அயன் ராண்ட் 2

அயன் ராண்ட் பற்றி தமிழில் எதுவும் எழுதப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகம் அவரைபொருட்படுத்தவில்லை. காரணம் க.நா.சு அவரை இடதுகையால் ஒதுக்கிவிட்டார்.  எங்கோ ஒரு கட்டுரையில் க.நா.சு ‘அரைவேக்காடு எழுத்து’ என்று அயன் ராண்ட் பற்றி சொல்லியிருக்கிறார். நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களை ஆதர்சமாகக் கொண்ட, அவ்வகையில் எளிய மக்களை அவர்களின் மொழியிலேயே முன்வைக்கும் கலைப்படைப்புகள் உருவாகவேண்டுமென வலியுறுத்திய, க.நா.சுவுக்கு அயன் ராண்ட் கடுப்பைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை.

ஆனால் அயன் ராண்ட் சுந்தர ராமசாமியில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அயன் ராண்ட் முன்வைக்கும் புறவயவாதத்தை சுந்தர ராமசாமி ஏற்கவில்லை. ஆனால் அவரது ‘அறிவுஜீவிமைய வாதம்’ அவர்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே அவருக்குள் ஒரு நுட்பமான முறையில் அயன் ராண்ட் ‘வளர்ச்சி’ அடைந்தார். அவர் ஒருபோதும் அயன் ராண்ட்டைப்பற்றி எழுதியதோ மேற்கோள் காட்டியதோ இல்லை. ஆனால் அயன் ராண்ட்டின் கொள்கைகளை தனக்குரிய முறையில் மாற்றி அதை ‘கலைஞன் மையவாதமாக’ ஆக்கிக்கொண்டார்.

சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் நாம் ‘சமூகத்தைக் கட்டி எழுப்புபவனும் அதை நிலைநிறுத்துபவனும் கலைஞனே, அவனே சமூகத்தின் ஆன்மா’ என்ற குரலை அவர்  மீண்டும்  மீண்டும் எழுப்புவதைக் காணலாம். தத்துவமும் அரசியலும் தோற்றுவிட்டன, இனி கலைஞனிடமே உலகின் மீட்பு இருக்கிறது என்று சுந்தர ராமசாமி எழுதினார். இது அயன் ராண்ட்டின் கோட்பாட்டின் மாற்று வடிவமே என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல.

 

அயன் ராண்டுக்கு முன்னரே மேலைநாட்டினரில் ஒருசாரார் இதே கலைஞன்மைய வாதத்துக்குச் சென்று சேர்ந்திருக்கிறார்கள். மொத்த ஐரோப்பியப் பண்பாட்டையே கதே, மொஸர்த்,பீத்தோவன்,பாக், ரெம்ப்ராண்ட் ஆகியோரில் இருந்து ஆரம்பிக்கும் சிந்தனையாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில் இருந்தார்கள் — கார்லைல் நவீன ஓவியர்கலை பற்றி எழுதிய புகழ்பெற்ற பெருநூலுக்குப் பின்னால் உருவான சிந்தனை இது. எழுபது எண்பதுகள் வரைக்கூட ஐரோப்பாவில்சிச்சிந்தனை இருந்தது. மெல்ல மெல்ல அது காலாவதியாகியது. அயன் ராண்ட் அச்சிந்தனையையே அறிவுஜீவிமையவாதமாக மாற்றுகிறார். நான் சந்திக்கும்போது [ரமேஷ்] பிரேம் அந்நம்பிக்கையை சுவீகரித்துக்கொண்டவராக இருந்தார். அந்நோக்கில் அவர் எழுதிய ஒரு சிறுகதை நான் நடத்திய ‘சொல்புதிது’ இதழில் வெளியாகியது.

சுந்தர ராமசாமி அயன்ராண்ட் வழியாக கார்லைல் வரை சென்று சேர்ந்தவர். ஆனால்  அச்சிந்தனையுடன் தமிழகத்துக்கு வரும்போது அவர் கம்பனையோ, நம்மாழ்வாரையோ, இங்கிருந்த மாபெரும் சிற்பவெற்றிகளையோ பொருட்படுத்தவே இல்லை என்பதையும் அவற்றை ஒட்டுமொத்தமாக மரபின் பின்பாரம் என்று தவிர்த்துவிட்டார் என்பதையும் காணலாம். அவர் பேசியது ‘நவீன’க் கலைஞனைப்பற்றி மட்டுமே. சொல்லப்போனால் நவீன எழுத்தாளனை மட்டுமே.

எழுத்தாளர் நீலகண்டன் அரவிந்தனின் அப்பா பேரா. என்.எஸ்.பிள்ளை அவர்கள்தான் அயன் ராண்டை தனக்கு அறிமுகம் செய்ததாக ஒருமுறை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நான் அயன் ராண்டை என் வாசிப்பும் நோக்கும் வளர்ச்சி அடைந்தபின்னர் சுந்தர ராமசாமி மூலமாகவே அறிமுகம்செய்துகொண்டேன். நான் அவரது ·பௌண்டன்ஹெட் நாவலை மட்டுமே வாசித்தேன். அயன் ராண்ட்டைப்புரிந்துகொள்ள அந்த நாவலே போதுமானது என்று தோன்றுகிறது. அதற்குமேல் அயன் ராண்ட்டைப்பற்றி ஆய்வு செய்து நான் எதையும் படிக்கவில்லை. பின்னர் அவரைப்பற்றிய விவாதங்களுக்காக சிலவற்றைப் படித்திருக்கிறேன். அயன் ராண்ட் அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய எழுத்தாளர் அல்ல என்ற எண்ணமே என்னிடம் இருக்கிறது. 

**

 

அயன் ராண்ட்டின் எழுத்துக்களை வைத்து பார்க்கவேண்டிய பின்புலங்களில் அவரது சொந்த வாழ்க்கையும் ஒன்று. அவர் ருஷ்யாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1905 ல் பிறந்தார். செல்வத்தில் வளர்ந்து சிறந்த கல்வி கற்றார். போல்ஷெவிக் புரட்சியால் அவரது பெற்றோர் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு  உழைப்பாளர்களாக ஆனார்கள். தன் வயது வரை ருஷ்யாவில் வாழ்ந்த அயன் ராண்ட் அங்கிருந்து தப்பி ஓடி கடைசியாக அமெரிக்கா வந்து அந்நாட்டை தன் நாடாக ஏற்றுக்கொண்டார். தன் இயற்பெயரான அலிஸா ரோஸென்பாம் [Alisa Zinovievna Rosenbaum] என்பதை அயன் ராண்ட் என்று மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தார்.

·பௌண்டன்ஹெட் அவரது புகழ்பெற்ற முதல் நாவல் .இது சினிமாவாகவும் வந்தது. இந்தப் புகழ் வரை வந்து சேர்வதற்கு அவர் பலவகையான சிறுமைகளைச் சந்தித்து கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.  எழுத்தாளர் ·ப்ராங் ஓ கானர் [ Frank O’Conner ]ஐ அவர் திருமணம் செய்துகொண்டார். அவரை ஒரு ஆதர்ச கணவராக கற்பனைசெய்துகொண்டார். ஆனால் ·பௌண்டன்ஹெட்டின் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு ஒரு ஆதர்ச வாசகராக அறிமுகமான  நதானேயேல் பிராண்டன் [Nathaniel Branden]  என்பவருடன் கள்ள உறவு உருவானது. இதை அவர் கணவரிடமிருந்து மட்டுமல்ல தன்னிடமிருந்தே மறைத்தார். எல்லா கள்ள உறவுகளையும்போலவே அது கசந்து  முறிந்தது. அவரை மன அழுத்தத்துக்கும் பின்னர் மனக்கோளாறுக்கும் இட்டுச்சென்றது

ஆனால் அயன் ராண்ட் அவரது கணவருடனேயே வாழ்ந்தார். 1979 ல் கணவர் இறந்தார். 1982 ல் முதியவயதில் அயன் ராண்ட் இறந்தார். இறக்கும்போது அவர் ஒரு மதநிறுவனர் போல  ஆகிவிட்டிருந்தார். தீர்க்கதரிசிக்குரிய இடம் அவருக்கு ஒருசாராரால் அளிக்கப்பட்டது. அவர் ·பௌண்டன்ஹெட் முதலிய நாவல்கள் மூலம் முன்வைத்த புறவயவாதத்தை பரப்ப பிராண்டன் கழகம் [ Nathanial Branden Institute]  போன்ற அமைப்புகள் நிறுவப்பட்டிருந்தன. ஆனால் வாழ்க்கையின் கடைசியில் அயன் ராண்ட் தன் கோட்பாடுகள் காலாவதியாவதை கண்டார். அது அவரை மனம் உடையச்செய்தது.

அயன் ராண்டின் வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கியமான ஒரு அம்சம், அவர் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த கடுமையான கம்யூனிச எதிர்ப்பு. மெகார்த்தியிசத்தின் உச்சகாலகட்டத்தில் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன. கம்யூனிசத்தால் துரத்தப்பட்டவர், கம்யூனிச எதிர்ப்பாளர் என்பது அவருக்குச் சாதகமான அம்சமாக இருந்தது. அயன் ராண்ட் மெக்கார்த்தியிசத்தை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும் அதன் ஆதரவாளராகவே இருந்தார். இடதுசாரிகள் மேல் வைக்கப்படும் நேர்மையான குற்றச்சாட்டுகளை திரிக்கவே மெக்கார்த்தியிசம் என்ற சொல் உருவாக்கப்பட்டதாகவும் செனெட்டர் மெக்கார்த்தி நேர்மையான அரசியல் விமரிசகர் என்றும் அவர் எண்ணினார். 

சமகாலத்தில் தென்னமெரிக்க நாடுகளில்  அமெரிக்காவால் செய்யப்பட்ட அரசியல்சதிகள் அழிவுவேலைகள் அனைத்தையுமே சோவியத் எதிர்ப்பின் மனநிலையில் நின்று அயன் ராண்ட் நியாயப்படுத்துவதைக் காணலாம். இந்த மனநிலை அன்றைய குளிர்ப்போர் சூழலில் அவரை ஒரு கணிசமான தரப்பின் ஆதரவைப்பெறச்செய்தது.

**
 
ஹிட்லரின் வரலாற்றைப் படிக்கும்போது ஒன்றைக் கவனித்தேன். அவர் கலைகளிலேயே தலையாயது என கட்டிடக்கலையை எண்ணினார். ‘பொருள்வயமாக வடிக்கப்பட்ட இசை’ என்று கட்டிடங்களை ஹிட்லர் வருணித்தார். அவர் சிறுவயதில் படிக்க விரும்பியது கட்டிடக்கலை. அதில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் மோசமான ஓவியராகவும் கண்பார்வைக்குறைபாடு கொண்டவராகவும் இருந்தார். அந்த நிராகரிப்பால் அவர் மனம் உடைந்திருந்தார்.

பின்னர் நாஸி கட்சியை நிறுவி ·ப்யூரர் ஆனபின்னர் அவர் கட்டிடக்கலை போஷகராக ஆகி அந்த மனக்குறையை தீர்த்துக்கொண்டார். போருக்கு நடுவேகூட கட்டிட நிபுணர்களுடன் மணிக்கணக்காக விவாதிக்க அவர் நேரம் கண்டுபிடித்தார். கடைசியில் போர் உச்சத்துக்குச் சென்று ஜெர்மனி அழியும்போதுகூட அவர் பெர்லின் நகரை முழுமையாக மறுநிர்மாணம் செய்வதைப்பற்றித்தான் சிற்பிகளுடன் விவாதித்துக்கொண்டிருந்தார்.

அவருக்குமுன்னால் கெய்ஸர் வில்லியம் கட்டிடக்கலைப் பித்தராக இருந்தார். ஸ்டாலினுக்கும் ஹிட்லருக்கும் இடையே உள்ள முக்கியமான ஒற்றுமைகளில் ஒன்று கட்டிடக்கலை மீதான பிரியம். ஆம், உலகின் கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகள் பெரும்பாலானவர்களின் ஆர்வம் கட்டிடக்கலைமேல் இருந்திருக்கிறது.

ஏன்? கட்டிடத்தை ஒரு கலைப்பொருள் என்று கொண்டால் அதன் தனித்தன்மை என்ன? இருண்டமேதையான ஹிட்லரின் சொற்களுக்கே செல்லவேண்டியிருக்கிறது. அது ‘உறைந்த இசை’. ஹிட்லர் ரோமாபுரியின் செவ்வியல் கட்டிடங்களின் மீது தீராத மோகம் கோண்டிருந்தார். பிரம்மாண்டமான கட்டுமானங்களை உருவாக்கி ஜெர்மனியை நவீன யுகத்தின் ரோமாபுரியாக ஆக்க வேண்டும் என அவர் விரும்பினார். அப்படிப்பார்த்தால் கட்டிடங்களை அவர் ‘உறைந்த கருத்துக்களாகவும்’ கண்டார் எனலாம்.

ஆம், கட்டிடங்களின் மிக முக்கியமான சிறப்பியல்பே அவை நிலையானவை என்பதுதான்.  அவற்றை இசை என்று கொண்டால் நிலைத்துப்போய் அசைவிழந்து நிற்கும் திடமான இசை அவை. கருத்துக்கள் என்று கொண்டால் திட்டவட்டமாக ஒன்றையே காலம்தொறும் சொன்னபடி அவை வானளாவ ஓங்கி நிற்கின்றன. சர்வாதிகாரிகளுக்கு ஏன் கட்டிடக்கலை பிடித்திருக்கிறது என்றால் அதில் உள்ள திடத்தன்மையால்தான். ஒரு கட்டிடத்தின் பாவனை என்பதே ‘என்றென்றுமாக’ என்பதுதானே?

பத்துவருடம் முன்பு உலகின் உயரமான கட்டுமானமாகக் கருதப்பட்ட டொரொண்டோவின் சி.என்.என் கோபுரத்துக்குச் சென்று வந்தபோது அ.முத்துலிங்கத்திடம் சொன்னேன், அது வானத்தை நோக்கி நீட்டப்பட்ட ஒரு முஷ்டி போல இருக்கிறது, அகங்காரமும் சவாலும் மட்டுமே தெரிகிறது, அது என்னை தொந்தரவு செய்கிறது என. ஆம்,கட்டிடங்களில் இருந்து அகங்காரத்தைப் பிரிக்க முடியாது. தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழனின் அகங்காரம்.ஆகவேதான் அவனது சொந்த மகனுக்கு அதைவிடப்பெரிய கோயில் ஒன்று தனக்கெனத் தேவைப்பட்டது.

·பௌண்டன்ஹெட் நாவலின் கதாநாயகன் ஹோவார்ட் ரோர்க் [Howard Roark] ஒரு கட்டிடநிபுணன் என்பது இந்தப்பின்னணியில் கவனிக்கத்தக்கது. அவன் ஆளுமையையும் அவனுடைய கோட்பாட்டையும் நாம் அவனுடைய கட்டிடக்கலையை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ளும் வசதிக்காக நாம் ரோமென் ரோலந்தின் ழீன் கிறிஸ்தோ·ப் என்ற புகழ்பெற்ற நாவலின் கதாநாயகன் ழீன் கிறிஸ்தோ·புடன் ·பௌண்டன்ஹெட்டின் கதாநாயகன் ரோர்க்-ஐ ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

‘ழீன் கிறிஸ்தோ·ப்’ நவீன ஐரோப்பிய மனத்தின் வடிவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த நாவல். அதற்கிணையான பங்களிப்புள்ள இன்னொரு நாவல் விக்டர் ஹ்யூகோ வின் ‘லெ மிஸரபில்ஸ்’. அனேகமாக உலகின் எல்லா மொழிகளிலும் இவையிரண்டும் மொழியாக்கம்செய்யப்படுள்ளன. நான் இவை இரண்டையுமே செவ்வியல்படைப்புகள் என நினைக்கிறேன். இவ்விரு நாவல்களும் இணைந்து உருவாக்கும் ஒரு உதாரண ஐரோப்பிய மனதின் சித்திரமே நெடுங்காலமாக நீடித்து ஆழ்ந்த பாதிப்புகளை உருவாக்கியது. உணர்ச்சிகரம்,நெகிழ்ந்த தன்மை, கலைகளைச் சார்ந்த நுண்ணுணர்வு, இலட்சியவாதம், சாகஸத்தன்மை ஆகியவற்றின் கலவை என அந்த ஆளுமையை உருவகிக்கலாம்

ழீன் கிறிஸ்தோ·ப் ஓர் இசைக்கலைஞன் என்பது இந்தச் சந்தர்ப்பத்தில் கவனிக்கவேண்டிய விஷயம். இசை நிலைக்காமல் நெகிழ்ந்து வழிந்து ஓடும் ஒரு பிரவாகம். அதற்கு புறவயத்தன்மையே இல்லை. ஆம், அடிப்படையில் இசைக்கு நேர் எதிரான கலை வடிவம் என்றால் அது கட்டிடக்கலையே. ஹிட்லர் என்னும் எதிர்மேதையின் எல்லா அவதானிப்புகளிலும் அத்தகைய ஆழம் இருக்கும். ஒரு பக்கம் ·பாக்னரின் இசையின் ரசிகனாக இருந்தார் அவர். இன்னொரு பக்கம் அதை சிமிண்டிலும் கல்லிலும் இரும்பிலும் வடிக்க நினைத்தார்.

ழீன் கிறிஸ்தோ·ப் ஓர் இசைக்கலைஞனாக, இசைக்குரிய அனைத்து இயல்புகளும் கொண்டவனாக, ரோமென் ரோலந்தால் சித்தரிக்கப்படுகிறார். வாழ்க்கையின் எல்லா உணர்ச்சிகரங்கள் வழியாகவும் உருகி  உருகி வழிந்துகொண்டே இருக்கிறான் ழீன் கிறிஸ்தோ·ப். ஓர் இசைக்கலைஞனாக அவனுக்குப் பெண்களுடன் இருக்கும் உறவு அந்நாவலின் சாரத்தை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு காதலியிலும் அவன் தன் ஆளுமையை ஒவ்விருவிதமாக உருமாற்றிக்கொண்டு  ஈடுபடுகிறான். அவர்கள் வழியாக அவனும் அவன் இசையும் பரிணாமம் கொள்கிறார்கள். ஆகவே அந்தக்காதலிகள் வெறும் பெண்கள் அல்ல, அவர்கள் வாழ்க்கையின் படித்துறைகள் போல.

ஆனால் ரோர்க் இரும்பால் செய்யப்பட்டு தோலும் சதையும் போர்த்தப்பட்ட மனிதன். அவன் ஒரு கட்டிடம். நாவல் முழுக்க ரோர்க் நெகிழ்வதில்லை. பரிணாம மாற்றம் கொள்வதில்லை. நாம் நாவலின் தொடக்கத்தில் காணும் ரோர்க்  கட்டிடக்கலை கல்லூரியில் மாணவனாக இருக்கிறான். அப்போதே திட்டவட்டமாக அவனுடைய கலைக்கோட்பாடு உருவாகி விட்டிருக்கிறது. பிறர் செய்ததை, அதை இன்னொருவர் செய்துவிடார் என்பதனாலேயே, அவன் செய்யப்போவதில்லை. கலையில் அவன் தேடுவது தனக்கு மட்டுமே உரிய ஒரு தனித்தன்மையை மட்டுமே. அதில் பிறரது ரசனை அல்லது அபிப்பிராயம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. கலை வழியாக அவன் தேடும் உச்சம் என்பது ஏற்கனவே அவனுக்குள் திட்டவட்டமாக உருவாகியிருக்கும் அவனுடைய ஆளுமையை கல்லிலும் இரும்பிலும் சிமிண்டிலும் புறவயமாக வடிப்பதே.

அந்த மாற்றமின்மை நாவல் முழுக்க ரோர்க்கின் ஆளுமையில் இருந்துகொண்டே இருக்கிறது. உண்மையில் இந்த ஒரே ஒரு ‘மனிதக் கட்டிடம்’ மட்டும்தான் இந்நாவல். நாவலில் ஆரம்பம் முதல் அவனுடன் இணைத்து சித்தரிக்கப்படும் அவன் நண்பனான பீட்டர் கீட்டிங்  [Peter Keating] உண்மையில் ரோர்க் உடன் ஒப்பிடப்பட்டு காட்டப்படும் ‘பிறர்’தான். சாதாரண மனிதர்களின், பொதுவான மனிதர்களின் பிரதிநிதி அவன். அவனில் இருந்து ரோர்க் கொள்ளும் வேறுபாடுகள்தான் ரோர்க்கின் ஆளுமை.

கீட்டிங் சாதாரணமாக எல்லாரும் செய்வதையே செய்கிறான்.முதலில் ஒழுங்காகப் படித்து வெற்றி பெறுகிறான். பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான். தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் கட்டிடங்களைக் கட்டிக்கொடுக்கிறான். அவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பணத்தையும் பெற்றுக்கொள்கிறான். அதாவது அவனுடைய கலை அல்லது திறன் என்பது பிறருக்காகவே இருக்கிறது. சமூகம் எதை உருவாக்குகிறதோ அதுவே அவன் வழியாக வெளி வருகிறது. சமூகம் செதுக்கி அளித்துள்ள அச்சில் தன்னை ஊற்றிக்கொண்டு தன்னை வெற்றிகரமாக வார்த்துக்கொள்கிறான் அவன்.

ஆனால் வெற்றியின் உச்சியில் ஆழமான ஏமாற்றத்துக்கு ஆளாகிறான் கீட்டிங். தான் எதையுமே சாதிக்கவில்லை என உணர்கிறான். மறுபக்கம் ரோர்க் தன் சுயத்துவத்தில் மட்டுமே ஊன்றி நிற்கிறான். சமரசத்துக்கு தயாரவதே இல்லை. கட்டிடக்கலை வாய்ப்புகள் இல்லாமலானபோது கூலிவேலைக்குச் செல்லவும் அவன் தயாராகிறான். கீட்டிங்கின் தடுமாற்றத்தை முன்வைத்து ஒருவனின் மகிழ்ச்சி என்பது எதில் உள்ளது என்ற விசாரங்களுக்குச் செல்லும் நாவல் மதங்களால் முன்வைக்கப்படும் சுயநலமின்மை, தியாகம், அர்ப்பணிப்பு போன்றவை உண்மையில் பழங்குடிகள் தங்களை தவிர்த்து தங்கள் இனக்குழுவை முன்னிறுத்தும் பொரூட்டு ஊருவாக்கப்பட்டவையே என்று கூறி ஒருவன் தன் தனித்தன்மையை அடைவதும் வெளிப்படுத்துவதும்தான் மகிழ்ச்சிக்கான அடிப்படைகள் என வலியுறுத்துகிறது. அதுவே புறவயவாத அணுகுமுறை. சுய நிராகரிப்புக்குப் பதிலாக சுயமுழுமையை அடைதல்.

படைப்பூக்கத்தை இழந்துவிட்ட கீட்டிங் அவனுக்கு வந்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறான். தன் எதிரியாகவே ஆகிவிட்ட ரோர்க்கிடம் உதவி கோருகிறான். ஒரு நிபந்தனையுடன் ரோர்க் அதற்கு ஒப்புக்கொள்கிறான். தன்ன்னுடைய திட்டப்படி இம்மி கூட விலகாமல் அந்தக் கட்டிடம் கட்டப்படவேண்டும் என்பதுதான் அது. பொது சமூகம் உண்மையான படைப்புத்திறன் கொண்டவர்களை புறக்கணிக்கிறது. ஆனால் முன்னே ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும் என்று வரும்போது அது அவர்க¨ளையே நாடுகிறது எனப்படுகிறது.

கட்டிடம் கட்டப்பட்டு முடியும்போது அது வெகுஜன ரசனையுடன் சமரசம் செய்துகொண்டிருப்பதை உணர்ந்த ரோர்க் அதை டைனமைட் வைத்து தகர்த்து விடுகிறான் .ரோர்க் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது ·பௌண்டன்ஹெட் நாவலின் முக்கியமான பகுதி. புறவயவாதத்தின் எல்லா தத்துவக் கூற்றுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. உரிய ஆதாரங்களுடன் தன்னை நிரூபித்து ரோர்க் விடுதலையாகிறான். இன்னொரு கட்டிடம் கட்டும் பணி அவனை தேடிவருகிறது. தன் ஆளுமையை வெளிப்படுத்தும் அச்சவாலை அவன் ஏற்கிறான்

சரியாக இருபது வருடங்கள் கழித்து இந்நாவலை தூசிபடிந்த நூலக அடுக்குக்குள் இருந்து எடுத்துப்பார்த்தபோது இது சுந்தர ராமசாமியின் பிரதி என்பது எனக்கு ஒரு குறியீடு போல தோன்றியது. அங்கங்கே புரட்டி கதையை நினைவுறுத்திக் கொண்டேன். இது ஒரு பெரிய நாவல் .எங்கெங்கோ கதை அலையும். பலவகையான கதாபாத்திரங்கள். ஏராளமான உரையாடல்கள். பொதுவாக தத்துவத்தை விளக்க முனையும் நாவல்கள் கதாபாத்திரங்களை ‘மாதிரி’ வடிவங்களாக அமைத்துக்கொள்ளும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தத்துவத்தின் ஒரு தரப்பின் மானுட வடிவமாக இருக்கும். அந்த முறையை ·பௌண்டன்ஹெட்டிலும் காணலாம்.

ஒருபோதும் கலைப்படைப்பு இதைச்செய்வதில்லை. கலைப்படைப்பு உண்மையான மனிதர்களை உருவாக்க முயல்கிறது. அவர்கள் எப்போதுமே தன்னிச்சையான வளர்ச்சிப்போக்கு கொண்டவர்களாக, முழுக்க வரையறை செய்துவிட முடியாதவர்களாக இருப்பார்கள். எந்த மனிதனும் எந்த தத்துவத்துக்கும் வெளிவடிவம் அல்ல. அயன் ராண்டே கூட அவர் முன்வைத்த, அவர் தானாகவே காட்டிக்கொண்ட, அவரது கோட்பாட்டின் வடிவம் அல்ல என்பதை அவரது சொந்தவாழ்க்கையின் பிற்கால நிகழ்வுகள் காட்டுகின்றன.

மனித ஆளுமையில் உள்ள இந்த நிலையாமை, மனித வாழ்க்கையில் உள்ள ஊகிக்கமுடியாத தற்செயல்தன்மை, மானுட வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்வதன் தீராத விசித்திரம் இவையெல்லாம்தான் நல்ல கலைப்படைப்பின் இயல்புகளாக இருக்கும். ஒரு புரிதலுக்காக தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை ·பௌண்டன்ஹெட்நாவலுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதை உணரலாம். தல்ஸ்தோயின் நாவலில் எந்த கதாபாத்திரமும் மாறாநிலையில் இல்லை. அவர்களுக்கு உள்ளூர ஒரு தனித்தன்மை இருக்கும். ஆனால் வாழ்க்கையினூடாக மாறுவதே தெரியாமல் அவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.

இந்நாவலை அக்காலத்தில் வாசித்தபோதே ரோர்க்கின் காதலியான டாமினிக் [Dominique Francon] என்ற கதாபாத்திரமே முக்கியமானது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அது ஒன்றில் மட்டுமே உண்மையான படைப்பூக்கம் இருந்தது. ரோர்க் உட்பட இதன் பிற கதாபாத்திரங்கள் எல்லாமே வரைபடத்தை வைத்துக்கொண்டு வடிக்கப்பட்டவை போல செயற்கையான கச்சிதத்துடன் இருந்தன. ஆனால் டாமினிக் விளக்கமுடியாத மன உள்ளோட்டங்களுடன் எப்போதுமே வரைபடம்மீறி பரவுபவளாக இருந்தாள். அவளுக்கு மட்டுமே வளர்ச்சியும் பரிணாமும் இருந்தன. அவளுக்கு ரோர்க்குடன் உள்ள உறவு சிக்கலானது. வழிபாட்டுணர்வும் காதலும் கலந்து  கடும்வெறுப்பாகவும் ஆகும் நிலை அது.

காரணம், அயன் ராண்ட் ஓர் எழுத்தாளராக  டாமினிக் கதாபாத்திரத்துடன் மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். டாமினிக் மீது மட்டுமே அவரது மனம் உணர்ச்சிகரமாக படிந்தது. பிற எல்லா கதாபாத்திரங்களும் அவரது தர்க்கபுத்தியின் ஆக்கங்களே. ஆணின் உலகில் வெளியே நிறுத்தப்படும் கூரிய பெண்ணின் மனதில் உருவாகும் நுட்பமான விஷத்தை ஓரளவு சித்தரிக்க அயன் ராண்ட்டால் முடிந்திருக்கிறது.

அயன் ராண்டின் கொள்கையைப் பரிசீலனைசெய்ய ஆழமான தத்துவ விவாதங்களுக்குள் செல்லவேண்டிய தேவையேதும் இல்லை. ஒருவன் தன் தனித்தன்மையை வெளிப்படுத்தி தன்னை முழுமையாகவே பூமியில் நிறுவிக்கொண்டான் என்றால் அவன் மகிழ்ச்சியானவனாக ஆகிவிடுவானா, நிறைவானவனாக உணர்வானா என்ற எளிய கேள்வியை நம்மைச்சுற்றியுள்ள வாழ்க்கையில் இருந்து எடுத்து கேட்டுக்கொண்டாலே போதுமானது. அப்படி எதையுமே நிறுவாமல் தங்கள் எளிமையான அன்றாடவாழ்க்கையை மட்டுமே செய்யும் கோடானுகோடிகள் துன்பத்திலும் நிறைவின்மையிலும்தான் உழல்கிறார்களா?

இரண்டாவது கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி, உண்மையில் ஒரு மனிதன் தன்னுடையது மட்டுமே என உணரக்கூடிய தனித்தன்மை என்று உண்டா என்ன? ரோர்க் தன்னுடைய மகத்தான கலைவெற்றியைச் சாத்தியப்படுத்தியிருப்பான் என்றால் அக்கட்டிடம் எப்படிபப்ட்டதாக இருக்கும்? அன்றுவரை மனிதகுலம் வந்தடைந்த கட்டிடக்கலைமரபின் கடைசி நுனியில் நின்றுகொண்டிருக்கும் இல்லையா? அதன் தனித்தன்மைகள் என்பவை அந்த மரபில் இருந்து அது கொள்ளும் சில வேறுபாடுகளாகவே இருக்கும் இல்லையா ?

படைப்பூக்கம் என்பது உண்மையில் அந்தச் சிறிய வேறுபாடு மட்டுமே. உண்மையில் மானுடத்தின் சிந்தனையும் கலையும் தொழில்நுட்பமும் பெருக்கெடுத்துச் செல்லும் போக்கில் தல்ஸ்தோய் அல்லது நீயூட்டன் அல்லது ஐன்ஸ்டீன் அல்லது மார்க்ஸ் அல்லது மொசார்தின் பங்களிப்பென்பதே கூட சிறு துளிகள்தான். இன்றைய நவீன குறியியலும் மொழியியலும்  மானுடத்தின் குறியீட்டு அமைப்புகளையும் மொழியமைப்புகளையும் ஆராய்ந்து தனித்தன்மை என்பதே இல்லை என்றுகூட சொல்லும் இடத்துக்குச் சென்றுவிட்டிருக்கின்றன.

நம் கண்முன்னால் எல்லா கலைகளும் எல்லா சிந்தனைகளும் எல்லா தொழில்நுட்பமும் மானுடத்தின் அடுத்த சாத்தியத்தால் மறிகடக்கப்படுவதை கண்டுகொண்டிருக்கிறோம். ரோர்க் கொஞ்சகாலம் உயிர்வாழ்ந்திருந்தால் அவனது ‘தனித்தன்மை’ மிக்க கட்டிடம் அடுத்தவகை கட்டிடங்களால் பின்னுக்குத்தள்ளப்பட்டு மரபின் ஒரு பகுதியாக ஆவதைக் கண்டிருப்பான். ‘நியோ சாக்ஸனிக்’ என்றோ ‘போஸ்ட் மாடர்ன்’ என்றோ அது ஒரு பொது அடையாளத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதையும் காண்பான். அதுவே அவன் நரகமாக இருக்கும்– அயன் ராண்ட் அந்த நரகத்தில்தான் இறந்தார்.

[மேலும்]

முந்தைய கட்டுரைதேர்தல்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதேசிய சுய நிர்ணயம்