கட்டுரைடி.ஆர்.நாகராஜ்
அடுத்த கட்டுரைமரணதண்டனை ஒரு கடிதம்