விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்

மண்ணில் ஓடும் நதிகளெல்லாம்
கடலையே அடைகின்றன.
மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களும்
இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன.

(சாந்தோக்ய உபநிடதம்)


*

முழுமை

உயர்ந்த மலையின் வெவ்வேறு சிகரங்களில் ஊற்றெடுத்த நீர் சிற்றோடைகளாகவும் குறு நதிகளாகவும் பாய்ந்து ஓரிடத்தில் சங்கமித்துப் பெருநதியாகப் பெருகி மீண்டும் கிளைத்து துணைநதிகளாகவும் வாய்க்கால்களாகவும் ஓடி இறுதியில் கடலை அடைகின்றன.

வேறுபட்ட குலங்களும், தனித்த ஞான தாகிகளும், மெய்த்தேடல் கொண்டவர்களும், பல்வேறு மார்க்கிகளும் தங்கள் பயணத்தில் ஒருமுறையாவது ஞானத்தின் உறைவிடமான விஷ்ணுபுரத்தின் வீதிகளின் குறுக்காகக் கடந்து செல்கின்றனர். மேகங்களைத் தாண்டி வளர்ந்த கோபுரங்கள் கொண்ட அந்தப் பேராலயத்தின் பிராகாரங்களில் நடக்கின்றனர். மல்லாந்த கரியமூர்த்தி ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் தொடர்புடையவராகிறார். குலங்கள் கலக்கின்றன, நம்பிக்கைகள் மாறுகின்றன, மதிப்பீடுகள் திருத்தப்படுகின்றன, புதிய மார்க்கங்கள் பிறக்கின்றன. பயணம் தொடர்கின்றது. கடைசியில் அவை எல்லாமும் ஒரு பெரும் நியதியின் முழுமையின் ஒரு அங்கமாகக் கச்சிதமாகச் சேர்கின்றன.

ஒவ்வொரு முறை விஷ்ணுபுரத்தைப் வாசிக்கும் போதும் ஏதாவது ஒரு அம்சம் அப்போதைய மனநிலை மற்றும் ஆர்வத்துக்குத் தகுந்தபடி பிரதானமாகத் தோன்றும். இம்முறை அதன் ஒட்டுமொத்த முழுமை நோக்கும், எண்ணற்ற அதன் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவை நாவலின் இறுதியில் கொள்ளும் முழுமையும் முக்கியமாகப்பட்டது. இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் – அதன் அசைவும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட முடியாத ஒரு மாபெரும் நியதியினால் சிறு பிசிறு கூட இல்லாமல் முழுமையாகக் கட்டப்பட்டிருக்கிறது. பிரபஞ்ச இயக்கத்திற்குப் பங்களிக்காத எதுவும் இங்கே இல்லை. விஷ்ணுபுரமும் அப்படியே. நாவலின் மையப் படிமத்திற்குத் தொடர்பில்லாத ஒரு கதாபாத்திரமும், சம்பவமும் இல்லை. முதல் பகுதியில் ஒரே ஒருமுறை பெயர் வரும் காதாபாத்திரம் கூடக் கடைசிப்பகுதியில் முழுமை பெற்று எழுந்து வருகிறது. ஸ்ரீதரன் அப்படி ஒரு உதாரணம்.

பிரபஞ்ச உற்பத்தி பற்றிய கேள்விகளும், ஞானத்தேடலுக்கான வழிகளும், அதனூடாக ஞானதாகிகளின் அந்தரங்கமான பயணமும் அவர்களின் கண்டடைதலுமே நாவலின் மையக்கருவாக மிகுந்த கவனம் கொடுத்து வாசிக்கப்படுப்பவை. என்றாலும், எண்ணூறு பக்க பிரம்மாண்ட நாவலின் பக்கங்களில் ஏதேதோ இடங்களில் ஆங்காங்கே சிதறிச் செல்லும் சம்பவங்களையும், குறியீடுகளையும் பொறுக்கிக் கோர்த்து அவை ஒரு முழுமையான மாலையாக வடிவம் பெறுவதைக் காண்பதும் ஒருவித நிறைவைத் தரக்கூடியது தான்.

உதாரணமாக ஸ்ரீபாதம் பகுதியின் தோற்றுவாயில் வரும் அந்த இரண்டு பேர் யார் என்பதும், குதிரை லாய மேற்பாவையாளர் வீரநாராயணரின் வேர் எங்கு இருக்கிறது என்பதும் மிகப்பூடகமாக வெவ்வேறு தருணங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் வழியாக மாறுபட்ட கோணங்களில் சொல்லப்படுகிறது. அவற்றை இணைத்து ஒரு முழுப்பிம்பத்தைக் கண்டுகொள்ள முயல்வது ஒரு புதிர் முடிச்சை அவிழ்ப்பது போலப் பரவசமான அனுபவமாக இருக்கும்.


மல்லாந்த திருமேணி யாருடையது?

விஷ்ணுபுரத்தில் இருக்கும் மாபெரும் கரியசிலை விஷ்ணுவா இல்லை மூப்பனா என்பது குறித்து வாசிப்புக்கேற்ப கருத்துக்கள் வந்துள்ளன. பொதுவாக மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையின்படி ‘பழங்குடிகளை விரட்டிப் பறித்துக்கொண்ட வைதிக ஆதிக்கம்’ என்கிற வாசிப்பு பிரபலம்.

புராணங்கள் அனந்த சயனம் உட்பட விஷ்ணுவின் சயனங்கள் பத்து எனக் கூறுகின்றன. பாம்பணை, சங்கு, சக்ரம், கதை என எதுவும் இல்லாத ஸ்தலசயனமும் அதில் ஒன்று. விஷ்ணுபுரத்தில் அப்படித்தான் மூன்று வாசல்கள் உடைய கருவறையை நிறைத்துப் படுத்திருக்கிறார். அஜிதருக்குப் பின் இன்னும் சில ஆயிரம் வருட காலம் பௌத்தம் விஷ்ணுபுரத்தின் ஞான தரிசனமாகக் கோலோச்சியிருந்தால் அந்தக் கரியசிலை சயனபுத்தராக மாறியிருப்பார். செம்பர்கள் மொட்டைத் தலையும் கப்பரையுமாக வந்த ஒரு பட்டனின் கட்டிலிருந்து தங்கள் மூப்பனை விடுவிக்கக் காத்திருப்பார்கள்.

ஆனால் மாற்றம் இல்லாவிட்டால் காலமே இல்லை. மாற்றங்களே சமூகப் பரிணாம வளர்ச்சியின் முக்கிய காரணி. பரிணமிக்காதவை தேங்கி அழியும். சமூகப் பரிணாமும் ‘முரண்பட்டு நகர்தல்’ என்ற ஒற்றை பரிமாணத்தில் மட்டுமே நகர வேண்டுமென்பதில்லை. ‘மானுட ஞானம் அழிகிறதா’ என்ற கேள்விக்கு ஜெ சொல்லியிருந்த பதிலையே இதற்கும் போட்டுப்பார்த்தால் சமூகப் பரிணாமம் என்பதும் சுழற்சியாகவும் ஒத்திசைவாகவும் இருக்கலாம்.

எல்லாக் கலாச்சாரங்களும் அவைகளின் பழங்குடி வேர்களிலிருந்தே தொடங்குகின்றன. இயற்கையான அவற்றின் வளர்ச்சியின் போக்கில் அம்மக்களின் வாழ்க்கை அனுபவங்களே செறிவுபடுத்தப்பட்டுத் தத்துவமாகின்றன. இடையில் அவை காலச்சூழலில் திசைக்கொன்றாகப் பிரிந்து தனித்தனியாக வளர நேரிட்டால், அவ்வாறு வளரும் புதியசூழலுக்கு ஏற்ப ஆதி நம்பிக்கைகள் புதிய முலாம் பூசியபடி இருந்துகொண்டே இருக்கும். மகாகால மார்க்கம், வைதிகம், செம்பர்குலம் என விஷ்ணுபுரத்தின் அனைத்து மரபுகளிலும் அவற்றின் நனவிலியில் அந்தக் கரியதிருமேனி இருக்கிறது. அந்த ஆதி நம்பிக்கை காலத்தின் ஊடே வெவ்வேறு கைகள் வழியாக மாறிச் சென்று கடைசியில் பிரளயத்தில் அமிழ்கிறது. பின்னர் புதிய வானும், பூமியும் பிறந்து அடுத்த சுழற்சி ஆரம்பிக்கையில் தொடங்கிய கைகளிலேயே இருக்கிறது. விஷ்ணுபுரத்தின் இந்தக் காலச்சுழற்சி தான் ஒருவகையில் காலச்சக்ர தரிசனம். அதன் எல்லாப் புள்ளிகளும் முடிவில்லாத பயணத்தில் இருக்கின்றன. மாறாத மையப்புள்ளி – மல்லாந்து வானை நோக்கும் அந்த பிரம்மாண்ட கரியமூர்த்தி தான். இதன் குறியீடாகவே விஷ்ணுபுரம் சக்கர வடிவமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


ஞானத்தேடலின் தோற்றுவாய்

விஷ்ணுபுரப் பேராலயத்தின் ஞானசபை விவாதத்தில் உறுதியான தத்துவ அடித்தளம் கொண்ட எல்லா தரிசனங்களும் கலந்துகொண்டு பேசுகின்றன. இவற்றின் நடுவில் காலந்தோறும் சுய தேடலின் மூலம் தங்கள் பாதையை தாங்களே கண்டடையும் ஞானதாகிகளும் தோன்றியபடியே இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பலசம்பவங்கள், தருணங்கள் இவர்களுக்குப்ம்பொதுவாக இருந்தபோதும், ஒவ்வொருவருக்கும் அவரவர் இயல்புக்கு தகுந்தபடி ஏதாவது ஒரு சம்பவம் அல்லது தருணத்தில் தான் அகத்தூண்டல் பெறுகிறார்கள்.

தெருவோரம் கால்நீட்டிப் படுத்திருக்கும் மகாரோகியின் உருவம் பிங்கலனைத் தொந்தரவு செய்யும் அளவு மற்றவர்களைப் பாதிக்கவில்லை. இயற்கையின் கரங்கள் மீட்டும் அதிமகத்தான இசை திருவடியின் மனதைத் தான் புரட்டிப் போடுகிறது. பிரசேனர் சொல்வது போல ஒரே பிரபஞ்ச அனுபவம் தான், அதை இசையிலிருந்து பெண்ணிலும் அதிலிருந்து மீண்டும் நாதமயமாகவே எதிலும் காண்கிறான். சோமன் முற்றிலும் மாறாக அதீத லௌகீக உணர்ச்சிகள் மிகுந்தவன், அவனது திறப்பு ஞானத்தை நோக்கியதல்ல. மானுட வாழ்வின் நீதி-அநீதி சார்ந்தது. பெருந்தச்சனுக்கு இழைக்கப்படும் அநீதி அவனை அறத்தின் பால் தூண்டுகிறது, ஆனால் அது பிங்கலனை சலனப்படுத்தவே இல்லை.

பொதுவாகக் காமமும், எதிர்பாராத மரணத்தைக் காணநேர்தலும் லௌகீகத்தை மீறிய ஞானத்தேடலுக்கான தோற்றுவாயாக ஆவதைப் பல ஞானிகளின் வாழ்வில் நாம் கவனிக்கலாம். விஷ்ணுபுரத்தில் காமம் அப்படிப் பலருக்குக் காரணியும், வழியுமாக இருக்கிறது. அழிவு மற்றும் மரணம் குறித்தும், அதன் மீதான ஆதிமனதின் அச்சம் குறித்தும் அஜிதன் முதல் யோகவிரதர் வரை பலர் பேசுகின்றனர். ஆனால் மரணம் என்னும் அழுத்தமான ஒரு அதிர்வினால் இகவாழ்வின் நிரந்தரமிண்மையைக் கண்டு திடுக்கிட்டு நிரந்தரத்திற்கான தேடுதலில் ஈடுபடும் எவரையும் காணமுடியவில்லை.


சொல்லாமல் சொன்னவை – குறியீடுகள்

எண்ணூறு பக்கம் விரிந்திருக்கும் அடர்ந்த சொல்வனமாகிய விஷ்ணுபுரத்தில் காட்சிகள் ஒரு அதிநவீன ஓளிப்படக்கருவியால் பதியப்பட்டது போல மிகத் துல்லியமாகவும், தெளிவாகவும், வெகு நுணுக்கமாகவும் கண்முன் நிறுத்தப்படுகின்றன. முன்னூற்றி அறுபது பாகையும் சுழன்று காட்சிகள் விரிகின்றன. கதாபாத்திரங்கள் ஒருவரோடொருவர் பேசுவது மட்டுமன்றி ஒவ்வொருவரும் அவரின் அந்தரங்கத்தில் எழுப்பிக்கொள்ளும் கேள்விகளையும், பதில்களையும், தருக்கங்களையும் கூட மனதை ஊடுருவிப் பதிவுசெய்து விடுகிறது. ஆனாலும் இவற்றின் நடுவில் சொல்லாமல் சொல்லப்பட்டதும், குறியீடுகளாக வாசகனுக்கு விடப்பட்டதும் தான் விஷ்ணுபுரத்தைத் தேர்ந்த வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக ஆக்குகிறது. அவர்கள் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிதாக ஒரு வாசல் திறக்கிறது.

நாவல் முழுவதும் தொடர்ந்து வரும் சில குறியீடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக பச்சை நிறம் ,கருப்பு நாய், கழுத்து நீண்ட வெண்பறவை போன்றவற்றைக் கூறலாம்.

மானுட மனதால் கற்பனை செய்ய முடியாத பிரபஞ்ச வலைப்பின்னலின் குறியீடான அதிமகத்தான ஸ்ரீசக்ரத்தின் யோனி- பச்சை நிறம். சக்தியின் மூலாதாரம். காமத்தின், படைப்பின் குறியீடு. அதுவே அடையப் பெற வேண்டியதுமான ஞானத்தின் குறியீடுமாகும். எந்த சஞ்சலமும் எதிர்வினையுமின்றி வெறுமனே சாட்சியாகப் பார்க்கும் மிருகத்தின் விழியே ஞானவிருட்சமான ‘மிருகநயனி’. இருளில் பச்சையாக ஒளிரும் மிருக விழிகளின் நிறமே மிருகநயனியின் நிறமும். தேடலுள்ளவனுக்கு மிருகநயனியின் பச்சைநிற ஒளியே அக இருளில் ஞானத்தின் பாதையைக் காட்டுகிறது. பச்சைமாமலை போல் மேனியனாகிய விஷ்ணுவின் நிறம் அது. ஞானத்தின் இருப்பிடமான விஷ்ணுபுரத்தின் உயர்ந்த சிகரம் –ஹரிததுங்கா (பசுங்குன்றம், பச்சைமலை) ஞானத்தின் பருவடிவமே.

பிங்கலன், அஜிதன், பாவகன், யோகவிரதன் என தருக்கம் நிறைந்த தேடல் கொண்டவர்கள் எல்லாரும் மிருகநயனியை அடைகிறார்கள். மிருகநயனியைச் சுற்றிலும் வேறு எந்த மரம் செடியும் இல்லாமல் ஒளியாலான வெட்டவெளி உள்ளது. ஞானதாகிகள் அனைவரும் தங்கள் தேடலில் தனிமையையும், வெறுமையையும் உணர்கின்றனர். அது விரக்தியால் அடைந்த வெறுமை அல்ல. கண்டுகொண்ட உண்மை மட்டும் தன்னந்தனியாக இருப்பதனால் உணரப்படும் வெறுமை. அஜிதன் மிருகநயனியின் அடியில்தான் எண்ணங்கள் ஒழிந்த ஒரு வெறுமையின் அகழியை ஒரு கணம் தாண்டுகிறான்.

பிங்கலுனுக்கு ஒரு ஒளிவீசும் பச்சைக்கல்லாகக் கையில் அகப்பட்டு அவனை அவன் தேடலை நோக்கி இட்டுச் செல்கிறது. அந்தக்கல் இருபகுதிகள் கொண்ட விதை போலத் தோன்றுகிறது. அது தர்க்கம் நிறைந்த அவன் மனது -எப்பொழுதும் எதிரெதிராகப் பிளந்து போராடும் இருநிலைகளைக் காட்டுகிறது. சாருகேசியுடன் ஆவேசமாகக் கூடும் போது கூட, அந்தச் செய்கையை மனதின் மற்றொரு பகுதி வேறு எவரோ போலப் பார்த்துக்கொண்டிருக்கிறது. “இருநிலையின்றி இதைக் கூடச் செய்யமுடியாதா என்ன?” என்று விரக்தி அடைகிறான். பின்னர் அஜிதர் ஸ்தூபியில் அமர்ந்திருக்கும் போது அந்த விதை அதன் தாய்ச்செடியை நோக்கி அவனை நடத்திச்செல்லுகிறது. மிருகநயனியின் அடியில் அவன் அடைந்த ஞானமே இந்த இருண்மை நிலை என்னும் தடையை உடைப்பதில் தான் வருகிறது. ‘எதிர்ப்பின்றி, குற்ற உணர்வும், பேத உணர்வும் இல்லாத போகமே பேரானந்தநிலை’ என்பது தான் பிங்கலனின் தரிசனம்.

பிற்காலத்தில் பிரளய சமயத்தில் பிங்கலனின் வாமமார்க்கத்தில் இணையும் பத்மன் அபேத நிலையில் காமத்தை உணர தன் மனக்குகைக்குள் செல்கிறான். அங்கே அவன் ஆழ்மனத்தின் மிருக கர்ஜனை கேட்கிறது. அவன் துவண்டு பிறழ்ந்தால் வெளியில் காத்துக்கொண்டிருக்கும் நரிகள் (புலண்கள்) கூறுபோட்டுத் தின்றுவிடும். ஆனால் பத்மன் சோனாவில் மூழ்குவதாக வரும் குறியீடு – அவன் காமம் எனும் நதியில் எதிர்ப்பின்றி மூழ்குவதைக் குறிக்கிறது. அது அவனைக் கடலுள் கொண்டு சேர்க்கும்!

கௌஸ்துபம் பௌத்த தரிசனம் வெல்லும் காலகட்டமாக இருப்பதால், அந்தப் பகுதி தொடங்குவதே பௌத்த மரபின் முக்கியக் குறீயீடுகளில் ஒன்றான யானையுடன்தான் (அங்காரகன்). பௌத்தத்தில் யானை மனவலிமையின் குறியீடு. அங்காரகன் இத்தனை காலம் விரும்பிச் செய்த, சுவர்ணகண்டத்தை அடிக்கும் வெண்கலப் பிடியை உதறி, ஞானத்தை உதறிய சித்தனைப் போல விடுதலையாகி முதுகிலும் தலையிலும் சேறுபடிய காட்டு யானையாகிறது. மிருகநயனியின் பச்சை ஒளியில் அங்காரகனின் கரிய பேருருவம் கரைவதை அஜிதன் பார்க்கிறான். அங்காரகன் கனவில் கண்ட தரிசனத்தை தன் மனவலிமையால் அடைந்து விட்டது. அஜிதன் அவன் கண்ட தரிசனமான காலசக்ரத்தின் மையப் புள்ளியான அகாலத்தைத் தன் மனவலிமையால் அடைந்தானா என்பதை அவனே அறிவான்!

சித்தன் வாழ்வின் பொருளை நிராகரிக்கும் சார்வாகனல்ல. ஞானத்தை அடைந்து அதையும் உதறி மேலே சென்ற பரிபூரணன். ஞானசபையில் அஜிதன் உத்வேகத்துடன் பேசிக்கொண்டிருக்கையில் காஸ்யபனை மடியில் வைத்தபடி மௌனமாக சித்தன் வேடிக்கை பார்க்கிறான். இந்தக் காட்சி முண்டக உபநிஷத்தின் புகழ்பெற்ற ‘ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் இரண்டு பறவைகளில், ஒரு பறவை பழங்களைத் தின்கிறது, மற்றொன்று அமைதியாக அனைத்தையும் பார்த்தவண்ணம் இருக்கின்றது’ என்னும் படிமத்தை நினைவுபடுத்துகிறது.

இளம் காஸ்யபன் ஞானசபையின் வாசல் திறந்ததும் அதன் பெரிய படியைத் தொடாமலே தாவி உள்ளே நுழைகிறான். மானுட துக்கத்துக்குப் பரிகாரமாகாத வாய்ச்சொல் ஞானம், அடையாளங்கள், விருப்பங்கள் என அனைத்தையும் எடுத்த எடுப்பிலேயே அவன் தாண்டிவிட்டதன் குறியீடு அது.

பிரளயத்திற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியவுடன், தன் வாலைத் தானே விழுங்கும் பாம்பு குறியீடாக வரும். வாலில் தொடங்கி தன் உடலைத் தானே விழுங்கிய பாம்பின் விழுங்கமுடியாத கடைசி மிச்சத்துடன் ஒரு பந்து போல சுருங்கி நீருக்குள் விழும் (ஒரு சொல் மௌனத்திற்குத் திரும்பியது போல). இந்து மதத்தின் பல மரபுகளில் இந்தக் குறியீடு முக்கியத்துவம் வாய்ந்தது. புராணங்கள் காலத்தை சர்ப்பமாக உருவகிக்கின்றன. பிரளயத்தில் காலமும் வெளியும் உள் ஒடுங்கும். அடுத்த யுக ஆரம்பத்தில் இந்த மிச்சமே (ஆதி சேஷம்) விரிந்து காலமும் வெளியுமாக மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டி உண்டாகிறது. நீரில் இருந்தே உயிர்களின் தொடக்கம் இருக்கும் என்கிறது. மகாவிஷ்ணு இந்த ஆதிசேஷனின் மீது தான் அறிதுயில் கொள்கிறார்.

நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இன்னொரு குறியீடு கருப்பு நாய். அது படைப்புக் கடவுள் பிரம்மனின் வாகனம் காலபைரவன் தான். காலத்தின் குறியீடான அவனே ஒவ்வொருவருடைய காலம் முடியும் போதும் காலனாக வருகிறான். படைப்பு அழிவைத் தன் கர்ப்பத்தில் சுமக்கிறது. பிரளயத்தில் கடைசியாக விஷ்ணுவின் சன்னிதியில் வந்து நிற்கிறான். காலம் அகாலத்தில் ஒடுங்குகிறது அல்லது காலத்தின் கணக்கு எல்லாருக்கும் ஒன்று தான்!

முதல் பகுதியின் தோற்றுவாயில் பிரும்மாண்டமான ஸ்ரீசக்ரத்தை வரைபவன் ஒரு வெண் பறவையாக மாறிப் பறந்து சென்று எங்கோ ஒருவனின் கனவில் நுழைந்து அவன் நனவில் எழ விரும்புகிறான். அதைத் தொடர்ந்து பல இடங்களிலும் நீண்ட கழுத்துள்ள வெண்பறவை ஒரு குறியீடாக வருகிறது. ஞான சபையின் மேற்கூரையில் எல்லா ரிஷி சிலைகளின் மீதும் அந்தப் பறவை அமர்ந்திருப்பதை அஜிதன் காண்கிறான். பிரளயத்தில் விஷ்ணுபுரப் பேராலயத்தின் கோட்டைச் சுவரில் அவை பறந்து வந்து மோதி உயிரை விடுகின்றன. காலந்தோறும் விஷ்ணுபுரத்தைத் தேடி வந்து கொண்டிருக்கும் ஞானதாகிகளே வெண்பறவைகள். அது அவர்களின் தேடல் அல்லது கேள்விகள் என்றும் பொருள் கொள்ளலாம். அவை எப்போதும் ஏதோ திசைவெளியிலிருந்து விஷ்ணுபுரத்தைத் தேடி வந்து கொண்டெ இருக்கின்றன. கடைசியில் பிரளயத்தில் விஷ்ணுபுரம் அழியும் போது அவையும் சேர்ந்து அழிகின்றன. மீண்டும் விஷ்ணுபுரம் தோன்றும் போது கூடவே அவையும் எழும்.


[மேலும்]

முந்தைய கட்டுரைபாடபேதம்
அடுத்த கட்டுரைஃபெட்னாவும் காந்தியும்