மீசை:கடிதங்கள்

என்று கட்டுரைக்குத் தலைப்பு வைத்து விட்டு, மீசை வைத்த இலக்கியவாதிகளைப் பற்றியும் சொல்லிவிட்டு தினமணிக் கதிர் சிவக்குமாரைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

அன்புடன்,

சேதுபதி

 

 

 அவர் இப்போது மீசையை எடுத்துவிட்டார் என்ற சோகச்செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன்.[ மார்க்ஸியத்தில் நம்பிக்கை இழந்துவிட்டாராம்]
ஜெ

 

 

அன்புள்ள திரு.ஜெயமோகன்,

பழைய ஜமீந்தார் மீசையை அடமானம் வைக்க நேர்வது பற்றி முல்க் ராஜ் ஆனந்த்  A Pair of Mustachios என்ற ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.
கிரிராஜ் கிஷோர் புத்தகம் கூகிளில் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஒருவேளை இது ஒரு folk கதையாக இருந்து அதை இருவரும் தங்கள் எழுத்தில் சேர்த்திருக்கலாம்.

 

அன்புடன்

பிரபு ராம்

 

PS: உங்கள் இடுகையை ரசித்துப் படித்தேன். உங்கள் எழுத்தைத் தவிற மற்றுமொரு காரணம் நான் இந்த விஷயத்தில் நேர் எதிர் முனை. என் முதல் கதை சமீபத்தில் அமுதசுரபியில் பிரசுரம் ஆனது. உடன் பிரசுரக்கிப்பட்ட புகைப்படத்தில் என் இளைய தோற்றம்நான்  சீரியசாக எடுத்துக்கொள்ளப்படக் கூடிய சாத்தியக்கூறுகளை கணிசமாக குறைப்பதால்இப்போது மீசை முயற்சியில் முழுமூச்சாக இறங்கியுள்ளேன். :-)

 

 

 

**

பிரபு,

எனக்கும் அந்தச்சிக்கல் இருந்தது. நான் பின் தொடரும் நிழலின் குரல் வரை தலையணைகளை எழுதியபின்னரும் என்னை இளம் எழுத்தாளர்என்றே சொல்லிக்கொன்டிருந்தார்கள். தலை நரைத்து, டை அடிக்க்காமல் இருக்க ஆரம்பித்த பின்னர்தான் எழுத்தாளர் ஆனேன்
ஜெ

 சோழ மன்னன் கரிகாலனைப் பற்றி ஒரு கதை உண்டு. அவன் இள வயதில் அரியணைக்கு வந்துவிட்டதால் நீதி சொல்லும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படவில்லையாம். ஒரு நாள் கிழவேடமணிந்து ஒரு கடினமான வழக்குக்குத் தீர்ப்பு சொல்லிவிட்டு வேடத்தைக் கலைத்தானாம்.அதனால் அவனுக்கு ‘நரை முடித்து நல்லுரை வழங்கியோன்‘ என்று ஒரு பட்டம் !

 

 

ஜெயன்,

மீசை வைப்பதையே வன்முறை என கருதும் மனிதர்கள்தான் அணுகுண்டு தயாரிக்கிறார்கள் என்று உங்களின் ஒரு சிறு கதையில் படித்ததாக நினைவு (சரிதானா? கதைப்பெயர்  உடனடியாக நினைவுக்கு வரவில்லை ). மீசையில்லாத ஜெயனை பார்க்க கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது. நீங்களும் சிரிப்பை அடக்க முயற்சிப்பது போலவே இருக்கிறது.ஆனாலும் நன்றாகத்தான் இருக்கிறது.

 

கோகுல்

 

 

மீசை வைக்காமல் இருக்கும்போது நாம் கொஞ்சம் பணிவாக இருப்பதாக நாமே நினைத்துக்கொள்கிறோம். ஆகவே உண்மையிலேயே பணிவாக ஆவதும் உண்டு. பந்தா கூடுவதும் உண்டு. பார்ப்போம்
ஜெ

 

 

ஜெ,
மீசை இல்லா ஜெயமோகனை வளர்ப்புநாய்கள் எப்படி எதிர்கொண்டன என்று அறிய ஆவல்.

செல்வம்

 

 

 

அன்புள்ள செல்வம்

 

 

பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால் அவர்களில் மீசை ஆண்மையின் அடையாளம் அல்ல. சுவரில் ஒன்றுக்கடிக்க முடிவதும் ஆண்மை அல்ல– சுஜாதா சொன்னதுபோல. இரண்டுமே பெண்களுக்கும் உண்டு
ஜெ

 

 

 

அன்புள்ள ஜெ

மீசை இல்லா தோற்றம் நன்றாகவே இருக்கிறது. அய்யா ஒரு தப்பு நடந்துபோச்சுஎன்பது போன்ற அந்தச்சிரிப்புதான் கொஞ்சம் ஓவர். இன்னும் கொஞ்சம் பந்தாவாக இருக்கலாமே.

க-

அன்புள்ள க-

அப்படியா? நான் பந்தாவாக இருப்பதாக எண்ணித்தான் அப்படி சிரித்தேன். எப்படியோ பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆண்கள் பொறாமைபப்டுகிறார்கள் என நினைக்கிரேன்
ஜெ

 

 

அன்புள்ள ஜெ,

மீசை இல்லாமல் நன்றாகவே இருக்கிறீர்கள். பொதுவாக சின்னவயசு படங்களை விட நீங்கள் இப்போது இன்னும் handsome என்று நினைக்கிறேன். புஸ்தகக் கண்காட்சியில் பார்த்தபோதும் இதைச் சொன்னேன். ஆஸ்திரேலியா ·போட்டோக்களிலும் நன்றாக இருக்கிறீர்கள்

அம்மு

 

 

அன்புள்ள அம்மு,

பெண்கள் அப்படிச் சொல்லும்போது சந்தோஷப்படுவதா வேண்டாமா என்று தெரியவில்லை. பெண்கள் மனதில் நான் ஒரு கனிந்த கிழவனாக இருப்பதனால்தான் அப்படி தோன்றுகிறது என்று அர்த்தமா?

 

 

அன்புள்ள ஜெ

You said it ))))

அம்மு

 

 

ஜெயமோகன் அவர்களே

,
மீசை பற்றிய கட்டுரையை வாசித்தேன். அங்கிள்என்று உங்களை இதுவரை
அழைத்த இளம்பெண்கள் இப்போது அண்ணாஎன்று கூப்பிட ஆரம்பித்து
இருப்பார்கள் என்று நம்புகிறேன். அழுக்கு ஜீன்ஸை ஆறு மாதம்
போட்டுக்கொள்ள வேண்டிய அவலம் இல்லாமலேயே இதைச்
சாதித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். மீசை இல்லாத உங்களை உங்கள் வீட்டு
நாய் எப்படி எதிர்கொண்டது என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. அதையும்
தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

மேலும், திருவிதாங்கூரில் மீசைக்கு வரி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இச்செய்தி எங்கு, யாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தால்
உபயோகமாக இருக்கும்.

ந்ன்றி,
பா. ரெங்கதுரை
 

 

 

 

மீசை வரி பற்றி அ.கா.பெருமாள் அவர்களின் தென்குமரியின் கதை [தமிழினி] நூலிலேயே உள்ளது.  இது தவிர தலைவரி, முலை வரி என பல வகை வரிகள்.  இவற்றைப்பற்றி நாகம் அய்யா மானுவலிலும் வேலுப்பிள்ளை மானுவலிலும்ன்  உள்ளது. பல்லக்கில் செல்ல வரி உண்டு. முக்கியமான காரணம் அக்காலத்தில் இங்கே பெரும்பாலும் காடுகள். ஆகவே நிலவரி அனேகமாக இல்லை என்பதே.

மகாராஜா வலுக்காடாயமாக  செயலான ஜனங்களை பிடித்து நிலத்தை பட்டா போட்டுக்கொடுக்க அவர்கள் தப்பி ஓடினார்கள் . காரணம், வரிகட்டவேண்டும். வரிக்கு ஏற்ப அதில் லாபம் இருக்காது. ஆனால் திருவிதாங்கூர் அரசு வரியை வீணடித்த அரசல்ல– குவாலியர் போல. மைசூரும் திருவிதாங்கூரும்தான் அக்கால இந்தியாவில் நலம் நாடிய மன்னராட்சிகள். அணைகளை கட்டி சாலைகள் போட்டு கல்விச்சாலைகள் நிறுவி இப்பகுதியை வளமாக ஆக்கியது அந்தவரிகள்தான்

இளம்பெண்கள் அங்கிள் என்று கூப்பிடுவதை புரிந்துகொள்கிறேன். நடுவயது நடிகைகள் கூப்பிடுவது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. இனிமேல் பார்ப்போம்

ஜெ

 8888888888

பதின்வயதினருக்கான சரித்திரக்கதையான ‘புலவர் மகனி’ல் இந்தத்தகவலைப் படித்தேன் (ஆசிரியர் பூவண்ணன்). பத்தாம் வகுப்பு ICSE மாணவர்களுக்கு பாடநூலாக வைத்திருந்தார்கள். இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் இளவயது கதை. Target audience ன் வயதில் மன்னனாவன் அவன் என்பதால், இயல்பாக சுவாரஸ்யம் வரும்படி அமைந்த நூல்.
பிரபு ராம்
ஒரு நாள், என்னுடைய குரு, உமையாள்புரம் சிவராமன் சார், “ஏண்டா… எதுக்கு மீசை… அதை எடுத்துடேன்”, என்றார். மறுநாள் சரஸ்வதி பூஜை. இன்னிக்கு மீசையை எடுத்துட்டு, நாளைக்கு விஜயதசமிக்குப் பொய் மீசை இல்லாம ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும் என்று, எடுத்துவிட்டேன்.

“இப்போ தான் ஒரு ஜீனியஸ் லுக் இருக்கு”
“இன்டெலெக்சுவல் களை”
“மொழு மொழுன்னு இருக்கேள்”… என்று பலவிதமாய் காம்ப்ளிமெண்டுகள் காற்றில் பறந்தன.

மீசை, உடல் உழைப்பின்-வாசிப்பின் சின்னச்சின்ன சிரமங்களை ரகசியப்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது சாதாரணமாக வாசித்தாலும் எவரேனும் வநது, உடம்பு சரியில்லையா என்று கேட்டார்கள். முடியும் வெட்டிக்கொண்ட தினத்தில், டாக்டர் ஸ்ரீனிவாசன் “அப்பா சௌக்கியமா இருக்காரோன்னோ..” என்றார்.

மூன்று மாதத்தில் மீண்டும் மீசையிடம் சரண் புகுந்தேன்! 

ஈரோடு நாகராஜன்.
 

http://www.chennaionline.com/chennaicitizen/2004/02nagarajan.asp 

888888888888
 
இதுதான் வித்தியாசம். என்னிடம் எல்லாரும் மீசை எடுத்தபின் ”என்ன சார் சீரியஸா ஏதாவது யோசிக்கிறிங்களா’ என்றுதான் கேட்கிறார்கள்.
ஜெ
முந்தைய கட்டுரைலோகி. 3, ரசிகன்
அடுத்த கட்டுரைசில பயிற்சிகள்