‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18

பகுதி நான்கு : அணையாச்சிதை

[ 2 ]

உருவிய வாளுடன் ஆயுதசாலைக்குள் புகுந்த விசித்திரவீரியன் “எங்கே பீஷ்மர்? எங்கே அவர்?” என்று கூச்சலிட்டபடி மரப்பலகைத்தரை தடதடக்க ஓடி, கதவை தோளால் முட்டித் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கே வாள் ஒன்றை தீட்டிக்கொண்டிருந்த பீஷ்மர் இமைகளை மட்டும் தூக்கி அவனை ஏறிட்டுப்பார்த்தார். “எடுங்கள் உங்கள் ஆயுதத்தை….” என்றான் விசித்திரவீரியன். பிடிக்கத்தெரியாமல் அவன் வைத்திருந்த வாள் கோணலாக ஆடியது. அவனுடைய கால்களில் ஒன்று பலமிழந்து கொடிபோல நடுங்கியது.

பீஷ்மர் புன்னகையுடன் “இளையவனே, நான் என்றென்றும் விரும்பியிருந்தது உன் கைகளில் ஆயுதம் இருக்கும் இந்தத் தருணத்தைக் காண்பதற்காகவே” என்றார். “நீ காட்டில் அம்பையை சந்தித்ததைப்பற்றி சற்றுமுன் வீரன் சொன்னான். இதோ அதற்குச் சான்றாக நீ வந்து நிற்கிறாய்…நன்று.” விசித்திரவீரியன் உணர்ச்சிகளால் உடைந்த குரலில், “ஆயுதத்தை எடுங்கள் மூத்தவரே, நான் உங்களிடம் போராட வரவில்லை. உங்களைக் கொல்லமுயன்று உங்கள் கைகளால் உயிர்விடுவதற்காக வந்தேன். இப்பிறவியின் நிறைவென ஒன்றிருக்கமுடியும் என்றால் அது இதுதான்…எடுங்கள் அந்த வாளை!”

“ஆம் அது முறைதான்” என்றார் பீஷ்மர். “வாளில்லாதவனை மன்னனாகிய நீ கொல்லக்கூடாது…” கையில் அந்த வாளை எடுத்துக்கொண்டு, “முன்னால் வா…ஐந்துவிரல்களாலும் வாளைப்பிடிக்காதே, வெட்டின் விசை உன் தோளில்தான் சேரும். நான்கு விரல்கள் வாளைப்பிடிக்கையில் சுண்டு விரல் விலகி நின்றிருக்கவேண்டும். மணிக்கட்டுக்குமேல் வாளின் விசை செல்லக்கூடாது” என்றார். “இருகால்களையும் சேர்த்து நிற்காதே. இடக்காலை சற்று முன்னால் வைத்து இடுப்பைத்தாழ்த்தி நில்…வாள் உன்னை முன்னகரச்செய்யட்டும்.”

விசித்திரவீரியன் திகைத்தவனாக தன் கைவாளை பார்த்தான், அது என்ன என்பது போல. “இளையோனே, ஷத்ரியமுறைப்படி நான் என்னைக் கொல்பவனுக்கு ஒரு குருதிக்காயத்தைக்கூட அளிக்காமல் சாகக்கூடாது. ஆகவே உன் வலதுதோளில் மட்டும் ஒரு சிறுகீறலை பதிக்கிறேன். என் தலை விழுந்ததுமே சென்று பிரபாகரரிடம் சொல்லி மருந்துவைத்துக்கொள்…” என்றபின் வாளை மென்மையாக நீட்டியபடி பீஷ்மர் முன்னகர்ந்தார். “நான் அனுமதிப்பவனே என்னைக் கொல்லலாமென்பது என் வரம். நான் உனக்கு அனுமதி அளிக்கிறேன்.”

வாளின் ஒளிமிக்க பரப்பில் ஆயுதசாலை பிரதிபலித்தாடியதை விசித்திரவீரியன் கண்டான். அவன் கையில் வாள் நடுங்கியது. “வேண்டாம் இளையோனே, அஞ்சாதே! இதனால் உன் புகழ் பெருகும். உன் குலத்தின் மீதான அவச்சொற்கள் விலகும். அஸ்தினபுரியின் மீது இந்திரவில் எப்போதுமிருக்கும்…” என்றார் பீஷ்மர்.  “செய்…தயங்காதே!”

உடைவாளை கணீரென அவர் காலடியில் வீசி விசித்திரவீரியன் கூவினான், “மூத்தவரே, எதற்காக இதைச் செய்தீர்கள்? ஏன் இந்த நகர்மீது கொற்றவையின் சினத்தை கொண்டுவந்து நிறைத்தீர்கள்?” அவன் குரல் உடைந்தது. “நீங்கள் அறியாத அறமா? நீங்கள் கற்காத நெறிநூலா? ஏன் மூத்தவரே?”

பீஷ்மர் பார்வையைத் திருப்பி “நூல்கள் நெறிகளைச் சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறையை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன. இளையோனே, நீ எதையுமே கற்கவில்லை என்பதனால்தான் இந்தத்தெளிவு உன்னில் இருக்கிறது” என்றார்.

அவன் கண்களை நோக்கிய அவரது கண்கள் நெடுநாட்களாக துயிலின்றி இருந்தமையால் பழுத்த அரசிலை போல தெரிந்தன. “நீ என்னை இதன்பொருட்டு கொல்வாயென்றால் எல்லா சமவாக்கியங்களும் முழுமை பெறுகின்றன. ஆயுதத்துடன் நீ வருகிறாய் என நான் கேட்டபோது என் அகத்தின் எடையெல்லாம் நீங்கியது. உன் காலடிகளை எதிர்பார்த்து காத்திருந்தேன்…” என்றார். பின் அனைத்து மரபுகளையும் தாண்டி வந்து குருதிபடிந்த குரலில் “இதை இன்னும் என்னால் சுமக்கமுடியாது தம்பி, என்னை முடித்துவை…உன் அறம் அதை அனுமதிக்கிறது” என்றார்.

தலையை அசைத்தபடி விசித்திரவீரியன் “மூத்தவரே, என்றும் தந்தையின் இடத்தில் உங்களை வைத்திருந்தவன் நான்…தாதனைக் கொலைசெய்ய என் கை துணியாது” என்றான். வலியெழுந்த முகத்துடன் “இல்லை எந்தக்கொலையையும் என்னால் செய்யமுடியாது. உயிரின் மதிப்பென்ன என்று தெரிந்தவன் என்னைவிட வேறு யார் இருக்கிறார்கள் இந்த அஸ்தினபுரியில்?” என்றபடி பெருமூச்சுகளாக தன்னுள் கனத்த அனைத்து எண்ணங்களையும் வெளியேற்றினான். “நான் வருகிறேன் மூத்தவரே. ஆனால் என் வாழ்நாளெல்லாம் உங்களை வெறுப்பேன்… ஒருகணம்கூட இனிமேல் இளையவனாக என்னை உணரமாட்டேன்” என்றான்.

“இளையோனே, பெண்கள் குளிர்ந்த கருப்பையால் எப்போதைக்குமாக விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்கள் எரியும் சித்தத்தால் கட்டுண்டிருக்கிறார்கள். நீயும் சுதந்திரனல்ல. உன் கைகளின் கட்டுகளை நீ உணரும்போது என்னை புரிந்துகொள்வாய்…” என்றார் பீஷ்மர்.

“மூத்தவரே, பெரும்பாவங்களுக்கு முன் நம் அகம் கூசவில்லை என்றால் எதற்காக நாம் வாழவேண்டும்? எனக்குத் தெரியவில்லை. அறமென்ன பிழையென்ன ஏதும் நானறிந்ததில்லை. இருந்துகொண்டிருப்பதே வாழ்க்கையென இதுநாள் வரை வந்திருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்களென அறியமாட்டேன். இந்த மெலிந்த தசைகளில் நின்று துடிக்கும் உயிரின் நோக்கம்தான் என்ன? இதன்வழியாக சென்றுகொண்டிருக்கும் ஆன்மாவின் இலக்கு என்ன? தெரியவில்லை….”

தசைதெறிக்கும் வலியை உணர்பவன் போன்ற முகத்துடன் பேசிக்கொண்டிருந்த விசித்திரவீரியன் சொற்களை அப்படியே நிறுத்திவிட்டு திரும்பி வாசலைத்தாண்டி தேரை நோக்கிச் சென்றான். அதுவரை தன் உயிரைக்கொண்டு அவன் உந்திக்கொண்டுவந்த உடல் அங்கே எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்துக்கொண்டு துவண்டு விழுந்தது. பின்பு கண் விழித்தபோது அவன் மருத்துவச்சாலையில் ஆமையோட்டினாலான தொட்டியில் தைலக்குளத்தில் படுத்திருந்தான்.

அவன் நாடியை பிடித்துப்பார்த்த வேசரநாட்டு வைத்தியரான பிரசண்டர் “இளவரசே, நாகவிஷம் உங்களுக்கு அளித்த ஆற்றல் அனைத்தும் வீணாகிவிட்டன. அது உங்கள் உடலில் விறகில் நெருப்பென மெல்ல எரிந்து ஏறியிருக்கவேண்டும்… இனி நான் செய்வதற்கேதுமில்லை” என்றார். விசித்திரவீரியன் வேதனையைத் தொட்டுவைத்த புள்ளிகள் போன்ற கண்களுடன் ஏதும் பேசாமல் படுத்திருந்தான் “எனக்கு விடைகொடுங்கள். நீங்கள் உயிருடன் மீண்டு எழுந்ததே நாகரசத்தால்தான் என உங்கள் அன்னையிடம் சொல்லுங்கள்” என்றார் பிரசண்டர்.

விசித்திரவீரியன் “உங்கள் மருத்துவத்துக்கு நன்றி பிரசண்டரே. விதியை நீங்கள் மருத்துவத்தால் சீர்செய்ய முடியாதென நானும் அறிவேன். உங்களுக்குரிய எல்லா கொடைகளையும் அளிக்க ஆணையிடுகிறேன்” என்றான்.

அன்று இரவு நிலையழிந்தவனாக அவன் தன் உப்பரிகையில் அமர்ந்திருந்தபோது அமைச்சர் பலபத்ரர் அவனைத்தேடி வந்தார். “இளவரசே, பேரரசியார் தங்களை நாளை காலை சந்திக்க விரும்புகிறார்” என்றார். அது ஏன் என உணர்ந்தும் புருவத்தை உயர்த்திய விசித்திரவீரியனிடம் “தங்கள் மணவிழா பற்றி பேசவிரும்புகிறார்…காசிநாட்டு இளவரசியருக்கு காப்பு கட்டி நெடுநாளாகிறது. இனிமேலும் விழாவை ஒத்திவைக்கமுடியாது என பேரரசி எண்ணுகிறார்.”

விசித்திரவீரியன் போதும் என கைகாட்டியபின் நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பின்பு சிவந்த வரியோடிய கண்களைத் தூக்கி பலபத்ரரை நோக்கி “நான் என்னசெய்யவேண்டும் அமைச்சரே?” என்றான்.

“அரசே, அமைச்சுநூலின்படி உங்கள் முன்னாலிருக்கும் வழிகளை மட்டுமே அமைச்சன் சொல்லமுடியும். முடிவுகளை அரசனே எடுக்கவேண்டும். அதன் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பேற்கவேண்டும்” என்றார் பலபத்ரர். “போதும்” என்றான் விசித்திரவீரியன். “அமைச்சுநூலின் சொற்களை நான் எதிர்பார்க்கவில்லை” என்றபின் பெருமூச்சுவிட்டான். நெஞ்சு ஏறியிறங்க “இன்றிரவும் எனக்கு துயில் இல்லை” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். பலபத்ரர் அவனுடைய மெலிந்த கைகளையும் ஒடுங்கிய மார்பையும் உள்ளூறிய வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

விசித்திரவீரியன் பலபத்ரரிடம் “நீங்கள் செல்லுங்கள் அமைச்சரே” என்றான். “என் முடிவை நான் நாளை காலைக்குள் தெரிவிக்கிறேன்” என்றபின் சேவகனிடம் திரும்பி “தீர்க்கசியாமரை அழைத்துவா” என்றான்.

ரதத்தில் வந்திறங்கிய தீர்க்கசியாமர் மூக்கைச் சுளித்து “பழையநாகத்தின் விஷம்” என்றார். ”இந்த மூலிகைத்தோட்டங்களில் வாழ்ந்த அத்தனை நாகங்களும் விலகிச்சென்றுவிட்டிருக்கின்றன. நாகங்கள் இல்லாத தோட்டம் காமம் இல்லாத மனம்போல. அங்கே மரங்கள் பூப்பதில்லை. வண்ணத்துப்பூச்சிகளும் தேன்சிட்டுகளும் வருவதில்லை.”

விசித்திரவீரியன் முன் வந்து அமர்ந்த தீர்க்கசியாமர் வெறுமே தன் யாழை மீட்டிக்கொண்டே இருந்தார். ’இவ்விடத்திலே இவ்விடத்திலே’ என அது மீண்டும் மீண்டும் தன்னை வாசித்துக் கொண்டிருந்தது. விசித்திரவீரியன் மெல்ல குனிந்து விழியிழந்த மனிதரின் முகத்தைப்பார்த்தான். கண்ணில்லாமையால் அது ஒரு தெய்வமுகமாக ஆகியிருப்பதை வியந்தான். “தீர்க்கசியாமரே” என்று அவன் அழைத்தான். அவர் வேறு ஒரு திசையை நோக்கி புன்னகை புரிந்தார். அங்கே இருப்பவர்கள் யார் என எண்ணிய விசித்திரவீரியன் தன் முதுகெலும்பில் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான். மெல்ல “தீர்க்கசியாமரே, நான் முடிவெடுக்க முடியாதவனாக இருக்கிறேன்” என்றான்.

தீர்க்கசியாமரின் விரல்கள் யாழிலிருந்து விலகவில்லை. விசித்திரவீரியன் “நான் சுமக்கமுடியாதவற்றுக்காக என்னை இழுத்துச் செல்கிறார்கள் சூதரே. நான் ஆற்றக்கூடாதவற்றை எனக்கு விதிக்கிறார்கள்” என்றான் . அவன் குரல் உடைந்தது. “என் அன்னையின் வீரியம் என் உள்ளமாகியது. அவள்முன் திகைத்து நின்ற தந்தையின் பலவீனம் என் உடலாகியது. நான் செய்யவேண்டியது என்ன?”.

நிகழ்காலத்தை பார்க்கமுடியாத சூதர் புன்னகை செய்தார். அவரது விரல்கள் திசைமாறி வேறு ஒரு தாளத்தை தொடங்கின. மயில்நடனகதி. அவர் குரல் ஓங்கி எழுந்தது. ‘நதிகளே, அன்னைவடிவங்களே, விண்ணின் குளிரையும் மண்ணின் உப்பையும் கொண்டவர்களே, அருளின் தூலங்களே, உங்களை வணங்குகிறேன்.” அவர் ஏன் அதைத் தொடங்கினார் என விசித்திரவீரியன் திகைத்தான். ஆனால் விழியிழந்த சூதருக்கு பிரத்தியட்சமில்லை என்ற எண்ணம் வந்ததும் அமைந்தான்.

நதிகளனைத்தும் விண்ணில் இருந்தவை என்றார் சூதர். மண்ணிலிறங்கிய முதல்நதி கங்கை. இன்னும் மண்ணைத் தொடாமல் விண்ணில் சிறகுடன் அலைந்துகொண்டிருக்கின்றன கோடானுகோடி நதிகள். அவற்றுக்கு வணக்கம். பகீரதனின் தவத்தால் மண்ணிலிறங்கிய கங்கை ருத்ரகேசத்தில் இறங்கி பின் அவன் பாதங்களை வலம் வந்து பாரதவர்ஷத்தின் மேலாடையானாள். அவள் வாழ்க!

கங்கை சுருண்டோடிய மலைச்சரிவுகளிலெல்லாம் மக்கள் பெருகினர். அவர்கள் நூற்றியெட்டு பெருங்குலங்களாகத் தழைத்து காடுகளில் பரவினர். அவர்களில் முதற்பெருங்குலமென அறியப்பட்டவர்கள் கங்கர்கள். வேகவதியின் கரையில் வாழ்ந்த அவர்கள் கங்கையை அன்றி வேறெவரையும் வழிபடாத கொள்கை கொண்டவர்கள். விண்ணிலிருந்து மண்ணிலிறங்கும் கந்தர்வர்களைப்போல மலைச்சரிவுகளில் குதிரைகளில் பாய்பவர்கள்.பாறைகளை மண்ணாக்கிக்கொண்டு சுழித்தோடும் கங்கையில் குதித்து அன்னையின் மடியென விளையாடுபவர்கள். அவ்வாறு விளையாடியபடியே அம்புகள் எய்து விண்ணில் நீந்தும் பறவைகளை வீழ்த்தும் வல்லமை கொண்டவர்கள். சாமானியர் தலைநிமிர்ந்து நோக்குமளவுக்கு உயரமானவர்ர்கள்.

மாமன்னர்களும் அஞ்சும் கங்கர்குலத்தவரின் மலைகளுக்கு கீழிருந்து எவருமே செல்வதில்லை. அவர்களும் வேறு எந்த குலத்தைச் சேர்ந்தவர்களையும் தங்கள் மண்ணுக்குள் அனுமதிப்பதில்லை. அறியப்படாதவர்களென்பதனாலேயே அவர்கள் சூதர்களின் கதைகளில் பெருகி வளர்ந்தனர். அவர்களின் இரு கைகளுக்கு அடியிலும் விரியும் மீன்சிறகுகள் உண்டு என்றனர் சூதர்கள். அவர்கள் நீரில் நீந்தி பச்சைமீனை விழுங்கி மீள்வார்கள் என்றனர். ருத்ரப்பிரயாகையின் பேரருவியில் வெள்ளியுடல்கொண்ட கங்கர்கள் கூட்டம்கூட்டமாக எம்பிக்குதித்து நீர்த்துமிகளை வாயால் அள்ளி உண்பதை விவரித்தன காவியங்கள்.

பாரதவர்ஷம் கங்கர்களை அஞ்சியது. அவர்களின் அம்புகளில் காளகூட விஷத்தின் துளிகளுண்டு என்று வீரர்கள் சொல்லிக்கொண்டனர். என்றோ ஒருநாள் கங்கர்கள் கங்கைவழியாக மலையிறங்கி வந்து நாடுகளையும் ஜனபதங்களையும் வெல்லக்கூடுமென நிமித்திகர்களின் நூல்கள் சொல்லின. அரசர்கள் அவர்களை கனவுகண்டு குளிர்ந்த வியர்வையுடன் விழித்துக்கொண்டார்கள்.

அஞ்சாதவர் குருவம்சத்து மன்னராகிய பிரதீபர். கங்கைக்கரைவழியாக மலைகளில் ஏறி வேட்டைக்குச்செல்லும் அவரை அமைச்சர்களும் வைதிகர்களும் மீளமீள எச்சரித்தனர். அந்த எச்சரிக்கைகளெல்லாம் அவரது ஆவலையே பெருக்கின. மேலும் மேலும் மலைமீதேறி சென்றுகொண்டிருந்தார். அவருடன் இறப்பை பகிர்ந்துகொள்ளச் சித்தமான மெய்க்காவல் படையும் சென்றது. எட்டாவதுமுறை கங்கையின் பதினெட்டாவது வளைவைத்தாண்டி அவர்கள் மேலே சென்றனர்.

காடு அடர்ந்து கண்ணை பயனற்றதாக ஆக்கியது. வாசனைகள் செறிந்து நாசி திகைத்தது. காதுகளும் கருத்தும் மட்டுமே புலன்களாக வழிகாட்ட அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர். திசைதவறி கொடிகளும் செடிகளும் தழுவிய மரங்களினூடாக அலைந்து களைத்துச் சோர்ந்து நம்பிக்கையிழந்த தருணத்தில் கங்கையின் ஓசையைக் கேட்டனர். அதைத்தேடிச்சென்றபோது இலைகளுக்கு அப்பால் நதியின் ஒளியைக் கண்டனர். அன்னையைக் கண்ட குழந்தைகள் போல இலைகளை விலக்கிச்சென்று அதை அடைந்தனர். வெண்மணல் விரிவில் இறங்கி அமர்ந்து ஓய்வெடுத்தனர்.

பிரதீபரின் படைகள் அவர் தங்குவதற்கு காட்டுமரம் வெட்டி ஒரு சிறுகுடில் கட்டினர். மன்னரை இலைபரப்பி பாயிட்டு அமரச்செய்து, மீனும் ஊனும் காயும் கிழங்கும் சுட்டு பரிமாறினர். உணவுண்டபின் அவர் இலைப்பாயில் அமர்ந்துகொண்டு கூடவே வந்த சூதனிடம் பாடும்படி சொன்னார். சிறுபறையை மீட்டி அவன் நகுஷ சக்கரவர்த்தியின் கதையை பாடிக்கொண்டிருந்தபோது காட்டுக்குள் இருந்து ஏதோ சிறுமிருகம் வரும் ஓசை கேட்டது. மறுகணமே நாணேறி ஒலித்த வீரர்களின் விற்கள் தயங்கின. அங்கிருந்து பொன்னிறமான சிறுமான்தோலாடையும் கல்மாலையும் அணிந்த மூன்றுவயதான பெண்குழந்தை ஒன்று ஓடிவந்து அவர்களைப்பார்த்து பெரியவிழிகளால் திகைத்து நின்றது.

பிரதீபர் அக்குழந்தையைப்பார்த்து புன்னகைசெய்து அருகே அழைத்தார். அஞ்சியும் ஐயுற்றும், பின்பு வெட்கியும் தயங்கியும் நின்று அது அவரது புன்னகையை பிரதிபலித்தது. மலர் உதிரும் மாயக்கணம் போன்ற ஒன்றில் இருகைகளையும் நீட்டி பாய்ந்தோடிவந்து அவரது வலது தொடைமேல் ஏறி அமர்ந்துகொண்டது. அதைக்கண்டு அவர்முன்னிருந்த சூதனும் வீரர்களும் வியப்பொலி எழுப்பினர். அரண்மனையின் பெண்குழந்தைகள் வலத்தொடைமேல் அமரலாகாது எனக் கற்றவை. “வலத்தொடைமேல் அமர்பவள் இல்லறலட்சுமி மட்டுமே …இதோ மாமன்னரின் மைந்தனுக்கு மணமகள் வாய்த்துவிட்டாள்” என்று சூதன் சொன்னான். முகம் மலர்ந்த பிரதீபர் “அவ்வாறே ஆகுக!” என்றார்.

அக்குழந்தையின் வலதுதோளில் இருந்த மச்சமுத்திரையைக் கண்டு அவள் கங்கர்குலத்து இளவரசியாக இருக்கவேண்டும் என்று ஊகித்தார்கள். அவள் காட்டில் வழிதவறியிருக்கக்கூடும் என்று எண்ணி எப்படி திரும்பக்கொண்டு சேர்ப்பதென்று சிந்திப்பதற்குள் அவள் கங்கையில் குதித்து நீந்தி மறைவதைக் கண்டார்கள். இளஞ்சூரியன் கடலில் மறைவதுபோல அவள் கங்கைநீருக்கு அப்பால் சென்று மறைந்தாள்.

பிரதீபர் தன் ஒற்றர்கள் வழியாக அவள்பெயர் கங்காதேவி என்று அறிந்தார். கங்கர்குலம் கன்னியை கங்கையாக வழிபடும் வழக்கம் கொண்டது. கைரேகையிலும் கால்ரேகையிலும் கங்கையின் முத்திரைகளைக் கொண்ட பெண்குழந்தையை பிறப்பிலேயே கண்டடைந்து அவளுக்கு கங்காதேவி என பெயரிட்டு பன்னிருநாள் சடங்குகள் மூலம் அவளில் கங்கையன்னையை உருவேற்றி குடியுறச்செய்வார்கள். அதன்பின் அவள் எவருக்கும் மகளல்ல, எந்த இல்லத்திலும் இருப்பவளுமல்ல. காடும் கங்கையும் கங்கர்களின் அத்தனை குடிகளும் அவளுக்குரியனவே. அவள் ஊனுடலைப் பெற்ற அன்னையும் தந்தையும்கூட அவளை அன்னையாக பணிந்து வழிபட்டாகவேண்டும்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அஸ்தினபுரிக்கு வந்த பிரதீபர் நிமித்திகர்களின் சபையைக்கூட்டி நிகழ்வனவற்றைக் கேட்டார். அஸ்தினபுரிக்கு கங்கையின் ஆசி வந்துவிட்டது என்றும், நான்குதலைமுறைக்காலம் குலத்துக்கு காவலனாகவிருக்கும் நிகரில்லா வீரன் கருபீடம்நோக்கி புவர்லோகத்தின் ஒளிமிக்க மேகங்களில் இருந்து நீர்த்துளிபோல கிளம்பிவிட்டானென்றும் நிமித்திகர் கூறினர். அவர்களின் குறியுரைப்படி கங்கர்களிடம் பெண்கேட்டு ஏழுமுறை தூதனுப்பினார் பிரதீபர். ஏழுமுறையும் தூதர்களைக் கொன்று கங்கையில் போட்டனர் கங்கர்கள். மலையடிவாரத்தில் நின்ற அஸ்தினபுரியின் படைகளை நோக்கி மூங்கில்தெப்பத்தில் வந்து சேர்ந்தன கழுத்து முறிந்து முகம் முதுகைநோக்கித் திருப்பப்பட்ட பிணங்கள்.

பிரதீபர் உலகியலை முடித்து வனம்புகுந்தபோது, வன எல்லையான ருதுபூர்ணை என்னும் சிற்றோடை வரை வந்த படைகளில் இருந்து அமைச்சரையும் தளகர்த்தர்களையும் விலக்கிவிட்டு பட்டத்து இளவரசர் சந்தனுவை மட்டும் அருகழைத்து சொன்னார். “அஸ்தினபுரி பாரதவர்ஷத்தின் நடுவிலிருக்கிறது மகனே. ஆகவே இது பாரதவர்ஷத்தின் தலைமை நகரமாக இருக்கவில்லை என்றால் அத்தனை ஷத்ரியர்களின் ரதசக்கரங்களும் துவைத்துச் சிதைத்தோடும் பெருவழியாக மட்டுமே எஞ்சவேண்டியிருக்கும். பாரதவர்ஷத்தின் வடக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் எல்லையற்ற நிலவிரிவு கொண்ட புதிய தேசங்கள் உருவாகி வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் ஆநிரைகள் பெருகுகின்றன. அவர்களின் வயல்வெளிகள் விரிகின்றன. ஆநிரையும் கதிர்மணியும் ஆயுதங்களே என்று அறிக. அஸ்தினபுரியோ வணிகத்தை மட்டுமே நம்பியிருக்கும் நாடு. நாமடைவது மனிதர்கள் அளிக்கும் பொன். அந்நாடுகள் பெறுவதோ மண் அளிக்கும் பொன். அது குறைவதேயில்லை.”

“இளவரசே, வாளின்றி துலாக்கோலில்லை. வாளைக்கூர்மைசெய்” என்றார் பிரதீபர். “கங்கர்களை அஞ்சாத ஷத்ரியனில்லை. கங்கர்களின் கைகள் நம்முடன் இணைந்தால் நம் அம்புகள் எங்கும் அஞ்சப்படும். ஆகவே கங்கர்களிடம் நட்புகொள்ள நான் வாழ்நாளெல்லாம் முயன்றேன். என் தவத்தின் பயன் என என் மடியில் வந்து அமர்ந்தவள் அஸ்தினபுரியின் அரசலட்சுமி என்று அறிவாயாக! நிமித்திகர் நம் முன்னோரின் அருளின் கனி விளைந்திருக்கிறது என்கிறார்கள். அதைக் கொள்க! உன் குலம் பெருகட்டும்! உன் சந்ததிகள் நலம் வாழட்டும்! என்று சொல்லி வனம்புகுதலின் விதிப்படி பின்னால் திரும்பிப்பார்க்காமல் காட்டுக்குள் சென்று மறைந்தார்.

சந்தனு தந்தையின் ஆணையை தன் கடமையாகக் கொண்டார். சாந்தமே பிறப்பானவர் என்று ரிஷிகளால் பெயரிடப்பட்ட அவர் படைகளோ தூதோ செல்லாத இடத்துக்குச் செல்ல இளமையால் முடியும் என்று சொன்ன சூதனின் சொற்களை நம்பி, ஆட்சியை அமைச்சர்களிடம் அளித்துவிட்டு, அம்பும் வில்லும் ஏந்தி தன்னந்தனியாக காட்டுக்குள் சென்றார். வேடர்களிடம் பேசி வழிகண்டுகொண்டு பதினெட்டு கங்கை வளைவுகளைத் தாண்டி பதினெட்டு மாதங்களுக்குப்பின் கங்கர்நாட்டுக்குச் சென்றார்.

மூன்றுமாதங்கள் கங்கையிலும் கரையிலுமாக அலைந்து திரிந்த சந்தனு பின்பொருநாள் மலைக்காற்றுபோல காட்டில் அலைந்த கங்காதேவியைக் கண்டார். தாமரைக்குள் இருக்கும் காயின் மென்மையும் வண்ணமும் கொண்ட கங்காதேவியின் முன்னால் ஆயுதங்களுடன் செல்லமுடியாதென்பதனால் அதற்கான தருணம் நோக்கி அவளறியாமல் பின் தொடர்ந்தார். ஒருநாள் அவருக்குப்பின்னால் புதரிலிருந்த பெருமலைப்பாம்பு ஒன்று அவரை கவ்விச்சுருட்டிக்கொண்டது. அதன் வாய் திறந்து அகத்திலசையும் பசியைக் கண்டதும் சந்தனு “கங்கையே அபயம்” என்று அலறினார். அதைக்கேட்டு திரும்பிய கங்காதேவி அவரை காப்பாற்றினாள். அடைக்கலம் கோரியவர்களை கைவிடுவது உயர்ந்தவர்கள் ஒருபோதும் செய்யாதது.

தன்னை நாடிழந்த ஷத்ரியன் என்று சந்தனு கங்காதேவியிடம் அறிமுகம் செய்துகொண்டார். சுற்றமும் சூழுமின்றி எதிரிகளுக்கு அஞ்சி வேடர்வாழ்க்கை வாழும் தனியன் என்று அவளிடம் சொன்னார். சத்யவதியின் மைந்தனே, ஆண்களின் தனிமையைப்போல பெண்களை கனிவுகொள்ளச்செய்வது ஏதுமில்லை. கனிவுபோல பெண்களை காதல்நோக்கி கொண்டுசெல்வதும் பிறிதில்லை. அவர்கள் சேர்ந்து ஒரு சிற்றோடையைக் கடக்கும்போது அங்கே நின்ற சரக்கொன்றை மரம் அந்த இருபாதத்தடங்களின்மீது பொன்னிறமலர்களைத் தூவியது. அது நல்நிமித்தமெனக் கண்ட கங்காதேவி சந்தனுவின் காதலை ஏற்றுக்கொண்டாள். அவரை தன்னுடன் அழைத்துக்கொண்டு தன் தொல்குடியை அடைந்தாள்.

கங்கர்களின் ஏழுமூதாதையர் அடங்கிய குடிச்சபை சந்தனுவை ஏற்கவில்லை. ஏழுநாட்கள் தொடர்ந்து அவர்கள் விவாதித்தனர். கங்காதேவி ஏழுநாட்களும் நீர்கூட அருந்தாமல் நின்றுகொண்டே இருந்தாள். குலமூதாதையர் ஏற்கவில்லை என்றால் அங்கேயே நின்று பாழ்மரமாகி மறைவேன் என்று அவள் சொன்னாள். கன்னியின் சாபம் குலமழிக்குமென அறிந்த குலமூத்தோர் கனிந்தனர். “கன்னியே, கங்கர்குலம் வாழ்வது இந்த மலைச்சரிவில் வாழ்வதனால் மட்டும் அவர்களடையும் தனித்திறன்களினால் அல்லவா?அந்த சித்திகளினால்தான் நாம் சித்தேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறோம். சமநிலத்தின் இந்த ஷத்ரியமன்னனின் குழந்தைக்கு அந்தத் திறன்கள் எப்படி உருவாகும்? இவனோ வீரியமற்ற சாமானியனாகவும் இருக்கிறான்” என்றனர்.

இறுதியில் குலமூத்தார் கூற்றை கங்காதேவி ஏற்றுக்கொண்டாள். அவள் வயிற்றில் உதிக்கும் குழந்தைகளில் கங்கர்களின் பிறவித்திறன்கள் கொண்ட குழந்தைகள் மட்டுமே மண்ணில் வாழவேண்டும் என்பது அக்குலவிதி. காதல்கொண்டவனும் பலமற்றவனுமாகிய சந்தனுவிடம் அதை அவள் சொல்லவில்லை. “இந்த கங்கபுரி நீங்கி நான் வரமாட்டேன். எங்கள் ஊர்களுக்குள் உங்களுக்கும் இடமில்லை. இங்கே தனிக்குடிலில் நாம் வாழ்வோம். நான் என்னசெய்தாலும் எங்குசென்றாலும் ஏதும் கேட்கலாகாது” என சந்தனுவிடம் அவள் வாக்கு பெற்றுக்கொண்டாள்.

கங்கை சுழித்துச் சீறிவிலகும் ஒரு பாறையின்மேல் கட்டப்பட்ட குடிலில் அவளுடன் சந்தனு தங்கினான். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு உறுப்பாலும் காமத்தை அறிந்தான். குருகுலத்தவனே, நீருள்நீர் போல சேர்வதே உயர்காமம். நீரில் உள்ளன காமத்தின் விதிகள். நீரில் நிகழ்வன காமத்தின் எல்லைகள். மழைக்கால நதியும் கோடைகாலநதியும் பெண்ணே. குளிர்கால உறைவும் வெம்மை கரந்த வசந்தமும் பெண்ணே. மலர்சூடிச்செல்லும் ஓட்டமும் உள்ளொழுக்குகள் காலைக்கவ்வி இழுக்கும் சுழிப்பும் அவளே. அவளை முடிவில்லாத அலைகளையே புரளும் ஏடுகளெனக் கொண்ட நூலாக அறிந்துகொண்டிருந்தான்.

நீரின் மாயத்தை சொல்லிவிடும் சூதன் எங்குள்ளான்? மெருகேறிய மென்பரப்புகள், மின்னும் வளைவுகள், உயிரின் அலைப்பரப்புகள், ஆழம்குவிந்த சுழிகள், ஒசிந்த குழைவுகள், நுரைத்ததும்பல்கள், பாசிமணக்கும் பாறைப்பரப்புகள், துள்ளிச்சிரிக்கும் வெள்ளிமீன்கள், கண்களாக மட்டுமே தெரியும் ஆழத்தின் மாபெரும் மீன்கள்.. அவள் அவனை முழுமையாக தன்னுள் இழுத்துக்கொண்டாள். சந்தனுவின் மைந்தனே, நீராடிமுடிக்கத்தக்க நதியும் காமத்தால் தாண்டிச்செல்லத்தக்க பெண்ணும் பிரம்மன் அறியாதவை. உன் அடையாத காமத்தால் அவன் அடைந்த காமத்தை ஆயிரம்முறை பெரிதாக நீ அறியமாட்டாயா என்ன?

விசித்திரவீரியன் நடுங்கும் கரங்களைக்கொண்டு சூதரை வணங்கினான். காலகாலங்களுக்கு அப்பாலிருந்து விழியிழந்த சூதர் பாடிக்கொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைவரலாற்றின் தன்னிலைகள்
அடுத்த கட்டுரைரப்பர் என்னும் பயோமெட்டல்